Skip to content
Post Views: 5,435
“எங்க மயூம்மா போயிட்டீங்க, உங்கள காணாம தேடிட்டு இருந்தேன்” என்றார் வசந்தா.
“இங்க தான் அண்ணி, உங்க பொண்ணும் மாப்பிள்ளையும் இங்கேயே வந்துட்டாங்க.
உங்க பொண்ணு என்னைப் பார்த்தே ஆகணும்னு ஒரே அழுகையாம்! அதான் மித்து அவளை இங்க கூட்டிட்டு வந்தான்.
Advertisement
நான் அவளை சமாதானப்படுத்தி அனுப்பி வச்சிட்டு வரேன்” என்ற வித்யாவை, வியப்புடன் பார்த்தார் வசந்தா!
என்ன மாதிரி ஒரு பொம்பளை இவங்க? கடவுளே! எந்த ஜென்மத்திலோ எங்கேயோ நானும் என் பொண்ணும் பெரிய புண்ணியம் செய்துருக்கணும்.
இல்லைன்னா, இவங்க வீட்டுல கொண்டு வந்து சேர்த்திருக்குமா விதி! வசந்தா கண் கலங்கி விட்டார்!
Advertisement
“அய்யோ என்ன இது? மறுபடியும் முதல்ல இருந்தா? முடியல என்னால” என்றாள் வித்யா சிரித்தபடி.
Advertisement
“வாங்க.. செலின் அக்கா தேடுவாங்க” என்று உள்ளே அழைத்துப் போனாள்.
வசந்தா, மணமக்களை சாந்தி முஹூர்த்தத்திற்கு அனுப்பி விட்டு அந்த வீட்டில் மணப்பெண்ணின் தாயார் இருக்க கூடாது என்ற வழக்கப்படி வசந்தா ஊருக்கு கிளம்ப முயற்சிக்க, அவரைத் தடுத்து இங்கே அழைத்து வந்து விட்டாள் வித்யா.
சங்கோஜமாகவே அங்கு உட்கார்ந்திருந்த வசந்தாவைப் பார்த்தாள் வித்யா!
Advertisement
இவங்களும் ரொம்ப போராடி தான் இருக்காங்க ஆனா வேற மாதிரி!
என் போராட்டம் ஒரு வகை என்றால், இவர் வாழ்க்கையும் ஒரு வகை போராட்டம் தான்!
என்னை எல்லோரும் வில்பவர் வித்யா என்பார்கள், அப்படின்னா இவரும் வில்பவர் வசந்தா தான்!
உதவாக்கரை, சோம்பேறி ஆனால் வெட்டி கவுரவம் பார்க்கும் புருசனுடன் வாழ்ந்து கொண்டு மூன்று பெண் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி நல்லபடி கல்யாணம் பண்ணிக் கொடுப்பது என்பது சாதாரண செயல் இல்லையே!
சம்பந்தியைப் பற்றி பெருமையாக நினைத்துக் கொண்ட வித்யா, மதியம் நடந்ததையும் நினைத்துப் பார்த்தாள்.
அன்று மதிய வேளை.
சாப்பிட்டு விட்டு தன் லாப்டாப்பில் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வித்யா.
காலிங் பெல் அடிக்க, கதவைத் திறந்தால், அன்பு, வேறு சிலருடன் நின்று கொண்டிருந்தான்.
கூட வந்தவர்கள் முகங்கள் சோர்ந்து இருந்தன! வந்தது செல்வம், வளர், நட்ராஜ், வசந்தா மற்றும் அருண்!
“அடடே வாப்பா, அன்பு, உள்ள வா! வாங்க.. ” கூட வந்தவர்களையும் உள்ளே வரச் சொன்னாள்.
வந்தவர்கள், ஓ வெண்ணிலாவை அவர்கள் பார்த்திருக்கும் வரனுக்கு சம்மதம் சொல்ல சொல்லி ரெக்கமண்டேசனுக்கு வந்திருப்பார்களோ என்று அவள் நினைத்து முடிக்கும் முன், அன்புவோடு வந்த இரண்டு இளைஞர்களும், அந்த பெண், அவள் நிலாவின் அக்கா போல, அவளும் வித்யாவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள்!
கூட வந்த நடுத்தர வயதைக் கடந்த ஒரு தம்பதிகளும் கைகளைக் கூப்பியவாறு அழுத வண்ணம் நின்று இருந்தனர்! வெண்ணிலாவின் பெற்றோர்!
“தயவுப் பண்ணி, நிலாவுக்கு மாப்பிள்ளை பார்த்துருக்கோம், அவளைக் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல சொல்லுங்கன்னு மட்டும் கேட்டுடாதீங்க!
ஏன்னா, நானே நிலாவைப் பொண்ணுக் கேட்டு உங்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன்” என்றாள் மயூ எடுத்த எடுப்பிலேயே!
“அது இல்லம்மா இது விசயமே வேறே” என்றான் அன்பு மென்று முழுங்கியப் படி!
“பின்னே வேற என்ன? ஏன் எல்லோரும் இவ்வளவு டென்சனா இருக்கீங்க?” மயூ கேட்டுக் கொண்டிருக்கும் போதே, மாமியும் இங்கு வந்து விட்டார், இவர்கள் இங்கு வந்திருப்பது தெரிந்து!
“என்ன மயூ என்ன ஆச்சு? யாரு இவங்கல்லாம்?” கேட்டார் மாமி.
“நாங்க வெண்ணிலா வீட்டில் இருந்து வர்றோம்!”
“ஓ..வாங்க..வாங்க.. என்ன விஷயம்?” என்று அவரும் ஆவலாக கேட்க,
“என்ன மயூ, ஜீவாவுக்கு நிலாவைப் பொண்ணு கேட்டுடலாமா மயூ?”
“இல்லம்மா, அது தேவையில்ல!” என்றான் அன்பு தயங்கியபடி
“ஏன்?”
“ஏன்னா.. ஏன்னா.. ஜீவா சாருக்கும் நிலாவுக்கும் சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமே ஆகிடுச்சி” ஒருவாறு திக்கித் திணறி ஆனால் சொல்லியே விட்டான் அன்பு!
“என்ன.. என்ன சொல்றப்பா நீ? , எனக்குப் புரியல, தெளிவா சொல்லு”! என்றாள் மயூ தாங்க முடியாத அதிர்ச்சியுடன்!
“ப்பா. அன்பு, சொல்றத தெளிவா சொல்லு..” என்று மாமி இப்போது கொஞ்சம் வேகமான குரலில் கேட்டார்.
“நிலா, ஜீவா சாரோட எங்க ஊருக்கு வந்தப்போ, எங்க ஊர்ல இருக்கிற ஒரு கேடு கேட்டவன் பண்ணின வேலையால, இதோ எங்கப்பாவோட மடத்தனத்தால, ஜீவா சார், நிலாவைக் கல்யாணம் பண்ண வேண்டிய சூழ்நிலை ஆகிடுச்சும்மா..” வளர் தயங்கி தயங்கி சொன்னாள்!
“என்னம்மா சொல்ற நீ ? என்ன மாதிரி சூழ்நிலையா இருந்தாலும் பையனைப் பெத்தவ இங்க கல்லு மாதிரி இருக்கும் போது ஒரு வார்த்தைக் கூட அவளைக் கேக்கணும்னு உங்களுக்கு தோணலையா?” மாமி கோபத்தில் கத்தினார்!
“தப்பு தாம்மா, அப்போது இருந்த மனநிலையில் யாருக்குமே நின்னு நிதானிச்சு இத இத செய்யணும்ன்றது கூட மர மண்டையில தோணாம போச்சும்மா..” வசந்தா கேவலுடன் சொன்னார்!
மயூ அப்படியே அதிர்ச்சியோடு, “மாமி அவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க, நான் இப்ப வந்திடறேன்” என்று சொல்லி விட்டு அவள் ரூமிற்குள் போய் கதவைத் தாழிட்டுக் கொண்டாள்!
உள்ளே போனவுடன், நேராக ராகவ், படத்தின் முன் நின்று கதறினாள்.
“ஏன்..மாமா எனக்கு மட்டும் இப்படி நடக்குது!
நீ போனப்புறம் நான் ஆசைப்பட்டது ஒன்றே ஒன்று தான்!
அது நம்ம மித்துவோட கல்யாணம்!
சும்மா ஊரைக் கூட்டி கிராண்டா நடத்தணும் நான் கண்ட இத்தனை வருசக் கனவு, வெறும் கனவாவே போய்டுச்சே மாமா!
நம்ம பிள்ளை கல்யாணத்தை நான் பார்க்கக் கூட கொடுத்து வைக்கலியே மாமா!
நான் இத்தனை வருஷம் ஒரு கல்யாணத்திற்குக் கூட போகவே இல்லை தெரியுமா? செலின் அக்கா பையன் கல்யாணத்திற்குக் கூட நான் போக வில்லை!
ஒரு நாளும் பட்டுப்புடவை கட்டியதில்லை!
நம்ம மித்து கல்யாணத்தில் தான் எதுவும் என்று இத்தனை வருசம் காத்திருந்தேனே மாமா. கடைசில இலவுக் காத்தக் கிளி மாதிரி ஆகிட்டேனே மாமா!”
“ஏய்..அழாத மயிலு.. இப்ப என்ன.. நீ பார்த்து நடந்தா தானா?
ரொம்ப கிராண்டா நடந்தா தானா?
எப்படி நடந்தா என்னம்மா, நம்ம மித்து நல்ல வாழ்ந்தா போதாதா? நாம வாழாத வாழ்க்கையும் சேர்த்து அவங்க வாழட்டும்!
நம்ம கல்யாணம் ரொம்ப க்ராண்டா ஊர் மெச்ச நடந்துச்சு. ஆனா நாம வாழக் கொடுத்து வைக்கலையே!
இப்ப இவங்க கல்யாணம் எப்படி நடந்திருந்தாலும் பரவாயில்ல மயிலு, இனி அவங்க வாழப் போற வாழ்க்கை நிறைவா இருந்தாலே போதும் மயிலும்மா.
நீ மனசைத் தேத்திக்கோ, கண்ணை முதல்ல தொடை! நீ இப்படி மனசு நொந்து கண்ணீர் விட்டா, அது மித்துவ தான் பாதிக்கும்! முதல்ல அழறத நிறுத்து”.
“இல்ல மாமா நான் அழ மாட்டேன்! இப்ப என்ன ஆச்சு?
என் பிள்ளை நான் இல்லாம கல்யாணம் பண்ணிட்டு வந்திட்டான்! அதுவும் ஒரு இக்கட்டான நேரத்துல, அதுவும் அவ நான் மருமகளா வரணும் ஆசைப்பட்ட பொண்ணு தானே!
“நான் இப்ப நார்மலாயிட்டேன் மாமா, போய் அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்கிறேன்!
ஆனா ஒண்ணு மாமா, மித்து இவ்வளவு நடந்த பின்னும் ஒரு வார்த்தைக் கூட என் கிட்ட இதப் பத்தி இன்னும் சொல்லாம இருக்கான் மாமா,
அதுக்கு நான் அவனை சும்மா விட மாட்டேன்! ஆமா.. “ என்று மனதுள் அவள் மாமாவிடம் பேசி விட்டு, கொஞ்சம் தெளிந்தவளாக அவள் ரூமை விட்டு வெளியே வந்தாள் மயூ..
வெளியே வந்த அவள் காலில் அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து விட்டார் அருண்!
“என்ன இது?” என்று பதறியப் படி நகர்ந்தாள் மயூ!
“இப்ப தான் இந்த மாமி உன்னைப் பத்தி சொன்னாங்கம்மா.
எனக்கு அப்படியே செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும்மா, நீ வாழ்க்கையில எவ்வளவு போராடி இந்த இடத்துக்கு வந்திருக்க!
எப்படியெல்லாம் ஒரு தனி மனுசியா நின்னு உன் பிள்ளைய வளர்த்து ஆளாக்கி இருக்கன்னு கேக்கும் போது, நானெல்லாம் ஆம்பிளையா பிறந்து, ஒரு உதவாக்கரையா இத்தனை வருசம் பூமிக்கு பாரமா வாழ்ந்து இருக்கேன்னு நினைக்கும் போது என் மேலேயே எனக்கு கோபம் கோபமா வருது!
அம்மா..மயூம்மா. நீ மயூம்மா இல்ல, மாரியம்மா..நான் கும்புடுற அந்த புலியூர் மாரியம்மாவே நீ தான்மா!
இந்த பாவியால, நான் செஞ்ச முட்டாள்த்தனமான வேலையால, இப்ப உன்னோட ஒரே கனவுல மண்ணை அள்ளிப் போட்டுட்டேன்!
இந்த பாவிய மன்னிச்சுடும்மா!” என்றார் இன்னுமும் எழாமலே!
“அய்யோ.. என்ன இது.. நீங்க என்னோட வயசுல பெரியவர், எனக்கு அண்ணன் மாதிரி, நீங்க போய் இப்படி என் காலில் விழுந்துட்டு..” மயூ அவரைத் தோள் தொட்டு எழுப்பினாள்!
“இல்லைங்கம்மா, அவர் சொன்னது நிஜம் தான்!
வேலைக்கு வழிப் பண்ணிக் கொடுத்து எங்க வாழ்க்கைத்தரத்தை உசத்தணும் ஜீவா தம்பி செஞ்ச உதவிக்குக் கைமாறா நாங்க செஞ்சது உங்க கனவுல மண்ணை அள்ளிப் போட்டது தான்!”
வசந்தாவும் கையெடுத்துக் கும்பிட்டார்!
“அய்யோ கொஞ்சம் நிறுத்துறீங்களா?” மயூ குரலை உயர்த்தவும் தான் அடங்கினார்கள்!
“ஏன் மாமி இவங்க கிட்ட அப்படி என்னத்தை சொன்னீங்க?”
மாமி மனது கேட்காமல், ராகவ் வித்யா எப்படி ஆசை ஆசையாய் குடித்தனம் செய்தார்கள், அந்நியோன்ய தம்பதிகளாய் இருந்தார்கள், ராகவ் இறந்தப் பின் வித்யாவின் போராட்டம் நிறைந்த வாழ்க்கை! அதில் மாமி எப்போது அவளுக்கு அறிமுகம் ஆனார் என்று பலதும் சொல்லி கண் கலங்கியிருந்தார்!
ஆரம்பத்தில் கொஞ்ச நாள் எல்ஐசி ஏஜென்டாக கூட இருந்திருக்கிறாள் வித்யா.
அப்போது மாமி எல்ஐசியில் கிளார்க்காக வேலைப் பார்த்தப் போது ஏற்பட்ட நட்பு இப்போது வரை தொடருவதை எல்லாம் சொல்லியிருந்தார் அவர்!
அதைக் கேட்ட அருணுக்கு தாங்க முடியவில்லை!
“என்ன அண்ணே நீங்க.. எப்போதும் நிதானமா இருங்க, ஒண்ணு இந்த எக்ஸ்ட்ரீம் இல்ல அந்த எக்ஸ்ட்ரீமா?” மயூ அவரைக் கிண்டல் பண்ணினாள்.
“மாமி கொஞ்சம் பஞ்சாங்கம் எடுத்துப் பாருங்களேன், நல்ல நேரத்துல தான் கல்யாணம் பண்ணி இருக்காங்களான்னு!”
மாமி எழுந்துப் போய் பஞ்சாங்கம் எடுத்து வந்து பார்த்து விட்டு,
“நல்ல நாளில், நல்ல நேரத்தில் அந்த வயலூர் முருகன் சன்னிதியில் வச்சு தான் பண்ணி இருக்காங்க. ரெண்டு பேருக்கும் உகந்த நட்சத்திரம் தான்.
சந்த்ராஷ்டமம் கூட இல்ல ரெண்டு பேருக்கும்! ஒண்ணும் பயப்படாதே மயூ! எல்லாம் நல்ல நேரத்தில் தான் நடந்துருக்கு!”
“அப்ப அடுத்து சாந்தி முஹூர்த்தத்துக்கு நாள் பாருங்க மாமி!”
“மயூ இன்னிக்கே நல்ல நாள் தாண்டி மயூ. நீ அப்ப அதுக்கும் ஏற்பாடு பண்ணிடு!”
“சரி மாமி” என்றவள் அன்புவைப் பார்த்து கேட்டாள் “என்னப்பா ஓகே தானே?”
“நீங்க சொன்னா சரி தான்!”
“நிலா ஆபிஸ் போயிருக்கா வரட்டும்”.
“அப்ப நாங்க கிளம்பறோம். வர வழியில ஒரு முருகன் கோவிலைப் பார்த்தோம். அங்க போயிட்டு வந்திடறோம்!
அத கிராஸ் பண்றப்போ மனசுக்குள்ள வேண்டிகிட்டேன்!” என்று சொல்லி விட்டு திருபோரூர் முருகன் கோவிலுக்கு சென்று வருவதாக சொல்லி அவர்கள் கிளம்பி விட்டனர்!
மயூ ஜீவாவுக்கு போன் பண்ணி வீட்டுக்கு வரச் சொன்னாள்.
அவன் வந்தவுடன், “மித்து, நாம் நாளைக்கு ஒரு வீட்டுக்கு பொண்ணுப் பார்க்க போகலாம்னு இருக்கேன், நீ ரெடி ஆகிடு!”
“மயூ, இப்போ எனக்கு கல்யாணம் எல்லாம் வேணாம், ப்ளீஸ் இந்த பேச்சை விடேன்!”
“அது சரி.. சார் எத்தன வாட்டி கல்யாணம் பண்ணுவாரு? அதான் வேணாம்னு சொல்றீங்களோ?”
“மயூ.. “ என்று அவன் அதிர்ந்து பார்க்குமுன்னே, அவன் கன்னத்தில் வரலாறு காணாத ஒரு அறை!
கையே எரிந்தது மயூவுக்கு! உதறிக் கொண்டாள்!
“என்ன நெஞ்சழுத்தம் இருந்தா நிலாவைக் கல்யாணம் செய்து கூட்டிட்டு வந்து இப்படி கமுக்கமா இருப்ப?”
“அது வந்து மயூ, அங்க அப்படி ஒரு சிச்சுவேசன்!”
“என்னடா பெரிய சிச்சுவேசன்? யாரோ ஒரு பொறுக்கியோட அல்லைக்கை! அவன் உன்னைத் தூண்டி விட்டுருக்கான், நீயும் அதுக்கேத்த மாதிரி ஆடிட்டு வந்திருக்கிற? வெக்கமா இல்ல உனக்கு?
திருச்சி தாண்டி பெரம்பலூர்ல விட்டா கூட ஒழுங்கா ஊர்ப் போய் சேரத் தெரியாத ஒரு படிக்காத தற்குறி, ஒட்டுண்ணி, அவனை ஹேண்டில்
தெரியாத நீயெல்லாம் என்னத்த படிச்சு கிழிச்ச, என்ன பிசினஸ்மேன் நீ?
அவன் நெருக்கடிக் கொடுத்தாலும் சமாளிக்கத் தெரிஞ்சுருக்கனும் ஒருத்தனுக்கு!
ஒரு பொண்ணோட மானத்தை வச்சு விளையாடி இருக்கான்ங்க அந்த பொறுக்கிங்க, அவங்கள அடக்கத் துப்பு இல்ல உனக்கு!
சரி கல்யாணம் பண்ணின சரி. இங்க வந்த பின்னாடியாவது என்கிட்ட சொன்னியாடா? அறிவுக் கெட்டவனே!
நான் வேற அவளை உனக்கு பொண்ணுப் பார்த்து செலெக்ட் பண்ணிக் கொடுன்னு கேட்டு ஹர்ட் பண்ணிட்டேன்!
எந்த ஜென்மத்துல எந்த புருசன் பொண்டாட்டியைப் பிரிச்சு வச்ச பாவமோ, ஆசை ஆசையா கல்யாணம் பண்ணியும் உங்கப்பாவோட வாழ முடியாம போச்சு எனக்கு!
இப்ப, இந்த வயசுல, நான் காரணமா, நீயும் நிலாவும் உங்க கல்யாணத்தை மறைச்சி வச்சுகிட்டு இன்னும் வாழ்க்கையைத் தொடங்காம இருக்கீங்க?
ஏண்டா மேலே மேலே என் பாவக் கணக்கை ஏத்துறீங்க?” மயூவுக்கும் அழுகை வந்தது!
அப்படியே சரிந்து சோபாவில் உட்கார்ந்தாள்.
“மயூ.. சாரி.. மயூ.. “ என்று ஜீவாவும் அழுதுக் கொண்டே அவள் மடியில் தலை வைத்தான்.
மூக்கை உறிஞ்சி விட்டு, குரலை சரி செய்து கொண்டு மயூ பேசினாள்.
“சரி.. விடு, இது விதி, இனி ஆக வேண்டியத தான் பார்க்கணும்.
எது எப்படியோ, உனக்கு கல்யாணம், உன் மனசுக்குப் பிடிச்ச ஒரு நல்லப் பொண்ணோட தான் ஆகிடுச்சு.
இனி இந்த மண வாழ்க்கையில் உங்களுடைய வெற்றி தான், நான் இத்தனை கஷ்டப்பட்டதற்கும், உன் அப்பா போன பின்னும் உயிரைப் பிடித்து வைத்திருந்ததுக்கும் அர்த்தம் சொல்லும்!
நீயும் நிலாவும் நல்ல படியா வாழ்க்கையை தொடங்குங்க. அதுவும் இன்னிக்கே!
உன் மாமனார் குடும்பம் வந்து என் காலிலேயே விழுந்து மன்னிப்புக் கேட்ட பின் தான் எனக்கு உன் கல்யாண விவரமே தெரியும்.
அவங்க எல்லாம் இப்ப கோவிலுக்கு போய் இருக்காங்க.
நீ போய் ரிலாக்ஸ் ஆகு” என்று அவனை அனுப்பி வைத்தாள் வித்யா!
கோவிலுக்கு சென்று விட்டு சீக்கிரமே வந்து விட்டார்கள் அன்புவும் மற்றவர்களும்.
வரும் போதே தேவையான பழங்கள், பூ ஸ்வீட் எல்லாம் வாங்கி வந்து விட்டான் அன்பு!
சகலைகள் சேர்ந்து ஜீவாவின் ரூமை அலங்கரிக்க, ஜீவா, நிலாவின் ரூமில் இருந்து கொண்டு தன் லாப் டாப்பில் வேலை செய்ய தொடங்கி விட்டிருந்தான்.
அலங்காரம் எல்லாம் முடிந்தவுடன் இருவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப வந்தார்கள்!
மயூ. “உடனேயே போகனுமா? இன்னும் கொஞ்ச நேரத்தில் நிலா வந்திடுவா. அவளையும் பார்த்துட்டு போலாம் இல்ல?”
“இல்லம்மா, பெத்த தாய், இந்த நிகழ்வின் போது இங்க இருக்க கூடாதுன்னு சொல்வாங்க, நாங்க கிளம்பறோம்” என்று வசந்தா சொல்ல,
“இங்க தானே இருக்க கூடாது, வாங்க என் பிரன்ட் செலின் அக்கா வீட்டு விசேசத்துக்கு போலாம் நைட் அங்கேயே கூட தங்கிக்கலாம்!” என்றாள் மயூ.
“இல்லம்மா அது வந்து..” மேலும் அவர்கள் தயங்க,
“வந்தும் இல்ல.. போயும் இல்ல.. நீங்க வாங்க. அன்பு நீங்களும் இங்கேயே இருங்க” என்று சொல்லி விட்டு, “உங்களுக்கு போர் அடிச்சா, இங்க நம்ம கேம்பஸில் சினிமா ஷூட்டிங் நடக்குது! போய் அதை வேடிக்கைப் பாருங்க” என்றும் சொன்னாள்.
சினிமா ஷூட்டிங் என்றதும் இளையவர்களோடு அருணுக்கு கூட ஆசை வந்து விட்டது!
ஆனால் அவர்களுடன் போக தயங்கினார்!
மயூ அவரைப் புரிந்து கொண்டு, “அண்ணே, நீங்களும் போங்க. இங்கயே இருந்தா நிலாவுக்கும் கூட ஒரு மாதிரி இருக்கும்” என்று சொல்லி அவர்களை அங்கே அனுப்பி வைத்து விட்டு, வசந்தாவோடு செலின் வீட்டுக்குக் கிளம்பி விட்டாள்.
இதோ, இப்போது சம்மந்திகள் இருவரும் செலின் வீட்டில் சாப்பிட போய் விட்டார்கள்!
சாப்பிட்டு விட்டு, பார்ட்டி முடிந்து எல்லோரும் கிளம்பிய பின், அவர்களுக்கு என்று செலின் கொடுத்திருந்த அறையில் போய் படுத்துக் கொண்டார்கள் இருவரும்.
அப்போது அங்கு இருந்த ஒரு காலண்டர் வித்யா கண்ணில் பட்டது!
“நான் உன்னை ஆசிர்வதிக்கவே ஆசிர்வதித்து
உன் சந்ததியை.. பெருகவே பெருகப் பண்ணுவேன்”
திருப்தியுடன் கண்களை மூடி தூங்கினாள் வித்யா!
—
அங்கு ஜீவாவோ, ஓவர் நைட்டில் ஒபாமா ஆகுபவன் போல, மயூவை சீக்கிரம் பாட்டியாக ப்ரமோட் பண்ண, “கடுமையா உழைத்துக் கொண்டிருந்தான்” ஜீவா!
அவனுக்கு ஏற்றவாறு முழு ஒத்துழைப்பு மயூவின் ஆசை மருமகளிடம்!
கூடவே அவள் மனதில் ஒரு எண்ணம்!
“இந்த புராணக் கதைகளில் எல்லாம் ரிஷிகளோடு கலந்து விட்டு, வெளியே வரும் போது கையில் குழந்தையுடன் வரும் ரிஷிப் பத்தினிகள் போல எல்லாம் இந்த காலத்தில் நடந்தால் நன்றாக இருக்கும்ல!”
ஜாடிக்கேத்த மூடி போல, மாமியாருக்கு ஏத்த மருமகள்!
“யூட்ரஸ்ல ஜிப் வச்சு தைக்கலாமா” என்ற வித்யாவின் வாரிசு மருமகள்!
error: Content is protected !!