“ஏலே! உம் மவள ஒத்த சொல்லு சொன்ன, தூக்கி வளத்த அக்காவ வெட்டி வீசிடுவியோ?, அப்போ எம் புள்ள உமக்கு யாருவே?, உன் கூட நிக்குற தருதலைங்க எம் புள்ளையா வெட்டுவேன்னு நிக்கும் போது, எங்கக்கா மவன், எம் மருமவன், என் குடும்பம்ன்னு ஒத்த வார்த்தை சொன்னியாவே!. அப்போ உன் நினைப்புல என்ன இருந்துச்சு, எம் மவன் செத்தா சகட்டும்னு நின்னியோ?. அப்பவே முடிஞ்சு போச்சுலே உறவு. இனி என்ன பார்த்து பேசுறது! உங்கள தீர்த்து தான் பேசுவேன்” என்று கோபமாக சிவத்தை பார்த்து கத்தியவரின் வார்த்தையில் இருந்த அவேசம் அனைவரையும் கட்டி போட்டது.
“ரெண்டு பொம்பளைகளுக்கு அப்புறம் பொறந்த ஒத்த தம்பி. பெத்தவங்க இல்லாம நாத்தியத்து நிக்க கூடாதுன்னு, உமக்கு நல்லது, கெட்டது பார்த்து கூட நின்ன என்னிய நாத்தியத்து நிக்க வைக்க பார்த்தியா?. எம் ஒத்த மவன தூக்கி குடுக்க தான் நான் உசுற வச்சு இருக்கேன்னு நெனச்சியோ?. வயசான ரெண்டு பொம்பளைகளுக்கும் அவன் ஒருத்தன் தான ஆதரவு, மவன விட்டு அக்கா ரெண்டு பேரும் எப்படி இருப்பாங்கன்னு நினைப்பு இருந்துச்சா?” என்று சாட்டையாக விளாச,
வாய் திறக்க வில்லை சிவம். அவர் சொல்வது அனைத்தும் உண்மை தான். தாமரைக்கு ஒன்று என்றால் வேலுவை போடுவோம் என்று பூமணி வீட்டு ஆள்கள் சொல்லும் போது இவரும் சரி என்று தானே சொன்னார். மகள் மீது கொண்ட பாசம், உடன் பிறப்பை நினைக்க விடவில்லை.
“ஏலே சிவம்! நியி நல்லவனா இருந்த என்ன பண்ணிருக்கனும். இப்படின்னு விவரம் தெரிந்த உடனே, என்னிய பார்த்து பேசிருக்கணும்ல. நான் என்ன காணாத சீமையில இருந்தேன். நான் இல்லையா மூத்தவ ஒருத்தி இருக்காள அவ சொல்லாவது கேட்டியா?. அப்படியா உம் பொண்டாட்டி அழுகையும், மவ பாசமும் கட்டி போட்ருச்சு. அப்ப நான் என்னத்துக்குவே உம் மகளை பார்த்து பேசனும். உன் கூட பொறந்தவ உன் புத்தி தான், எனக்கும் எம் மவன் தான் முக்கியம். அவன் வெளிய வரதுக்கு நான் என்னவும் பண்ணுவேன், யாரையும் எதிர்த்து நிப்பேன். உன்னாலே முடிஞ்சத பார்த்துக்க!” என்று தெனவெட்டாக பேச,
ஒருத்தரும் வாய் திறக்க வில்லை. கூட்டத்தின் அமைதி பார்த்த பூமணி அண்ணன், “ என்னாலே! அடங்கி நிக்குறீங்க, அந்த பொம்பள பேச்சுக்கு பயந்துடீங்கல” என கூட்டத்தை பார்த்து கேட்க,
அவர் வார்த்தையில் வெகுண்ட கலைவாணன் வாய் திறக்கும் முன், “ யார பார்த்துலே பொம்பளைன்னு சொன்ன, சங்க அறுத்துருவேன் பார்த்துக்க! நாலு குடிகார பயலுகல கூட்டு சேர்த்த நீயி பெரிய ஆள! அப்படி பெரிய ஆளாவே இருந்தாலும் உம் சலசலப்புகெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். இந்த அரசி ஆம்பிளைக்கு ஆம்பிளை, பொம்பளைக்கு பொம்பளை. என் புருசன் இருந்த வரைக்கும் அவங்க காலுக்க கீழ நின்ன பைய, இன்னிக்கு நாக்குல பல்லு போட்டு பேசுறையோ!” என அரசி முடிக்க.
தாங்க முடியாத பூமணி, “நாங்க உங்களுக்கு அஞ்சி ஒன்னும் காலுக்கு கீழ நிக்கல, எம் புருசன் தான் எங்க அக்கா என்ன வளத்த தெய்வம்னு சொல்லுவாக, அதுக்கு மதிப்பு குடுத்து தான் நாங்களும் உங்கள அனுசரிச்சு போனோம். இஷ்டத்திற்கு பேசாதீங்க, கஞ்சிக்கு விதி இல்லாமையா உம்ம வீட்டு படி ஏறினோம்! உங்க அக்கா இப்படி பேசுறாங்க அமைதியா நிக்குரீங்கலே!” என கண்ணீரோடு பேசிய மனைவியை பார்த்தவர்.
“இனி, நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்து வராது. தேவை இல்லாமே வார்த்தைய விடாதீங்க, சுமூகமாக பேசி தீர்த்து ஒதுங்கிடலாம்” என தீர்க்கமாக பேசியவரின் வார்த்தையில் அதிர்ந்த கலை. மேற்கொண்டு பேச வர,
“எமக்கு மட்டும் என்ன புடிச்சு இழுக்குது. என் வீட்டுக்கும் உம் மவ வேணாம். நான் இப்ப வந்தது எம் மவன வெளிய எடுக்க தான். அந்த மேனமினுக்கி கொழுப்பெடுத்து செஞ்ச வேலைக்கு, எம் புள்ளை என்னத்துக்கு ஜெயில்ல கேடக்கணும்”
“உம் மவன் தான் எம் புள்ளையா அடிச்சான், மனசு வெறுத்து சாக கிடக்க காரணம் உம் மவன். அவன சும்மா விட சொல்றீங்களா! அதெல்லாம் விட மாட்டோம். என் அண்ணன் பசங்க, அக்கா பிள்ளைக எல்லாம் பெரிய ஆளுக தான். எங்கனாலும் வாங்க பார்த்துகிடலாம்” என திமிராகவே பூமணி பேசினார்.
பூமணி சொல்லில் கோபம் வர கலையும் “ சரி, அப்போ நேரா கோர்ட்டில் பார்த்துக்கலாம். வாங்க அத்த போவோம். வேலுக்காக சுமூகமாக பிரச்சனையை முடிக்க பார்த்த ரொம்ப தான் துள்ளுறீக. இனி பேச்சே இல்ல, எதுக்கும் நாங்களும் தயார் தான். ஒரு பொம்பள பிள்ளைய கோர்ட், கேஸ் இழுக்க வேண்டாம், ஒரே குடும்பம் நாளைக்கு ஒருத்தர் முகத்த ஒருத்தர் பார்த்துக்க முடியாது. சொந்தம் விட்டு போக கூடாதுன்னு அமைதியா இருந்த, ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாதவங்கண்ணு நினைப்பின்களோ” என்று களைவானனும் கோபமாக பேசிவிட, இடத்தை சுற்றி ஆட்கள் கூடி விட்டனர்.
அன்று காலை தான், தாமரையை தனி வார்டில் இருந்து பொது வார்டுக்கு மாற்றி இருக்க, பொது வார்டில் இருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தனர். சுற்றி இருக்கும் மக்களும் அலச ஆரம்பித்தனர் இவர்கள் பிரச்சனையை.
வார்டு வெளி வரண்டாவில் இவர்கள் அனைவரும் கத்தி கொண்டிருக்க, உள்ளே இருந்த தாமரைக்கு சத்தம் தெளிவாக கேட்டது. உடலும், மனமும் புண்ணாகி இருக்க பேசும் திராணி இன்றி மௌனமாக கண்ணீர் வடித்தாள். மற்றவர்கள் பார்வையையும் எதிர் கொள்ள முடிய வில்லை மன குன்றலாக இருந்தது.
தாமரையின் பெரியம்மா மகன் விமல், “ நீங்க கோர்ட் போறேன்னு சொன்ன, நாங்க பயந்துருவோம்மா! நானே ஒரு லாயர் தான், சட்டம் எனக்கும் தெரியும். நீங்க எல்லாம் நிக்க, உங்க ஆளு ஜெயில்ல தான் இருக்கான். என்ன பண்ண முடிஞ்சது உங்களால. இனியும் அப்படி தான், வரதட்சணை கொடுமை, மாமியார் கொடுமை, சந்தேகம், வேற பொண்ணோட தொடர்பு இப்படி ஏதாவது ஒரு கேஸ்ல உள்ள தள்ளி, அவன் சொத்த எல்லாம் என் தங்கச்சிக்கு வாங்கி குடுத்து, உம் புள்ளையா ஏழு வருசம் கம்பி எண்ண வைக்கிறேன இல்லையான்னு பாரும். எங்க வீட்டு பொண்ணு மேலயே கை வக்கீறான” என ஆவேசமாக அவன் கத்தி கொண்டிருக்க. அடுத்து என்ன?அரசிக்கு சலங்கை கட்டி விட்டது போல் ஆனது அவன் பேச்சு.
“ ஏலே சிவம்! இந்த நினைப்போடு தான் உம் மவள என் மகனுக்கு கட்டி வச்சியா. நான் கூட அக்கா மவன்னு பொண்ணு குடுத்ததா நினைச்சேன். கடைசில என் சொத்து மேல தான் உம் குடும்பத்துக்கு கண்ணா?” என்று எகத்தாளமாக பேசிய அரசி.
நொடி நேரத்தில் பொது வார்ட் உள்ளே நுழைந்து விட்டார். அங்கு ஒரு கட்டிலில் இருந்த தாமரை, குழந்தையை மடியில் கிடத்தி தலை குனிந்து அமர்ந்திருந்தாள். ஒரு சத்தமும் இல்லை, ஆனால் கண்களில் நிற்காமல் நீர் வழிந்து கொண்டிருந்தது.
“என்ன நாடகம் நடிச்சு இங்கு வந்து படுத்து கிடக்க. இந்த நீலி கண்ணீர பார்த்து உம் அப்பனும், ஆத்தாலும் வேண்ட பதறி போகலாம். ஆன, நான் நம்ப மாட்டேன்.நீயி எம்புட்டு பெரிய கைகாரின்னு எமக்கு மட்டும் தான் தெரியும். கட்டுன புருசன் ஜெயிலுக்கு அனுப்பிட்டு ஒன்னும் தெரியாத பச்ச புள்ள மாதிரி அனுதாபம் தேடுறீங்களோ” என நக்கலாக கேட்டவர்.
தாமரை வாய் திறக்காமல், தன் நிலை மாறாமல் அமர்ந்திருந்த விதம் அவரை மேலும் உசுப்பி விட்டது. பின்னோடு வந்த மருமகன் கூட கண்ணில் பட வில்லை. உற்றமும், சூழலும் மறக்கும் அளவிற்கு மகனின் நிலை கண்ணில் நின்றது. ஒரு தப்பும் செய்யாமல் தன் மகன் கெட்டவனாக ஜெயிலில் இருக்க, கமுக்கம இருந்து எல்லாத்துக்கும் காரணமாகி ஒன்னும் தெரியாத உத்தமி மாதிரி வேசம போடுற. உன்ன ஒரு வழி பண்ணாம விடமாட்டேன் என்று நினைத்து கொண்டு, அவளருகே சென்றார்.
அந்த பொது வார்டில் முப்பது கட்டில் இருக்க, பார்வையாளர் நேரம் என்பதால் நோயாளியை பார்க்க வந்த அனைவரும் இவர்கள் அடித்து கொள்வதை தான் வேடிக்கை பார்த்தனர். அங்கு இருக்கும் எல்லோருக்கும் கேட்கும் படியே தன் தொண்டையை திறந்தார்.
வெளியில் இருந்த அனைவரும் உள்ளே வர, யாரையும் கவனத்தில் கொள்ளாமல்.
“இந்த ஊமச்சி வேசத்த களைச்சு எம் முகத்த பாரும். கருப்பா இருக்க புருசன கட்டும் போது தெரியாத கலரு, கருப்பா பிள்ளை பிறந்த குறையா தெரியுதோ?, மாமனாரு ஜாடையில் பிள்ளை பிறந்ததுக்கு கவலைபடுற மகராசிக்கு. எம் வீட்டுக்கு வாக்க பட்டு வரும் போது இதெல்லாம் உமக்கு தெரியலையா!. அன்னிக்கு பணம், காசும், பகட்டு வாழ்க்கையும் தான் பெருசா நின்னுச்சு. இன்னிக்கு பகட்டு மறைஞ்சு அழகு நிக்குதோ!, ஊர் உலகத்து முன்னாடி கருப்பா இருக்குற எம் பேத்திய உம் புள்ளன்னு காட்ட கூசுதோ” என்றதோடு விடாமல்
“ நீயி எத வச்சு என்னத்த மாத்துனாலும் நடையும், உடையும் தான் மாறும், பிறப்பு எப்படி மாறும். நீயி எத வாங்கி தேச்சாலும் நெல்லையப்பன் பேத்தி தான் அது மாறாது. எம் புருசனகணக்கா இருக்குற புள்ள வேண்டாம்னு சொல்ற, அவக வீட்டு சொத்து மட்டும் வேண்டுமோ!. மருமகளா நீயி எங்களுக்கு என்னத்த செஞ்ச, ஒரு காபி தண்ணி போட்டு குடுத்துருப்பிய அந்த மனுசனுக்கு, செத்து கிடக்க ஒரு சொட்டு கண்ணீர் வரல அவர் கட்டி காத்த சொத்து வேணுமோ?, வெட்கமா இல்ல உனக்கு?”
அரசியின் பேச்சில் உக்கிரம், கோபம் அதிகம் ஆவதை உணர்ந்த கலை. நிலைமை கை மீருவதற்குள் அவரை அப்புற படுத்த எண்ணி நகற்ற, இம்மி அசையவில்லை ம்கூம்… அசைக்க முடியவில்லை. அவரின் பேச்சை பொறுக்க முடியாமல் மற்றவர்களும் சண்டை கட்ட, மணிமாறனும் கைகொடுக்க வந்துவிட்டான். அரசியை தன் யாராலும் கட்டு படுத்த முடியவில்லை. தன் மனக்கிடங்கை தீர்க்கும் வரை அவர் ஓயவும் இல்லை.
“எம் மவனவா நடத்தை கெட்டவன்னு சொல்ற, எனக்கு என்னமோ உம் மேல தான் சந்தேகமா இருக்கு. இப்பதான் பொம்பளைகளும் துணிஞ்சுடாங்களே, யார நம்புறது. யாராவது வெள்ளை தோல்காரன பார்த்ததும் விழுந்துடியா, அதான் எம் மவன ஜெயிலுக்கு அனுப்பிட்டு, உன் வழிய பாப்போம்ன்னு மருந்த குடிச்ச மாதிரி படுத்து கிடக்கிறையோ!, உன் ஆத்தாகாரி சொல்லி குடுத்தாள” என்க.
கொதித்து போயினர் மற்றவர்கள். ஆளாளுக்கு பேசி அடிதடியில் இறங்க. தாமரையும் பெரும்குரலெடுத்து அழுக ஆரம்பித்தாள். கலை, மணிமாறன் இருவராலும் சமாளிக்க முடியாது போக, அரசி நகராமல் கதையாகாது என்று உணர்ந்த கலை திரும்பி பார்க்க, வாணி எவ்வளவு இழுத்தும் தன் சின்னம்மவை நகர்த்த கூட முடியவில்லை, அவர் வாயும் ஓயவில்லை.
“ ஏலே சிவம்! பொழுது சாய்றதுக்குள்ள எம் மவன் வீடு வந்து சேரல, உம் வீட்டுள்ள ஒருத்தன் மிஞ்ச மாட்டீங்க. நான் தனி கட்டை இனி பாக்குறதுக்கு என்னவே இருக்கு, ஒருத்தன வெட்டினாலும் ஜெயிலுதான், பத்து பேரா வெட்டினாலும் ஜெயிலுதான். விறகு வெட்ட அருவா புடிச்ச கை, அசந்துளாம் நிக்க மாட்டேன்”…..
கலைவாணன் மொத்தமாக நகர்த்தி விட்டான் தன் சின்ன மாமியாரை. “ எம் மகனுக்கு முன்ன, கூட பிறந்த பிறப்புளாம் ஒண்ணுமே இல்ல! எம் மவன் வீடு வரல சந்தி சிரிச்சு போகும் பார்த்துக்க, புருசன் இல்ல மவனும் ஜெயில்ல வயசான பொம்பள தானேன்னு எண்ணாத! வீரமும், ரோசமும் ஆம்பிளைக்கு மட்டும் தான் எழுதி இருக்க. உம் வீட்டு உசுரு முக்கியம்ன எம் மவன விடுலே”…. என்று தொண்டை கிழிய கத்தி கொண்டே, மருமகனின் இழுப்பிற்க்கும் நகராமல் நிற்க. நிலைமையை சமாளிக்கம் பொருட்டு, வேற வழியும் இல்லாமல் குண்டுகட்டாகா தூக்கி விட்டான் தன் மாமியாரை கலைவாணன்.
ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று யாருக்கும் புரிபட வில்லை. புரிந்த பின் பதறியடித்து கொண்டு பின்னாடியே ஓடி வந்தார்கள் மணிமாறனும், வாணியும்.
வீட்டிற்கு வந்த பின், மணிமாறனுக்கு அப்படியொரு சிரிப்பு, நிலைமை புரிந்தாலும் சிரிப்பை கட்டு படுத்த முடியவில்லை. அவர்கள் பக்கத்தில் எல்லாம் சொந்தமாவே இருந்தாலும், மருமகன் முன்னே மாமியார் சேர்ந்து அமர்வது, உண்பது, சரிக்கு சரியாக பேசுவது எல்லாம் இருக்காது. அதுவும் கலைவாணன் மாதிரி அமைதியும், அழுத்தமும் கொண்டவன் முன் நிற்க கூட மாட்டார்கள். பெரியாத்தாவும் அப்படித்தான், முட்டி வலியில் துடித்தாலும் கலை வந்துவிட்டால் தூணை பிடித்து கூட எழுந்து நின்று விடுவார். அப்படி மரியாதையாக பழகும் மருமகன், இன்று அனைவரும் பார்க்க தூக்கி கொண்டு வந்து விட்டானே. வெளியே தலை காட்ட வில்லை அரசி.
“மாம்ஸ், நீங்க வாங்கடாணு கைய மடிச்சு விட்டு நிக்கும் போது, நம்ம திருச்சி சிங்கம் சீற போதுன்னு ஆர்வமா இருந்தேன், விசில் அடிக்க எல்லாம் ரெடி ஆனேன், பார்த்த பொசுக்குன்னு மாமியாரை தூக்கிட்டு வெளிய வந்துடீங்க!” என மணிமாறன் கிண்டல் செய்ய,
அவனை முறைத்து பார்த்த கலை, “ டேய்! என்ன நக்கலா, உங்க ஊருல வாக்கபட்டதுக்கு. ஊர் ஊரா என்னை மல்லு கட்ட விடுறீங்களே, நியாயமா!”….
“ என்ன மாம்ஸ் சொல்றீங்க, நாம அந்த தேனிகார பயலுககிட்ட தான ஓரண்டை இழுத்து வச்சுருக்கோம்!” ……
“தாமரையோட அண்ணன் சேலமாம்! அவங்க பெரியப்பா தூத்துக்குடியாம், மாமன் மகன் இருக்குறது சென்னையாம்! ஊர் ஊரா போறது தான் என் தொழில். இப்படி ஊருக்கு ஒரு பஞ்சாயத்து வந்த நான் என்ன தான் பண்றதாம். பாயிண்ட் வரட்டும், பாயின்ட் வராட்டும்ன்னு சொல்ற மாதிரி, ஒவ்வொருத்தனும் எங்க ஊருக்கு வா பாத்துக்கிறேன்னு சொல்றாங்கடா! …. என்று கலை ஒரு பக்கம் புலம்ப,
மணிமாறனோ கையில் வைத்து இருந்த ஆரஞ்ச் பழத்தை உரித்து வாயில் போட்டு கொண்டே, “ ஓ! ஐ.சி., கொஞ்சம் கஷ்டம் தான் மாம்ஸ். பட்! மலையேற போனாலும் இந்த மச்சாங்க தயவு வேணும்ல ! அதுக்காக நீங்க கொஞ்சம் பொறுத்துக்கலாம் தப்பில்லை!”
“நான் ஏண்டா! வேலையத்து போய் மலை ஏறணும்! அதுவும் உங்க கூட”என்று கடுப்பாக கலை வினவ,
“ எல்லாம் ஒரு பழமொழி தான் மாம்ஸ். இருந்தாலும் நீங்க எங்க ஆத்தாவ, அப்படி தூக்கி இருக்க கூடாது. ஐய்யனாரே! வந்தாலும் அசராது பதில் கொடுக்கும் எங்க ஆத்தாவ, இன்னிக்கு முழுக்க அறைய விட்டு வெளி வராம பண்ணிட்டீங்களே! மச்சான் சாச்சுபுட்டீங்களே” என்று வடிவேலு பாணியில் கிண்டல் செய்ய,
“ டேய்! நீவேற, வயசானவங்க புடிச்ச இழுப்புக்கு வந்துருவான்கன்னு நினைச்சா! அசைக்க கூட முடியலையே” என சலிப்பாக கலை சொல்லும் போதே. வாணி கையில் காபியுடன் வந்தாள்.
“அக்கா! நான் கூட எங்க அக்காவோட அழகுக்கும், கலருக்கும், படிச்ச படிப்புக்கும் ஊர் விட்டு ஊர் போய் இவருக்கு கட்டி கொடுக்கணுமான்னு யோசிச்சேன். ஆனா அக்கா, இப்ப சொல்றேன் கேட்டுகோ, “ எம் மாமனோட் மனசு மல்லிகை பூ போல பொன்னானது” என்று மணிமாறன் பாட, கடுப்பாக பார்த்தான் கலை.
“அக்கா! என்ன இருந்தாலும், படிச்சவர் படிச்சவர் தான். நமக்கு எல்லாம் வெட்டருவாளும், வேல் கம்பும் தான் தெரியும். அவர் எப்படி சத்தமில்லாமல் சண்டையா ஓச்சு விட்டார் பார்த்தியா. ஒருத்தன் முகத்திலும் ஈயடால ” என மேலும் கிண்டல் செய்ய,
“டேய்! அடங்குடா, கோபத்தை கிளப்பாத. இருக்குற நிலை தெரியாம!” என கலை காய,
“ மாம்ஸ்! இந்த ஒரு வாரமும். உச்சி மண்டையில் வெயில் அடிச்ச மாதிரி சுத்தி திறியுறோம். ஒரு கிலுகிலுப்பு வேண்டாமா!” என கொஞ்சலாக சொல்லி தோல் உரச,
“டேய்! உன் கிளுகிளுப்புக்கு, நான் தான் கிடைச்சேனா!”
“பின்னே, மாமன் – மச்சான்ன என்னவாம்!” என இன்னும் நெருங்கி வர
“டேய்! நான் மலையேறவும் மாட்டேன். மச்சான் தயவும் வேண்டாம். ஆளை விடுங்கட போதும்”
“மலையேற வேண்டாம்னு, நாளைக்கு தாய் மாமன் சீர் சுமந்து கொட்டு அடிச்சு, வேட்டு போட்டு வாராது யாரு? மதுரைகாரனுக தலையே போனாலும், தாய் மாமன் உறவ விடுவோமா!” என சிரித்து கொண்டே மாறன் சொல்ல,
கடுப்பான கலை, “ உங்கக்காவ நீங்களே கூட வச்சுக்கோங்கட ! என்னை மட்டும் ஊருக்கு பஸ் ஏத்திவிடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்” என்று சொல்லிய நொடி வெடித்து சிரித்தான் மாறன்.
கலைக்கு ஒரு போன் கால் வர, அட்டன் செய்து பேசியவன் முகத்தில் பிரகாசம். ஆம், சிவம் கேஸ்சை வாபஸ் வாங்கிவிட்டார், வேலு வெளியே வந்து விட்டான். அப்போது தான் அனைவருக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
“பின்னே, எங்க ஆத்தவோட பவர் அப்படி. ஒரு பைய தப்பிக்க முடியாது” என அப்போதும் கிண்டல் பேசியே வேலுவை அழைத்து வர கலை உடன் சென்றான் மாறன்.
இருவரும் சென்று பார்த்த போது, வேலு எப்போதோ வெளியேறி விட்டான் என்னும் தகவல் தான் கிடைத்தது. இருவரும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்து கொண்டே, மருத்துவமனை சென்றனர். ஒரு வேளை தாமரையை காண சென்றிருக்கலாம் என்று எண்ணி. ஆனால், அங்கும் வேலு வர வில்லை. வேறு எங்கு சென்றான் என யோசனையாக பார்த்தனர் இருவரும்.
மாறன் தன் இக்கட்டான சூழ்நிலையில் எல்லாம் வேலு அவன் தோப்பில் தான் இருப்பான் என்று சொல்ல. இருவரும் விரைந்து அங்கு சென்று பார்க்க, அங்கும் இல்லை வேலு. வேறு எங்கு சென்றான் மண்டை காய்ந்தது கலைவாணனுக்கு.
பின், இருவரும் அந்த ஊரில் இருக்கும் ஒவ்வொரு இடமாக அலச ஆரம்பித்தனர். ஆனால், வேலு இருந்ததோ! அவன் தெக்கு தோட்டத்தில் தான். களத்து மேட்டில் நேர் பார்வையாக பார்த்து அமர்ந்திருந்தான். கலையும், மாறனும் வந்ததை கூட உணர வில்லை. தயங்கி தயங்கி தான் அவன் தோல் தொட்டான் கலைவாணன்.
தொடும் உணர்வு இன்றி, அமைதியாக ஒரே இடத்தை வெறித்து அமர்ந்திருந்தான். அவன் கண் பார்வை நோக்கும் திசையை இவர்களும் பார்க்க அதிர்ந்து விட்டார்கள். அது சுடுகாடு, அவன் தந்தையை புதைத்த இடத்தையே பார்த்து சலனமில்லாமல் அமர்ந்திருந்தான். அவன் நிலைபாடு என்னவென்று இருவருக்கும் தெரியவில்லை.
கலைவாணன் தான் அழுத்தி அவனை உலுக்க, திரும்பி பார்த்தவன் கலையை இடுப்போடு கட்டி கொண்டு, “ அப்பா” என்று பெருங்குரலில் கத்தி அழுதான். எட்டு மாதத்திற்கு முன் இறந்த தந்தைகாகவ இப்போது அழுகிறான் புரியாமல் பார்த்தான் மாறன். அவன் மனதில் சொல்ல முடியாத வலியும், வேதனையும் இருக்கிறது போல என்று எண்ணிய கலைவாணன் அமைதியாக வேலு முதுகை தட்டி கொடுத்தான் அழுது தீர்க்கட்டும் என்று.
அழுகை தேம்பலாகா மாறிய பின்னும் வேலு தலை நிமிர வில்லை. கண்ணீர் மட்டும் வந்து கொண்டே இருந்தது. அவனை நிமிர்த்த கலை எடுத்த முயற்சியும் வீண். மாறன் தான் வேகமாக ஓடி வாய்க்கால் நீரை வாளியில் அள்ளி வேலு மீது ஊற்றினான். கலைவாணன் அவன் கன்னத்தை தட்டி, தலையை நிமிர்த்தி முகம் துடைத்து விட்டான்.
ரொம்பவும் சோர்ந்து, தெளிவில்லாமல் இருந்தான் வேலு. “டேய் வேலு! என்னடா? என்னாச்சு? எதையும் சமாளிப்போம் வேலு” என மாமன் ஆறுதல் சொல்ல,
“எனக்கு அப்பா வேண்டும்” மாமா என்க.
புரியாமல் வேலுவை பார்த்தான் மாறன். ஏதோ முதல் நாள் பள்ளி செல்லும் சிறுவன் கேட்பது போல இருந்தது.
“எனக்கு அப்பா வேணும் மாமா! அப்பா இருந்த இவ்ளோ பிரச்சனை எல்லாம் வந்துருக்காது. எல்லாத்தையும் அப்பா பார்த்துக்கிறேன் நீயி சந்தோசமா இருன்னு எனக்கு யாரு சொல்லுவா அப்பா தான. அவர் தான் வேணும் மாமா நான் எங்கணு போய் தேடுவேன்” என்று கண் கலங்க.
பார்க்க கஷ்டமாக இருந்தாலும், “ வேலு நீயே ஒரு புளைக்கு அப்பன்லே! சின்ன புள்ள மாதிரி கேக்குற. எம்புட்டு அழுதாலும் மாண்டவங்க மீள மாட்டாங்க வேலு. நாமதான் அத ஏத்து வாழ பழகிக்கணும்” என்று மாறன் விளக்கினாலும்,
“என்னாலே முடியலவே! எம் அப்பா இருந்துருந்த இந்த கஷ்டம் இல்லான்னனு என்னாலே நினைக்காம இருக்க முடியல. என்னை தோல்ல தூக்கி சுமந்த மனுசனுக்கு தோள் கொடுத்து துணை நிக்காம போனேவே! கடைசி வர எனக்காக உழைச்ச மனுசன், அவர உக்கார வச்சு பாக்க முடியலையே! நான் பாவி! சுயநலவாதி” என்று தலையில் அடித்து கொண்டு அழ
அதை தடுத்த கலைவாணன். “இப்ப எதுக்கு வேலு இந்த பேச்சு, முடிச்சத விடு நடக்கிறதா பேசுவோம்!”
“ இல்ல மாமா! அன்னிக்கும் சுயநலமாக யோசிச்சு தான் என் அப்பன் சாவுக்கு காரணமா நின்னேன்! இன்னிக்கு தாமரை சாக போனதுக்கும் நான் தான் காரணம். எனக்கு வாழவே தெரியல மாமா. பாருங்க அப்ப போய் ஒரு வருசம் கூட ஆகல, எவ்ளோ சிக்கல் நான் தான் சரியில்ல மாமா”
“ வேலு கோபம் மனித இயல்பு. வீம்பா தாமரை செய்த முட்டாள் தனதுக்கு நீயி என்ன பண்ணுவ, சண்டை போடுற புருசன் பொண்டாட்டி எல்லாம் செத்த போறாங்க” என கலை எடுத்து கூறினாலும்.
விரக்தியாக சிரித்தவன். “எங்க அப்பா சொல்லுவாரு மாமா, வேலு புருசன் பொண்டாட்டி உறவுன்றது மாடு பூட்டிய வண்டி மாதிரி. ரெண்டு மாடும் சேர்ந்து இழுத்த தான் வண்டி நகரும். ஒத்த மாடு மட்டும் இழுத்தாலும் வண்டி நகரும், ஆனா ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்காது குடை சாஞ்சுடும்ன்னு, இன்னிக்கு என் வண்டியும் குடை சாஞ்சுருச்சு. அத சரி பண்ண தான் எனக்கு தெரியல போல!”
அடைத்த தொண்டையை சரி செய்தவன், “ இங்க முழு முத குற்றவாளி நான் தான் மாமா. தாமரைக்கு எம் மேல பெருசா ஈடுபாடு இல்லான்னு தெரிஞ்சும், அதை பெருசா எடுக்காம! அவளுக்கு புடிச்ச மாதிரி என்னிய மாத்தி, அவ சரின்னு சொல்ற ஒத்த சொல்லுக்கு அவளுக்கு புடிச்சது எல்லாம் செஞ்சு எம் பக்கம் திருப்புனேன். தன் கனவுகளின் நாயகனா என்னிய நினைச்சு அவ சந்தோஷப்பட, என் காதல் நிறைவேறின மகிழ்ச்சி எனக்கு” என பெருமூச்சு விட்டவன்.
“எப்பவும் நம்மள தாங்குவான்னு தாமரை நினைக்க, கல்யாணம் ஆகி குழந்தை பிறந்த சரியா போகும்ன்னு நான் நினைச்சேன். எல்லாரும் சொல்ற மாதிரி கல்யாணம் ஆகி புருசன், குழந்தை வந்த நிதர்சன வாழ்க்கை புரிபடும்ன்னு நான் நினைக்க, தாமரை விதிவிலக்குன்னு எனக்கு காட்டிடா!”
“ தாமரை எதிர்பார்ப்பு தெரிஞ்சும், அவ கனவு வாழ்க்கைக்கு என்னால கலர் பூச முடிஞ்சதே தவிர உயிர் கொடுக்க முடியல. கனவுல காணுற வாழ்க்கை நிஜமாகதுன்னு அவளுக்கும் புரியல, நிஜமாக்குற சக்தி எனக்கும் இல்ல. இனி, சரி கட்டி, அனுசரிச்சு, நான் மட்டுமே விட்டு கொடுத்து போற வாழ்க்கை வேணாம் மாமா. வாழ்ந்த புரிதலோடு வாழ்ற வாழ்க்கைக்கு தான் நான் தயார்”
“எங்க கல்யாண வாழ்க்கை நீண்ட கிடக்கு, ஒவ்வொரு தடவையும் அவ முகம் பார்த்து, ஒரு சொல்லு சொல்லாம, அவ இழுத்த இழுப்புக்கு கடைசி வரை போக முடியாது மாமா. அச்சாணி முறிஞ்சு போய்ரும். எதார்த்தமான என்னோட கோபத்தை தாங்க முடியாம சாக போற! சமாதானம் செஞ்சு கூட்டி வந்தாலும் எவ்ளோ நாளைக்கு, வேசம் ஒரு நாள் களைஞ்சு போய்டும். இப்ப இருக்குற பாதிப்பா விட பெருசா போய்டா! யாருக்கும் தாங்காது. ஒரு பொம்பள பிள்ளை வேற பெத்து வச்சிருக்கேன்.”
கண்களில் நீர் நின்றாலும் முகத்தில் தெளிவோடுதான் பேசினான் வேலு. “ நான் தாமரைய சமாதானம் செஞ்சு கூட்டியர தான் தோணும். இன்னிக்கு நான் அழுதாலும், அராட்டுனாலும் எங்கப்பா வர போறது இல்ல! சண்டை போட்டு பிரிந்து நின்ன என்னிக்கும் சேரலாம். ஆன, உசுரு போன திரும்ப வருமா. என்னாலையும் கடைசி வர சரிகட்டியே போக முடியுமா!”
“தலை மேல ஒரு சாவு நடந்து போச்சு, இன்னொரு இழப்பு தாங்குற வல்லமை எமக்கு இல்ல! இந்த வயசிலும் அப்பாவா தேடுது எனக்கு. எம் மவ பாவம், அதுக்கு தனியா நின்னாழும் தாய், தகப்பன் வேணும். இனி, முடிவு தாமரை எடுக்கட்டும். எதுன்னாலும் நான் ஏத்துகணும்! ஒரு பிள்ளைக்கு தாய். அந்த பக்குவம் இருக்கும்ல தாமரை முடிவுக்கு நான் கட்டு படுறேன். நீங்க யாரும் இதுல தலையிட வேண்டாம்” என்று வேலு தீர்மானமாக சொல்லி விட
கலைவாணனுக்கும் அதுவே சரியென்று பட்டது. கணவன் மனைவி இருவரும் பேசி தீர்த்து கொள்வதே நல்லது. எல்லாம் நல்ல படியாக முடிய வேண்டும் என்று அனைத்து கடவுளுக்கும் வேண்டுதல் வைத்தவன் திரும்பி மாறனை பார்க்க,
போனில் ஏதோ பேசி கொண்டிருந்தவன். அவசரமாக வேலு அருகில் வர, கவனம் அங்கே சென்றது. “ ஏலே வேலு! கேஸ்ச வாபஸ் வாங்குன உம் மாமன், நம்ம ஊர் பஞ்சாயத்துல பிராது கொடுத்துருக்காக”.
தொடர்ந்து மேல சொல்ல தயங்கியவன் சிறிய மெளனத்தின் பின், “ உனக்கும், தாமரைக்கும் அத்து விட பேசி இருக்காங்க, நாளைக்கு காலையில முதல் விசாரணை உங்களுக்கு தான்” என்று மாறன் அறிவிக்க, அதிர்ந்து போய் நின்றான் கலை வாணன்.