சிவா, சுதர்சனாவை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டதும், கோபமாக சிவாவை முறைத்தவன், “அவர் உன்னை, சுதர்சனாவை திருமணம் செய்ய விருப்பமா என்று கேட்டார்.” என்று அடிக்குரலில் சீறினான்.
அவன் மொழி கேட்டு, கெட்ட கனவு கண்டவன் போல், இருக்கையில் இருந்து பதறி எழுந்த சிவா, தன் தந்தையைப் பார்த்து, “இல்லை…. இல்லை அப்பா…. எனக்கு இதில் விருப்பம் இல்லை.” என்று பதறியவனாக கூறினான்.
இதைக் கேட்ட சுந்தரின் முகத்தில் புன்னகை மறைந்தது. புருவங்கள் நெரிந்தன. அவரின் மனைவிக்கோ, உள்ளுக்குள் அவ்வளவு மகிழ்ச்சி.
அருணகிரியோ, “இப்போது சரி என்றாயே!.” என்று ஏமாற்றமாக கேட்டார். அவருக்கு தன் பேரன்களுள் ஒருவனை, சுதர்சனவிற்கு திருமணம் செய்து வைக்க ஆசை.
“மன்னித்துவிடுங்கள் தாத்தா… ஏதோ நினைப்பில் அப்படி சொல்லிவிட்டேன்.” என்று சக்ராவை பார்த்துக் கொண்டே கூறினான்.
“எதில் விளையாடுவது என்ற வரைமுறை இல்லையா உனக்கு.” என்று அவனைக் கடிந்து கொண்ட சுந்தர். தன் மூத்த மகன் சக்ராவிடம் திரும்பி, “சுதர்சனா மிகவும் நல்ல பெண். அந்த பெண் கிடைக்க உன் தம்பி கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீயாவது இவனுக்கு சொல்லி புரியவை.” என்றார்.
சிவாவை திரும்பி ஒரு பார்வை பார்த்த சக்ரா, “அப்பா சொல்வதும் சரி தானே!. சுதர்சனா மிகவும் நல்ல… பெண்..” என்று குரலில் அழுத்தம் கொடுத்து கூறினான். அவன் கண்களோ, சிவாவை மிரட்டுவது போல் இருந்தது.
சிறிது நேரத்திற்கு முன்பு தான், சக்ராவிற்கும், சுதர்சனாவிற்கும் இடையே நடந்த சம்பாஷணையைக் கேட்டவன், தன் அண்ணனின் கோபத்தை உணர்ந்து கொண்டு, தன் உமிழ் நீரை ஒரு இடறு விழுங்கியவாறு, தன் தந்தையை நோக்கி, “சுதர்சனா, எனக்கு தங்கச்சி மாதிரி… அவளைப் போய் நான் எப்படி அப்பா….” என்றவன் குரலில் நடுக்கம் தென்பட்டது.
அதற்கு எதுவோ சொல்லப்போன சுந்தரை தடுத்த அருணகிரி, “வேண்டாம் மாப்பிள்ளை. சிவாவின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும்.” என்று அதை அதோடு முடித்துக் கொண்டார். அதன் பிறகு தான் வேதாவிற்கு மூச்சே வந்தது.
அவரின் மொழி கேட்டு, “சரி.” என்று தலையை ஆட்டிக் கொண்ட சுந்தர், அங்கிருந்து வெளியேறினார். அவருடனே அவரின் மனைவியும், ரவியும் வெளியேறினர்.
அப்போது மாலினியின் அலைபேசிக்கு சுதர்சனாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அதை எடுத்து, அவள் தன் காதில் வைத்ததும், அந்தப்பக்கம் பேசிய சுதர்சனா, “ஷாப்பிங் செல்லவேண்டும் என்றாயே மாலி… நான் வெளியே தான் நிற்கின்றேன். இப்போது நீ வந்தால், நாம் உடனே போகலாம்.” என்றதும், “இதோ அக்கா…” என்று கூறிக் கொண்டே தன் இருக்கையில் இருந்து எழுந்தாள்.
“நான் அக்காவுடன் வெளியே செல்கின்றேன்.” என்று அனைவருக்கும் பொதுவாக சொல்லிவிட்டு, சக்ரா அருகில் வந்தவள், அவன் எதிர்பார்ப்பதற்கு முன்னால், அவன் கன்னத்தில் தன் இதழை ஒட்டி எடுத்தவள், “போய் வருகின்றேன் சக்ரா…” என்று சொல்லி, அருணகிரியின் கண்டனப் பார்வையை கண்டுகொள்ளாமல் வெளியே ஓடிவிட்டாள்.
சக்ராவோ எதையும் கண்டுகொள்ளாமல், தன் முகத்தை கோப்பில் இருந்து எடுக்காமல் இருந்தான். சிவாவோ, அவனை நம்பமாட்டாத பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் காதின் அருகே குனிந்து அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், “இப்போது இங்கே நடந்ததுக்குப் பெயர் என்ன?” என்றான் நக்கல் தொணிக்கும் குரலில்.
மிகவும் சாதாரணமாக தன் தோள்களை குலுக்கிக் கொண்டவன், “இது அவளுடைய அன்பின் வெளிப்பாடு அவ்வளவு தான்.” என்று மிக சாதாரணமாக சொல்லிவிட்டு, கோப்பில் தன் பார்வையைப் பதித்தான்.
அவனை நம்பமாட்டாத பார்வை ஒன்றை பார்த்தவன், “உனக்கு அக்காவும் வேணும், தங்கச்சியும் வேணுமா?.” என்று வாய்விட்டே கேட்டுவிட்டான்.
அதற்கு கோப்பில் இருந்து தலையை எடுத்து அவனை முறைத்துப் பார்த்த சக்ரா, “சிவா! இது போல் அநாகரிகமாக பேசாதே!.” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.
‘நீ செய்வதைப் பார்த்தால் அப்படி தானே உள்ளது!.’ என்று நினைத்துக் கொண்டவன், அப்போது தான் தன் தாத்தாவைப் பார்த்தான், அவரோ தீவிர சிந்தனையில் இருந்தார்.
‘சுதர்சனாவிற்கு வேகமாக மாப்பிள்ளை பார்க்க வேண்டும்.’ என்று மனதில் குறித்து வைத்துக் கொண்டு நிமிர்ந்தவர், சிவாவின் பார்வை தன் மேல் நிலை கொண்டிருப்பதைப் பார்த்து, “என்ன சிவா.” என்றார் சிறு உறும்பலோடு.
“ஹி…ஹி…” என்று இளித்து வைத்தவன், “ஒன்றும் இல்லை தாத்தா…” என்று சொல்லியபடியே அங்கிருந்து ஓடிவிட்டான்.
இங்கே சுதர்சனாவும் மாலினியும் ஷாப்பிங் வந்திருந்தனர். மாலினியோ கடையையே திருப்பிப் போட்டு உடையை தேர்வு செய்து கொண்டிருந்தாள்.
காலையில் சக்ராவைப் பார்த்து சூடான தன் உள்ளத்தை ஷாப்பிங் செய்து கரைத்துக் கொண்டிருந்தாள் சுதர்சனா. ஆம் சக்ராவின் எகத்தாளமான பார்வையில் இப்போது காதல் குடி கொண்டிருப்பது அவளது மண்டையை சூடேற்றியது.
பின் மாலினியுடன் ஷாப்பிங் வந்ததில் அது சிறிது மட்டுப்பட்டு இருந்தது. ஷாப்பிங் வந்ததில் இருந்து அவனது நினைப்பை சிறிது ஓரம் கட்டிவைத்திருந்தாள்.
ஆனால் மாலினியோ வேறு வழியில் அவளது பொறுமையை சோதித்து பார்க்க ஆரம்பித்தாள்.
“அக்கா எனக்கு இந்த கடையில் எதுவும் பிடிக்கவில்லை. நாம் வேறு கடைக்கு போகலாம்.” என்று சாதாரணமாக சொன்னவள், இதோடு பத்து கடைகள் ஏறி இறங்கிவிட்டாள். எல்லாம் ஒரே மாலில் இருந்ததால் பிரச்சனை இல்லை.
தன் மணிக்கட்டில் கட்டி இருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்து, “எனக்கு நேரமாகிவிட்டது மாலி. நாம் இன்னொரு நாள் வரலாம்.” என்று பொறுமையாகவே அவளுக்கு பதில் அளித்தாள்.
மாலினி ஷாப்பிங் என்று மட்டும் தான் சொன்னாளே தவிர தனக்கு உடை எடுக்க வேண்டும் என்று கூறவில்லை.
“இல்லை அக்கா….” என்று அவள் சிணுங்க. அவளை பாவமாக பார்த்து வைத்த சுதர்சனாவோ, “ப்ளீஸ் மாலி… அக்காவுக்காக…” என்றாள்.
“அக்கா… நாளைக்கு என் நிச்சயதார்த்தம்.” என்றாள் தன் பிடியில் நின்றபடி.
அவள் கன்னத்தில் கைவைத்தவள், “அதனால் என்ன மாலி?. அத்தை உனக்காக நகை உடை அனைத்தையும் வாங்கி இருப்பாரே!.” என்று கேட்டாள்.
தன் அக்காவை நோக்கியவள், “இல்லை அக்கா. நிச்சயதார்த்தம் நாளை அவசரமாக நடப்பதால், அவர் எதுவும் வாங்கவில்லை.” என்று சோகமாக கூறினாள் மாலினி.
அவளின் சோக முகத்தைக் கண்டு பொறுக்காதவள். அவள் லெஹெங்காவை பார்வையிடுவதைக் கண்டு, “சரி மாலி. உனக்கு லெஹெங்கா தானே வேண்டும்!. என் தோழியின் கடைக்கு சென்று எடுக்கலாம்.” என்று கூறினாள்.
“ஐயோ அக்கா… அதெல்லாம் வேண்டாம். நாம் உங்கள் கடைக்கு போவோமா!” என்றாள் திக்கித்திணறிய குரலில் பயந்தவள் போல.
ஆயத்த உடைகளை தயாரிப்பது மட்டும் இல்லை, சில ஷோரூம்களும் அமலாவிடம் உண்டு. தமிழ் நாட்டில் மட்டுமே அவர்களுக்கு பதினெட்டு கடைகள் உள்ளது.
நெற்றியை சுருக்கி யோசித்த சுதர்சனா, “ஆனால் லெஹெங்காவை நாம் வாங்கி தான் விற்பனை செய்கின்றோம் மாலி. அது நம் தயாரிப்பு கிடையாது. அதனால் தான் சொல்கின்றேன்.” என்றாள் விவரமாக.
ஆனால் அதை மாலினி கேட்கவேண்டுமே!. “அதெல்லாம் வேண்டாம் அக்கா. நம் கடையில் என்ன இருக்கின்றதோ, நான் அதையே எடுத்துக் கொள்கின்றேன்.” என்றாள் பிடிவாதமாக. தன் மனதில் வேறு ஒரு யோசனையை வைத்துக் கொண்டே, அவள் இவ்வாறு கூறினாள்.
அவள் அப்படி கேட்பதன் உள் அர்த்தத்தை உணர்ந்து கொள்ளாத சுதர்சனா, “நாளை உனக்கு நிச்சயதார்த்தம் மாலி. நீ ஜொலிக்க வேண்டாமா?. நம்மிடம் அதிகம் கலக்சன்ஸ் கிடையாது.” என்று கூற.
அதில் விழுந்த மாலினி, “சரி அக்கா.” என்றாள் ஒரு மனதாக.
பின் இருவரும் சுதர்சனாவின் தோழி கடைக்கு சென்றனர். மற்ற கடைகளைக் காட்டிலும் அங்கே இருந்த லெஹெங்காக்கள், அதிக வேலைபாடு கொண்டதாகவும் அதே நேரம் அதிக விலை உயர்ந்ததாகவும் இருந்தது. ஒவ்வொன்றின் விலையும் லட்சத்தை தொட்டது.
அது அனைத்தையும் ஆசை ஆசையாக பார்வையிட்ட மாலினியைப் பார்த்தவளின் முகத்திலும் சந்தோஷ ரேகைகள் பூத்தது.
பின் ஒரு வழியாக ஒன்றை தேர்வு செய்தவள், அதை சனாவிடம் காண்பிக்க. அதைப் பார்த்தவள், “இது மிகவும் டல் கலராக இருக்கின்றது மாலி. நீ மனையில் நிற்கும் போது, இது எடுப்பாக தெரியாது.” என்றதும், அவள் முகம் சுறுங்கியது.
அங்கிருந்ததிலையே மிகவும் விலை அதிகமான லெஹெங்காவை தான் மாலினி தேர்வு செய்திருந்தாள். இப்போது சனா இவ்வாறு சொல்லியதும், “ஆனால் எனக்கு இது தானே பிடித்திருக்கின்றது!.” என்றாள் முகத்தை சிறியதாக வைத்துக் கொண்டு.
“சரி. உனக்கு பிடித்திருந்தால், நீ இதையே எடுத்துக்கொள் மாலி.” என்றதும் அதை பில் போட கொடுத்தாள் மாலினி.
சனா தன் அலைபேசியில் வந்த மின் அஞ்சல்களை படித்துக் கொண்டிருந்தாள். அவளிடம், ஒரு கண் வைத்தவாரே, அங்கே பில் போடும் பெண்ணிடம் தன் கிரெடிட்கார்ட்டை எடுத்து நீட்டினாள் மாலினி.
அதை அந்த பெண் இயந்திரத்தில் வைத்ததும், பின் திரும்பி நின்று கொண்டு சுவற்றை வெறிக்க ஆரம்பித்தாள் மாலினி.
மாலினியை அழைத்த பில் போடும் பெண், “மேம்! உங்க கார்ட் குறிப்பிட்ட லிமிட்டை தாண்டிவிட்டது. அதனால் பரிவர்த்தனை செய்ய முடியவில்லை.” என்று கூறி அவளிடம் அவளது கார்ட்டை திரும்ப தந்தாள்.
அதை வாங்கிக் கொண்டு பல்லைக் கடித்தவளின் கண்கள் என்னவோ சனாவைத் தேடி தான் சென்றது.
ஆனால் அவளோ, இங்கு நடப்பதை கண்டுகொள்ளாமல், தன் அலைபேசியில் கவனத்தைப் பதித்து இருந்தாள்.
அதற்குள் அந்த பெண், “மேம்! கேஸ்சா இல்லை ஜீபேவா?.” என்று கேட்க.
பல்லைக் கடித்துக் கொண்டு, “கொஞ்சம் பொறுங்கள்.” என்றபடி அங்கே தள்ளி நின்ற சனாவிடம் சென்று, உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அழுகைக்கு தயாரானாள்.
தன் அருகே யாரோ வந்த அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்த சனா, கலங்கிய முகத்துடன் நின்றிருந்த மாலினியைப் பார்த்தவள், அதிர்ச்சி அடைந்தவளாக, “என்னாச்சி மாலி! எதற்காக முகத்தை இப்படி வைத்திருக்கின்றாய்?.” என்றாள் பதற்றம் அடைந்தவளாக.
“அது… அக்கா…” என்று சொல்லிவிட்டு, தன் கண்களை தன் கைகுட்டையால் ஒற்றிக்கொண்டாள்.
அவளின் கையைப் பிடித்த சனா, “மாலி! என்னாச்சிம்மா சொல்லு.” என்று கருணையுடன் கேட்க.
“தாத்தா…. என் கார்ட்டை லாக் செய்துவிட்டார் அக்கா…” என்று கூறிவிட்டு திரும்பவும் தன் கண்களை கசக்க ஆரம்பித்தாள்.
அதில் பெருமூச்சு விட்டவள், “இவ்வளவு தானா! இதற்கு ஏன் கண்ணீர் விடுகின்றாய் மாலி. நான் இப்போதே தாத்தாவிடம் பேசுகின்றேன்.” என்று சொல்லிக் கொண்டே தன் அலைபேசியில் அருணகிரிக்கு அழைக்கப்போனவளைப் பதறி தடுத்து நிறுத்தினாள் மாலினி.
“அக்கா… வேண்டாம் அக்கா! தாத்தா மிகவும் கோபம் கொள்வார். இந்த லெஹெங்கா ஏழரை லட்சம் வந்துவிட்டது. நான் விலை கம்மியாக வேறு லெஹெங்காவை எடுத்துக் கொள்கின்றேன்.” என்றாள் சிறிய குரலில்.
ஆனால் அவள் கண்களோ தான் எடுத்த லெஹெங்காவை ஆசையாய் அருவமாய் வருடியது.
அவளின் முகத்தில் இருக்கும் ஏக்கத்தைக் கண்டுகொண்டவளுக்கு, ஏனோ அவளது நடிப்பை கண்டுகொள்ள முடியவில்லை. பாசம் கண்ணை மறைத்ததா? அல்லது அவளுக்கு வேலை இருந்ததால் சரியாக கண்டுகொள்ளவில்லையா என்பது தெரியவில்லை.
“நீ பில் போட கொடுத்ததையே எடுத்துக்கொள் மாலி. பணத்தை நான் கட்டிவிடுகின்றேன்.” என்ற வார்த்தைகளை அவள் உதிர்த்ததும், தன் மனதிற்குள் குத்தாட்டம் போட ஆரம்பித்தாள் மாலினி.
சில சமயங்களில் இது போல் நடப்பதுண்டு, ஆனால் இன்று அந்த உடை மிகவும் விலை உயர்ந்தது. அதை தன் தங்கைக்கு வாங்கித் தர அவள் சிறிதும் யோசிக்கவில்லை.
மனதில் தோன்றிய மகிழ்ச்சியை தன் மனதோடு புதைத்துக் கொண்டவள், “இல்லை அக்கா… அம்மா பேசுவார்கள்.” என்றாள் நடிப்பில் பட்டம் வாங்கியவள் போல்.
“நானே இதை உனக்கு எடுத்து தந்திருக்க வேண்டும் மாலி. இப்போதும் ஒன்னும் கெட்டுப்போகவில்லை. நானே இதன் பில்லை கட்டிவிடுகின்றேன்.” என்று சொல்லிவிட்டு முன்னே சென்றாள்.
“அக்கா! வேண்டாம் அக்கா.” என்று சிரித்துக் கொண்டே சோகம் போல் சொன்னவள், அவள் பின்னே சென்றாள்.
பின் இருவரும் வெளியே வரும் போது மாலினியின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். “அக்கா! லவ் யூ அக்கா….” என்று சொல்லி சனாவை கட்டிக்கொண்டாள்.
“லவ் யூ டூ மாலி…” என்ற சனாவும் அவளை அணைத்துக்கொண்டாள். இதை ஒரு ஜோடி சிவந்த விழிகள், கண்களில் தோன்றிய கனலோடு, அவர்கள் இருவரையும் எரித்துவிடுவது போல் பார்த்தது.