“கொடி”, என்று கிசுகிசுப்பாக அழைத்தான். அவள் அப்போதும் அவன் நெஞ்சிலே முகம் புதைத்து இருக்கவும் அவனது ஆசை மனமும் அவனைத் தூண்டியது,
அவளது இடையை இன்னும் இறுகப் பற்றி அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தான். அவன் உதடுகள் அவளுடைய கழுத்தில் பதிந்தது. அவனது ஈர இதழ்கள் அவளுக்குள்ளும் குறுகுறுப்பை மூட்டியது. அவனது சூடான மூச்சு அவளுக்குள் அனலை உருவாக்கியது. அது கொடுத்த தாக்கத்தில் அவனிடம் இருந்து விலக முயன்றாள். முயல மட்டும் தான் அவளால் முடிந்தது.
“ஒரே ஒரு நிமிஷம் அப்படியே இரு பேபி”, என்று கிறக்கமாக சொன்ன மணிமாறன் அவள் முகம் நோக்கி குனிந்தான். அவள் என்ன என்று உணரும் முன்பே அவன் இதழ்கள் அவள் இதழ்களைத் தீண்டியது. அவளுடைய கனிந்த அதரங்களை அவனுடைய முரட்டு இதழ்கள் ஆதரவாக தழுவிக் கொண்டது. திடீரென்று அவன் இப்படி செய்வான் என்று அவள் நினைக்கவே இல்லை.
அவன் முத்தத்தில் அவள் சித்தம் கலங்கி இருக்க அவன் கரம் அவள் வெற்றிடையை மெல்ல வருடியது. அதன் மென்மையில் அவன் முத்தத்தின் வேகம் கூட ஆரம்பிக்க மூச்சு விட முடியாத நிலையில் அவனை பட்டென்று விலக்கினாள்.
மோகத்தின் உச்சியில் நின்றவன் அவள் விலகலில் சுயத்தை அடைந்தான். ஆழ மூச்செடுத்து தன்னுடைய உணர்வுகளை அடக்கியவன் “சாரி”, என்று சொல்லோடு குளியல் அறைக்குள் புகுந்து விட்டான். அவன் தந்த முத்தத்தில் அவளுடைய உதடுகளில் ஈரம் இன்னும் மிச்சம் இருப்பது போல தோன்றி வைத்தது அவளுக்கு.
“என்ன நடந்தது? அவன் முத்தமிட்டதும் எனக்குள்ள நடந்த உணர்வுக்கு பேர் என்ன? இப்ப நான் விலகலைன்னா என்ன நடந்துருக்கும்?”, என்று அவள் தன்னையே மறந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள். ஷவரின் அடியில் நின்ற மணிமாறனுக்கு உணர்வுகள் மட்டுப்பட வெகு நேரம் ஆனது. கூடவே அவளை விட்டு எப்படி விலகி இருக்க போகிறோம் என்று கலக்கமாகவும் இருந்தது.
அவன் குளித்து முடித்து வெளியே வரும் போது அவள் அதே நிலையில் அசையாமல் இருந்தாள். அவளுடைய தன்னை மறந்த நிலையைப் பார்த்தவனுக்கு அவனது தவறு புரிந்தது. தனக்கே இப்படி இருந்தால் அவளுக்கு எப்படி இருக்கும் என்று எண்ணியவனுக்கு அவளை சரி செய்வது தன்னுடைய கடமை என்று புரிய “ஏய் கொடி, கிளம்பு காலேஜ்க்கு நேரம் ஆச்சு”, என்றான்.
அவன் அப்படிச் சொன்னதும் நடப்புக்கு வந்தவள் அவன் முகம் கூட பார்க்காமல் முகம் கழுவச் சென்றாள். சற்று முன் நடந்த நிகழ்வால் அவனை நிமிர்ந்து பார்க்கவே அவளுக்கு தயக்கமாக இருந்தது.
அவனுக்கும் அதன் தாக்கம் இருக்க தான் செய்தது. “இங்கேயே இருந்தால் அவ்வளவு தான்”, என்று எண்ணியவன் கீழே சென்றான். பின் மீண்டும் அவன் மேலே வரும் போது அவள் துப்பட்டாவை அணிந்து கொண்டிருந்தாள். அந்த துணியாக தான் பிறந்திருக்க கூடாதா என்ற ஏக்கம் எழ “எனக்கு பைத்தியம் தான் பிடிக்குது”, என்று எண்ணிக் கொண்டு “கொடி, அத்தை கிட்ட சொல்லி நம்ம ரெண்டு பேருக்கும் லஞ்ச் பேக் கட்டச் சொல்லு”, என்றான்.
அவனை எதிர்க் கொள்ள தைரியம் இல்லாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்ற படி அறையில் இருந்து ஓடிப் போனாள்.
கீழே உணவுப் பை தயாராக இருக்க அவன் கிளம்பி வந்ததும் அவளும் பெரியவர்களிடம் சொல்லி விட்டு கிளம்பினாள். அவன் அப்படியே வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் ஜீப்பில் ஏறி அமர்ந்து அதைக் கிளப்பினான். அவன் அருகே ஏறி அமர்ந்தாள் பூங்கொடி. காலேஜை நோக்கி ஜீப் சென்றது. இருவருக்குள்ளும் மௌனமே ஆட்சி செய்தது.
காலேஜ் வந்ததும் ஜீப்பை நிறுத்தி விட்டு அவனும் இறங்கினான். அவளும் பையை எடுத்துக் கொண்டு இறங்கினாள்.
ஆங்காங்கு நின்றவர்கள் போலீஸ் ஜீப்பையும் இவர்களையும் ஆர்வமுடன் பார்க்க போலீஸ் ஜீப்பில் அவனுடன் காலேஜ் வந்தது கெத்தாக தான் இருந்தது பூங்கொடிக்கு. அவள் இறங்கியதும் “நீயே போய்க்கோ”, என்றெல்லாம் பொறுப்பில்லாமல் சொல்லாமல் அவளுடனே பிரின்சிபாலைப் பார்க்க வந்தான். அந்த பொறுப்புணர்ச்சியில் அவன் பால் அவளுடைய மனம் மேலும் சாய்ந்தது.
பிரின்சிபாலுக்கு ஏற்கனவே அவர்கள் திருமண விஷயம் தெரியும் என்பதால் சந்தோசமாகவே அவர்களை வரவேற்று அமர வைத்தார். இரண்டு வாரம் லீவ் எடுத்ததற்கு மன்னிப்பு கேட்டு, இனி லீவ் எடுக்க மாட்டாள் என்று ஒப்புதல் சொன்னான் மணிமாறன். நன்றாக படிப்பவள் என்பதால் அவரும் வேறு எதுவும் சொல்ல வில்லை.
அவளை கிளாசுக்கு போகச் சொன்னார். இருவரும் அவரின் அறையை விட்டு வெளியே வந்தார்கள். “உன் கிளாஸ் எங்க இருக்கு கொடி?”, என்று கேட்டான்.
“அதோ அங்க”, என்று அவள் கையைக் காட்ட “சரி நீ போ”, என்றான்.
அவளும் தலையசைத்து விட்டு கிளாசுக்கு செல்ல அதன் பிறகு தான் அவன் அங்கிருந்து கிளம்பினான்.
கிளாசுக்கு வந்ததும் நண்பர்கள் அனைவரும் அவளை மொய்த்துக் கொண்டார்கள். சில கேலிகளில் அவளுடைய முகம் குங்குமமாக சிவந்தது. ஆண் நண்பர்கள் வாழ்த்து சொன்னார்களே தவிர வேறு எந்த கிண்டலும் செய்ய வில்லை. பாடம் எடுக்க வந்த ஆசியர்களும் அவளுக்கு வாழ்த்து சொல்லி விட்டு பாடம் எடுக்க ஆரம்பித்தார்கள்.
இடை இடையே இத்தனை நாள் நடந்த கதையை எல்லாம் ரேவதியிடம் சொன்னாள் பூங்கொடி. அவளுக்கும் தோழிக்கு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று எண்ணி சந்தோசமே.
அதன் பின் நாட்கள் வேகமாக நகர்ந்தது. தினமும் அவளை காலேஜில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்வான் மணிமாறன். மாலை கதிரவன் அவளை அழைக்க வருவார். சில நேரம் அவனும் வருவான். மணிமாறன் வந்தால் போதும். அவனை அவளுடைய கிளாஸ் பெண்களே சைட் அடிப்பார்கள். அதைக் கண்டு உள்ளுக்குள் ஒரு வெறியே அவளுக்கு எழும்.
“நீங்க எதுக்கு வந்தீங்க? மாமாவை வரச் சொல்ல வேண்டியது தானே?”, என்று ஒரு நாள் அவள் எரிந்து விழ அவளை ஒரு பார்வை பார்த்தான். அதன் பிறகு அவள் அவனை எதுவும் சொல்வதில்லை. அவன் பார்வையில் இருந்தது என்ன கோபமா? ஆதங்கமா? என்று இப்போது வரை அவளுக்கு தெரியவில்லை.
கதிரவன் அழைக்க வந்தார் என்றால் அவருடன் பேசிய படியே காரில் செல்வாள். அதன் பின் தேவகி அவளைக் கவனிக்க அவர்களுடன் இரவு உணவு உண்ணுபவள் தன்னுடைய அறைக்குச் செல்வாள். இரவு மணிமாறன் வேலை முடிந்து வரும் போது அவள் தன்னுடைய புத்தகத்தை தூக்கி வைத்து படித்துக் கொண்டிருப்பாள்.
அவன் குளிக்கச் செல்ல அவளோ அவனுக்கு உணவை எடுத்து வைக்கச் சல்வாள்.
அவன் குளித்து முடித்து வரும் போது சூடான தோசையையோ சாப்பாத்தியையோ பரிமாறுவாள். அவள் மறுக்க மறுக்க அவளுக்கு ஒரு வாய் ஊட்டியும் விடுவான் மணிமாறன்.
அதன் பின் அறைக்குள் வந்ததும் “குட் நைட்”, என்று சொல்லி அவள் படுக்க அவனுக்கு தான் தவிப்பாக இருக்கும்.
முதல் நாள் போல இப்போதெல்லாம் அவளை அவன் நெருங்குவதில்லை. அவளை நெருங்கினால் அவனுக்கே ஆபத்தாக முடிகையில் அவன் ஏன் அதைச் செய்யப் போகிறான்?
அவன் எதனால் முன்பு போல தன்னிடம் நெருக்கமாக இல்லை என்று அவளுக்குத் தோன்றினாலும் அதை பெரிதாக எடுக்க வில்லை. அவன் அருகாமையில் இருந்து தப்பித்துக் கொண்டிருப்பவள் ஏன் அதை நினைக்க போகிறாளாம்?
பூங்கொடி கல்லூரிக்கு சென்று வருவதில் அவளுடைய வீட்டில் உள்ளவர்களும் சந்தோஷப் பட்டார்கள். மகளின் ஆசை நிறைவேறுகிறது என்ற திருப்தி வந்தது. அவ்வப்போது அவர்களைப் பார்க்கவும் பூங்கொடியை அழைத்துச் சென்றான் மணிமாறன்.
ஆனால் அவன் வேலை காரணமாக அவனால் அங்கே தங்க முடிந்ததில்லை. அவளுக்கு விடுமுறை இருக்கும் நாள் காலையில் அழைத்துச் செல்பவன் அவளை அங்கே விட்டுவிட்டு வேலைக்குச் செல்வான்.
பின் மீண்டும் மாலையில் சென்று அவளை அழைத்து வருவான். இப்போதெல்லாம் அவள் மணியம்மையை தேடுவதே இல்லை. அவள் அருகில் மாறன் படுத்திருப்பதாலோ? இல்லை அவனது வாசனை அந்த அறை முழுவதும் நிரம்பி இருப்பதாலோ? அவனது அருகாமைக்கு பழகி இருந்தாள். ஆனால் விலகிப் படுத்திருப்பது எதனால் என்று சில நேரம் அவளே எண்ணுவாள்.