சுந்தர் எழுந்து காலைக்கடன்களை முடித்து சட்டை மாட்டிக்கொண்டு வெளியே வருவதற்குள் ப்ரியா தவித்து விட்டாள். அவள் சிறு பெண்ணாக இருக்கும் போதில் இருந்து சுந்தர் களிமண்ணாக எடுத்து வந்து இருவருமாக பிள்ளையாரும் மூஞ்சூறும் செய்வார்கள்.
சில வருடங்களாக அவன் தொழிலில் அதிக நேரம் செலுத்த ஆரம்பித்ததில் இருந்து ரெடிமேட் பிள்ளையார் தான். மூஞ்சூறுக்கு மட்டும் களிமண் வாங்கி மகளிடம் கொடுத்து விடுவான். களிமண்ணில் மூஞ்சூறு என்ற பெயரில் அவள் செய்யும் விசித்திர பிராணிக்கு சிவப்பு குந்து மணி ஒட்டி அதற்கு அவளே தொடுத்த எருக்க மாலை போட்டு செய்ய ப்ரியாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.
அதனால் அன்று பிள்ளையார் சதுர்த்தி என்று தெரிந்ததும் ப்ரியாவால் பொறுமையாக இருக்க முடியவில்லை. அதோடு அம்மாவும் அப்பாவும் முன்பு போல இல்லை என்று அந்த பிஞ்சு உள்ளம் அறிந்தே இருந்தது.
முன்பு மல்லி சுந்தர் வீட்டில் இருக்கும் நேரத்தில் அவனை சுற்றி சுற்றி வந்து “அத்தான் …! அத்தான்..!” என்று அழைத்துக்கொண்டு அவனை கவனிப்பதும் அவனுமே “மல்லிமா!மல்லிமா!” என்று அவளுக்கு ஆசையாக முத்தம் கொடுப்பது போல அம்மாவுக்கும் முத்தம் கொடுப்பதும் பல முறை பார்த்து இருக்கிறாள்.
அதை பொறுக்க முடியாமல் இருவருக்கும் நடுவே ஓடி பிரித்துக் கூட விட்டு இருக்கிறாள். சுந்தர் விளையாட்டாக “ஆஹா…! வில்லி வந்துட்டா மல்லி….” என்று சிரித்துக்கொண்டே சொன்னாலும் விட மாட்டாள்.
நடுவே அம்மா மூன்று மாதங்களாக இல்லாத போது அவளுடைய சின்னஞ்சிறு உலகம் ஆட்டம் கண்டு போனது. என்ன காரணம் என்று புரியாவிட்டாலும் அவர்கள் இருவருக்கும் இடையே எதோ சரியில்லை என்று புரிய அவளிடம் ஒரு பயவுணர்வு நிரந்தரமாகிப் போனது.
தன் சின்ன உலகத்தை தான் தான் மீட்க வேண்டும் என்று அந்த சிறு பிள்ளைக்கு புரிந்து போனது. அம்மா மறுபடி வந்ததில் இருந்து அப்பாவை தவிர்ப்பதும் அப்பா அவர்கள் இருக்கும் நேரம் வீட்டிலேயே இல்லாது இருப்பதும் அவளும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்?
இருவரும் அவளிடம் அதே பிரியமாக பேசி கவனித்துக்கொண்டாலும் முன்பு போல மூவருமாக அனுபவிக்கும் வண்ணம் வீட்டில் சிரிப்போ சந்தோஷமான தருணங்களோ இல்லை என்பதும் அவளுக்குப் புரியவே செய்தது.
அன்று அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் அப்பாவும் இருக்க பழைய சூழலை கொண்டு வரும் முயற்சியில் அவளுக்கு தெரிந்த வரை செய்ய இறங்கி விட்டாள்.
சுந்தர் அறையை விட்டு வெளியே வர ப்ரியா அவன் பக்கத்தில் உட்கார்ந்தபடி குரல் கொடுத்தாள்.
“அம்மா! அப்பாக்கு சீக்கிரம் காபி குடு மா! நாங்க பிள்ளையார் வாங்கப் போகணும்….!”
சுந்தர் மகளின் குரலைக் கேட்டு ஆர்வமாக சமையல் அறை வாசலை எட்டிப் பார்த்தாலும் நிச்சயம் மல்லி தனக்கு காபி கொண்டு வந்து தரப்போவதில்லை என்று அவனுக்குத் தெரியும் தானே?
அவனுக்கு வேண்டும் என்றால் அவன் தான் போய் போட்டுக் குடிக்க வேண்டும் என்று மல்லி ஏற்கனவே சொன்னது தானே?
அதனால் “வேணாம் பாப்பா! நாம கடைக்கு சீக்கிரம் போகலாம்…ஏற்கனவே லேட் ஆயிருச்சு பாரு….” என்று கிளம்ப ப்ரியா அவனை பிடித்து மீண்டும் உட்கார வைத்து “அம்ம்ம்மா….! சீக்கிரம் வா…..” என்று கத்த மல்லி சமையல் அறை வாசலில் நின்று வெளியே எட்டிப் பார்த்தாள்.
சுந்தர் மல்லி இருவரின் பார்வையும் உரசிக்கொள்ள இருவருக்கும் அது தர்மசங்கடமான தருணம். தங்களின் இடையே இருக்கும் விரிசல் மகளுக்கு தெரியக்கூடாது என்று தானே மல்லியுமே மறுபடி இங்கே வந்தது.
சுந்தருக்குமே இந்த மூன்று மாதங்களில் மகளின் வாழ்வில் அம்மா எவ்வளவு முக்கியம் என்று தெரிந்ததால் தானே மல்லியை அழைக்கப் போனான்?
இங்கே மல்லி மறுபடி வந்த பிறகு தனக்கும் மனைவி எவ்வளவு முக்கியம் என்று ஆழ்மனதில் தெரிந்தாலும் இறங்கிப்போய் அவளிடம் சமாதானம் செய்யவோ மன்னிப்பு கேட்கவோ அவன் அகம் விடவில்லை.
மகளின் முன்பு இருவருமே தங்கள் கசப்பை மறைத்து வைக்க நினைக்க அது தெரியாத அந்த குழந்தை மனம் அவர்களை சேர்த்து வைத்து தன் கூட்டை காப்பாற்ற துடித்தது.
மகளின் அதட்டலில் சுந்தர் நெளிய மல்லி அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு பேசாமல் சமையல் அறைக்குள் சென்று மறைந்தாள். சில நிமிடங்களில் அவள் வெளியே வந்தபோது அவள் கையில் அவனுக்கான காபி ஆவி பறக்க இருந்தது.
நேராக கொண்டு வந்து அவர்கள் முன் இருந்த மேசையில் டொக்கென்று வைத்து விட்டு “உங்க அப்பாக்கு காபி குடுத்துட்டேண்டி தாயே…!” என்றவள் நொடித்துக் கொண்டு சமையல் அறைக்கு நடக்க ப்ரியா அப்பாவை பெருமையாக பார்த்து “குடிப்பா! நாம கடைக்கு போவோம்…! நீ குடிக்கிறதுக்குள்ள நான் அம்மா கிட்ட என்ன வாங்கணும் என்று கேட்டுட்டு வரேன்….!” என்று சொல்லி விட்டு சமையல் அறைக்குள் ஓடிப் போனாள்.
பல முறை இப்படி நடந்திருக்கிறது தான். மல்லி அவனிடம் சிறு ஊடல் கொண்டு முறுக்கிக்கொண்டு இருக்கும் போது அவனே மகளை தூண்டி விட்டு இப்படி அவளை சீண்டி இருக்கிறான்.
அதை நினைத்துப் பார்த்தவன் அன்று போலவே இன்றும் மல்லி காபி கொண்டு வந்து கொடுத்ததில் எல்லாம் பழையபடி மாறும் என்ற நம்பிக்கையில் சிறு புன்னகையுடன் காபியை அருந்தினான்.
உள்ளே மகள் அம்மாவை சமாதானம் செய்வதும் பிறகு அம்மாவும் மகளும் எதோ பேசி சிரிப்பதும் கேட்க அவன் நம்பிக்கை இன்னும் கூடியது.
மல்லி அன்று மல்லி கிச்சனுக்கு விடுமுறை விட்டிருந்தாள். எப்போதும் விசேஷ நாட்களில் அதிகம் ஆர்டர் வராது என்று அனுபவத்தில் தெரிந்து கொண்டிருந்தாள். பெரும்பாலும் அவளிடம் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் வெளியூரில் இருந்து வந்து இங்கே தனியாக தங்கி அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் தான்.
பிள்ளையார் சதுர்த்தி வேறு வெள்ளி அன்று வந்திருக்க நிச்சயம் ஆர்டர் வராது என்று அவளே விடுப்பு விட்டிருந்தாள். சாவித்திரி பண்டிகையை அக்கா வீட்டில் அம்மா அப்பாவோடு கொண்டாட முந்தின நாளே கிளம்பி இருந்தாள்.
மல்லி மகளுக்காக எதையும் விடாமல் செய்ய வேண்டும் என்று பிள்ளையார் சதுர்த்திக்கு கொஞ்சமாக கொழுக்கட்டையோடு பாயசம், வடை,சாம்பார் சாதம் மட்டும் செய்து அதோடு ஓய்வு எடுக்க நினைத்திருந்தாள்.
அதனால் காலையிலேயே எழுந்து வேலைகளை விரைவாக செய்து கொண்டிருந்தாள். அப்பாவும் மகளும் வந்ததும் செய்தவற்றை படைத்து விட்டு தூங்கி ஓய்வெடுக்க கெஞ்சியது உடல்.
மூன்று மாதங்களாக சமைக்கிறாள் என்பதால் இந்த கடின வேலை பழகி விட்டாலும் தொடர்ந்து செய்த போது உடம்பு வலி இன்னும் இருக்கத்தான் செய்தது.
ஆனால் இனி யாரையும் அண்டி இருக்கக்கூடாது என்ற வைராக்கியம் அவளை முன்னே தள்ள பிடிவாதத்தில் செய்து கொண்டிருந்தாள். அந்த கஷ்டமான நேரங்களில் எல்லாம் சுந்தரின் மேல் அவளின் கோபம் இன்னும் கூடும்.
பத்து ஆண்டுகளாக அதிகம் நினைக்காத பெற்றவர்களை இந்த மூன்று மாதங்களில் அதிகம் நினைத்து இருக்கிறாள் மல்லி. சுந்தர் பின்னால் வராமல் இருந்திருந்தால் தன் வாழ்க்கை எப்படி போயிருக்கும் என்று யோசிப்பாள்.
சாவித்திரி போல படித்து சொந்தக்காலில் நின்று தன் வாழ்க்கைக்கான முடிவுகளை தானே எடுத்து இருப்போமோ என்று எண்ணுவாள். ஆனால் இனி அதை மாற்ற முடியாது தானே?
அப்பாவும் மகளும் கடை வீதிக்கு போய் பல வண்ணப் பிள்ளையார்களை கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்து விட்டு ப்ரியா கேட்ட பிள்ளையாரை சுந்தர் வாங்கினான். கடைக்காரனிடம் பேசி ப்ரியா கேட்ட அளவு களிமண்ணும் வாங்கிக் கொண்டே கடையை விட்டு கிளம்பினர்.
அடுத்து குடை, எருக்க மாலை , அருகம்புல் என வழக்கமாக வாங்கும் பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு சிறிது தூரம் நடந்து வர பெரிய சைஸ் நாவற்பழங்கள் விற்பதை சுந்தர் பார்த்தான். மல்லிக்கு நாவற்பழங்கள் ரொம்ப பிடிக்கும். அதே போல விளம்பழத்தில் வெல்லம் கலந்து சாப்பிடவும் இஷ்டம்.
திருமணம் ஆன புதிதில் நாவற்பழத்தை சாப்பிட்டு வயலட் நிறமான நாக்கை காட்டி அவள் சிரிக்கும் போது சுந்தர் மயங்கி அவளை நெருங்கி சில நிமிடங்களுக்கு பிறகு விலகும் போது அவன் உதட்டிலும் அந்த வயலட் நிறம் ஒட்டி இருக்கும்.
அதனால் எப்போதுமே மற்ற பழங்களோடு இவைகளையும் வாங்கி விடுவான். அன்றும் வாங்க வேண்டும் என்று நினைத்து அந்த கடையை நோக்கி நடக்கும் போதே ப்ரியாவும் அந்த கடையை பார்த்து விட்டு உற்சாகமாக கூவினாள்.
“அப்பா! நாவப்பழம் பா….! வாங்குப்பா..! அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் இல்ல…?” என்று கேட்டவள் சுந்தர் வருமுன் குதித்துக்கொண்டு போய் அந்த கடையின் வாசலில் நின்று கொண்டு அவனுக்காக காத்திருந்தாள். அவள் தோரணை வாங்கினால் தான் இந்த இடத்தை விட்டு நகருவேன் என்று இருந்தது.
சுந்தர் சிரித்துக்கொண்டே “நானே வாங்கறதா தான் இருந்தேன் பாப்பா…! என்ன விலைப்பா?” என்று கேட்டபடி அருகே வர ப்ரியாவும் வேடிக்கை பார்த்தாள்.
இருவருமாக எல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழையும் போதே மல்லி எல்லாம் செய்து முடித்ததால் வாசனை வாசலிலேயே மூக்கை துளைத்தது. அந்த வாசமே சுந்தருக்கு எந்த அளவு மல்லியின் சமையலை தேடி இருக்கிறோம் என்று யோசிக்கும் போதே வயிறு இரைந்து நானும் தான் என்றது.
ப்ரியா குதித்துக்கொண்டு உள்ளே சமையல் அறைக்குள் ஓட மல்லி மேடையை துடைத்துக்கொண்டு இருந்தாள். சமைத்தவை எல்லாம் மேடை மேல் அழகாக மூடி வைக்கப்பட்டு இருந்தது.
“அம்மா! அம்மா..! அப்பா உனக்காக என்ன வாங்கி இருக்காருன்னு சொல்லு பாப்போம்? இங்க பாரு உனக்கு பிடிச்ச நாவப்பழம் …வி…விளாபழம்….! இந்தாமா…!” என்றவளுக்கு இன்னும் விளாம்பழம் என்று வரவில்லை.
கேள்வி கேட்டு தானே பதிலும் சொன்ன மகளின் உற்சாகத்தை குறைக்க விரும்பாமல் “அப்படியா பாப்பா…! கொண்டு போய் சாமி கிட்ட வை. பூஜை முடிச்சிட்டு சாப்பிடலாம்….வா…முதலில் குளிக்கலாம்….” என்று சொன்னவள் அதை கையில் கூட வாங்கவில்லை.