“இது அவர்கிட்ட இல்ல ஆண்ட்டி” என்றவள், “என்ன கோவம் வருது. உங்க மகன் எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிடுவாரா என்ன?”
பாவம் வைஷ்ணவி போட்டு வாங்குவதை உணரவில்லை அவர், “அவனை பத்தி எனக்கு எல்லாமே தெரியும் மா. வயசு பசங்க எல்லாத்தையும் வீட்டுல மறைப்பாங்க. ஆனா இந்த பையன் எல்லாத்தையும் தயங்கி தயங்கிய என்கிட்டே சொல்லிடுவான்”
“நம்புற மாதிரி சொல்லுங்க ஆண்ட்டி. யாராவது இந்த காலத்துல அப்டி இருப்பாங்களா?”
மஹாலக்ஷ்மி அருகே குனிந்தவள்,” அதுவும் உங்க பையன் லவ் பண்ணுவாரோன்னு எனக்கு டவுட். நைட் மாடில யார்கிட்டையோ ரொம்ப நேரம் குசுகுசுன்னு பேசுறாரு”
“நேத்து பேசுனதையா சொல்ற?” – மஹாலக்ஷ்மி
“ஆமா ஒரு பதினோரு மணி இருக்கும்” – வைஷ்ணவி
“அது ஒரு பிரச்சனை மா… என்னோட அண்ணன் பொண்ணு தெறியுமா?” இல்லை என்றாள் வைஷ்ணவி.
“நம்ம செங்கோட்டைல தான்டா அவங்க இருக்காங்க. அண்ணனுக்கு மூட்டு வலி கொஞ்சம் இருக்கு. அதான் கேரளால ரெண்டு மாசமா ஏதோ சிகிச்சைக்கு போயிருக்காங்க. வீட்டுக்கு வர்றதில்லை, அதான் உனக்கு தெரியல போல..
என் அண்ணன் பொண்ணு அஸ்வினி பெங்களூருல வேலை பாத்துட்டு இருக்கா. நல்லா படிக்கிற பொண்ணு. ஆனா என்னமோ வேலைக்கு போகவே மாட்டேன்னு நிக்கிறா. காலேஜ் படிக்கிறப்பவே கேம்பஸ்ல ஏதோ பெரிய கம்பெனில வேலை கெடச்சு வற்புறுத்தி அனுப்பி வச்சாங்க. இப்போ என் அண்ணன் பொண்ணு வீட்டுக்கு வருவேன்னு ஒரே அழுகை.
கார்த்தினா அவளுக்கு பிரியம் கலந்த மரியாதை. அவன் என்ன சொன்னாலும் கேப்பா. என்னைக்கும் இல்லாம நேத்து ரொம்ப அழுகை. இவனும் பேசி பாத்தான். முடியல. அது தான் கெளம்பி வர சொல்லியாச்சு. அண்ணனும் நாளைக்கு வீட்டுக்கு வர போறாங்க”
“ஓஓ…” அது என்ன இவன் மேல் பிரியம் என்று வைஷ்ணவி யோசிக்க,
“உங்களுக்கு உங்க அண்ணன் மகளை மருமகளா வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற எண்ணம் இருக்கா ஆண்ட்டி?” பயத்தோடு தான் கேட்டாள் வைஷ்ணவி.
“எனக்கில்லை, ஆனா அஸ்வினிக்கு கார்த்தி மேல எப்பவுமே ஒரு கண்ணு இருக்கும். அவன் இருந்தா இவளும் அந்த இடத்துல கண்டிப்பா இருப்பா”
“அப்ப உங்க பையன் சரி சொன்னா நீங்களும் சரி சொல்லிடுவீங்களா?”
“ம்ம்ம் அவனுக்கு புடிச்சா அடுத்து பேச நாம யாரு? அண்ணன் மகளை வீட்டுக்கு மருமகளாக்குனா எனக்கும் சொந்தம் விட்டு போகாம இருக்கும்”
பூரித்தவரின் முகத்தை பார்த்து முறைத்த வைஷ்ணவி அவருக்கு அருகில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்து, “அப்டிலாம் உங்க பையன விட்டு குடுக்க முடியாதுங்க” சண்டைக்கு வந்தவளை அதிர்ச்சியாக பார்த்தவர்,
“வைஷ்ணவி…” என்று இழுக்க,
“மிஸ்சஸ் வைஷ்ணவி கார்த்திக் நான் ஆகணும்” ஆணித்தரமாக நிறுத்தினாள் உரிமையாக, “ம்ம்ம்?” அவருக்கு திக்கும் புரியவில்லை திசையில் புரியவில்லை, தலை சுற்றுவது போல் இருந்தது.
புரியாமல் பேசுபவள் போலும் இல்லை, நிதானமாக உறுதியாக இருக்கிறாள். ஆனால் இதெல்லாம் என்ன? சரி வருமா? தன்னுடைய மகனின் மனதில் என்ன இருக்கிறது? நிச்சயம் இதுவரை இவரின் மேலும் காதல் வந்தது இல்லை. வைஷ்ணவியை பற்றி கூட சில முறை சுபத்ரா பேசிய பொழுதெல்லாம் அவளின் சேட்டைகளை கேட்டு சிரிப்பான்.
அவ்வளவே அவனிடம் இருந்து வரும் வினை. இப்பொழுது வரை தன்னையனின் மனதில் இவள் வரவில்லை. அதே சமயம் பிடிக்காமலும் இல்லை. ஒருவேளை பிடிக்கவில்லை என்றால் நிச்சயம் எந்த நிலையிலும் அவளை ஏற்றுக்கொள்ள மாட்டான், அந்த அளவிற்கு பிடிவாதம் அவனிடம் எப்பொழுதும் இருக்கும்.
தனக்கு வைஷ்ணவியை பிடிக்குமா என்று கேட்டால், பதில் இல்லை. நல்ல பெண். நல்ல குணமுடையவள். வாயாடி. வீட்டிற்கு மருமகளாக வந்தால் வீடே கலகலப்பாக தான் இருக்கும்.
ஏன் வெளியே வைஷ்ணவி பேசுவதை கேட்டு உள்ளே சுப்பிரமணி கூட பல முறை சிரித்தது உண்டு. ஆனால் தன்னுடைய மாமியார் சேர்மத்தாய் பற்றி எண்ணும் பொழுது தான் சற்று பயமாக உள்ளது. இவர் பேச்சை கேட்டு கணவரும் கூட மனம் மாற வாய்ப்பு அதிகம் உள்ளது. அது மட்டும் இல்லாது தன்னுடைய அண்ணி கூட ஒரு முறை அஸ்வினியை கார்த்திக்கு மறைமுகமாய் கேட்டது உண்டு.
சொந்தத்தை விட்டு வெளியில் சென்றால் அதுவும் பெரிய ப்ரளயமாகுமா என்ற பயம் மனதை உருள வைத்தது. இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் இரு குடும்பமும் ஒரே பிரிவினை சேர்ந்தவர்கள் என்பது மட்டுமே.
“என்ன?? என்ன என்ன பிரச்சனை வரும்னு யோசிச்சு வச்சிட்டீங்களா?” வைஷ்ணவியை பார்த்து முழித்தவர்,
“என்ன கிண்டல் தானே வைஷுமா பண்ற?” ஆமாம் என்று சொல்லிவிட மாட்டாளா என்ற பரிதவிப்பு அவர் கண்ணில்.
“கற்பூரம் போங்க” அவள் சொல்லில் மலர்ந்த முகம் அவள் அடுத்த முறைப்பில் மீண்டும் சுணங்கியது.
“உங்களுக்கு என்ன புடிக்கலயா?” அவர் முகவாட்டம் இன்னும் அப்படியே தான் இருந்தது, “எனக்கு இத எப்படி அப்ரோச் பண்றதுன்னு தெரியல. உங்க பையன் மேல இந்த மாதிரி எண்ணம் இப்போ தான் வந்தது. ஆனா அது ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு… ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க ஆண்ட்டி”
“இப்போ தான் வந்ததுனா?” – மஹாலக்ஷ்மி
“நேத்து…” சற்று தயக்கமாக தான் இருந்தது அவளுக்கும்.
“ஒரு நாள்ல உன்னோட வாழ்க்கையவே முடிவு பண்ணிடுச்சா மா இந்த காதல்?” அவசரத்தில் எடுத்த முடிவாக இருந்துவிட கூடாதென்பது அவரது எண்ணம்.
“ஒரே மணி நேரத்துல அரேஞ்ட் மேரேஜ் என்னோட வாழ்க்கைய முடிவு பண்றப்ப, என்னோட காதல் முடிவு பண்றதுல தப்பு இல்லையே ஆண்ட்டி?”
“அவன்கிட்ட ஏதோ ஒன்னு புடிச்சிருக்குனு யோசிச்சு அவசர படுறனு உனக்கு தோனலயா?”
சிரித்தாள் பெண், “ஒண்ணுனு யார் ஆண்ட்டி சொன்னது? மூணு சொல்றேன்… யாருன்னே தெரியாத எனக்கு வந்த ஒரே நாள்ல வேலை தேவைப்படுதுன்னு தெரிஞ்சு, நான் மட்டும் தனியா போக மாட்டேன்னு புரிஞ்சு ஷெர்லின்க்கும் வேலை வாங்கி குடுத்து இங்க நிக்க வச்சிருக்கார். இப்டி என்ன பத்தி எதுவுமே தெரியாதபயே இவ்ளோ பண்றவர் என்ன பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா தானே ஆண்ட்டி பாத்துக்குவார்?” என்றவள்,
“தன்னை நம்பி வந்த பொண்ணு தனியா இருக்கேன்னு கூட இருந்து வீடு வர பத்தரமா போய்ட்டேனான்னு கன்பார்ம் பண்ணிட்டு வீட்டுக்குள்ள போறார். பாக்க கொஞ்சம் நல்லா, அக்கறையா, பொறுப்பா இருந்தா யாருக்கு தான் பிடிக்காது?
எல்லாதுக்கும் மேல ஒரு பொண்ணு தன்னோட வாழ்க்கை துணைகிட்ட முதல எதிர்பாக்குறது கண்ணியம். ஒரு நாள் என்கிட்டே தப்பான பார்வையோ, அளவுக்கு மீறிய பேச்சோ இருந்ததில்லை. புடிச்சுப்போச்சு ஆண்ட்டி உங்க பையன. மொத்தமா புடிச்சிடுச்சு. ஒரு மாசத்துல இவ்ளோ நல்ல விசியம் கண்ணனுக்கு தெரிஞ்சு… தெரியாம இன்னும் அவருக்குள்ள எவ்ளோ இருக்கோ…”
மகாலட்சுமிக்கு மனம் பூரித்து போனது மகனை பற்றி செவிகளால் கேள்வியுற்று. தாயாய் இறுமாப்பு கொண்டது மனம். சந்தோச ரேகைகள் அவர் முகத்தில், காரணம் ஒரு புறம் மகன் என்றால், இவளின் உறுதியான தெளிவான முடிவில் சாந்தமான தன்னுடைய மகனுக்கு இவ்வாறான பெண்ணை தானே தேடினார்.
அண்ணன் மகள் நல்லவள் தான், ஆனால் தன்னுடைய மகனுக்கு அஸ்வினி பொருந்த மாட்டாள், மகனை போலவே பிடிவாதம் அதிகம் என்ற எண்ணம் தான் கணவனிடம் அது பற்றி பேச விடாமல் வைத்தது. ”
அவன் ரொம்ப பிடிவாதக்காரன் வைஷ்ணவி”
“நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன் ஆண்ட்டி. எனக்கு கோவமே வராது, உங்க பையனுக்கு கோவம் வராது, வந்தா ஜாஸ்தியா இருக்கும். பொறுமையா ஹாண்டில் பண்ணிக்குவேன்”
வைஷ்ணவியை பார்த்த உடனே பிடித்திருந்தவருக்கு, அவளுடைய இந்த பக்குவமான பேச்சும் கூட பிடித்து தான் போனது. இருந்தாலும் மொத்த குடும்பத்திடமும் சம்மதம் வாங்கிய பிறகு தானே அவளுக்கு வாக்கு தர முடியும்?
“எனக்கு பிரச்சனை இல்லை வைஷு மா… அத்தை தான் பேரனுக்கு வர பொண்டாட்டி பத்தி நெறையா சொல்லுவாங்க” என்று இழுக்க அவரின் நிலையம் வைஷ்ணவிக்கு புரிந்தது.
“அந்த கெளவிய நான் கவனிச்சுக்குறேன் ஆண்ட்டி. நீங்க அங்கிள் கிட்ட பேசுங்க”
“இது எடுத்தோம் கவுத்தோம்ன்னு எடுக்குற முடிவில்ல வைஷ்ணவி மா… ரெண்டு குடும்பம் ஒக்காந்து பேசி யோசிச்சு பண்ண வேண்டியது”
“அரேஞ்ட் மேரேஜ் மாதிரி பேசுங்க உங்க வீட்டுல” தவிப்பாய் கேட்டாள்.
அவரோ மௌனமாய் இருக்க, “என்ன புடிக்கலயா ஆண்ட்டி?” வாட்டத்துடன் கேட்டவள் கன்னத்தை பற்றியவர், “உனக்கென்னடா குறை? உன்ன கல்யாணம் பண்ணிக்க என் பையன் குடுத்து வச்சிருக்கணும்” பூவாய் மலர்ந்து போனது பெண்ணின் முகம்.
“அதே நேரம் என்னால உனக்கு வாக்கு தர முடியாது வைஷ்ணவி. வீட்டுல பொறுமையா பேசி பாக்குறேன்” என்கவும் தலையை ஆட்டி வைத்தாள்.
அதன் பிறகு பெரிய அமைதி அங்கு இருக்க வைஷ்ணவியால் அவரிடம் சகஜமாக பேச முடியவில்லை, “வெக்கமே இல்லாம இப்டி கேக்குறேன்னு யோசிக்கிறீங்களா ஆண்ட்டி?”
“கொஞ்சம் லைட்டா” அவள் முகத்தை பார்த்து அவர் சிரித்துவிட,
“சிரிங்க சிரிங்க, கல்யாணம் மட்டும் ஆகட்டும் மருமக கொடுமைனா என்னனு காட்டுறேன்” சிரிப்போடு சாபமிட்டவளை பார்த்து மேலும் சிரித்தார் மஹாலக்ஷ்மி.
ஆண்கள் பேசி முடித்ததும் கணவனுடன் மஹாலக்ஷ்மி கிளம்பிவிட, கார்த்தியும் சென்று மாலை வருவதாக கூறி புறப்பட்டான்.
comments kedaikuma?