“உதய் நான்..” என்று அவள் ஆரம்பிக்கும் முன்னமே மேஜையில் இருகரங்களையும் கோர்த்து கொண்டு அவள்புறம் குனிந்தவன், “உனக்கு என்ன பிடிக்கும் சொல்லு” என்றான்.
“….”
“தளிர்”
“அப்படி எதுவும் ஸ்பேசிஃபிக்கா இல்லங்க”
“சரி என்ன பிடிக்காது..?”
“அப்படியும் எதுவுமில்ல எனக்கு எல்லாமே பிடிக்கும்” என்றவளின் வார்த்தைக்கு பின்னே இருக்கும் நிஜம் அவனுக்கு புரிய வாய்ப்பில்லை.
பின்னே ரகுபதி இருந்தவரை தளிருக்கும் பிடித்தங்கள் பல இருந்தது.. அவளுக்கு ஈரல் பிடிக்கும் என்பதற்காகவே ஒவ்வொரு ஞாயிறு காலையும் அவர்கள் வீட்டில் ஈரல் குழம்பு தான் .. அதேபோல அவளுக்கு தலைக்கறி பிடிக்காது என்பதால் அவளுக்காக தனியே வாங்கி வந்து தன் கையாலேயே மகளுக்கு சமைத்து கொடுப்பார் ரகுபதி. ஆனால் அவர் தவறின பிறகு தளிருக்கு எதிலும் பிடித்தமற்று போனது.
பிடித்தமற்று என்பதை விட தன் பிடித்தங்களை எல்லாம் அவள் மொத்தமாக ஒதுக்கிவிட்டு இருப்பதை ஏற்றுகொள்ள கற்றுகொண்டாள் என்றுதான் சொல்லவேண்டும். என்னதான் சீதா கணவர் இல்லாத குறையை தெரியாத வகையில் பிள்ளைகளை அரும்பாடுபட்டு வளர்த்தினாலும் ஒற்றை பெண்மணியின் சம்பளம் குடும்பத்தையும் நிர்வகித்து பிள்ளைகளின் படிப்பு செலவுகளையும் சமாளித்து இருபிள்ளைகளின் தனிப்பட்ட தேவைகளையும் விருப்பங்களையும் தீர்க்கும் அளவிற்கு இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.
அதை கண்டுகொண்ட தளிர் அன்னையின் வருமானத்தில் தன்னை பொருத்தி கொள்ள பழகிக்கொண்டாள். தந்தையின் கைகோர்த்து பல கடைகள் ஏறி இறங்கி அவளுக்கு பிடித்த ஃப்ராக்கை வாங்கி கொண்டு வருபவள் அன்னையோடு செல்லும் போது ‘எனக்கு ட்ரெஸ் இருக்கு நீங்க தென்றலுக்கு பாருங்கம்மா’ என்று பிடிவாதம் பிடிக்கும் தங்கைக்கு விட்டுகொடுத்து விடுவாள்.
தந்தை இல்லையென்றான பின்னர் அவள் விருப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி ஒருகட்டத்தில் காணாமலே போய்விட்டது. வயதிற்கே உரிய ஆசைகள் மேலோங்கினாலும் தேவைக்கு மட்டுமே செலவு செய்ய கற்றுகொண்டவள் அன்னையின் பாரம் உணர்ந்து அவருக்கு தோள் கொடுத்த பின்னர் தான் சீதாலக்ஷ்மிக்கு சிறிது ஓய்வு கிட்டியது. இரு பெண் குழந்தைகளை தனியே விட்டு வேலைநேரத்திற்கும் அதிகபடியாக வேலை செய்து வந்தவர் தளிர் வேலைக்கு சென்ற பின்னரே அதையெல்லாம் விட்டுவிட்டு வேளையோடு வீடு வந்து சேர்வார்.
இரு பெண் குழந்தைகளை வீட்டில் தனியே விட்டுவிட்டு இரவு ஒன்பதற்கு வீடு திரும்புவது என்பது மீனாக்ஷி அவருடன் இல்லையென்றால் சீதாவிற்கும் சாத்தியபட்டிருக்காது.. ஆம் சீதா வேலைக்கு செல்ல குழந்தைகளையும் வீட்டு வேலைகளையும் மீனாக்ஷி பார்த்து கொண்டார்.. ஆனால் நல்லவர்களை நெடுங்காலம் கடவுள் விட்டுவைப்பதில்லையோ என்ற சீதாவின் எண்ணம் கடந்த வருடம் மெய்யாகி போனதில் மீனாக்ஷி இல்லாத நகர்விற்கு தங்களை தயார்படுத்தி கொள்ள சில மாதங்கள் பிடித்தது அன்னை மற்றும் மகள்களுக்கு.
“பிடிக்காததுன்னு எதுவுமே இல்லையா..?”
“இல்லைங்க”
“அப்போ என்னையும் பிடிக்கும் அப்படிதானே..?” என்றவன் கேள்விக்கு உடனே “ஆம்” என்று தளிர் சொல்லவும்.,
“அப்புறம் ஏன் இப்படி இருக்க..? சூன் வீ ஆர் கோயிங் டூ பி கப்பிள்ஸ் தளிர்! ஆனா நம்ம நிச்சயம் முடிஞ்சு இதுவரை நாம எத்தனை முறை பேசினோம்னு விரல் விட்டு எண்ணிடலாம் .. நானும் உன்னை மீட் பண்ண எத்தனையோ முறை ட்ரை பண்ணிட்டேன், எனக்கு உன்னோட கமிட்மென்ட்ஸ் புரியறதால தான் பெருசா எதுவும் எதிர்பார்க்கலை அதுக்காக தினம் ஒரு பத்து நிமிஷம் என்னோட பேச முடியாதா..? அட்லீஸ்ட் சண்டேலயாவது எனக்கான நேரம் ஒதுக்குவன்னு பார்த்தா அதுவும் இல்லை.. சரி வாங்கிட்டு வந்த வளையலை போட்டுவிட கையை கேட்டா இவ்ளோ யோசிக்கிற..?”
“நாம இரண்டு பெரும் காலம் முழுக்க கை கோர்த்து போக வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கு ஆனா நான் ஸ்கூல்ல வச்சு உன்னை என்ன பண்ணிடுவேன்னு நீ இப்படி ரியாக்ட் பண்ற..? டூ யூ தின்க் இட்ஸ் ரைட்..?” என்று கேட்க பதிலில்லை.
பின்னே பள்ளியில் வைத்து அவன் கையை கேட்கவும் ஒருநொடி பின்னிழுத்து கொண்டாளே தவிர அவளுக்குமே அது அபத்தம் என்று புரிய என்ன பதில் சொல்வது என்று மௌனித்திருந்தாள்.
“ஸோ இப்பவும் நீ பேச மாட்ட..? என்னை நீ என்ன நினைச்சுட்டு இருக்க..?” என்று கோபமாக எழுந்துகொண்டவன்,
“உன்னோட நினைப்பு என்னன்னு தெரியாது பட் இங்க ஸ்கூல்ல வச்சு..” என்று ஒருகணம் தன் பேச்சை நிறுத்தியவன் ஆற்றாமையுடன் கண்களை மூடி திறந்து,
“ஐ ஆம் நாட் தட் சீப்!” என்று உதய் முடிக்கும் முன்னமே.,
“ப்ளீஸ் ஸ்டாப் உதய்! நான் அப்படி எதுவும் நினைக்கலை அது ஏதோ ஞாபகத்துல என்னையும் அறியாம செய்துட்டேன்.., இட்ஸ் நாட் இன்டென்ஷனல்! ப்ளீஸ் ஐம் ஸாரி அகைன் மன்னிச்சிடுங்க..” என்று தளிர் தவித்து நிற்க,
“அதேதான் நானும் சொல்றேன் உன்னோட ஞாபகத்துல என்னை தவிர மத்ததெல்லாம் தான் இருக்கு.. ஏன்டி உன்னை ஆசைப்பட்டு கட்டிக்க போற என்னை ஒரு நிமிஷம்கூட உனக்கு தேட தோணலையா..? ஆனா எனக்கு எத்தனை வேலைகள் இருந்தாலும் உன்னோட ஞாபகத்தை ஒதுக்க முடியலை ஏதோ ஒருவகையில என்னை நீ டிஸ்டர்ப் பண்ற தளிர்..” என்று அவன் பேசிக்கொண்டே செல்ல தளிரிடம் மௌனம்.
“….”
“ஏதாவது பேசு தளிர்”
“நீங்க தப்பா எடுக்காட்டி நான் நாளைக்கு பேசவா..? உங்களுக்கு ஒன்னும் அப்ஜக்ஷன் இல்லையே..”
சிலநொடிகள் அவன் சென்ற திசையையே பார்த்திருந்தவள் பின் மேஜையில் இருகரங்களையும் கோர்த்து தலையை சாய்க்க அவள் பார்வையில் விழுந்தது உதய் வாங்கிய வளையல்கள்.
இதழ் மடித்து கலங்கிய விழிகளுடன் அன்னிச்சையாய் நீண்ட அவள் கரம் வளையல்களை எடுத்து அவன் மனதறிந்தறிந்தார் போல வருடி கொடுத்தது. தளிர்க்கு அழைப்பு வரவும் அதை மீண்டும் பெட்டியில் அடுக்கி பத்திரபடுத்திவிட்டு மீட்டிங்கிற்கு சென்றாள்.
************************************
மாலை கிளம்பும் வேளையில் “மேடம் உங்களை கரெஸ் ஸார் கூப்பிடுறார்” என்று ஸ்டாஃப் ரூமில் இருந்த தளிரை அழைக்கவும் அம்பலவாணனின் அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே செல்ல, “உட்காரும்மா” என்றார்.
“இருக்கட்டும் ஸார்” என்று வழமை போல சொல்லிவிட்ட தளிர் தன்னை திருத்தும் முன்,
“ஸார் இல்ல மாமான்னு கூப்பிடனும்னு எத்தனை முறை சொல்றது தளிர்..’ என்றவரின் குரலில் சிறு கண்டிப்பு…
“ஸாரி மாமா சொல்லுங்க என்ன விஷயம்..?”
“முதல்ல உட்காரும்மா” என்றவரின் குரலை இப்போது மறுக்க முடியாமல் தளிர் அமர்ந்ததுமே “என்னம்மா முடிவு செய்திருக்க..?” என்றார்.
“எதை பற்றி மாமா கேட்கறீங்க ..?”
“கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு வாரம்கூட இல்ல நாளை மறுநாள் முகூர்த்த புடவை எடுக்கணும் ஆனா நீ லீவ் எதுவும் அப்ளை பண்ணலைன்னு ஆஃபிஸ்ல சொன்னாங்க அதான் லீவ் விஷயமா என்ன முடிவு பண்ணியிருக்கன்னு கேட்டேன்..”
“நான் இதுவரை எதுவும் யோசிக்கல மாமா தேவைப்படும் போது லீவ், பெர்மிஷன் எடுத்துகிட்டேன்… ஆனா இப்போ குழந்தைகளுக்கு எக்ஸாம்ஸ் இருக்கு ஸோ அதிகநாள் எடுக்கமுடியாது.. அதோட இன்னும் அ…” என்றவள் தயக்கத்தோடு பேச்சை நிறுத்த..,
“அப்படியில்ல மாமா..” என்றவள் ஒருகணம் நிதானித்து, “ஆனா நான் அவர்கிட்ட கேட்டுட்டு சொல்லட்டுமா..? உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே..”
“அப்படி எதுவுமில்ல தளிர்.. உன் விருப்பம் போல என் பையன்கிட்ட பேசி முடிவை சொல்லு போதும்..” என்றவருக்கு தெரியுமே தளிருக்கு என்றுமே குழந்தைகள் தான் பிரதானம் என்பதும் இத்தனை வருடங்கள் வேலை செய்த பள்ளியின் தாளாளர் மாமனாராக மாறியபோதும் நிச்சயம் வேலையை விடமாட்டாள் அதற்கு யாரும் அவளை நிர்பந்திக்க போவதுமில்லை.
தளிரின் அர்பணிப்பும் குழந்தைகளை அரவணைத்து செல்லும் பாங்கும் தான் மகன் கேட்டதுமே அம்பலவாணனுக்கு அவளை தன் வீட்டு மருமகளாக ஏற்க வைத்தது. சொல்லபோனால் தளிரை பார்க்கையில் எல்லாம் இப்படி ஒரு பெண் தன் மகனின் துணையாக அமைந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் எண்ணாத நாளில்லை ஆனாலும் மகனின் வாழ்க்கையை அவன் விருப்பம் போல அமைத்து கொடுக்கவேண்டியே தன் எண்ணத்தை வெளிபடுத்தாது பெண் தேடும் படலத்தில் இறங்கியிருந்தார்.
ஆனால் மகனே தளிரை விரும்புவதாக கூறவும் இனியும் தாமதிப்பதற்கு இல்லை என்று உடனே பெண் கேட்டு சென்றுவிட்டார்.
“முகூர்த்த புடவை எடுக்க போறதை பற்றி அம்மா சொன்னாங்களா ம்மா..”
“சொன்னாங்க மாமா”
“என்னமோ தெரியலை உங்க அத்தைக்கு முடியாம போனதால முதல்முறை தடைபட்டு இரண்டாம் முறையும் எடுக்க முடியாம போயிடுச்சு புதன்கிழமை எடுத்துடலாம் கார் அனுப்புறேன் நீங்க எல்லாரும் அதுல வந்துடுங்க” என்ற அம்பலவானனுக்கு அன்று ராஜியின் பேச்சை கேட்டு மாமியாராக தனக்கு முன்னுரிமை வேண்டியே தளிரிடம் கேட்டு முடிவு செய்த நாளில் புடவை எடுப்பதை மனைவி தள்ளிபோட்டார் என்பது தெரிய வாய்ப்பில்லை.
ஏனோ தளிர் விடயத்தில் முரணாக நடந்துகொண்டாலும் மனைவியின் உடல்நலக்குறைவை அன்று அம்பலவானனுக்கு சந்தேகிக்க தோன்றவில்லை.. அடுத்தமுறை நாள் நட்சத்திரம் மகனின் ராசிக்கு சரியில்லை என்று கூறி ராஜியின் ஆலோசனையின் பெயரில் ஜெகதீஸ்வரி தேர்ந்தெடுத்த நாளில் தான் முகூர்த்த புடவை எடுக்க போகிறார்கள்.
“என்னம்மா பேசுற கல்யாணம் கிட்ட நெருங்குது உங்க ஹெல்ப்க்கு நான் நம்ம டிரைவரையும் ஒரு அம்மாவையும் அனுப்புறேன்… அவங்க உங்களுக்கு உதவுவாங்க”
“இல்ல மாமா தென்றலும் நானுமே சமாளிச்சுப்போம்.. ஆல்மோஸ்ட் எல்லா வேலையும் முடிஞ்சது அதோட கல்யாணம் நீங்க எடுத்து செய்யறப்போ எங்களுக்கு பெருசா எதுவும் வேலையில்ல..”
“அப்படி சொல்லமுடியாது தளிர் கல்யாண வீடுன்னாலே பூ, குண்டூசி, பாத்திரம், பண்டம்னு சின்னதும் பெருசுமா ஆயிரத்தெட்டு அவசர வேலைகள் முளைக்கும் சீதா மட்டும் பார்க்கிறது கஷ்டம் ஒத்தாசைக்கு கூட ஒருத்தர் இருக்கிறது தப்பில்லை. அதோட உங்க சேஃப்டி எனக்கு ரொம்ப முக்கியம்.. தென்றல் டூவீலர்ல போறது நல்லதில்ல நான் சீதாகிட்ட ஏற்கனவே பேசிட்டேன் வெளியே போகவர கார் அனுப்புறேன் வேண்டாம் சொல்லகூடாது புரியுதா..?”
“சரி மாமா” என்றவளுக்கு தெரியுமே நிச்சயம் முடிந்ததுமே அம்பலவாணன் சீதாவிடம் இதுகுறித்து பேசியதும் அவர் மறுத்ததும்.. இப்போது அன்னையே ஒப்புக்கொண்ட பிறகு அவளுக்கு என்ன மறுப்பிருக்க போகிறது..?
அம்பலவாணனின் அறையில் இருந்து வெளியேறி ஸ்டாஃப் ரூமிற்கு சென்ற தளிர் உடன் பணிபுரிவோருக்கு பத்திரிகை கொடுத்து திருமணத்திற்கு அழைக்கவும்,
“தளிர் மேம் அதுதான் கரெஸ் சார் ஏற்கனவே எல்லாருக்கும் அனுப்பிட்டாரே நீங்க வேற தனியா கொடுக்கனுமா..?” என்று கேட்டவருக்கு பதிலாக புன்னகையை கொடுத்து, “கண்டிப்பா வந்துடுங்க” என்று பத்திரிகை கொடுத்தாள்.
அனைவருக்கும் கொடுத்து முடித்தவள் பின் தன் ஸ்கூட்டியில் கிளம்பி அடுத்து சென்று சேர்ந்த இடம் சக்ஸஸ் அகாடெமி. இது அரசு தேர்வுகளுக்கு முயற்சிக்கும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் மையம் இங்கே தான் கடந்த இரண்டு வருடங்களாக மாலை வகுப்புகளையும் சிலநேரம் காலை வகுப்புகளையும் தளிர் எடுக்கிறாள். ஏழரை மணியளவில் ஆங்கில வகுப்பை முடித்துவிட்டு வீடு சென்று சேர்ந்தவளுக்கு சீதா சூடாக காஃபி கொடுக்கவும் குடித்து முடித்தவள் முகம் கழுவி உடைமாற்றி மாடிக்கு செல்ல அங்கே டியூஷன் பிள்ளைகள் காத்திருந்தனர்.
“நீ போய் படி தென்றல் நான் பார்த்துக்கறேன்” என்ற தளிர் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க கீழே வந்த தென்றல் தன்னறையில் அமர்ந்து படிப்பை தொடர்ந்தாள்.
இதுதான் தாய் மற்றும் இருமகள்களின் அன்றாட வழக்கம்.
கல்லூரியில் இருந்து முதலில் வரும் தென்றல் தளிர் வரும்வரை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பவள் அவள் வந்த பின்னர் தன் பாடபுத்தகங்களோடு அமர்ந்து கொள்வாள். குழந்தைகளை அனுப்பிவிட்டு ஒன்பது மணியளவில் தளிர் வரவும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை முடிக்கவும் தளிரின் கைபேசி ஒளிரவும் சரியாக இருந்தது.