இது நடந்த இரண்டு தினங்களுக்கு பிறகு, வசீகரன் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வர, அவனின் தந்தை வரவேற்பறையில் அமர்ந்திருக்க, யோசனையுடன் தான் அவன் அவரை பார்த்தான். அவரோ,
“கரன் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வா” என்று அழைக்க, எதுவும் பேசாமல் வந்து அமர்ந்தான் வசீகரன்,
“அந்த பொண்ணு வீட்டுல போய் பேசலாம், அவங்களுக்கு நாள் எப்போ தோதுபடும்னு கேட்டு சொல்லு”
என்று சொல்ல, அவர் சொல்ல வருவதை புரிந்து கொள்ள இரண்டு நிமிடம் பிடித்தது வசீகரனுக்கு. புரிந்த நிமிடம் சந்தோஷ மிகுதியில் அவரை நெருங்கி அணைத்து கொண்டான் வசீகரன்.
எப்போதுமே ஒரு வயதுக்கு பிறகு அப்பா, மகன் உறவில் ஓர் இடைவெளி விழுந்துவிடும். அதற்கு இவர்களும் விதி விலக்கல்ல.
அந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகான தன் மகனின் அணைப்பில், தந்தையாக அவர் சிலிர்க்க தான் செய்தார்.
அதே நேரம் அந்த அணைப்பே, அவனின் அளவில்லா மகிழ்ச்சியை பறைசாற்ற, அவர் தொடர்ந்து,
“எனக்கு என்னோட ஸ்டேட்ஸ் முக்கியம் தான் கரன், ஆனா அது உன்னை விட முக்கியம் இல்ல, உனக்காக, உன்னோட நல்லதுக்காக தான், இது வரைக்கும் நான் எல்லாமே யோசிச்சி இருக்கேன், பண்ணி இருக்கேன்”
என்று சொல்லி நிறுத்தி அவனை பார்த்தவர்,
“நீ பாரின்ல படிச்சவன், நம்ப லைப் ஸ்டைல் வேற, அவங்க லைப் ஸ்டைல் வேற, இப்போ லவ்ல இது எல்லாம் பெருசா தெரியாது, ஆனா கல்யாணம் ஆனதும் பிரச்சனையா தெரியலாம், நீ உன்னோட லவ்ல எவ்ளோ தூரம் ஸ்ட்ரோங் அஹ இருக்கனு எனக்கு தெரிஞ்சிக்க வேண்டி இருந்தது, அதனால் தான், அன்னைக்கு அந்த போட்டோ எல்லாம் காட்டி சும்மா……”
என்று நிறுத்த, நீண்ட வருடங்களுக்கு பிறகான நீண்ட உரையாடல், இருவரையுமே உணர்வுகளின் பிடியில் வைக்க, தன்னை சுதாரித்து கொண்ட வசீகரனின் அப்பா,
“அவங்க கிட்ட பேசிட்டு சொல்லு கரன், நேரல போய் பேசுவோம்” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல எழுந்தவர், நின்று அவனை பார்த்து,
“நீ சும்மா ஆசைப்படுறனு தான் நான் நினைச்சேன், ஆனா அது உன்னோட ட்ரீம் ப்ராஜெக்ட்னு எனக்கு தெரியாது கரன், நீ உனக்கு பிடிச்ச துறையில் எவ்ளோ அச்சிவ் பண்ணனும்னு நினைக்கிறியோ பண்ணு, எப்போ எல்லா பிசினஸ்ம் டேக் ஓவர் பண்ணனும்னு தோணுதோ அப்போ பண்ணு, என்னோட பையனுக்கு அவன் ஆசை பட்டது எல்லாமே கிடைக்கனும்”
என்று சொல்லியவர் நிற்காமல் சென்று விட்டார். வசீகரன் தான் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து இருந்தான்.
தவறு எல்லாம் தன் மேல் தானோ என்று அவனுக்கு இப்போது தோன்றியது. தன் கனவை பற்றியும் சரி, காதலை பற்றியும் சரி தான், தன் தீவிரத்தை சரியா அவரிடம் சொல்ல வில்லையோ.
முதலில் இப்படி ஒரு தொழில் ஆரம்பிக்க விருப்பம் என்று அவரிடம் சொல்லிய போதே, மேலோட்டமாக சொல்லாமல், தன் கனவு, திட்டம் என எல்லாமே விளக்கி சொல்லி இருக்க வேண்டுமோ?????
அன்று காதலை சொன்னப் போது, அவர் மறுத்த போதே, அமைதியாக இல்லாமல், அவரிடம் தன் எண்ணத்தை வலுவாக சொல்லி இருக்க வேண்டுமோ?????
இப்படி பலதும் யோசித்த வசீகரனுக்கு, தவறு அவனுடையது என்று புரிந்தது. ஒரு வேலை தான் எல்லாவற்றையும் தெளிவாக, தீர்க்கமாக பேசி இருந்தால், இவ்வளவு மறுகி இருக்க வேண்டாமா என்ற எண்ணம் தான் அவனுக்கு.
ஒரு வாரம் கழித்து, ஒரு நல்ல நாளில், பெற்றோர் நண்பர்கள் சகிதம் நிலவழகியின் வீட்டுக்கு, அவளை பெண் கேட்டு சென்றான் வசீகரன்.
நிலவழகியின் அப்பா தயங்கினாலும், இவர்களின் உயரத்தில் மிரண்டாலும், நல்ல படியாகவே பேசினார், மகளின் வாழக்கை அல்லவா…..
அதே நேரம் வசீகரனின் பெற்றோருக்கும் நிலவழகி திருத்தமாக இருக்க, திருப்தியே. அவர்களுக்கும்.அவர்களின் மகனின் மகிழ்ச்சியே பிரதானம் இல்லையா….
ஜெயந்தி அம்மா, வழக்கம் போல, ஜாதகம் பார்க்க, இவர்கள் இருவரின் ஜாதகத்திற்கு ஆறுமாதம் கழித்து தான் கல்யாணம் என்று ஜோசியர் குண்டை தூக்கி போட, வேறு வழி இல்லாமல் சம்மதம் சொல்ல வேண்டிய நிலைமை வசீகரனுக்கு.
நிலவழகியின் வீட்டுக்கு சென்று வந்த அடுத்த நாள், கிருஷ்ணா காலையில் குளித்து விட்டு, கண்ணாடி முன் நின்று, தோளில் புரளும் முடியை துண்டால் துவட்டி கொண்டிருந்தான்.
அவனின் மனையாளோ, இவனுக்கு முன் எழுந்து, குளித்து முடித்து தயாராகி, இருக்கையில் அமர்ந்து, அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.
திருமணம் முடிந்த இந்த ஆறுமாத்தில் அவளின் வசீ, அவளின் மீது காட்டிய காதலில் இவள் தான் திக்கிமுக்காடி போய் இருந்தாள்.
அன்று நடந்த கொலை முயற்சிக்கு யாரு காரணம் என்று கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணற, இவளை எங்கும் தனியே அனுப்பாமல் அவன் செய்த அலப்பறைகள் ஏராளம்.
உமையாளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை, அந்த ஸ்டீவ் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றி இருக்க, அது தான் பிரச்சனைக்கு காரணமாக இருந்தது.
அந்த புகைப்படத்தில் உமையாளை அடையாளம் கண்டு கொண்ட, அவர்களின் தொழில் எதிரிகள், இந்தியாவில் அவளுக்கு பாதுகாப்பு குறைவு என கணித்து, அவளை கொல்ல திட்டம் தீட்டியதை, மைக்கேல் தான் கண்டு பிடித்தார்.
அதன் பயனாக, கிருஷ்ணாவால், அவளின் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கப்பட்டது தான் மிச்சம்.
உமையாள் வீட்டில் இங்கு இருந்த படியே, மடிக்கணினி மூலம், அவளின் தந்தையின் தொழிலை பார்த்து கொண்டிருந்தாள்.
தினமும் அலுவலகம் சென்று வரும் கிருஷ்ணா, முதல் வேலையாக அவளிடம் வந்து, அவளை தன் கை வளைவில் வைத்து கொண்டு, அன்று நடந்த அத்தனையும் ஒன்று விடாமல் சொல்லுவான், ஒரு பள்ளி சென்று வரும் சிறுவனை போல.
ஒரு வேளை தனது சிறு வயதில் கிடைக்காத வாழ்க்கையை, இப்போது வாழ்கிறானோ என்ற ஐயம் கூட உண்டு இவளுக்கு.
அவனின் ஞாயிறு முழுவதும் இவளுக்காக மட்டுமே. அன்று பெரும்பாலும் அவனின் சமையலாக தான் இருக்கும்.
பலநேரம் நேரம், காலம் போவது தெரியாமல் நீச்சல் குளத்தில், குதி கால் நினைய பலமணி நேரம் பல கதைகள் பேசுவார்கள்.
அவளுக்காக ஒரு பெரிய மீன் தொட்டி அவர்களின் அறையில் குடியேறி இருந்தது. பின்னணியில் இவர்கள் இருவரின் புகைப்படத்தோடு.
ஓவ்வொரு செயலிலும், இவளின் மீதான தன் அளவில்லா காதலை பொழிபவன் மேல், இன்னும் காதல் பெருக்கெடுக்க, தனது இருக்கையில் எழுந்தால் உமையாள்.
இடது கையை பின்னாடி மறைத்து வைத்தவள், அதில் அவனுக்கான ஒரு பரிசையும் ஏந்தி கொண்டு, அவனை நெருங்கினாள்.
இவளின் வருகையை உணர்ந்த கிருஷ்ணா, திரும்பி இவளை பார்க்க, அதற்காகவே காத்திருந்தது போல, இவளின் வலது கை உயர்ந்து, அவனின் நீண்ட குழலை கோதி விட, அதில் இலயித்து கிருஷ்ணா கண் மூடி நின்றான்.
அவனின் மோன நிலையில், அதரங்களின் ஒரு புன்னகையை சூடி கொண்ட உமையாள், அவனின் முகவடிவை அளந்தவாறே,
“வசீ” என்று அழைக்க, அந்த பெயரே அவனில் ஒரு நடுக்கத்தை கொடுக்க, அவள் அழைத்த விதமோ அவனை உருக்க,
“மம்ம்ம்ம்” என்று சொல்ல, அவளோ,
“நான் உனக்கு ஒரு கிப்ட் வச்சி இருக்கேன்” என்று சொல்லியவள், அவனிடம் இருந்து சற்று தள்ளி நின்றாள்.
அவளின் விலகலில், அவன் அவனின் நயங்களை திறக்க, அவளோ அவனின் கைகளை பற்றி, அவளின் பரிசை வைத்தாள்.
அவளை புரியாமல் பார்த்தவன், அந்த பரிசு பெட்டியை திறக்க, அதற்குள் என்ன இருக்கு என்று தெரியும் முன்னரே, அவனின் மனம் ஏனோ முரசு கொட்ட ஆரம்பித்தது.
அந்த பரிசு பெட்டியின் உள்ளே ஒரு சிறிய பெட்டி இருக்க, அதில் இருந்த பொருளையும், அது சொன்ன செய்தியையும் புரிந்து கொண்ட கிருஷ்ணா கண்களில் கண்ணீர்.
அந்த கண்ணீரோடு அவளை பார்த்து கண்களாலே, “உண்மையா” என்று கேட்க, அவளும் “ஆமாம்” என்று தலையசைக்க, அவளை ஆர தழுவி கொண்டவன்,
“தேங்யூ உமை, ஐ அம் சோ ஹாப்பி, வீ ஆர் பிரக்னட்” என்று உணர்ச்சி மிகுதியில் நடுங்கும் குரலில் சொல்ல, அவன் சொல்லிய விதத்தில் அவளும் தான் உணர்ச்சிகளின் குவியலாய்.
அன்றில் இருந்து அவளுடனான அவனின் நேரங்கள் இன்னும் இன்னும் நீண்டன. ஒரு அன்னையாய் அவளை தாங்கினான் கிருஷ்ணா.
அவள் கர்ப்பகால வாந்தி, மயக்கம் என அவதிபடும் போது எல்லாம், அவளை விட அவன் தான் அதிகம் தவித்து போனான்.
அவளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்தான். சந்தேகங்ளை ஜெயந்தி அம்மாவிடம் கேட்டு அவளை கவனமாக பார்த்து கொண்டான். மணிக்கணக்கில் குழந்தையிடம் உரையாடினான்.
ஆறு மாதத்தை, காதல் பரவைகளாக வசீகரனும் அவனுடைய நிலா பெண்ணும் காதல் வானில் சிறகடிக்க, பெரியவர்கள் கல்யாண வேலைகளை பார்த்து கொண்டனர். அவர்களின் கல்யாண நாளும் விடிந்தது.
பெற்றோர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரின் ஆசியோடு, தன் காதலியான நிலா பெண்ணை, தன்னோடு மனைவியாக வரித்து கொண்டான் வசீகரன்.
வசீகரனின் திருமணத்தின் போது உமையாளுக்கு எட்டாம் மாதம் நடந்து கொண்டிருந்தது.
எல்லாம் நல்லா படியாக தான் சென்று கொண்டிருந்தது அந்த நாள் வரும் வரை. அந்நாள் நினைவில் வசீகரனிடம் இருந்து ஒரு பெருமூச்சு கிளம்ப, கடந்த காலத்தில் இருந்து, நிகழ் காலத்திற்கு வந்தான் வசீகரன்.
அப்போது தான் நேரத்தை பார்க்க, தான் இங்கு தோட்டத்திற்கு வந்து அதிக நேரம் ஆகி இருப்பது புரிய, அவனின் நிலா பெண் அவனுக்காக காத்திருப்பால் என்பதால், எழுந்து அவர்களின் அறைக்கு சென்றான்.
காதல் கொள்வோம்……..