பல லட்சம் மதிப்புள்ள “சோப்பார்ட் டி ரிகொ விஷன்” கண்ணாடி அந்த மேசையின் மீது அனாமத்தாகக் கிடந்தது. தும்பைப் பூ வண்ண டேபிள் கவரின் மீது, “இதெல்லாம் சாப்பிடுவதற்குத் தானா!” என்று வியப்பு கொள்ளத் தக்க வகையில் வண்ணமயமான நான்கைந்து உணவுப் பதார்த்தங்கள் வீற்றிருந்தன.
“தி சர்க் சிக்னேசர்” உணவகத்தின் குறைத்து வைக்கப்பட்டிருந்த மெல்லிய மங்கலான ஒளியில், பத்தடிக்கு அப்பால் இருக்கும் ஒருவரை அடையாளம் கண்டு கொள்வதே கடினமாக இருந்தது. ஒருவேளை அடையாளம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்குத்தான் இந்த ஏற்பாடோ என்னவோ?
மதி மயக்கும் கம்மிய ஒளியில் அந்த மேசையைச் சுற்றி அமர்ந்திருந்த மூன்று பெண்களுமே அப்சரஸ் போலவே தோற்றமளித்தனர். என்ன இந்த அப்சரஸ் மேனகைகளைக் காண அங்கே பெரியதாக யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. அவரவர் தமது பணிகளில் லயித்திருக்க, டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்த தன் வெனிலா ரோஸ்டட் பைனாப்பிள் டார்டை லாவகமாக ஸ்பூனில் குத்தி உதட்டில் படாமல் வெகு நாசூக்காக வாயினுள் வைத்தாள் மிருதுளா.
“டார்ட் கொஞ்சம் கசப்பா இருக்கற மாதிரி இருக்கு” என்று கூறியவள், வெள்ளுடை சிப்பந்தியை குரல் எழுப்பால் அருகே அழைத்து, அவன் காதுகளில் மட்டுமே விழும் படியாக தன் கருத்தைத் தெரிவித்தாள்.
சிப்பந்திக்கு இந்த அசவுகரியங்களின் ஊடே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது. “ஆல்வேஸ் கஸ்டமர் இஸ் ரைட்.” என்ற தாரக மந்திரத்தை மனதில் இருத்திக் கொண்டு செயல்பட வேண்டும் இவர்கள்.
கோட்பாட்டின் படியே, மறுபேச்சு பேசாமல், மிருதுவின் பைன்னாப்பிள் டார்ட்டை அங்கிருந்து அப்புறப்படுத்திய சிப்பந்தி, அடுத்த ஐந்தாவது நிமிடம், அவள் முன்னே வேறு ஒரு பைன்னாபிள் டார்ட்டை கொணர்ந்து வைத்தான். புதிய டார்ட்டும் அதே பேட்ச்சில் செய்யப்பட்டது தான். ஒரு துண்டு பிடிக்கவில்லை என்றால், மற்றதிலும் அதே சுவை தானே இருக்கும். அவனுக்கும் தெரியும் முந்தய டார்ட்டில் எந்த சுவை கோளாறும் இல்லை என்று. ஆனால் அதை இவர்களிடம் சொல்லி எந்த பயனும் இருக்கப் போவதில்லையென்று அவனறிவான்.
“திஸ் ஒன் இஸ் பெட்டர்” என்று சொல்லிக் கொண்டு புதியதை சுவைக்கும் மிருதுளாவையும், “க்ளாட் யூ லைக் இட் மேடம்” என்று சிரிப்பு மாறாமல் சொல்லிவிட்டு நகரும் சிப்பந்தியையும் பற்றி மேலே யோசிக்கவில்லை மற்ற இரு பெண்களும்.
அவள் சாப்பிடுவதற்காகவே காத்திருந்தவர்கள் போல, மிருதுவின் மற்ற இரு தோழிகளான தீப்தியும், மின்னியும் தங்களது பதார்த்தங்களைச் சுவை பார்த்தனர். மிருதுளா தன் பைன்னாப்பிள் டார்டினுள் பைனாப்பிள்களைத் தேடும் பணியைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டே தன் தோழிகளிடம் பேச்சு கொடுத்தாள்.
“சோ, உங்க டெசிஷன்னு எதுவும் சொல்ல மாட்டீங்களா கேர்ள்ஸ்? நானே கன்ஃபியூஸ் ஆகித்தானே உங்க கிட்ட சஜஷன் கேட்கறேன்” என்று கொஞ்சமாக கோபித்துக் கொண்ட மிருதுவிற்கு வயது 25. தன் தந்தை நடத்தி வரும் “மிருது எக்ஸ்போர்ட் எண்டர்பிரைசஸின்” ஒரே வாரிசு.
தந்தையின் திருப்திக்காக எம்.பி.ஏ முடித்துவிட்டு அவ்வப்போது சிற்சில அலுவலகப் பணிகளை மேம்போக்காகப் பார்த்துக் கொண்டு, வாரம் இரண்டு பார்ட்டி, தோழிகளுடன் டின்னர், கேர்ள்ஸ் அவுட்டிங்க், சோலோ டிரிப் என மகிழ்ச்சியாக நாட்களைக் கழிக்கும் கொடுத்த வைத்த மகராசி.
அவளுடன் அவ்வப்போது ஒட்டி கொண்டு, மிருதுவின் பொழுதுகளுடன் சேர்த்து தமது பொன்னான நேரத்தையும் வீணாக்கும் ஆக்மார்க் உற்ற தோழிகள் தீப்தியும், மின்னியும். மின்னி பெங்களூரில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்ப்பதால் அவ்வப்போது தான் கூட்டுச் சேருவாள். எப்போதும் ஒட்டிக் கொண்டு சுற்றுவது தீப்தியும் மிருதுவும் தான். அன்று மிருது மிகவும் குழப்பமான மன நிலையில் இருந்த காரணத்தினால் மின்னியையும் தன்னுடன் டின்னர் வரும்படிக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.
“மிருது! உன் முடிவை நாங்க என்னப்பா சொல்ல முடியும்? உனக்கு எது பிடிச்சிருக்கு இல்லைன்னு நீ தான் டிசைட் பண்ணனும்” என்று மின்னி மேம்போக்காகக் கூறினாள்.
“ஆமா மிருது! இப்போ என்ன! வீட்டில கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்கறாங்க! அதுவும் யாரை? உனக்கு ரொம்ப ரொம்ப தெரிஞ்ச, உங்க ஃபேமிலி ஃப்ரெண்ட் மிஸ்டர்.நடராஜ் சமர்தியனோட சன் சத்யசாய்ராமை! சத்யா உனக்கு ஸ்கூல் சீனியர், காலேஜ் சீனியர், சின்ன வயசுல இருந்தே பழக்கம் தானே மிருது!” என்று தன் பங்கிற்குப் பேச வேண்டுமே என தீப்தியும் பேசினாள்.
இருவர் பேசியதையும் கேட்டு கொண்டு இன்னமும் தன் பைன்னாபிள் டார்டுடனேயே சண்டையிட்டுக் கொண்டிருந்த மிருதுவிற்கு ஏகத்திற்கும் குழப்பமாகவே இருந்தது. “அதுக்குள்ள எனக்கு கல்யாண வயசு ஆகிடுச்சா?” என்ற கேள்வியும், “எனக்கு சத்யாவை பிடிச்சிருக்கா?” என்ற கேள்வியும் மாறி மாறி எழுந்தன. அதைத் தன் தோழிகளுடனும் பகிர்ந்து கொண்டாள்.
“என்ன மிருது இப்படி கேட்கற! நமக்கு 25 ஆச்சுப்பா. இந்த ஜெனரேஷன்ல 25, 26 பொண்ணுகளுக்கு கரெக்டான ஏஜ் தான் மேரேஜ் பண்ணிக்க. ரொம்ப சீக்கரமும் இல்ல, லேட்டும் இல்ல. இன்ஃபாக்ட் எனக்கும் கூட வீட்டில சீரியஸா மாப்பிள்ளை பார்த்துட்டு தான் இருக்காங்க” என்று முன் மொழிந்தாள் தீப்தி.
மின்னி தன் உடன் பணிபுரியும் அலெக்ஸை காதலித்து வந்ததால் அவளுக்கு வரன் தேடும் வேலையெல்லாம் இருக்கவில்லை. “தீப்தி சொல்லறது சரி தான்! என்ன என் அலெக்ஸுக்கும் இப்போ 26 தான் ஆகுது. ஆம்பிள்ளை பையனுக்கு 26ல கல்யாணம்ங்கறது கொஞ்சம் சீக்கரம்! அதனால நாங்க வெயிட் பண்ணலாம்னு இருக்கோம். பட் உங்களுக்கு அப்படியில்ல!” என்று தன் கருத்தைக் கூறினாள் மின்னி.
“உங்க ரெண்டு பேர்த்து சிட்யுவேஷன் எனக்கு இல்லை தான். ஆனா என்னமோ இப்பவே கல்யாணம் பண்ணிக்கனுமான்னு ஒரு கேள்வி ஓடிட்டே இருக்கு. என்னால ஸ்திரமா ஒரு முடிவுக்கும் வர முடியலை” என்று தன் மனதின் எண்ணத்தை வெளிப்படையாகத் தோழிகளிடம் பகிர்ந்து கொண்டாள்.
“அப்படி என்ன தான் உன் ஹெசிடேஷன் சொல்லு மிருது!” என்று மின்னி வினவ,
“இன்னது தான் தயக்கம்னு சொல்லறதுக்கு இல்லை. எனக்கு சத்யாவை சின்ன வயசிலே இருந்தே தெரியும் தான். நல்ல ஃப்ரெண்ட், நல்ல வெல்விஷர். என் டாடியும், அவங்க டாடியும் பிசினஸ் பார்ட்னர்ஸ். சோ, என்னைக்கா இருந்தாலும் எங்க கல்யாணம் பத்தி பேச்சு வரும்னு தெரியும் தான்”
“சத்யா ஸ்கூல்ல இருக்கப்போவே உன் மேல கேரிங்கா தான் இருப்பாங்க. அப்பறம் நீயும் அவர் கைடண்ஸ்ல தான் காலேஜ் படிச்ச, எம்.பி.ஏ பண்ண! உன் லைஃப்ல எல்லா ஸ்டேஜ்லையும் சத்யா இருக்கார். இது நல்ல விஷயம் தானே மிருது” என்று தீப்தி தன் தோழியின் முகம் பார்த்து வினவினாள்.
“நல்ல விஷயம் தான். இருந்தாலும் இவளோ சீக்கரம் கல்யாணம் பண்ணனுமான்னு இருக்கு” என்று மீண்டுமாய் மிருது சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் ஐஃபோன் அலறியது. திரையில் “சத்யசாய்ராம்” என்ற எழுத்துகள் மின்ன, தோழிகளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கைப்பேசியை எடுத்துக் கொண்டு சற்றே தள்ளி நடந்தாள்.
சிறிது நேரத்தில் மீண்டுமாய் இருக்கையில் வந்து அமர்ந்தவளின் முகம் கொஞ்சமே கொஞ்சம் தெளிவுற்றிருந்தது. “சத்யா அவங்க ஃப்ரெண்டை ட்ராப் பண்ண வந்தாராம். ஹி இஸ் கமிங்க் ஹியர் இன் எ ஃப்யூ மினிட்ஸ்” என்று கூறி கொண்டிருக்கும் போதே, கார்பெட் தரையில் அழுத்தமாக ஷு தடங்களைப் பதித்தவாறே இவர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு வந்து சேர்ந்தான் சத்யா.
தீப்தியையும்,மின்னியையும் பார்த்து “ஹாய்” புன்னகை சிந்திவிட்டு, மிருதுவின் பக்கம் திரும்பிய சத்யா, “என்ன பயங்கரமான டிஷ்கஷனா? நான் வந்ததும் கப்சிப்புன்னு ஆகிட்டீங்க” என்று சொல்லிக் கொண்டே மிருதுவின் முன்னால் இருந்த நீர் குவளையில் இருந்து தண்ணீர் பருகினான்.
பெண்கள் மூவரும் சிரிப்புடன் ஒருவரை மற்றவர் பார்த்துக் கொள்ள, “ஓ, என்னைப் பத்தி தான் பேசிட்டு இருந்தீங்களா? “திங்க் அபவுட் த டெவில், இட் வில் அப்பியர்” மாதிரி நீங்க நினைக்கவும் நான் வந்துட்டேன் போலவே” என்று சிரிப்பு மாறாமல் சத்யா கூட, “இவனைத் திருமணம் செய்து கொள்ள இந்த மிருது இவ்வளவு யோசிப்பானேன்” என்ற எண்ணமே தீப்திக்கும், மின்னிக்கும் தோன்றியது.
“சோ, டிட் யூ ஹேவ் எனிதிங்?” என்று கேட்டுவிட்டு, அவர்களுக்கு சாப்பிட ஏதும் வேண்டுமா என்று அக்கரையாக விசாரித்து, அவர்கள் வேண்டாம் என்று தீர்க்கமாக மறுத்த பிறகு, தனக்கு மட்டுமாக ஒரு திராமிசு டெஸர்ட்டை ஆடர் செய்து கொண்டான்.
“சொல்லு மிருது! என்ன ஹெவி டிஸ்கஷன்! அதும் என்னைப் பத்தி!” என்று இலகுவாக சத்யா வினவ, மிருது கொஞ்சமும் தடுமாற்றம் இல்லாமல் பேசத் துவங்கினாள்.
“சத்யா, மார்னிங் என் டாட் நம்மளைப் பத்தி பேசினாங்க. ஐ மீன், உனக்கு எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கற ஐடியா இருக்கு. எனக்கு ஒ.கேவான்னு கேட்டாங்க” என்று தங்குதடையில்லாமல் வினவினாள். தீப்தியும் மின்னியும் கொஞ்சம் நாகரீகம் கருதி, அந்த இருக்கையில் இருந்து எழுந்து கொள்ளப் போக, “ஹே, கைஸ், சில் யா. நீங்க எங்க போறீங்க? எப்படியும் மிருது நாங்க பேசினதை உங்கிட்ட சொல்லத்தானே போறா! சோ, நீங்க தாராளமா இருக்கலாம். ஃபீல்ஃப்ரீ” என்று இரு பெண்களையும் சமாதானப்படுத்தி அமர வைத்து விட்டான்.
“மிருது! ரெண்டு நாள் முன்னாடியே என் மம்மியும் டாடியும் இதைப் பத்தி பேசினாங்க. எனக்கு உன்னை வேண்டாம்னு சொல்ல பெருசா எந்த ரீசனும் இல்லை. சோ, ஐ செட் ஒ.கே. அதனால நேத்து உன்வீட்டில பேசியிருப்பாங்கன்னு நினைக்கறேன். வாட் டு யூ ஃபீல்?” என்று நேரடியாக வினவியிருந்தான் சத்யா.
அவனது கேள்வியையும், பதில் எதிர்பார்த்து மிருதுவின் முகத்தை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த விதவும் அவன் நேரடியான பேச்சும் கொஞ்சம் தெளிவு உண்டாகியிருந்தது.
“எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் உனக்கு எந்த லவ் அஃபேரும் இல்ல. இல்லை தானே!” என மீண்டுமாய் மிருதுவைச் சிரிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டான் சத்யா. மிருதுளா இல்லை என்று தலையசைத்தாள்.
“அந்த உன் சீனியர் ஒருத்தன் இருந்தானே! ஒரு டால்ஃபின் மண்டையன். அவன் பேர் என்ன? ம்ம்? அர்ஜுனோ அஷோக்கோ..”
“அமர்”
“ம்ம்ம் யா யா அமர்.. அவனை உனக்கு பிடிக்கும்ல?” என்று ஒற்றை புருவத்தைத் தூக்கி விளையாட்டாக வினவ, அவன் கையில் மெல்லமாகத் தட்டினாள் மிருது.
“ஹி இஸ் ஜஸ்ட் எ ஃப்ரெண்ட் சில்லி. லவ்லாம் இல்ல! ஜஸ்ட் எ குட் ஃப்ரெண்ட். இன்ஃபாக்ட் எனக்கு யார் மேலையும் எந்த லவ் இண்டிரெஸ்டும் இப்போ வரைக்கும் வரலை” என்று பதற்றம் இல்லாமல் கூறியவள், “உன் மேலயும் தான்” என்று முத்தாய்ப்பாக முடித்தாள். மிருதுளாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த தீப்தியும், மின்னியும் ஒருவரை ஒருவர் திடுக்கிடலுடன் பார்த்துக் கொள்ள, சத்யாவோ கொஞ்சமும் அலட்டல் இல்லாமல் மேலே பேச்சைத் தொடர்ந்தான்.
“என் மேலையுமா?”
“யா. உன்னைப் பார்த்ததும் நூறு பட்டாம்பூச்சி வயத்தில பறக்கற மாதிரியோ, நெஞ்சு படபடன்னு அடிச்சுக்கற மாதிரியோ எந்த எஃபெக்டும் இல்லையே! உண்மையா சொல்லு, என்னை நினைக்கறப்போ உனக்கு இதெல்லாம் தோணுதா?” என்று கேள்வியாய் மிருது வினவ, அவள் சொல்ல வருது சத்யாவிற்குப் புரியத்தான் செய்தது.
ஆனால் இந்த இராசயன கலவை மாற்றங்கள் எல்லாம் படத்தில், கதைகளில் மட்டுமே சாத்தியம் என்றும், நிகழ்காலத்தில் இவையெல்லாம் சர்வ நிச்சய்மாகத் தோன்றாது என்றும் சத்யா தெளிவு பெற்றிருந்தான். அந்த முதிர்ச்சியுடன் மிருதுவின் கேள்விக்குப் பதிலளித்தான்.
“சீ மிருது! சினிமால காட்டற மாதிரி குழைஞ்சு குழைஞ்சு லவ் பண்ணற காண்செப்ட்லாம் நமக்கு செட் ஆகாது. உனக்கும் சேர்த்தி தான் சொல்லறேன். என்னோட பாயிண்ட் ஒண்ணே ஒண்ணு தான். ஐ வில் பி ட்ரூ டு யூ. நல்ல ஃப்ரெண்டா, ஒரு நல்ல ஹஸ்பெண்டா என்னால இருக்க முடியும். அந்த கமிட்மெண்ட் என்னால குடுக்க முடியும்.”
“ஐ நோ சத்யா!” என்று மிருதுளாவும் தன்மையாகவே பதிலளித்தாள்.
“சோ, மனசை பிசையற மாதிரி லவ் இல்லைன்னா என்ன? அதெல்லாம் போகப் போக வந்துரும். எங்க போயிடப் போகுது? வீ ஹேவ் எ பியூட்டிஃபுல் ஃப்ரெண்ஷிப். நல்ல அண்டர் ஸ்டாண்டிங் இருக்கு ரெண்டு பேர்த்துக்கும். ஈகுவல் ஃபேமிலி பேக்கிரவுண்ட். வேற என்ன வேணும்? என்ன? நான் உன்னைவிட பார்க்க கொஞ்சம் பர்சனாலிட்டியா இருக்கேன். அது ஒண்ணு தான் ஹிண்டரென்ஸ். இல்லையா” என்று சத்யா துருதுருப்பாக மிருதுவின் கண்களைப் பார்த்துக் கொண்டு சொல்ல, அவன் பேச்சில் தொனித்த நக்கல் கண்டு மிருதுவுக்கும் ஏன் மற்ற இருபெண்களுக்குமே உடன் சேர்ந்து நகைத்தனர்.
சத்யாவின் இயல்பான பேச்சில் மனம் தெளிவாகிப் போனது மிருதுவுக்கு. அவள் மனதை அரித்துக் கொண்டிருந்த குழப்பங்கள் போன இடம் தெரியவில்லை. “இவனைத் திருமணம் செய்து கொள்வதால் தன் வாழ்வில் என்ன பெரிய மாறுதல் வந்துவிடப் போகிறது? தான் இத்தனை வருடங்கள் பார்த்துப் பழகிய அதே சத்யா தான்! இன்னமும் சொல்லப் போனால், அவளைப் பற்றி நன்கு புரிந்து வைத்திருக்கும் ஒரு தோழன் போன்றவன் கணவனாகக் கிடைப்பது நல்ல விஷயம் தானே” என்று மூளை சொன்னது.
“ஜோக்ஸ் அபார்ட் மிருது. நீ என்ன நினைக்கறேன்னு மறைக்காம என் கிட்ட சொல்லு மிருது. உன் வீட்டில எதும் ஃபோர்ஸ் பண்ணமாட்டாங்கன்னு எனக்கு தெரியும். ராஜமாணிக்கம் அங்கிளுக்கு நீ சொல்லறது தான் சட்டம். நீ வேண்டாம்னு சொன்னா அங்க ஒரு சின்ன துரும்பு கூட அசையாதுன்னு தெரியும் எனக்கு. சோ என்ன நினைக்கறன்னு தயங்காம சொல்லு மிருது. என்னைப் பிடிக்கலையா” என்று அவளை பேசத் தூண்டினான்.
அவன் முகத்தில் லேசாக கவலை ரேகைகள் ஒன்று சேரத் துவங்க மிருதுவின் மனம் சடுதியில் மாறிப் போனது. “சத்யா! வாட் ஆர் யூ ஸ்பீக்கிங்? உன்னைப் பிடிக்கலைன்னு நான் எப்போயா சொன்னேன்? ஸ்டுபிட் மாதிரி பேசாதா! ஐ லைக் யூ. காலையில டாட் கேட்கவும், உடனே கல்யாணமான்னு ஒரு சின்ன யோசனையா இருந்துச்சு அவளோ தான். மத்தபடிக்கு உன்னை வேண்டாம்னு சொல்ல எனக்கு மட்டும் என்ன ரீசன் இருக்கப் போகுது?” என்று மிருதுவும் வெளிப்படையாகப் பேசினாள்.
“கரெக்ட். எனக்கும் முதல்ல அந்த எண்ணம் தான் வந்துச்சு. என்னது? அதுக்குள்ள கல்யாணமா? ஒரே ஒரு பொண்ணைத் தான் இனி சைட் அடிக்க முடியுமான்னு? அப்பறமா யோசிச்சுப் பார்த்தா வயசாகுது எனக்கும்னு அறிவு வந்துச்சு. இப்போவே எனக்கு 28. உனக்கு 25. இது மாரேஜ்க்கு சரியான ஏஜ் தான்னு தோணுச்சு.”
“ம்ம்ம் யா”
“எப்படியும் ஒரு வருஷத்தில யாரையாவது கல்யாணம் பண்ணிக்கத் தான் போறோம். அது நீயா இருந்த எனக்கும் ஈஸி தானே! ரெண்டு பேர் பேரண்ட்ஸும் ஹேப்பி. நாமளும் ஹேப்பி. சோ, ரொம்ப யோசிக்காம ஐ செட் எஸ்.” என்றவன் மிருதுவின் முகத்திலிருந்து கண்களை அகற்றாமல்,
“என் முடிவை நான் சொல்லிட்டேன் மிருது. இனி நீ தான் முடிவெடுக்கணும். நீ என்ன டிசிஷனுக்கு வந்தாலும் எனக்கு ஒ.கே. என்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு உனக்கு எந்த கம்பல்ஷனும் இல்லை. டேக் யுவர் டைம்.” என்றான் சத்யா எந்தத் தடுமாற்றமும் இல்லாமல்.
மிருதுவின் குழப்பம் எப்போதோ விடை பெற்றுச் சென்றிருக்க, தெளிவாகவே அவள் மூளையும் யோசித்தது. “அவன் சொல்வது போல் இதில் பெரியதாக என்ன வித்யாசம் ஏற்பட்டு விடப் போகிறது? சத்யாவைப் போல் ஒரு நல்ல நண்பன் துணைவனாகக் கிடைக்கும் போது ஏன் மறுக்க வேண்டும். யோசித்து பார்க்கையில் இவனை வேண்டாம் என்று கூட ஒரு சின்ன காரணம் கூட இல்லையே” என்ற எண்ணம் ஏற்படவும்,
மிருது, “எனக்கு ஒ.கே தான் சத்யா. பட் ஐ ஹேவ் எ கண்டிஷன்” என்று கண்களைக் குறுக்கிக் கொண்டு மிருது கூற, சத்யா கொஞ்சமே துணுக்குற்றான்.
“சொல்லு, என்ன கண்டிஷன்? உன் அப்பா அம்மா வீட்டை விட்டு வரமாட்டேன். அவங்க கூட தான் இருப்பேன்னு ஏதாச்சும் ஹம்பக்கா சொல்லாத! நம்ம ரெண்டு பேர் ஃபேமலியும் பெங்களூர் தான். எப்ப நினைக்கறமோ அப்போ போய் உன் மம்மி டாடிய மீட் பண்ணிக்கலாம். இன்ஃபாக்ட் நீ எங்க வீட்டில தான் இருக்கணும்னு அவசியம் கூட இல்ல. மடிவாலால நம்ம ஃப்ளாட் இருக்கு. நாம அங்க இருந்துக்கலாம்”
“சே, சே! எனக்கு உன் வீடு, என் வீடுன்னுலாம் எந்த ப்ரீஜுடிசும் இல்ல. எங்க இருந்தா என்ன? எவ்ரிதிங் இஸ் சேம் அண்ட் ஒ.கே வித் மீ! என் கண்டிஷன் அது இல்ல!”
“பின்ன வேற என்ன கண்டிஷன்?”
“கொஞ்சம் சைல்டிஷ்ஷா தான் இருக்கும்.”
“எதுவா இருந்தாலும் சொல்லு.”
“ம்ம்ம் வந்து எனக்கு கல்யாணம் முழுக்க முழுக்க என்னோட விருப்பப்படி தான் நடக்கணும். என் கல்யாணத்தைப் பத்தி சின்ன வயசில இருந்தே நிறைய எதிர்ப்பார்ப்பு இருக்கு. ஐ வாண்ட் எ ஃபேரி டேல் மேரேஜ். சின்ன விஷயம் கூட நானே டிசைட் பண்ணி பார்த்து பார்த்து பண்ணனும்னு எதிர்பார்க்கறேன். ஐ வாண்ட் எ டெஸ்டினேஷன் வெட்டிங்க் அட் சம் சீ டவுன். அப்பறம் இங்க பெருசா ரிசப்ஷன்.. அப்பறம்..” என்று கண்கள் விரிய மிருது சொல்ல,
“வெயிட் வெயிட்.. இதான் உன் கண்டிஷன் ஆ?” என்று கேட்டு சத்யா சத்யா கலகலவென நகைத்தான். மிருது ஆம் என் தலையசைத்தாள்.
“இதெல்லாம் ஒரு கண்டிஷனா மிருது? நிஜம்மாவே நான் ஒரு செகண்ட் பயந்து போயிட்டேன் மிருது. எங்க விபரீதமா குழந்தை பெத்துக்க மாட்டேன், ஐ டோண்ட் வாண்ட் பேபீஸ் அப்படி இப்படின்னு எதாவது உளறப் போறியோன்னு டென்ஷன் ஆகிட்டேன்.நீ என்ன சொல்லறியோ அது படி தான் எல்லாமே நடக்கப் போகுது. சரியா” என்றான் புன்னகை மாறாமல்.
“வாய் வார்த்தையா சொன்னா பத்தாது சத்யா. ப்ராமிஸ் பண்ணு.” என்று அவன் முன்னால் தன் உள்ளங்கையை நீட்டி சத்தியம் கேட்டவளைச் சிரிப்புடன் ஏறிட்டவன், மிருதுவின் கைகளில் சத்தியம் என்று சொல்லி, அவள் கைகளைச் சினேகமாகப் பிடித்துக் கொண்டான்.
“ஏன் பிராமிஸ் வாங்கறேன் தெரியுமா? என் மம்மிக்கு இந்த டெஸ்டினேஷன் வெட்டிங் கான்செப்ட் சுத்தமா பிடிக்காது சத்யா! என் கசின் அனிதாக்கா வெட்டிங்க் ஜெய்பூர்ல நடத்தப் போறதா சொன்னப்போ மாமாகிட்ட அதையும் இதையும் பேசி, அவங்க மனசை மாத்திட்டாங்க. சோ, எனக்கும் அதே மாதிரி எதாவது சொல்லி குழப்படியடிக்க பார்ப்பாங்க. அதான். இனி அவங்க என்ன சொன்னாலும், சத்யா தான் சொன்னான், சத்யாவுக்கு டெஸ்டினேஷன் வெடிங் தான் பிடிக்கும்னு நான் உன்னை தூக்கி முன்னாடி நிறுத்தி சம்மதிக்க வச்சிடுவேன்”
“சத்யா சொம்பு குடுத்தா தான் தாலி கட்டுவான். மாப்பிளை சொம்பு தரலைன்னு தாலி கட்டாம நிக்கறாருன்னு சொல்லேன்” என்று சத்யா கேட்க, மிருதுவும் அவனுடன் சிரிப்பில் இணைந்து கொண்டாள்.
“பின்ன, என் கல்யாணத்துக்கு நான் எவளோ கனவு கண்டு வச்சிருக்கேன். விராட்-அனுஷ்கா மாதிரி, யாருக்கும் அவளோ தெரியாம ஒரு அழகான, ப்யூடிஃபுல்லான இடத்தில கல்யாணம் வைக்கணும். அதே மாதிரி பிரைடல் ரெட்ல சப்யசாட்சில லெஹங்கா, சாரின்னு டிசைன் பண்ணக் குடுக்கணும். எவளோ வேலை இருக்கு” கண்களைச் சிமிட்டிக் கொண்டு கல்யாண கனவுகளில் தன்னைத் தொலைத்துவிட்டிருந்தாள் மிருதுளா.
இவர்களது சிரிப்பலையில் அமைதியாக ஓரங்கட்டப்பட்ட மின்னியும், தீப்தியும் கூட இணைந்து கொண்டனர். நண்பர்களாக, சிறு வயது தோழமையுடன் வளர்ந்த, மிகவும் பழக்கப்பட்டவர்களான இருவரும் இந்தத் திருமணப் பந்தத்தினுள் அடியெடுத்து வைக்க மகிழ்வுடனேயே ஒப்புக் கொண்டனர்.
ஆனால் இந்த இருவருக்கும் நடுவில் புயலென உள்ளே நுழைந்து அனைத்தையும் சுழற்றி அடித்து, குழப்பப் போகும் அந்த சூறாவளியைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்வுடன் தங்களின் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க ஆயத்தம் ஆயினர் சத்யசாய்ராமும் மிருதுளாவும்.