Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

19. தாமரை - பாறையில் மலர்ந்த தாமரையே

பாறையில் மலர்ந்த தாமரையே! 5

இருவரும் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட தருணம் ஒரு தடுமாற்றமும் சின்ன குழப்பமும் அவர்கள் முகத்தில் தெரிந்தது.

“குட் மார்னிங் சந்தா..!” வழக்கமான உற்சாகம் பொங்கும் காலை வணக்கத்தை திணறலோடு சொன்னான் வாத்சல்யன்.

“குட் மார்னிங்..!” என்றவளுக்கோ பாய்ந்து அவன் நெஞ்சில் சாய்ந்து.. கனவினில் பொங்கி எழுந்த காட்சிகளின் சாராம்சத்தை அவனிடம் சமர்ப்பித்து விடும் துடிப்பு..!

“சந்தா..! நல்லா தூங்கினியா..? ஒரு மாதிரி டயர்டா தெரியறியே..?” அவள் தோள் வளைத்து தன்னோடு சேர்த்துக் கொண்டான் வாத்சல்யன்.



Advertisement

“இப்பதான் தூங்கின மாதிரி தெரிஞ்சது அதுக்குள்ள சீக்கிரமா விடிஞ்சிடுச்சு..!” கண்களை கசக்கி கொண்டாள் லஷ்மி..!

“நைட்டு படம் பாத்துட்டு லேட்டா தூங்கினதால அப்படி இருக்கலாம். வேணும்னா ஒருநாள் ஆபீஸ்க்கு லீவு போட்டுக்க.‌.! நல்லா ரெஸ்ட் எடுத்துவிட்டு நாளைக்கு ஃபிரஷா போகலாம்.”

“வேண்டாம் வாத்சா..! சோம்பேறித்தனம் அப்படியே பழகிப் போயிடும்.. சூடா வெண்ணீர்ல குளிச்சா உடம்பு சுறுசுறுப்பாகிடும்னு நினைக்கறேன்..” என்றவள் மனசுக்கும் கொஞ்சம் பிரஷ்னெஸ் கிடைக்கும்.. என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள்.

Advertisement

“நான் பிரஷ் பண்ணிட்டு கீழ போய் காபி கலந்து கொண்டு வரேன்.! என்னவோ தலை வலிக்கற மாதிரி இருக்கு..!” புருவங்களை உயர்த்திக்கொண்டு கீழே இறங்கப் போனவளை தன்னோடு சேர்த்து அணைத்து முத்தமிட்டு விடுவித்தான் வாத்சல்யன்.

Advertisement

“ம்ம்ம்..?” என்ற செல்லக் கோபத்துடன் அவன் தோளில் அடித்து விட்டுப் போனாள் லஷ்மி..!

“கட்டிலிலிருந்து இறங்கி கைகளை விரித்து சோம்பல் முடித்தவனிடம் பலத்த யோசனை..

ஆழ்மன ஆசைகள்தான் கனவாக வருமாம்..

Advertisement

குழந்தை வேண்டுமென நினைப்பதால்.. பிள்ளை செல்வத்தின் மீது அதீத ஆசை கொண்டிருப்பதால்.. குழந்தை பெற்றுக் கொள்வது போல வளர்ப்பது போல கனவு வரலாம்.. அல்லது குழந்தைகளோடு விளையாடுவதை போல்.. காணும் இடமெங்கிலும் சின்னஞ்சிறு குழந்தைகளாக நிறைந்திருப்பதை போல் கூட கனவுகள் வந்தால் அது நலம்..

ஆனால் இது..? நிச்சயமாக இது நியாயமே இல்லை..! இது தவறு.. தவறுதான்!

அவன் முகம் அதிருப்தியில் சுருங்கியது.. இந்த மாதிரியான ஒண்ணுத்துக்கும் உபயோகமில்லாத அர்த்தமில்லாத கனவைப் பற்றி யோசித்து நேரத்தை வீணாக்காமல் அடுத்த வேலையை பார்ப்பது நல்லது..! என சலிப்பாக புருவங்களை உயர்த்தினான்..

ஆனாலும் அதில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தை அவன் நெஞ்சை குடைந்தது. மனதோரம் ஒருவேளை இப்படி நடந்தால் என்ன ஆகும்? என்ற இனம் புரியாத ஆசை அதை தாண்டிய ஆர்வம்.. மீண்டும் மீண்டும் சம்பந்தப்பட்ட விஷயத்தை பற்றியே சிந்திக்க வைத்தது.

“வாத்சா..!” மனைவியின் குரல் அவன் சிந்தனையை கலைத்தது..

“இன்னும் நீங்க பிரஷ் பண்ணலையா..?”

“நீ அதுக்குள்ள பிரஷ் பண்ணிட்டு காபி கொண்டு வந்துட்டியா..!”

“என்னப்பா! நான் வெளியே போனதை நீங்க பாக்கவே இல்லையா..? அப்படி என்ன யோசனை..!”

“பாத்தேன்டி..! சும்மா விளையாட்டுக்கு..” என்று அவள் கையிலிருந்து காபி கோப்பையை வாங்கிக் கொள்ள..

“ஒரு நிமிஷம்.. பிரஷ் பண்ணிட்டீங்களா..?” சந்தேகமாக அவனை நோட்டமிட்டபடியே கேட்டாள் சந்தான லஷ்மி..!

“பண்ணியாச்சு பண்ணியாச்சு..!”

“பொய் பொய்..! வாயத் திறந்தாலே பொய்..! போய் பிரஷ் பண்ணிட்டு வாடா..!” கோப்பையை பிடுங்கிக் கொண்டு அவன் முதுகை பற்றி உள்ளே குளியலறைக்குள் தள்ளிவிட்டு சிரித்தபடியே தலையிலடித்துக் கொண்டாள் லஷ்மி.

குளித்து முடித்து சமையலறைக்குள் நுழையும் போது புவனா அங்கிருந்தாள்.

“ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா புவனா.” தன் வழக்கமான கேள்வியை கேட்டுவிட்டு.. பாத்திரங்களைத் திறந்து காலை டிபனும் மதிய உணவும் என்ன இருக்கிறது என ஆராய்ந்தாள் லஷ்மி.

“அதான் எல்லாம் முடிஞ்சிட்டுதே..! வழக்கம் போல எட்டு மணிக்கு வந்து.. ஏதாவது உதவி வேணுமானு கேட்கறதே உங்க வழக்கமா போச்சு.. உஷாரான ஆளுக்கா நீங்க..!” சிரித்துக் கொண்டே மெல்ல ஊசியை இறக்கினாள் புவனா.

“சமையலறை ராஜ்ஜியம் உங்களோடது.. நான் வந்தாலும் உங்களுக்கு பிடிக்கிறதில்லை.. வராம இருந்தாலும் குறை சொல்லாமல் இருக்கறதில்ல.. பயங்கரமான ஆளுதான் நீ..!” அதே தினுசில் வார்த்தைகளால் கீறினாள் லஷ்மி.

வழக்கமாக இந்த மாதிரியான பதிலடிகளில் புவனாவின் முகம் கருத்துப் போகும்.. வேண்டுமென்றே பாத்திரங்களை தூக்கிப்போட்டு உடைப்பாள். ஆனால் இன்று அம்மாதிரியாக எதுவும் நடக்கவில்லை..

“ஹாஸ்பிட்டல் போனீங்களே என்ன ஆச்சுக்கா.. என்ன சொன்னாங்க?”

‘அடடா என்னை காயப்படுத்தும் அடுத்த டெக்னிக்.. அக்கறையாக விசாரிப்பது போல் ஆரம்பித்து என் குறையை சுட்டிக்காட்டி மனதை புண்ணாக்கும் நூதன வித்தை.!’

இழுத்து மூச்சுவிட்டு.. “வழக்கம் போலத்தான்.. சீக்கிரம் நல்ல செய்தி எதிர்பார்க்கலாம்னு சொன்னாங்க..!” என்றாள் லேசாக புன்னகைத்து.

அந்த சிரிப்பும்.. வார்த்தைகளில் தெரிந்த நம்பிக்கையும் புவனாவை சுருங்க வைத்தது.

ஆனால் பாவம்.. லஷ்மிக்குள் இனி தனக்கென ஒரு குழந்தை பிறக்குமென்ற நம்பிக்கை வற்றிப் பொய் பலகாலமாகிறது.. எண்ணம் போல் வாழ்க்கை.. நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே உருமாறுவாய்.. இதெல்லாம் கேட்டு படித்து சலித்து போய்விட்டது.

ஆனால் மற்றவர்களுக்கு தன் துன்ப துயரங்கள் தெரிய வேண்டிய அவசியமில்லையே! குறைந்தபட்சம் வார்த்தைகளிலாவது பாசிட்டிவிட்டி இருக்கட்டுமே என்ற எண்ணம்.

புவனாவிற்கு அவள் கவலை.. சந்தான லஷ்மிக்கு குழந்தை பிறந்து விட்டால் தன் பிள்ளைகளுக்கு இந்த வீட்டில் கிடைக்கும் ராஜ உபச்சாரமும்.. தாத்தா பாட்டியிடமிருந்து தனித்துவமாக கிடைக்கும் செல்லமும் கொஞ்சலும்.. பாகம் பிரிக்காமல் அப்படியே கிடைக்கும் அன்பளிப்பு.. உணவுப் பொருட்கள் நகைகள்.. இன்னும் என்னென்னவோ..! அத்தோடு தனக்கு கிடைக்கும் மரியாதையும்.. இதெல்லாம் ஒன்றில் பாதியாக குறைந்து போகுமோ அல்லது பறி போகுமோ! என்ற பயம்.

“இப்படியே எத்தனை நாளைக்கு சொல்லுவாங்க..! கேட்டுக் கேட்டு நமக்கும் சலிச்சு போகுது.. ஹாஸ்பிடல்தான் மாறுது. ட்ரீட்மெண்ட் மாறல..! அவங்க சொல்ற வார்த்தை மாறல..! மருந்தும் மாத்திரையுமா சாப்பிட்டு உங்க உடம்புதான் பாழாப்போகுது.!”
பொய்யான பரிதாபத்துடன் லஷ்மியை ஏறிட்டு பார்த்தாள்.

எந்த சுணக்கமும் இல்லாமல் அவள் இயல்பாக இருப்பது புவனாவுக்குள் ஏமாற்றத்தை தந்தது.

“அதனால என்ன புவனா..! நாற்பது..‌ நாற்பத்தஞ்சு வயசுல கூட குழந்தை பெத்துக்கறவங்க இருக்காங்களே..! எங்களுக்கு நம்பிக்கை இருக்கு..! அப்புறம் என் உடம்பு ஒன்னும் பாழாப் போகல.. நான் ஹெல்த்தியாதான் இருக்கேன்.!” சிரித்து விட்டு தனது சாப்பாட்டு பாத்திரங்களை பையில் வைத்துக்கொண்டு “முடிஞ்சதுன்னா நீ கிளம்பு.. நான் சுத்தம் பண்ணி வெச்சிட்டு போறேன்..!” என்றவளை நேர இறங்க பார்த்தாள் புவனா..

கட்டு குலையாத லஷ்மியின் தேக வடிவின் மீது புவனாவிற்கு எப்போதுமே ஒரு பொறாமை உண்டு.

குழந்தை பெற்றுக் கொண்டதால் தன் தேகக்கட்டு விட்டுப் போனதாகவும்.. இதனால் கணவனுக்கு தன் மீது நாட்டம் குறைந்து போனதாகவும் புவனா நினைக்கிறாள்.

“அக்கா நீங்க ஸ்லிம்மா ஃபிட்டா இருக்கீங்க.. ஆனா என்னை பாருங்க.. குழந்தை பிறந்த பிறகு அங்கங்க சதை போட்டு உடம்பு ஊதிப்போச்சு..!” முன்பு இருவரும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த ஒரு நாளிலே அவள் தன் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்ட போது..

“ஹேய்..! அதனால என்ன? நீ அழகாத்தானே இருக்க..! தாய்மைதான் அழகு புவனா..! குழந்தை பெத்துட்டா நானும் உன்னை மாதிரி சதை போட்டு புஷ்டியா ஆகிடுவேன்..! ஆனா அதைப்பத்தி நான் கவலைப்பட மாட்டேன். ஹெல்தியா இருக்கணும் உடம்ப நோயில்லாம வச்சுக்கணும்..! உனக்கு பிடிக்குதா.. இப்படி இருந்தாதான் கான்ஃபிடன்ட் இருக்குதுன்னா.. உடம்பை குறைச்சுக்கலாம்.! என்னை விட நீதான் ஓடியாடி சுறுசுறுப்பா வேலை செய்யற..! அப்புறம் என்ன.. விடுமா..!” என அவளை உற்சாகமூட்டும் விதமாகத்தான் பேசினாள்.

சந்தான லஷ்மிக்கு யாரையும் காயப்படுத்தி பழக்கமில்லை தேவையில்லாமல் அவளை சீண்டி வம்பிழுக்காத வரை.. சோர்ந்து தன்னிடம் வருபவர்களை மோட்டிவேட் செய்யும் விதமாகத்தான் பேசுவாள்.

ஆரம்பத்தில் இந்த வீட்டுக்கு வந்த புதிதில்..! மாமனாருக்கு என்ன வேண்டும்? மாமியாருக்கு எது பிடிக்கும்.. அனைவரையும் அரவணைத்துப் போக வேண்டும்.. அவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என ஏகப்பட்ட கனவுகளோடு.. குடும்பத்துக்குள் அனுசரித்து வளைந்து நெளிந்து அவர்கள் குத்தும் பேச்சுக்களை பொறுத்துக் கொண்டு.. சிரித்த முகத்தோடு வலம் வந்தவள்தான் இவள்.

ஒருகட்டத்தில் என்னதான் அவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்து கொண்டாலும் நல்ல பேர் வாங்க முடியாது..! இந்த பக்கம் தன்னிடம் சிரித்து பேசிவிட்டு அந்த பக்கம் தன்னை பற்றி குறை சொல்லத்தான் போகிறார்கள் என்ற உண்மை புரிய வர.. மனம் வெறுத்துப் போயிற்று.

தன்னை வருத்திக்கொண்டு அவர்களுக்கு பிடித்த மாதிரி குடும்பத்துக்காக உருகி தேய்வதைவிட..! இதுதான் என் குணம் இப்படித்தான் நான் இருப்பேன் என தன்னை புரிய வைத்து தன் விருப்பப்படி வாழ்வது மேல் என்று முடிவெடுத்துவிட்டாள். நியாயமாக இருந்தாள். குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தாள். ஆனால் நாத்தனாரோ மாமியாரோ தன்னை ஏமாற்றி வேலை வாங்குவதை அனுமதிக்கவில்லை..

சில இடங்களில் தன் மன நிம்மதிக்காக உடல் நலனுக்காக சுயநலமாக யோசிக்க வேண்டியது அவசியமாய் போயிற்று. மற்றவர் முகம் சுருங்கினாலும் கோபப்பட்டாலும் பரவாயில்லை.. நோ..! என்னால இதை செய்ய முடியாது.. என சத்தமாக அழுத்திச் சொல்ல வேண்டிய தேவை இருந்தது.

ஆரம்ப கட்டத்தில் லஷ்மியை கருவிக் கொட்டிய குடும்பத்தார் போகப் போக.. பின்னால் குறை பேசினாலும்..! அவள் இப்படித்தான்.. என பழகிக் கொண்டார்கள்.

எப்படியாவது லஷ்மியின் கண்களில் கண்ணீரை பார்த்து விட வேண்டுமென்ற புவனாவின் திட்டம் அன்று நிராசையாய் போனது.

சமையலறையை நேர்த்தியாக சுத்தப்படுத்தி.. கணவனோடு காலை உணவை முடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டாள் லஷ்மி..

காரில் முந்தைய நாளை போல இன்றும் அசாதாரண மௌனம்..

சிறிதுநேரம் கழித்து லஷ்மியே அந்த மௌனத்தை உடைத்தாள்.

“வாத்சா..!”

“ம்ம்..?”

“இந்த கனவுகளைப் பத்தி என்ன நினைக்கறீங்க..?”

சரக்கென காரை பிரேக் போட்டு நிறுத்திவிட்டு அவளை அதிர்ச்சியோடு பார்த்தான் வாத்சா.

பின்னால் வந்த பைக்‌ ஆசாமி  ஒரு வழியாக சுதாரித்து வண்டியை திருப்பி தலையிலடித்துக் கொண்டு கெட்ட வார்த்தை ஒன்றை உதிர்த்துவிட்டு சென்றான்.

“என்னப்பா இது..?” ஏன் காரை நிறுத்திட்டீங்க..! லஷ்மி திகைத்து விழி விரித்தாள்.

“எ.. என்ன கேட்ட..?”

“இல்ல.. இந்த கனவுகளை பத்தி என்ன நினைக்கறீங்க..?”

“இல்ல எனக்கு புரியல..!” ஏசியிலும் அவன் நெற்றியில் திட்டு திட்டாக வேர்வை.

“நீங்க முதல்ல காரை எடுங்க.. நான் சொல்றேன்..!” என்ற பிறகு வண்டியை கிளப்பினான்.

“இப்ப சொல்லு, என்ன கனவு..?”

“இந்த கனவு ஏன் வருது..? காணற கனவெல்லாம் நிஜ வாழ்க்கையில பலிக்குமா..?”

“எனக்கு தெரியல சந்தா..! ஆழ் மனசோட எண்ணங்கள்தான் கனவா வரும்னு சொல்லுவாங்க..! இந்த கனவுகள் பற்றி நிறைய தியரி இருக்கு.. எதிர்காலத்தில் நடக்கப் போறதெல்லாம் கனவா வரும்னு சொல்லி கூட கேள்விப்பட்டுருக்கேன்.. ஆமா ஏன் திடீர்னு இதை பத்தி கேக்கற..! நீ ஏதாவது வித்தியாசமா கனவு கண்டியா என்ன..?” காரோட்டிக்கொண்டே ஆர்வமாக அவள் முகத்தை பார்க்க..

“ஆமா..” என்றாள் புருவ முடிச்சுகளுடன்..

“என்ன..! நமக்கு குழந்தை பிறக்கிற மாதிரியா..?” அவன் லேசாக சிரித்தான்.

“அப்படி இருந்துட்டா கூட பரவாயில்லை.. இது டோட்டலா வேற மாதிரி..! ஒரு அசரிரி மட்டும் பேசுது.. அதோட சேர்த்து வேறு ஏதோ காட்சிகள் கண்ணுக்கு முன்னாடி ஓடுது..”

எச்சில் விழுங்கினான் வாத்சா..!

“இந்த கனவு எப்ப வந்துச்சு..?”

“எப்ப வந்துச்சுன்னு எனக்கு தெரியல.. ஆனா கனவு முடியும் போது நான் விழிச்சிக்கறேன்.. விடிஞ்சிடுது.. ரெண்டு நாளா ஒரே மாதிரியான கனவு எப்படி சாத்தியம்.?”

வாத்சாவுக்கு தலையே வெடிக்கும் போலிருந்தது.. இருவருக்கும் ஒரே மாதிரியான கனவு எப்படி சாத்தியம்.

லஷ்மியின் அலுவலகம் வந்திருந்தது. கார் கதவை திறந்து கொண்டு அவள் இறங்கப் போகும் நேரம்.. “சந்தா..” என அழைத்தான் அவன்.

“சொல்லுங்க வாத்சா..?”

“ஐ திங்க் வி நீட் டு டாக்..! சாயங்காலம் பர்மிஷன் போட்டுட்டு வந்துரு.. நான் உன்னை பிக்கப் பண்ணிக்கறேன்.!”

“என்ன திடீர்னு..? எதைப் பத்தி பேசணும்..?”

“உனக்கு வந்த கனவை பத்தி..! ஐ மீன் நமக்கு வந்த கனவை பத்தி..!”

ஒரு கணம் அவன் சொன்னது புரியாமல் விழித்த சந்தான லஷ்மியின் கண்கள் அதன் அர்த்தம் விளங்கியதும் அதிர்ச்சியில் விரிந்தன.

தொடரும்.

8 thoughts on “பாறையில் மலர்ந்த தாமரையே! 5

  • Shilaja sankaran

    அப்ப அடுத்த எபியில என்ன கனவுனு தெரிஞ்சிடும் போல , ரொம்ப ஆர்வமாக இருக்கு🤔🤔
    இந்த புவனா போல சில ஜென்மங்களும் இருக்க தான் செய்றாங்க, அவங்களுக்கு குழந்தை இல்லங்கறது உனக்கு ஆதாயம்தான் 🤨🤨
    அப்ப தானே அதை சொல்லி சொல்லியே அவள நோகடிக்க முடியும்😔😔

    Reply
  • Rameeza Sait

    அப்படி என்ன கனவடா கண்டு தொலச்சீங்க…😱😱😱

    Reply
  • அப்படி இரண்டு பேரும் ஷாக் ஆக மாதிரி என்ன கனவு வந்திருக்கும் 🤔🤔🤔🤔🤔

    Reply
  • Krishnaveni

    அய்யோ ரைட்டரே அப்படி என்ன தான் கனவு அது ஒன்னுமே புரியல மண்டை காயுது சீக்கிரம் ரிவீல் பண்ணுங்க ஆர்வம் தாங்கல 😳😳😳

    Reply
  • Revathy Dhanda

    அப்படி என்ன தான் டா கனவு வந்துச்சு உங்க ரெண்டு பேருக்கும் 😱😱😱.புவனா போல சில அற்ப பிறவிகள் என்றைக்கும் திருந்த போறது இல்ல. அடுத்தவங்களை காயப்படுத்தி சந்தோஷப்படும் ஈன புத்தி கொண்ட பிறவி 😡😡😡.

    Reply
  • Jothi vel

    அப்படி என்ன கனவா இருக்கும்?
    ரொம்ப சந்தோஷப்படவும் இல்ல, குழம்புறாங்க.குழந்தை பத்தியும் இல்லயாம் ஆனா வாத்சா திருப்பி திருப்பி இப்படி நடந்தால் எப்படி இருக்கும்னு வேற நினைச்சி பார்க்குறாப்ள.அப்படி என்ன கனவு? நல்ல கனவா??? கெட்ட கனவா??? ரொம்ப ஆர்வமா இருக்கு..

    Reply
  • Divyalakshmi Sugumar

    Orae maari kannavu🤔🤔🤔🤔🤔🤔
    Intresting
    Aana idhulla yedhachum
    Twist irukkum oh 😳😳😳😳😳
    Kudumba arasiyal
    Puriyadha pudhir dhan
    Purinchitaa namba dhan raja 🙏🙏🙏🙏🙏

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!