மதுரையிலிருந்து காலை ரயிலை பிடித்து வந்த உடனே குளித்து தயாராகி, அன்னை தந்தையிடம் எதற்காக தன்னிடம் மறைத்தீர்கள் என கோவப்படாமல்,
“எதையும் மறைக்காதீங்க ம்மா… சொந்த வீட்டுலையே அந்நியமா இருக்கோமோனு கஷ்டமா இருக்கு” என்ற ஒற்றை வாக்கியத்தில் தாங்களும் தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு உருவானது.
“நீ ஒரு வார்த்தை என்கிட்டே கேட்ருக்கலாம்ல கார்த்தி? இங்க உனக்கு வேலையே இல்ல தம்பி. பிரச்சனை வர்ற இடத்தை விட்டுட்டு மத்த இடத்தை மட்டும் நாம வாங்கிருக்குற மாதிரி லாயர் ஆபீஸ்ல பேசி டாக்குமெண்ட் எல்லாம் வாங்கியாச்சு. போலீஸ் கூட கொலை பண்ணவனை நெருங்கிட்டோம்னு சொன்னாங்க. தேவை இல்லாத அலைச்சல் தான் உனக்கு”
“இருக்கட்டும் ப்பா.. நான் ஒருதடவை பசங்ககிட்டையும் என்ஜினீயர் கிட்டையும் பேசிட்டா நிம்மதியா இருக்கும்” என காலை உணவை கூட அரை குறையாக உண்டு முடித்து சைட்டை நோக்கி தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் பறந்துவிட்டான்.
காலை சென்று நண்பர்களை பார்த்து பேசியவன், பார்ட்னர்ஷிப்பிலிருந்து பின்வாங்குவதாக கூறிய நண்பனுக்கு நிலைமையை பேசி புரிய வைத்து விருப்பமிருந்தால் தாராளமாக மீண்டும் இணைந்துகொள்ளுமாறு கூறி மதிய வேளை சைட்டுக்கு வந்து நீண்ட நேரம் சுந்தரிடம் பேசிக்கொண்டிருந்தான்.
“ரெடிமேட் வால்ஸ் எல்லாம் இன்னும் ஒன் மந்த்ல வந்துடும் கார்த்தி. அதுக்குள்ள நாம மத்த வேலைய பாத்துட்டே இருக்கலாம். நீங்க ஊர்ல இருந்து வர்றப்ப எல்லாத்தையும் முடிச்சு உங்க கைல சாவிய குடுக்குறது என் பொறுப்பு. கவலையே படாம நிம்மதியா இருங்க” என்று அறிவுரை வழங்கி சார்லஸை வராததால் ஷெர்லினை வேலையை பற்றி தகவல்களை கூறும்படி அனுப்பி வைத்தான்.
“நான் போக மாட்டேன் வேணும்னா நீங்களே சுத்தி காமிங்க”
“ஷெர்லின்” சுந்தர் அவளை கண்டிக்க, ஷெர்லின் விருப்பமில்லா பேச்சிலே வைஷ்ணவி தோழியிடம் அனைத்தையும் பகிர்த்திருக்கக்கூடும் என்று அனுமானித்திருந்தான்.
“இருக்கட்டும் சுந்தர் நானே பாத்துக்குறேன்” என்றான்.
“இல்ல கார்த்தி” ஷெர்லினை முறைத்தவன், “போ ஷெர்லின்” வலுக்கட்டாயமாக அவளை அனுப்பி வைத்தான்.
முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு வேகமாக முன்னே நடந்தவளை சிரிப்போடு பின்னே தொடர்ந்தான் கார்த்தி.
“அங்க தான் கிட்ஸ்க்கு ஸ்விம்மிங் பூல்-கு குழி தோண்டிட்டு இருக்கு. இன்னும் ஒரு மணி நேரத்துல ஜே.சி.பி வந்துடும், அப்போ பெரியவர்களுக்கும் ஸ்விம்மிங் பூல் தோண்டிடலாம். பூல்சைட் ரூம் இந்த இடத்துல வச்சுக்கலாம்-னு என்ஜினீயர் சொன்னார். இந்த பக்கம் லேடீஸ், இந்த பக்கம் மென்ஸ்-கு. அவ்ளோ தான். நான் கிளம்புறேன்”
முகத்தை கொடுத்தே பேசாமல் கடமையாக தகவல் கூறி கிளம்பியவளை அழைத்தான், “வைஷ்ணவி வரலையா?”
தோழியை பற்றி பேசவும் கோவம் சுர்ரென தலைக்கு ஏறியது, “வந்தா வரலைனா உங்களுக்கு என்ன? நீங்க ஆசைப்பட்ட மாதிரியே உங்க ரிசார்ட் பக்கமே அவ எட்டி பாக்க மாட்டா போதுமா?”
குழம்பி போனான் அவன், இந்த பிரச்சனையில் தானே அவளை தலையிட வேண்டாம் என்றது… இல்லை தன்னுடைய வார்த்தை தடம் மாறியதா என்ற சந்தேகம் வந்தது.
“நான் அந்த அர்த்தத்துல சொல்லல ஷெர்லின்”
“வேணாம் ண்ணா. அவ உங்க பின்னாடியே சுத்தி சுத்தி வந்தப்ப புடிக்கலைனு சொல்லாம வெறும் வேணாம் வேணாம்னு சொல்றது, அவ போடுற பாட்டெல்லாம் ரூம்ல இருந்தே சிரிச்சிட்டே கேக்குறது, அந்த windchime மாட்டுறதுன்னு அவளுக்கு நம்பிக்கை குடுத்து, இப்போ ஒரேடியா போ-னு தள்ளிவிட்டா அவ மனசு எவ்ளோ கஷ்டப்படும்னு யோசிக்கல நீங்க.
என்ன பிரச்சனை வந்தாலும் சிரிச்சிட்டே போனவள இப்டி அழுது நான் பாத்ததே இல்ல. விடிய விடிய அழுதுட்டே தூங்கலை. நொறுங்கிப் போயிருக்கா. விட்ருங்க. உங்களுக்கு புடிச்ச மாதிரி அமைதியா ஒரு பொண்ண பாத்துட்டு கல்யாணம் பண்ணிக்கோங்க இனி உங்கள எப்படியும் டிஸ்டர்ப் பண்ணவே மாட்டா”
ஷெர்லின் சென்றும் கார்த்தி காதில் அவள் பேசியது மீண்டும் மீண்டும் கேட்டது, ‘இப்டி அழுது நான் பாத்ததே இல்ல’
இரண்டு வாரங்கள் முன்பு ஊருக்கு கிளம்பும் பொழுது ஒரு கடையில் எதேச்சையாக அவள் வீட்டிலிருந்து அவனை அழைப்பதற்கு பயன்படுத்தும் அந்த windchime கண்களில் பட, உடனே வாங்கி வந்து காரணமே தெரியாமல் மாட்டிவிட்டு சென்றான்.
இன்று அதே பொருளை அவள் பார்க்கும் பொழுது வெறுப்போடு அவிழ்த்து போட்டது அவள் மனதை நிச்சயம் காயப்படுத்தியிருக்கும் என்று புரிந்தது. அவள் மேல் உள்ள கோவத்தில் அன்று பேசியவன் இதுநாள் வரை தன்னுடைய தவறை உணராமல் இருக்க, இப்பொழுது வைஷ்ணவி பேசிய பின்பு தான் தவறின் வீரியம் புரிந்தது.
சாலையில் கவனம் செலுத்த முடியாமல் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தியவன் ஹெல்மெட்டை அவிழ்த்து வயல்களிலிருந்து வரும் நெற்பயிரின் வாசத்தை உள் இழுத்தான்.
செய்த தவறு மனதை உறுத்த அதன் தாக்கம் நெற்றியில் வியர்வை அரும்புகளை உருவாக்கியது. வைஷ்ணவியின் முகம் நினைவிற்கு வர, ஹெல்மெட்டை அணியாமல் வீட்டிற்கு வாகனத்தை செலுத்தினான்.
இல்லம் வந்ததும் அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று நேரடியாக மாடிக்கு சென்றவன் வைஷ்ணவி வீட்டை பார்க்க அங்கு ஊஞ்சலில் வைஷ்ணவி அமர்ந்திருக்க, மஹேஸ்வரி மாடியை சுத்தம் செய்துகொண்டிருந்தார் மகளை திட்டிக்கொண்டே.
“நீ யூஸ் பண்ற இடத்தை கூட உன்னால சுத்தமா வச்சுக்க முடியலையா? இத்தனை நாள் சரி வேலைக்கு போற-னு செஞ்சேன், இப்போ தான் வேலைய விட்டு தூக்கிட்டாங்கல்ல உன்னோட ரூமை தூத்து தொடச்சு வைக்க மாட்டியா. உன் அண்ணன் சொல்றது சரியா தாம்லே இருக்கு. உன் அய்யா தான் உன்ன கெடுத்து வச்சிருக்காக”
திரும்பி மகளை பார்க்க, அன்னை பேசியதை காதிலே வாங்காமல் நகத்தை வெட்டி அப்படியே கீழே போட்டுக்கொண்டிருந்தாள். அவள் கையில் அடித்தவர், “இப்டியா நகத்தை வெட்டுவ? அங்க சலதார் குழி பக்கமா போய் வெட்டு-னு எத்தனை நா சொல்றது?”
“வெட்டிவிட்டு கூட்டிடுவேன் மஹேஷு” – வைஷ்ணவி
“உன் ரூமையே ஒரு வாரம் சுத்தம் பண்ணாம இருக்கவ, இந்த இடத்தை கூட்டுவியாக்கோம்”
அன்னை மகள் இருவரின் பேச்சுகளை கேட்டுக்கொண்டே இலகுவான உடைக்கு மாறியவன், தன்னுடைய வீட்டு மாடியில் மற்ற செடிகளுடன் வைப்பதற்கு வரும் பொழுது வாங்கிய வெள்ளை மற்றும் சிகப்பு நிற ரோஜா செடியை அங்கிருந்த இரண்டு காலி தொட்டியில் ஊன்றி வைக்கும் வேளையில் இறங்கினான்.
“அடடே கார்த்தி எப்போ ப்பா வந்த?”
முன்பே மஹேஸ்வரிக்கு கார்த்தியை பிடிக்கும் இப்பொழுது மகளை திருமணம் செய்யபோகிறவன் என்று தெரிந்ததும் இன்னும் அவனை கவனிக்க துவங்கினார்.
செடிக்கு அளந்து உரமிட்டு முடித்தவன் மஹேஸ்வரி கேள்வியில் திரும்பி பார்த்து சின்ன சிரிப்போடு, “இன்னைக்கு காலைல ஆண்ட்டி” என்றான்.
“நீ வந்த விசயமே எனக்கு தெரியாது ப்பா… அம்மாவும் சொல்லல” என குறைப்பட்டார்.
“ஏன் தெரிஞ்சிருந்தா வடை பாயாசத்தோட விருந்து போட்ருப்பியா?”
முணங்கிக்கொண்டே அறைக்குள் செல்லும் மகளை மஹேஸ்வரி முறைக்க, ஏமாற்றத்தோடு அவளையே பார்த்தான் கார்த்தி.
“அம்மாக்கு தெரியாது ஆண்ட்டி” என எளிமையான பதில்கள் அளித்து மஹேஸ்வரிக்கு விடைகொடுத்தான்.
தனயன் முகத்தில் தெரிந்த வாட்டத்தை புரிந்த மஹாலக்ஷ்மி அவன் விரும்பி சுவைக்கும் ஏலக்காய் டீயை தயாரித்து மாடிக்கு வந்த பொழுது செடிக்கு தண்ணீர் ஊற்றி தன்னுடைய கைகளை கழுவிக்கொண்டிருந்தான் கார்த்தி.
“என்ன ப்பா ஏதாவது பிரச்சனையா? ஏன் முகம் வாடி கெடக்கு?”
“அப்டிலாம் இல்ல ம்மா… டென்ஷன்ல இருந்தேன்ல அதுனால உங்களுக்கு அப்டி தெரியும்”
“உனக்கு வைஷ்ணவி மேல கோவம் இல்லையே தம்பி?” என்றார் தயக்கமாக.
அவன் பதில் தராமல் மௌனமாய் துணியில் கையை துடைக்க, “பாவம் ரொம்ப அலஞ்சது அந்த பொண்ணு தான். ஷெர்லின் அப்பாகிட்ட பேசி விசியம் வெளிய தெரியாம பாத்துகுடுச்சு. இல்லனா டிவில எல்லாம் வந்துருக்கும்” அமைதியாக அன்னை பேசுவதை எல்லாம் உள் வாங்கினான்.
“உன்ன தேவ இல்லாம தொந்தரவு பண்ண வேணாம்னு தான் தம்பி உன்கிட்ட இருந்து விசயத்த மறைக்கலாம்னு சொல்லுச்சு. அவ்வளவு தூரத்துல இருக்கவன் உன் மனசு நிம்மதியா இருந்தா தானே தொழில்ல கவனம் இருக்கும்? உன் அப்பாவும் ரொம்ப யோசிச்சு தான் நடந்தத உன் காதுக்கு கொண்டு வரல” மகனின் நிர்மலமான முகத்தை ஆராய்ந்தார் அன்னை.
“உன் அப்பாவுக்கு இதுக்கும் மேல நீ இத நடத்தணுமான்னு கவலை வேற வந்துடுச்சு. ‘இந்த மாதிரி ஒரு தடங்கல் வந்தா அடுத்து நல்லதே நடக்கும். ஒரு கண்ணு பட்ட மாதிரி தேவை இல்லாதது எல்லாம் விலகி போய்டுச்சு’-னு அந்த பொண்ணு ரொம்ப நேரம் உன் அப்பாவை பேசி சமாதானம் பண்ணி அனுப்பிருக்கா”
இதெல்லாம் வைஷ்ணவி சொல்லவே இல்லை. மருமகளை மகன் மனதில் நிறுத்த அன்னை தானாக கையில் எடுத்த ஆயுதம் தான் அது. ஆனால் அவருக்கு மகன், மருமகளின் ஊடல் எதுவும் தெரியவில்லை.
“இக்கட்டான நேரத்துல சுணங்கி ஒரு ஓரமா நிக்காம, தைரியமா நின்னு தட்டி குடுக்குற வைஷ்ணவி மாதிரி ஒரு பொண்ணு தான் எனக்கு மருமகளா வரணும்னு ஆசை” திடுக்கிட்டு கார்த்தி அன்னையை பார்த்தான்.
“உன் அப்பாக்கும் வைஷ்ணவியை ரொம்ப புடிச்சிருக்கு. உன் விருப்பத்தை கேட்டுட்டு மேல பேசலாம்னு நினைக்கிறோம். என்ன ப்பா சொல்ற நீ?” என்றார் கண்களில் சந்தோஷமும் குரலில் ஏக்கத்தையும் வைத்து.
“ம்மா…” வார்த்தைகள் உருவாக மறுத்தது கார்த்திக்கு, ஆனாலும், “வேணாம் ம்மா…” என்றான் யோசிக்காமல்.
So… how is the chapter?
Comments please…