உடனே தந்தையை தான் திரும்பிப் பார்த்தான். அவர் “இதுவும் இனி நம்ம குடும்பம் தான் மாறா. போயிட்டு வா”, என்று அனுப்பி வைத்தார்.
தோப்புக்கு சென்ற மணிமாறனின் மனதில் ஒரு வித குளிர்ச்சி வந்தது. அந்த இடத்தை ரசித்துப் பார்த்த படி வரதனுடன் சென்றான்.
அறுவடைக்கு தயாராக நிற்கும் நெல் மணிகளும், நெல் வயலின் வரப்பில் வானுயர உயர்ந்து நிற்கும் தென்னை மரங்களும் அழகு என்றால், தோப்பின் ஓரத்தில் நானும் உனக்கு நிகர் தான் என்று வளர்ந்து கிடக்கும் பனை மரங்களும் அழகு தான்.
ஒரு பக்கம் கடலைச் செடி, மற்றொரு பக்கம் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்த பூக்கள் என மாறனின் கண்ணை மட்டும் அல்ல மனதையும் சேர்த்தே கவர்ந்தது. சிறிது நேரத்தில் கதிரவனை கேசவன் அங்கே அழைத்து வர அவர்கள் பின்னேயே தம்பிதுரையும் மணிவாசகமும் வந்தார்கள்.
ஆண்கள் அனைவரும் அங்கே நடக்கும் விவசாயம் பற்றியும் திருமணம் பற்றியும் பேச ஆரம்பித்தார்கள். தேவகி பெண்களுடன் சேர்ந்து சமையலில் உதவி செய்யலாம் என்று போக அவரை அங்கிருந்த மூன்று மருமகள்களும் செய்ய விட வில்லை. வேறு வழியில்லாமல் மணியம்மையுடன் அமர்ந்து கதை பேச ஆரம்பித்தார்.
எல்லாருமே இந்த சம்பந்தம் அமைந்ததில் சந்தோசத்தில் இருந்தார்கள். ஆனால் தன்னுடைய அறையில் சோகச் சித்திரம் போல அமர்ந்திருந்தாள் பூங்கொடி.
மதிய உணவு பரிமாறும் போது பூங்கொடியை யாரும் வெளியே வர விட வில்லை. அவள் இருக்கும் நிலையில் வெளியே வந்து ஏதாவது பேசி காரியம் சொதப்பி விடக் கூடாது என்பதில் அவளது வீட்டினர் உறுதியாக இருந்தனர். ஆனால் அவனுக்கு தான் அவளைக் காண வேண்டும் போல இருந்தது. அவள் வெளியே வர மாட்டாளா என்று ஏங்கிப் போனான். மகனைக் கதிரவன் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.
உணவு முடிந்து அவர்கள் கிளம்பும் போது “மருமக கிட்ட சொல்லிட்டு வா டா”, என்றார் கதிரவன். அவர் அப்படிச் சொன்னால் மற்ற யாரும் அதை மறுக்க மாட்டார்கள் என்று அவருக்கு தெரியும். அதனால் மகனின் ஆசையை நிறைவேற்றவே அவர் அப்படிச் சொன்னார்.
அவர் அப்படிச் சொன்னதும் அவன் கண்கள் மின்னியது. ஆனாலும் அவளை எப்படி உள்ளே சென்று பார்க்க என்று அவன் தயங்கி நிற்க “மேல தான் இருக்கா, போங்க மாப்பிள்ளை”, என்றான் வரதன். மணியம்மைக்கு தான் பதக் பதக்கென்று இருந்தது.
மங்களம் காதில் “இந்த சின்னக் கழுதை ஏதாவது பேசிருமோன்னு பயமா இருக்கு மா”, என்றார்.
“கவலைப் படாதீங்க அத்தை. பூங்கொடி அவ அண்ணன்களை கஷ்டப் படுத்துற மாதிரி எதுவும் செய்ய மாட்டா”, என்று அவருக்கு நம்பிக்கை கொடுத்தாள் பூங்கொடி.
ஆர்வத்துடன் மணிமாறன் மேலே செல்ல அவளும் அப்போது தான் அறையை விட்டு வெளியே வந்தாள். அவளுக்கு வயிறு பசி உயிர் போனது. தன்னை மட்டும் யாரும் உணவருந்த அழைக்க வில்லை என்ற கடுப்பில் இருந்தாள். இதற்கு மேல் தாங்காது என்று எண்ணி தான் அவள் வெளியே வந்தது. ஆனால் அவனை அந்த இடத்தில் கண்டு ஜெர்க் ஆகி அப்படியே ஆணி அடித்தது போல நின்று விட்டாள். அவள் அதிர்ச்சியாக நிற்க “ஹாய்”, என்று சொல்லி புன்னகைத்தான் மணிமாறன்.
பதிலுக்கு என்ன சொல்ல என்று தெரியாமல் அவனைப் பார்த்த படியே இருந்தாள். இப்போது தான் அவனைப் பார்க்கிறாள். அவள் பயந்தது போல எல்லாம் இல்லாமல் சினிமா ஹீரோ போல இருக்கும் அவனையே பார்த்தாள். அவனும் அவளையே ஆர்வமாக பார்க்க அவள் தலை குனிந்து கொண்டாள்.
“என்ன பயமா? எதுவும் பேச மாட்டியா?”, என்று அவன் கேட்க தலை குனிந்து கொண்டாள்.
…….
“என் கிட்ட என்ன பயம்? நான் அந்த அளவுக்கு ஸ்ட்ரிக்ட் ஆபிசர் எல்லாம் இல்லை. கொஞ்சம் நிமிந்து தான் பாரேன். பாக்க அவ்வளவு கொடுமையாவா இருக்கேன்?”, என்று அவன் கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். உண்மையிலே அவன் அவ்வளவு அழகாக இருந்தான். அவளது கற்பனைத் தோற்றத்துக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அந்த நேரம் அவன் மேல் இருந்த கோபம் எல்லாம் காணாமல் போய் தன் வசம் இழந்து படபடப்புடன் நின்றாள். அவன் அவளையே பார்க்கவும் அவள் மீண்டும் தலை குனிந்து கொண்டாள்.
“எனக்கு உண்மையிலே உன்னை ரொம்ப புடிச்சிருக்கு கொடி. இனி நான் உன்னை அப்படி தான் கூப்பிடுவேன்”, என்று அவன் சொல்ல அவனுடைய புது வித அழைப்பில் உடல் முழுக்க ஏதோ ஜிவ்வென்ற உணர்வு பரவியது போல இருந்தது அவளுக்கு.
அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் பார்த்ததும் அவன் முகம் மலர்ந்து போனது. அவன் பார்வையில் அவள் மீண்டும் தலை குனிந்து கொண்டாள். அவனுடன் கண்ணாம்பூச்சி ஆட்டம் நடத்திக் கொண்டிருந்தாள் அவள். அவளது தடுமாற்றம் அவனுக்கு ரசிக்கும் படியாக இருந்தது. தன்னைக் கண்டு ஒரு பெண் வெட்கப் பட்டு குனிந்தால் அது அவனுடைய ஆண்மைக்கு கர்வத்தைக் கொடுக்கும் நிகழ்வு அல்லவா?
அவளுக்குமே இந்த தடுமாற்றம் புதியது தான். அவள் கல்லூரியில் ஆண்களும் படிக்கிறார்கள். “டேய் தினேஷ், இந்த பேப்பரை எல்லாருக்கும் கொடு. டேய் வசந்த், இன்னைக்கு உங்க வீட்ல என்ன சாப்பாடு டா?”, என்றெல்லாம் ஆண்களிடம் பேசி இருக்கிறாள் தான். அப்போதெல்லாம் அவளுக்கு எந்த தயக்கமும் தடுமாற்றவும் வந்ததில்லை. ஆனால் இவனைக் கண்டதும் தலை குனிந்து நிற்பது எல்லாம் அவளுக்கே புதியதாக தான் இருந்தது.
அவன் பார்வையை சந்திக்க முடியாமல் விழி தாழ்த்திக் கொள்வது அவளுக்கே வியப்பாக தான் இருந்தது. “எதுவும் பேச மாட்டியா?”, என்று கேட்டான் மணிமாறான்.
அவன் கேள்வியில் அவள் லஜ்ஜையுடன் தன்னுடைய உதட்டை பற்களால் கடித்துக் கொள்ள அவன் அதையும் ரசனையாக பார்த்து வைத்தான்.
“கடவுளே இவன் இங்க இருந்து போக மாட்டானா? இவன் முன்னாடி நிக்குறது அவஸ்தையா இருக்கே?”, என்று எண்ணிக் கொண்டாள்.
அவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் பார்வையைக் கண்டு அவன் நேரம் காலம் தெரியாமல் கண்ணைச் சிமிட்டி வைக்க அவ்வளவு தான் அவள் தலை குனிந்து விட்டது.
“சரி கொடி, நேரம் ஆச்சு. நான் கிளம்புறேன்”, என்றான். அவளை அறியாமலே அவள் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தது. .
மறுபடியும் அவள் தலை குனிய “கொடி”, என்று மென்மையாக அழைத்தான்.
“ம்ம்”
“நீ ரொம்ப அழகா இருக்க. எனக்கு உன் கிட்ட நிறைய பேசணும் போல இருக்கு. ஆனா இப்ப முடியாது”, என்று அவன் வெளிப்படையாக வழிய அவள் திணறிப் போனாள். அவனோ தானா இப்படி ஒரு புதுப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணினான்.
கீழே இருந்து கதிரவன் அழைக்கும் குரல் கேட்கவும் “நான் வரேன்”, என்றவன் திரும்பி நடந்தான். அவள் தயக்கம் உதறி அவனையே பார்த்தாள். அவன் கடைசி படியில் இறங்கும் போது அவள் தலையை எட்டி அவனைப் பார்க்க அவன் கண்கள் மீண்டும் அவளைக் கண்டு சிமிட்டியது.
படக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள். அவன் சிரிப்புடன் கிளம்பிச் சென்று விட்டான்.
அவன் என்னமோ சாதாரணமாக கிளம்பிச் சென்று விட்டான் தான். ஆனால் அவளால் தான் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஏதோ ஒரு படபடப்பு, உள்ளுக்குள் குறுகுறுப்புடன் அமர்ந்திருந்தாள். அவள் திருமணத்தை வெறுத்தாள் தான். ஆனால் அவளால் மணிமாறனை வெறுக்க முடியவில்லை.
அவனது அழகா, அவனது பேச்சா, ஏதோ ஒன்று அவனை அவளுக்கு பிடிக்க வைத்திருந்தது. அவன் தன்னிடம் தனியே வந்து திருமணத்திற்கு விருப்பம் கேட்க வில்லை என்றெல்லாம் அந்த நிமிடம் மறந்தே விட்டாள். பசித்த வயிறு கூட அடங்கிப் போயிருந்தது.
“பூவு, டிரஸ் மாத்திட்டு சாப்பிட வா”, என்று அழைத்தாள் மைதிலி. “எனக்கு வேண்டாம் அண்ணி. பசிக்கலை”, என்றவள் உடை கூட மாற்றாமல் கட்டிலில் விழுந்தாள். அவள் மனதை மணிமாறனே ஆக்ரமித்திருந்தான்.
அதற்கு அடுத்து வந்த நாட்களில் அவளுடைய வீடே பரபரப்பாக தான் இருந்தது. யாராவது ஒரு ஆள் திருமணத்தை முன்னிட்டு வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தார்கள்.
அதன் பின் ஒரு நாள் துணி எடுக்கச் சென்றார்கள். யாரும் பூங்கொடியை அழைத்துச் செல்ல வில்லை. அதே போல மணிமாறனும் அங்கே வரவில்லை. வேலை இருக்கிறது என்று சொல்லி விட்டு சென்று விட்டான். அனைவரும் துணி எடுக்கச் செல்ல பூங்கொடி வரதனுடன் கல்லூரிக்குச் சென்று பிரின்சிபாலை சந்தித்தாள்.
திருமணத்திற்கு வாழ்த்து சொல்லிய அவர் படிப்பை எப்படியாவது முடிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். அதன் பின் தன்னுடைய கிளாசுக்கு வந்து அனைவருக்கும் சொல்லி விட்டு ஹாஸ்டல் சென்றாள். அங்கே அவளது உடமைகளை அள்ளி காரில் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள். ஆனால் வீட்டில் யாரும் வந்திருக்க வில்லை. அவர்கள் துணி எடுத்து விட்டு வீட்டுக்கு வரும் போது இரவு மணி பத்து அடித்தது.
அதற்கு அடுத்த நாள் அவளுடைய அளவு ஜாக்கெட்டும், வளையல், மோதிரத்துக்கான அளவையும் வாங்க வீட்டுக்கே வந்தான் மணிமாறன். கதிரவன் தான் எல்லா அளவுகளையும் வாங்கச் சொல்லி, கூடவே அவனை மருமகளையும் பார்த்து வரச் சொல்லி அனுப்பினார். அவனும் சந்தோஷமாக அவர்கள் வீட்டுக்கு வந்தான்.