இனி என்று காண நேருமோ என்று எண்ணிய உறவு இன்று தன் அருகில் உரிமையாய் அமர்ந்திருக்க, நடப்பது கனவா நிகழ்வா என்று புரியாத குழப்பத்துடனும், கனவாய் இருப்பின் கலைந்திடக் கூடாது, நிகழ்வாய் இருப்பின் நிலைத்திட வேண்டும் என்ற தவிப்புடனும் தன் அருகில் அதிகாரத் தோரணையுடன் நெஞ்சுயர்த்தி அமர்ந்திருந்தவன் முகத்தை நாணத்துடன் நோக்கினாள் மீனாட்சி.
எந்த உணர்வும் பிரதிபலிக்காத முக பாவனையுடன் தன் முகம் நோக்கியவளை எதிர்கொண்டவன், என்ன என்பது போல ஒற்றைப் புருவம் உயர்த்தி வினவ… ஒன்றும் இல்லை என்பது போல வெட்கத்துடன் வேகமாய் தலையசைத்து மீண்டும் அவன் முகமே நோக்கிக் கொண்டிருந்தாள் மீனாட்சி.
“ போதும் போதும்.. விட்டா மாமாவ பார்வையாலேயே முழுங்கிடுவ போல!” என்று தமக்கையையே கவனித்துக் கொண்டிருந்த விசாலாட்சி கேலி செய்ய.. “ நடக்குறது எல்லாம் கனவு மாதிரி இருக்கு விசா” என்று கண்களை அழகாய் அகலமாய் விரித்து அப்பாவியாய் கூறினாள் மீனாட்சி.
“ அப்பாடியா? கனவு மாதிரி இருக்கா?” என்று வினவியபடியே மீனாட்சியின் தோள்களில் விசாலாட்சி வேகமாய் இடிக்க, அவள் இடித்த வேகத்தில் தடுமாறி அருகில் இருந்த அகரன் மீது சாய்ந்தாள் மீனாட்சி.
வெண்பனி வந்து மோதியது போன்றதொரு குளுமையையும்… மல்லிகை பூப் பாந்தலினுள் நுழைந்தது போன்றதொரு இதத்தையும் ஒரு சேர உணர்ந்தவன், தன் மீது சரிந்து கிடந்தவளை இடக்கரம் கொண்டு இடை வளைத்து மேலும் தன்னோடு சேர்த்து இறுகப் பற்றிக் கொண்டான்.
“ ஆஹா… ஆஹா… “ என்று அதையும் விசாலாட்சி கேலி செய்ய…” ஏய்… வாயாடி, கொஞ்ச நேரம் சும்மா இரு” என்று அதட்டியபடி அங்கு வந்து சேர்ந்தார் காஞ்சனா.
தாயைக் கண்டதும் அவசரமாய் மீனாட்சி விலகி அமர முயற்சிக்க.. அவளது முயற்சியை முறியடித்து மேலும் தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டவன்,” இதுக்காகத் தானே அவ்ளோ கஷ்டத்தை அனுபவிச்சது. நினைச்சது நடந்ததுக்கு அப்புறம் எதுக்கு இந்த நாடகம்?” என்றவன், பற்றி இருந்த இடத்தை இன்னும் அழுத்தமாய் பற்றிட.. பெண்ணவள் மெல்லிய இடை மெல்ல மெல்ல வலியை உணர்ந்தது…. இருந்தும் தன் வேதனையை முகம் பிரதிபலிக்காத வண்ணம் சிரித்த முகமாய் அமர்ந்திருந்தாள் மீனாட்சி.
திருமணச் சடங்குகளில் ஒன்றான மணமக்கள் பால் பழம் பகிர்ந்து கொள்ளும் நிகழ்விற்காக, மீனாட்சியின் அன்னை காஞ்சனா நீட்டிய வெள்ளிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டவன் அதனை தானே உண்ணத் துவங்க, “ மாமா இருங்க, இந்தச் சம்பிராயத்தை இப்படிச் செய்யக் கூடாது, அந்தக் கிண்ணத்தை இப்படிக் குடுங்க… “ என்று சுந்தர அகரன் கையில் இருந்த பால்பழக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டவள், “ம்…. இப்போ ஆ காட்டுங்க” என்று சிறு சிறு துண்டுகளை எடுத்து தன் அக்காவின் கணவனுக்கு ஊட்டி விட தொடங்கினாள் விசாலாட்சி.
அவன் எச்சில் படுத்தி மீதம் வைத்ததை மீனாட்சிக்கு ஊட்டி விட ,தேவலோக அமிர்தத்தை பருகுவது போல் பெருமிதத்துடன் உண்டு முடித்தவள் வெட்கத்துடன் கடைக் கண்ணால் தன் கணவனை நோக்கினாள்.
அவ்வப்போது தன்னை பார்வையாலேயே விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சி ஒரு பொருட்டாக கூட எண்ணாமல்.. திருமண சடங்கு எனும் பெயரில் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளிலும் மர பொம்மை போல் உணர்வற்ற நிலையில் காணப்பட்டான் சுந்தர அகரன்.
பேரனின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்த துர்கேஸ்வரி… தனது தனி அறைக்கு அவனை வரவழைத்து.. “ என்ன அகரா இது?, பிடிச்சு தானே இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்ட அப்புறம் ஏன்.. யாரோ உன்னை கட்டாயப்படுத்தி இந்த கல்யாணத்தை பண்ண வச்ச மாதிரி முகத்தை உம்முன்னு வச்சுட்டு சுத்துற?, “என்று பேரனின் அமைதிக்கான காரணத்தை வினவினார்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லையே நான் சந்தோஷமா தான் இருக்கேன்!” என்று மழுப்பலாய் பதில் தந்தான் அகரன்.
“சந்தோஷமா தான் இருக்கேங்கிற வார்த்தையை கூட உன்னால சந்தோஷமா சொல்ல முடியல, அந்த அளவுக்கு நீ சந்தோசத்துல இருக்க அப்படித்தானே!,..” என்று துர்கேஸ்வரி கேலிக் குரலில் வினவிட.. எங்கு பெரியவர் தன் பொய்யை கண்டு கொள்வாரோ என்ற அச்சத்துடன் அகரன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொள்ள.., “இப்ப எதுக்கு உன் பார்வையை வேறப் பக்கம் திருப்புற?, என் முகத்தைப் பார்த்து பேசு. உண்மையிலேயே நீ சந்தோஷமா தான் இருக்கியா?, “ என்று அழுத்தம் திருத்தமாய் வினவினார் துர்கேஸ்வரி.
மீண்டும் தலையை திருப்பி தன்னை வளர்த்த பாட்டியை பார்த்த அகரன், “நான் உண்மையா உயிருக்குயிரா காதலிச்ச பொண்ணு எனக்கு கிடைச்சுட்டா இதை விட பெரிய சந்தோஷம் வேற என்ன இருக்கு சொல்லுங்க. உண்மையிலேயே நான் சந்தோஷமா தான் இருக்கேன். தேவை இல்லாம கண்டதையும் யோசிச்சு உங்க மனசு போட்டு குழப்பிக்காதீங்க பாட்டி” என்று சமாதானம் செய்தான் அகரன்.
“பொய் சொல்லாத… நான் வளர்த்த பையன்.. நீ சந்தோஷமா இருக்கியா இல்லையான்னு என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைக்கிறியா?, உண்மையை சொல்லு என்ன ஆச்சு? ஏன் இப்படி ஒரு மாதிரி எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்க?,” என்று விடாமல் வினவினார் துர்கேஸ்வரி.
“எனக்கு என்னமோ ஆகிறது இருக்கட்டும், முதல்ல சொல்லுங்க உங்களுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி தேவையில்லாம கேள்வி மேல கேள்வி கேட்டு என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கீங்க?, “என்று பெரியவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் அவர் கேட்ட கேள்வியை அவர் பக்கமே திருப்பி வைத்தான் அகரன்.
“ தேவை இல்லாம கேள்வி கேட்கல அகரா, தேவை இருக்கிறதால தான் கேட்கிறேன். லாஸ்ட் டைம் ட்ரிப் வந்தப்போ சேதுபதியோட பொண்ண பார்த்து ரொம்ப பிடிச்சு போச்சு கல்யாணம்னு பண்ணுனா அது அந்த பொண்ண தான் பண்ணிப்பேன்னு பிடிவாதமா என் கூட சண்டை போட்ட… நானும் உன் சந்தோசம் தான் முக்கியம்னு ஸ்டேட்டஸ் கூட பாக்காம உன் விருப்பத்துக்காக இந்த கல்யாணத்தை நடத்தி வச்சேன். எல்லாம் நல்லபடியா தான் நடந்துட்டு இருக்குன்னு நான் நினைச்சிட்டு இருக்கேன். ஆனா உன் நடவடிக்கைகளை பார்த்தா அப்படி தெரியலையே!, நீ ஆசைப்பட்ட வாழ்க்கை உனக்கு கிடைச்சுருக்கு ஆனா அதுக்கான சந்தோஷம் உன் முகத்துல கொஞ்சம் கூட இல்ல. இது உண்மையிலேயே காதல் கல்யாணம் தான!, நீ உண்மையிலேயே அந்த பொண்ண காதலிச்சு தானே!, இல்ல… இந்த காலத்து பசங்க பழி வாங்குறதுக்காக எத்தனையோ வழி இருந்தாலும் முட்டாள்தனமா கல்யாணங்கற பேர்ல அப்பாவி பொண்ணோட வாழ்க்கையை சீரழிச்சு, தன்னோட வாழ்க்கையை சேர்த்து வீண் அடிச்சுகிறார்களே அது மாதிரி ஏதாவது கிறுக்குத்தனமா யோசிச்சு இந்த கல்யாணத்தை பண்ணி இருக்கியா?” என்று கோபமும் குழப்பமுமாய் வினவினார் துர்கேஸ்வரி.
பாட்டியின் வார்த்தையை கேட்டு ஒரு நொடி அதிர்ந்து விழித்தவன்,” என்ன பாட்டி இப்படி கேட்டுட்டீங்க?. என்ன பாத்தா அவ்ளோ கொடுமைக்காரன் மாதிரி தெரியுது!, என்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்சிருந்தும் நீ இப்படி கேட்கிறது ரொம்ப சங்கடமா இருக்கு பாட்டி “என்று தட்டுத் தடுமாறி வினவினான் அகரன்.
“இதுல சங்கடப் பட என்ன இருக்கு?, உன்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்சதால தான் இப்படி கேட்கிறேன். என் பேரன் கொடுமைக்காரன் இல்லன்னு எனக்கு தெரியும் அதே சமயத்துல அவன் கண்மூடித்தனமான கோபக்காரன்னு தெரிஞ்சதால தான் எனக்கு இப்படி ஒரு சந்தேகமே வந்தது. நீ இங்க லாஸ்ட் டைம் வெக்கேஷன்காக வந்திருந்தப்போ.. நீ தான் இந்த ரெசார்ட் ஓனர்ன்னு இங்க யாருக்கும் தெரியாதுல, அந்த நேரத்தில் சேதுபதி உன்கிட்ட ஏதாவது உன்னை காயப்படுத்தற மாதிரி மோசமா நடந்துக்கிட்டாரா?, அதுக்கு பழி வாங்க தான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டியா?” என்று வெளிப்படையாகவே தனது சந்தேகத்தை வினவினார் அகரனின் பாட்டி.
“எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க?, அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி ஹீரோ கதையை படிச்சு உங்க மூளை குழம்பிப் போச்சு பாட்டி. நீங்க நினைக்கிற மாதிரி இது பழிவாங்குறதுக்காக நடந்த கல்யாணம் இல்லை. நான் மீனாட்சிய காதலிச்சது உண்மை. அவ எப்பவும் என் கூடவே இருக்கணும்னு தான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டேன். ” என்று அழுத்தம் திருத்தமாக தான் மீனாட்சியின் மீது கொண்ட காதலை உறுதிப்படுத்தினான் சுந்தர அகரன்.
“அந்தப் பொண்ணுக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் தானே?” என்று அடுத்த கேள்வியை துர்க்கேஸ்வரி கேட்டிட.. ‘ அதான் அவ ஆசைப்பட்ட மாதிரி நான் பணக்காரன்னு தெரிஞ்சிருச்சே.. இதுக்கு மேல விருப்பமில்லாம இருக்குமா என்ன? ‘ என்று தனக்குள் வெறுப்புடன் எண்ணிக் கொண்டு அகரன் அமைதியாய் இருக்க…. “என்னடா நான் கேட்ட கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாம அமைதியா இருக்க… அந்தப் பொண்ணுக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு தானே!, இது அந்த பொண்ணோட சம்மதத்தோட நடக்கிற கல்யாணம் தானே!” என்று மீண்டும் அதே கேள்வியை வினவினார் துர்கேஸ்வரி.
இம்முறை மௌனத்தை கைவிட்டு… மலர்ந்த புன்னகை செய்தவன் “அதுல உங்களுக்கு சந்தேகம் வேறயா?, நீங்களே பார்த்துட்டு தானே இருக்கீங்க!, என் பக்கத்துல இருக்கும் போது அவ எவ்வளவு சந்தோஷமா இருக்கான்னு.. இதுல இருந்தே தெரியல அவ என்னை எந்த அளவுக்கு காதலிக்கிறான்னு…” என்று கர்வத்துடன் அறிவித்தான் அகரன்.
“எல்லாம் சரிதான் ஆனா ஏதோ தப்பா இருக்கிற மாதிரி… நடக்கிறது எல்லாம் நாடகம் மாதிரியும் … எல்லாரும் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிக்கிறாங்களோனு தோணுது.. “என்று தன் கவலை எதனால் என்றே புரியாமல் துர்கேஸ்வரி புலம்பிட… ” உலகமே நாடக மேடைத் தான பாட்டி… ” என்று தன் பாட்டியின் கன்னத்தைக் கிள்ளி கேலியுடன் புன்னகை செய்தவன், ” இங்க இருக்கிறவங்களை பொறுத்த வரைக்கும் அவங்களோட ஓனர் சுந்தர். மாப்பிள்ளையா அவன் தான் வருவான்னு எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருந்த நேரம் நான் வந்து நின்னதும் எல்லாரும் எப்படி ஷாக் ஆனாங்கன்னு நீங்களே பார்த்திங்க தானே!, அந்த ஷாக்ல இருந்து இன்னும் யாரும் முழுசா வெளிய வரல, அதனால உங்களுக்கு எல்லாம் செயற்கை தனமாக இருக்கிற மாதிரி தோணுது போல… எல்லாம் போகப் போக சரியாயிடும் பாட்டி ” என்று சமாதானம் செய்தான் அகரன்.
” மத்தவங்க விஷயத்துல நீ சொல்றது சரி, ஆனா நீ.. சந்தோஷமா இருக்கிற மாதிரி போலியா நடிச்சிட்டு இருக்கியே அது எதுக்கு?” என்று கிடுக்குப்பிடியாய் வினாவினார் துர்கேஸ்வரி.
“அது வந்து அது வந்து பாட்டி..” என்று என்ன காரணம் சொல்வது என்று புரியாமல் தவித்தவன், ” அதான் சொன்னேனே பாட்டி .. ” என்றான் அகரன்.
“என்ன சொன்ன?” என்று பெரியவர் வினா எழுப்ப… ” என்னை பார்த்ததும் முதல்ல தயங்குனவங்க… உங்க பேரன்னு தெரிஞ்சதும் எந்த தயக்கமும் இல்லாம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க, இதே நான் ஏழையா இருந்திருந்தா இந்த கல்யாணம் நடந்திருக்காதுல, நீங்க அடிக்கடி சொல்வீங்களே இந்த காலத்துல யாரும் மனசை பாக்குறது இல்ல அடுத்தவங்க கிட்ட இருக்கா பணத்தைப் பார்த்துதான் பழகுறாங்கன்னு. அது எந்த அளவுக்கு உண்மைன்னு நான் இப்போ புரிஞ்சுகிட்டேன் பாட்டி இங்கே எல்லாருக்கும் பணம் தான் முக்கியமா இருக்கு. என்கிட்ட இருக்கிற பணத்துக்காக தான் இந்த கல்யாணம் நடந்திருக்குன்னு நினைக்கும்போது ரொம்பவே கஷ்டமா இருக்கு பாட்டி. ” என்று தன் அனுபவத்தை சொல்லாமல் சொன்னான் சுந்தர அகரன்.
“முட்டாள்தனமா யோசிக்கிறோம்ன்னு உனக்கே தோணல, சுந்தர் இடத்துல உன்னைப் பார்த்ததும் எல்லாரும் ஷாக் ஆகிட்டாங்கன்னு நீ தான சொன்ன.. இப்போ என்னடான்னா உன் கிட்ட இருக்கிற பணத்தை பார்த்து தான் கல்யாணம் நடந்ததுன்னு சொல்ற!, என்ன பேசுறோம்னு புரிஞ்சு தான் பேசிட்டு இருக்கியா?, இங்க பாரு கண்ணா நான் சேதுபதி பொண்ண என் பேரனுக்கு தான் பேசி முடிச்சேன், நீ என் பேரன் தானே அதனால தான் கல்யாணம் நடந்ததே தவிர நீ நினைக்கிற மாதிரி வேற எந்தக் காரணமும் இல்ல ” என்றவர் அப்போதும் அகரன் முகம் தெளிவில்லாமல் இருக்க… ” ஒருவேளை இதுக்கு முன்னாடி சுந்தரை நீன்னு நினைச்சு, சுந்தர் இடத்துல உன்னை வைச்சு யோசிச்சு சேதுபதி ஏதாவது மோசமா நடந்திருந்தா.. அதை இப்பவே இந்த நிமிஷமே மறந்திடு. கண்டதையும் யோசிச்சு மனச போட்டு குழப்பிக்காமல் உனக்கு கிடைச்சிருக்கு வாழ்க்கையை சந்தோஷமா வாழ்ற வழியை பாரு..” என்று பெரியவராய் தன் பேரனுக்கு அறிவுரை வழங்கினார் துர்கேஸ்வரி.
சரி என்று சுந்தர அகரன் சம்மதமாய் தலையசைக்க… “குட் பாய்..” என்று செல்லமாய் தன் பேரனின் தலையை வருடிக் கொடுத்தவர், ” என்னால ரொம்ப நேரம் இந்த குளிர தாங்கிட்டு இங்க இருக்க முடியாது.. நான் மதுரைக்கு கிளம்புறேன். பாத்து பத்திரமா நடந்துக்கோ நான் சொன்ன எதையும் மறந்துடாத.. இனி மீனாட்சி உன்னோட பொறுப்பு. .” என்றார் துர்கேஸ்வரி.
” நீங்க ஏன் இன்னும் மதுரையில் தனியா இருக்கணும். என் கூடவே சென்னைக்கு வந்துடுங்க… ” என்று அகரன் தன் இல்லத்திற்கு அழைப்பு விடுக்க… ” என்னப்பா செய்ய கொடைக்கானல் குளிரும் சேர மாட்டேங்குது.. சென்னை ஹீட்டும் உடம்புக்கு ஒத்துக்க மாட்டேங்குது . வயசாயிட்டாலே இப்படித்தான். நீ ஒன்னு பண்ணு இங்க இருந்து சென்னைக்கு போனதும் எனக்கு இன்பார்ம் பண்ணு, நான் கொஞ்ச நாள் அங்க வந்து உங்க கூட சென்னையில ஸ்டே பண்ணிட்டு வரேன்.” என்றார் துர்கேஸ்வரி.
தன் பேரனுக்கு வேண்டிய அறிவுரை வழங்கி விட்டு மற்றவர்களிடம் அறிவித்துவிட்டு சற்று நேரத்திலேயே துர்கேஸ்வரி தன் பயணத்தை துவங்கினார்.
தன்னை செல்லமாய் வளர்த்த பாட்டியை வழி அனுப்பி வைத்துவிட்டு அறைக்குத் திரும்பியவன்.. ஆள் உயரக் கண்ணாடியின் முன் நின்று.. ‘என்னை மன்னிச்சிடுங்க பாட்டி நான் உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன், இந்த கல்யாணம் முழுக்க முழுக்க பழிவாங்குறதுக்காக நடந்த கல்யாணம் தான். என்னை அவமானப்படுத்தினவங்கள எப்படி சும்மா விட முடியும். அவங்களுக்கான பதிலடி கொடுக்கலைன்னா என் மனசு ஆறாது..’என்று தன் பாட்டியிடம் உரைத்த பொய்க்காக மானசீகமாய் மன்னிப்பு வேண்டினான் சுந்தர அகரன்.