அவன் மனக் கண்ணில் அழகு தேவதையாக வலம் வந்தாள் ஜானகி. அதுவும் அவளை தொட்ட நொடி, தன்னுடைய விரல்கள் தீண்டிய இடம், அவன் உணர்ந்த மென்மை, திருமண மேடையில் இருந்த பூக்களின் வாசத்தை தாண்டி அவன் உணர்ந்த அவளது வாசம் என அனைத்தும் நினைவில் வந்து அவனை புதுவிதமான கனவுலகுக்கு அழைத்துச் சென்றது.
அறைக்குள் சென்றவன் அவளை நினைத்த படியே உறங்க ஆரம்பித்தான்.
அவசர அவசரமாக அறைக்குள் ஓடி வந்த கிரியைக் கண்டதும் எழுந்து நின்றாள் யமுனா.
அவளைக் கண்டு நிம்மதியானவன் கதவை பூட்டி விட்டு அவளை நெருங்கிச் சென்று “வந்து ரொம்ப நேரம் ஆச்சா?”, என்று கேட்டான்.
“இல்லை இப்ப தான்”
“ஏன் நின்னுட்ட? உக்காரு”
“பரவால்ல”
“இதுல என்ன இருக்கு உக்காரு”, என்று சொன்னதும் கட்டிலில் அமர்ந்தாள். அவனும் அவள் அருகே கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்தான். அவன் பார்வை தலை குனிந்து அமர்ந்திருந்தவளை வருடியது.
ஆரஞ்சு வண்ண மைசூர் சில்க் சேலை அவள் மேனியைத் தழுவியிருக்க அவள் தலையில் இருந்த மல்லிகையின் மனம் அவன் நாசியை வருடிச் சென்றது.
“யமுனா”, என்று கிசுகிசுப்பாக அழைத்தான்.
“ஆன்…”
“உன் கையைப் பிடிச்சிக்கவா?”
“ஐயோ இவன் என்ன இப்படி எல்லாம் கேக்குறான்?”, என்று எண்ணிய படியே “ம்ம்”, என்றாள். அடுத்த நொடி அவள் கரத்தை அவன் அழுந்தப் பற்றிக் கொண்டான்.
அவளோ அந்த தொடுகையை தாங்க முடியாமல் தவிப்புடன் அமர்ந்திருந்தாள்.
“பிடிக்கலையா?”, என்று அவன் கேட்க தன்னுடைய தயக்கத்தை உதறி அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் பார்வையில் வெட்கம் இருக்க அவன் கை உயர்ந்து அவள் கன்னத்தை வருடியது.
அதில் அவனைத் திகைப்பாக பார்க்க “உனக்கு ஓகே வா? இல்லை டைம் வேணுமா?”, என்று கேட்டான்.
அவன் தயக்கத்தையும் ஆசையையும் தடுமாற்றத்தையும் உணர்ந்து கொண்டவள் அடுத்த நொடி அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். அதற்கு மேல் கிரியிடம் எந்த தயக்கமும் இல்லை. அவன் கைகள் அவளை சுற்றி வளைத்துக் கொண்டது.
அவன் இதழ்கள் அவளுடைய கழுத்து வளைவில் ஊர்ந்து கொண்டிருக்க அவன் மூச்சுக் காற்றின் சூடு அவள் உடலில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அவளது வெட்கமும் இசைவும் அவனை பாடாய் படுத்த அவளை கட்டிலில் சரித்து அவள் மேல் படர்ந்தான். அவன் இதழ்கள் அவளுடைய இதழ்களை முற்றுகையிட அவன் கரங்கள் சேலை மறைக்காத அவளது வெற்றிடையில் ஊர்வலம் போனது. அவன் தந்த முத்தத்திலும் அவனது தொடுகையிலும் கரைந்து கொண்டிருந்தாள் யமுனா.
அவளை மொத்தமாக சுருட்டிக் கொண்டவனுக்கு அந்த விடியல் பத்தவே இல்லை. அவர்கள் களைப்புடன் உறங்க ஆரம்பித்த போது விடியல் ஆரம்பமானது. என்னதான் பெற்றவர்கள் பார்த்து வைத்த திருமணம் என்றாலும் அங்கே காதலும் கரை புரண்டு ஓடத்தான் செய்தது.
அடுத்த நாள் காலையில் யமுனா கிரி இடையே எந்த தயக்கமும் தடுமாற்றமும் இல்லை. அவனுடைய காதல் வெளிப்பாடில் அவள் முகம் வெட்கத்தில் மட்டுமே மிளிர்ந்தது. காலை உணவை முடித்து விட்டு யமுனாவும் கிரியும் மறுவீட்டுக்கு ஜானகி வீட்டுக்கு வந்தார்கள். இரண்டு நாட்கள் அங்கே தங்கியிருந்து விட்டு அடுத்த நாளே ஹனிமூன் சென்று விட்டார்கள்.
கிரி யமுனா தங்களின் வீட்டுக்கு வந்த போது கூட ஜானகியால் அவர்களிடம் கலகலப்பாக பேச முடியவில்லை. மொத்தமாக மாறிப் போனாள் ஜானகி.
தன்னுடைய மகள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஆசைப் பட்ட சரவணன் கூட மகளின் இந்த அமைதியை ரசிக்க வில்லை. அவர் அவளிடம் எவ்வளவோ வம்பிழுக்க “போ பா, உனக்கு வேற வேலையே இல்லை”, என்ற சொல்லோடு கடந்து சென்றவளுக்கு என்ன ஆனது என்று அவரால் புரிந்து கொள்ள முடிய வில்லை.
கிரி யமுனா திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருக்க ஹனிமூன் முடிந்து கணவனுடன் அம்மா வீட்டுக்கு வந்த யமுனா திருமண ஆல்பத்தை தங்கையிடம் ஆசையாக கொடுத்து விட்டுச் சென்றாள்.
ஜானகியும் அரசியும் சந்தோஷமாக அதைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஒவ்வொரு பக்கமாக திருப்பி பார்த்து ஏதாவது சொல்லிக் கொண்டே வந்தவளின் கண்கள் ஒரு போட்டோவைக் கண்டதும் வெறித்து பார்த்தன.
ஸ்ரீராம் அவளைக் கிள்ளிய அடுத்த நொடி அவனை அவள் முறைத்தவாறே இருந்த புகைப்படம் தான் அது. அதில் அவனும் அவளைத் தான் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தான்.
அரசிக்கு அந்த புகைப்படத்தில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்பதால் “என்ன டி இந்த போட்டோவையே பாத்துட்டு இருக்க? அடுத்ததை திருப்பு”, என்றாள் அரசி.
“நீ பாரு மா, நான் அப்புறம் பாக்குறேன். எனக்கு தலை வலிக்கு”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.
“இவளுக்கு என்ன ஆச்சு? இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தா?”, என்று குழம்பிப் போனாள் அரசி.
அன்று மாலை சோர்வாக வீட்டுக்கு வந்த சரவணனை வரவேற்றது வீட்டின் அமைதி தான். ஜானகி வீட்டில் இருந்தால் வீடு இப்படி இருக்கவே செய்யாது. ஆனால் இப்போது அவரின் மகள் தான் முழுவதுமாக மாறி விட்டாளே.
“என்னங்க, முகம் ஒரு மாதிரி இருக்கு? காபி கொண்டு வரவா?”, என்று கேட்ட படி அறையில் இருந்து வெளியே வந்தாள் அரசி.
“ஒண்ணும் இல்லை அரசி. மூணு கடைக்கும் அலைய கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. ஜானகி என்ன பண்ணுறா?”, என்று கேட்ட படி சோபாவில் அமர்ந்தார்.
அவர் அருகில் அமர்ந்த அரசி “மதியம் சாப்பிட்டுட்டு ரூமுக்கு போனவ வெளிய வரவே இல்லை. இவளுக்கு என்னங்க ஆச்சு? நம்ம மக முன்னாடி மாதிரி இல்லைங்க. யமுனா கல்யாணம் முடிஞ்சு போனதுல தான் இப்படி இருக்கான்னு பாத்தா அவ கிட்ட கூட இவ ஒழுங்கா பேசுறது இல்லையாம். ஜானகிக்கு என்ன ஆச்சுன்னு அவ என் கிட்ட கேக்குறா. எனக்கு கவலையா இருக்குங்க. இவ இப்படி இருக்குறதுல வீடு வீடாவே இல்லை”, என்றாள்.
“எனக்கும் அந்த வித்தியாசம் தெரியுது அரசி. நீ அவளைக் கூட்டிட்டு வாயேன். அவ கிட்டயே கேப்போம். எதை மனசுல வச்சு மறுகுறான்னு தெரியலை. அவளுக்கு ஏதாவது பிரச்சனைன்னா நாம தானே அதை சரி பண்ணிக் கொடுக்கணும்”
“இதோ கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு அவளுடைய அறைக்குச் சென்றாள். அங்கே ஜன்னல் கம்பியில் முகம் புதைத்த படி இருந்தாள் ஜானகி.
“அம்மு”, என்று அழைத்த அரசியின் குரலில் திரும்பி பார்த்த ஜானகி “என்ன மா?”, என்று கேட்டாள்.
“அப்பா வந்திட்டார்”
“ஓ”
“என்ன டி ஓன்னு சொல்ற? அப்பா எப்ப வருவாருன்னு ஒவ்வொரு நாளும் என் உயிரை வாங்குவ. இப்ப உனக்கு என்ன ஆச்சு?”, என்று அரசி கேட்டதும் அவளுக்கு பதில் சொல்ல முடியாத எரிச்சலில் “அம்மா, நானே தலை வலில உக்காந்துருக்கேன். நீ வேற ஏன் கேள்வி மேல கேள்வி கேட்டு டென்ஷன் பண்ணுற?”, என்று சிடுசிடுத்தாள்.
“நான் ஒண்ணும் கேக்கலை போதுமா? உன் அப்பா ஏதோ பேசனுமாம். கீழ வா”, என்று அரசி சொன்னதும் கீழே சென்றாள்.
“எதுக்கு பா கூப்பிட்ட?”, என்று கேட்ட படி சரவணன் அருகில் அமர்ந்தாள் ஜானகி. அவர்களுக்கு எதிரே அரசியும் அமர்ந்தாள்.
“உனக்கு என்ன ஆச்சு பாப்பா?”, என்று சரவணன் கேட்டதும் திகைத்து போய் தந்தையைப் பார்த்தாள்.
“சொல்லு டா உனக்கு என்ன பிரச்சனை? யாராவது ஏதாவது சொன்னாங்களா? இல்லை நானோ உன் அம்மாவோ உன்னைக் கஷ்டப் படுத்துற மாதிரி நடந்துகிட்டோமா?”
சரவணனின் கவலையில் மனதுக்கு வருத்தமாக இருந்தாலும் நடந்ததை வெளியே சொல்ல முடியாமல் “அப்படி எல்லாம் இல்லைப்பா. நான் நல்லா தான் இருக்கேன்”, என்றாள்.
“எங்க பொண்ணைப் பத்தி எங்களுக்கு தெரியும் மா. சொல்லு என்ன விஷயம்?”
“நிஜமாவே ஒண்ணும் இல்லைப்பா”
“ஜானகி…”
“ஆன்…”
“நீ யாரையாவது விரும்புறியா மா? அப்படி உன் மனசுல யாராவது இருந்தா தைரியமா சொல்லு மா. அப்பா கண்டிப்பா நீ ஆசைப் பட்ட வாழ்க்கையை உனக்கு ஏற்படுத்திக் கொடுக்குறேன்”, என்று சரவணன் சொன்னதும் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
காதல் என்றால் பிடிக்காது என்று சொல்லும் தந்தை தனக்காக இவ்வளவு இறங்கி வருகிறார் என்றால் தன்னுடைய அமைதி அவரை எந்த அளவுக்கு பாதித்திருக்க வேண்டும் என்று எண்ணியவள் “அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்லைப்பா. சும்மா ஏதோ டென்ஷன். சும்மாவே இருக்கேன்ல அதான். என் மனசுல சத்தியமா யாருமே இல்லை”, என்று சொல்லும் போதே ஸ்ரீராம் முகம் நினைவில் வந்தது.
அவன் முகம் நினைவில் வந்ததில் அவளே குழம்பிப் போனாள். ஆனால் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு தந்தையைப் பார்த்தாள்.
“உன் அக்காவுக்கு மாப்பிள்ளை பாத்து கட்டி வச்சாச்சு. உனக்கும் ஒரு நல்ல பையனா கிடைச்சிட்டா நாங்க கொஞ்சம் நிம்மதியா இருப்போம். உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு டா. உனக்கு மாப்பிள்ளை பாக்கட்டுமா?”, என்று சரவணன் கேட்க ஜானகி அதிர்ந்து போனாள்.
“என்னது வேற ஒருத்தன் கூட கல்யாணமா? அப்படின்னா அன்னைக்கு நடந்ததை எப்படி மறக்க முடியும்?”, என்று எண்ணி அவளுக்கு படபடப்பாக இருந்தது.
வேறு ஒருவனைத் திருமணம் செய்தாலும் கட்டாயம் ஸ்ரீராமின் தொடுகையை அவளால் மறக்க முடியாது என்று தெள்ளத் தெளிவாக இந்த நிமிடம் அவளுக்கு புரிந்தது.
“அப்பா பிளீஸ் பா, இப்ப தான் அக்காவுக்கு முடிஞ்சிருக்கு. உடனே கல்யாண விஷயம் எல்லாம் பேசாதீங்க. கொஞ்ச நாள் என்னை பிரியா விடுங்க”, என்று சரவணனிடம் கெஞ்சினாள்.