Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

46. ஸ்ரீ - பிரியங்களின் நிழலில்

நிழல்-3

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்

மு.வ விளக்க உரை: ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.

தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கல்லூரிக்குள் தேவ ரஞ்சனா நடக்கத் தொடங்கிய நேரம் அவளை இடிப்பது போல் கைகள் நடுங்க வண்டியை ஓட்டி வந்த சாருகேஷ் கடைசி நிமிடத்தில் அவள்புறம் இருந்து வண்டியைத் திருப்பி நிறுத்தியிருந்தான்.

“இடியட் சர்க்கஸ் காட்டிட்டு இருக்க?”



Advertisement

“இடியட்டா என்னையா சொன்னீங்க?”

“நீ தான இடிக்க வந்த அப்போ உன்னை சொல்லாம?”

“சாரி மேம்..”, என்றவனின் கண்களில் குறும்பு நிறைந்திருக்க சம வயதுடைய தன் தம்பியின் கண்களில் இப்படியெல்லாம் சிறு பிள்ளைத் தனத்தை பார்த்ததேயில்லை என்று மனதிற்குள் தோன்றியது தேவ ரஞ்சனாவிற்கு.

Advertisement

“பார்த்து போ..”, என்றவள் அங்கிருந்து நகர வேகமாய் அவளருகில் ஓடி நடந்தவனாய்,

Advertisement

“மேம் நீங்க எந்த ப்ளாக் உங்களைப் பார்த்ததேயில்லையே?”, என்றதில் நின்று அவனை மேலும் கீழுமாய் பார்த்தவள் அமைதியாய் நடக்க மீண்டுமாய் அவனே,

“மேம் ஜிகே கொஸ்டின்னு நினைச்சுக்கோங்க. பதில் சொல்லுங்களேன்.”

“அத்தனை வானரங்களும் டாக்டராகி யாரை காப்பாத்துமோ..”, என்று முனகியவள் அவன் புறம் தலையைத் திருப்பி,

Advertisement

“ஹெச் ஆர்..”, என்று விட்டு நகர்ந்திருந்தாள். அவ்வளவு நேரம் தள்ளி நின்றிருந்த ஐஷு அவனை நோக்கி ஓடி வந்தாள்.

“பேபி சாரி டா.. செம டோஸ்ஸா?”

“ஏன் டி வண்டியில் இருந்து குதிச்ச..”

“சும்மா விளையாட்டுக்கு..”

“உன்னை நம்பி என் வாழ்க்கையே வேற கொடுக்க போறேன். பார்த்து விளையாடு மா.”

“டேய்!!!”

“சரி அவங்க ஹெச் ஆராம். ப்ரொபசரை விட டெரரா இருக்காங்க டி.”

“ரொம்ப முக்கியம் இப்போ. வாடா போலாம்.”, என்றவளோடு வகுப்பறைக்குச் சென்றான் சாருகேஷ்.

ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் காத்யாயினியை சந்திக்க தரகர் வந்திருக்க பெண்ணின் புகைப்படத்தோடு ஜாதகம் மற்றும் மற்ற விவரங்கள் அடங்கிய கோப்பை அவர் முன் மேசையில் வைத்து விட்டு விவரங்கள் கூறினார்.

“உங்க வசதிக்கு ஏத்த குடும்பம் மா. ஒரே பொண்ணு நல்லா படிச்சுருக்கு. அவங்களும் உங்க கூட சம்மந்தம் வைச்சுக்க ரொம்பவே ஆர்வமா இருக்காங்க.”, என்றதில் பெண்ணின் புகைப் படத்தைப் பார்க்க நவநாகரிக யுவதியாய் நின்றிருந்தவள் அழகி என்றாலும் கண்ணுக்கு நிறைவாய் தோன்றவில்லை அவருக்கு.

அதிலும் தன் மகனுக்கு பொருத்தமானவள் என்ற திருப்தி எழவேயில்லை. அவரது யோசனை தாங்கிய முகத்தை கவனித்தவராய்,

“என்னாச்சு மா?”

“வேற எதுவும் இடம் இருக்கா தரகரே?”

“உங்க அளவுக்கு சமமா எதுவும் இல்லைங்க..”

“அதான் இங்கேயே போதும்ங்கிற சொத்து இருக்கே. உங்க கிட்ட இருக்குற போட்டோ எல்லாம் கொடுங்க நான் பார்க்குறேன்.”, என்று அவர் கேட்டதில் மறுக்க முடியாதவராய் தன்னிடம் இருப்பதைக் கொடுத்தார்.

அனைத்தையும் பார்த்து வந்தவரின் கண்கள் தேவ ரஞ்சனாவின் புகைப்படத்தில் சில நொடிகள் அதிகமாய் நிலைத்தது.

மீண்டுமாய் ஒரு முறை பார்த்தவருக்கு வேறு எதிலும் திருப்தி வராமல் அவளின் புகைப்படத்தைக் காட்டி விசாரித்தார்.

“இந்த பொண்ணு பேர் என்ன தரகரே?”

“பொண்ணு பேரு தேவ ரஞ்சனா. ஆனால் இது உங்களுக்கு ஒத்தே வராத இடம் மா. பெத்தவங்க இல்ல. இந்த பொண்ணும் தம்பியும் தான்.

நடுத்தர குடும்பம் இந்த பொண்ணு சம்பளத்தில் தான் குடும்பமே ஓடுது.”, என்றதில் யோசனையாய் இருந்தவர்,

“இந்த பொண்ணோட ஜாதகத்தைக் கொடுத்துட்டு போங்க. நான் பார்த்துட்டு சொல்றேன்.”

“அம்மா?!”

“பார்ப்போம் ஜாதகம் பொருந்தனுமே. கொடுங்க.”, என்றவர் அவளது விவரங்களை வாங்கி வைத்துக் கொண்டார். அடுத்த இரு தினங்களில் குடும்ப ஜோசியரிடம் பொருத்தம் பார்க்க நன்றாக பொருந்தியிருப்பதாய் கூறியதில் அவருக்கு பரம திருப்தி.

பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணங்கள் எப்போதுமே அந்த ஒரு நொடி பிடித்தத்தில் முடிவு பெறுவது தானே?

அந்த வகையில் காத்யாயினியை கவர்ந்திருந்தாள் தேவ ரஞ்சனா.

மகனிடம் விவரம் கூறுவதற்கு முன் பெண் வீட்டில் விஷயத்தைக் கூறுமாறு காத்யாயினி கூறிட அவினாஷிடம் அவர் விவரம் கூற மாப்பிள்ளை யாரென அறிந்ததில் வாயடைத்துப் போய் விட்டான்.

அவர்களுக்கே சம்மதம் எனில் நமக்கு மறுப்பதற்கு என்ன இருக்கிறது என்ற எண்ணத்துடன் தமக்கையிடம் பேசி விட்டு கூறுவதாக கூறினான்.

மறுநாள் மதியம் தேவ ரஞ்சனாவிற்கு நேர்முகத் தேர்வு. அந்த பதட்டத்தில் காலை உணவை சமைத்துக் கொண்டிருந்தவளின் முன் வந்து நின்றான் அவினாஷ்.

“அக்கா..”

“சொல்லு டா..”

“ஒரு வரன் வந்திருக்கு..”

“காலையிலேயே மூட் அவுட் பண்ணாத அவி. போ வேலையைப் பார்த்துட்டு.”

“அக்கா அவங்களுக்கு உன்னை ரொம்ப பிடிச்சுருக்காம். ஜாதகமும் பொருந்திருக்காம். அப்பறம் என்னக்கா?”, என்ற தம்பி பார்ப்பதற்கு மிட்டாய் கேட்டு நிற்கும் குழந்தை போல் தோன்றியது அவளுக்கு.

“இது இருந்தா போதுமா கல்யாணம் பண்ண?”

“வேற என்ன?”, என்றவனுக்கு புரிய வைக்கும் பொறுமை இல்லாதவளாய்,

“சரி மாப்பிள்ளை போன் நம்பர் கொடுத்துட்டு போ. நான் பார்த்துக்குறேன்.”

“க்கா அது..”

“நான் பேசிட்டு சொல்றேன் டா கொடுத்துட்டு கிளம்பேன்.”, என்றவள் கத்தியதில் அவள் கோவம் உணர்ந்தவனாய் ஜாதகத்தோடு இருந்த போன் நம்பரை அவளிடம் கொடுத்து விட்டு கல்லூரிக்கு கிளம்பியிருந்தான்.

இருக்கும் வேலையில் இது வேறா என்ற எரிச்சலோடு அவன் கொடுத்த எண்ணிற்கு அழைத்து விட்டு காத்திருந்தாள் தேவா.

முழு அழைப்பும் சென்று நின்றிருக்க கடுப்பை கட்டுப் படுத்தியவளாய் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய இப்போது அழைப்பு ஏற்கப்பட்டது.

“ஹலோ!”, என்ற கம்பீரமான பெண் குரலில் ஒரு நொடி நிதானித்தவள் பின்,

“வணக்கம் தரகர் உங்க நம்பர் கொடுத்தார்.”, என்று ஸ்பீக்கரில் வந்த குரலில் உணவு மேசையில் அமர்ந்திருந்த அண்ணன் தம்பி இருவரும் தாயைப் பார்க்க காத்யாயினி அமைதியாய் அவளுக்கு பதில் அளித்தார்.

“சொல்லு மா என்ன விஷயம்?”

“சாரி உங்களுக்குப் பிடிச்சுருக்கு ஜாதகமும் பொருந்திருக்குனு தரகர் சொன்னாராம். என் தம்பி சின்ன பையன் ஏதோ விவரமில்லாம இதெல்லாம் பண்ணிட்டு இருக்கான்.

எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்குற ஐடியா இல்ல. சோ இந்த பேச்சை இதோட விட்டுரலாம்.”

“…”

“ஹலோ?”

“ஆங். லைனில் இருக்கேன் மா. நான் யாரு என்னனு தரகர் சொல்லலையா?”

“எனக்குத் தெரியலைங்க. தம்பி தான் பேசிருப்பான். நான் நம்பர் மட்டும் தான் வாங்கினேன். இப்போதைக்கு கல்யாணம் பண்ற அளவுக்கு என் பண நிலைமையும் இல்ல மனநிலையும் இல்ல.

உங்களுக்குத் தேவையில்லாத சிரமம் கொடுத்ததுக்கு மன்னிச்சுருங்க.”, என்றவள் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

தாயின் பதிலைக் கூட கேட்காமல் அழைப்பைத் துண்டித்தவளை நினைத்து அதிரனுக்கு சுர்ரென கோபம் எழுந்தது.

“என்ன மா இதெல்லாம்?”

“அதி கண்ணா..”

“யாரு என்னனு தெரியாம இப்படி பேசுறாங்க? இதெப்படி ஒத்து வரும்னு நினைச்சீங்க?”

“அதி எனக்கு என்னவோ இந்த பொண்ணு உனக்கு பொருத்தமா இருப்பானு தோணுது.”

“பேசுற பேச்சே ஒத்துப் போகலைங்கிறேன். நீங்க என்னவோ பேசிட்டு இருக்கீங்க?”, என்றதில் செவிலியரிடம் தனது கபோரிடில் இருந்து அவளின் புகைப்படத்தை எடுத்துத் தருமாறு கூற அதை வாங்கி மகனின் புறம் திருப்பி வைத்தார்.

அதிரன் நிர்மலமான முகத்தோடு அதை ஒரு நொடி பார்த்து பார்வையை விலக்கி விட சாருகேஷ் வேகமாய் எழுந்து வந்து பார்த்து கண்கள் விரித்தான்.

“வாவ் நம்ம ஹெச் ஆர் மேடம்!”, என்றவன் வாய் விட்டே கூறிட அண்ணனின் பார்வையில் தன்னால் போய் இடத்தில் அமர்ந்து கொண்டான்.

“உன் காலேஜா கேஷா?”

“ஆமா மாம். செம டெரர். அண்ணா மாதிரியே.”, என்றவன் கண் சிமிட்டிச் சிரித்தான்.

“பேர் என்ன மாம்?”

“தேவ ரஞ்சனா! நல்லாயிருக்குல?”

“ம்ம் யா..”, என்றவன் அதிரன் எழுந்த வேகத்தில் வாயை கப்பென மூடிக் கொண்டான்.

அதிரன் அவன் போக்கில் தனது வேலையைப் பார்க்க கிளம்பி விட இங்கு தாயும் இளைய மகனும் தேவாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

ANA கம்பெனியின பண பரிவத்தகப் பிரிவிற்கான தலைமை கணினி அலுவலர் நேர்முகத் தேர்விற்கு தான் தேவ ரஞ்சனா வந்திருந்தாள்.

ஏற்கனவே அவளது விவரங்களைக் கொடுத்திருக்க அதைப் பார்த்த பின் தான் அழைத்திருந்தனர்.

அவளோடு சேர்த்து இன்னும் ஐந்து ஆறு பேர் இருந்தனர். அனைவருமே ஆண்கள் அதிலும் 40-45 வயதிற்கு மேற்ட்டவர்கள்.

அதிலேயே சற்று நம்பிக்கை போயிருந்தது தேவாவிற்கு.
அனுபவம் மிக்க ஆண்களுக்கு நடுவில் தன்னை தேர்வு செய்வது கடினம் என்ற எண்ணத்தில் தான் அமர்ந்திருந்தாள்.

இன்டர்வியூ பேனலில் மூன்று பேர் இருக்க கிட்டதட்ட வசந்திற்கு அடுத்த கட்ட பணியிடம் என்ற நிலையில் அதிரன் வீடியோ காலின் மூலம் நேர்முகத் தேர்வை கவனித்திருந்தான்.

ஒவ்வொருவராய் உள்ளே வந்து போக நான்காவதாய் வந்தவளின் பெயரைக் கேட்டவன் சட்டென கோப்பில் வைத்திருந்த பார்வையை நிமிர்த்தி கணினியைப் பார்த்தான்.

காலையில் பார்த்த புகைப்படத்திலிருந்த பெண்ணின் முகத்தை நினைவு கூற விளைந்தவனுக்கு நியாபகத்தில் வராமல் போக தாயை கவனித்துக் கொள்ளும் செவிலியருக்கு அழைத்து அந்த புகைப்படத்தை தனக்கு போட்டோ எடுத்து அனுப்புமாறு கூறினான்.

வாட்ஸ் அப் ஒலி சத்தத்தில் அதைப் பார்த்தவன் எதிரில் இருப்பவள் தான் அவள் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு நேர்முகத் தேர்வில் கவனம் வைத்தான்.

“எதுக்காக எங்க கம்பெனியை சூஸ் பண்றீங்க மிஸ் தேவ ரஞ்சனா?”

“இப்போ நான் வேலைப் பாக்குற இடத்தில் என் உழைப்புக்கு ஏத்த சம்பளம் இல்லைங்கிறது முதல் காரணம். இங்கே பணம் தான் சார் எல்லாமே!

பத்து மணி நேரம் மாடு மாதிரி வேலைப் பாத்துட்டு கிடைக்குறதை வாங்கிட்டு போக நான் சோஷியல் சர்வீஸ் பண்ணலையே?

அதுவுமில்லாம உங்க கம்பெனி கோயம்பத்தூரோட அடையாளம். நிறைய அனுபவம் கிடைக்கும். என்னோட எதிர்காலத்துக்கு உதவியா இருக்கும்.”

“இப்படி ஓபனா பணம் தான் முதல் காரணம்னு சொல்றீங்க?”

“சார் என்னோட இன்டர்வியூக்கு வந்துருக்கவங்க எல்லாமே என்னை விட எக்ஸ்ப்ரீயன்ஸ்ட் அதை விட ஆண்கள்.

இதில் எனக்கு இந்த வேலை கிடைக்கும்னு ஒரு சதவீகிதம் கூட எனக்கு நம்பிக்கை இல்லை. அதான் மனசில் படுறதை நேரடியாவே சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.”

“இதுக்கு முன்னாடி வேற இன்டர்வியூக்கு போயிருக்கீங்களா? அங்கேயும் இப்படி தான் பேசுவீங்களா?”

“இது தான் என் இரண்டாவது இண்டர்வியூ. முதல் வேலைக்காக இன்டர்வியூ போனேன் செலெக்ட் ஆனேன். அடுத்து இங்கே தான்.”

“ஒரு வேளை உங்களை செலெக்ட் பண்ணலைனால்?”

“என்னோட திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா இதே மாதிரி நல்ல வேலையை வாங்கிப்பேன்.

ஆனால் உங்க கம்பெனி ஒரு நல்ல எம்ப்ளாயியை மிஸ் பண்ணிருப்பீங்க அவ்வளவு தான்.”, என்றதில் மூவருமே லேசாய் புன்னகைத்தனர்.

“ஐ திங்க் நீங்க ரொம்பவே ஓவர் கான்பிடன்டா இருக்கீங்க மிஸ்.”

“நிச்சயமா இல்ல சார்.”, என்றவள் லேசாய் மென்னகைத்தாள்.

“ஓகே மிஸ் தேவ ரஞ்சனா. பெஸ்ட் ஆப் லக். வெளியில வெயிட் பண்ணுங்க.”, என்றதில் தலையசைத்து வெளியேறியவளைத் தான் பார்த்திருந்தான் அதிரன். அவளது நேர்மை அவனுக்குப் பிடித்தது.

அவளது தைரியம் அவனை அவள்புறம் திரும்ப வைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!