நடு ராத்திரி வேளையில் இருட்டு அறையில், பொட்டு வெளிச்சம் இல்லாமல், இருள் சூழ்ந்த அறையில் எதையோ வெறித்து பார்த்து அமர்ந்து இருந்தாள் சாலா. அவள் விசாலாட்சி. எப்படியும் வயது முப்பத்தியேழு தொடும். நடுத்தர வயதில் பெண்கள் இருக்கும் உடல்வாகு தான். முகத்தில் இன்னும் கிழட்டு தன்மை வர வில்லை. ஆனால், இளமை கொஞ்சும் மஞ்சள் முகம் மறைந்து போய் இருந்தது. குண்டு என்றும் ஒல்லி என்றும் சொல்ல முடியாத உடல் வாகு. சராசரி பெண்கள் உயரம், முதுகை தாண்டி நிற்கும் முடி, படர்ந்த முகம், நூல் காட்டன் சேலை. இது தான் விசாலாட்சி. நிச்சயம் தாய்மார்கள் வகை தான்.
எப்பவும் கனிந்து தென்படும் அவள் வட்ட முகம். இன்று பந்து போல வீங்கி கிடந்தது. கண் இமை தடித்து, நாசி சிவந்து என்று ஏகத்திற்கும் முகம் வீங்கி கிடந்தது. இனி இவளை பிழிந்தாலும் நீர் வராது என்னும் அளவுக்கு கண்களில் கண்ணீர் வற்றி விட்டது. ஆனாலும் என்ன செய்ய, இவ்வளவு அழுதும் மனதின் வலி மட்டும் துளி குறையவில்லை.
தாய் வீட்டுக்கு வந்ததில் இருந்து, தனியே அமர்ந்து அழுது கொண்டு தான் இருக்கிறாள். அடுத்து என்ன என்பது மட்டும் விளங்கவே இல்லை. திருமணம் முடித்த புதிதாக இருந்தால் தாய் மடியில் படுத்து ஒரு பாடு அழுது கரையலாம், இல்லையா தந்தை, அண்ணனிடம் சொல்லி மல்லுக்கு நிக்கலாம், நியாயமும் கேட்கலாம்.
அப்படி எதுவுமில்லாமல் கல்யாணம் ஆகி பதினேழு வருடம் கடந்து விட்டது. பதினாறு வயதில் மகனும், பதினொரு வயதில் மகளும் நிற்கிறார்கள். இப்போது போய் கணவன் சரியில்லை என்று தாய் வீட்டில் நிற்க முடியுமா…
ஆமா, கணவன் தான் சரியில்லை. இத்தனை ஆண்டு கால திருமண வாழ்க்கையில் குறை என்று இல்லாமல், ஒரு நாளும் சண்டை என்று தாய் வீடு செல்ல விடாமல், சின்ன சச்சரவு கூட அடுத்த வீடு தெரியாமல் உள்ளங்கையில் வைத்து தாங்கிய கணவன் தான் பொய்த்து போனான். என் வாழ்வின் வரம் என் கணவன் என்று தமுக்கு வைத்து தண்டோரா போடாத குறையாக சுற்றி கொண்டு இருந்தவளை, பின் முதுகில் குத்தி சாய்த்து விட்டான் அவள் கணவன் ஜெயபிரகாஷ்.
வீட்டில் மூத்தவன், பொறுப்பானவன், அமைதியானவன், குடி, சிகரெட் என்று எந்த கெட்டபழக்கமும் இல்லாதவன், நேர் சிந்தனை கொண்டவன் என்று எண்ணி இருக்க பெண் விசயத்தில் சறுக்கி போனான். முன் வயிறு தொந்தி, காதோரம் நரை என்று நாப்பத்தி மூன்று வயதில் வழி மாறி போனான். அதுவும் இருபத்தி எட்டு வயது பெண்ணோடு…
ஜெயபிரகாஷ், விசாலாட்சி இருவரின் பதினேழு வருட தாம்பத்தியம் அடி கரும்பு தான். முத்தாக இரு பிள்ளைகள் அஜய் பிரகாஷ், அஞ்சனா… கணவன், சென்னையில் கார் கம்பெனியில் மேலாளராக இருக்க, மனைவி இல்லத்தரசி.
எல்லோர் வீட்டிலும் வரும் உரசலும், அன்பும், காதலும், ஊடலும் என்று வாழ்க்கை எங்கும் தொய்வு இல்லாமல் தான் சென்றது. அப்போது தான் வந்து சேர்ந்தாள் ஷாலினி. பிரகாஷின் அத்தை பெண். சாப்ட்வேர் என்ஜினியர், அமெரிக்காவில் இருந்தவள். திருமணம் முடித்து கணவன் உடன் அங்கு தான் இருந்தாள். என்னவோ ஒத்து வரவில்லை, எளிதாக பிரிந்து கொண்டார்கள். சென்னையில் மாற்று வேலை பார்த்து கொண்டு தனியாக தான் இருந்தாள். அவள் நலன் கருதி தான், சொந்தமாக இருக்கும் பிரகாஷ் வீட்டிலே தங்க வைத்தார்கள். அதற்கு முழு ஆதரவு அளித்து, அரவணைத்து கொண்டது சாலா தான். அந்த நன்றிக்கு தான் அவள் இடத்தையே பிடித்து கொண்டு, அவள் முதுகில் குத்தி விட்டாள் போல…
தொழில் விசயமாக கோவா போகிறேன் என்று கணவன் சொன்ன போது, “கோவாவில் என்ன தொழில்?…” என்று சாதுர்யமாக கேட்க தோன்றாமல், சிரித்த முகமாக வழி அனுப்பி வைத்தாள். பிள்ளைகள் பள்ளி விடுமுறை என்பதால் தாய் வீடு செல்ல திட்டமிட்டவர்களை அழைத்து செல்ல சாலாவின் அண்ணன் திரு குமரன் வந்து இறங்க, பிள்ளைகளை அவள் அண்ணனோடு அனுப்பி விட்டவள். தன் கணவனை காண கோவா சென்றாள்.
சாலா, எப்போதும் கணவனின் கை பிடியில் வாழ்பவள். ஒரு கிளிப் எடுத்தாலும் அவனிடம் சொல்லாமல் செய்ய மாட்டாள். அவன் பார்வை இன்றி அவளிடம் அணுவும் அசையாது. அந்த நினைப்பில் தான் பிரகாஷ் எதிலும் கவனமின்றி இருந்தது.
ஆனால், சாலாவோ கணவன் எப்போதும் சொல்லும், “நீ தனியா சுதந்திரமா நின்னு பழகு சாலா. எல்லாத்துக்கும் என்னையே தேடாதா… படிச்சவ தான, எதையும் தனியா சமாளிக்க கத்துக்கோ…” என்ற கணவனுக்கு சர்ப்ரைஸ் தரும் எண்ணத்தில், அவர்களின் நிச்சய தேதியில் அவனை காண ஆவல் கொண்டு தான் கோவா சென்றாள்.
மனைவியின் தைரியத்தில் கணவனை அதிர்ச்சியில் ஆழ்த்த எண்ண , கடைசியில் இவள் தான் அதிர்ச்சியில் ஆழ்ந்து போனாள்.
தன்னுடைய சென்னை தோழிகள் மூலம் கோவா வந்து, அவன் இருக்கும் இடம் செல்ல, மனதில் ஒரே படபடப்பு. மார்பு பகுதியை கை வைத்து தடவி கொடுத்தவள். மெல்ல அடி வைத்து முன்னேறினாள். அவனுக்கு பிடித்த மாதுளை முத்துக்கள் நிறத்தில் சுடிதார் அணிந்து வந்திருந்தாள்.
அங்கு ஒரு ரிசார்ட்டில் தான் இருந்தான். எப்போதும் இந்த நாளை இவன் தான் மனதில் வைத்து இருப்பான். சாலா கல்யாண நாள், பிள்ளைகள் பிறந்த நாள், இருவரின் பிறந்த நாள் மட்டும் தான் மனதில் வைப்பாள். இவளை பெண் பார்த்த நாளை கூட மனதில் கொண்டு வாழ்த்துவது கணவன் மட்டும் தான். நிச்சயம் ஏதேனும் புது புடவை இருக்கும். இந்த ஒரு வருடமாக கணவன், மனைவிக்குள் ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருக்க, அதை சரி செய்யும் பொருட் தான், கணவனுக்கு இந்த சர்ப்ரைஸ்…
அதோ அங்கு இருக்கிறான் என்று முன்னேற, அடுத்த நிமிடம் கரண்ட் அடித்தது போல நின்று விட்டாள். ஒரு சாய்வு இருக்கையில் கால் டவுசருடன் பிரகாஷ் சாய்ந்து இருக்க, அவன் மடியில் அமர்ந்து நெஞ்சில் சாய்ந்து இருந்தது ஷாலினி. அவள் காதோரத்து முடியை ஒதுக்கி விட்டு, உச்சந்தலையில் பிரகாஷ் முத்தம் வைக்க, அதில் சிலிர்த்தவள். அவன் முடி அடர்ந்த மார்பில் முகம் புதைத்து ஒண்டி கொண்டாள். அதன் பின் நடந்த அவர்களின் கொஞ்சலை மடிந்து போன மனதோடு பார்த்தவள், வராத காலை இழுத்து கொண்டு ஒரு அடி எடுத்து வைத்தாள். அடுத்த அடி எடுக்க மனம், உடல் இரண்டும் ஒத்துழைக்க வில்லை. இடுப்பை பிடித்து கொண்டு “அம்மா…” என்ற அலறி அமர்ந்து கொண்டாள்.
ஒரு வருடத்திற்கு முன்பு தான் பின் பக்க இடுப்பில் ஒரு ஆபரேசன் செய்தார்கள். இடது கால் நரம்பும் சுருண்டு கொள்ள, பிசியோ போய் தான் ஓரளவு எழுந்து நடமாடுகிறாள். நடுத்தர வயது, இரு பிள்ளைகள், கணவன் என்று இருக்க முடியாமல் படுத்து கொண்டது, அவளை ஒரு வித மன அழுத்தத்தில் தள்ளியது. எதிர்காலம் குறித்து ஏதேதோ பயம், சரியாகிவிடும் என்றாலும் சாவு வந்து விடுமோ என்ற அச்சம் மிகுந்து இருந்தது.
அன்றைய நிலையில் கட்டிய கணவனை விட, பெத்த பிள்ளைகள் முன் வந்து நின்று விட்டார்கள். பத்தாவது படிப்பை தொடங்கும் நிலையில் மகனும், எப்போது வேண்டாலும் வயதுக்கு வந்து விடும் நிலையில் மகளும் இருக்க, மிகுந்த மன அழுத்தம் தான். தன் உடல், பிள்ளைகள் என்று மன அழுத்தத்தில் இவள் நிக்க, துணை நிப்பான் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டு இருந்த கணவன் வழி மாறி போனான். தன்னை போலவே பிள்ளைகள் வாழ்வை முன் நிறுத்தி கணவன் யோசிப்பான் என்று சாலா எண்ண, அவன் ஆசை எதிர்பார்ப்பு எல்லாம் வேறாக இருந்தது.
எப்படி வந்தோம் என்று தெரியாமலே வீடு வந்தவள், ஒரு மூலையில் முடங்கி கொண்டாள். மனம் எல்லாம் ரணமாக வலித்தது. புதுமை பெண்ணாக யோசிக்கவே தெரியவில்லை. “தன் கணவனா இப்படி?…” என்ற வார்த்தையே கோபமாக, அழுகையாக, ஏமாற்றமாக, பரிதாபமாக வாயில் இருந்து கேவலாக வெளி வந்தது.
இதயத்தை கை கொண்டு அழுத்தி பிடித்தாள். இரண்டு குத்து விட்டாள், இரண்டு அடி கூட ஓங்கி அடித்தும் வலி குறையவே இல்லை. சுவற்றில் தன் தலையை ஓங்கி அடித்து கொண்டாள். அந்த வலி கூட மன வலியை துளி குறைக்க வில்லை. பேசாமல் செத்து விட்டாள் என்ன!…
“என் கணவன்…” இதை தாண்டி மனம் எங்கும் நிற்க வில்லை. இதை சகித்து வாழ முடியும் என்று தோன்றவும் இல்லை. நொடி நேரம் தான் , அவசரமாக சேலையை எடுத்து காத்தாடியில் தூக்கி போட்டாள். மனப்பிறழ்வு என்பது போல நிலையில்லாமல் இருந்தாள்.
“ சாலா… கதவை திற, இங்க வாடி, சீக்கிரம். உள்ள என்னடி பண்றா, வேமா வா…” தாயின் கதறல் வெளியில் இருந்து கேட்க.
அவசரமாக சேரில் இருந்து இறங்கியவள், சேலையை தூக்கி ஓரமா போட்டு விட்டு, முகத்தை அழுந்த துடைத்து கொண்டு கதவை திறக்க…
“சாலா, உங்க அக்கா மருந்தை குடிச்சுட்டாளாம்…” என்று தாய் அழுக.
“அவ்வளவு தான, வேற ஒன்னுமில்லையே…” என்று தாயிடம் கத்தியவள்.
“மனுசன் நிலமை தெரியாம உம் பெரிய மக பகுமானம் பண்ணுவா… எம் பொழப்பே நாறி போய் கிடக்கு…” என்று புலம்பிய படி, அங்கிருந்த சேரில் அமர்ந்தாள். ஒரு நாள் முழுக்க அழுதது, தலை வலி உயிர் போனது.
விசாலாட்சி அக்கா மீனாட்சி. சொந்த தாய் மாமனுக்கு தான் கட்டி கொடுத்தது. பக்கத்து ஊர் தான். இவர்களின் தாய் பாண்டியம்மாவின் சித்தப்பா மகன். சின்னது தொட்டு பழக்கம் தான்.
மீனாட்சி, சாலாவை தாண்டி கோபக்காரி, வாய்காரி. இடம், பொருள் இல்லாமல் வாய் பேசி, கணவன் மணிமாறனிடம் வாங்கி கட்டி கொள்வாள்.
அத்தோடு, மீனாட்சி இப்படி சாவை தேடி ஓடுவது முதல் முறை இல்லை. முரண்பட்ட குணம் கொண்டவர்கள், எப்போதும் முட்டி கொள்ளும். ஒரு நாள் முப்பது சுகர் மாத்திரை முழுங்கி கொண்டு வந்தாள், ஒரு தடவை பூச்சி கொல்லி மருந்து, பாத்ரூம் கழுவும் திரவம் ஒரு நாள். இதற்கு மேல் எறும்பு சாக்பீஸ் நீரில் கரைத்து குடித்து வந்தாள்.
அவளுக்கு வைத்தியம் பார்த்த நர்ஸ் கூட, “இப்போல்லாம் எறும்பு சாக்பீஸ்க்கு எறும்பே சாகுறது இல்லை. இதுவா ஆள கொல்லும். பேசாம ரெண்டு நாள் ரெஸ்ட் எடு…” என்று கேலி பேசினார்.
அந்த நியாபகத்தில் தான் சாலா பேச, தாய் அழுது கொண்டே கிளம்பினார். தந்தை காரை எடுக்க, மனம் பொறுக்க வில்லை சாலாக்கு. என்ன இருந்தாலும் கூட பொறந்த பொறப்பு விட முடியவில்லை. தன் சோகத்தை எல்லாம் ஒரு மூலையில் அழுத்தி விட்டு அவளும் கிளம்பினாள்.
அந்த ஊரின் மருத்துவ மனையில் தான் சேர்த்து இருந்தார்கள். தாங்கள் தான் ரெகுலர் கஸ்டமர் ஆச்சே, கேட்கும் முன் வழி சொல்லி அனுப்பி விட்டார்கள்.
மீனாட்சி சோர்ந்து போய் கிடந்தாள். ஆரம்பகட்ட சிகிச்சை அளிக்க பட்டது போல… தாய் தலையில் அடித்து அழ, தந்தை அழ வில்லை தான். ஆனால், கண்களில் நீர் நிறைந்து நின்றது.
சாலா வெளியே சென்று பார்த்தாள். யார் உடன் இருந்தது என்று தேட… சற்று தள்ளி அக்கா மகன்கள் இருவரும் நின்று இருந்தார்கள். அவர்களின் அருகில் சென்று,
“ஏண்டா இப்படி கவனிக்காம விட்டீங்க?…”
“சித்திம்மா! அம்மா தான் சரியில்லை. எதுக்கெடுத்தாலும் சண்டை, கோவம் தான். அப்பா, அவங்க அக்கா, தங்கச்சிக்கு என்னவும் செஞ்சிட்டு போகட்டும். இதுக்கு என்ன வந்துச்சு?… சடங்கு வீட்டுல எவ்வளவு அவமானம் தெரியுமா!… எங்களை அசிங்க படுத்திட்டு , இங்க வந்து டிராமா பண்ணி படுத்துருக்கு. நாங்க வீட்டுக்கு போறோம், நீங்களே பாருங்க…” பெரியவன் அருண் சொல்ல,
வந்ததே கோபம் சாலாக்கு. இருவது வயது பையன் என்றெல்லாம் பார்க்க வில்லை. முதுகில் சுள்ளென்று ஒன்று போட்டாள்.
கையை கட்டி வாங்கி கொண்டான். பெத்தவள் போல் தூக்கி வளத்தவள் குடுத்தால் வாங்க தான் வேண்டும்.
“மரியாதையா ஓடி போயிறு… அவளை ஒரு பைத்தியம் மாதிரி வச்சு இருக்கீங்க நீங்களும், உங்க அப்பனும்… என்ன இருந்தாலும் உன்னை பெத்தவடா, தள்ளி நிக்க எப்படிலே மனசு வருது. அவ யாருக்காக கத்துறா, சண்டை போடுறா… அவ தலையில அள்ளி கட்ட போறா,கிறுக்கு சிறிக்கி உங்களுக்காக தான பாடு படுறா… நீங்க ஒன்னுமில்லாம போக கூடாதுன்னு தான் உங்கப்பன் கூட கத்துறா… அவளை புரிஞ்சுக்காம அப்பன் கூட கூட்டு சேருறீங்க… போங்க நீங்க யாரும் பார்க்க வேணாம். எனக்கு மூத்தவ, நான் பார்ப்பேன்…” அழுகையை அடக்கி கொண்டு நகர்ந்தவள்,
திரும்பி பார்த்து, “பெத்தவ இருக்குற வரைக்கும் தான் உங்களுக்கு மரியாதை. அவளும் இல்லன்னா நாதியத்து போவீங்க…”
மாமன் மணிமாறனுக்கு பெற்றோர்கள் இல்லை. மூன்று அக்கா, தங்கைகள் மட்டுமே. அவர்களை விட்டு விட கூடாது என்று இழுத்து போட்டு கொண்டு செய்வார் மணிமாறன். விளை நிலங்கள் கொட்டி கிடந்தாலும், விவசாயம் பல நேரம் கை கொடுப்பதில்லை.
மீனாட்சி பல நேரம் வாய் மூடி கொள்வாள். சொந்தத்தில் திருமணம், அனுசரித்து தான் செல்ல வேண்டும். இரு மகன்கள் வளர்ந்து நிக்கவும் தான் சூழல் புரிந்து, அவர்களின் தேவை முன் வந்தது.
பெரிய வீடாக இருந்தாலும் பழைய ஓட்டு வீடு… இப்போது தான் எடுத்து செய்கிறார்கள். இதில் தங்கை மகள் சடங்கு வர, ஐந்து பவுன் போதும் என்ற மீனாட்சிக்கு சரி என்றவர். சபையில் பத்து பவுன் போட்டுள்ளார் போல…
இது வரை தான் சாலாக்கு தெரியும். இதை கொண்டு அங்கு என்ன நடந்ததை தெரியவில்லை. இதோ இப்போது ஹாஸ்பிடலில். உடன் பிறந்தவளை பார்க்க, எழுந்து அமர்ந்து ஏதோ பேசி கொண்டு இருந்தாள்.
சற்று தள்ளி மணிமாறன் நின்று இருந்தார். மாமனை பார்க்க கூட பிடிக்காமல் சாலா உள்ளே சென்று விட்டாள்.
“எனக்கு கோபம் வராதாம்மா… அந்த மனுசன் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலை. அப்புறம் நான் யாரு அந்த வீட்டுல… வீடு, தோட்டம், மாடுன்னு நாயா உழைச்சும் எனக்கும், எம் பிள்ளைகளுக்கும் எதுவும் இல்லன்னா கோபம் வராது. அதான் கத்தி சண்டை போட்டேன். அந்த படுபாவி, ஊர் பார்க்க எத்தி கீழ தள்ளிட்டான். முடிய பிடிச்சு முதுகுல குத்தினான். மூச்சே செத்த நேரம் வரலை…” கேவல் வெடித்தது மீனாட்சிக்கு.
சாலா அருகில் வந்து முதுகை தடவி கொடுக்க, “மக்க ரெண்டும் கிட்ட கூட வரலை தெரியுமா… அடுத்த ஊர்ல வந்து அசிங்க படுத்துறேனாம். அப்புறம் யாருக்கு இந்த பொழப்பு… வீட்டுக்கு வந்து அரளி வித்தை அரைச்சு குடிச்சிட்டேன்…” என்று மீனாட்சி சொல்ல.
“என்னடி சொல்ற குடி கெடுத்தவளே!…ஆத்தே, அரளி ஆளை கொல்லுமே…” நெஞ்சில் அடித்து பாண்டியம்மா அழுக.
பதறி போன சாலா, நர்ஸ்ச பார்க்க ஓடினாள். அவளுக்கு முழு விவரமும் தெரிய வேண்டும்…
“சொல்ல முடியாது சாலா. வயித்த சுத்தம் பண்ணி இருக்கு. அரைச்சு குடிச்சு அஞ்சு மணி நேரம் ஆச்சு. வெறும் வயித்துல குடிச்சு இருக்கா. நீர் இறங்காம இருந்தா பார்க்கலாம். நீர் போச்சு, காப்பாத்த முடியாது. அரளி கெட்ட கழுதை. நல்லா இருக்குற மாதிரி இருக்கும், ஆளை தூக்கி பிடும்…”
தன் வலியே தலைக்கு மேல் நிக்க, துடிக்கும் நெஞ்சை அழுத்தி பிடித்து அக்காவை காவல் காத்தாள்.
ஆனாலும் விதி, அதிகாலை நான்கு மணிக்கு பின் நிற்காமல் வயிற்று போக்கு தொடங்கி விட்டது.