அவங்க வீட்டுல ஈரங்காக்குற தரை! அப்படியே சள்ளுன்னு மண்டைக்கு ஏறும் ஜிலு ஜிலுப்பு! அதனாலேயே அடிக்கடி சளி பிடிச்சு வேற அவஸ்தைப் படுறா!
இதுல ஒரு நாளைப் பார்த்தா போல தினமும் தலைக்கு வேறே குளிக்கிறா. சாமி காரியம்னு.
என்னமோ போ. சின்னவனுக்கு கல்யாணம் ஆகி வர்றவ கொஞ்சம் வேலைய பிரிச்சுகிட்டா நல்லா இருக்கும்! வர்றவ எப்படி இருக்காளோ?
ஏதோ இந்த ஸ்வீட்டி சமர்த்து பொண்ணா இருக்க போயி வானதி தப்பிச்சா!”
ஒரு பாட்டம் புலம்பி தள்ளி விட்டார் அவர்.
“எல்லாம் சரியாகிடும்மா”” என்றார் ஸ்ரீமதி.
“எனக்கு நம்பிக்கையில்லை” என்று மனதுள் நினைத்துக் கொண்டாள் மதுரா.
காரணம் அவள் சித்தப்பாவுக்கு பார்த்திருக்கும் பெண்ணின் குணம் அப்படி!
அவள் சூர்ய தேவி! சுருக்கமா சூர்யா!
அவள் மதுரா படிக்கும் பள்ளியில் தான் வேலை பார்த்தாள்.
அது மிக சிறிய பள்ளி. அதன் நிர்வாக அலுவலகத்தில் இரண்டே பேர் தான்.
கேசியராக ஒரு பெண்.
கம்ப்யூட்டர் ஆபரேட்டராக ஒரு பெண்!
சூர்யா கம்ப்யூட்டர் ஆபரேட்டர்.
ப்ளஸ் டூ முடித்து விட்டு ஒரு சாதாரண கம்ப்யூட்டர் சென்டரில் வெறும் எம்.எஸ். ஆபீஸ் மாதிரியான அடிப்படை மட்டும் கற்றுக் கொண்டு இங்கு வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
அதுவும் முழுவதுமாக தெரியாது!
ஆனால் அந்த பள்ளிக்கு அதுவே போதுமானதாக இருந்தது.
மேலும் அவள் அந்த பள்ளியில் சில வகுப்புகளுக்கு கம்ப்யூட்டர் ஆசிரியை ஆக வேறு இருந்தாள்.
அதனால் ஊருக்குள் அவளுக்கு கம்ப்யூட்டர் மிஸ் என்றே பெயர்!
சதீஷ் அவன் கல்யாணத்திற்கு பெரிதாக எதிர்பார்ப்புகள் வைத்திருக்க வில்லை!
“பொண்ணு கம்ப்யூட்டர் படிச்ச பொண்ணா இருக்கணும்”. இது மட்டுமே அவன் போட்ட கண்டிசன்!
அப்ப தான் என்கூட இங்க பெங்களூரில் அவளுக்கும் ஒரு வேலை வாங்கிக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்து
நல்ல கோடிங் எல்லாம் எழுத தெரிந்த ஒரு இஞ்சினியரை மணமுடிக்க அவன் ஆசைப்பட்டு இருக்க, அவனுக்கு அமைந்தது இவ்வளவு தான்!
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!
ஆனால் பாவம் சதீஷுக்கு அவர் அந்த மாதிரி வரமெல்லாம் கொடுக்கவில்லை!
மதுராவிற்கு புரிந்தது! இவள் நம் சித்தப்பாவிற்கு சரிப்பட மாட்டாள் என்று!
எதையும் முகத்திற்கு நேராக கேட்டு விடும் அவர் எங்கே? இவள் எங்கே?
ஏனென்றால் சூர்யாவிற்கு கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் பொய் சொல்ல வரும்.
மாட்டிக் கொண்டால் விட்டால் கூட வாய் அடித்தே எதிராளியை சமாளிக்கவும் தெரியும்.
சின்ன விசயம் முதல் பெரிய விஷயம் வரை இதுக்கு தான் என்றில்லாமல் பொய் சொல்லுவாள்.
தப்பு செய்து விட்டு வாய் சாமர்த்தியம் கொண்டு தப்பிக்கவும் அவளுக்கு நன்றாகவே தெரியும்.
அதனால் தான் அவளை பைசாவுக்கு நம்ப மாட்டான் உடன் வேலை செய்யும் சுகுமார். மதுராவின் டுயூசன் டீச்சர்!
அவளிடம் பள்ளி சம்பந்தமாக ஏதேனும் ஃபைல்கள் கொடுப்பதாக இருந்தால் கூட “File Received” என்று எழுதி கையெழுத்து வாங்கி கொள்வான்!
இல்லையென்றால் அவள் அந்த வேலையை முடிக்காமல் இருந்து விட்டு, சுகு சார் என்னிடம் இன்னும் ஃபைலே அனுப்ப வில்லை என்று கூசாமல் பொய் சொல்லி விடுவாள்!
ஒரு முறை அப்படி ஃபைலைக் கொடுத்து விட்டு கையெழுத்து வாங்கி வர சொல்லி அவன் மதுராவை அனுப்ப, அவள் பைலை வாங்கிக் கொண்டு , “File Recived” என்று கையெழுத்துப் போட்டு தந்திருக்க,
“ஒரு ஈ பறந்துப் போய்டுச்சுடி” என்று மதுரா கூட வந்த அவள் தோழியிடம் மெதுவாக கிண்டல் பண்ணி சிரித்தது கண்டு முகம் கருத்தாள் சூர்யா!
ஆனால் பாவம் இந்த சதீஷ் அவன் நண்பன் சுகுமாரிடம் பெண் பார்க்க போவதற்கு முன்பு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நிச்சயம் அவன் தடுத்திருப்பான்.
ஆனால் அப்போது சொல்லாமல் இருந்து விட்டு, பெண் பார்க்க போன அன்றே பாக்கு மாற்றிக் கொண்ட பிறகு தான் சதீஸ் வந்து நண்பனிடம் சொன்னான்.
இதற்கு மேல் நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று மவுனமாக இருந்து விட்டான் சுகுமாரும்.
வெள்ளைத் தோலையும் இடுப்புக்கு கீழே வரை வளர்ந்திருந்த கூந்தல் அழகில் கொஞ்சம் மயங்கி தான் ஒத்துக் கொண்டிருந்தான் சதீஷும்!
அதான் கம்ப்யூட்டர் படிச்ச பொண்ணு. வெளில அவங்கப்பா வேலைக்கு அனுப்ப மாட்டார்ன்னு உள்ளூர்ல வேலைப் பார்க்கிறா கம்மி சம்பளத்தில் என்றே அவன் அம்மாவும் சொல்லியிருக்க தலையை ஆட்டி விட்டான் அவன்!
எல்லா விபரமும் தெரிந்த மதுராவால் ஒன்றும் செய்ய முடியவில்லை!
காரணம் அவள் சின்னப் பெண்! அவள் சொல்லி யார் கேட்க போகிறார்கள்?
பட்டால் தான் தெரியும்!
பட்டார்கள் தான்!
கட்டின பாவத்துக்கு சதீஷும், அவனுக்கு கட்டி வைத்த பாவத்திற்கு மதுராம்பாள் பட்டால் பரவாயில்லை.
ஆனால் கூடவே சேர்ந்து அருள்மொழி, வானதியும் கூடவே குழந்தைகளும் கஷ்டப்பட்டார்கள்!