மகனின் செய்தியை கேட்டு விறுவிறுவென கணவன் முன் வந்து நின்றார் விழிகளில் பரிதவிப்புடன். பின்னாலே வற்றிய சிரிப்போடு வந்த மகனை பார்த்ததும் மனைவியின் கலகத்திற்கு காரணம் புரிந்து.
“என்னடா சொன்ன உங்கம்மாட்ட?” முறைத்தார் சுப்பிரமணி.
மனைவி என்றால் அவருக்கு அவ்வளவு பிரியம். அதிகம் பேசாதவர் சின்ன சின்ன விசயங்களுக்கு கூட தன்னிடம் கலங்கிய விழிகளுடன் வந்து நின்றால் எதிரில் எவர் நின்றாலும் மனைவி பற்றி மட்டுமே யோசித்து விடும் அவர் எண்ணம்.
அது அன்னையாக இருந்தாலும் சரி, எவராக இருந்தாலும் சரி. தன்னை மட்டுமே உலகமாய் வந்து நிற்பவரை சிறிதும் கலங்கடிக்க கூடாதென்று அவர் எண்ணம். இப்பொழுது மகனை விட்டுவிடுவாரா என்ன?
“இந்த ஒர்க் முடியவும் ஆறு மாசம் ஆகும் ப்பா. கொஞ்ச நாள் மட்டும் ஒர்க் பண்ண எந்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் அக்சப்ட் பண்ணிக்க மாட்டாங்க. அதான் பாரின் போகலாம்னு யோசிச்சேன்”
“என்ன கார்த்தி பேசுற? உன்ன விட்டுட்டு நாங்க இருந்ததே இல்ல ப்பா. ஆறு மாசம் கண் மூடி முழிக்கிறதுக்குள்ள ஓடிடும். இதுக்காக நீ ஆறு மாசம் எங்கையாவது போய் கஷ்டப்படணுமா?”
இதுவரை அவனை பார்க்காமல் ஒரு மாதம் கூட மஹாலக்ஷ்மி தாக்கு பிடித்ததில்லை. ஆறு மாதம் வெளிநாடு சென்றால் மொத்தமும் அவனை பார்க்க முடியாதே என்ற வருத்தத்தில் தான் கணவனிடம் வந்து நின்றார்.
“புரியுது மா ஆனா ஆறே ஆறு மாசம் தான் மா. வேகமா வந்துடுவேன்”
“ஏன்யா… இந்த கெழவியே எப்போ எப்போ-னு இருக்கேன். இதுல நீரும் கெளம்பிட்டா என்ற நிலைமையை பத்தி யோசிச்சுப்போட்டு முடிவெடுக்க வேண்டாமா?” கண்ணீரை வடித்துக்கொண்டே பேரனிடம் கேள்விகேட்டார் சேர்மத்தாய்.
“என்ன பட்டி இது… இப்டி எல்லாம் பேசுறீங்க? உங்களுக்கு ஆயிசு கெட்டி. ஏன் கவலை பட்டு ஒடம்ப கெடுக்குரிக?”
வருத்தமாய் கார்த்திக் வினவ, “என்ன தம்பி இது திடீர்னு முடிவு? பெத்தவுக என்ன யோசிக்கிறாங்க, இது சரியா வருமா… என்ன ஏது-னு ஒரு வார்த்தை கூட கேக்காம நீயா பேசுற” மகன் மீது கோவத்தை காட்டினார் சுப்பிரமணி.
“கேக்கலாம்னு தான் ப்பா நெனச்சேன். ஆனா போனா நல்லா இருக்கும். கைக்கு கொஞ்சம் காசு பாத்த மாதிரியும் இருக்கும்”
“ஓ அப்ப அந்த ஊர்ல ஆறு மாசத்துக்கு வேலை தருவங்களா என்ன?” தன் பங்கிற்கு சகோதரி சகோதரனுக்கு உதவினாள்.
மகள் வார்த்தையை கேட்டு சுப்பிரமணி மகனை கேள்வியாய் பார்க்க, “இது ஒரு ஈவென்ட் ஒர்க் ப்பா. நாலு மாசம் பெரிய புட் பால் ஒர்க்க்கு வர்ற ஆளுங்களுக்கு குக் பண்றது. மிச்சம் ரெண்டு மாசம் ஒரு கிரெடிட் மாதிரி செவென் ஸ்டார் ஹோட்டல்ல ஸ்பெஷல் ட்ரைனிங். ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் செஃப் சொன்னாங்க. தமிழ்நாடுல இருந்து மூணு பேர் தான் செலக்ட் ஆகிருக்கோம். பெரிய ஆபர்ச்சுனிட்டி ப்பா” சொல்ல வேண்டியது ஆகியது, இனி தாங்களே ஒரு முடிவை கூறுங்கள் என்று நின்றான்.
“தாராளமா போகலாம் கார்த்தி. ஆனா நீ போறேன்னு சொல்றது இந்த நேரத்துல சரியில்ல. உன் பொறுப்புல மொத்த கட்டடத்தொட வேலைய வச்சிட்டு இப்டி போறேன்னு சொல்றது சுத்தமா என் மனசுக்கு ஒப்பல தம்பி”
“இந்த வேலை இல்லனா அவன் போகணுமா?” மகன் செல்வதை ஸ்ரீகரிக்க இயலாதவராய் அன்னை கணவனிடம் வாதாடினார்.
“ம்மா இது என்ன மா பிடிவாதம்?” – கார்த்தி
“யாருக்கு ப்பா பிடிவாதம் உனக்கா இல்ல எனக்கா? என்ன அங்க போனா மாசம் ஒரு லட்சம் சம்பளம் வருமா? சென்னை போ. அதே சம்பளம் அங்கையும் உன் திறமைக்கு வரும்” என்ன சொல்லி அன்னைக்கு புரிய வைக்க என்று தெரியவில்லை.
“நான் வர்றேன்னு சொல்லிட்டேன் ம்மா. இனி மாட்டேன்னு சொல்ல முடியாது. இங்க இருக்குற வேலைய என் ப்ரன்ட்ஸ் வந்து பாத்துக்குறேன்னு சொல்லிருக்காங்க. ஆறே மாசம் தான்” தந்தையிடம் திரும்பி,
“புரிஞ்சுக்கோங்க ப்பா. எனக்கு புடிச்சத நான் செய்யணும்னு ஆசைப்படுறேன்”
இனி இவனிடம் பேசி எந்த பயனும் இல்லை என்பதை மகம் பேசும் பொழுதே அவன் கண்களை பார்த்து புரிந்துகொண்ட பெற்றோர் எதுவும் பேசாது விலகிட அனைவரின் முகத்தை முகத்தை பார்த்து அவர்கள் கோவத்தில் இருப்பதாய் அறிந்து மன நிம்மதி இல்லாமல் மாடி ஏறி போனவன் கண்கள் தப்பாமல் எதிர் வீட்டு மாடியில் விழுந்தது.
எப்பொழுதும் எரியும் விடிவெள்ளியை போன்ற வெண்மை நிற விளக்கு சரியாக அவள் அறையின் வாசலில் விழ, இவன் வரவிற்காகவே காத்திருந்தது போல் இவன் முகத்தை பார்த்ததும் அந்த விளக்கை விட பிரகாசமாய் மாறியது அந்த சின்ன வதனத்தில் தோன்றிய சிரிப்பு. ‘ஹாய்…’ மெதுவாக அவள் வாய் அசைய வைஷ்ணவியின் கைகளோ காற்றில் வேகமாக அசைந்தாடியது.
என்ன கூறுவதென்று தெரியாமல் அவளை சுத்தமாய் நிராகரித்து அறைக்குள் சென்று அடைந்துகொண்டவனை வாடிய முகத்துடன் பார்த்த வைஷ்ணவி அப்படியே அமர்ந்திருக்க மீண்டும் கதவை திறந்து அவளுக்கு காட்சியளித்தான் அவளவன்.
சுற்றி எவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டவன் அவளை பார்க்க அவன் தன்னிடம் தான் பேசவந்துள்ளதை யூகித்தவள் வீட்டு முனையில் ஆர்வமாக நின்றாள் அவன் முகன் பார்த்து.
“சொல்லுங்க கார்த்திக்… சொல்லுங்க” என்க,
“வேணாம் வைஷ்ணவி”
“உங்களுக்கு நான் இன்னும் எதுவுமே குடுக்கலையே கார்த்திக் அதுக்குள்ள வேணாம் சொல்றிங்க?” வைஷ்ணவியின் இரட்டை அர்த்தத்தை கேட்டவன் முகம் கோவத்தில் சிவந்தது.
எரிச்சலில் இடது கை பெருவிரல் கொண்டு நெற்றியை நீவியவன், “என்ன வைஷ்ணவி இது புரியாம பேசுறீங்க?”
“அட என்ன கார்த்திக் நீங்க தான் எதுவும் புரியாம பேசுறீங்க… புரியலைனாலும் சரி பரவால்ல புரிய வைக்க வேண்டிய மாதிரி நான் புரிய வைக்கிறேன்” கண் சிமிட்டி சிரித்தவள் மீது எல்லை கடந்து கோவம் சென்றது ஆணுக்கு.
“நீங்க பொண்ணு தானங்க? ஏன் இப்டி எல்லாம் பேசுறீங்க அசிங்கமா பேசுறீங்க? ச்சை கேக்கவே புடிக்கல. இதுல உங்ககூட லைப் லாங்… யோசிக்கவே முடியல. இதோட இந்த எண்ணத்தை எல்லாம் தூக்கி எரிஞ்சிடுங்க”
அவளிடம் மொத்த கோபத்தையும் காட்டாமல் தன்னறைக்குள் சென்று அடைந்தவன் என்னனெலாம் வைஷ்ணவியை விட்டு தள்ளி இருக்க என்ன என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்ய துடித்தது. முதலில் அவன் அழைத்தது அவனுடைய செஃப் சுந்தராஜனுக்கு தான்.
“சொல்லு கார்த்தி” சற்று உரக்க கழகத்தில் தான் இருந்தது அவர் குரல்.
“சவூதி போற ஆபர்ச்சுனிடி இன்னும் ஓபன்ல தான் இருக்கா சார்?” ஏற்கனவே அவனுடைய திறமையில் அவன் பக்கம் ஈர்க்கப்பட்டவருக்கு எப்படியேனும் அவனை இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தூண்டிவிட வேண்டும் என்று தான் அவனிடம் பலமுறை பேசினார்.
இப்பொழுது இவனே வரும் பொழுது விடுவாரா என்ன? உறக்கம் போனது அவருக்கு, “ம்ம்ம் எஸ் கார்த்தி”
“நான் போறேன் சார்… ஆனா வீட்டுல ஆறு மாசம்-னு சொல்லிருக்கேன். ரெண்டு மாசம் ஒர்க், ரெண்டு மாசம் ட்ரைனிங்-னு தெரியாது”
“ஏன் ஏதாவது பிரச்சனையா. வீட்டை விட்டு வரவே மாட்டேன்னு சொல்லுவ. என்ன வீட்டை விட்டு அம்மா தொரத்திட்டங்களா?” சிரித்தார் அந்த பெரிய மனிதர்.
“இல்ல சார். இங்க ஒர்க் எதுவும் பெருசா இல்ல. அதன் ஏன் டைம் வேஸ்ட் பண்ணனும்னு தான் போறேன். லாஸ்ட் டூ மந்த்ஸ் கஞ்சம் ரிலாக்ஸ் பண்ண இங்க இந்தியா வந்து உங்க சென்னை ஹோட்டல்ல ஒர்க் பண்ண நெனச்சேன். உங்களுக்கு ஓகே ஆனா மட்டும்” என்றான்.
“எனக்கு பிரச்சனை இல்ல கார்த்தி. நீ தாராளமா வரலாம். நான் விசா ஏற்பாடு பண்ண சொல்றேன்”
“தேங்க்ஸ் சார்” நிம்மதி பெருமூச்சோடு கைபேசியை கட்டிலில் போட்டவன் காற்றுக்காக ஜன்னலை திறந்து விட்ட பொழுது எதிர்வீட்டு மாடியில் பதிய மெல்லிய இசையின் சத்தம். வைஷ்ணவி தான் ஊஞ்சலில் அமர்ந்து சோக பாடல் ஒன்றை ஒலிக்கவிட்டிருந்தாள். அஞ்சாதே படத்தின் பாடல்.
‘டேய் கார்த்தி சவூதி போற… நச்சு பிகர் ஒன்னு கரெக்ட் பண்ணி இச்சு குடுத்து இந்த ராங்கிய அள்ளுவிட வக்கிர’
தனக்குள்ளே சூளுரைத்துக்கொண்டவன் கண்கள் காரணமே இல்லாமல் அவளிடம் மீண்டும் சென்றது. பாடல் சோகமாக இருந்ததே தவிர அந்த முகத்தில் சோகமில்லை.
சட்டென பாட்டை நிறுத்தி கைபேசியை காதில் வைத்து எழுந்தவள் கார்த்தியின் அறையை நோக்கி வர, இவன் மின்விளக்கை அணைத்துவிட்டான்.