மீனாக்ஷிக்கு செய்த சத்தியத்தை மீறி சீதாலக்ஷ்மியிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் உதயாதித்தனிடம் தன் வாழ்வின் கருப்பு பக்கங்களை தளிர் பகிர்வது என்பது நிச்சயம் அக்னி பிரவேசமே தான்..!!
ஆனால் இதுநாள் வரை சரத் குறித்த நினைவு இல்லாமல் இருந்தவளுக்கு இப்போது சந்தியாவினால் அவை கிளறப்பட்ட பிறகும் பேசாமல் இருப்பது சரியில்லை என்று தோன்ற திடமான முடிவோடு மாடிக்கு வந்துவிட்டாள்.
உதய் கொடுத்த காஃபியை குடித்து முடித்துவிட்டு கிட்டத்தட்ட ஒருமணி நேரம் தங்கு தடையின்றி தளிர் பேச அவள் பேச்சை குறுக்கிடாமல் பொறுமையாக கேட்டுக்கொண்ட உதயாதித்தன் இறுதியாக அவன் முடிவு என்னவென்று தெரிந்துகொள்ள தன்னை கேள்வியாக பார்த்தவளிடம், ‘சரி டைமாச்சு போய் படுடி. நமக்கு வேற எர்லி முகூர்த்தம் இப்பவே கண்ணை சுழட்டிட்டு வருது.. காலையில சீக்கிரம் எந்திரிக்கனும்..’ என்று சொல்ல தளிர் அதிர்வோடு அவனை பார்த்தாள்.
‘என்ன பார்க்கிற..?” என்று சிறு கிளிப்பில் விரித்துவிடபட்டிருந்த கூந்தலை வருடியவன், “இவ்ளோநேரம் சில்லுன்னு காத்துல நின்னுட்ட தலைமுடியும் இன்னும் ஆறல போல மறக்காம ட்ரையர் போட்டுட்டு படு இல்ல தலைவலி அதிகமாகிடும்.. என்னை கேட்டா இது தேவையில்லாத தலைவலி! காஃபி குடிச்சாச்சு ட்ரையர் போட்டுக்கோ நல்லா தூங்கு அப்பதான்டி காலையில ஃப்ரெஷ்ஷா இருப்ப..’ என்று திரும்பவும் சொல்லி ‘யாரடா நீ..? எங்கிருந்து வந்தாய்..?’ என்று அவளை அதிசயிக்க வைத்தான்.
“ப்ச் நாளைக்கு நைட் தூங்க முடியாதுடி இப்போவே நல்லா தூங்கிக்கோ என்னையும் தூங்க விடுன்னு சொல்றேன்.. ஏன்டி புரியாத மாதிரியே பார்க்கிற..?” என்று இளநகையோடு உதய் கண்சிமிட்ட இன்னுமே அவன் மீதான அவள் பார்வையில் மாற்றமில்லை.
எத்தனை நேரம் பிரமிப்புடன் அவனை பார்த்திருந்தாளோ தெரியாது ஆனால் உதய் “தளிர்” என்று அவள் முன் சொடக்கிட்டு நினைவுலகிற்கு கொண்டு வந்தவன், “தேவையில்லாத தலைவலியை பற்றி அதிகமா யோசிக்காத தளிர்.. நான் பார்த்துக்கறேன் நீ போய் தூங்கு” என்று மீண்டும் சொல்ல பலநிமிட மௌனத்தை அக்கணம் உடைத்த தளிர்,
“நீங்க சொன்ன மாதிரி நாம இரண்டு பேரும் பெருசா மனசு விட்டு பேசலை.. என்னோட விருப்பு வெறுப்பு உங்களுக்கு தெரியாது அதேபோல எனக்கும் ஆனா நான் நாளைக்கு கல்யாணத்தை வச்சுட்டு இவ்ளோ பெரிய விஷயத்தை சொல்லியிருக்கேன் எப்படி உங்களால இவ்ளோ சாதாரணமா இருக்க முடியுது..? என்மேல கோபமில்லையா..?” என்று கேட்டவளுக்கே உதய்யிடம் சரத் குறித்து பேச வரும் முடிவை எடுத்த போது கலவையான சிந்தனைகள்.
அவள் பேசி முடித்த பின் உதய் நிச்சயம் இத்திருமணத்தை நிறுத்தவும் வாய்ப்பு உண்டு என்று தெரிந்தே தான் வந்தாள். திருமணத்தை நிறுத்தும் அளவு இல்லையென்றாலும் குறைந்தபட்சம் இத்தனை நாள்களாக ஏன் இதை பற்றி தன்னிடம் சொல்லவில்லை.. என்று ஆரம்பித்து அவளை கேள்விகளால் துளைத்தெடுப்பான் என்ற அவன் மீதான அவள் எண்ணத்தை சுக்குநூறாக உடைத்து நிற்பவனை ஒருவித பிரமிப்போடு பார்த்தாள்.
‘எங்கிருந்து அவனுக்கு தன்மீது இத்தனை நம்பிக்கை வந்தது..?’ என்ற கேள்வியே அவள் மனதை குடைந்து கொண்டிருந்தது. கையில் இருந்த வளையல்களை மேலும் கீழுமாக ஏற்றி இறக்கி கொண்டிருந்தவளுக்கு ‘அவனிடம் கேட்பதா..? வேண்டாமா..?’ என்ற தடுமாற்றம்… தனக்குள்ளாகவே போராடி களைத்தவள் இறுதியில் “எப்படி இவ்ளோ நம்பிக்கை..?” அதை வாய்விட்டு அவனிடம் கேட்டும் விட்டாள்.
“என்ன கேட்ட..?” என்று இத்தனை நேரம் அவள் முகத்தில் ஊர்வலம் கொண்டிருந்த உணர்வுகளை அவதானித்திருந்தவன் அவள் குரலில் தான் மீண்டிருந்தான்.
“இல்ல உங்களுக்கு எப்படி..?” என்று குரலை செருமியவள், “ஐ மீன் என்னோட சிச்சுவேஷன் அண்ட் மை ஸ்டேட் ஆஃப் மைன்ட் வாஸ் நாட் ஃபீசிபில்(My situation and my state of mind was not feasible) ஸோ உங்களுக்கு என்னை புரிஞ்சுக்க நேரமே நான் கொடுக்கலை அஃப்கோர்ஸ் நானுமே அப்படி இருந்துட்டேன் ஐ’ம் ரியலி ஸாரி ஐ ஷுட்ன்ட் ஹாவ் டன் தட் (i am really sorry i shouldn’t have done that)” என்றவளுக்கே ஒருவேளை இத்தனை நாள்களில் அவனுடன் நேரம் செலவிட்டு இருந்தால் ஏதேனும் ஒரு தருணத்தில் சரத் குறித்து முன்கூட்டியே சொல்லியிருப்போமோ அதன் மூலம் இன்றைய சங்கடத்தை தவிர்த்திருக்கலாமோ? என்ற எண்ணமே மேலோங்கியது.
“ஏற்கனவே சொல்லிட்டேன் உதய் இட் வாஸ் நாட் இன்டென்ஷனல்! பட் ஸ்டில் நான் அப்படி செய்திருக்க கூடாது அப்படியிருந்தும் என்மேல எப்படி இவ்ளோ நம்பிக்கை..? நான் சொன்னது சாதாரண விஷயமில்ல பட் நீங்க என்னை இதுவரை ஒருகேள்வி கூட கேட்கலை” என்று அவனிடம் கேட்ட நொடி தான் சரத் செய்த செய்கையால் ‘காதல்’ என்ற வார்த்தையின் மீது இத்தனை நாள்கள் நம்பிக்கை அற்று போயிருந்த இளந்தளிருக்கு உதய் மீது காதல் பிறந்த தருணம்.
பின்னே அவன் பெயரை கைகளில் எழுதியதும் அவன் கையால் வளையலிட்டு கொண்டதும் உதய் அவளிடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக தானே தவிர காதலாகவா..? என்று கேட்டிருந்தால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்லியிருப்பாள்.
அதுமட்டுமா..? கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக புது ஜனனம் கொண்டு வாழ தொங்கிவிட்ட தளிருக்கு கடந்த சிலநொடிகள் வரை யார் மீதும் காதல் பிறக்கவில்லை இனி பிறக்கப் போவதுமில்லை என்று திடமாக நம்பி இருந்தவளுக்கு அவனிடம் கேள்வி கேட்ட அக்கணம் அவன் மீது கொள்ளை காதல் பொங்கியது. இன்னும் உதய் அவள் கேள்விக்கு பதில் கூட அளிக்கவில்லை ஆனால் ஏனோ மனம் அவன்பால் வேகமாக சரிந்து கொண்டே இருந்தது.
அவள் வார்த்தைகளில் உதய்யின் முகத்தில் ஆச்சர்யபாவம் தோன்ற உயர்த்திய புருவங்களுடன் அதரங்களில் உறைந்த புன்னகையோடு மெளனமாக அவளை பார்த்திருந்தான். அவன் பார்வையோடு கலந்தவளின் விழிகளும் இப்போது அவன் மீது தான் மையல்கொண்டது.
இருவரின் ஜோடி பொருத்தத்தை நிச்சயதார்த்த புகைப்படத்தை கொண்டே பலரும் சிலாகித்திருந்தாலும் இப்போது தான் முதல்முறையாக அவன் அகஅழகில் கட்டுண்டவள் புறஅழகையும் கூர்ந்து பார்த்து இருவரின் ஜோடி பொருத்தத்தை எண்ணி சிலிர்த்தாள்.
‘பின்னே காதல் கொண்ட மனம் அதை அறிந்து கொண்டபின் சும்மா இருக்குமா என்ன..?’
நலங்கு முடிந்து குளித்திருந்தவன் உறங்குவதற்கு ஏதுவாக மெரூன் வர்ண ஆர்ம்கட் டீஷர்ட் கருப்பு நிற ஷார்ட்ஸில் இருந்தான். பெரும்பாலும் அவனை ஃபார்மலில் மட்டுமே பார்த்திருந்தாலும் அவள் பார்வை உரிமை கொண்டு ரசித்ததில்லை.. ஏனோ இன்றைய இலகுவான தோற்றம் அவளை வசீகரீத்ததில் பெண்ணின் விழிகள் அவனில் புதிதாய் நிலைகொண்டு விட்டது.
நிச்சயம் அழகன் தான்..! மறுப்பதற்கில்லை.. அதிலும் பெண்கள் ஒரு முறைக்கு இருமுறை திரும்பி பார்க்க வைக்கும் அழகும் கம்பீரமும் ஒருங்கே கொண்டிருப்பவன் என்பதையே இப்போது தான் உணர்கிறாள். என் கணவன் என்ற உரிமையோடு அவனை ரசித்திருந்தவள் விழிகளில் அவன் தலையை சரியாக துவட்டாது போனதில் கழுத்தோரம் நீர்த்திவலைகள் உருண்டோடுவது விழவும், “என்னதிது சரியா துவட்டாம ஏன் அவசரமா கிளம்பி வந்தீங்க..?” என்று கேட்டுக்கொண்டே தன் துப்பட்டாவால் அவன் தலையை துவட்ட துவங்கிவிட்டாள்.
இப்போது உதய் தளிரை அதிசயித்து பார்க்க அவளோ, “கொஞ்சம் குனிங்க உதய் எனக்கு சரியா எட்ட மாட்டேங்குது..” என்று குதிகாலில் எம்பி நின்றிருந்தவள் சொல்ல அவனும் அவள் உயரத்திற்கு ஈடாக குனியவும் பின்னந்தலையையும் துவட்டி முடித்து அவன் முன்னுச்சியில் விரல்களை நுழைத்து ஈரத்தை ஆராயவும், “இப்படியே இன்னும் கொஞ்ச நேரம் நின்னுட்டு இருந்த நாளைக்கு நடக்கவேண்டிய சாந்தி முகூர்த்தம் இப்போ, இங்கயே நடந்துடும்டி போதும் சோதிக்காத..” என்ற உதய்யின் குரலில் மீண்டவள் அப்போது தான் இருவருக்கும் இடையிலான நெருக்கமும் அவளிடையோடு கோர்த்திருந்த அவன் கரங்களின் அழுத்தமும் உணர்ந்தாள்.
“உதய்” என்று அவன் கையை விலக்க அவனோ தன்னோடு சேர்ந்திருந்த அவள் வலக்கரத்தில் முத்தமிட்டு “தேங்க்ஸ்” என்றான்.
“ஸா… எங்கப்பாக்கும் இப்படி தான்.. ஐ மீன் ஸாரி நீங்க சரியா துவட்டாம விட்டுட்டீங்க..” என்று உடனே விலகி நின்றவள் தன்னை நிலைபடுத்த கைபிடியின் சுவரில் சாய்ந்து இருகரங்களையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டாள்.
“ப்ச் நான் சரியாவே துவட்டி இருந்தாலும் என் பொண்டாட்டி இன்னொருமுறை துவட்டினா தப்பில்லை.., அதுக்காக இவ்ளோ தள்ளி இருக்கனுமாடி..?” என்று உதய் இருவருக்கும் இடையிலான இடைவெளியை கண்களால் சுட்டிக்காட்டி கேட்க அவளிடம் எந்த பதிலும் இல்லை..
மேலும் சில நொடிகள் அவளையே பார்த்திருந்தவன் “ஓகே ஃ பைன்.., எப்படி இந்த நம்பிக்கை..!! இது தானே உன் கேள்வி..?” என்று கேட்டுக்கொண்டே மெல்ல தளிரை நெருங்கி அவள் முகத்தை கைகளில் அள்ளிக்கொண்டவன், “என் இடத்துல உங்கப்பா இருந்திருந்தாலும் இந்த கேள்வியை கேட்டிருப்பியா..?” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்ட நொடி அவள் உடல் சிலிர்த்து அடங்கியது.
சத்தியமாக அவன் கேள்வியை எதிர்பாராதவள் மனம் தந்தையை எண்ணி பார்க்க அவள் விழிகளில் சட்டென நீர்மணி கோர்த்துவிட்டது.., நிச்சயம் தன் மீது நிபந்தனையற்ற அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த ரகுபதி இந்நேரம் இருந்திருந்தால் உதயாதித்தனை போவே தளிரை ஒரு கேள்வி கேட்டிருக்கமாட்டார்.. அத்தனை நம்பிக்கை அவருக்கு தன் மகள்கள் மீது.. , ஊரே அவர்களுக்கு எதிராக வந்து நின்றாலும் ‘என் வளர்ப்பு பொய்க்காது’ என்ற கர்வத்தோடு மகள்களுக்காக நிற்பார்.
‘அப்படியென்றால்..? தந்தை போலவே தன் மீது..’ என்று பரபரத்தவளுக்கு விம்மும் மனதை கட்டுபடுத்த முடியாது போக கலங்கிய விழிகளுடன் தளிர் உதய்யை பார்க்க அவனோ புன்னகையோடு அவளை தன் அணைப்பில் கொண்டு வந்தான்.
“உதய்” என்று கலக்கத்தோடு அவளழைக்க “ஷ்ஷ் என்னோட தளிர் பிரேவ் கேர்ள்..!! எதுக்காகவும் உடைய கூடாது.., நீ இப்படி அழறது என் மாமனாருக்கு மட்டுமில்ல எனக்குமே பிடிக்காதுடி” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே தளிரின் கண்ணீர் உதய்யின் டிஷர்ட்டை நனைத்து அவன் நெஞ்சை சுட அவள் கேவலும் அதிகரித்தது.
“ப்ச் என்னடி பண்ற..? இப்படி அழுது முகம் சிவந்து போச்சுன்னா நாளைக்கு நம்ம கல்யாண ஆல்பம் பார்க்க போற நம்ம பசங்க நான்தான் உன்னை அழ வச்சேன்னு என்கிட்டே சண்டை பிடிப்பாங்க.. நீ அழற அளவுக்கு எதுவுமில்ல கொஞ்சம் அமைதியா இருடி” என்று உதய் மீண்டும் அவள் முகத்தை அள்ளிக்கொண்டு சொல்ல தளிரின் முகத்தில் மகிழ்ச்சியும் அழுகையும் ஒருசேர வர்ணஜாலம் நிகழ்த்தி கொண்டிருந்தது.
“ஒன்னு அழு இல்ல சிரி.., இதென்னடி புதுசா சிரிச்சுட்டே அழற..?” என்று கேட்டவனின் கன்னத்தில் கண்ணீரினூடே தளிர் இதழ் பதிக்கவும் அதை எதிர்பாராத உதய் முகத்தில் மென்னகை அரும்பியது.
சில்லிட்ட தன் கன்னத்தை வருடிக்கொண்டே, “என்ன அதிசயமா மேடம் கிஸ் பண்றீங்க..? ஏன்டி கல்யாணத்துக்கு முதல்நாள் லவ் சிலபஸ் எடுத்தவ நம்ம குழந்தைங்க பிறந்த பிறகு தான் ரொமான்ஸ் சிலபஸ் எடுப்பன்னு நினைச்சேன் என்ன திடீர்னு..?” என்று சிரிப்புடன் அவள் நெற்றியை முட்டி கேட்கவும்,
“இது ஒன்னும் உங்களுக்கு இல்லை எங்கப்பாக்கு” என்றவளுக்கு ஒற்றை கேள்வியில் தெளிவுபடுத்த பட்டுவிட்ட உதய்யின் நிபந்தனையற்ற நம்பிக்கையிலும் பேரன்பிலும் நெஞ்சம் ததும்பியது.
“இந்த நிமிஷம் உங்க இடத்துல எங்கப்பா இருந்திருந்தா நான் இதை கொடுத்திருப்பேன்” என்றவள் அவனிடம் வேறு எதுவுமே கேட்க தோன்றாது முதல்முறை தானாகவே அவனை கட்டிக்கொண்டு நெஞ்சில் முகம் புதைத்து, “இதுவும் எங்கப்பாக்கு தான்” என்று சொல்லவும் கடுப்பானவன்,
“அடிப்பாவி அப்போ இது எல்லாம் என் மாமனாருக்கா..? எனக்கு எப்போடி கொடுப்ப..?” என்று அவளை இறுக்கி கொண்டே கேட்டவனின் பார்வை மாற்றத்தை கண்டவள், “இன்னும் இருபது மணி நேரம் கழிச்சு” என்று லாவகமாக அவன் அணைப்பில் இருந்து வெளிவர அவளை விடாமல் வளைத்து கொண்டவன்,
“அதெல்லாம் முடியாது.. உங்கப்பாக்கு மட்டும் இவ்ளோ கொடுத்த எனக்கும் கொடுத்தா தான் இங்கிருந்து போக முடியும்” என்று வம்பு வளர்த்து நிற்க,
“யாரோ இன்னைக்கே சீக்கிரம் தூங்கிக்கோ நாளைக்கு தூங்க முடியாதுன்னு சொன்னாங்க.. அவங்களை நீங்க பார்த்தீங்க..?” என்று புருவம் உயர்த்தியவளை சிரிப்புடன் விடுவித்தவன்,
“ஆமாமா சீக்கிரம் தூங்கனும் குட் நைட் நீ கிளம்பு” என்றதும் திரும்பி நடந்தவள் சட்டென அவனை நெருங்கி உதய்யின் நெற்றியில் இதழ் பதித்து “குட் நைட்! இதுவும் எங்கப்பாக்கு தான்” என்று சிரிப்புடன் சொன்னவள் அதே மகிழ்ச்சியுடன் அறைக்கு திரும்பி இருந்தாள்.
ஆனால் இப்போது அவள் மகிழ்ச்சியை மொத்தமாக துடைத்தெறியவே வந்து நிற்கும் சரத்தை கண்ட உதய்யின் ஆத்திரம் பன்மடங்காக பெருகியது.