“கோவம் எல்லாம் போய்டும், இப்போ அத பத்தி பேச வேண்டாம்” என்றாள் மெதுவாக.
ஏனோ அவன் தன்னிடம் இன்னும் கொஞ்சம் கெஞ்சி கொஞ்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆசை அவளுக்கு. ஒரு நாள் நேரில் வரவும் கெஞ்ச விட முடிவெடுத்துவிட்டால் அன்று மலை கோவிலிலேயே.
“சரி உனக்கு என்ன கிப்ட் என்ன வேணும் பூ வக்கிரத்துக்கு?” – கார்த்தி
“என்ன சமயலு, எல்லாத்தையும் என்கிட்ட கேட்டே ஈஸியா வேலைய முடிச்சிடலாம்னு நெனைச்சிட்டீங்களா? எனக்கு என்ன புடிக்கும்னு நீங்களா கண்டு புடிச்சு வாங்கி தாங்க. அது ஒரு ரூபாயா இருந்தாலும் எனக்கு சந்தோசம்” – வைஷ்ணவி
“அப்போ புளிப்பு முட்டாய வாங்கிட வேண்டியது தான்”
அவனின் கேலியில் கோவம் தலை தூக்க, “அதெல்லாம் இப்போ வாங்க தேவ இல்ல, அதுக்கு நாள் இருக்கும்” இரட்டை அர்த்தத்தில் வைஷ்ணவி சொன்னது அவனுக்கு புரியவில்லை, புரிந்த பின்னர் தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து விட்டான்,
“ஓட்ட வாயும், தேர்ட்டி மைண்ட் உள்ள பொண்ணு தான் ரொம்ப டேஞ்ஜரஸ் தெரியுமா?”
“ஏன் ஏன்? அப்டி என்ன டேஞ்ஜர் என்கிட்டே கண்டுடிங்க நீங்க?” வாயாட அவளுக்கா காரணம் தேவை?
“முதல் ஆபத்தான விசயமே உன்னோட வாய் தான், மிச்ச ஆபத்தை பொறுமையா டைம் எடுத்து தேடி சொல்றேன்” விஷமமாக பேசியவனின் சூட்சமம் புரிந்தபாடில்லை அவளுக்கு.
“ஓ கண்டுபுடிச்சிட்டா மட்டும் என்ன பண்ணிடுங்க நீங்க? திருநெல்வேலி பொண்ணு, வம்புன்னு வந்ததா அருவா தான் பேசும் தெரியும்லலே?” அவன் நேரில் இருந்தால் இந்த சவடால் எந்த பக்கம் செல்லுமென்று பார்க்க அவனுக்கு ஆசை.
“உங்க ஊர் திருநெல்வேலில இருந்து பிரிஞ்சு அஞ்சு வருஷம் ஆச்சுங்க அறிவு கொழுந்து” என சிரித்தவன், “இப்போ தெரியுது நீ ஏன் என்ன விடாம தொறத்துனனு”
“ஏன் என் சமையலுக்கு என்ன குறைச்சல் கண்டீங்க?” குரல் உயர்ந்து சண்டைக்கு ஏறி நின்றாள். அவனை எவரிடமும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை, அது அவனாகவே இருந்தாலும் சரி.
தன்னை தாழ்த்திக்கொள்ளவில்லை அவன் ஆனாலும் அவளது குடும்பம் தன்னை இத்தனை சீக்கிரம் ஏற்றுக்கொள்ளும் என்று நினைக்கவில்லை.
“வரட்டும், இந்த ஜில்லா கலெக்டர் வந்தாலும், தலையை கெத்தா தூக்கிவச்சிட்டு கடலைமிட்டாய் கார்த்திக் தான் வேணும்னு நிப்பேன். என் கடலைமிட்டாய் யாருக்கும் சளச்சவர் இல்ல. எனக்கு ஒரு பிரச்சனைன்னா யோசிக்காம வந்து நின்னவர், நான் அவரோட பொண்டாட்டியா மாறுனா என்ன எவ்ளோ பத்தரமா பாத்துக்குவார்? ஒரு பொண்ணுக்கு பாதுகாப்பும், அன்பும் கிடைச்சா உலகமே கைல இருக்க மாதிரி. இத விட எனக்கு எதுவும் பெருசா தெரியல”
இதற்கு மேல் நீ பேசினால் உனக்கு உதை தான் விழும் என்றது அவள் குரலில் இருந்த அழுத்தம். அவளது பதிலில் மௌனமாய் சிரித்தவன், “இப்போ எனக்கு என்ன தோணுது தெரியுமா?” தேன் குலைந்த அவன் குரல், அவளது கோவத்தின் முன்பு மேகத்தினுள் மறைந்த சூரியனாய் காணாமல் போனது.
“உங்களுக்கு என்ன பெருசா தோணிட போகுது? நாளைக்கு பருப்பு சோறு வைக்கலாமா, பால் சோறு வைக்கலாமான்னு சந்தேகம் இருக்கும். அதான?”
“ஹே மக்கு வைஷ்ணவி…” செல்லமாக திட்டியவன், “எனக்கு உன்ன பக்கத்துலயே என் நெஞ்சோட கட்டி வச்சுக்கணும்-னு தோணுது”
அவனது குழைவில் அவள் பேச்சற்று நிற்க, “இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாமா, எனக்கு உன்ன கொஞ்சனும் போல இருக்கு”
காதில் இருந்த கைபேசியை வயர்லெஸ் ஹெட்போனுடன் இணைத்தவன் இதமான மனதுடன் மெத்தையில் படுத்தான்.
அவள் பதிலை எதிர்பார்க்கவில்லை என்றாலும் அவளை சீண்டவேன்றே, “உன் அமைதிய பாக்குறப்ப உனக்கும் அந்த ஆசை இருக்கும் போலயே வைஷ்ணவி”
விழி விரித்து அதிர்ந்து நின்றவள் தன்னை சுதாரிக்கும் முன்பே, அவள் மேலே மீண்டும் ஒரு பழியை போட்டவன் மேல் உரிமை வெட்கம் வந்தது, “என்ன நீங்க என்ன என்னமோ பேசுறீங்க?”
“பேச மட்டும் தானேடா முடியும் இப்போ” அவளுக்கோ அவன் கைகளுக்குள் தான் இருப்பது போல உடல் சிலிர்த்து அடங்கியது.
“நான் கால் கட் பண்றேன்” என்றாலே தவிர காதிலிருந்து கூட கைபேசியை எடுக்கவில்லை, அவன் மூச்சுக்காற்றை கூட மௌனமாய் கேட்டுக்கொண்டிருந்தாள் இசையைப்போலே.
“வேலைய விட்டுட்டு வரணும் போல இருக்கு” என்றான் சோகமான உள்ளிறங்கிய குரலில்.
“ஆசைப்பட்டு போனீங்க, இப்டி பாத்திலையே விட்டு வர தானா?” சிறு அதட்டல் பெண்ணிடமிருந்து.
“ஆமா தான்…” என இழுத்தவன், “அப்போ உன்கிட்ட இருந்து தப்பிக்க போனேன்” என்றதும் அவளுக்கு கோவம் தான் ஏறியது உச்சந்தலைக்கு.
“அதான் தப்பிச்சிட்டீங்களே” நிறுத்தியவள் பின்னர், “கல்யாணம் வர தான் அந்த சுதந்திரம்” – வைஷ்ணவி
“தப்பிச்சதா தான் நெனச்சேன், ஆனா உண்மைளயே இப்போ தான் மாட்டிகிட்டேன் போல. அங்க இருந்தா இந்நேரம் சுவர் ஏறி குதிச்சு உன்ன பாக்க வந்துருப்பேன்ல?” ஏமாற்றமும் ஏகமுமாய் அவன் பேசியது கூட அவளுக்கு குதூகலமூட்டியது.
“ஆ வந்து என்ன பண்ணுவீங்க? எட்டி நின்னு டாட்டா காட்ட இந்த பேச்செல்லாம் தேவையா?”
விரிந்த புன்னகையோடு விட்டத்தை பார்த்து படுத்திருந்தவனுக்கு என்னென்னமோ ஆசைகள் அலைபாய்ந்தது. அவள் வார்த்தைகள் வேறு அவன் அலைபற்றுதலுக்கு தூபம் போட, “டாட்டா காட்டுனவன் ரொம்ப நல்லவன், இப்போ சுவர் ஏறி குதிக்கிறவன் ரொம்ப கெட்டவன் ம்மா… டாட்டா காட்டுறதுக்கு முன்னாடி ரொம்ப சேட்டை பண்ணுவான்”
அவனின் இது போன்ற பேச்சுகள் அவனுக்கே புதிது, அவளுக்கோ விசித்திர பிறவியாகவே தெரிந்தான்.
“நீங்க சரியில்ல எனக்கு தூக்கம் வருது. நான் போறேன் போங்க”
“வைஷ்ணவி… வைஷ்ணவி” அவன் அழைக்க அழைக்க வெட்க புன்னகையோடு கைபேசியை பார்த்திருந்தவள் ஒரு கட்டத்தில் இணைப்பை துண்டித்துவிட்டாள்.
என்ன விதமான ஈர்ப்பு இது என தெரியவில்லை பேதைக்கு. நேற்று வரை எட்ட நின்று பார்த்தாலே தூரம் போ, பார்க்காதே என ஆணையிட்டவன் இன்று என்னென்னவோ பேசுகிறானே, அதுவும் அந்தரங்க அர்த்தங்களில். உடலே சிலிர்த்தது பெண்ணுக்கு. இன்னும் அவன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்திலிருந்து மீளவே முடியவில்லை, சுகமான இம்சையாக இருந்தது அவன் பேச்சுகள்.
அவனுக்குமே தெரியும் வைஷ்ணவியை தவிர இந்த இடத்தில் வேறு ஒரு பெண் இருந்திருந்தால் இத்தனை இலகுவாக தன்னால் பேசியிருக்க இயலாதென்று. அவள் மொத்தமாக தன்னுடைய அசட்டு அன்பினால் அவனுள் புதைந்த காரணத்தினாலே இந்த உரிமை பேச்சு, எல்லை மீறிய சிறு சீண்டலும் வெளிவருகின்றது.
அதோ இதோ என இருவருக்கும் முக்கியமான பூ வைக்கும் நாளும் வந்தது. வைஷ்ணவி, கார்த்தி இரு வீட்டினரின் உற்றார், உறவினர்கள் கூடி நிற்க வைஷ்ணவியை முழு மனதுடன் தங்கள் மருமகளாக மாற்றிக்கொண்டனர்.
விழாவும் நிறைவாக முடிய, வைஷ்ணவியின் பல நிழற்படங்கள் கார்த்தியின் கைபேசிக்கு மாறிக்கொண்டே இருந்தது, சகோதரி மூலமாகவும் ஷெர்லின் மூலமாகவும்.
அத்தனை புகைப்படங்களிலும் சிரிப்பு சிறிதும் மாறாமல் மஞ்சள் பாட்டில், கழுத்தில் மாலை, கை நிறைய வளையல் என பார்த்தவனுக்கு தான் அவளுடன் ஒட்டி நிற்க வேண்டும் என பேராவல் வந்து வதைத்தது.
தந்தை, அன்னை என மாறி மாறி மகனுக்கு அழைத்துக்கொண்டு நடப்பவற்றை கூற, வேளையில் கவனம் செலுத்தவே முடியாமல் போனது
ஆடவனால், முயன்று தன்னுடைய கவனத்தை மொத்தமாய் செலுத்தினான். இரவு மொத்த வேலைகளையும் முடித்து வந்து மெத்தையில் உறங்கும் பொழுது பதினொன்றை தாண்டி இருந்தது. களைப்பில் குளித்து வந்தவன் கைபேசியை அப்பொழுது தான் எடுத்தான்.
நண்பர்களிடமிருந்து வந்த வாழ்த்துகள், குடும்ப குழுவிலிருந்து வந்த சகோதரி பதிவேற்றம் செய்திருந்த புகைப்படங்கள், வைஷ்ணவியிடமிருந்து வந்த செய்தி என வரிசைகட்டி நிற்க, அனைத்தயும் பார்த்து பதில்கூறிய பிறகு இறுதியாக தான் வைஷ்ணவி அனுப்பியிருந்த செய்திக்கு வந்தான்.
இரண்டே செய்தி தான்.
முதல் ஒன்றில் வைஷ்ணவி முகம் கொள்ளா புன்னகையுடன் தன் நெஞ்சோடு கட்டி இருந்த டாபர்மேன் நாய்க்குட்டி. கருப்பு நிறத்தில், கால்களில் மட்டும் பிரவுன் நிறம். பிறந்து இரண்டே வாரமான அந்த நாய்க்குட்டியை அவளது விருப்பம் அறிந்து நண்பன் மூலம் வைஷ்ணவியின் கைக்கு சில மணி நேரங்கள் முன்னர் தான் வாங்கி கொடுத்திருந்தான் பரிசாக. அதன் கழுத்தில் ஒரு நாய் சங்கிலியோடு எலும்புத்துண்டு டாலர் ஒன்றும் தொங்கியது. அதுவும் அவன் ஏற்பாடு தான்.
இரண்டாவது செய்தியில் ஒரே ஒரு இதயம் துடித்துக்கொண்டிருந்தது. ஆன்லைனில் தான் இருந்தாள் அவன் வருகைக்காக வைஷ்ணவி. தன்னவளையும் அவள் கையிலிருந்த நாயையும் பார்த்தவன் மீண்டும் தன்னவளிடம் கண்களை செலுத்த அந்த சிறிய முகத்திலிருந்து கண்களை பிரிக்க முடியவில்லை, என்றுமில்லாத அளவிற்கு இன்று மினுமினுப்பும் பிரகாசமும் இருந்தது அவளிடத்தில்.
‘என்ன பதிலையே கானம்?’ – வைஷ்ணவி
அவள் கேள்விக்கு பிறகே தெளிந்தவன், ‘நான் இருக்க வேண்டிய இடம்’ என அனுப்பிவிட்டான் சோகமாக. அவன் பதிலில் இங்கு வைஷ்ணவி வாய்விட்டு சிரிக்க உடனே அழைத்துவிட்டாள் கார்த்திக்கு.
“என்ன நான் எவ்ளோ கொடுமய அனுபவிக்கிறேன்னு காதால கேக்க கால் பண்ணிட்டியா?” என்றான் எடுத்த எடுப்பிலேயே.
சிரிக்காமல் அவனுக்கு அழைத்தவளுக்கு இப்பொழுது மீண்டும் சிரிப்பு வந்துவிட்டது, உங்கள யார் அங்க போக சொன்னது? அப்போ மாதிரி ஒரு வாரம் லீவு போட்டு வந்துருக்கலாம்ல?” என்ன தான் வெளியில் சிரித்தாலும் அவன் உடன் தேவைப்பட்டான் அவளுக்கும்.
“இல்லன்ற தைரியத்துல தான பேசுற? சரி நீ எனக்கு என்ன பண்ண போற வைஷ்ணவி?” என்றான் கேள்வியாக.
அவளும் யோசிக்காமல், “என்ன வேணாலும் தருவேன்” என்க,
“என்ன வேணாலுமா டா?” அவன் விஷம கேள்விக்கு பிறகு தான் அவன் புரிந்துகொண்ட அர்த்தத்தை அவள் புரிந்தாயிற்று.
“ஹ்ம்ம்… என்ன நீங்க?” என சிணுங்கினாள்.
“சரி சிணுங்காத மூட் மாறிடும் மறுபடியும்” என்றவன், “எனக்கு நீ மறுபடியும் வேலைக்கு போகணும் வைஷ்ணவி” என்றான் தீவிரமாக.
“ம்ம்ஹ்ம் நான் போக மாட்டேன்” உடனே பதில் வந்தது அவளிடமிருந்து.
“ஏன்?”
“போக மாட்டேன்னா போக மாட்டேன் தான். வராதுன்னு சொல்லிட்டு போக சொன்னா என்ன அர்த்தம்?” கோவமாக வந்தது வைஷ்ணவிக்கு. என்ன தைரியம் இவனுக்கு? நான் அவன் வேலைய கெடுத்த மாதிரி பேசிட்டு இப்போ போகணுமாம்ல?
“கோவத்துல பேசுன வார்த்தை அது”
“ஏன் உங்களுக்கு மட்டும் தான் கோவம் வருமா? நீங்க தானே வர வேணாம்னு சொன்னிங்க?” முறுக்கிக்கொண்டாள் அவனிடம்.
“அதே நான் தான் இப்போ வான்னு சொல்றேன். நீ படிச்ச டிகிரிக்கு ஒரு மரியாதை இருக்கு வைஷ்ணவி. உனக்கு வேலைக்கு போக எல்லாம் விருப்பம் இல்லனு தெரியும் ஆனாலும் படிச்சத ஒரே ஒரு தடவையாவது செயல்படுத்தாம எதுக்கு படிக்கணும்? உனக்கு கிடைச்ச வாய்ப்பு எத்தனை பேர் கிடைக்காம கஷ்டப்படிருப்பாங்க?
அதெலாம் மனசுல நியாபகம் வச்சு முடிவெடு, நான் பேசுனது தான் உனக்கு பெருசா தெரியும் ஆனா உன்னோட அப்பா ஆசைக்காவது இந்த ஒரு வேலை பாரு. அதுக்கு மேல நான் உன்ன கம்பெல் பண்ண மாட்டேன்” என்றான் உறுதியாக.
“கடமைக்காக வேலை பாக்க சொல்றிங்களா?” – வைஷ்ணவி
“உனக்கு அது கடமை வைஷ்ணவி, ஆனா உனக்கு என்னோட மனைவி என்னோட ஹோட்டல் கட்டுற என்ஜினீயர்-னு நினைக்கவே பெருமையா இருக்கும். இதுக்கும் மேல உன் இஷ்டம்”
அவள் மனதை எங்கு தட்ட வேண்டுமோ அங்கு தட்டி அவள் உணர்வுகளை தூண்டிவிட்டு உறக்கம் வருவதாக இணைப்பை துண்டித்துவிட்டான்.
வெகு நேரம் அவன் வார்த்தைகளும், தந்தையிடம் வேலைக்கு செல்ல மாட்டேன் என்று கூறிய பொழுது அவர் முகம் வாடியதையும் பார்த்தவளுக்கு கார்த்தி கூறியதை செய்வதை தவிர வேறு வழி இல்லாமல் போனது.
‘வேலைக்கு போறேன்’ கடமைக்காக அவனுக்கு குறுந்செய்தியை அனுப்பிவிட்டு அவள் உறங்கிவிட, அவளது இந்த பதிலுக்காகவே காத்திருந்தவன் நிம்மதியாக உறக்கத்தை தழுவினான்.