Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பிரியமே பிரிவேது

பிரியமே பிரிவேது! 2

அத்தியாயம் 2

மூன்று மணிக்கு மீட்டிங் இருப்பதாக அனைவருக்கும் மெயில் வர, அலுவலகத்தில் இருந்த அனைவரும் குழு குழுவாய் அமர்ந்து எதற்காகவாக இருக்கும் என்று பேச ஆரம்பித்து இருந்தனர்.



Advertisement

அப்பொழுது தான் மதிய உணவு முடிந்து தம்தம் இடத்தில் வந்து அமர்ந்தவர்கள் மெயிலைப் பார்த்ததும் உதறல் எடுத்தது என்னவோ உண்மை தான்.

மீட்டிங் தேவை இல்லாத கூட்டம் என்பது தான் ரகுவின் எண்ணம். மாத இறுதி நாட்களிலோ அல்லது ஒரு ப்ராஜெக்ட் முடியும் நிலையிலோ ஆரம்பிக்கும் நிலையிலோ மட்டுமே மொத்த அலுவலகமும் கூடும்.

Advertisement

Advertisement

இடையில் அவரவர் டீம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். சந்தேகமும் அப்படியே! அப்படி தீர்க்க முடியாத சந்தேகம் கூட டீம் லீடர் நேரடியாய் ரகுவிடம் கேட்டு கொள்வது தான் வழக்கம்.

இப்படி எதுவுமே இல்லாமல் இன்று மீட்டிங் என்று மட்டும் வந்த மெயில் அனைவருக்கும் தொண்டையை அடைக்க செய்ய காரணம் சென்ற மாத ப்ராஜெக்ட் முடித்து கொடுத்து பத்து நாட்கள் கடந்தும் அதைப் பற்றி எம்டியான ரகுராமோ இல்லை ப்ராஜெக்ட் மானேஜரோ இதுவரை எந்த தகவலும் கூறாமல் இருந்ததே!

Advertisement

“டேய்! காலையில லிப்ட்ல சார் சரியாவே குட் மார்னிங் சொல்லல.. அப்ப ப்ராஜெக்ட் எதுவும் ஊத்திக்கிச்சோ?  அதுக்கு திட்ட தான் மீட்டிங்கோ?” பிரேம் கேட்க,

“வாயை வச்சுட்டு சும்மா இரு டா.. அபசகுனமா பேசாத.. சார் என்னைக்கு உன்கிட்ட சிரிச்சு சிரிக்க வச்சு பேசி இருக்கார்? இன்னைக்கு பேச? அதெல்லாம் இல்ல.. ஆனா கொஞ்சம் பயமா தான் இருக்கு!” என்றது கார்த்திகா.

“ம்ம்ஹும்! எனக்கு என்னவோ எதுவும் சரியா படல.. நம்ம டிஎல் நம்மகிட்ட  சரியா பேசலை இல்ல? அதை நோட் பண்ணிங்களா?” என்றான் விக்ரம்.

பிரேம், கார்த்திகா, விக்ரம், ஆராத்யா இவர்கள் நால்வரும் தான் சென்ற ப்ராஜெக்ட்டை முடித்து கொடுத்திருந்தது.

மற்றவர்களை விட கலக்கமாய் இருந்ததும் இவர்களுக்கு தான்.. பெரிதாய் வார்த்தைகளை சிதற விட்டுவிடுபவன் அல்ல ரகுராம் என்றாலும் நான்கே வார்த்தைகளில் நாக்கு தள்ளிவிடும்படி அல்லவா இருப்பான்.

“ஆமா ஆரா எங்க?” என்று கார்த்திகா கேட்க,

“சாப்பிட்டு காபி குடிக்க போச்சு..” என்று விக்ரம் சொல்லிக் கொண்டு இருக்க,

“வந்துட்டேன் வந்துட்டேன்! என்ன மீட்டிங் என்னைய விட்டுட்டு?” என்று வந்தாள் ஆராத்யா.

“இங்க இல்ல மீட்டிங்.. அங்க!” என்று மீட்டிங் நடக்கும் அறையை காட்டிய பிரேம் “மூணு மணிக்கு!” என்றும் கூற,

“ஓஹ்!” என்று சாதாரணமாய் கூறி தன் கணினி பக்கம் திரும்பினாள்.

“பேர் தான் சார் வீட்டுக்கு பக்கத்து வீடு.. எதாவது நியூஸ் தெரியுதா உனக்கு?” கார்த்திகா கூற,

“இதென்ன புது கதையா இருக்கு.. பக்கத்து வீடுனா என்ன எப்பவும் அவர் வீட்டை எட்டி பார்த்துட்டா இருக்க முடியும்?” என்ற ஆராத்யா,

“ஆனா சார் வீட்டை எட்டி பார்க்கலாம் தப்பில்ல!” என்றவள், ஒருநாள் பார்த்த நினைவில் சிரித்துக் கொள்ள,

“என்ன டி உலர்ற? டென்ஷன் ஆகவே மாட்டியா?” என்றாள்.

“ப்ச்! தோணலையே!” அதற்கும் ஓர் தோள் குலுக்கல் தான் ஆராத்யாவிற்கு.

“அசரவே மாட்டியா டி.. வச்சு செஞ்சி விட்ருவாரோனு பயமா இருக்கு.. டிஎல் வந்தாவாச்சும் என்னனு கேட்கலாம்.. ராம் சார் ரூம்குள்ள போன ஆளை இன்னும் காணும்..” கார்த்திகா புலம்பலாய் கூற,

“சும்மா ஏன் பயந்துட்டு இருக்கனும்? நல்லா இருந்தா பாராட்டி ஒரு அவார்ட்.. இல்லைனா நாலு வார்த்தை.. கொஞ்சம் சுருக்குனு தான் இருக்கும்.. ஆனாலும் துடைச்சு விட்டா போயிடும்.. பார்த்துக்கலாம் விடு!” என்றாள் எளிதாய் ஆராத்யா.

“எம்புட்டு ஏத்தம் பாரேன் இவளுக்கு.. நம்ம ஃபர்ஸ்ட்டு ப்ராஜெக்ட் ஆரா! சொதப்பினா?” விக்ரம் கூற,

“ஏன் டா எப்ப பாரு சொதப்பிட்டான்னே நினைக்குறிங்க.. ஒருவேளை ஃபர்ஸ்ட் கிளாஸ்ஸா வந்து டெஸ்டிங் முடிஞ்சி ட்ரையல் முடிஞ்சி… இப்படி எல்லாம் யோசிச்சு தொலைய மாட்டிங்களா? இப்ப எதுக்கு இவ்வளவு அக்கப்போரு? எம்டி ஆபீஸ் மொத்தமும் தானே கூப்பிட்டிருக்கார்.. வேற ரீசன் கூட

இருக்கலாம்.. அவருக்கு கல்யாணம்.. எங்கேஜ்மென்ட்.. இப்படி எவ்வளவு இருக்கு.. ஸ்டுபிட்ஸ் டா நீங்க எல்லாம்!” என்று பேசி பேசியே நேரம் கடந்திருக்க, பத்து நிமிடம் முன்பாகவே அந்த அறையில் நிறைந்திருந்தனர் மொத்த குழுவும்.

ரகுராம் அறைக்குள் வரவும் மொத்தமாய் முப்பது பேரும் மரியாதை நிமித்தம் எழ, தலையசைத்தவன் கையசைத்து அமர கூறினான்.

“ஃபேஸ் ரீட் பண்ணிட்டேன்.. சார் காண்டுல இருக்குற மாதிரி எல்லாம் இல்லை..” ஆராத்யா கூற,

“நம்ம ஃபேஸ் கூட ரீட் பண்ற மாதிரி தான் இருக்கு.. எதாவது பேசி மாட்டி விட்டுறாதே!” என்று அமைதியாய் நல்ல பிள்ளையாய் அமர்ந்து கொண்ட கார்த்திகாவைப் பார்த்து சிரித்தபடி திரும்பினாள் ஆராத்யா.

“சோ! கைஸ் தி நேம் பிரேம், விக்ரம், கார்த்திகா அண்ட்…” என்று கூறி ஒரு நொடி நிறுத்திய ரகுராமைக் கண்டு பெயரை மறந்துவிட்டானோ என நினைத்து அருகில் நின்ற டீம் லீடர் “ஆராத்யா சார்!” என எடுத்து கொடுக்க,

“ஹ்ம்! மிஸ் ஆராத்யா!” என்று ரகு கூறவும் நால்வருமே ஒன்றாய் எழ,

“சோ ரிசல்ட் என்னனு நினைக்குறிங்க?” என்று அவர்களிடமே கேட்க,

“நல்லா வந்திருக்கும்னு சொல்லுவோமா?” என்றான் விக்ரம் பிரேமிடம் ரகசியமாய்.

“சப்போஸ் நல்ல ரிசல்ட் இல்லனு வச்சுக்கோயேன்.. என்ன தைரியம்னு உன்னை அடுத்த ப்ராஜெக்ட்ல வச்சு செய்வார்.. சொல்ல முடியாது.. புலி பதுங்குறது பாயறதுக்கா கூட இருக்கலாம்.. பொத்தாம் பொதுவா தலையை மட்டும் ஆட்டி வை!” என்றது பிரேம்.

“நீங்க சொல்லுங்க ஆராத்யா!” ரகு கேட்க,

“எஸ் சார்!” என்றவள்,

“எங்களோட பெஸ்ட் எஃபர்ட் குடுத்திருந்தோம்.. சோ நிச்சயம் உங்களுக்கு ப்ரோஃபிட் இருக்கோ இல்லையோ லாஸ் இருக்காதுனு நம்புறோம்!” என்று கூற,

“வெல்! குட் என்றவன்,

“ப்ரோசீட்!” என்று அருகில் நின்றவரிடம் கூற, பொறுப்பை ஏற்று அருகில் வந்து நின்றார் டீம் லீடர் விஷால்.

“நீங்க சொன்னது சரி தான் ஆராத்யா.. ரியல்லி அ குட் ஒர்க்.. உங்க எஃபர்ட்க்கு மதிப்பும் வெற்றியும் கிடைச்சிருக்கு.. சோ அதை செலப்ரெட் பண்ண தான் இந்த மீட்டிங்!” என்றார் அவர்.

“ஓஹ்! தட்ஸ் கிரேட் சார்! சூப்பர் சார்..!” என்று தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் தெரிவிக்க, மற்ற அனைவரும் கைத்தட்டி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

“சோ உங்களுக்கு தெரியும்.. ரொம்ப இம்போர்ட்டண்ட் ப்ராஜெக்ட்னு சொல்லி செலக்ட் பண்ணி தான் இதுக்கு உங்க நாலு பேரை சூஸ் பண்ணினோம்.. என்னை விட விஷால் உங்களை ரொம்ப நம்பி என்கிட்ட ரெஃபர் பண்ணினார்!” என்று ரகு கூற,

“பாரேன்! இவர் நம்ம மேல நம்பிக்கை வைக்கலைனு எவ்வளவு டைரக்டா சொல்றார்.. கொஞ்சமாவது சந்தோசமா சிரிச்சிட்டே சொல்லறாரா..!” கார்த்திகா ஆராத்யா காதுகளில் கூற,

“இவ்வளவு தான் மனுஷங்க கார்த்தி.. இவ்வளவு நேரமும் அய்யோ அம்மா திட்டுவாரோனு பயம்.. இப்ப அவரையே நக்கல் பண்ற..” என்ற ஆராத்யா கிண்டல் வார்த்தைகளில்,

“இல்ல! பொதுவா சொன்னேன்..” என்று தம்பித்து திரும்பினாள் கார்த்திகா.

“சார் பார்ட்டி.. பார்ட்டி..” என்று பிரேம், விக்ரமோடு இன்னும் சில ஆண்களும் சேர்த்து கேட்க ஆரம்பிக்க,

“சூர்! நான் விஷால்கிட்ட சொல்றேன்..!” என்ற ரகுராம்,

“விஷால்!” என்று அழைத்து நியாபகப்படுத்துமாறு கூறி,

“பெஸ்ட் விஷேஸ் ஆல்!” என்று கூறி ரகுராம் சென்றுவிட, விஷாலை தொவ்விக் கொண்டது ஆண்கள் கூட்டம்.

“இருங்க டா கேட்டு சொல்றேன்! ஆனா சார் ஓகே சொன்னதே பெரிய விஷயம்.. சோ வீக் டேஸ் டவுப்ட் தான்.. சாட்டர்டேக்கு கேட்டு பாக்குறேன்..!” என்று கூறி மகிழ்ச்சியாய் அந்த தினத்தை நிறைவு செய்திருந்தது அந்த அலுவலகம்.

காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ரகுவின் அலைபேசி சத்தத்தில் அதைப் பார்த்தவன் சிறு புன்னகை செய்து அதை கார் ஸ்பீக்கரில் கனெக்ட் செய்தான்.

“சொல்லு தர்ஷி!”

“டேய்! அம்மா கால் பண்ணி புலம்பி தள்ளுறாங்க.. எனக்கு பதில் சொல்ல முடியல.. என்ன பண்ணிட்டு இருக்குற நீ?” என கேட்டது ரகுராமின் சகோதரி தர்ஷினி.

மனம்விட்டு பேச என ரகுவிற்கு தோள் கொடுக்கும் தோழியும் கூட.. தர்ஷினியை விட பிடித்தம் என்றாலும் மனம் பகிரும் நண்பன் என்றாலும் அது தர்ஷினியின் கணவன் நந்தகுமார் தான்.

மகேஸ்வரிக்கு எதாவது தேவை மகனிடம் என்றால் கூட தர்ஷினி மூலம் கேட்கும் அளவிற்கு அவர்களுக்குள் ஒரு புரிதல் இருக்க, இந்த அளவுக்காவது இருக்கிறானே என்று தான் நினைத்துக் கொள்வார் அன்னை.

“கார் ஓட்டிட்டு இருக்கேன்!” சாதாரணமாய் வந்தது ரகுவின் பதில்.

“தெளிவா பேசுறன்னு நினைப்பா? அந்த பொண்ணுகிட்ட பேசிட்டியா இல்லையா டா? நானே சொல்றேன் வெயிட் பண்ணுனு சொன்னதால தான் போன டைம் நான் உன்னை விட்டதே!” என்று பொறுமை கடந்து தர்ஷினி கூற,

“முடியல தர்ஷி!” என்றவனின் குரலில் சாந்தமானாள் சகோதரி.

“உனக்கு என்ன டா பிரச்சனை? நீ பேசினா தானே அவளுக்கு தெரியும்? அடலீஸ்ட் உன்னை கண்சிடர் பண்ற அளவுக்காச்சும் அவளை எதாவது அப்ரோச் பண்ணி இருக்கியா?” என்றாள்.

“அதான் சொல்றேனே! எனக்கு தெரியல..!” என்றான்.

“ம்ம் இப்படியே சொல்லிட்டு இரு.. நானே வந்து வேற ஒரு பொண்ணா பாத்து உன் தலையில கட்டி வைக்குறேன்!”

“ஆஹான்! முடிஞ்சா ட்ரை பண்ணேன்!” என்ற பதிலில் இன்னும் சலிப்பானது தர்ஷினிக்கு.

“ரொம்ப பண்ற! இதுவே உன் மாமான்னா எல்லாம் சொல்லி இருப்ப..” என்று குறையாய் தர்ஷினி கேட்க,

“நீ என் அக்காவா போய்ட்டியே!” என்றான் சிரித்து.

“இல்லைனாலும்! அப்படி பார்த்தா கூட அவர் உன் மாமா டா.. அவர்கிட்ட சொல்ல முடியுது?” என்று இன்னும் மடக்க,

“மாமான்றதை விட என்னோட பெஸ்ட் பிரண்ட் அவர்..” என்றான்.

“ஷப்பா! புல்லு அரிக்குது!” என கிண்டல் பேசியவள்,

“இன்னும் பத்து நாள்ல வளைகாப்புக்கு நாள் பார்த்துட்டு வந்திருக்காங்க எங்க அத்தை.. நீ சரிபட்டு வர்ற மாதிரி தெரியல.. நான் வந்து பார்த்துக்குறேன்!” தர்ஷினி சொல்ல,

“ம்ம் மாமா கால் பண்ணி சொன்னாங்க.. டாக்டர் கண்சல்ட் பண்ணியா? கார் ட்ராவல் எல்லாம் ஓகே தானே?” என அக்கறையாய் இவன் கேட்க,

“எல்லாம் கேட்டு பிளான் பண்ணியாச்சு.. அடுத்த சன்டே தான்.. உன் மாமா ஒரு நாள் முன்னாடி வர்றாங்க.. நீ எல்லாரையும் கூட்டிட்டு வந்துடு..”

“ஹ்ம் சரி!” என்றவன் சிந்தனையில் இருக்க,

“நிஜமா சொல்றேன் ரகு! இந்த டைம் நான் ஆராவை மீட் பண்ணி பேச தான் போறேன்!” என்றாள்.

“என்னனு?” அவனும் சிரித்து கேட்க,

“என்னவோ! உனக்கெதுக்கு? லவ் பண்ண மட்டும் தெரியுது.. சொல்ல சொன்னா மலுப்புற.. நான் வந்து குழந்தை பொறந்த அடுத்த மாசமே உங்க கல்யாணத்தை கன்ஃபார்ம் பன்றேனா இல்லையா பாரு!” என்று கூற,

“முதல்ல வா! அப்புறமா பேசிக்கலாம்!” என்றவன் பேசி முடித்து வைத்துவிட்டு தன்னுடைய வீட்டின் முன் காரை திருப்ப, அங்கே எதிர்வீட்டின் மாடியில் குழந்தையோடு பேசிக் கொண்டிருந்தாள் ஆராத்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!