கார் வாசலில் வந்து நின்றதுமே ஒரு தலை வேகமாய் எழுந்தது.
“ஏய் அவங்க வந்துட்டாங்கப்பா!” உடனே குரல் கொடுத்துக்கொண்டு உள்ளே ஓடியது அவ்வுருவம்.
காரை விட்டு இறங்கிய தேவகி, வீட்டை நிமிர்ந்துப்பார்த்தார். தான் இருந்தபோது இருந்த அமைப்பில் அல்லாது, சற்று வேறு விதமாக பொலிவூட்டப்பட்டிருந்தது. சுற்றி இருந்த வெளியிடமும் கார்ஷெட், தோட்டம், ஊஞ்சல் என மாறியிருக்க, தன் நியாபக சுவடுகளை அவ்விடத்தில் பொருத்தி பார்த்து அது முடியாமல் மனதில் சோர்ந்துப்போனார்.
ரிச்சர்டுக்கு அந்த பெரிய கேட்டை பார்க்கும்போது கடைசியாய் பரமு கையால் இங்கிருந்து துரத்தப்பட்டது நினைவு வந்து கசப்பை கொடுக்க, முயன்று தன் எண்ணத்தை திசைத்திருப்பினார்.
ஜேகோபுக்கு எப்போது வீட்டுக்குள் நுழைவோம் என்றிருந்தது. பாசமோ பாயாசமோ எல்லாம் அல்ல. இறுதியாய் கண்களில் நீர் வழிய வெற்றுப்பார்வையோடு கிட்டத்தட்ட ஜடம் போல நின்றுக்கொண்டு இவனை வழியனுப்பியவளை இப்போது காண வேண்டும் போல ஒரு அளப்பறிய உந்துதல்.
மீட்டரை கட் செய்துவிட்டு அவர்கள் உள்ளே நுழைய, வீட்டினுள் இருந்து பல தலைகள் கொசுக்கூட்டம் போல வெளியே மொய்க்க வந்தது.
வாசலில் இருந்து உள்ளே நுழைந்து வீட்டுக்கூடத்தை அடைவதற்குள்… அப்பப்பா! எத்தனை விதமான பேச்சுக்கள்!
அத்தனைக்கும் மெல்லிய புன்னகையும் சிறு தலையாட்டலும் என்றே கடந்துக்கொண்டு போன தேவகிக்கு வீட்டின் நிலைவாசலில் கால் வைக்கையில் வெளிப்படையாகவே உடல் நடுங்கிப்போனது.
‘எதற்கு ஊரின் பாதி தலைகள் வீட்டில் நிற்கிறது?’
உள்ளே தன் ரத்தங்களை சந்திக்கப்போகும் உவகையை மீறிய பயம் அவரை நடுங்க வைத்தது.
ரிச்சர்ட்டின் கையை அழுந்த பிடித்துக்கொண்டு உள்ளே சென்றார். ஜேகோப் எவர் முகத்தையும் பார்க்கவில்லை. பார்க்க பிடிக்கவுமில்லை. அவன் எண்ணமெல்லாம் ரோஷிணி தான்! யாரேனும் ஒரு வாரம் முன்பு வந்து ‘இவளுக்காக, இவள் பார்வைக்காக நீ ஏங்குவாய்!’ என ஆரூடம் சொல்லிருந்தால், ‘அடப்போடா’ என்றிருப்பான்.
இப்போதோ, ‘அவளை மட்டும் ஒருமுறை பார்த்துவிட்டால் போதுமே!’ என்றிருந்தது.
கூடத்தின் நடுவே இருந்த சோபா, நாற்காலிகள் நிறைய ஆட்கள் குவிந்திருந்தனர். எங்கிலும் குடும்ப ஆட்களை பார்க்க முடியவில்லை. அவர் சுற்றும் முற்றும் தயக்கத்தோடு பார்க்க, ஒரு கிழவி, ‘போத்தா…போ அம்மைய பாரு.. அங்க தான் இருக்காவோ எல்லாம்’ என்று சொல்ல, அவர் காட்டிய அறையை சற்றே திகிலான மனநிலையுடன் அடைந்தார் தேவகி, உடன் ரிச்சர்ட், ஜேகோப்!
ஒருகளித்திருந்த கதவை மெல்லமாக அவர் தள்ள, சிறு சத்தத்துடன் அது திறந்துக்கொள்ள, முதலில் வாசல் நோக்கி திரும்பியது என்னவோ பரமு தான்! தங்கையை கண்டதும், அவர் முகத்தில் இருந்து கண்ணெடுக்க முடியாமல் தன்னை மீறிய பாசத்தில் அவர் கண்கள் பனிக்கப்பார்க்க,
“வாங்க அண்ணி!” என்ற ருக்மணியின் குரலில், தன்னை சுதாரித்துக்கொண்டு வேறுபுறம் விரைப்பாய் திரும்பிக்கொண்டார் அவர்.
ருக்மணி ரிச்சர்டையும் வரவேற்க, மெல்ல உள்ளே நுழைந்த இருவரும் கட்டிலில் கண்மூடிக்கிடந்த உருவத்தை பார்த்தனர். பார்த்த மாத்திரத்தில் அடக்க முடியாத கேவல் தேவகியிடம் இருந்து.
தேவகி, இறுதியாய் பார்த்த உருவத்தில் பாதி தான் இருந்தார் அவர்.
“ம்மாஆஆஆ” குரல் நடுங்க அவர் ஓடிப்போய் அவர் காலடியில் விழ, அவர் தலைமாட்டில் அமர்ந்திருந்த வீரைய்யன், கண்ணீருடன் ஒன்றும் பேசாமல் மகளின் சிகையை வருடிக்கொண்டுத்தார்.
இந்த காட்சியை பார்த்த ரிச்சர்டுக்கு ஒன்றும் புரியவில்லை. அருகே மகனிடம், “பப்பூ, இஸ் எவரிதிங் கோஸ் வெல்? ஆர் சம்திங் பேட்….?” தன் ஐயத்தை எப்படி கேட்பதென புரியாது அவர் அப்படியே நிறுத்த, அவனுக்கும் அந்த மெல்லிய ஐயம் தோன்றியதோ என்னவோ, திரும்பி பார்க்க, சத்தியன் கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தார்.
அவரை பார்த்தவன், “பாட்டிக்கு என்னாச்சு?” என்றான் லேசான பதட்டதும்.
அவரோ, “தூங்குறாங்க!” என்று சொல்ல, இவனுக்கு முறைக்க தான் வந்தது.
“தூங்குறது எதுக்கு இப்படி சுத்தி நின்னு அழுதுட்டு இருக்கீங்க?” கடுப்பாக முனுமுனுத்தவன், சத்தமாக, “மாம்மி… கிரேனி இஸ் ஜஸ்ட் ஸ்லீபிங்… நத்திங் ராங்!” என்று சொல்ல, தேம்பி தேம்பி அழுதுக்கொண்டிருந்த தேவகியின் அழுகை நொடியில் நின்றுப்போக, தந்தையிடம் நிமிர்ந்து,
“அம்மா, தூங்குறாங்களா?” என்றார் கண்கள் விரிய.
அவர், “ஆமாடா… மாத்திரை போட்ட அசதில தூங்குறா” என்று சொல்ல, “உப்ப்” என்ற நிம்மதியுடன் கண்களை துடைத்துக்கொண்ட தேவகி, “பயந்துட்டேன்’ப்பா” என்றார் மொட்டையாக.
அதைக்கண்டுக்கொள்ளாத வீரைய்யன், “ந..ல்..லா இருக்கி…யா?” என்றார் தன் நடுங்கும் குரலில்.
அவ்வளவு தான், தேவகியின் அடங்கிய அழுகை மீண்டும் வேகத்தோடு எழுந்தது.
“மன்னிச்சுடுங்க ப்பா!” அவர் மடியில் தலை வைத்து அவர் கதற, மகள் அழுகையில் தந்தையும் கண்ணீர் வடிக்க, “ஸீ தேர் லவ்!” என்று அவர்களை காட்டி மகனிடம் ஆச்சர்யத்துடன் சொன்னார் ரிச்சர்ட்.
“பத்து நாள் முன்ன நான் வந்தபோவும் இதே பர்ஃபமென்ஸ் தான் டேட்” என்றான் கடுப்புடன்.
“பப்பூ!?” என்றவர் வெளியில் தெரியாது சிரிப்பை அடக்க, “இவங்கக்கிட்ட ஓபெனிங் எல்லாம் நல்லா தான் இருக்கும், ஆனா பினிஷிங் சரியிருக்காது’ப்பா!” என்று வேறு சொல்ல, அவரால் சிரிப்பை கட்டுக்குள் வைக்கவே இயலவில்லை. திண்டாடிப்போனார்.
“நிறைய படம் பாத்துட்ட போலயே பப்பூ!?”
“பின்ன இங்க வேற என்ன செய்ய டேட்? தாஜ்மகாலும், தார் டெசர்ட்டுமா இருக்கு? சுத்தி பார்த்து ‘வ்லாக்’ போட..!? சாப்பிட, டிவி பாக்க, காசிப் பேசன்னு தான் டைம் போச்சு!” செய்யும்போது ஜாலியாக இருந்ததெல்லாம் இப்போது நினைத்துப்பார்க்கவே கடுப்பாக போனது அவனுக்கு.
“ஓகே ஓகே…கூல்!” மகனது தோளில் தட்டிக்கொடுத்தார். அவனுக்கோ, எப்போதடா ரோஷிணியை பார்ப்போம் என்று இருந்தது.
இந்த சப்தத்தில் கமலத்தின் தூக்கம் களைய, மெல்ல கண்களை திறந்தவர் முன்னே கலங்கி சிவந்த முகத்துடன், அதை மீறிய எதிர்ப்பார்ப்புடன் தேவகி காட்சி தர, மெல்ல திறந்த விழிகள் ஒரு நொடியில் அகல விரிந்தது. படுக்கையில் இருந்து தன் முழு பலம் கொண்டு வேகமாய் எழுந்தவர், மகளின் முகத்தை தாங்கிக்கொண்டு, “வந்துட்டியாடா தங்கம்… என் குலசாமி… அம்மாட்ட வந்துட்டியா?” என்று கேட்டுக்கொண்டிருக்க,
“வந்துட்டேன் ம்மா… வந்துட்டேன்! உங்ககிட்ட தான் இருக்கேன்!” என தேவகி சொல்லி முடிப்பதற்குள் தன் மொத்த சக்தியும் தீர்ந்துப்போனவராய் அப்படியே தொய்ந்து கட்டிலில் சரிந்தார் கமலம்.
பார்த்துக்கொண்டிருந்த எல்லோருக்கும் பதட்டமாகி போனது.
தேவகி, “ஐயோ, அம்மா அம்மா!” என்று கன்னத்தை தட்டிக்கொண்டே, “ரிக்கி… சீக்கிரம் வாங்க!” என்று கணவரை அழைக்க, அதற்குள் அங்கே நெருங்கியிருந்தார் ரிச்சர்ட்.
“என்ன ஆச்சு அம்மாக்கு? அம்மாக்கு ஒன்னும் இல்லில?” அழுதுக்கொண்டே அவர் கேட்க, “கூல் டவுன் டேவ்… லெட் மீ செக்!” என்றார் ரிச்சர்ட்.
பரமு, “டாக்டருக்கு போன் போடு, உடனே அழைச்சுட்டு வா! சீக்கிரம் போ” என ஆட்களை ஏவ, அதற்குள் ரிச்சர்ட் ஆரம்பக்கட்ட சோதனைகளை செய்துக்கொண்டிருந்தார். அவருக்கு அருகே இருந்த மெடிக்கல் கிட்’டில் இருந்து துலாவி அவர் ஒரு மாத்திரையை பிய்த்து கமலத்தின் வாய்க்குள் அதை வைக்கப்போக,
“ஏய் ஏய் என்ன செய்யுற நீ? என்ன அது? என்ன குடுக்குற என் அம்மாக்கு?” என அதிவேகமாய் கத்திக்கொண்டு ஓடிவந்தார் பரமேஸ்வரன்.
“ஓவர் எக்சைட்மென்ட்’ல பிபி ரெயிஸ் ஆகி அன்கான்சியஸ் ஆகிட்டாங்க அவ்ளோதான்! கொஞ்ச நேரத்துல ஆட்டோமேடிக்கா ரெக்கவர் ஆகிடுவாங்க!” என்ற ரிச்சர்ட், மாத்திரையை வாய்க்குள் நாக்கினடியில் வைத்து விட்டார்.
அவர் ஆத்திரமாய் திரும்ப, “என் டாட் ஒரு டாக்டர். அவரை விட உங்களுக்கு ஒன்னும் பெருசா தெரிய போறதில்லை. புரிஞ்சுதா? சோ, ப்ளீஸ்” என்றவன் வாயை மூடு என சொல்லாமல் நிறுத்த, பரமுவுக்கு கோபமும் அவமதிப்பினால் உண்டான எரிச்சலும் ஒருங்கே எழுந்தது.
ஜேகோபோ, ‘இத்தனை வருசத்துல தங்கச்சி ஹஸ்பென்ட் என்ன வேலை பாக்குறாங்கன்னு கூட தெரிஞ்சுக்கல… வொர்ஸ்டு!” என்றான் வேண்டுமென்றே கேட்கும்படி.
“கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும், டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்!” ரிச்சர்ட் சொல்ல அதற்கு மதிப்பு கொடுத்து எல்லோரும் வெளியேறினர்.
கூடத்தில் இப்போது மேலும் சில நாற்காலிகள் இருந்தது. அதில் எல்லோரும் அமர, பரமு எழுந்து, “நான் அழைச்சதுக்காக எல்லாரும் வந்ததுக்கு நன்றி! உங்க எல்லாருக்கும் தெரியும், என் பொண்ணோட இந்த பையன் ஒண்ணா பழகினது” என்று சொல்ல,
“அடப்பாவி… நான் எப்போடா பழகுனேன்” என்று பார்த்தான் ஜேகோப்.
“இப்போ என் பொண்ணை கட்டிக்கோன்னா முடியாதுன்னு வீம்பு புடிக்குறான். போலிஸ்’க்கு போக ஒரு நிமிஷம் ஆகாது… விஷயம் வெளிய போய் அசிங்கப்பட வேண்டாம்ன்னு, இதை நமக்குள்ள முடிச்சுக்கலாம்ன்னு நினைச்சு தான் உங்க எல்லாரையும் வர சொன்னது…!” என்றவர்,
சுற்றி இருந்த கூட்டத்திடம், “இப்போ அவனை பெத்தவங்க கையால, உங்க எல்லார் முன்னுக்கும் நிச்சய தாம்பூலத்தை மாத்திக்கப்போறேன்! இதுக்கு நீங்க எல்லாரும் தான் சாட்சி” என்று அறிவிக்க, இரு பரந்த தாம்பூலங்கள் அங்கே வந்தது.
தேவகி அண்ணனிடம் தனியாக பேசி புரியவைக்கலாம் என்று நினைத்துக்கொண்டு வந்திருக்க, அதற்கு கொஞ்சமும் இடம் கொடுக்காதபடி அமைந்தது பரமுவின் செய்கை.
“அண்ணா… கொஞ்சம்…”
“என்கிட்ட யாரும் பேச தேவையில்லை” முகத்தில் அடித்தார் போல சொன்னார் பரமு.
ஒரு கையாலாகாத நிலையில் அதை வாங்கிக்கொண்ட தேவகி, மகனை பார்க்க, அவன் கண்களிலாலேயே அவரை எரித்துக்கொண்டிருந்தான், ‘நோ, நோ’ என்று!
“அண்ணா…. ஜாக்கி’க்கு!” அவர் ஆரம்பிக்க முதல்,
“இதுவரை உன்கிட்ட ஒன்னு வேணுன்னு இந்த அண்ணன் கேட்டது இல்ல… இப்போ உன்கிட்ட கையேந்தி கேட்குறேன், உன் பையன் என் பொண்ணு கழுத்துல தாலி கட்டனும்… அதுக்கு நீ பொறுப்பு!” என்றார் கலங்கிய குரலை மறைத்து.
“இல்ல ண்ணா… அது என்னன்னா…”
“தட்டை வாங்குனா இங்க நல்ல காரியம் நடக்கும், இல்லன்னா நான் செத்து பத்தாம் நாள் காரியம் தான் நடக்கும்!” இப்படி சொல்லிவிட, தேவகி ஆஃப் ஆனார்.
அன்னையின் மாற்றம் உணர்ந்து, “ம்மா… நோ… நோ… நோஓஓஓ” என ஜேகோப் கத்தி முடித்து அவரை இழுப்பதற்குள், அண்ணனிடம் இருந்த தட்டை தான் பெற்று, தன்னிடம் இருந்ததை அவருக்கு மாற்றியிருந்தார் தேவகி.
அதாவது, ஜேகோப், சங்கவியின் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டியிருந்தார்.
தேவகியை ஆன மட்டும் முறைத்த ஜேகோப், “இந்த தட்டுல இருக்க நாலு ஆப்பிள் பனானா’வை எக்சேஞ் பண்ணுனா, நான் இதுக்கு ஓகே சொல்லிடுவேன்னு நினைக்குறீங்களா? நோ வே!” என்றுவிட்டு வேகமாய் வீட்டை விட்டு வெளியே நடந்தான். அவனுக்கு வீட்டுக்குள் நிற்கவே பிடிக்கவில்லை.
அவன் பேச்சை கேட்ட பரமு, “தேவகி’ம்மா” என்றார் பாசமாய். அண்ணனின் நெடு வருடங்கள் சென்ற பாச விளிப்பில் உள்ளுக்குள் உருகிய தேவகி, “சொல்லுங்கண்ணா!” என்றார்.
“இந்த கல்யாணத்துல தான் உன் அண்ணனோட உயிரே இருக்கு. உன் கல்யாணத்தால பிரிஞ்ச குடும்பம், இந்த கல்யாணத்தால சேரனும்! முடியாதுன்னு உன் புள்ள முரண்டு புடிச்சா, காலத்துக்கும் நம்ம ஒட்டாம போய்டுவோம்! எல்லாத்துக்கும் முந்தி, ஊரு மெச்ச, முன்ன நின்னு குடுத்த வாக்கை, நீங்க மீறிட்டதுல நான் என் மூச்சை நிறுத்திடுவேன்! உன்னால ஒருமுறை அசிங்கப்பட்டோம்… இப்ப உன் புள்ளையால இன்னொரு முறை அசிங்கப்படக்கூடாது… நல்லா யோசிச்சு நட!” என்றுவிட்டு தளர்ந்து தள்ளாடி அங்கிருந்து போக, தேவகி ‘அண்ணன் சொல்லே வேதம்’ என்ற நிலைக்கு போய்விட்டார்.
“பொண்ணை அழைச்சுட்டு வந்து கண்ணுல காட்டுங்கப்பா” என்று ஒருவர் சொல்ல, உள்ளிருந்து பட்டுப்புடவை, வாரி இறைத்த நகைகள், தலை நிறைய மல்லிகை, கனகாம்பரம் என்று குனிந்த தலையோடு தேவகி முன்னே வந்து நின்ற சங்கவி, தம்பதி காலில் விழுந்து பணிய, அவளை நன்கு ஊனிப்பார்த்த தேவகிக்கு, மகனுக்கு இவள் பொருத்தம் என்று தான் தோன்றியது. உடனே உள்ளிருந்த சின்ன கலக்கத்தையும் விரட்டியவர், மகனை பேசி சரிக்கட்ட வேண்டும் என்று முடிவுக்கு தாவினார்.
எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ரிச்சர்டுக்கு, ‘இது எங்க, எப்படி போய் முடியப்போகுதோ தெரியையே!’ என்று பதைப்பாய் இருந்தது.