மறுநாள் அகரனுக்கு காய்ச்சல் விட்டிருந்தது. இசைக்கும் கொஞ்சம் நன்றாக இருந்தது. அதோடு அவள் ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருக்க, அவளே எதிர்பாராத வகையில் வீட்டிற்கு வந்தான் அன்புச்செழியன். அவனை திடீரென்று எதிர்பார்க்காத இசை,
“வாங்க அன்பு சார்..!” என்றாள்.
“அகரனுக்கு இப்போ எப்படி இருக்கு..?” என்றான்.
“அவனுக்கு இப்போ நல்லா இருக்கு. இருந்தாலும் வீட்லயே இருக்கட்டும்ன்னு ஸ்கூல் அனுப்பலை..” என்றாள்.
“நீங்க மட்டும் ஆபீஸ் கிளம்புற மாதிரி தெரியுதே..?” என்றான். அவனுடைய பேச்சில் முன்பு இருந்த ஒட்டுதல் இல்லாததைப் போல் இருந்தது.
“எனக்கும் இப்போ ஓகே தான் அன்பு சார். அதான் கிளம்பிட்டு இருக்கேன்..!” என்றவள்,
“நான் பிக் பாய் தானே அங்கிள். நான் மம்மிய பார்த்துப்பேன்..” என்றான் தலையை ஆட்டி ஆட்டி. அவனின் அந்த அழகில் மயங்கித்தான் போனான் அன்பு.
“அகர் ரொம்ப க்யூட், ரொம்ப சமத்து..” என்று அவனுக்கு முத்தத்தை வைக்க, அகரனும்.. அன்பின் கன்னத்தை முத்தத்தால் நிரப்பினான். இசைக்கு ஏதோ புதிதாய் இருப்பதைப் போல் இருந்தது. அன்பிடம் ஒரு வித்யாசம் தெரிந்தது அவளுக்கு. ஆனால் அது என்னவென்று விளங்கவில்லை .
“பார்த்துக்கோங்க இசை..!” என்று சொல்லிவிட்டு வந்து விட்டான்.
“இவரென்ன..? என் பையனை என்னையவே பார்த்துக்க சொல்லிட்டு போறார்..?” என்ற இசைக்கு கடுப்பாக இருந்தது. அன்பின் வார்த்தை அப்படித்தான் இருந்தது, என்னவோ அவனுடைய பையனை அவளுடைய பாதுகாப்பில் விட்டு செல்வதைப் போல.
காரில் சென்று கொண்டிருந்த அன்புச்செழியனுக்கு, இப்போது தான் மனம் கொஞ்சம் அமைதியாக இருந்தது. முடிவு எடுக்கும் வரை குழம்பிக் கொண்டிருந்த அவன் மனம், இப்போது தெளிவான ஒரு முடிவை எடுத்த பிறகு, எதற்கும் யோசிக்கவில்லை.
அன்றைய அவனுடைய நாள் முழுவதையும் வேலை எடுத்துக் கொண்டது. எப்போதும் வேலை செய்தால் களைப்பாக உணரும் அன்பு, அன்று அப்படி உணரவேயில்லை. மேலும் சந்தோஷமாகத் தான் உணர்ந்தான்.
வெளியே விளையாடிக் கொண்டிருந்த அகரன், வேகமாக வீட்டிற்குள் ஓடி வந்தான்.
“அகர் என்னாச்சு..?” என்றாள் இசை புரியாமல்.
“மம்மி.. மாமா..!” என்றான் அகர் தெளிவாக.
“மாமாவா..?” என்ற யோசனையுடன் அவனை தூக்கிக் கொண்டு வெளியே வந்த இசை அங்கு மாறன் நிற்பான் என்று நினைக்கவில்லை.
“டேய் மாறா..! வாடா, உள்ள வாடா..” என்றாள் மகிழ்ச்சியாக.
“நீதான் அங்க இருக்க மாட்டேன்னு சொல்லிட்ட..! அதான் நாங்க வந்துட்டோம்..” என்றான் மாறன்.
“வந்துட்டோம்னா..?” என்றவள் புரியாமல் வெளியே பார்க்க,
“நீயும் அங்கேயே போக வேண்டியது தானடா. நீ மட்டும் எதுக்கு இங்க வந்த..?” என்றாள் கோபமாய். அவள் எதற்கு கோபப் பட்டாள் என்று கேட்டால் அந்த கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.
“என் அக்கா வீடு இங்க இருக்கும் போது, நான் ஏன் அங்க போகணும்..?” என்றான் மாறன். ஏனோ அவனின் அந்த பதில், ரணமாகியிருந்த அவளின் மனதிற்கு மருந்தாய் இருந்தது.
“என்ன சாப்பிடுற மாறா..?” என்றாள் இசை.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்க்கா..! ஆமா, நீயேன் ஒரு மாதிரி டயர்டா இருக்க..?” என்றான்.
“அது ஒண்ணுமில்லை மாறா. நேத்து இருந்து காய்ச்சல்.. அதான்..இப்போ பரவாயில்லை.” என்றாள் இசை.
ஹாஸ்பிட்டல் போனியாக்கா..?”
“அதெல்லாம் நேத்தே போயிட்டு வந்தாச்சு மாறா. அகரனுக்கும் காய்ச்சல் தான். அவனுக்கு இப்போ சரியாகிடுச்சு. அது சரி, என்னடா திடீர்ன்னு வந்திருக்கிங்க..? இன்னைக்கு வரப் போறதா சொல்லவே இல்லையே..?” என்றாள்.
“நாங்க வரோம்ன்னு முன்னாடியே சொல்லியிருந்தா, நீ வீட்ல இருந்திருப்பியாக்கா..! இந்த வீட்டை நீ காலி பண்ணாம இருக்குறதே பெரிய விஷயம் தான்..” என்றான் உடன் பிறந்தவளின் குணம் தெரிந்தவனாய்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாதுக்கா..! அம்மா தான் சொன்னாங்க..” என்பதோடு முடித்துக் கொண்ட மாறன், அகரனோடு விளையாட ஆரம்பித்தான்.
அங்கே அன்பின் வீட்டில்,
“அதெல்லாம் முடியாது. இசை வளையல் போட நான் சம்மதிக்கவே மாட்டேன்..” என்று சங்கீதா பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சங்கீதா..? இப்படி பிடிவாதம் பிடிச்சா எப்படி..?” என்று மாதவன் முறைக்க,
“அவ சொல்றதுல என்ன தப்பிருக்கு மாதவா..? கல்யாணத்துல நாத்தனார் முறைக்கு கயலை நிக்க வச்சதே எனக்குப் பிடிக்கலை. இப்ப, இத்தனை நாள் இல்லாம, இப்ப வந்த ஒருத்தி.. என் மருமகளுக்கு வளையல் போடணும்ன்னா எப்படி..?” என்றார் சாந்தா.
“அம்மா..! நீங்க கொஞ்சம் வாயை மூடுங்க. அன்னைக்கு செல்வி எங்க இருக்கான்னு நமக்குத் தெரியாது. ஆனா, இப்போ இங்க தான் இருக்கான்னு தெரிஞ்சு போய்டுச்சு. அவளை விட்டுட்டு எப்படி செய்ய முடியும்..?” என்றான்.
“ஓடிப் போனவளை எல்லாம் கண்டுபிடிச்சு செய்யனும்னா.. நீயேண்டா அமுதாவை கண்டு பிடிக்கலை.. அவதாண்டா உனக்கு கூடப் பிறந்த அக்கா..” என்றார் சாந்தா.
இவ்வளவு பேச்சிற்கும் எதுவும் பேசாமல் அமைதியா இருந்தார் மங்கை. மாதவன் கட்டாயப்படுத்தி தான் அவர்களை அழைத்து வந்திருந்தார்.
“இவங்க இப்படி பேசுறதை கேட்டுட்டு, நீங்க வேணும்ன்னா அமைதியா இருங்கம்மா. என்னால முடியாது. நான் அக்காகிட்ட போறேன்..” என்று கயல் எழுந்து செல்ல முறபட,
“இப்ப போனா, மரியாதையா இருக்காது கயல். பேசாம உட்கார்..!” என்று மங்கை அதட்ட, வேறு வழியில்லாமல் நடந்து கொண்டிருந்த நாடகத்தைப் பார்க்க உட்கார்ந்தாள் கயல்.
“இப்ப என்னதான் சொல்ல வரீங்க..?” என்று சங்கீதா கேட்க,
“செல்வி தான் வளையல் போடுவா. இதை நான் உங்கண்ணன் அன்புகிட்டயும் சொல்லிட்டேன். அவரும் சரின்னு சொல்லிட்டார். தேவையில்லாம நீ சீன் கிரியேட் பண்ணாத..” என்றான் மாதவன்.
“சங்கீதா… என்ன பிடிவாதம் இது..? என்னமா சாந்தா…அவதான் அப்படி பேசுறான்னா.. நீங்களும் அவ பேசுறது சரின்ற மாதிரியே பேசிட்டு இருக்கீங்க..?” என்று சாந்தாவிடம் கேள்வியை கேட்டார் பல்லவன்.
“அது ஒன்னும் இல்லைண்ணா… அவ செய்றது எப்படி..?” என்று சாந்தா இப்போது கொஞ்சம் பம்மினார்.
“நல்லா கேளுங்க மாமா..! பொம்பளைங்க அவங்க இஷ்ட்டதுக்கே எல்லாம் பண்ணனும்ன்னா நாம எதுக்கு இருக்கோம்..?” என்ற மாதவனுக்கு அன்று முதல் முறையாக கோபம் அளவுக்கு அதிகமாய் வந்திருந்தது.
“இங்க பாருமா, சங்கீதா. எங்க செல்வியை இதுக்கு மேல என்முன்னாடி இப்படி பேசாதம்மா..! அவளைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கு..? அவ என்னோட மகாலட்சுமி..” என்றார் ராஜாங்கம்.
அவர் அப்படி சொன்னதும் மங்கைக்கு கண்கள் கலங்கியது. அவளுடைய பாசத்திற்கு தானே ஏங்கிக் கொண்டிருக்கிறார்.
“இசையே செய்யட்டும் சம்பந்தி. எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை..!” என்றார் பல்லவன்.
“அம்மா, இவங்க இங்க சண்டை கட்டுறதைப் பார்த்தா எனக்கு சிரிப்பா இருக்கு. முதல்ல எங்கக்கா இதுக்கு சரின்னு சொல்லனும். அது தெரியாம என்னமோ இவங்க இஷ்ட்டத்துக்கு பேசி,போனா போகுதுன்னு சொல்ற மாதிரி இருக்கு. இன்னும் செல்வியைப் பத்தி இவங்களுக்குத் தெரியலை..” என்று முனுமுனுத்தாள் கயல்.
“நான் தெரியாமத்தான் கேட்குறேன்..? உங்க அக்கா..அதான் என் பெரியம்மா எப்பம்மா திருந்துவாங்க..? திருந்துற ஐடியா இருக்கா இல்லையா..? சும்மா சொல்லக் கூடாது அவங்களுக்கு வந்த மருமகளும் அப்படியே அவங்களை மாதிரி தான்..” என்று கயல் சிரிக்க, அவளை முறைத்தார் மங்கை. அவள் உண்மையை சொல்லிக் கொண்டிருப்பதால் அவரால் அவளைத் திட்டக் கூட முடியவில்லை.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அன்புச்செழியனும் வந்து சேர்ந்தான்.
“வாங்க..!” என்று எல்லாரையும் பொதுவாய் வரவேற்றான்.
அவர்களின் முகத்தில் இருந்தே, பெரிய வாக்குவாதம் நடந்து முடிந்திருப்பது தெரிந்தது. கேட்காமலேயே அது என்னவாக இருக்கும் என்றும் தெரிந்திருந்தது. அதனால் அதை மீண்டும் கேட்கும் அளவிற்கு அவனுக்குத் தெம்பில்லை.
“பேசிட்டு இருங்க. குளிச்சிட்டு வந்திடுறேன்..” என்ற அன்பு அவன் அறைக்கு சென்று விட,
“நாங்க செல்வியை பார்த்துட்டு வந்திடுறோம் சம்பந்தி..” என்ற மங்கை, கயலுடன் கிளம்ப முற்பட,
“சாப்பிட்டு போகலாம்மா மங்கை..” என்றார் பல்லவன்.
“இருக்கட்டும் அண்ணா..! செல்வியை பார்த்துட்டு வந்து சாப்பிட்டுக்கிறோம்..” என்றவர்கள் கிளம்பிவிட்டனர்.
“இருங்க சித்தி.. நானும் வரேன்..” என்று மாதவனும் உடன் செல்ல, ராஜாங்கம் தான் தயங்கிக் கொண்டே இருந்து விட்டார். சாந்தாவிற்கு அதில் ஒரு திருப்தி.
இசை சமைத்துக் கொண்டிருந்தாள். உடல் கொஞ்சம் அசதியாய் இருக்க, ஓய்விற்கு ஏங்கியது. இருந்தாலும் மாறனுக்காக சமைக்க வேண்டும் என்று நினைத்து அவள் செய்து கொண்டிருக்க, வேகமாக உள்ளே வந்தார் மங்கை. வந்தவருக்கு அவளைப் பார்த்தவுடன் தெரிந்து போனது, உடம்பு சரியில்லை என்று. அவளைப் பெத்தவள் ஆயிற்றே.
சட்டென்று அவள் கையிலிருந்த அனைத்தையும் வாங்கியவர், மடமடவென்று சமைக்க ஆரம்பித்தார்.
“அக்கா..! என்னாச்சுக்கா..? ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு..?” என்றவள் இசையைக் கட்டிக் கொள்ள,
“டேய் தடிமாடு..! நீ மட்டும் முன்னாடியே எஸ்கேப் ஆகி வந்துட்ட. என்னை பத்தி கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்தியா..? பேசியே கொன்னுட்டாங்க..” என்று மாறனிடம் கடுப்பைக் காட்டினாள் கயல்.
“நான் தான் உனக்கு ஜாடை காட்டினேனே..? நீதான் கவனிக்கலை. எனக்குத் தெரியும் இப்படித் தான் நடக்கும்ன்னு..” என்று மாறன் சொல்ல அவனை முறைத்தான் மாதவன்.
“சும்மா முறைக்காதிங்க தம்பி.. உண்மையை சொன்னா கோபமெல்லாம் வரக் கூடாது..” என்று மாறன் சொல்ல, அவன் சொன்ன விதத்தில் மாதவனுக்கும் சிரிப்பு வந்தது.
“என் பொழப்பு உனக்கு சிரிப்பா சிரிக்குதுடா.. உனக்கும் ஒரு நாள் கல்யாணம் ஆகும் மவனே.. அன்னைக்கு இருக்கு உனக்கு..” என்றான் மாதவன்.
“அப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பேயில்லை.. நானெல்லாம் கடைசி வரைக்கும் சிங்கிளா தான் இருப்பேன்..” என்று மாறன் சொல்லிக் கொண்டிருக்க,
“எங்கடா மாறா..? உங்கப்பா வரலையா..?” என்றாள் இசை. அவளின் பேச்சில் மங்கைக்கு கோபம் வர, பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்து விட்டார்.
“அவர்தான் முதல் ஆளா கிளம்பினார். அங்க தான் இருக்கார். ஆனா, நீ பேசாம அவருக்கும் இங்க வர யோசனையா இருக்கும் தானக்கா..! அவர்கிட்ட பேசேன். பாவம்க்கா..” என்றான் மாறன்.
மகளைப் பார்க்க வரக்கூட அவர் தயங்குவது எதனால் என்று இசைக்கு தெரிந்து தான் இருந்தது. அப்படியே சட்டென்று அவரிடம் ஒட்டவும் அவளால் முடியவில்லை.
“நீ போய் அவரை கூட்டிட்டு வாடா மாறா..?” என்றாள் இசை.
“நிஜமாவாக்கா சொல்ற..?” என்றான்.
“நிஜமாதாண்டா சொல்றேன். கூட்டிட்டு வா..!” என்று அவள் சொல்லி முடிக்கும் முன், ராஜாங்கத்தின் முன் நின்றிருந்தான் மாறன்.
“எதுக்கு மாறா..இப்படி மூச்சு வாங்க ஓடி வர..?” என்றார் ராஜாங்கம்.
“அப்பா, செல்விக்கா உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க..” என்றான் சிரிப்புடன்.
“என்னடா சொல்ற..? நிஜமாவா..?” என்ற ராஜாங்கத்திற்கு நம்பவே முடியவில்லை.
“சம்பந்தி என் மகளைப் பார்த்துட்டு வந்திடுறேன்…” என்று அவர் சின்ன பிள்ளை போல் மாறனின் பின்னால் செல்ல, சாந்தா மட்டும் தான் தனித்து இருந்தார்.
“போங்க..எல்லாரும் போங்க..” என்று மனதிற்குள் நொந்து கொள்ள மட்டும் தான் முடித்து அவரால்.
குளித்து முடித்து கீழே வந்த அன்பு, யாரையும் காணாமல் கேள்வியாய் காதம்பரியைப் பார்க்க,
“எல்லாரும் இசை வீட்டுக்குப் போயிருக்காங்க..!” என்பதோடு முடிந்துக் கொண்டார்.
இசையின் வீட்டிற்குள் நுழைவதற்கு அவ்வளவு தயக்கமாய் இருந்தது அவருக்கு.
“உள்ள வாங்க..!” என்றாள் இசை. அந்த ஒரு வார்த்தையிலேயே அகம் மகிழ்ந்து போனார் ராஜாங்கம். மங்கை இதெல்லாம் கண்டும் காணாமல் இருக்க,
“எப்படிம்மா இருக்க..?” என்றார் அவர். அவரின் குரலில் அப்படி ஒரு ஏக்கம்.
“நல்லா இருக்கேன்..!” என்றவள், கைகால் கழுவிட்டு வாங்க, சாப்பிட..” என்றாள். மகள் சொல்லிற்கு மறு பேச்சின்றி சென்றார் ராஜாங்கம்.
“ம்மா..! எவ்வளவு நேரம் தான் வடசட்டியவே முறைச்சிட்டு இருப்பிங்க. எடுத்து வைங்க, எல்லாரும் சாப்பிட..” என்றாள்.
“சமைச்ச எனக்கு எடுத்தும் வைக்கத் தெரியும்ன்னு சொல்லு மாறா..!” என்றார் மங்கை.
“மறுபடியும் முதல்ல இருந்தா..? எனக்குத் தெம்பில்லைன்னு சொல்லு மாறா..?”என்றாள் இசை.
“அக்கா, நீ வந்ததுல இருந்து அப்பா, அம்மாகூட பேசுறதே இல்ல..” என்றாள் கயல்.
“இன்னைக்கு பேசிடுவார்..! கவலைப் படாத. என்னால உங்க எல்லாருக்கும் கஷ்டம் இல்லையா கயலு..?” என்றாள் இசை.
“நீ பட்டதை விடவாக்கா..! நீ எங்க கூட இருந்தாலே போதும்க்கா..!” என்றாள் கயல்.
“அது மட்டும் முடியாது கயல்..! என்னால அந்த ஊர்ல இருக்க முடியாது..” என்று உறுதியாக சொல்லிவிட்டாள் இசை.
மங்கை எடுத்து வைக்க, ராஜாங்கத்திற்கு இசையே சாதம் பரிமாறினாள். வெகு நாட்களுக்குப் பிறகு, நிறைவாய் சாப்பிட்டார் ராஜாங்கம்.
“தாத்தா..” என்று அகரன் அவரின் மடியில் அமர்ந்து கொள்ள, மாறன் தான் அப்படி சொல்லிக் கொடுத்திருந்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு அனைவரும் ஒன்றாய் இருந்தனர். மாதவன் மட்டும் அமைதியாய் இருக்க,
“அண்ணா, நீயும் உட்கார்ந்து சாப்பிடு..” என்றாள் இசை. மாதவன் உடனே வெளியே சென்று எட்டிப் பார்த்துவிட்டு வர,
“என்ன பார்த்துட்டு வர..?” என்றாள்.
“இல்ல, நீ என்னை அண்ணான்னு சொன்னியா..? அதான் மேகமா இருக்கான்னு பார்த்துட்டு வரேன்..” என்றான் மாதவன்.
“என்ன கிண்டலா..?” என்று இசை முறைக்க,
“சரிசரி.. போடு சாப்பாட்டை..” என்றான் மாதவன்.
“என்மேல இருந்த கோபம் எல்லாம் போயிடுச்சா செல்வி..?” என்றார் ராஜாங்கம்.
“உங்கமேல எனக்கு எந்த கோபமுமே இல்லையே..? இருந்தாத்தான போறதுக்கு..?” என்றாள் இசை. ஆனால் இப்போது வரை அவள் அப்பா என்று மட்டும் அழைக்கவேயில்லை.
“எங்களையெல்லாம் கூப்பிட மாட்டிங்களா..?” என்ற குரலில் அனைவரும் திரும்ப, அங்கே அன்பும், அவனுக்கு பின்னால் ரோகிணியும் நின்றிருந்தனர்.
“வாங்க தம்பி..!” என்று மங்கை அழைக்க,
“நம்ம வீட்டு வரதுக்கு எதுக்கு கேட்டுட்டு இருக்கீங்க..?” என்றான் மாதவன்.
“நீங்க தான் அப்படி சொல்றிங்க..? ஆனா, இசை ஒரு தடவை கூட எங்க வீட்டுக்கு வரலை..!” என்றான் அன்பு.
“எதுக்கு சார் பிரச்சனை..” என்று இசை பட்டென்று சொல்லிவிட, அன்பிற்கு ஒரு மாதிரியானது. அவள் யாரை மனதில் வைத்துக் கொண்டு சொல்கிறாள் என்று தெரியாத அளவிற்கு அவன் முட்டாளில்லை.
“சாப்பிடுங்க தம்பி..” என்று மங்கை சொன்னவுடன், எந்த வித பிகுவும் பண்ணாமல் சாப்பிட அமர்ந்தான் அன்புச்செழியன்.
“செல்வி, தம்பிக்கு சாப்பாடு வை..!” என்று மங்கை சொல்ல, வேறு வழியில்லாமல் அவனுக்கு பரிமாறினாள்.
“மேடம், நாங்களும் இருக்கோம்..” என்று ரோகிணி சொல்ல,
“உனக்கு இல்லாததா ரோகி..” என்றாள் இசை.
“சும்மா சொன்னேன், நான் சாப்பிட்டேன்..” என்று சொல்லிவிட்டாள்.
“சாப்பாட்டுல மங்கையை அடிச்சுக்க முடியாது தம்பி..” என்றார் ராஜாங்கம்.
“அதெல்லாம் சும்மா..! என்ன இருந்தாலும் எங்க செல்வியக்கா வைக்கிற நாட்டுக்கோழிக் குழம்பு மாதிரி வருமா..? எங்க கதிர் மாமா அதுக்கே அடிமை..” என்று மாறன் சொல்ல, அங்கு ஒரு நிமிடம் அப்படி ஒரு அமைதி.
அப்போது தான், கதிரை பேச்சில் இழுத்தது தெரிய வந்தது மாறனுக்கு. தன்னைத் தானே திட்டிக் கொண்டவன், இசையைப் பார்க்க.. அவள் முகம் சாதரணமாகத் தான் இருந்தது.
“செல்விக்கா வைக்கிற நாட்டுக்கோழிக் குழம்பு நல்லா இருக்கும்ன்னு சொல்ல வந்தேன்.. அவ்வளவு தான்..” என்றான் இழுத்து.
இசைக்கு முகம் வெளியே சாதரணமாக இருந்தாலும், உள்ளே பல நினைவுகள் அழுத்திக் கொண்டிருந்தது. அந்த நேரம் அதைக் கடந்தவள், அன்பு சாப்பிட்டு கிளம்பிய பிறகு,
“அகரனைத் தூங்க வைத்து விட்டு, எல்லாரும் ரெஸ்ட் எடுங்க..” என்றவள், மொட்டை மாடிக் காற்றின் உதவியைத் தேடி சென்றாள்.
“நீ வாயை வச்சுகிட்டு சும்மாவே இருக்க மாட்டியா மாறா..?” என்று கயல்விழி கோபப் பட,
“தெரியாம சொல்லிட்டேன் கயல்..!” என்றவனுக்கும் கஷ்ட்டமாக இருந்தது.
மாதவனுடன் ஏதோ பேச வேண்டும் என்று அன்பு சொல்லியிருக்க, அவர்கள் இருவரும் அன்பு வீட்டு மொட்டை மாடியில் இருந்தனர்.
“அதை எப்படி சொல்றதுன்னு தெரியலை. ஆனா, கேட்டுத்தான் ஆகணும். நீங்க என்னை தப்பா நினைக்கக் கூடாது..” என்றான் அன்புச் செழியன்.
“நீங்க என்னைக்கு, எதை தப்பா செஞ்சிருக்கிங்க..? நீங்க ஏன் இவ்வளவு தயங்குறிங்கன்னு புரியலை..”
“இசையை எனக்கு மூணு வருஷமா தெரியும்.. ஆனா, அவங்களுக்கு கல்யாணமாகி குழந்தை இருக்குன்னு இப்போ இந்த வீட்டுக்கு குடி வந்த பிறகு தான் தெரியும்..” என்றான் அன்பு.
அவன் என்ன சொல்ல வருகிறான் என்று மாதவனுக்கு புரியாமல் இருக்க,
“தன்னோட கணவர் வெளிய வேலை செய்றதா சொன்னாங்க..! நானும் நம்பினேன்.. உங்க ஊருக்கு வந்தப்ப தான் தெரிஞ்சது, அவங்க உங்க தங்கச்சின்னு.. ஏற்கனவே அவங்களைப் பத்தி சொல்லியிருக்கிங்க. ஆனா, நான் பார்த்தது இல்லைங்கிறதால இசை தான் செல்வின்னு எனக்குத் தெரியலை..” என்று நிறுத்தினான்.
மாதவன் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, சில நிமிட சிந்தனைக்கு பின்னர்,
“இசையை எனக்கே குடுத்திடுங்க..!ஐ மீன் என்னோட மனைவியா..? நான் அவளை நல்லா பார்த்துப்பேன்…” என்று பட்டென்று கேட்டு விட்டான் அன்பு.
“என்ன சொல்றிங்க அன்பு..?” என்று அதிர்ந்து போய்விட்டான் மாதவன்.
“நான் எதுவும் தப்பா கேட்கலைன்னு நினைக்கிறேன்..” என்று அவன் சொல்ல, மாதவனுக்கு கண்கள் நிறைந்து போனது.
“நீங்க அமைதியா இருக்குறதைப் பார்த்தா…” என்று அன்பு இழுக்க,
மாதவன் பட்டென்று அவன் காலிலேயே விழுந்து விட்டான்.
“என்ன பண்றிங்க மாதவன்..?” என்று பதறி விலகிய அன்பு, அவனின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
“என்ன பண்ணிட்டு இருக்கீங்க..?” என்றான்.
“தப்பில்லை அன்பு..! இதுக்கெல்லாம் ஒரு பெரிய மனசு வேணும்..” என்றான் மாதவன்.
“நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க..? என்னை ஏதோ தியாகி ரேஞ்சுக்கு பார்க்காதிங்க. இசையை எனக்குப் பிடிச்சிருந்தது. அவங்களுக்கு கல்யாணம் ஆன விஷயம் தெரியாததுக்கு முன்னாடியே. அதை நான் உணரும் போது தான் அவங்க மேரிட்ன்னு தெரியும். ஒரு வழியா கஷ்ட்டப்பட்டு மனசை மாத்த முயற்சி பண்ணேன். ஆனா, செல்வியா அவங்களைப் பார்த்தப்போ தான் தெரிஞ்சது, என்னோட மனசு மாறவேயில்லைன்னு. நானும் எவ்வளவோ யோசிச்சு பார்த்துட்டேன். இசை எனக்கு மனைவியா வந்தா, என்னோட வாழ்க்கை நிறைவா இருக்கும்ன்னு எனக்குத் தோணுது…” என்றான் அன்பு.
“அந்த கவலை எல்லாம் உங்களுக்கு எதுக்கு..? உங்ககிட்ட ஒரு வார்த்த கேட்கணும்ன்னு தோணுச்சு. கேட்டுட்டேன்..!” என்றான் அன்பு நிம்மதியுடன்.
“இப்போ எனக்கு இருக்க சந்தோஷத்தை வெளியே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு இருக்கு. ஒரு அண்ணனா, நான் செல்விக்கு எதுவுமே செஞ்சதில்லை பார்க்க போனா, நிறைய சண்டை தான் போட்டிருக்கேன். கண்டிப்பா அவளுக்கு ஒரு நல்லதைப் பண்ணிடுவேன்..” என்று மாதவன் மகிழ்ந்து கொண்டிருந்தான்.
ஆனால் செல்வியோ…கதிரவனின் நினைவில் இருண்ட வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.