Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

42. Lavanya Rajesh - நெஞ்சமெல்லாம் நிலவாக நீ

நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 25

இரண்டு நாட்களுக்கு முன்பு.

“அத்தை ..காபி கிடைக்குமா?” என்று கேட்டவாறு ஒரு மணி நேரத்தில் மூன்றாவது முறையாக கிச்சனுக்குள் போனான் ரேவந்த்!

காரணம் அவன் ஸ்வீட்டி  அங்க தானே அவன் அத்தைமார்களுடன் சேர்ந்து சமையலுக்கு உதவிகள்  செய்து கொண்டு இருக்கிறாள்!

“டேய்.. இப்ப தானேடா  நன்னாரி சர்பத் குடிச்ச?



Advertisement

அதுக்குள்ள இப்ப காப்பியா?” அத்தை கிண்டல் பண்ண,

“அத்தை.. ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க . காபி எனக்கு இல்ல , உங்க அத்தானுக்கு ! பெரிய மாமா தான் காபி கொண்டு வர சொல்லுன்னு சொன்னார்!”

“இவர் ஒருத்தர்.. நான் சமையல் வேலைய பார்ப்பேனா, இல்ல சும்மா இவருக்கு காபி கலந்து கிட்டே இருப்பேனா?

Advertisement

 சாப்பிட போற நேரத்துல இவருக்கு என்ன காபி வேண்டி கிடக்கு?

Advertisement

 இத வர்றேன் இருங்க” என்று அவர் கிச்சனை விட்டு அகல,

ரேவந்த் அந்த கேப்பில், மதுராவிடன் இடுப்பைக் கிள்ளி  சின்ன சில்மிஷம் செய்து, அவள் கன்னத்தில் முத்தமிட்டான் !

“ஏய்..என்னங்க இது? உங்க அத்தைங்க  வந்துட போறாங்க !”

Advertisement

 “அதுக்கு தான் அவங்க ரெண்டு பேத்துக்கும்  டாஸ்க் கொடுத்து வெளியே அனுப்பிட்டேனே!”  என்றான் !

“அப்ப  கொஞ்ச முன்னாடி,  உங்க சின்ன அத்தையை  யாரோ தேடி வந்திருக்காங்கன்னு சொன்னதும் பொய் தானா?” மதுரா கேட்டுக் கொண்டிருக்கும் போதே,

“டேய். உன் ரொமான்ஸுக்கு நாங்க ஊறுகாயாடா ?

ஏண்டா இப்படி வயசான காலத்துல எங்களை அலைய விடுற ?

 அங்க பாரு இப்ப ஏன்  காபி கேட்டீங்கன்னு உங்க பெரியா மாமாவுக்கு நல்லா திட்டு விழுந்துட்டு இருக்கு !

நான் எங்கடி கேட்டேன்னு அவர் முழிச்சு கிட்டு இருக்காரு !

டேய் எல்லாம் உன் வேலை தானா?

மதுரா.. நீ இங்க இருந்தா இந்த பய ஒரு வேலை செய்ய விட மாட்டான்.

நீ போய்  உங்க வீட்டுல இருக்குற தாம்பாளத்தை எல்லாம் எடுத்துட்டு வா !

சீர் தட்டு வைக்க கணக்கு பண்ணனும் !

இப்பவே கழுவ போட்டால் தான் சரியா இருக்கும் !

அப்படியே அந்த நலுங்கின் பொது விளையாட தேவையான பல்லாங்குழி , பித்தளை தேங்காய் , அப்புறம் ரிசப்ஷனில் வைக்க பன்னீர் சொம்பு  அதெல்லாம் கூட உங்க பாட்டி காலத்தது இருக்குன்னு சொன்னீல்ல .

அதையும் எடுத்துட்டு வா .

இங்க நம்ம வீட்டில் இருந்தது எல்லாம் அங்க டவுன் வீட்டில் இருக்கு !

இப்ப போய் தேடி எடுத்துட்டு வர எல்லாம் நேரம் இல்ல !

ரேவந்த்  நீ மதுரா கூட போய்  அதெல்லாம் பார்த்து எடுத்துட்டு வா !” என்ற படி அவன் சின்ன அத்தை உள்ளே வந்தார் .

“அய் .. அத்தை ன்னா  அத்தை தான் ! எப்படி நமக்கு சான்ஸ் வாங்கி கொடுக்கிறாங்க ! “ரேவந்த்  உற்சாகமாய் கிளம்பினான் மதுராவின் வீட்டுக்கு !

“ஐயோ இவங்க தெரிஞ்சு சொல்றாங்களா.. இல்ல தெரியாம சொல்றாங்களா?

 பாலுக்கு பூனையைக்  காவல் வச்ச  மாதிரில்ல இருக்கு !” என்று மதுரா

 செல்லமாக சலித்தபடி, அவள் வீட்டின் சாவியை எடுத்துக் கொண்டு ரேவந்துடன் சென்றாள் .

“என்ன எடுக்க போறோம் ?”

“கல்யாணத்துக்கு சீர் தட்டு வைக்கணும் இல்ல. அதுக்கு தாம்பாளம், அப்புறம் சில கல்யாணம் முடிஞ்ச  பின்னாடி நலுங்கு விளையாட்டுக்கு தேவையான பொருட்கள்,

அப்புறம் இனியா கல்யாணத்துக்கு வாங்கின வித விதமான ஆரத்தி தட்டுகள் வேற வச்சுருக்கேன் பத்திரமா!

அதையும் எடுக்கணும். நீங்க லாஃ ப்ட்ல ஏறுங்க!

நான் சொல்ற பெட்டியை  திறங்க”  என்று அவனை ஒரு அலுமினியம் ஏணியைப் போட்டு ஏற  சொன்னாள் !

“என்ன? நான் ஏறி எடுக்கணுமா? ச்.. ச்  நான் நினைச்சு  வந்ததே வேறே!” ரேவந்த் சலித்துக்  கொண்டான்.

“என்ன நினச்சு வந்தீங்க?”

“நீ ஸ்டூல் போட்டு ஏறி எடுப்ப! அப்புறம் அந்த   ஸ்டூல் நொடிச்சு , நீ கீழே விழ ப்  போறப்ப, நான் இதோ இப்படி உன் இடுப்பைப்  பிடிச்சு  தூக்குவேன் அப்படின்னு.. “ என்று சொல்லியவாறே, அவள் இடுப்பைத் தடவினான் !

“ம்ம்.. அப்படியே நைசா உங்க வேலைய காட்டுறீங்க பார்த்திங்களா? ஒழுங்கா மேலே ஏறுங்க. நான் சொல்றத எல்லாம் வெளியே எடுங்க !”

“மதுரா.. இது அராஜகம் ! கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே இப்படி வேலை வாங்குற என்னை!”?

“ஆஹா.. ரொம்ப தான் !

 சீக்கிரமா ஏறி எடுக்க வேண்டியதை எடுங்க.

நாம ரொம்ப நேரம் இங்க தனியா இருந்தா, உங்க அத்தைங்க  தப்பா நினைக்க போறாங்க !”

“ச்சே  ச்சே ..அப்படி எல்லாம் அவங்க நினைக்க மாட்டாங்க !

  நாம ரெண்டு பேரும்  கொஞ்ச நேரம் தனியா பேசிக்கட்டும்னு தான்  என்னை  உன்னோட  அனுப்பி வச்சுருக்காங்க!

இல்லைன்னா , வேற யாரையாவது பசங்கள தான் உன் கூட அனுப்பி வச்சிருப்பாங்க ! “

“அப்போ அவங்க சொன்னதை மட்டும் தானே செய்யணும் !”

“ போடி.. அதெல்லாம் முடியாது ! நேத்து உன்னோட  தங்கச்சி  இனியாயோட  பையன் எப்படி எல்லாம் உன்னை கிஸ் பண்ணினான் !

எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ?

டேய்.. அவ என்  பொண்டாட்டிடா..

அது என்னோட  ப்ராபர்ட்டிடா ன்னு    சொல்ல சொல்ல கேக்காம எப்படி உன்னை கிஸ் பண்ணி என்னை வெறுப்பேத்தினான்  தெரியும்மா ? “

முதல் நாள் தான் இனியா தன்  கணவருடன்  குழந்தையுடன் திருச்சி வந்து இருந்தாள்.

அவள் மாமியார் வழியில் ஏதோ விசேஷம் என்று எதேச்சையாக  அவள் இந்தியா வர வேண்டியிருக்க, இப்போது  மதுரா கல்யாணத்திற்காக  திருச்சி வந்து விட்டாள் .

 அவளை வீட்டிற்கு அழைத்து வர மதுராவும் ரேவந்த்தும் தான் ஏர்போர்ட் சென்றார்கள்.

மதுராவைக்  கண்டதும் “ பெரியம்மா” என்று ஓடி  வந்தான் குழந்தை !

ஓடி வந்து தாவிய  அவனை மதுரா அள்ளிக் கொண்டு முத்தமிட, அவனும் பதிலுக்கு மதுராவின்  கன்னங்களில் மாறி மாறி  முத்தமிட்டான்.

பக்கத்தில் நின்று  இருந்த ரேவந்திடம் ஹு ம் என்ற பெருமூச்சு !

“சும்மா இருங்க” என்று அவனை தன்  முழங்கையால் இடித்தாள்   மதுரா .

அதை தான் இப்போது சொல்லுகிறான் !

“இப்ப என்ன அதுக்கு ?”

“இப்ப நானும் உன்னை கிஸ் பண்ணனும் !”

“என்ன விளையாடுறீங்களா? அதெல்லாம் முடியாது ! யாராச்சும் வந்திட போறாங்க !”

“ இங்க யாருடி  வர போறா? ப்ளீஸ்.. ப்ளீஸ் “ என்று அவளை நெருங்கி  கொண்டிருக்கையில் ,

அந்த அறையின் ஜன்னல் பக்கம் தோட்டத்தில் இருந்து யாரோ  இருப்பது போல அரவம் கேட்க, ரேவந்த்தை தள்ளி நிறுத்தினாள்  மதுரா !

“அய்யோ..  கொஞ்ச நேரம் சும்மா இருங்களேன். பாருங்க யாரோ வர்றாங்க போல ! நான் பார்த்துட்டு வர்றேன்” என்றபடி,  அவள் வாசலை எட்டிப் பார்க்க,  உள்ளே வந்து கொண்டிருந்தார் சூர்யாவின் அம்மா.

“மணி.. மணி.. அந்த அலக்கை  எடுத்து வெளியே போடு. முருங்கைக்காய் பறிக்கனும்” என்றபடி !

கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவர், அங்கு மதுராவைக்   கண்டதும் திகைத்து விட்டு ,

“ வாம்மா எப்போ வந்த? நல்லா இருக்கியா?” என்றார்.

“நான்  நல்லா இருக்கேன் அம்மாச்சி! வீட்டுல தாத்தா சவுக்கியமா?”

“ம்ம். நல்லா இருக்காரு. இன்னிக்கு சாம்பார் வைக்கணும்.

அது தான் முருங்கைக்காய் அடிச்சு எடுத்துட்டு போகலாம்னு வந்தேன்”.

“முருங்கைக் காயா? நேத்து தான் மணி அத்தை பறிச்சு  கட்டி வச்சுருக்கு ! எடுத்துக்கங்க.

கட்டு இருபது  ரூபாய் ! “என்று சொல்லி,  உள்ளே இருந்து முருங்கைக் காய் கட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தாள்  மதுரா !

“என்ன காசுக்கா? இந்த ஊர்ல எல்லாம் காசு கொடுத்து எல்லாம் யாரும் முருங்கைக்காய் வாங்க மாட்டாங்க !”

“இங்க மணி அத்தைக்கு ஒரு கை  செலவுக்கு ஆகும்னு தானே தோட்டம் போட்டு பராமரிச்சுட்டு இருக்கு,!

அதோட வருமானத்துல எப்படி கை  வைக்க முடியும்  சொல்லுங்க !”

“அது சரி.. “என்று சலித்துக்  கொண்டவர்,

“நான் இப்ப காசு கொண்டு வரலையே !”

“ஓ  அப்படியா.. அப்ப அடுத்த முறை வாங்கும் போது  சேர்த்துக் கொடுத்திடுங்க ! “என்றாள்  அப்பவும் விடாமல் !

“என்ன மதுரா.. இப்படி ஒரே கிராமத்துல இருக்கிறவங்க, சொந்தக்காரங்க கிட்ட போய்  இப்படி காசு வாங்கிகிட்டு !

இதே உன் அப்பாயி இருந்திருந்தா,  காசு கேட்ட உன்னைக் கன்னா  பின்னான்னு திட்டி இருப்பாங்க !”

“கண்டிப்பா திட்டி  இருப்பாங்க தான் !

அதே மாதிரி  பஸ்ஸை விட்டுட்டு  வெயில்ல நடந்து வந்துகிட்டு இருந்த  மணி அத்தைய அந்த பக்கமா ஆட்டோவில் வந்த நீங்க கண்டுக்காம போனதையும் சொல்லி இருந்தா, நீங்க காலி !

அதான் அப்பாயி இல்லையே இப்ப!

 நாம எப்படிமத்தவங்க கிட்ட நடந்துகிறோமோ  அப்படி தான மத்தவங்களை நம்மை நடத்துவாங்க !

போகட்டும் விடுங்க. நீங்க காசு அப்புறமா தந்தா போதும் எடுத்துட்டு போங்க “என்றாள் !

“ஏன் .. ஸ்வீட்ட்டி இப்படி அல்பத்தனமா இருபது ரூபாய்க்கு இவ்வளவு கணக்கு பார்க்கிறா? “என்றான் ரேவந்த் !

“இது வெறும் இருபது  ரூவா மேட்டர் இல்லீங்க. இது அவங்களுக்கு ஒரு வார்னிங்.

இது ஒன்னும் பொது சொத்தோ, இல்ல  பப்லிக்  ப்ராப்பர்டியோ  இல்ல ! இவங்க வந்து எடுத்துட்டு போக !

பாவம்.. மழைன்னும்  பார்க்காம, வெயில்னு பார்க்காம வேலை செஞ்சு பராமரிச்சுட்டு வர்ற மணி அத்தையோட  வருமானத்தில் கையை வைக்கிறாங்க ! அது தப்புன்னு தெரியப்படுத்தனும் அதுக்கு தான் !”

“அப்ப  சரி .”. என்று அவன் அதன்பின் மவுனமாக,

தூரத்தில்  போய் விட்ட, அந்த அம்மாவிற்கு, மதுரா சொன்னதும்  அமைதியாகி விட்ட ரேவந்த்தை  பார்த்து ஆத்திரம் வந்தது !

“இன்னும் கல்யாணமே ஆகல. அவ வாயில் இருந்து ஒரு வார்த்தை வந்தவுடன் சரி சரின்னு சொல்லிட்டு போறான் பாரு !

என்  பொண்ணுக்கும் வந்து வாச்சுருக்கே  புருஷன் !

இத்தனை வருஷம் ஆகியும் இன்னமும் அவ பேச்சைக் கேப்பேனான்னு தானே இருக்காரு !” பொருமிக் கொண்டு போனவர்,

 அடுத்த வந்த நாட்களில் தெருவெங்கும் இருந்த கல்யாண வாழ்த்து பேனர்களில் இருந்த  ரேவந்த்  மதுரா போட்டோக்களை  போனில் படம்பிடித்து  மகளுக்கு அனுப்பி வைக்க , அதை பார்த்த சூர்யாவுக்கு  பொறுக்க முடியவில்லை !

கோபம் கோபமாக வந்தது !

இவ  அப்பன் ஒரு வாயில்லா பூச்சி, அவனை எப்படியாச்சும் ஏமாத்தி இந்த வீட்டை மட்டும் கொடுத்து விட்டு மொத்த சொத்தையும் செந்திலும் இவளும் ஆட்டையை போட்டு விடலாம்னு பகல் கனவு கண்டு கொண்டிருந்த போது , இந்த மதுரா வந்து அப்படி சட்டம் பேசி, எல்லாத்தையும் பிடுங்கிக் கிட்டு போய்டுச்சு !

இப்ப என்னடான்னா. அந்த ஊட்டி  பையனுக்கும்  இவளுக்கும் கல்யாணமாம் !

எவ்வளவு பெரிய பணக்காரன் !

இவளுக்கு எல்லாம் ஏணி வச்சா கூட எட்டாது  அவன் அந்தஸ்து !

ரொம்ப லக்  தாண்டி உனக்கு !

 ஆளும் எப்படி மாறி இருக்க?

முன்னாடி உன் சித்தப்பா போனில் இருந்த அந்த இனியா கல்யாணத்து போட்டோவில் பார்த்தேனே!

அதுல எல்லாம் எப்படி சாமியாரணி மாதிரி இருந்தா !

இப்ப என்னன்னா , ஆளே மாறி இருக்கா !

அத்தோட அவ கண்ணுல அவ்வளவு காதல் , சந்தோஷம் !

இவ  மட்டுமா? அந்த பையன் அதுக்கு மேல இவள பார்க்கிறான் !

ரொம்பத்தான் லவ்வு ! அவள் கடுப்பில் பொறாமையில் வெந்தாள் !

“அம்மா.. இந்த ஸ்வீட்டிக்கு இப்படி எல்லாம் நல்ல லைஃப்  அமையவே  கூடாதும்மா !”

   நீ ஏதாச்சும் மாப்பிள்ளை வீட்டுல பேசி, இத கலைச்சு  விட பாரு !”

“அதெல்லாம் முடியாதுடி ! பார்த்தேல்லே .. அந்த பையன் அவளை பார்க்கிற பார்வையை !

ரெண்டாவது அந்த பையனோட அம்மாவோட ஆசைன்னு அவங்க தாய் மாமாங்க எடுத்து நடத்துறாங்க !

அவன் தங்கச்சி அது அதுக்கு மேல! இவ மேல ரொம்ப பாசமா இருக்கும் !

இந்த கல்யாணம் நடக்க கூடாதுன்னா.. அந்த ஸ்வீட்டியே வேணாம்னு சொன்னா தான் உண்டு !”

“அப்ப .. அதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணு ! அவளுக்கு இவ்வளவு பெரிய வாழ்க்கை எல்லாம் அமையவே கூடாது !” என்றாள்  சூர்யா குரூரத்துடன் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!