அவர்கள் அனைவரும் பீச்சிற்கு சென்ற பிறகு, யோசனையிலேயே இருந்த பல்லவன்,
“அப்பறம் சம்பந்தி..ஊர்ல விவசாயம் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு…” என்று பேச்சை ஆரம்பித்தார்.
“எங்க சம்பந்தி..?பெருசா லாபம் ஒண்ணுமில்லை. பாதி நிலத்தை குத்தகைக்கு விட்டாச்சு. லாபம் இல்லைன்னாலும் அதை விட முடியாது. அப்படியே போகுது..நமக்குப் பிரச்சனையில்லை. அதை மட்டுமே நம்பியிருக்கவங்களுக்கு ரொம்ப சிரமம் தான் ” என்றார் ராஜாங்கம்.
“அதுக்குத்தான் மாதவனை வேலையை விட்டுட்டு வர சொன்னோம். எங்க? அவன் கேட்குற மாதிரி தெரியலை. இங்க இருக்குறதை எல்லாம் யார் பார்த்துக்கிறது. இவருக்கும் வயசாகுது..” என்றார் சாந்தா.
“அதுக்காக நல்ல வேலையை விட்டுட்டு வந்து, தோட்டம் தொறவுன்னு அலைய முடியுமா..?” என்றார் காதம்பரி.
“என்ன நீங்க இப்படி சொல்லிட்டிங்க..? அதெல்லாம் தெரிஞ்சு தான பொண்ணுக் குடுத்திங்க..” என்று சாந்தா சொல்ல,
“அது நிஜம் தான். அது கடைசி காலத்துல பார்த்துக்கட்டும்..” என்று மங்கை சொல்ல, பேச்சு வேற திசையில் போவதைப் போல் உணர்ந்தார் பல்லவன்.
“ஏம்மா மங்கை..? இசைக்கு ஏன் நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கக் கூடாது..?” என்றார்.
அவர் அப்படிக் கேட்டவுடன், மங்கைக்கு மகளின் நியாபகத்தில் கண்கள் கலங்க,
“எங்களுக்கு மட்டும் அந்த ஆசை இல்லையாண்ணா..? குழந்தை வேண்டாம்ன்னு சொன்னதுக்கே, வீட்டை விட்டு வெளிய வந்த பொண்ணு அவ. தனி ஆளா இருந்து, பிள்ளையையும் பெத்து, வளர்க்குறதுக்கு அவளுக்கு தைரியம் எங்க இருந்து வந்ததுன்னு எங்களுக்கே இன்னமும் புரியலை. அவளைக் காணாம இத்தனை வருஷத்துல நாங்க பட்ட பாடு சொல்லி மாளாது. இப்ப, இன்னொரு கல்யாணத்தைப் பத்தி பேசப் போய், அதுக்கும் கோபப்பட்டு அவ எங்கையாவது கிளம்பிப் போயிட்டா , மறுபடியும் அதை தாங்குற சக்தி எனக்கில்லை..” என்றார் மங்கை.
“நான் எதுக்கு சொல்றேனா..? கயலுக்கும் கல்யாண வயசு வந்துடுச்சு..! நாளைக்கு அவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி, கயல் புருஷனோட வரப் போக இருக்கும். அப்போ இசை கவலைப் படாதாமா..?” என்றார் பல்லவன்.
“நான் இதையெல்லாம் யோசிக்காமயா இருந்திருப்பேன் அண்ணா. அவளுக்கு ஒரு நல்லது நடக்கணும்ன்னு தான், எல்லா தெய்வத்தையும் வேண்டிகிட்டு இருக்கேன். வாழ வேண்டிய வயசுல எம்மக இப்படி இருக்குறதை பார்த்து தினம் தினம் சாகுறதுக்கு தான் அந்த கடவுள் எங்களை விட்டு வச்சிருக்கார் போல..” என்றார் மங்கை.
“இல்ல..! இசை எங்க வீட்டு மருமகளா வந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுது..! அன்புக்கு, இசையை குடுப்பிங்களா..?” என்றார் பல்லவன்.
“என்னங்க..???” என்று அதிர்ந்து விட்டார் காதம்பரி. அதுவரை எதுவோ பொதுவாக பேசுகிறார்கள் என்று அவர் நினைத்திருக்க, பல்லவன் இப்படி ஒரு விஷயத்தை பேசுவார் என்று காதம்பரி நினைக்கவில்லை.
“என்ன சம்பந்தி சொல்றிங்க..?” என்ற ராஜாங்கத்திற்கும் அதே அதிர்ச்சி தான்.
“இதுக்கு கண்டிப்பா நான் சம்மதிக்க மாட்டேன்..” என்று காதம்பரி சொல்ல,
“அன்புக்கு பிடிச்சா போதும் காதம்பரி. வாழப் போறது அவன் தான்..” என்றார் பல்லவன் கொஞ்சம் கடுமையாக.
“என் பையனுக்கு என்ன குறைச்சல்..? ஏற்கனவே தாலி அத்த…” என்று ஏதோ சொல்ல வந்த காதம்பரி எதிரில் இருப்பவர்களை கருத்தில் கொண்டு அமைதியானார்.
“நீங்க கேட்டதுல எங்களுக்கு சந்தோசம் தான் அண்ணா. ஆனா, கண்டிப்பா இசை இதுக்கு சம்மதிக்க மாட்டா..” என்றார் மங்கை. அவருக்கும், அப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று மனதிற்குள் இருக்கத்தான் செய்தது. ஆனால்,காதம்பரியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை.
“உங்களுக்கு என்னாச்சு சம்பந்தி..? உங்களுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா..?” என்று சாந்தா எதுவோ பேச வர,
“வாயை மூடுறியா இல்லையா..?” என்று அவரை அடிக்க கையை ஓங்கி விட்டார் ராஜாங்கம். சாந்தா அதிர்ந்து விழிக்க,
“இத்தனை வருஷத்துல ஒருநாளும் நான் கை நீட்டியது இல்லை. வயசான காலத்துல என்னை செய்ய வச்சுடாத. அந்த பிள்ளையைப் பார்த்தா எப்படி இருக்கு உனக்கு..? எதுக்கு அவமேல இப்படி ஒரு வஞ்சம் உனக்கு..? அவ உனக்கும் பொண்ணு தாண்டி. அதுவும் மறந்து போயிடுச்சா..” என்றார் ராஜாங்கம்.
அவர் அடிக்க கை ஓங்கியதில் இருந்தே, சாந்தா மீளவில்லை.
“ஒன்னும் அவசரமில்லை. நீங்க யோசிச்சு பதில் சொல்லுங்க..! இது நான் ஏதோ வாய் வார்த்தைக்காக கேட்ட விஷயம் இல்லை. மனசுக்குள்ள இருந்து கேட்ட விஷயம் தான். நல்லா யோசிச்ச பிறகு தான் இதையும் கேட்குறேன். மனசுக்குள்ளயே வச்சு குழப்பிகிட்டு இருக்குறதுக்கு, உங்ககிட்ட நேரடியா கேட்டுட்டா, நல்லா இருக்கும் பாருங்க..” என்றார் பல்லவன்.
இசைக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது பற்றி, ராஜாங்கம் யோசிக்காமலா இருப்பார். ஆனால், இப்போது தான் இசை அவரிடம் ஏதோ பேச ஆரம்பித்திருக்கிறாள். இப்போது இதைப் பற்றி பேசப் போக, அவள் பேசுவதையே நிறுத்திக் கொண்டாள் என்ன செய்வது..? என்ற யோசனை தான் அவருக்கு.
“உனக்கு இசை நல்லா வாழ்றது முக்கியமா..? இல்லை உன் கூட பேசுறது முக்கியமா..?” என்று அவரின் மனம் அவரை கேள்வி கேட்க,
“இதென்ன கேள்வி..? என் மக சந்தோஷமா வாழ்றது தான் முக்கியம்..!” என்று யோசிக்காமல் மனதிடம் பதில் சொன்னார் ராஜாங்கம்.
“அப்போ, எப்படியாவது இந்த கல்யாணத்தை நடத்தி வை. ஒரு தகப்பனா அவளுக்கு இதையாவது உருப்படியா செய்..” என்றது அவரின் மனசாட்சி.
“உங்க எல்லாருக்கும் சம்மதம்ன்னா, எங்களுக்கும் சம்மதம் தான் சம்பந்தி..” என்று ராஜாங்கம் சொல்ல, காதம்பரிக்கு அதிர்ச்சி.
“அவ இதுக்கு கண்டிப்பா சம்மதிக்க மாட்டா. ஆனா, சம்மதிக்க வைக்க வேண்டியது எங்க பொறுப்பு..” என்றார் அவர்.
“ஏங்க..? எப்படிங்க..?” என்று மங்கை புரியமால் கேட்க,
“நீ சும்மா இரு மங்கை..! மருந்து முதல்ல கசக்கத்தான் செய்யும். என்ன, நம்ம மேல கோபப்படுவா..? விடு.. பார்த்துக்கலாம்..” என்றவர்,
“நம்மளே பேசிட்டு இருக்கோம்.. அன்பு தம்பிக்கு இதுல சம்மதம் இல்லைன்னா என்ன பண்றது..? அவரையும் கேட்கணும் தானே அண்ணா. இது அவரோட வாழ்க்கை..” என்றார் மங்கை.
“அன்பு கண்டிப்பா சம்மதிப்பான். அவனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். பார்க்க கொஞ்சம் அமைதியா இருப்பானே தவிர, முடிவு எடுத்தா மாற மாட்டான்..” என்றார் பல்லவன்.
“அவரை குறை சொல்ல முடியுமா சம்பந்தி..? தம்பியைப் பத்தி தான் தெரியுமே..?புடம் போட்ட தங்கம்.. எங்க சொந்ததுலையே நிறைய பேர் தம்பிக்கு பொண்ணு குடுக்க தயாரா இருக்காங்க..” என்றார் ராஜாங்கம்.
“அப்பறம் என்ன..? நீங்க இசைகிட்ட பேசுங்க. நான் அன்புகிட்ட பேசுறேன். எல்லாம் கூடி வந்தா, நல்லபடியா முடியும்..” என்றார் பல்லவன். காதம்பரிக்கு இதையெல்லாம் காது கொண்டு கேட்க முடியவில்லை.
அவர்களின் முன்னால் காதம்பரியால் எதுவும் பேசவும் முடியவில்லை. ஆனால் இசையை அவரால் மருமகளாக நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
“நம்மலும் இப்படியே குழந்தையாவே இருந்திருக்கலாம் இல்லையா இசை..” என்றாள் ரோகிணி.
“இருந்திருக்கலாம்.. ஆனா, நம்ம அம்மாங்க தான் ரொம்ப பாவம்..” என்று இசை சிரிக்காமல் சொல்ல,
“விடுவிடு..நம்மளைப் பத்தி நாமளே டேமேஜ் பண்ணக் கூடாது..” என்றாள் ரோகிணி. சற்று தள்ளி, தூரத்தில் கடல் அலையில் கால் நனைத்தபடி, கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான் அன்பு.
“வர வர அன்பு சார் மாறிட்டாரோ..? எப்பவும் ஏதோ யோசனையில் இருக்குற மாதிரியே இருக்கு இசை… இப்ப கூட கடல்ல அப்படி என்ன தெரியுதுன்னு அதையே பார்த்துட்டு இருக்கார்..” என்றாள் ரோகிணி.
“அவருக்குத் தெரியறது நமக்குத் தெரியாம கூட இருக்கலாம்..?” என்ற இசை சிரிக்க,
“என்ன கிண்டலா..?” என்றாள் ரோகிணி.
“பின்ன என்னடி..? அவருக்கு என்ன திங்க்கிங்கோ..! அதை நீயேன் ஆராய்ச்சி பண்ற..?” என்றாள் இசை.
“சரி விடு.. அங்க பாரு உங்க அண்ணனை..! அந்த சங்கீதா பாடா படுத்திகிட்டு இருக்கா.. பாவம் அவர்,வந்ததுல இருந்து மனுஷனை உட்கார விடலை..” என்று ரோகிணி சொல்ல,
“அது என்னவோ உண்மைதான் ரோகி. மாதவனை நினைச்சாத்தான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. ஒருகாலத்துல எப்படி கெத்தா சுத்திட்டு இருப்பான் தெரியுமா..?படிச்சுட்டு ஊருக்குள்ள வெட்டியா இருந்தப்போ கெத்தா சுத்துன மாதவன், இப்போ ஒரு நல்ல வேலையில் இருக்கும் போது, பம்மிகிட்டு சுத்துறான். இதைப் பார்த்தா எனக்கு எப்படி இருக்கு தெரியுமா..?” என்று இசை சிரிக்க,
“வாழ்க்கையில எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்க முடியுமா..? பாரு நம்மளும் அப்பத்தான் சுத்திட்டு இருந்தோம். இப்ப அப்படி இருக்க முடியுதா..?” என்றாள்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே,
“அக்கா, நீயும் வாக்கா..!” என்றாள் கயல்.
“நீங்க விளையாடுங்க கயல். நான் வரலை, எனக்கு இங்க உட்கார தான் பிடிச்சிருக்கு..” என்று இசை சொல்லிக் கொண்டிருக்க, அகரன் அவர்களிடம் இருந்து அன்பு நிற்கும் இடத்திற்கு சென்றான்.
“அகர் பார்த்து..” என்று இசை சொல்ல, அதற்குள் அவன் அன்பின் அருகில் சென்று விட்டான்.
“அங்கிள்..” என்று அவன் கையைப் பிடிக்க,
“அகர்..!” என்றவன் அவனைத் தூக்கி கொள்ள,
“அங்க போகணும்..” என்றான் கடலைக் காட்டி.
“அங்க வேண்டாம் கண்ணா..! நீ பெரிய பையனாகி போகலாம்..” என்றான் அன்பு.
“நான் பிக் பாய் தான்..” என்று அவன் முகத்தை உம்மென்று வைக்க,
“சரி… கொஞ்ச தூரம் மட்டும் கூட்டிட்டு போறேன் ஓகேவா..?” என்றவன், அவனை கொஞ்சம் உள்ளே கூட்டிச் சென்றான். அவர்கள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த இசை,
“அவங்க ரொம்ப தூரம் வரைக்கும் போறாங்க ரோகி..! வேண்டாம்ன்னு சொல்லு..” என்று அவள் எழுந்திருக்க, அவளின் கையைப் பிடித்து இழுத்த ரோகி,
“அன்பு சார், அவனை தூக்கி தான் வச்சிருக்கார். அவர் பார்த்துப்பார், விடு..” என்று சொல்ல,
“இருந்தாலும்..” என்று இசை பதறத்தான் செய்தாள்.
“அன்பு சார், சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர் இசை. அவருக்குத் தெரியும் எந்த தூரம் வரைக்கும் போகலாம்ன்னு. சின்ன விஷயத்துக்கு இப்படி டென்சன் ஆகாத..” என்றாள் ரோகி.
“என்னன்னு தெரியலை ரோகிணி..! இந்த ரெண்டு நாளா, அகரன் எதுக்கெடுத்தாலும் அன்பு சாரையே சுத்தி வரான். அவரைப் பார்க்குறதே ஏதோ ஹீரோவா பார்க்குற மாதிரி பார்க்குறான்..” என்று இசை சொல்ல,
“குழந்தைகளுக்கு, அவங்க செய்ய முடியாத விஷயத்தை வேற யார் செஞ்சாலும், அவங்க கண்ணுக்கு ஹீரோவா தான் தெரிவாங்க. பாதர் பிகரையே அவன் பார்த்ததில்லை, அதை உணர்ந்ததும் இல்லை. அதனால கூட அவர் கூட ஒட்டிக்கிறான் போல..” என்றாள் ரோகிணி.
“கதிர் இருந்திருந்தா, என் பிள்ளைக்கு இப்படி ஒரு ஏக்கமெல்லாம் வந்திருக்காது தான ரோகிணி. நான் என்னதான் அவனை பார்த்துக்கிட்டாலும் அவனுக்கும் மனசுல அந்த ஏக்கம் இருக்கு தான..” என்று இசை கண் கலங்க,
“அகர்ன்னு இல்லை..எல்லா குழந்தையும் அப்படித்தான். ஒருவேளை கதிரவன் இருந்து, நீ இல்லாம இருந்திருந்தா உன்னையும் தேடியிருப்பான். குழந்தைங்க மனசு எப்பவுமே இல்லாத ஒன்னுக்கு தான் ஏங்கும். அது இயற்கை. இன்னொரு குழந்தை கைல இருக்குற பொம்மையைப் பார்த்தா கேட்கத்தான் செய்யும். அதே மாதிரி தான் இதுவும்.. வளர வளர சரியாகிடும் விடு..” என்றாள்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்க, மாறனும்,கயலும் வந்தனர்.
“அக்கா, கடல்ல குளிக்கிறது எல்லாம் நல்லாத்தான் இருக்கு. இருந்தாலும் நம்ம ஊரு கிணத்துல குளிக்கிற மாதிரி இல்லை. அங்க தண்ணி அப்படியிருக்கும். கடல் உப்பு உடம்பெல்லாம் அரிக்குது..” என்றான் மாறன்.
“அதுக்காக, கடல்ல நல்ல தண்ணியா விட முடியும்…?” என்று ரோகிணி நக்கலாக கேட்க,
“ஐயோ அக்கா, உங்க கவுண்ட்டருக்கு அளவே இல்லையா..? நாங்க எதார்த்தமா சொன்னோம்..” என்று மாறன் சொல்ல,
அகரனும், அன்பும் வந்தனர். அகரனின் விரலைப் பிடித்துக் கொண்டு அன்பு நடந்து வர, மாதவன் அதை போட்டோவாக எடுத்துக் கொண்டான். அவர்கள் வருவதைப் பார்க்கும் போதே, அவ்வளவு நன்றாக இருந்தது.
இசைக்கு, அகரனின் கைகளைப் பிடித்து கதிரவன் கூட்டி வருவது போல் பிம்பம் தோன்ற, கண்களை இமைத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.
“மம்மி..ஜாலியா இருந்துச்சு..”என்று அகரன் அவளிடம் ஓடி வர, அவனை அணைத்துக் கொண்டாள் இசை.
“கிளம்பலாமா..?” என்றான் மாதவன்.
“இருங்க.. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம்..” என்ற சங்கீதா எதையோ சாப்பிட்டுக் கொண்டிருக்க,
“சத்தியமா இதுக்குமேல என்னால முடியாதுடி..” என்று மாதவன் பாவமாய் சொல்ல, அனைவரும் சிரித்து விட்டனர்.
“நானும் கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்..! நான் உங்களைப் பார்த்து ஏமாந்துட்டேன் அன்பு. உங்களை மாதிரியே உங்க தங்கச்சியும் இருப்பான்னு நினைச்சது என்னோட முட்டாள் தனம் தான..?” என்று மாதவன் சிரிக்காமல் சொல்ல, அவனை முறைத்தாள் சங்கீதா.
விளையாடி வந்த டயர்டில் அகரன் தூங்கி விழ,
“கிளம்பலாம்..! இவனுக்கு தூக்கம் வந்திருச்சு..” என்றாள் இசை.
அதற்கும் சங்கீதா முறைத்தாள். கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க முடியுதா..?” என்று அவள் முனங்க, இசைக்கு கோபம் வந்துவிட்டது.
“மாதவா.. போகலாம்..!” என்ற இசை பட்டென்று நடக்கத் தொடங்கினாள். அகரன் அவள் தோளில் படுத்திருக்க, அவனை வைத்துக் கொண்டு அந்த மணலில் நடப்பது அவளுக்கு சிரமாக இருந்தது. அதைப் பார்த்த அன்பு,
“இருக்கட்டும் சார்..! நானே பார்த்துக்கிறேன்..” என்றவள், அவனிடம் தர மறுக்க,
“அவனைத் தூக்கிட்டு நடக்குற அளவுக்கு இன்னமும் உங்களுக்கு உடம்பு சரியாகலை. எல்லா நேரத்துலயும் பிடிவாதம் பிடிக்கிறது சரியா இருக்காது..” என்று எரிச்சலுடன் சொன்னவன், அகரனை அவள் கைகளில் இருந்து பிடிங்கிக் கொண்டான். அவன், அவளை சட்டை செய்யாமல் முன்னால் நடந்து செல்ல, அவனின் செய்கையைப் பார்த்த ரோகிணிக்கு குழப்பமாய் இருந்தது.
“வாடி..!” என்று இசையுடன் நடக்கத் தொடங்கினாள்.
“ரொம்பத்தான் பிகு பண்றா..! என்னமோ நான் இவனைத் தூக்கிட்டு அப்படியே ஓடிட போற மாதிரி. உங்க தங்கச்சிகிட்ட சொல்லி வச்சுக்குங்க மாதவன்..” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பியவன், வேகமாய் காருக்கு சென்று விட்டான்.
“உங்க தங்கச்சிக்கு எங்கண்ணன் என்ன வேலைக்காரனா..? அவன் கைல பிள்ளையைக் குடுத்துட்டு, அப்படியே ஜாலியா நடந்து வரா பாருங்க..” என்று சங்கீதா சொல்ல,
“நீ மட்டும் எப்படி நடந்து வர..? வாயை மூடிகிட்டு வாடி..” என்றான் மாதவன்.
வீட்டிற்கு வந்த இசை, வேகமாக அவள் வீட்டிற்குள் சென்று விட்டாள். அகரனைக் கூட வாங்காமல்.
“என்ன இசை..நீ பேசாம வந்துட்ட. அகர் குட்டிய வாங்காம..?” என்று ரோகிணி கேட்க,
“எதுக்கு..? நான் கேட்க போய், அதுக்கும் எதாவது சொல்லுவார்..!” என்றாள் இசை.
அவள் பையனைக் கேட்பாள் என்று அன்பு எதிர்பார்த்திருக்க, அவள் அப்படியே செல்லவும்.. ஒரு நிமிடம் யோசித்தான் அன்பு. பிறகு அகரனை அவன் வீட்டிற்கே தூக்கி சென்று விட்டான். அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.
அன்பு அவனைத் தூக்கிக் கொண்டு வருவதைப் பார்த்த, பல்லவன் மனதிற்குள் சிரித்துக் கொள்ள, காதம்பரிக்கு நம்பவே முடியவில்லை.
“என்ன அன்பு..? அகரனை இங்க தூக்கிட்டு வர.. தூங்கிட்டு இருக்கான் பாரு..” என்றார்.
“எனக்கும் தெரியும்மா..!” என்றவன், நேராக அவனுடைய அறைக்கு சென்று விட்டான். அவனுடைய அறையில் அகரனை தூங்க வைத்தவன், வேகமாக ஜன்னல் திரையை நீக்கிப் பார்க்க, அங்கே.. இவர்களை எதிர்பார்த்து இசை கைகளை பிசைந்து கொண்டு நிற்பதைப் பார்த்தான். அவளைப் பார்த்தால் கொஞ்சம் பாவமாகவும் இருந்தது.
“இப்படியே கொஞ்ச நேரம் இருக்கட்டும்..!” என்று அவன் வேடிக்கை பார்க்க, அவள் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக போவது அவள் முகத்தில் இருந்து தெரிந்தது.
“இதுக்கு மேல படுத்த கூடாது அன்பு..” என்று நினைத்தவன், அவளுக்கு போன் செய்ய,
“இங்க இருந்துகிட்டு எதுக்கு போன் பண்றார்..?” என்று, அதை கடுப்புடன் எடுத்தாள்.
“இசை..! அகரன் நல்லா தூங்குறான். எழுந்த உடனே அனுப்பி விடுறேன்..” என்றான்.
“பரவாயில்லை சார்..! அவனை எழுப்பி விடுங்க. கடல் தண்ணில விளையாண்டது ஒரே உப்பா இருக்கும். நான் அவனை குளிக்க வச்சுட்டு தூங்க வச்சுக்கிறேன்..” என்றாள் பொறுமையாக.
“தூங்குற பையனை எப்படி எழுப்ப முடியும்.. சின்ன பையன் தானே விடுங்க,” என்றவன் போனை வைத்து விட, அவள் எரிச்சலுடன் வீட்டிற்குள் செல்வது தெரிந்தது.
நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மங்கைக்கு, கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. அன்புக்கும் நோக்கம் இருக்கிறது என்பது அவனின் செய்களில் இருந்து புரிந்து கொண்டார் மங்கை. இனி சமாளிக்க வேண்டியது இசையை மட்டும் தான் என்று நினைத்தார்.
நடந்ததை அவர் ராஜாங்கத்திடம் சொல்ல,
“நீ சொல்றதைப் பார்த்தா, பையனோட விருப்பம் தெரிஞ்சு தான், சம்பந்தி நம்மகிட்ட கேட்டிருக்கார் போல..” என்றார் ராஜாங்கம்.
“இருக்கலாம்ங்க..! ஆனா, இசை கண்டிப்பா இதுக்கு சம்மதிக்க மாட்டா..” என்றார் மங்கை.
“அந்த கவலை உனக்கெதுக்கு..? மாட்டேன்னு சொன்னா, கட்டாயப்படுத்தி பண்ணி வைப்போம், அப்பறம் அந்த தம்பி சமாளிச்சுக்குவார்..” என்று ராஜாங்கம் சொல்ல, மங்கைக்கும் சரியென்று தான் பட்டது.
சங்கீதா வருவதற்காகவே காத்திருந்தவர் போல், அவளைப் பார்த்த உடன் நடந்த பேச்சு வார்த்தைகள் அனைத்தையும் அவளிடம் ஒப்பித்து விட்டார்.
“அட, ஆமாடி..! நான் சொல்றதை அவர் காது குடுத்து கேட்கிறதாவே இல்லை..” என்றார்.
“நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல… அன்பு அந்த இசையை பார்க்குற பார்வையில என்னமோ இருக்குன்னு. நீங்கதான் நம்பலை.. பத்தாததுக்கு இப்போ சொந்தம்ன்னு வேற தெரிஞ்சு போச்சு.. இனி ஒன்னும் பண்ண முடியாது..” என்றாள் சங்கீதா.
“என்ன சங்கீதா, நீயே இப்படி சொல்ற…?” என்றார் காதம்பரி.
“அந்த மனுஷனுக்கு புத்தி கெட்டுப் போச்சு போல. நான் சொல்ற எதையும் கேட்கிறது இல்ல. பத்தாதுக்கு, உங்கண்ணன் இப்ப இருந்தே, அவளோட பிள்ளையை வளர்க்க ஆரம்பிச்சுட்டான் போல. அவனுக்கு எப்படியெல்லாம் கல்யாணம் பண்ணனும்ன்னு கனவு கண்டு வச்சிருந்தேன். என்னோட நினைப்புல மண்ணை அள்ளிப் போட்டுருவான் போல..!” என்று அவரால் புலம்ப மட்டுமே முடிந்தது. ஏனென்றால் பல்லவன் எடுக்கும் முடிவு தான் எப்போதும் அங்கு இறுதி முடிவு.
எதைப் பற்றியும் கவலைப் படாத அன்புச்செழியன், அகரனோடு நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். அங்கு இசையோ தூக்கமின்றி அமர்ந்திருந்தாள்.