சிறிது நேரத்தில் மீண்டுமாய் அவனது தேவையும் தேடலும் அவளிடம் தொடர அவள் சந்தோஷமாக அவனுக்கு இசைந்தாள். மீண்டும் மீண்டும் அவளை நாடினான். இருவரும் தங்களை மறந்து உறங்க ஆரம்பிக்கும் போது விடிந்திருந்தது.
காலை உணவையே மறந்து தூங்கினார்கள். பன்னிரெண்டு மணி போல எழுந்து குளித்து முடித்து உணவு உண்ணச் சென்றார்கள். அதன் பிறகு தான் அவளை வெளியே அழைத்துச் சென்றான்.
அடுத்து வந்த நாட்களில் வாழ்க்கை வண்ணமயமானதாக இருந்தது இருவருக்கும். ஊட்டியை சந்தோஷமாக வலம் வந்தார்கள். இரவில் ஒருவர் மற்றவருக்குள் தஞ்சம் அடைந்தார்கள்.
பின் ஊருக்குச் சென்றவர்கள் இரண்டு வீட்டினரிடமும் சொல்லி விட்டு கான்பூர் கிளம்பி விட்டார்கள். மொத்த குடும்பத்துக்கும் அவர்களுடன் சென்று அவர்கள் வீட்டைப் பார்க்க ஆசை தான்.
ஆனால் “கொஞ்ச நாளைக்கு யாரும் எங்க வீட்டுக் பக்கம் வந்துடாதீங்க”, என்று வெளிப்படையாகவே மணிமாறன் சொல்லி இருக்க யாரும் அங்கே செல்ல நினைக்க வில்லை.
அங்கே சென்றதும் புது இடத்தில் அவளுக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் அவனுடைய அருகாமை இருந்ததால் சமாளித்தாள். அங்கே நிறைய தமிழ் குடும்பங்களும் இருக்க பூங்கொடிக்கு அந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க ஆரம்பித்தது.
அங்கேயும் காதல் பறவைகளாக வலம் வந்தார்கள். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து மொத்த குடும்பமே அவர்களைப் பார்க்க வேனில் வந்து இறங்கியது. கூட்டத்தைக் கண்டு குவாட்ரஸ் வாட்ச்மேனே திகைத்து விட்டான்.
அவர்களைப் பார்த்ததும் பூங்கொடி மற்றும் மணிமாறன் அடைந்த சந்தோஷத்தை வார்த்தையால் சொல்ல முடியாது. கதிரவன் தேவகி கூட அவர்களுடன் வந்திருந்தார்கள்.
அனைவரும் அங்கே ஒரு வாரம் இருந்து எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டே கிளம்பினார்கள். கிளம்பும் போது “அவளுக்கும் ஒரு கனவு இருக்கு. அதை மறந்துறாத மாறா”, என்று சொல்லி விட்டுச் சென்றார் கதிரவன்.
அவனுக்கும் அது நினைவிருக்கிறது தான். ஆனால் அவனுக்கு வேலை எங்கே நிரந்தரம் என்று தெரிய வில்லை. கான்பூரில் அவளுக்கு ஒரு ஷாப் வைத்துக் கொடுத்ததும் அவனுக்கு டிரான்ஸ்பர் வந்து விட்டால் என்ன செய்ய?
ஊரில் அவளுக்கு கடை வைத்துக் கொடுத்தால் அவளால் தன்னுடன் எப்படி இருக்க முடியும் என்று யோசனையாக இருந்தது. அப்போது அவனுக்கு ஒரு ஐடியா வர பூங்கொடியை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றான்.
“உனக்கு புடிச்ச மாதிரி ஒரு பத்து டிரஸ் நீ டிசைன் பண்ணனும் கொடி. அதுக்கு என்ன என்ன வாங்கணும்னு பாத்து வாங்கு”, என்றான். முகம் மலர தலையாட்டியவள் அவன் சொன்ன படி தேவையானதை வாங்கினாள்.
அனைத்தையும் அள்ளிக் கொண்டு வீட்டுக்கு வந்தவன் ஒரு அறையை தயார் செய்து அதை அவளுக்கு என்று கொடுத்தான். அடுத்த நாளே மிஷினும் வந்து விட அவன் வேலைக்கு சென்றதும் பூங்கொடிக்கு நன்கு நேரம் போனது.
கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் அவள் அனைத்தையும் தயார் செய்து கொடுக்க அதை எல்லாம் போட்டோ எடுத்துக் கொண்டான் மணிமாறன். பின் அந்த துணியை எல்லாம் பத்திரப் படுத்தி வீட்டிலே வைக்கச் சொன்னான்.
“ஒரு போட்டோ எடுக்கவா இவ்வளவு வேலை செய்ய சொன்னாங்க?”, என்று திகைத்துப் போனாள்.
அவனோ அவனுக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் பூந்தமிழன் என்ற ஒரு வெப்சைட் ஆரம்பிக்க சொல்லி அந்த டிசைன்களை அதில் போட வைத்தான்.
ஆனால் அதை அவளிடம் சொல்ல வில்லை. முதல் ஒரு மாதம் அந்த வெப்சைட்டில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு அவனே அதை மறந்து விட்டான். ஆனாலும் பூங்கொடி நேரம் போகாமல் மேலும் பல ஆடைகளை வடிவமைத்தாள்.
காலையில் வேலைக்குச் செல்லும் மாறனுக்கு எப்போதடா இரவு வரும் என்றும் மனைவியைக் காண வேண்டும் என்றும் இருக்கும். அவளுக்கும் அப்படித் தான்.
காலையில் போலீஸ் யூனிபார்ம் போட்டுக் கொண்டு அவன் கிளம்புகையில் அவனுடைய கம்பீரத்தில் மயங்கிப் போவாள். அவனை இறுக்கி கட்டிக் கொள்ள வேண்டும் என்ற வேகத்தை அவனுடைய யூனிபார்ம் கசங்கி விடும் என்று எண்ணி அடக்கிக் கொள்வாள்.
அதே போல மாலை வந்ததும் அவன் அருகே ஓடி வந்து அவனை இறுக்கி கொள்வாள். ஒவ்வொரு பட்டனாக அவள் கழட்டிக் கொண்டே வர அவனுக்கு தான் உணர்வுகள் பேயாட்டம் போடும்.
அன்று காலையில் அவன் கிளம்பும் போதே “சாயங்காலம் கிளம்பி இரு டி”, என்றான் மணிமாறன்.
அதற்கு அவன் ஏதோ விஷமமாக சொல்ல வர அவன் வாயை தன்னுடைய விரலால் அடைத்தவள் “எதுவும் சொல்லிறாதீங்க சாமி. நான் கிளம்பி இருக்கேன்”, என்றாள்.
“ஏன் டி தடுக்குற? நான் எவ்வளவு ஆசையா பேச வரேன்?”
“யார் நீங்களா? நான் இப்ப தடுக்கலைனா வாய்ல இருந்து வண்டி வண்டியா வார்த்தை கொட்டும்”
“அது எல்லாம் லவ் டாக் டி. உனக்கு பிடிக்கலையா?”, என்று சவாலாகவே கேட்டான்.
“பிடிக்கலைன்னு சொன்னேனா?”
“அப்புறம் ஏன் டி தடுத்த?”
“நீங்க என்னமோ ஏதேதோ பேசிட்டு போய்றீங்க? என்னால தான் அதுல இருந்து வெளிய வர முடியலை. தெரியுமா? அதுல இருந்து நான் வெளிய வரவே ரொம்ப நேரம் ஆகுது”
“ஹா ஹா”
“சிரிக்காதீங்க. சரி நேரம் ஆச்சு. கிளம்புங்க”
“கிளம்பி இரு சரியா?”
“எங்கன்னு சொல்ல மாட்டீங்களா?”, என்று கேட்டு பேச்சை வளர்த்தாள்.
தன்னை அனுப்பவே அவளுக்கு மனதிருக்காது என்று புரிந்து கொண்ட மணிமாறன் அவளை வெகு நேரம் கொஞ்சி விட்டே சென்றான். ஆனால் கடைசி வரை எங்கே என்று சொல்ல வில்லை.
அவன் வருவதற்கு சற்று நேரம் முன்பு தலைக்கு குளித்து விளக்கேற்றி வைத்தாள். அவன் கிளம்பச் சொன்னது நினைவில் வர கதவைப் பூட்ட மறந்து உடை மாற்ற சென்றாள்.
போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் குவாட்ரஸ் என்பதால் அவளுக்கு எந்த பயமும் இது வரை வந்ததில்லை. வேலை முடிந்து வந்த மணிமாறன் கதவு திறந்திருக்கவும் பூனை போல உள்ளே வந்தான்.
அவனுடைய ஆசை மனைவியை அவன் கண்கள் தேடியது. எங்கேயும் அவள் இல்லாததால் தங்களின் அறைக்குச் சென்றான். அவளோ யாரும் வீட்டில் இல்லை என்று சுதந்திரமாக உடை மாற்றிக் கொண்டிருந்தாள்.
அவளிடம் தெரிந்த தாராளமான அழகில் மெய் மறந்து நின்றான். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அழகல்லவா? அவள் திரும்பி நின்றதால் சில காட்சிகள் தெளிவாக தெரியாததால் அவளை நெருங்கினான்.
அவளை நெருங்கி உடும்பு போல அவளை இறுக்கி அணைக்க பயந்து போய் அலறினாள். அவள் கையில் இருந்த உடை கீழே விழுந்திருந்தது.
“ஏய் நான் தான் டி”, என்றதும் நிதானமாக திரும்பியவள் “இப்படியா விளையாடுறது? நான் பயந்துட்டேன்”, என்றாள்.
“சரி இது என்ன கோலம்?”, என்று கேட்டவனின் பார்வை அவளது மேனியில் பதிய தான் இருக்கும் கோலமே அப்போது தான் அவளுக்கு உரைத்தது. தன்னை மறைக்க அவன் மீதே சாய்ந்து கொண்டாள். அவன் கரங்கள் அவள் முதுகில் பதிய “இப்படியா டி கதவை திறந்து வச்சிட்டு டிரஸ் மாத்துவாங்க?”, என்று கேட்டான்.
“அதுவும் நல்லது தான். சூப்பர் தரிசனம்”, என்று சொன்னவனின் கரங்கள் அவளுடைய ஆடையில்லா தேகத்தை மீட்டியது.
அவன் உணர்வுகள் விழித்துக் கொள்வதை உணர்ந்தவள் “எங்கயோ போகணும்னு சொன்னீங்க?”, என்று கேட்டாள்.
“ஐயோ ஆமா, கோவிலுக்கு போணும்னு நினைச்சேன். உன்னை இப்படி பாத்ததும் சகலமும் மறந்துட்டு. சரி நைட் பாத்துக்கலாம். நான் குளிச்சுட்டு வரேன். நீ கிளம்பு”, என்று சொல்லி விட்டுச் சென்றான். அவளும் சிறு புன்னகையுடன் கிளம்ப ஆரம்பித்தாள்.
அடுத்த நாள் காலையில் இருந்தே ஒரு மாதிரி இருந்தது பூங்கொடிக்கு. அவன் கிளம்புவது வரை தன்னைச் சமாளித்துக் கொண்டவள் அவன் வேலைக்குச் சென்றதும் சோர்ந்து போய் படுத்து விட்டாள்.
எப்போதுமே பதினொரு மணி போல அன்னைக்கு அழைக்கும் பூங்கொடி வீட்டில் இருக்கும் அனைவரிடமும் பேசி விட்டு வைக்க ஒரு மணியாவது ஆகும்.
இன்று அவள் அழைக்காததால் மணியம்மையே மகளை அழைத்தார். அதை எடுத்து “சொல்லு மா”, என்றாள்.