அமுதா கல்யாணம் முடியாம, அவ கல்யாணம் நடக்கக் கூடாது. அப்படி மட்டும் நடந்துச்சு அப்பறம் என்னை நீங்க மனுசியாவே பார்க்க மாட்டிங்க..! என்று வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருந்தார் சாந்தா.
“இப்ப மட்டும் மனுசியாவா இருக்க..?” என்று புலம்பிய ராஜாங்கம்,
“இங்க பார்.. எதை எப்ப செய்யனும்ன்னு எனக்குத் தெரியும். முதல்ல அமுதாவுக்கு போன் போட்டு கிளம்பி வர சொல்லு. எவ்வளவு சொல்லியும் கேட்காம போய் ஹாஸ்ட்டல்ல சேர்த்து விட்டல்ல. படிச்ச வரைக்கும் போதும். வர சொல்லு..!” என்றார் கோபமாக.
“அதெல்லாம் நான் ஏற்கனவே சொல்லிட்டேன். அமுதா நாளைக்கு வந்துடுவா… நகை நட்டு, சீர் செனத்தி எதுவும் குறைய கூடாது எம்மகளுக்கு. ஊரே மெச்சுற அளவுக்கு அவ கல்யாணத்தைப் பண்ணனும்..” என்று சாந்தா அவரின் ஆசைகளை சொல்லிக் கொண்டிருக்க, ராஜாங்கத்திற்கு எரிச்சலாய் வந்தது.
“எவடி இவ..? இதெல்லாம் நீ சொல்லித்தான் தெரியனுமா..? என் ரெண்டு மகளுகளுக்கும் ஊர் மெச்சுற மாதிரி கல்யாணத்தைப் பன்னுவேண்டி..! இந்த ராஜாங்கத்தை என்ன வக்கத்த பயல்ன்னு நினைச்சியா..? உட்கார்ந்து தின்னாலும் ஒரு தலைமுறைக்கு தாங்கும்டி..!”என்று மீசையை தடவிக் கொண்டார்.
“இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை..!” என்று முகத்தை ஒரு வெட்டு வெட்டினார் சாந்தா.
மாப்பிள்ளை வீட்டில் அமுதாவை பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள். இரண்டு நாளில் அவளுக்கு நிச்சயம் செய்வதாக இருந்தது. அமுதாவின் நிச்சயம் முடிந்த பின்னர் செல்வி-கதிர் நிச்சயத்தை முடித்துவிட நினைத்திருந்தார் ராஜாங்கம். அவருக்கு இரண்டு பெண்களுக்கும் ஒன்றாகவே செய்ய வேண்டும் என்று ஆசை தான். ஆனால் மங்கை மறுத்துவிட்டார். இரண்டு பேருக்கும் சேர்ந்து செய்தால் கண்பட்டுப் போகும் என்று சொல்லிவிட்டார்.
செல்வியின் வீட்டில்…
செல்விக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார் மங்கை. அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.
“எனக்கு செல்போன் வேணும்ன்னு கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு. இப்பத்தான் கல்யாணம் பேசிட்டிங்க தான. இப்பவாவது வாங்கித் தரலாம்..ஆனா, நீங்க தான் விட மாட்டேங்குறிங்க..” என்று நொடித்துக் கொண்டாள்.
“உனக்கெதுக்கு தேவையில்லாம போனு.. அதான் வீட்ல ஒரு போன் இருக்குத்தான.. அது பத்தலையா..?” என்றார் மங்கை.
“அதெல்லாம் ஆதாம் ஏவாள் காலத்துல வந்த போன்..!” என்று செல்வி சொல்ல,
“அவங்க காலத்துல போன் எல்லாம் இருந்துச்சா செல்வி..!” என்றாள் கயல்விழி.
“என்னடி கயலு..? கிண்டலா..? நான் என்ன எனக்காக மட்டுமா கேட்குறேன். உங்களுக்காகவும் தானடி கேட்குறேன்..” என்று கயல் சொல்ல,
“இது எங்கயோ கேட்ட வசனம் மாதிரி இருக்கே..?” என்று கயல் யோசிக்க,
“நான் வெளியூர் போய் ஹாஸ்ட்டல்ல தங்கி படிக்கிறேன்னு சொன்னேன், நீங்க அதுக்கும் விடலை. அட்லீஸ்ட் மதுரையிலேயே ஹாஸ்ட்டல்ல தங்கிப் படிக்கிறேன்னு சொன்னேன், அதுக்கும் விடலை. ஆனா, அந்த அமுதா மட்டும் நினைச்ச காலேஜ்ல படிக்கிறா.. இருபதாயிரத்துக்கு போன் வேற..?” என்று செல்வி சொல்ல,
“ஆமா, இது பெரிய சித்தர் ரகசியம்.. அவதான் லீவுக்கு வரும்போதும் போகும் போதும் சீன் போட்டுட்டு போறாளே..? பார்க்குற எங்களுக்குத் தான் எரிச்சல் ஆகுது. ஆனா ஒன்னு மட்டும் உண்மை… உங்க அக்கா சாந்தா… அதான் என் பெரியம்மாவை இதுல எல்லாம் அடிச்சுக்க முடியாது.. எல்லாமே பிள்ளைக விருப்பம் தான் அந்த அம்மாவுக்கு..!” என்றாள் செல்வி. அது அவளின் கிண்டலா இல்லை ஏக்கமா என்று பிரித்துப் பார்க்க முடியாமல் திகைத்துப் போனார் மங்கை.
மங்கை எப்போதும் கொஞ்சம் கட்டுக்கோப்பாக பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர். அதற்காக அவர்களின் நியாயமான ஆசைகளுக்கு தடை போட மாட்டார். அதே சமயம் வீண் செலவு என்று தெரிந்தால், அதை கண்டிப்பாக வாங்கித் தரவும் மாட்டார். செல்விக்கு இது பழகிப் போன ஒன்றுதான் என்றாலும், அவளின் அந்த வயது இப்போது அனைத்தையும் கேட்க சொல்லித் தூண்டியது.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. கல்யாணம் கட்டிட்டு போனதுக்கு அப்பறம் உன் புருஷன் என்ன வாங்கிக் குடுத்தாலும், நான் வந்து ஏன்னு கேட்கமாட்டேன். ஆனா, என்கிட்டே உன்னோட பாட்சா எல்லாம் பலிக்காது..!” என்று வெடுகென்று சீவினார் மங்கை.
“ஆங்..வலிக்குதும்மா..! கல்யாணம் ஆன உடனே கதிர் மாமாகிட்ட சொல்லி, முதல்ல இந்த முடியைத் தான் வெட்டிக்குவேன். இம்புட்டு முடியை வச்சு நான் என்ன பண்றது..?” என்றாள் செல்வி.
“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது..!” என்று மங்கை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வந்தார் ராஜாங்கம். அவரைப் பார்த்த செல்வி வெடுக்கென்று எழுந்து உள்ளே சென்று விட,
“எதுக்கு அவகூட சண்டை கட்டிட்டு இருக்க மங்கை..?” என்றார் அவர்.
“இப்ப யார்கிட்ட தான் போன் இல்லை. ஒன்னை வாங்கிக் குடுத்துடலாம்ன்னு சொன்னா, நீதான் விட மாட்டேங்குற..” என்றார் ராஜாங்கம்.
“அதெல்லாம் இப்போதைக்கு ஒன்னும் வேண்டாம். அமுதாவுக்கு பார்த்த மாப்பிள்ளை வீட்ல என்ன சொன்னாங்க..?” என்றார் மங்கை.
“அவங்களுக்கும் அமுதாவைப் பிடிச்சுப் போய்டுச்சு. ரெண்டு நாள்ல நிச்சயத்தை வச்சுக்கலாம்ன்னு சொல்லியிருக்காங்க..!” என்றார்.
“ரொம்ப சந்தோசம்ங்க..! ரெண்டு பேருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சுட்டா, அந்த கருப்பனுக்கு ரெட்டை கிடா வெட்டுறதா வேண்டிகிட்டு இருக்கேன்..!” என்றார் மங்கை.
“அதெல்லாம் நல்லா இருப்பாங்க மங்கை. கதிர் வீட்ல இருந்து எதுவும் சொல்லி அனுப்புனாங்களா..?” என்றார்.
“செல்விக்கு என்னென்ன செய்யணும் மங்கை. நீ ஏதாவது மனுசுல நினைச்சு வச்சிருப்பியே..?” என்று ராஜாங்கம் அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டு கேட்க,
“பெத்த தகப்பன் உங்களுக்குத் தெரியாதா..? சாதாரண விஷயத்துக்கே பொண்ணுக்கு நீங்க எப்பவும் சிறப்பா செய்விங்க. அவங்க கல்யாணம்ன்னு வரப்போ கேட்கவா வேணும்..? நகை நட்டுல என்னங்க இருக்கு.. என்மகளுக்கு வரப் போற புருஷன் அவளை கண்கலங்காம, கடைசி வரைக்கும் வச்சு காப்பாத்தினா அதுவே போதும்..!” என்றார் மங்கை.
இது தான் மங்கை. அவரின் உலகம் மிகச் சிறியது. அதில் எப்போதும் பிள்ளைகள், கணவன் என்று அவர்களைப் பற்றிய சிந்தனைகள் மட்டுமே. எதற்கும் அளவிற்கு மேல் ஆசைப்பட்டது கிடையாது.
“உனக்கு வாழ்க்கை சரியா அமையலைன்னு சுத்தி வளைச்சு சொல்றியா மங்கை..?” என்றார்.
“ஐயோ, அப்படியெல்லாம் இல்லைங்க. என் வாழ்க்கைக்கு என்ன குறை…? இப்போ வரைக்கும் நான் சந்தோஷமா தான் இருக்கேன்..” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க,
“அடியே கயலு..அம்மா பேசாம சீரியல் நடிக்கப் போகலாம்… என்னமா பேசுது..? அப்படியே அவரு உருகிக் கரைஞ்சிடுவாறு பாரு..! இந்த வாழ்க்கைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லையாம். எல்லாமே குறைச்சலாத்தான் இருக்கு. இதெங்க தெரிய போகுது அம்மாவுக்கு..” என்று செல்வி நக்கலாய் சொல்ல,
“அக்கா.. மெதுவா பேசுக்கா, அப்பா காதுல விழுந்துட போகுது..” என்று பயந்தாள் கயல்விழி.
“காதுல கேட்கட்டும்ன்னு தான் பேசுறதே.. அடிப்போடி..!” என்றாள் செல்வி.
வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த மங்கை..
“செல்வி..!!!!” என்று பல்லைக் கடித்தார்.
“விடு மங்கை.. அவ பேசுறது என்ன புதுசா..? போகப் போக சரியாகிடும்..!” என்றார் ராஜாங்கம்.
“அப்பறம் ஒரு விஷயம்ங்க..” என்று மங்கை நிறுத்த,
“என்ன..??”
“இல்லை, நம்ம மாதவன் வழியில செல்வியைப் பார்த்திருக்கான். கதிரை பிடிக்கலைன்னு சொல்ல சொல்லியிருக்கான். அவனை கல்யாணம் பண்ணாதன்னும் சொல்லியிருக்கான்.. அதான் அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு..” என்று மங்கை இழுக்க,
“அவன் ஒரு ஆளுன்னு அவன் பேசுறதை எல்லாம் பெரிசா எடுத்துக்காத மங்கை. அவனுக்கும் கதிருக்கும் ஏதோ பிரச்சனை போல.. அதனால அப்படி சொல்லியிருப்பான். அதைப் பத்தியெல்லாம் யோசிக்காத மங்கை…! செல்விக்கு எதுவும் வாங்கனும்மான்னு கேட்டு வை. மதுரை வரைக்கும் போயிட்டு வாங்கிட்டு வந்துடலாம்..!” என்றார் ராஜாங்கம்.
“சரிங்க..” என்றார் மங்கை.
“நல்ல புருஷன் நல்ல பொண்டாட்டி..” என்று செல்வி நக்கல் பண்ணி சிரிக்க,
“நாளைக்கு நீயும் இப்படித்தான் நல்ல பொண்டாட்டியா, கதிர் மாமாவுக்கு ஏத்த மனைவியா இருக்கணும்..” என்ற கயல் சிரிக்க,
“எப்படி..? பூம் பூம் மாடு மாதிரி எதுக்கெடுத்தாலும் தலையை ஆட்டிகிட்டா.. வாய்ப்பே இல்லை, அவன் தான் நான் சொல்றதைக் கேட்டு தலையை ஆட்டனும்..!” என்றாள் செல்வி.
“உன் பருப்பெல்லாம் கதிர் மாமாகிட்ட வேகாது செல்விக்கா..! மாமாவோட பவர் அப்படி. உங்க கல்யாண விஷயத்தை கேள்விப் பட்டதில் இருந்து, ஊருக்குள்ள நிறையப் பேர் வயிர் எரிஞ்சு போய் கிடக்குறாக. எல்லாம் கதிர் மாமாவை ஒருதலையாய் லவ் பண்றவங்க போல..?” என்று கயல் கிண்டல் பண்ணி சிரிக்க,
“உனக்கு மட்டும் எப்படி கயல் எல்லா விஷயமும் காதுக்கு வருது..?” என்று செல்வி ஆச்சர்யமாய் கேட்க,
“கம்பெனி சீக்ரெட்டெல்லாம் வெளிய சொல்லக் கூடாது செல்விக்கா..!” என்ற கயல்,
“எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு. கல்யாணத்துக்கு முன்னாடியே உனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. அவளுங்ககிட்ட இருந்து கதிர் மாமாவை காப்பாத்துறது தான் உன்னோட முதல் வேலையே…” என்றாள் கயல்.
“எல்லாம் காலக் கொடுமைடி..! இதெல்லாம் நீ சொல்லி, நான் தெரிஞ்சுக்கணும்ன்னு..!” என்று தலையில் அடித்தவள், கதிரைப் பற்றிய சிந்தனைகளில் ஆழ்ந்து போனாள்.
அடுத்து வந்த நாட்களில் அமுதாவிற்கும் நிச்சயம் முடிந்திருந்தது. அமுதாவும் வீட்டோடு தான் இருந்தாள்.
“என்னடா மாறா..? அமைதியா வர..?” என்று மாறனிடம் பேசிக்கொண்டே வரப்பில் நடந்து கொண்டிருந்தாள் செல்வி.
“போக்கா..! நீயும் கல்யாணமாகி கதிர் மாமா வீட்டுக்கு போய்ட்டா, என்கூட விளையாட, கூட்டாஞ்சோறு ஆக்கத்தான் ஆள் இல்லை.. அதை நினச்சாத்தான் கவலையா இருக்கு..” என்றான் மாறன் சோகமாய்.
“இதுக்குத்தான் இவ்வளவு சோகமா இருக்கியா..? நான் என்ன வேற ஊருக்கா போகப் போறேன். ஒரே ஊரு தானடா. நினைச்ச உடனே நீ கிளம்பி வந்துடு. நாம எப்பவும் போல போய் கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிடலாம்..!” என்றாள் செல்வி.
“அக்கா.. கதிர் மாமா வரார்க்கா..!” என்றான் மாறன்.
“இவன் என்னடா, நம்ம போற பக்கமெல்லாம் வந்துட்டே இருக்கான். மூக்கு வேர்த்துடும் போல..” என்ற செல்வி அவனைக் கண்டும் காணாமல் செல்ல,
“மாறா..?” என்றான் கதிர்.
“சொல்லுங்க மாமா..!”
“உங்கக்கா வீட்லயே இருக்க மாட்டாளாடா.. எப்பப் பாரு ஊரு சுத்திட்டே இருக்கா..? வெயில்ல கருத்துட்டா என்ன ஆகுறது..?” என்றான்.
“கதிர் அண்ணா, லட்சுமியம்மா கூப்பிடுறாங்க..!” என்றான் சின்னு தூரத்தில் இருந்து.
“இவன் வேற..? வரேன்னு சொல்லுடா..?” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவனைத் தாண்டி ஓடி விட்டாள் செல்வி.
ஓடிய செல்வியின் பின்னால் ஓடிய மனதை அடக்கிய கதிர்,
“இன்னும் கொஞ்ச நாள் தாண்டா கதிர். அப்பறம் எப்பவும் அவ உன் கைக்குள்ள தான்..!” என்று சிரித்தவன், அவளையே ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்த செல்வி, கதிர் இன்னமும் அவளைப் பார்த்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தவள், அவனுக்கு அழகு காட்டிவிட்டு சென்றாள்.
அவளைப் பொறுத்தவரை கதிரை அவள் விரும்பவில்லை. ஆனால், அவனுடன் கல்யாணப் பேச்சு பேசி முடித்ததில் இருந்து, இயற்கையாகவே பெண்களுக்குள் தோன்றும் ஒரு குறுகுறுப்பு. இனி அவளே நினைத்தாலும், கதிரை அவளுடைய வாழ்க்கையில் இருந்து விலக்க முடியாது என்று அவளுக்குத் தெரியும். படிப்பு ஒருபுறம் இருந்தாலும், மனதிற்குள் கல்யாண கனவுகளும் சிறகடிக்கத் தான் செய்தது.
அமுதாவும் தனக்குப் பார்த்த மாப்பிள்ளையின் போட்டோவை வைத்துக் கொண்டு, கனவில் டூயட் பாடிக் கொண்டிருந்தாள்.
“அப்படி என்னதான் இருக்கு அந்த போன்ல..? தூங்கி எந்திரிக்கிறதுல இருந்து, படுக்கைக்கு போற வரைக்கும் அதையே தான் பார்த்துட்டு இருக்க அமுதா..! இதெல்லாம் நல்லாவா இருக்கு..? உங்கப்பா என்னை முறைச்சுப் பார்த்துட்டு போறார். போற வீட்லயும் இப்படி போனையே நோண்டிகிட்டு இருந்தா, பெத்தவ என்னையத்தான் பேசுவாங்க..” என்று சாந்தா அவளைத் திட்டிக் கொண்டிருக்க, அவள் அதையெல்லாம் காதில் வாங்கியவளைப் போல் தெரியவில்லை.
“என்ன அமுதா..? நான் கழுதையா கத்திட்டு இருக்கேன்… காதுல வாங்காத மாதிரி இருக்க.. இப்பயிருந்து கொஞ்சம் அடுப்படிப் பக்கம் வந்தாத்தான கொஞ்சமாவது சமைக்க வரும்..?” என்று மீண்டும் ஆரம்பிக்க,
“அம்மா.. சும்மா சொல்லிட்டே இருக்க வேண்டாம். அதெல்லாம் நான் யூடூப் பார்த்து சமைச்சுக்குவேன். எந்த காலத்துல இருக்கீங்க?”என்றாள் அமுதா.
“ஏண்டி சொல்லமாட்டா..? உன்னை படிக்க வச்சது, நல்லது கெட்டது தெரிஞ்சுக்கட்டும்ன்னு தான். இப்படி எதிர்த்து பேசுறதுக்கில்லை.. எப்படியோ போ..! எங்க மானத்தை வாங்காம இருந்தா சரி..” என்றார் சாந்தா.
அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, அவளுக்குப் போன் வர, போனை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்று விட்டாள்.
“இப்ப எதுக்கு போனைத் தூக்கிட்டு ஓடுறா..? திருத்தவே முடியாது..” என்று புலம்ப மட்டும் தான் முடிந்தது சாந்தாவால்.
“நான் என் அண்ணாகிட்ட சொல்லுவேன்டா..!” என்றாள் மிரட்டும் தொனியில்.
“அட, என் மச்சான் வந்தா நான் பார்த்துக்கறேன் அமுதா செல்லம். எனக்கும் மச்சானைப் பார்த்த மாதிரி இருக்கும் பாரு..!” என்றான் உல்லாசமாய்.
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, போனை பட்டென்று ஆப் செய்தாள் அமுதா. பேசியவன் ஒரு காலத்தில் அவளுக்கு காதலன். பிறகு இருவருக்கும் செட்டாகவில்லை என்று பிரிந்து விட்டனர். இப்போது அவளுக்கு திருமணம் என்று தெரிந்தவுடன், மீண்டும் அவளுக்கு குடைச்சல் குடுக்க ஆரம்பித்திருந்தான் அவன்.
அமுதாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டில் சொல்லவும் பயமாக இருந்தது. அவன் சும்மா மிரட்டுகிறான்.. எதுவும் செய்ய மாட்டான் என்றே எண்ணினாள் அமுதா.
அமுதாவிற்கு திருமண தேதியை முடிவு செய்த ராஜாங்கம், செல்வியின் திருமணத்திற்கும் நாள் பார்க்க, அதற்கு பிறகு முகூர்த்த நாட்கள் எதுவுமில்லை. வைத்தால் அதே தேதி, இல்லையென்றால் இரண்டு மாதம் கழித்து தான் வைக்க முடியும் என்று ஜாதகத்தில் சொல்லிவிட, அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
மணிகண்டனுக்கும் யோசனையாக இருந்தது. இருவரும் ஒன்றாகத்தான் சென்றிருந்தனர்.
“இப்போ என்ன பண்றது ராஜாங்கம்..?” என்றார் மணிகண்டன்.
“எனக்கும் அது தான் ஒன்னும் புரியலை மாமா..” என்றார் ராஜாங்கம்.
“பேசாம ரெண்டு கல்யாணத்தையும் ஒரே நாள்ல வச்சுக்கலாம். முகூர்த்த நேரத்தை மட்டும் தள்ளி வச்சுக்கலாம்..” என்றார் மணிகண்டன்.
“அதுக்கில்லை மாமா..!எல்லாம் சரியா வருமா..? ஏற்கனவே சாந்தாவுக்கு மங்கையைக் கண்டால் ஆகாது. ரெண்டு பேரையும் ஒரே மேடையில வச்சுகிட்டு.. அந்த சம்பந்தியும் இருப்பாங்க..” என்று அவர் இழுக்க,
“அதெல்லாம் சரியா வரும் ராஜாங்கம். நாளும் நல்லா இருக்கு, யோசிக்க வேண்டாம்..” என்று அவர் சொல்ல, இவரும் தலையை ஆட்டி வைத்தார்.
செல்விக்கும், அமுதாவிற்கும் ஒரே நாளில் திருமணம் என்று குறிக்கப்பட்டது.
இதைக்கேட்ட, சாந்தா ஆடித் தீர்த்துவிட்டார் என்றால் மங்கைக்கும் கொஞ்சம் விருப்பமில்லை.
“இதெல்லாம் சரியா வருமாங்க..?” என்று ஒன்றுக்கு பத்து முறை கேட்டு விட்டார் மங்கை.
“அதெல்லாம் சரியா வரும் மங்கை..! நீ கவலைப் படாத..!” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“அவளுக்கும், நான் ஒன்னும் குறைஞ்சு போயிடலை..! அவள்லாம் ஒரு ஆளுன்னு அவளுக்கு பயந்துகிட்டு இருக்கிங்கம்மா..?” என்றாள் செல்வி.
“செல்வி.. முதல்ல உள்ள போ. நாங்க பேசிட்டு இருக்கும் போது, நீ குறுக்க வராத.” என்றார் மங்கை.
“இப்படியே என் வாயை அடைச்சிடுங்க..!!” என்றவள் எதுவும் பேசாமல் கடுப்புடன் சென்று விட்டாள்.
எரிச்சலுடன் இருந்த செல்வியிடம் வந்த கயல்..
“அக்கா..! கதிர் மாமா உன்கிட்ட பேசணுமாம். லைன்ல இருக்கார்..” என்று போனை நீட்ட,
“இப்ப பேசி என்ன ஆகப் போகுது.. போடி கடுப்பைக் கிளப்பாம. இருக்குற கடுப்புல இவன் வேற..?” என்று அவள் சிடுசிடுக்க, அது கதிரின் காதில் அப்படியே விழுந்து வைத்தது.
“மாமா..!” என்று கயல் இழுக்க,
“அவகிட்ட குடு கயல்..!” என்று அவன் உறுமிய உறுமலில், செல்வியின் மடியில் போனைப் போட்டுவிட்டு ஓடிவிட்டாள் கயல்.
“இவ ஒருத்தி..” என்று அவளைத் திட்டியவள், வேண்டா வெறுப்பாக போனை எடுத்து,
“இப்ப என்ன வேணும் உங்களுக்கு..?” என்றாள்.
“எதுக்குடி இவ்வளவு கோபமா இருக்க..?” என்றான் கொஞ்சம் அதட்டிய குரலில்.
“இப்ப கல்யாணம் வேணும்ன்னு யார் அழுதா..? எல்லாம் உன்னால வந்தது தான்..! நீ மட்டும் பொண்ணு கேட்க சொல்லாம இருந்திருந்தா, இப்ப இந்த பிரச்சனையே இல்லை..” என்று எறிந்து விழுந்தாள்.
அவள் பேசிய பேச்சில் கதிருக்கும் கோபம் வந்தது. இருந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டான்.
“சரி சொல்லு, என்ன பிரச்சனை..?” என்றான் நிதானமாக.
ஏனோ அவனின் அந்த அனுசரணையான குரலில் அவளுக்கு கண்கள் கலங்கியது. அவளையும் அறியாமல் அழுது கொண்டிருந்தாள்.
“உங்கக்காவுக்கும் உனக்கும் ஒரே நாள் கல்யாணம்ன்னு சொன்னது தான் உனக்கு பிரச்சனை இல்லையா..?” என்றான்.
“அதுவும் இருக்கு..!அப்பறம் ஒரு விஷயம் அவ எனக்கு அக்கால்லாம் கிடையாது..” என்றாள் வீராப்பாய்.
“அதை உங்கப்பா தாண்டி சொல்லணும்..” என்றவன் சிரித்து வைக்க,
“கிண்டல் பண்றிங்க தான..? போங்க என் கூட பேசாதிங்க..?” என்றவள் போனை வைத்து விட்டாள்.
உண்மையாகவே அவளுக்கு ஏன் அப்படி செய்கிறோம் என்று அவளுக்கே தெரியவில்லை. எல்லா விதத்திலும் தாங்கள் இரண்டாவதாய் இருக்கிறோம் என்ற எண்ணம் சிறு வயது முதல் அவள் மனதில் ஆழமாய் பதிந்து போனது தான் காரணம். இந்த கல்யாணம் முடிவதற்குள் அமுதா என்னவெல்லாம் சீன் போடப் போகிறாளோ..? என்று நினைத்தே ஒரு வழியாகியிருந்தாள் செல்வி.
“என்ன செல்வி..? இதென்ன பொறாமை, போட்டி எல்லாம் போட்டுக்கிட்டு இருக்க..? இதெல்லாம் சொல்லிக் குடுத்து தான் வளர்த்தேனா..?” என்று மங்கை சத்தம் போட்டதற்கு கூட,
“அம்மா..! இதெல்லாம் இயற்கையா எல்லார் மனசுக்குள்ளயும் வர ஒரு உணர்வு. வரக்கூடாதுன்னு நானே நினைச்சாலும் முடியாது..!” என்று பட்டென்று சொல்லிவிட்டாள்.
ராஜாங்கம் தான் இரண்டு குடும்பத்திற்கும், இரண்டு மகளுகளுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழித்தார். பணம் ஒரு பிரச்சனையில்லை என்றாலும், உரிமை உணர்வு ஒவ்வொருவருக்கும் தலை தூக்க, அவரின் தலை தான் உருண்டது.
இருவரின் கல்யாண நாளும் வந்தது. கலவரமும் கூடவே வந்தது.