மல்லி தூங்கி எழுந்தபோது மதியம் இரண்டு மணி ஆகி இருந்தது. இரவு முழுதும் தூங்காதது, அழுதது எல்லாம் சேர்ந்து அவளுக்குஅப்படி அடித்துப் போட்டது போல ஒரு ஆழ்ந்த உறக்கம். நேற்று மாலையில் இருந்து எதுவும் சாப்பிடாததால் விழித்ததும் வயிறு இரைந்தது.
மெல்ல எழுந்து குளித்து வேறு உடை மாற்றி தலை வாரிப் பின்னும் அளவுக்கு பசி விடாததால் ஒரு கொண்டை மட்டும் போட்டு நெற்றியில் ஒரு பொட்டை ஒட்டிக் கொண்டவள் எப்போதும் உள்ள வழக்கமாக சாமி அறையில் போய் ஒரு கும்பிடு போட்டு சமையல் அறைக்குப் போனாள்.
காமாட்சி அப்போதும் கூடத்தில் அமர்ந்து அவளை முறைத்துக் கொண்டு இருந்தார். மல்லி அவரைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. அது காமாட்சியின் மனதில் இன்னும் வன்மத்தை தான் வளர்த்தது.
காலையில் தான் அவ்வளவு கொம்பு சீவியும் சுந்தர் மல்லியை எதுவும் கேட்காமல் அமைதியாக வந்ததே காமாட்சிக்கு கோபம் தான்.. இதற்கு காரணம் பாதி அவர் இயல்பு என்றால் அதை விட இங்கேயே ஒட்டிக்கொண்டு இருந்தால் தான் வயதான காலத்தில் நிம்மதியாக வண்டி ஓடும் என்ற கணக்கும் தான்.
அதனால் மகனிடம் தழைந்து போய், மிரட்டி என தன் இடத்தை தக்க வைத்துக்கொள்ள முயன்றார். சுந்தர் எதுவும் கேட்காமல் வர அவன் முகம் தீவிர சிந்தனையில் இருப்பதை பார்த்து இப்போது அடக்கி வாசிக்க வேண்டும் என்று வாயை மூடிக் கொண்டார்.
அதற்காக அன்றைய சமையல் பொறுப்பையும் எடுத்துக் கொள்ளவில்லை. சுந்தர் பால் இருப்பதை பார்த்து விட்டு தங்கள் மூவருக்கும் காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தான்.
அதை இருவரும் வாங்கி அமைதியாக குடிக்க சுந்தரின் பார்வை இன்னும் உணவு மேஜை மேல் முதல் நாள் மல்லி செய்திருந்த திருமண நாள் விருந்தின் மேல் படிந்தது.யாரும் சாபிடாததால் இன்னும் அப்படியே இருந்தது.
அவன் மேலே பேசுமுன் “ஓட்டல்ல சாப்பிடறது அப்பாவுக்கு சரி வராது பா. எனக்கும் சமைக்க முன்ன மாதிரி உடம்பு முடியல. அஞ்சு நிமிஷம் நின்னாலே தலை சுத்துது. மூச்சு முட்டுது….தயிர் சாதம்னாலும் வீட்டுல செஞ்சா தான் சரி வரும்…” என்று காமாட்சி தன் இயலாமையோடு வெளியில் வாங்குவதும் சரி வராது என்று சொல்லி விட சுந்தர் பொறுமை இழந்த மூச்சை விட்டான்.
அவனுடைய தொழிலில் சில வாரங்களாக பிரச்சனைகள் அடுத்து அடுத்து வந்து கொண்டிருந்தன.
சுந்தர் மகள் பிரியா பெயரில் கிராமங்களில் இருந்து பருப்பு வகைகள், வெல்லம், உப்பு என மொத்தமாக வாங்கி அதை சிறிய தொழிற்கூடம் வைத்து பாக்கெட்டில் போட்டு விற்க ஆரம்பித்து இப்போது ஓரளவுக்கு நன்றாகவே போய்க் கொண்டிருந்தது.
அடுத்து எண்ணெயும் இது போல பாக்கெட்டில் விற்று தொழிலை இன்னும் விரிவு செய்ய விரும்பினான். கூட நம்பிக்கையான ஆட்களாக பார்த்து பொறுப்பில் வைத்திருந்தாலும் முக்கியமான வேலைகளை எல்லாமே அவன் தான் பார்க்க வேண்டியிருந்தது.
அதனால் அகலக்கால் வைக்க விரும்பாமல் வங்கியில் கடன் வாங்கி முதலில் கடலை எண்ணெய் மட்டும் விற்கலாம் என்று முடிவு செய்திருந்தான். அதற்கான வேலைகள் ஏகமாய் இருந்தன.
வங்கியில் லோன் வாங்குவது, ஏற்கனவே பருப்பு வகைகள் கொள்முதல் செய்யும் இடங்களில் நிலக்கடலையின் விலை விவரம் விசாரிப்பது, அங்கேயே செக்கில் ஆட்டி எண்ணெயாக வாங்குவதா அல்லது இங்கே வாங்கி எண்ணெய் ஆட்டி விற்பதா என அவன் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டிய வேலைகள் அதிக மனஅழுத்தம் கொடுத்தன.
தொழில் விரிவடைய அடைய பொறுப்பாக கூட யாரும் பார்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவனுக்கு கூட நிற்க மல்லியை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?
இருபத்தி மூன்று வயதில் பதினெட்டு வயது மல்லியைக் கைப்பிடித்து சென்னை வந்த போது அவன் உள்ளம் முழுக்க தான் சாதித்து காட்ட வேண்டும் என்ற வெறி மட்டுமே இருந்தது. காமாட்சி எல்லாவற்றுக்கும் அண்ணனிடம் போய் நின்றது தவறுதான் என்றாலும் அம்மா மல்லிக் காட்டை கேட்டதற்கு சின்ன வயதில் இருந்து அவனுக்கு என்று சொல்லி வளர்த்த மல்லியையும் தர மாட்டேன் என்று மாமா சொன்னதில் அவனுக்கு அவர் மேல் கோபத்தை விட வருத்தம் தான் அதிகம்.
மல்லி பள்ளிக்கு செல்லும் சிறு பெண். எப்படியும் அவனுக்கு மனைவியாகப் போகிறவள் என்று அவளிடம் தள்ளி நின்றவன் இப்போது அவள் தன்னை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொன்னால் மட்டுமே மாமாவால் மறுக்க முடியாது என்று நினைத்தான்.
அதனாலேயே மல்லியை பள்ளிக்கு போகும் வழியில் பேசிப் பேசி அவன் பக்கம் இழுத்தான். அதில் எந்த தவறும் இருப்பதாக அவன் நினைக்கவில்லை. வீட்டில் ஏற்கனவே பெரியவர்கள் பேசிய சம்பந்தம் தானே?
ஆனால் அவன் மல்லியை பார்ப்பது அவன் மாமாவுக்கு தெரிந்து போய் மல்லியை வீட்டில் வைத்துக் கொண்ட போது அவனே மாமா வீட்டுக்கு போனான்.
அப்போதும் அவரிடம் உங்க சொத்து வேண்டாம் மல்லியை மட்டும் கொடுத்தாலே போதும். உங்க சொத்து எதுவும் வேண்டாம். அவர் ஆசி இருந்தால் போதும்.தானே உழைத்து முன்னேறி விடுவேன் என்று பணிவாக எடுத்தும் சொன்னான்.
ஆனால் அவர் காமாட்சி மேல் இருந்த கோபத்தில் இன்னும் மீதி வைத்திருந்தார்.
“ஏன் உங்க அம்மா கேட்டு நான் இல்லைன்னதும் இப்ப உன்ன அனுப்பி இருக்காளா? நீயும் என் பொண்ணு மனச கலைச்சு ஏன் பேச்சை கேட்டுட்டு இருந்தவ இப்ப நீ தான் வேணும்னு நிக்கறா. முன்ன உங்க அம்மா மல்லிக்காட கேட்டு கொசுறா மல்லிய கேட்டா. இப்ப நீ மல்லிய கல்யாணம் பண்ணி எப்படியும் என் பொண்ணு மூலமா அதே காட்ட வாங்கிடலாம் என்று பார்க்கறே!
எங்கே உனக்கு வக்கிருந்தா கட்டின புடவையோட என் பொண்ண கட்டி கூட்டிட்டு போய் ஜெயிச்சு காட்டேன் ? பாப்போம!. அப்ப நீ ஒரு ஆம்பள என்று நான் ஒத்துக்கறேன். அப்படி உன்னால முடியலனா வந்து என் காலில் விழுங்க. அப்ப என்னால முடிஞ்சத செய்யறேன்…” என்று அவன் தன்மானத்தை சீண்ட சுந்தர் மல்லியோடு வெளியேறினான்.
சீனிவாசன் ஒரு மாதிரி முசுட்டு மனிதர். எவ்வளவுக்கெவ்வளவு பார்க்கிறாரோ அதே அளவு வேண்டாம் என்று வைத்து விட்டால் வேண்டாம் தான்.
சுந்தர் மல்லியை அப்போது உண்மையாக நேசித்தான் தான். சின்னப் பெண்ணை வீட்டை விட்டு கூட்டி வந்திருக்கிறோம் என்று அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டான்.
ஆனால் தொழிலில் வேலைபளு ஏற ஏற என்ன தான் மல்லி அவனையும் அவன் மகளையும் வீட்டையும் கவனித்துக் கொண்டாலும் அது போதவில்லை.
அவனுக்கு இப்போது மல்லி கொடுத்த கவனிப்பு போதவில்லை. அவளால் அவன் உடலுக்கு துணையாக இருக்க முடிந்ததே தவிர அவன் மனதுக்கு ஏற்ற துணையாக இல்லை என்பது ஏமாற்றமாக ஆனது.
அவளிடம் வீட்டு விஷயங்களைத் தவிர வேறு பேச முடியவில்லை. அவன் தொழிலைப் பற்றி, அதிலுள்ள அரசியலைப் பற்றி, அவன் முயற்சிகளைப் பற்றி ,அவன் வருங்கால கனவுகளைப் பற்றி என எதையும் அவளோடு பேச முடியவில்லை.
அவள் ஞானம் அதிக பட்சம் அன்று அவனுக்கு என்ன சாப்பிட வேண்டும் என்ற கேள்வியோடு நின்று போக வீடு சலிக்க ஆரம்பித்தது.
வீட்டில் அவள் தந்த ஆசுவாசம் தான் அவனை இவ்வளவு தூரம் சாதிக்க வைத்தது என்பதை அவன் உணரவே இல்லை.
அவன் தொழில் நண்பர்களில் பலரின் மனைவிகள் படித்து குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு கணவருக்கு தொழிலிலும் தோள் கொடுப்பதை பார்த்து அவனுக்கு மல்லி அப்படி இருக்கக் கூடாதா என்ற ஏக்கம் அவன் பணிச்சுமை கூட க்கூட அதுவும் வளர்ந்தது.
அதையெல்லாம் நினைத்தவனுக்கு மல்லி இல்லையென்றால் வீடு ஒரு நாள் கூட தாங்காது என்று புரியவில்லை. புரியும் போது அவள் இல்லை.
மல்லி ,மகள் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவாள் என்பதால் அவளுக்கும் சேர்த்து என்ன செய்யலாம் என்று பார்த்தாள். முதல் நாள் அவள் செய்த உணவுகளை தான் யாரும் உண்ணவில்லையே? சிக்கன் சுக்காவை கிரேவி சேர்த்து சப்பாத்தி செய்தால் ப்ரியா விரும்பி சாப்பிடுவாள். நிறைய எண்ணெய் விட்டு நன்றாக வதக்கி செய்திருந்ததால் கெட்டிருக்காது என்று நினைத்தாள்.
மல்லி திரும்பி மேசையைப் பார்க்க அது காலியாக இருந்தது. எங்கே என்று தேட அதிலிருந்த உணவெல்லாம் காலியாகி சமையல் அறை சிங்கில் தேய்ப்பதற்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தன.
காமாட்சி இப்படி சொன்னதும் சுந்தர் அப்படி ஒன்றும் அம்மாவுக்காக உருகி விடவில்லை.”அம்மா! இப்ப நா அவசரமா ஒரு முக்கியமான வேலைக்கு போகணும். அதனால எனக்கு சமைக்க எல்லாம் நேரம் இல்லை. நீங்களே மெதுவா கொஞ்சம் சாதம் வெச்சு சாப்பிட்டுக்கங்க..நான் வெளிய பார்த்துக்கறேன்…” என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டான்.
காமாட்சிக்கு இப்போது மகன் மேல் கடுங்கோபம். அதற்கும் மேலே மல்லி மேலே. ஆனால் காட்ட இது நேரம் இல்லையே.
அவன் செல்லும் வரை சோகமாக முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தவர் அவன் கிளம்பியதும் மேஜையில் இருந்த உணவுகளை திறந்து பார்த்தார்.
எல்லாம் மல்லி இரவு ஒன்பது மணிக்கு மேல் சுந்தருக்காக செய்தது தானே? அதனால் எல்லாமே நன்றாக இருந்தன.
அதை சூடு செய்து இருவரும் நன்றாக சாப்பிட்டனர். காமாட்சியும் சரி, சுந்தரும் சரி மல்லியை பற்றி ஒரு நொடி கூட நினைக்கவில்லை.உடம்புக்கு முடியாமல் அவள் எழுந்து என்ன சாப்பிடுவாள் என்று யோசிக்கக் கூட ஆள் இல்லை.
பத்து வருடங்களாக அவள் பார்த்துப்பார்த்து இவர்களுக்கு செய்ய சுந்தர் கொடுத்த மன உளைச்சலால் ஒரு நாள் படுத்து விட்டவளுக்கு இது தான் நிலைமை.
சுந்தர் நிச்சயம் முதல் நாள் செய்ததை சாப்பிட மாட்டான் என்று மல்லிக்கு தெரியும். அதனால் அத்தையும் மாமாவும் தான் சாப்பிட்டிருக்க வேண்டும் என்று புரிந்து கொண்ட மல்லிக்கு முதல் நாள் அத்தை கொடுத்த கிருத்திகை விளக்கம் நினைவு வந்தது.
அன்று செவ்வாய்க்கிழமை. அன்று மட்டும் அசைவம் அதுவும் முதல் நாள் செய்தது பரவாயில்லையா?
மகள் வரும் நேரம் என்பதால் வேக வேகமாக நூடல்ஸ் செய்து வைத்தவள் தானும் அதில் கொஞ்சம் சாப்பிட்டு தனக்கு மட்டும் காபி போட்டு குடித்தாள்.
அடுத்த சில நாட்களுக்கு சாப்பிடும் திட உணவு அது தான் என்று அவள் அறியவில்லை. அவள் சாப்பிட்டு முடிக்கும்போது சரியாக ப்ரியாவும் வந்து விட அவளை கை கால் கழுவி சாப்பிட வைத்து படிக்க உட்கார சொன்னவள் மாரியம்மன் கோயிலுக்கு கிளம்பி விட்டாள்.
அவள் கிளம்பும் வரை என்ன செய்கிறாள் பார்ப்போம் என்று பார்த்துக்கொண்டு இருந்த காமாட்சி அவள் கோயிலுக்கு கிளம்பவும் “எங்க கிளம்பிட்டே?” என்று அவளை மறித்தார்.
மல்லிக்கு அவரிடம் பேசவே பிடிக்கவில்லை. சுந்தரே அவளை நினைக்கவில்லை எனும்போது அவளுக்கும் இவர் யாரோ தானே?
அதனால் :கோயிலுக்கு…” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டாள். அத்தை என்று கூப்பிடக் கூட பிடிக்கவில்லை.
“எங்களுக்கு இப்ப டிபன் சாப்பிடுற நேரம். இன்னும் காபி கூட குடிக்கல. காலையில் இருந்து நாங்க என்ன ஆனோம்? மாமா உடம்புக்கு முடியாதவர் எப்படி இருக்கார்னு கூட பாக்கல. நீ பாட்டுக்கு கிளம்பிட்டே…? கஷ்டப்பட்டு நாங்க பெத்து வளத்த புள்ளைய கட்டிக்கிட்டு தான் இப்ப நீ இங்க பவிஷா இருக்கே? அந்த விசுவாசம் உனக்கு கொஞ்சமாவது இருக்கா? வாழ்வு கொடுத்தவனுக்கு என்ன பதிலுக்கு செஞ்சே நீ?”
காமாட்சி கேட்கவும் மல்லி ஒரு நிமிடம் கொதித்துப் போனாள். சுந்தர் ஒழுங்காக இருந்தால் இவரால் இந்த இரண்டு நாட்களாக பேசிய பேச்செல்லாம் பேச முடியுமா? இவரை கிழிக்க ஒரு நொடி கூட ஆகாது. ஆனால் அவளுக்கு இவர் பொருட்டு இல்லை.
அவளுக்கு உள்ளே இருக்கும் எரிச்சலுக்கு அணையாக அவள் நிராதரவான நிலை தான் இருந்தது.
சுந்தர் செய்த வேலைக்கு இந்த அம்மா என்னை கேட்க வேண்டியது தான் என்று நினைத்தவள் அந்த கோபத்தை அடக்கினாள்.அதற்கான இடம் வேறு.
“ஒ! அப்ப நீங்க கஷ்டப்பட்டு வளத்த உங்க பையன் வந்ததும் அவர் கிட்டயே கேளுங்க..! எனக்கு நீங்க எதுவும் செஞ்சதில்லை. எங்கப்பா, அம்மா, நான் என்று எங்க குடும்பம் தான் உங்களுக்கு செஞ்சிருக்கோம். நீங்க குடுத்த வாழ்வுக்கு இதுவே அதிகம்…” என்று முகத்தில் அறைந்தது போல் சொன்னவள் காமாட்சியின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் வெளியேறி விட்டாள்.
எப்போதுமே செவ்வாய்கிழமைகளில் அவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் மாரியம்மன் கோயிலுக்கு செல்வது வழக்கம் தான் என்றாலும் அன்று ராகுகாலத்தில் விளக்கேற்றினாலாவது தன்னைப் பிடித்த ராகுகாலம் போகாதா என்ற நப்பாசை.
திருமணம் ஆனதில் இருந்து அவளிடம் இது ஒரு பழக்கம். எந்த சந்தோஷமோ கவலையோ துக்கமோ அதை அந்த கோயிலில் இருக்கும் துர்க்கையிடம் சொன்னால் ஒரு ஆறுதல்.
கையில் சூலத்துடன் செவ்வாடை உடுத்தி நாக்கை துருத்தி கண்களை உருட்டி விழிக்கும் துர்க்கை அவள் கண்களுக்கு மட்டும் தாயைப் போல பரிவாக பார்ப்பதாக தோன்றும்.
சந்தோஷமென்றால் அவளும் சிரிப்பாள். வருத்தமென்றால் பரிவாக பார்ப்பாள். கவலை என்றால் நானிருக்க பயமேன் என்று அடைக்கலம் தருவாள்.
மல்லிக்கு என்னவோ அவள் தாயிடம் பேசிய ஆறுதல் கிடைக்கும். மல்லியின் ஆழ் மனதில் அப்பா ஒதுக்கியதை விட அவள் அம்மாவும் அவள் என்னவானாள் என்று இத்தனை வருடங்களாக தேடாததில் அடி வாங்கியிருந்தாள்.
(பிரெண்ட்ஸ்! இது போல கோயிலில் உட்கார்ந்து சாமி கிட்ட பேசி நான் பார்த்திருக்கிறேன். நீங்க யாரும் பார்த்து இருக்கீங்களா? அதை தான் இந்த கதைல பயன்படுத்தி இருக்கேன்…)
அன்றும் பிரஹாரம் வலம் வந்து எல்லா சந்நிதிகளிலும் விழுந்து கும்பிட்டு கடைசியில் துர்கை சந்நிதி எதிரில் அமர்ந்து அம்மனைப் பார்த்தாள். காமாட்சியிடம் பேசும் போது இருந்த தைரியம் போய் இப்போது மறுபடி மல்லிக்கு பயம் வந்திருந்தது.
மல்லிக்கு பிறந்ததில் இருந்து நேற்று வரை பெரிதாக எதற்கும் கவலைப்படவோ வருத்தப்படவோ சூழ்நிலை அமைந்ததே இல்லை. பதினெட்டு வயதில் சுந்தரை காதலிப்பது வீட்டில் தெரிந்து அப்பா அடித்த போது கூட சுந்தர் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.
அவளும் பெரிதாக எதிர்பார்ப்புகள் எதுவும் வைத்துக் கொள்ளாததால் ஆரம்பத்தில் அவர்கள் கஷ்டப்பட்டபோது கூட சந்தோஷமாகவே இருந்தாள். சுந்தர் இருக்கிறான். அவன் எல்லாம் பார்த்துக்கொள்வான் என்று ஒரு தைரியம்.
இந்த பத்து வருடங்களில் அவளுக்கு எல்லாமாக இருந்தவன் மேல் மலையளவு நம்பிக்கை. அப்படி இருந்தவன் அவளுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்ய பெண் பார்க்கிறான் என்றால் அது எப்படிப்பட்ட நம்பிக்கை துரோகம்?
அவள் வாழ்க்கையின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு இருக்கிறது. அவனிடம் போய் கோபமாக கேட்டு அவன் ஆமாம் என்று விட்டாலும் அவள் நிலைமை என்ன ஆகும்? அதே நேரம் கேட்காமல் சகித்துக்கொண்டு இருக்கவும் அவளால் முடியவில்லை.
“அம்மா! இதுக்கு நீயே ஒரு வழி சொல்லு!” என்று அப்படியே உட்கார்ந்து விட்டாள்.
துர்க்கை உன் நிலைமை இன்னும் கொஞ்ச நேரத்தில் இன்னும் மோசமாகப் போகுதே. நீ இதுக்கே பயந்தால் எப்படி என்று ஆதுரமாக பார்த்தாள்.