கம்பி வேலியிட்ட தடுப்புக்கு பின்னே நின்று ஏரிக்குள் மிதந்து செல்லும் படகுகளை எல்லாம் ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டிருந்தனர் சங்கவியும் ரோஷினியும்.
“ஹே அந்த சிவப்பு போட்டு எனக்கு…”
“ஹான்… அது எனக்கு தான் வேணும் போ… நீ அந்த பச்சைல போய்க்கோ”
“சிவப்பு எனக்கு ராசியான நிறம்ன்னு தெரியாதா?”
“சிவப்பு எனக்கு பிடிச்ச நிறம்ன்னு உனக்கு தெரியாதா?”
இருவரும் மாற்றி மாற்றி வாய்ப்போரில் ஈடுப்பட்டிருக்க, கண்முன்னே குளிர்ச்சியாய் இருக்கும் ஏரியை பார்ப்பதை விட்டு, இவர்களை வாய் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் ஜேகோப்.
அவன் போன நாடுகளில், ஏன் அவன் இருக்கும் நாட்டிலேயே இதைவிட அபரிவித அழகான அருவிகளை கண்டுகளித்திருக்கிறான். அதிலும் நீரில் பயணம்!? அவன் பயணிக்காததா!?
ஆனால், இதுபோன்ற கூச்சல் சண்டையை தான் நேர்க்கொண்டு சந்தித்ததில்லை. அதனால் அவனுக்கு இவர்களை வேடிக்கை பார்க்க சுவாரஸ்யமாய் இருந்தது.
“ஒரு போட்ல ரெண்டு பேரு போலாம்ன்னு இருக்குல? ரெண்டு பேருமே சிவப்பு போட்’ல போவோம்.. என்னங்குற?” ஒருவழியாய் ரோஷிணி வெள்ளைக்கொடியை கையில் எடுத்தாள்.
“அட, ஆமா!” அப்போது தான் சங்கவிக்கும் பல்பு எறிய, அவளுடன் சமாதானம் நடந்ததும் தான் அவர்களுடன் வந்த வெள்ளை புறாவை பற்றிய நினைவே எழுந்தது. அவனோ இவர்களையே வேடிக்கை பார்க்க, “ஹெலோ ஹெலோ? ஏரி தட் சைட்! நாட் இன் மை பேஸ்ஸு” என்று முறைத்தாள் ரோஷிணி.
அவனோ, “திஸ் இஸ் மோர் இன்டரஸ்டிங் தேன் தட்!” என்று கூலாக தோள் குலுக்க, “பார்த்தியாடி வெள்லெலிக்கு குசும்ப! காசு கறக்குற வர தலையெழுத்தேன்னு கூட வச்சுக்க வேண்டியதா இருக்கு… எதுக்கும் ரெண்டடி தள்ளியே நிப்போம்! எல்லா ஊரு ஆம்பளையும் ஒரே மட்டை தான்!” சிரித்துக்கொண்டே சங்கவியிடம் ரோஷிணி சொல்ல, அவள் சொன்னது புரிந்ததில் புருவம் உயர்த்தினான் ஜேகோப்.
“நம்ம என்னவோ அவனை பத்தி பேசுறோம்ன்னு தெரியுது போல! அப்படியே சிரிச்சே சமாளி” என்றதும் சங்கவியும் ‘ஈஈ’ என சிரிக்க, ‘எங்க ஊரு புள்ளைங்க எல்லாம் தங்கங்க டா! சூதுவாது தெரியாது’ என முன்னே தேவகி இவனிடம் சொன்னது நினைவில் வந்தது.
‘சூது வாது’க்கு இவன் அர்த்தம் கேட்டு அதை அவர் விளக்கமாய் விளக்கியதும் கூடவே நினைவு வர, அந்த வார்த்தைக்கு இலக்கணமாய் அவன் கண்முன்னே நிற்கும் தங்கங்களை கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
சங்கவி சற்று வெளிறி, “ஏய் இவன் ஏண்டி நம்மளை குறுகுறுன்னு பாக்குறான்? எனக்கென்னவோ பயமா இருக்கு” என்று சொல்ல, அதே தான் ரோஷிணிக்கும் என்றதால், “முடிஞ்சவரை இன்னைக்கே கறந்துட்டு வெட்டி விட்டுடுவோம்.. பயப்படாத” என்றவள், அவனிடம்,
“ஓ! சூர்! ஆட்சுவலி ஐ லவ் வாட்டர் ரைட்ஸ்” என்றதும் மூவருமாய் அங்கே போக, மூன்று பேர் அமர்ந்து போக ஏதுவாய் படகு கிடைத்தது.
டிக்கெட் எடுக்கவென ஒரு கும்பலே குவிந்து நிற்க, “ஐ வில் பை டிக்கெட்ஸ்” என சொல்லிவிட்டு கூட்டத்துடன் ஐக்கியமானான் ஜேகோப்.
“இப்படி எல்லாத்துக்கும் அவனே செலவு பண்ணுனா நம்ம எப்டிடி காசு தேத்துறது?” சங்கவி வருந்த அதே தான் ரோஷிணிக்கும்.
“இந்த ஒரு முறை விட்டுடலாம்! அடுத்த முறை சேர்த்து வச்சு வாங்கிப்போம்!” என்றுவிட்டு அவனுக்காக காத்திருந்தனர். அந்த குளிரில் கூட வியர்வை முத்துக்கள் அரும்ப, கசங்கிய சட்டையுடன் இவர்களிடம் வந்தான் அவன்.
“ஐ காட் தி டிக்கெட்ஸ்! ஷால் வீ கோ” என்று கேட்க, மூவருமாய் அந்த படகில் ஏறிக்கொண்டனர்.
சங்கவிக்கும் ரோஷிணிக்கும் ஏக சந்தோஷம். இரு நாட்களாய் இங்கே சுற்றியவர்கள் ‘போட்டிங்’ மட்டும் விட்டு வைத்திருந்தனர். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் பட்ஜெட்டில் விழுந்த துண்டு தான்! பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையில் உயர்தர ஹோட்டலில் தங்க, அவர்கள் கொண்டு வந்த ஆயிரங்களை அசால்ட்டாக வாயில் போட்டது அவர்கள் அறை. இதில் வெறும் அரைமணி நேர நீர் சவாரிக்கு இவன் தலைக்கு இருநூறு சொன்னால்? ஏக்கத்தை உள்ளுக்குள் போட்டு சமாதிக்கட்டியவர்களை குஷிப்படுத்தவெனவே வானத்தில் இருந்து குதித்திருக்கிறான் ஜேகோப்!
அப்படி தான் நினைத்து சிரித்துக்கொண்டிருக்கின்றனர்.
“இந்த ஆட்டோக்கார தேல்பத்திரிசிங் யாருன்னு தெரியல! நமக்குன்னே அளவெடுத்து செஞ்சு ஆண்டவன் டைமுக்கு அனுப்பி வச்சுருக்கான்” ரோஷிணி சிரித்துக்கொண்டே அவனை பார்த்து சொல்ல, சங்கவியும் அடக்கிய சிரிப்புடன், “கோடான கோடி நன்றி கடவுளே” என்றாள் நக்கலாய்.
ஜேகோப் செவிகளை எல்லாமே எட்டியது. அந்த ‘தேல்பதிரிசிங்’ என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை தவிர எல்லாமே புரிய அவர்கள் கண்ணுக்கு தான் ஒரு ‘பஃபூன்’ போல தெரிகிறோம் என்பதை நன்றாக உணர்ந்துக்கொண்டான். ஆனாலும் கோபம் போன்ற எதுவும் வரவில்லை.
ஜிலுஜிலுவென காற்று அணிந்திருந்த சுவட்டரையும் தாண்டி அவர்கள் மேனியை ஊடுருவியது. கைகளை பரபரவென தேய்த்து கன்னத்தில் வைத்துக்கொண்டாள் ரோஷிணி. சங்கவியும் அதேபோலவே நடுங்கிக்கொண்டிருக்க, எதிரே இருந்த ஜேகோப்’போ நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சுற்றிலும் வேடிக்கை பார்ப்பதை பார்த்த ரோஷிணி,
“அலோ மிஸ்டர் ஜாக்…” என்றாள். அவன் பார்க்க, குளிரில் நடுங்குவதை போல செய்துக்காட்டி, “ஊ..ஊ..ஊ இல்லையா?” என்றிட, பல் தெரியாது சிரித்தவன், “திஸ் இஸ் நத்திங்” என்றான். அவன் காணாத குளிரா?! பனியில் மூழ்கி எழுந்து கூட தினம் ஊர் சுற்றியிருக்கிறானே! சொல்லப்போனால் அவன் நாட்டில் வருடத்தின் பெரும்பகுதி நாட்கள் பனிபொழிவுடன் தான் இருக்கும்.
“அவன் ஊருல எப்பவும் குளுகுளுன்னு தானே டி இருக்கும்…இதெல்லாம் அவனுக்கு ஒரு குளுரா என்ன?” சங்கவி கேட்டதும், “ஆமாம்” என்றாள் ரோஷிணி.
“எப்பப்பாரு பிரிட்ஜ்க்குள்ளயே வாழ்ந்தா இப்படிதான் தக்காளி பழமாட்டம் இருக்க முடியும்!” என்ற ரோஷிணியின் கண்கள் அவன் மேனி நிறத்தை ஒருவித ஏக்கத்துடன் பார்வையிட,
“தக்காளி இல்லடி.. ஆப்பிள்!” என்றாள் சங்கவி.
“ரொம்ப முக்கியம் பாரு… நம்மளும் வெளிநாட்டுல பொறந்துருந்தா நல்லா நிறமா இருந்துருப்போமோ என்னவோ!” என்றவள், “உன் அத்தை இருக்குல வெளிநாட்டுல? அதுக்கூட இதோ இவனை மாறி தான் அந்த நிறம்!” என்றதும்,
“என் அத்தையை எப்போடி பாத்த?” என விழிவிரித்தாள் சங்கவி.
“என் அம்மா தான் அவங்ககூட பேசுமே! அது போன்’ல பாத்தேன்… நல்லா குளுருக்கு எருமை துணியாட்டம் ஒன்ன மாட்டிக்கிட்டு ஈஈ’ன்னு சிரிச்சமேனியா ஒரு போட்டோ! ப்ச்… நல்ல வாழ்க்கைடி! உன் அத்தையாவது நம்ம ஆளுங்க லட்சணம் தெரிஞ்சு விவரமா ஓடுனாங்க… அப்படி மட்டும் ஓடலன்னா இந்நேரம் எந்த வீட்டு தொழுவத்துல வேலைக்காரங்களை ஏவிக்கிட்டு நின்னுட்டு இருந்துருப்பாங்களோ?”
“அடடே ரொம்ப தான் சலிச்சுக்குற! நீயும் நானும் அததான் செய்யப்போறோம் கூடிய சீக்கிரம்!” என்றாள் சங்கவி.
“ஹும்! அதை நினைச்சா தான் கடுப்பா இருக்கு! இஷ்டப்பட்ட துணி போட முடியல… இஷ்டப்பட்ட இடத்துக்கு போக முடியல! இவ்ளோ நாள் அம்மா வீட்டு ஜெயிலுல இருந்து இனி புருஷன் வீட்டு ஜெயிலுக்கு போய்டுவோம்! இப்போ இருக்க ஜெயிலுல கூட ரொம்ப கெடுபுடி கம்மி… இனி போகபோறது இருக்கே… யப்பா!!!!” என்றோ வரப்போவதை எண்ணி இப்போதே நொந்துக்கொண்டாள் ரோஷிணி.
“ரொம்ப வருத்தப்படுற போலயே! வேணுனா நீயும் எதாவது வெள்ளைக்காரனா பார்த்து கூட்டிட்டு ஓடிடு!” என்ற சங்கவி, “எதாவது எதுக்கு? அதான் எதுத்தாப்புலையே இருக்கே! இந்த வெள்ளை பணியாரத்தை உஷார் பண்ணிட்டு ஊரைவிட்டு ஓடிடு” என்றாள் சீண்டலாய்.
எதிரே இருந்தவனை பார்த்த ரோஷிணி, “அப்படிங்குற?” என்றாள் சிரித்துக்கொண்டே.
சங்கவியும் சிரித்துக்கொண்டே, “ஆமாங்குறேன்” என்று சொல்ல, முகத்தில் எதையும் காட்டாது இயல்பாய் வேடிக்கை பார்க்க வெகுவாய் போராடினான் ஜேகோப்.
“வெள்ளைக்காரன் எல்லாம் பேன்ட் போட்டதுமே கேர்ள்பிரண்டு புடிக்க ஆரம்பிச்சுடுவானுங்கடி! இவன் வேற பார்க்க நல்லா ஜீரால ஊறுன ரசகுல்லா மாறி கும்முன்னு இருக்கான்! கைய கால வச்சுக்கிட்டு சும்மாவா இருந்துருப்பான்? இந்நேரம் எத்தனை பேர் வந்து போனாளுங்களோ…!?” ரோஷிணி சொல்ல,
“எல்லாருமேவா அப்படி இருப்பாங்க? என் மாமா கூட வெள்ளைக்காரர் தான்… ஆனா என் அத்தையை தவிர வேற யாரையுமே பாக்க மாட்டாராம்… தெரியுமா?” என்றாள் சங்கவி.
“இது என்னடி புது தகவல் எனக்கு தெரியாம?”
“ஹிஹி! உங்க அம்மா ஒருமுறை என் அம்மாட்ட சொல்லிட்டு இருந்தாங்க! ஒட்டு கேட்டேன்”
இவர்கள் சம்பாஷணை அத்தனையிலும் மூக்கை நுழைக்காமல், கண்டும் காணாமல், கேட்டும் கேளாமல் இருக்க அவன் பட்ட பாடு…! அதிலும் ரோஷிணி அவனை ‘ஜீராவுல ஊறுன ரசகுல்லா மாறி கும்முன்னு இருக்கான்’ என்றபோது சத்தியமாய் அவனால் தன் உணர்வுகளை மறைக்க முடியவில்லை. சட்டென ஓடும் நீரில் கைவைத்து தன் முகத்தில் தெளித்து விளையாடுவதை போல பாசாங்கு செய்துக்கொண்டான்.
ஆனால், இரு பெண்களுக்கும் பார்க்கவும், பேசவும், அனுபவிக்கனும் ஆயிரம் இருந்தது. வாய் ஓயாமல் இருவரும் சிரித்து பேசி சலசலத்துக்கொண்டு வர, ரோஷிணியின் மொபைல் படகுக்குள் விழுந்தது. அதை அவள் குனிந்து தட்டுத்தடுமாறி மேலே எடுத்துவிட்டு அமர்ந்தபோது சவாரி முடிந்து விட்டது.
ஜேகோப்’க்கு ஏதோ அவனை கட்டிவைத்து ‘கிச்சுகிச்சு’ மூட்டுவதை போல இருந்தது அவர்கள் பேச்சு. எப்போதடா சவாரி முடியும் என காத்திருந்து வேக வேகமாய் இறங்கி வெளியே ஓடியவனை அவசரமாய் ஓடி வந்து பிடித்துக்கொண்டனர் இரு பெண்களும்.
“ஓடிட போறான், புடிடி! இன்னும் நம்ம கறக்கவே ஆரம்பிக்கல”
அவனுக்கு இரு பக்கமும் சென்று நின்றுக்கொண்ட இருவரும், “வொய் சோ பாஸ்ட்?” என்று கேட்க,
“தெர்ஸ்ட்டி…” என்றான் தண்ணீர் வேண்டும் என்பதை போல சைகையில்.
“தண்ணி தானே? ஜூஸ்’சே குடிக்கலாம் வாங்க” என்ற ரோஷிணி சங்கவியிடம் கண்ணடித்துவிட்டு சற்று தள்ளி இருந்த குளிர்பான கடைக்கு விரைய, இருவரும் அவளை பின்தொடர்ந்தனர்.
“ஒரு கரும்பு ஜூஸ்” ஆர்டர் சொல்லிவிட்டு வெளியே இருந்த பிளாஸ்டிக் சேர்களில் மூவரும் அமர்ந்தனர். சில நிமிடங்களில் ஒரு கண்ணாடி குடுவை நிறைய ஒரு கரும்பு சாறு அவனிடம் வந்தது.
“ஓ!? ஒன்லி ஃபார் மீ? வாட் அபவுட் யூ கேர்ள்ஸ்? ஹேவ் சம்திங்” என்றவன், ஒரு மிடறு அருந்திவிட்டு, “டெலிசியஸ்” என்றான் சப்புக்கொட்டி.
சங்கவியிடம், “ஜூஸ் குடிக்குறியா?” ரோஷிணி கேட்க, “பானி பூரி” என்றாள் அருகே நின்ற வடநாட்டுக்காரனின் தள்ளுவண்டியை காட்டி.
ரோஷிணி இங்கிருந்தே, “பையா… தோ ப்ளேட் மசாலாபூரி” என்று குரல் கொடுக்க, “வாட் இஸ் தட்?” என்றான் ஜேகோப்.
“தட் இஸ் பூரி… மினி பூரி! பூரி புட்டிங் இன்சைட் ஆயில்…புஸ்ஸுன்னு உப்பி கமிங் அவுட்சைட்” என்று ரோஷிணி சொல்ல, ஒரு நொடியில் அவன் ஆங்கிலமே ஆட்டம் கண்டது.
“புரியலையா? அதாவது….” அவள் ஆரம்பிக்க, “நோ… நோ..நோ… ஐ காட் இட்” என பதறிக்கொண்டு சொன்னான் அவன்.
“அதானே… நம்ம ஒன்ன விளக்கி, அது விளங்காமா போய்டுமா என்ன?” ரோஷிணி கெத்தாக காலர் தூக்க, “அதான் டி ரோஷு” என பின்பாட்டு பாடினாள் சங்கவி.
இருவருக்கும் இரண்டு தட்டுகளில் மசாலா பூரிகள் வந்து சேர்ந்தது.
“தேங்க்ஸ் பையா” என்று பெற்றுக்கொள்ள, ஜேகோபுக்கு அந்த ‘பையா’ கேட்க நன்றாக இருந்தது.
“வாட் இஸ் பையா? இஸ் தட் தமிழ்?” என்றிட, “நோ நோ.. தட் இஸ் ஹிந்தி… பையா மீன்ஸ் ப்ரதர்” என்றாள் ரோஷிணி.
“வாவ்! இட்ஸ் நைஸ் டு ஹியர்!” என்றவன், ‘பையா’ ‘பையா’ என சொல்லிப்பர்த்துக்கொண்டான்.
அந்நேரம், கரும்புக்கட்டை தூக்கிக்கொண்டு வந்த ஆள் தள்ளாடி இவர்கள் மேல் விழுவது போல வந்து பிறகு நிதானித்து தள்ளிப்போக, கடையின் முதலாளி, “குடிச்சுட்டு வேலைக்கு வராதன்னு எத்தன முறை சொல்றது எடுப்பட்ட பயலே!” என அவனை வாயில் அர்ச்சிக்க ஆரம்பித்திருந்தார்.
“ஜாக்கு… கம் திஸ் சைட்” அவனை தள்ளி உட்கார வைத்தாள் ரோஷிணி.
“ஹே ரோஸ்…!”
“எது ரோஸா?” இருவரும் அதிர, அதை கண்டுக்கொள்ளாதவன், “வாட் இஸ் எடுப்பட்டா?” என்றான்.
இருவரும் ஒருவரைஒருவரை பார்த்துக்கொள்ள, “தட் மேன் ஒன்லி செட், எடுப்பட்டா… அண்ட் சம்திங்” என்றதும் இருவருக்கும் புரிந்துப்போனது அவன் கேட்பது.
ஜாக் எப்போதும் புரியாத வார்த்தைகளை உடனுக்குடன் தன் அன்னையிடம் கேட்டு தெளிந்துக்கொள்வான். அதே நினைப்பில் இப்போது ரோஷிணியிடம் அவன் கேட்க, அவள் முகத்திலோ குறும்பு குத்து ஆட்டம் போட ஆரம்பித்தது.
“அதாவது ஜாக்கு… திஸ் இஸ் துப்பட்டா…” என்றாள் அவள் அணிந்திருந்த ஷாலை காட்டி.
“துப்பட்டா ஓகே… எடுப்பட்டா?”
“கேர்ள்ஸ் வேரிங் துப்பட்டா! இதே பாய்ஸ் வேரிங் எடுப்பட்டா!” என்றாள்.
“ஓ!” என்றவன் சுற்றி பார்க்க, அங்கே ஜூஸ் போட்டுருந்தவன் தொடக்கம் முதலாளி வரை அத்தனை பேரின் தோளிலும் துண்டு கிடந்தது.
“சார், ஜூஸ் எவ்ளோ?”
“எண்பது ரூபா மா!”
“அவ்வ.. அவ்வா! வெறும் சக்கரை தண்ணி இது எண்பது ரூவாவா?”
அவன் கணக்குபோட்டு இந்திய மதிப்பில் பணத்தை நீட்ட, “அலோ… நூத்தி பதினஞ்சு ரூபா இல்ல… நூத்தி பதினஞ்சு டாலர்ஸ்…” என்ற கணம் அவன் நெஞ்சில் சிறு அட்டாக்கே வந்துப்போனது.
சங்கவியே அவள் பேச்சில் வாயை பிளந்து, “இதெல்லாம் ரொம்ப அநியாயம் டி!” என பொறுக்கமாட்டாமல் சொல்ல,
“சும்மா இரு கிறுக்கி! வெறும் எட்டாயிரத்துக்கு இவனோட நாள் முழுக்க சுத்த சொல்றியா?” என்றவள்,
“கிவ் கிவ்” என்றாள் அவனிடம் கையை நீட்டிக்கொண்டே.
எடுத்து நீட்டுவதை தவிர வேறு வழி…!?
ஆனாலும் அவன் செவிகளில், ‘யாரு காசு கொடுத்தா என்ன? காசு காசு தானே! எப்படி தான் மனுஷங்களை ஏமாத்த முடியுதோ தெரியலையே எனக்கு!’ என சில நிமிடங்களுக்கு முன் அவள் பேசியதும் அதை தான் ஒரு சிலிர்ப்புடன் கேட்டுக்கொண்டு நின்றதும் நிழலாட, தேவகி சொன்ன தங்கங்களை நினைத்து பல்லைக்கடித்தான்.