அப்போது தான் பூங்கொடியின் அண்ணன்கள் காலிங் பெல்லை அழுத்தினார்கள். கதிரவன் தான் இந்நேரம் யாராக இருக்கும் என்ற குழப்பத்துடன் கதவைத் திறந்தார். அவர்களைப் பார்த்து அவருக்கு திகைப்பு தான்.
“உள்ள வாங்க”, என்று சொல்லி அனைவரையும் அமர வைத்தார். தேவகியும் எழுந்து வந்தார்.
“தங்கச்சியும் மாப்பிள்ளையும்,….”, என்று தயக்கமாக கேசவன் கேட்க “மேல தான் இருக்காங்க. அவங்க வரும் போது அவங்க முகமே சரி இல்லை. நீங்களும் அன்டைம்ல கிளம்பி வந்துருக்கீங்க? அங்க ஏதாவது பிரச்சனையா?”, என்று கேட்டார்.
“ஆமா மாமா…”, என்று ஆரம்பித்து நடந்ததைச் சொன்னார் கேசவன். அதைக் கேட்டு கதிரவனுக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. ஆனால் உலகம் தெரிந்தவர் என்பதால் நிதானமாக இருந்தார். ஆனால் தேவகியோ புலம்ப ஆரம்பித்து விட்டார்.
தேவகி சத்தம் மேலே மணிமாறனுக்கு கேட்டது. “கொடி கீழ அத்தை சத்தம் கேக்குது. இரு பாத்துட்டு வரேன்”, என்றான்.
“எனக்கும் கேக்குதுங்க. நானும் வரேன்”, என்று சொல்லி அவனுடன் வந்தாள்.
உடை கூட மாற்றாமல் சோர்ந்து போய் இறங்கிய அவர்களை கண்டு அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது. அண்ணன்களைக் கண்டதும் முகத்தை சாதாரணமாக மாற்றியவள் “அண்ணே, வாங்கண்ணே. என்ன இந்த நேரம்?”, என்று சாதாரணமாக கேட்டாள்.
ஆனால் அவர்கள் உண்மை தெரிந்து தான் வந்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட மணிமாறன் “வாங்க மச்சான்”, என்று பொதுப்படையாக சொன்னான்.
“நீ ஏன் மா சொல்லாம கொள்ளாம மாப்பிள்ளையைக் கூட்டிட்டு வந்துட்ட?”, என்று கலக்கத்துடன் கேட்டார் கேசவன்.
“அதுக்கா இப்படி நாலு பேரும் கிளம்பி வந்துருக்கீங்க? ஒரு போன் பண்ணிருக்க கூடாதா? அங்க இவருக்கு சரியா தூக்கம் வரலை. அதான் இங்க கூட்டிட்டு வரச் சொன்னேன்”
“பூசி மொழுகாதே மா. அங்க என்ன நடந்துச்சுன்னு எங்க எல்லாருக்கும் தெரியும்”, என்று மணிவாசகம் சொல்ல என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக நின்றாள்.
அடுத்து நான்கு அண்ணன்களும் மணிமாறனிடம் மன்னிப்பு கேட்க அவனோ விடுங்க விடுங்க என்று தான் சொல்லிக் கொண்டிருந்தான்.
பூங்கொடி அழுது கொண்டே இருந்தாள். அவளை சமாதானம் செய்தார்கள். “கொடி, புது மாப்பிள்ளை வந்து சமாதானப் படுத்திட்டு இருக்கார்., நீ என்ன சின்னக் குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்க?”, என்று வரதனைச் சுட்டிக் காட்டினான் மணிமாறன்.
அதில் நடப்புக்கு வந்தவள் “அண்ணே நீ எதுக்கு இங்க வந்த? இந்நேரம் நீ அண்ணி கூட இருக்கணும். அவரே எல்லாம் மறந்துட்டார். நான் என்ன சொல்லப் போறேன். விடுங்க. சீக்கிரம் வீட்டுக்கு கிளம்புங்க. சுதா அண்ணி பயந்துட்டே இருப்பாங்க”, என்றாள் பூங்கொடி.
“ஆமா மச்சான், அந்த பொண்ணு பாவம். சூழ்நிலைக் கைதி. அவங்களை கூட்டிட்டு வாங்க”, என்று மணிமாறனும் சுதாவை அழைத்து வரச் சொன்னான்.
தங்கையிடம் மறுத்தவன் மணிமாறனிடம் அமைதியாக இருந்தான். சரி என்றும் சொல்ல வில்லை. மாட்டேன் என்றும் சொல்ல வில்லை.
“அண்ணா, காலைலே அவங்களை கூட்டிட்டு வருவ தானே?”, என்று பூங்கொடி கேட்க “ஏன் பாப்பா, எனக்கு இந்த நிமிஷம் மாப்பிள்ளையை பிடிக்கலைன்னு வை. உடனே அவரை விட்டுட்டு வான்னு சொன்னா நீ வருவியா?”, என்று கேட்டான்.
“அது எப்படின்னா முடியும்? நீங்க எனக்கு உயிர் தான். ஆனா இவர் அதுக்கும் மேல. நீங்க சாகச் சொல்லுங்க. நான் சாகுறேன். ஆனா இவரை விட மாட்டேன். எங்க ரெண்டு பேருக்குள்ள நீங்க வர முடியாதுண்ணா”
“அதே மாதிரி தான். எனக்கும் என் பொண்டாட்டிக்கும் இடைல நீ வராதே. அவளை எப்ப கூப்பிடணும்னு எனக்கு தெரியும். அவ கொஞ்ச நாள் அங்கயே இருக்கட்டும். இங்க கூட்டிட்டு வந்தாலும் என்னால அவ கூட சகஜமா பேசக் கூட முடியாது. அவளை இங்க கூட்டிட்டு வந்து கஸ்டப் படுத்தி பாக்குறதுக்கு அவ அங்கயே இருக்கட்டும். என் மனசு மாறி என் வாழ்க்கையை நான் பாக்குற வரைக்கும் யாரும் எதுவும் பேசக் கூடாது”, என்று உறுதியாக் சொல்ல வேறு யாரும் எதுவும் பேச வில்லை.
மீண்டும் மணிமாறனின் கையைப் பிடித்து மன்னிப்பு கேட்டு விட்டு நால்வரும் கிளம்பிச் சென்றார்கள். அண்ணன்கள் சென்றதும் அது வரை தைரியமாக இருந்தவள் “அம்மா என்னால தான் இவருக்கு அவமானம் ஆகிருச்சு”, என்று தேவகி தோளில் சாய்ந்து அழுதாள் பூங்கொடி.
“அழாதே டா. எனக்கு உன் மனசு புரியுது? அவளுங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தா இப்படி பேசிருப்பாங்க”, என்று தேவகி கோபம் கொள்ள “தேவகி, மருமகளே கலங்கிப் போயிருக்கா. நீயும் ஏத்தி விடாதே. ஊருல நாலு பேர் நாலு விதமா தான் இருப்பாங்க. அதை எல்லாம் யோசிச்சு நம்ம சந்தோஷத்தை நாம கெடுத்துக்க கூடாது. மாறா, மருமகளை உள்ள அழைச்சிட்டு போ. இங்க பாரு பூங்கொடி. மாறன் நாளைக்கு ஊருக்கு போயிருவான். அவனுக்காக சாதாரணமா இரு”, என்று சொன்னதும் அவளை அழைத்துக் கொண்டு அறைக்கு வந்தான்.
கதிரவன் சொன்னது புரிந்தாலும் அவள் அழுகை நிற்க வில்லை. அழுது கொண்டே தூங்கிப் போனாள். அவளை அனைத்த படியே மணிமாறனும் உறங்கி விட்டான்.
சரியாக பன்னிரெண்டு மணிக்கு வீட்டின் கதவு தட்டப் படவும் மகேஸ்வரன் பயந்து விட்டார். வள்ளியும் எழுந்து கொண்டாள். குழப்பத்துடன் அவர் கதவைத் திறக்க அந்த நேரத்தில் வெளியே நின்றவர்களைக் கண்டு அதிர்ச்சி தான் அவருக்கு.
“என்ன டா இந்த நேரத்துல? அதுவும் இப்படி ஒரு கோலம்? சுதாவையும் கூட்டிட்டு வந்துருக்கீங்க?”, என்று அவர் குழப்பமாக கேட்க “அப்பா”, என்று கதறிய சுதா தந்தையின் தோளில் சாய்ந்து அழுதாள்.
வாழ்க்கையை துவங்க வேண்டிய மகள் இப்படி கண்ணீரோடு பிறந்த வீட்டுக்கு வந்ததும் அவருக்கு நெஞ்சு துடித்தது. “வள்ளி, பாப்பாவை உள்ள கூட்டிட்டு போ”, என்று சொன்னதும் மகளை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றாள் வள்ளி.
“என்ன நடந்துச்சு இளங்கோ?”, என்று கோபத்துடன் கேட்டார் மகேஸ்வரன்.
“அடிச்சிட்டாங்க பா”
“யாரு டா?”
“மாப்பிள்ளையும் அவங்க கூடப் பிறந்தவங்களும்”
“அடிக்கிற அளவுக்கு என்ன நடந்துச்சு டா?”, என்று அவர் கேட்க அவனுக்கு வாயில் இருந்து வார்த்தை வரவில்லை. என்ன சொல்ல முடியும் அவனால்?
“இன்னும் என்னப்பா நடக்கணும்? நான் அப்பவே இந்த குடும்பம் வேண்டாம்னு சொன்னேன். என் பேச்சைக் கேட்டீங்களா? இப்ப பாருங்க தம்பியை அடிச்சு, சுதாவை வேற துரத்தி விட்டுட்டாங்க. எங்களையும் அடிச்சாங்க பா”, என்றாள் மேகலா.
“அடிக்கிற அளவுக்கு என்ன நடந்துச்சு?”
“ஒண்ணுமே இல்லைப்பா”, என்று அவள் பூசி மொழுக “இளங்கோ நீ சொல்லு. எனக்கு உண்மை தெரியணும். உண்மை மட்டும் தான் வேணும்”, என்று கூர்மையுடன் கேட்டார். அடுத்த நொடி எல்லாம் சொல்லி விட்டான்.
அவன் சொல்லி முடித்தது தான் தாமதம் அவன் கன்னத்தில் சப்பென்று ஒன்று வைத்தார் மகேஸ்வரன். “அப்பா அவங்க எங்களை அசிங்கப் படுத்தி அனுப்பிருக்காங்க. நீங்க அவங்களைக் கேக்காம தம்பியைப் போய் அடிக்கிறீங்க?”, என்று கேட்டு நான்கு வாங்கிக் கட்டிக் கொண்டாள் மேகலா.
அடுத்த நொடி அவர் அடித்த அடியில் சுருண்டு கீழே விழுந்து கிடந்தாள். பின் அவர் சுந்தரியைப் பார்க்க அவளுக்கு பயத்தில் சகலமும் ஆடியது. “நீ இந்த வீட்டுப் பொண்ணா மா? இல்லை வேற வீட்டுப் பொண்ணா?”, என்று கேட்டார்.
“இந்த வீட்டு பொண்ணு தான் மாமா”, என்று அவள் தடுமாற்றத்துடன் சொல்ல “அப்படின்னா உன்னை அடிக்கிறதுல தப்பில்லை”, என்று அவளுக்கும் இரண்டு அடி விழுந்தது. அவள் மறு பக்கம் போய் விழுந்தாள்.
“என் பொண்ணு வாழ்க்கையை நாசமாக்கிட்டியே டா பாவி”, என்று கத்தியவர் இளங்கோவை மீண்டும் மீண்டும் அடிக்க மகளை படுக்க வைத்து விட்டு வந்த வள்ளி அதிர்ந்து போனாள்.
“ஏங்க தோளுக்கு மேல வளந்த பையைனை அடிச்சிட்டு இருக்கீங்க?”, என்று கேட்காமல் “என் பொண்ணு வாழ்க்கைல மண்ணை அள்ளிப் போட்ட இவங்க எல்லாரையும் கொன்னுருங்க”, என்று சொல்லி விட்டு கதறி அழுதாள் வள்ளி.
இளங்கோவுக்கு எதுவும் பேச முடிய வில்லை. “நீங்கல்லாம் பொம்பளைங்களா டி? ஒரு பூ மாதிரி மனசு உள்ள பொண்ணை போய் நோகடிச்சிட்டு வந்துருக்கீங்களே? நீங்க நல்லா இருப்பீங்களா?”, என்று கேட்டு மகளையும் மருமகளையும் அடி பின்னி விட்டாள் வள்ளி.
இருவரும் எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் வாங்கிக் கொண்டார்கள். “ஏங்க மாப்பிள்ளை வீட்டுக்கு பேசுங்க”, என்றாள் வள்ளி.