அரசி மீது அதீத ஆத்திரத்தில் இருந்தார் ஆறுச்சாமி. சொல்வதொன்று செய்வதொன்று என்றால் யாருக்கும் அப்படித் தானே இருக்கும். இரண்டு நாளில் வந்துவிடுவேன் என்று அனுமதி வாங்கிச் சென்றவள், இப்போது வர முடியாது என்றால்?
வேலை முடியவில்லை என்ற அவளின் காரணம் எல்லாம் சமாதானம் செய்ய முடியாமல் அவரது காதோடு நின்றுவிடுகின்றன.
அங்கு அரசியோ யோசனையுடன் அமர்ந்திருந்தாள். ஊருக்கு போய் நிலைமையை சரி செய்வோம் என்று எழ, அவள் முகத்தையே பார்த்தவாறு நின்றிருந்தாள் அவள் கல்லூரித் தோழி தென்றல்.
“எனி ப்ராப்லெம்?” என்று கேட்க,
“நத்திங்” என்று அரசி புன்னகைக்க,
“வா சாப்பிடலாம்” என்று இரவு உணவிற்காக அழைத்துச் சென்றாள்.
இரவு உணவை முடித்துக்கொண்டு இருவரும் கல்லூரியில் நடந்த பல சுவாரசிய நிகழ்வுகளை எல்லாம் நினைவு படுத்தி சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க, நேரம் நகர்ந்தது.
அடிக்கடி அரும்பின் நினைவு வேறு வந்து போனது அரசிக்கு. ஊரிலிருந்து கிளம்பும் போதே அவளுக்கு அழைத்தாள். ஆனால் அழைப்பு ஏற்கப்படவில்லை.
“ஓகே நீ ரெஸ்ட் எடு. நாளைக்கு காலைல சீக்கிரமே கிளம்பணும்” என்றுவிட்டு தென்றல் அவ்வறையில் இருந்து சென்றுகொள்ள, மீண்டும் கைபேசியில் அரும்பிற்கு முயற்சி செய்து பார்த்தாள் அரசி.
இம்முறை அழைப்பு ஏற்கப்பட அவள் பேசும் முன் மறுமுனையில்,
“அலோஓஓ..” என்றது கனமான குரல்.
“யாரு நீங்க?” என்றாள் அரசி.
“நான் முத்துச்சாமி பேசுறேன். நீ ஆரு?”
“நான் வேங்கையரசி பேசுறேன். அரும்பு கிட்ட போனை கொடுங்க” என்றாள்.
“நான் வெளி வேலையா வந்திருக்கேன். ஊட்டுக்கு போனதும் அரும்பை பேச சொல்லுறேன்” என்றுவிட்டு அழைப்பை துண்டித்துக் கொள்ள,
‘இந்த நேரத்துல என்ன வெளி வேலை? அரும்பு போனை இவரு எதுக்கு வெச்சிருக்காரு’ என்று யோசித்தவாறு இருந்தாள்.
குலசேகரனிடம் கேட்கலாம் என்று ஒரு யோசனை வர, அவன் எண் இல்லாது போக தன் அத்தக்கருப்பனின் எண்ணிற்கு அழைத்தாள்.
“ஹலோ” காந்தக் குரலோடு அவன் மறுமுனையில் நிற்க, இவள் இங்கு மௌனமாய் நின்றாள்.
“ஹலோ யாரு?” மறுபடியும் அவன் கேட்டதில்,
[the_ad id=”6605″]
“யாரா இருந்தா பேசுவீங்க?” என்றாள் எடுத்ததும் இடக்காக.
“நீயா?”
“அது பேய் படம் மச்சா”
“ப்ச்.. கட்டக்காரி! என்ன இந்த நேரத்துல கூப்ட்ருக்க?” என்றான் எதாவது பிரச்சனையோ என்ற எண்ணத்தில்.
“ஏன் இந்த நேரத்துல வேற யாராச்சும் உங்களுக்கு கூப்ட்டு பேசுவாங்களா?” என இடக்கு மடக்காகவே பேசிக் கொண்டிருக்க, அவன் பதிலளிக்கும் முன்
“யாரு விக்ரமா இந்த நேரத்துல?” என்று முத்துலட்சுமியின் குரல் அருகில் கேட்க, அவன் பதில் என்னவாய் இருக்கும் என்று தெரிந்து கொள்ள மறுமுனையில் அரசிக்கு ஆர்வம் பிறந்தது.
“உங்க மருமக தான்” என்றான்.
அவனது அழுத்தமான உச்சரிப்பில் உள்ளுக்குள் புத்துணர்ச்சி பொங்க புதுரத்தம் பாய்ந்தோடியது அரசிக்கு.
“மருமகளா? கொடு நான் பேசுறேன்” என்று கைபேசியை வாங்க, லேசாய் படபடத்தது அரசிக்கு.
இதற்கும் சிறு வயதில் இருந்து முத்துலட்சுமியின் பின்னால் சுற்றித் திரிந்தவள் தான். விக்ரமனின் ஒற்றை அடையாளத்தால் வந்த விளைவு என்று எண்ணிக்கொண்டு அமைதி காக்க,
“தமிழு” என்று முத்துலட்சுமியின் குரல் ஒலிக்க,
“அ.. அத்தை நான் அரசி பேசுறேன்” என்றாள் மெல்ல.
“ஓ சின்ன மருமகளா. என்ன கண்ணு பண்ணுற? வெளியூர் போன வேலை எல்லாம் முடிஞ்சுதா? ஊருக்கு வந்துட்டியா” என்று வினவ
“இல்லைங் அத்தை இன்னும் ரெண்டு நாள் ஆகும் போல. எல்லாம் முடிஞ்சதும் தான் வர முடியும்” என்றாள்.
“ரெண்டு நாள் ஆகுமா? என்ன கண்ணு இப்படி சொல்லுற? விசேஷம் நடக்குற நேரத்துல நீ இல்லாம எப்படி. புதன் கிழமை காலைல குள்ள வந்திரப் பாரு சாமி”
“விசேசமா. என்ன விசேசங் அத்தை?”
“என்ன தெரியாததோட்டமே கேக்குற. எப்போப்பாரு விளையாட்டுதேன் உனக்கு” என்றுவிட்டு விக்ரமனைப் பார்த்து புன்னகைக்க, தன் அன்னையிடம் இருந்து கைபேசியை வாங்கியவன்,
“நீங்க போங்க மா. இவ கிட்ட பேசுனா இப்போதைக்கு போனை வெய்க்க மாட்டா” என்று அன்னையை அனுப்பிவிட்டு கைபேசியைக் காதிற்கு கொடுத்தான்.
“அத்தை என்ன சொல்லுறாங்க?”
“கருப்பராயன் கோவில்ல கெடாவெட்டு அதைய சொல்லுறாங்க. ஆமா நீ எதுக்கு கூப்பிட்ட?” என, அப்போது தான் நினைவு வந்தது அவனை அழைத்த காரணம்.
“குலசேகரன் மாமா நம்பர் வேணும். எனக்கு அனுப்பி விடுங்க” என
“ஓஹ்!” என்றான்
[the_ad id=”6605″]
“ஹ்ம்ம்” என்று அரசி அழைப்பை துண்டிக்கச் செல்ல,
“எப்போ வருவ?” என்றான்.
அவன் குரலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தாள் அரசி. இதுவரை இல்லாத ஏதோ ஒன்று அவன் அக ஆழத்திலிருந்து ஒலித்தது. தன் செம்பவள இதழ்கள் மலர,
“யாரோ நான் தூரமா போயிடோணும்னு வேண்டுனாங்க. இப்போ ஏன் எப்ப வருவைன்னு கேக்குறாங்கலாம்” என, மறுமுனையில் பேரமைதி.
“செவ்வாய் கிழமை நைட் இல்லைனா புதன் கிழமை காலைல வந்திருவேன்ங் மச்சா” என்றவள்,
“இல்ல நாளைக்கே கெளம்பி வரவா?” எனக் கேட்டாள். அவன் அமைதி மட்டுமே அவளை, அவனிடம் இப்படிக் கேட்க வைத்தது.
“இல்ல, வேலையை முடிச்சிட்டே வா” என்றுவிட்டு அழைப்பை துண்டித்துக் கொண்டான்.
ஏனோ உடனே ஊர் செல்ல வேண்டும் போல் இருந்தது. இதற்கு தான் கடந்த ஐந்து ஆண்டுகளில் யார் முகத்திலும் அவள் விழித்திருக்கவில்லை. மற்றவர்களோடு கைபேசியில் பேசினாலும் கூட விக்ரமனிடம் பேசுவதை முற்றிலுமாய் தவிர்ந்து வந்தாள். அவன் குரலுக்கு கூட தன் உறுதியை குலைந்துவிடும் சக்தி இருப்பதை அவள் நன்கு அறிவாள்.
குலசேகரனை அழைக்க, அவனும் அழைப்பை ஏற்கவில்லை. காலையில் பார்த்துக் கொள்வோம் என்று விட்டுவிட்டாள்.
அதற்கு மேல் அரசிக்கு நேரம் நகர்ந்த பாடில்லை. யன்னல் திரைச்சீலையை விலக்கி அந்த வானத்து சந்திரனில் அவள் மனம் கவர்ந்த விக்ரமனின் சித்திரத்தை தன் இமை பீலிகளால் தீட்டிக் கொண்டிருந்தாள்.
ஆற்றங்கரை ஓரத்தில் ஆலமரத்தின் வேர்கள் கீழே கிளை பரப்பியிருந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாள் அரும்பு.
அந்த விருஷம் உயர்ந்தோங்கி வளர்ந்திருக்க, அங்கு படிந்த காரிருளானது அவளையும் தன்னுள் மறைத்து வைத்துக் கொண்டது.
தனக்கென அத்தனை பேர் இருந்தும் யாருமில்லாதது போல் வெறுமை அவள் அகமெங்கும் பரவியிருந்தது. அவள் நம்பிக்கை வைத்தவர்கள் எல்லாம் அவளை ஏமாற்றிய நிலையில் எதுவும் பிடிக்கவில்லை யாரையும் பிடிக்கவில்லை.
எது வந்த போதும் நேற்று வரையில் வாழப்பிடிக்காது போகவில்லை. ஆனால் இன்று இப்படி ஒரு வாழ்க்கை தேவை தானா என்று அவளையே எண்ண வைத்திருந்தது அவள் தந்தையின் முடிவு.
அறையில் அடைந்து கிடந்தவள் அனைவரும் உறங்கியதும் வீட்டிலிருந்து மெல்ல வெளியேறி ஆற்றங்கரைக்கு வந்து அக அமைதி தேடிக் கொண்டிருக்கிறாள்.
அவள் சென்ற சிறிது நேரத்திலேயே மரகதம் விழித்துவிட, அறையில் அரும்பு இல்லாததைக் கண்டு பதற, அவளை தேடிக்கொண்டு தான் இந்நேரத்தில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார் முத்துச்சாமி. குலசேகரனையும் கைபேசியில் அழைத்து மரகதம் விடயத்தைக் கூற, அவன் ஒரு பக்கம் அரும்பை தேடிக் கொண்டிருக்கிறான்.
இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் எங்கோ வெறித்தபடி ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தாள் அரும்பு.
[the_ad id=”6605″]
நிமிடங்கள் நகர்ந்திருக்க, மேலிருந்த ஆலம் இலைகள் அடிக்கும் காற்றுக்கு சலசலக்க, கீழே உதிர்ந்த சருகுகள் அவன் காலடியில் சலசலக்க, தன் அருகில் ஆள் அரவம் உணர்த்து நிமிர்ந்து பார்த்தாள்.
குலசேகர பாண்டியன் தான் அவள் முன் நின்றிருந்தான்.
அவளைத் தேடிக் களைத்தவன் இறுதியாய் ஆற்றங்கரை சென்று பார்ப்போம் என உள்ளுணர்வு ஓங்க இங்கே வந்தான். அது வீண்போகவில்லை. அவளைக் கண்டதும் தான் சீரான மூச்சு வந்தது அவனுக்கு.
“இங்க என்ன பண்ணுற?”
மௌனம் அவளது பதிலாகிட,
“உன்னைய தான் கேக்குறேன் இங்க என்ன பண்ணுற?” என்று குரலை உயர்த்தியதும்,
“நான் என்ன பண்ணுனா உங்களுக்கு என்ன?” என்றாள் இப்போது.
“வீட்டுக்கு கெளம்பு”
“நான் அங்க போக மாட்டேன்”
“அப்பறம் எங்க போறதா உத்தேசம்”
“பரலோகம். ஏன் நீங்களும் வர்றீங்களா?”
“அறஞ்சேன்னு வெய். எப்போ பாத்தாலும் இதே நாயம் தான். ஏன் சந்தோசமா வாழோணும்னு எல்லாம் நெனைக்க மாட்டியா”
“உங்க கூட சந்தோசமா வாழோணும்னு தான் நெனைக்குறேன். அதெல்லாம் நடந்திருதா?” என்றவளுக்கு அதுவரை வராத அழுகை பொங்கி வர, பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.
அவளது பதிலில் அவனிடம் சிறிதொரு இறுக்கம் பிறக்க, சில நிமிடங்கள் இருவருக்கும் இடையில் மௌனம் நீடித்தது. கையிலிருந்த டார்ச் ஒலியில் அவளையே தான் பார்த்திருந்தான்.
“நீங்க எப்படியும் வந்து நிச்சயத்த நிறுத்தீருவீங்கனு கடைசி வரைக்கும் நம்புனேன். ஆனா நீங்க வந்தும் எதுவும் செய்யாம அமைதியா போய்ட்டீங்க. இப்போ வரைக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா” என்றாள் குரல் கம்ம.
அரும்பு அவனை ஏறிட, இப்போது அவன் அவளிடம் இருந்து தன் பார்வையை பிரித்து வேறுபுறம் செலுத்தினான்.
“ஏன் மாமா என்னைய உங்களுக்கு பிடிக்காதா? நான் உங்களுக்கு பொருத்தமா இல்லைன்னு நெனைக்குறீங்களா? அதான் விட்டது கெரகம்னு இன்னிக்கு நீங்க கோவிலுக்கு வந்தும் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சும் பேசாம நீங்க பாட்டுக்கு போய்ட்டீங்களா?”
அவனிடம் அவளுக்கு பதில் இல்லை.
கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தவள்,
“நான் உங்களையே சுத்தி சுத்தி வர்றதால என்ர அருமை உங்களுக்கு தெரியலையோட்டம். இன்னிக்கு இல்லைனாலும் என்னிக்காவது என்னைய புரிஞ்சுப்பீங்க. ஆனா அப்போ நான் இருப்பனான்னு தெரியாது” என்று சொல்லி முடித்து ஆற்றில் விழவும் அவன் திரும்பவும் சரியாய் இருந்தது.
அவளது இந்த எதிர்பாராத செயலில் பதற்றம் கொண்டு, மறுநொடியே ஆற்றில் குதித்து, மூழ்கித் தேடி சில நிமிடங்களில் தன் இரு கரங்களிலும் அவளை அள்ளி மேலே தூக்கி வருவதற்குள் அவன் இதயம் அதீத வேகத்தில் தாறுமாறாய் துடித்தது.
“அரும்பு.. அரும்பு..” என்றவன் குரல் அவளுக்கு தேனாய் இனிக்க, எங்கு தான் பேசினால் அவன் அழைப்பதை நிறுத்திவிடக் கூடும் என்பதாலேயே மயக்க நிலையில் இருப்பதாய் காட்டிக் கொண்டாள்.
அவளை மடியில் போட்டுக் கொண்டு உள்ளங்கைகள் பாதங்கள் என தேய்த்துவிட, அவன் துடிப்பில் கரைந்துதான் போனாள்.
“அரும்பு மாமாவ பாருடி” என அவன் பதறுவதைக் கண்டு, பாவம் பார்த்து மெல்ல இருமியபடி தனக்கு எதுவும் நேரவில்லை என்று காட்டிக்கொண்டாள். அருகில் கிடந்த டார்ச்சை எடுத்துவந்தவன் தூக்கிப் பிடித்து அவள் முகத்தை ஆராய, மெல்ல கண்திறப்பதுபோல் திறந்தாள்.
“பைத்தியமாடி உனக்கு” என அவளை எழுப்பி அமரவைக்க,
“என்னைய ஏன் காப்பாத்துன? உன்ர அக்கா மக அப்படியே ஆத்தோட போகட்டும்னு போயிருக்க வேண்டியது தானே” என்றாள் லேசாய் கண்கள் கலங்க.
அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் அவனையே அவனால் மன்னித்திருக்க முடியாது. அவளது இந்த செய்கையில் வேதனை கொண்டு,
“ஏன்டி இப்படி பண்ணுன” என உலுக்கினான்.
“எனக்கு என்ன நடந்தாலும் நீ இருப்பைங்கற நம்பிக்கைல தான் இத்தனை நாளும் இருந்தேன். ஏன் மாமா என்னைய மட்டும் கோவில்ல விட்டுட்டு வந்த?” என்றாள் பாவமாய்.
“அத்தன பேரு முன்னாடி என்னையே வேற என்ன செய்யச் சொல்லுற? சத்தம் போட்டு உங்கப்பன் மானத்தை வாங்க சொல்லுறியா? இதெல்லாம் நாலு சுவத்துக்குள்ள பேசவேண்டிய விஷயம். நான் சபையில பேசி, என்ர பொண்ணு நான் முடிவெடுக்குறேன் அதை கேக்க நீ ஆருடான்னு உங்கப்பனும் உன்ர அத்தையும் உன்ர அத்தை மவனும் உன்ர அப்பத்தாளும் இன்னும் ஒரு கூட்டமே இருக்கே. எல்லாரும் சேர்ந்து என்னைய அவமானப் படுத்தியிருந்தா நீ சந்தோசப் பட்டிருப்ப அப்படி தானே?”
“ஏன்டி உனக்காகவே அத்தன கஷ்டத்தையும் தாங்கிட்டு வாழ்ந்துட்டு இருக்குற என்ர அக்காளை ஒரு நிமிஷம் யோசிச்சு பாத்திருந்தா இப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பியா? உன்னைய காணோம்ன்னு பயந்து போய் அழுதுகிட்டே எனக்கு போன் பண்ணுது. நான் பாத்து கூட்டியாறன்னு சொல்லிட்டு உன்னைய தேடி வந்தேன். நீ ஆத்துல குதிக்குற அளவுக்கு அப்படி என்ன நடந்திருச்சு இப்போ?” என்றான் கோபமாய்.
“மாமா! நான் ஒன்னும் ஆத்துல குதிக்கல” என்றாள் உள்ளே சென்ற குரலில்.
“பின்ன சேத்துல குதிச்சயா”
“ப்ச்.. இல்ல மாமா எழுந்த வேகத்துல ஆலமர வேரு தட்டிவிட்டு பிடிமானம் இல்லாம ஆத்துல விழுந்துட்டேன். எனக்கு நீச்சல் தெரியுன்றத மறந்துட்டியா” என்றாள்.
“அப்பறம் ஏன்டி தண்ணிய குடிச்சவளோட்டம் மயங்கி கெடந்த”
“மயங்கி கெடந்தனால தான் உன்ர மடியில கெடந்தேன். இல்லன்னா என்ன ஏதுன்னு விசாரிக்காம நீ கொடுக்குற அறையில இந்நேரம் என்ர கன்னமில்ல பழுத்திருக்கும்” என்றதில் அவன் அதரங்கள் விரிய,
“அதானே நீ எல்லாம் என்னயோட்டம் அப்பாவிகளை ஆத்துல தள்ளிவிடுற ஆளாச்சே. ஆள நம்பவெச்சு ஏமாத்துறதுக்கு உங்க குடும்பத்துக்கு என்ன சொல்லியா தரோணும். அதெல்லாம் கைவந்த கலையாச்சே” என்றதுமே முகம் மாறியது அரும்பிற்கு.
“எங்கப்பாவ நம்பி நானும் எங்க அம்மாவும் தான் ஏமாந்து நிக்குறோம் மாமா. அந்த தேவராஜன் என்ர பக்கத்துல நிக்கும்போது எப்படி அருவருப்பா இருந்துச்சு தெரியுமா” என்றாள் விவரிக்க முடியா வலியோடு.
“ஏன் குளிக்காம கொள்ளாம வந்துட்டானா?” என்ற அவள் மாமனின் அறிவுப் பூர்வமான கேள்வியில் அவள் உடனே முகத்தை மூடி அழ,
“ப்ச்.. அழுவாதடி எலி” என்று அதட்ட,
“நான் எவ்வளவு வேதனைல பேசிகிட்டு இருக்குறேன் நீ விளயாட்டாவே பேசிகிட்டு இருக்குற. நீயிருக்கும் போது தேவராஜன் எல்லாம் என்னைய என்ன செஞ்சுட முடியும்ன்னுதேன் நெனைச்சேன். ஆனா இப்போ எனக்கு அந்த நம்பிக்கை போயிருச்சு மாமா. தெரியாம ஆத்துல விழுந்ததுக்கு தெரிஞ்சே விழுந்தா என்னன்னு தோணுது” என,
“இப்படியே பேசுனா என்ர கிட்ட அடிவாங்காம ஊடு போய் சேர மாட்ட நீ” என்றவன்,
“அந்த தேவராஜன் எல்லாம் ஒரு ஆளா டி? உங்கப்பன் தான் தங்கச்சி பாசத்துல கண்ண தொறந்துகிட்டே உன்னைய கொண்டு போய் பாழுங் கெணத்துல தள்ளுராருனா நான் விட்டிருவேனா? அறிவு வேண்டாம் உனக்கு. இப்பென்ன கலியாணமா முடிஞ்சு போச்சு? உறுதி பேசுனதுக்கெல்லாம் ஊட்டவிட்டு வந்து இங்க உக்காந்திருக்க. எங்கக்கா பாவம் அங்க உன்னைய எதிர்பாத்து வாசலையே பாத்துக்கிட்டு இருக்கும். கெளம்பு மொதல்ல” என்று சொல்ல மறுப்பாய் தலையசைத்தாள்.
கண்கள் சிவந்து முகமெலாம் சிவந்து நீரில் விழுந்ததில் தேகம் குளிர லேசாய் நடுங்கிக் கொண்டு இருந்தவளை பார்க்கவே பாவமாய் இருந்தது.
ஆலங் கூட்டில் அடைக்கலம் தேடிய பறவைகள் எல்லாம் அவர்கள் பேசுவதைக் கேட்டிருக்க, அடைக்கலம் தர வேண்டியவனோ அமைதியாய் இருப்பது அரும்பின் அகத்தில் கனத்தைக் கூட்டியது.
“கெளம்பலாம் அரும்பு. ஈரத் துணியோட இருந்தா ஜுரம் பிடிச்சிடப் போகுது வா” என்று எழ,
“எனக்கு ஒரு முடிவு தெரியாம நான் இங்கிருந்து வரமாட்டேன் மாமா” என்றாள் சட்டமாய்.
“என்ன தெரியோனும் உனக்கு இப்போ”
“எனக்கு என்ன தெரியோனும்னு உனக்கே நல்லா தெரியுமே”
“இது என்னிக்கும் நடக்காது அரும்பு”
“ஏன் நடக்காது” என்றதில் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“நடக்காதுனா நடக்காது தான்”
“அதெல்லாம் நம்ம நெனச்சா நடக்கும். நான் நெனச்சிட்டேன் நீ தான் நெனைக்க மாட்டிங்குற. அப்பாகிட்ட உன்னைய தான் பிடிச்சிருக்குன்னு சொன்னேன். அதான் உடனே அந்த தேவாங்கோட நிச்சயத்தை பண்ணிட்டாரு” என்றதில் அதிர்ந்துபோய் அவளைப் பார்த்தான்.
தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு,
“நானே உனக்கு நல்ல பையனா பாத்து கலியாணம் பண்ணி வெய்க்குறேன். இந்த பேச்சை இதோட விடு” என்றதில் கொந்தளித்துப் போனாள் அரும்பு.
“என்ரகிட்ட இனி பேசமாட்டேன்னு சொல்லு நான் விட்டுர்றேன். என்னைய பாக்காம இருந்திடுவைன்னு சொல்லு விட்டுர்றேன். ஏன் என்னைய உனக்கு பிடிக்காதுன்னு சொல்லு இப்போவே இந்த நிமிஷமே எல்லார்த்தையும் விட்டுர்றேன்” என்றாள் ஆக்ரோசமாய்.
பதிலளிக்காது அவளைக் கூர்ந்து பார்க்க,
“முடியாதல்லோ அப்போ என்ரனாலையும் முடியாது. புரிஞ்சுக்கோ மாமா” என்றதும் கையை நீட்டி தடுத்தவன்,
“என்னடி புரிஞ்சுக்கோணும். உன்ர படிப்பென்ன என்ர படிப்பென்ன? என்ர படிப்பு என்ன.. அதான் ஒன்னும் இல்லையே. நான் வளர்ந்த சூழ்நிலைல ஒரு வாய் கஞ்சி கெடைக்குறத்தே பெரிய விசயமா இருந்துது. எங்கக்கா மட்டும் இல்லைனா என்னைக்கோ நான் இல்லாம போயிருப்பேன். பதினாரு வயசுல எங்கக்காளையும் விட்டுட்டு நான் ஒத்தையா நின்ன நேரத்துல விக்ரமனும் அவங்க அப்பாவும் இல்லைனா இன்னிக்கு நீ பாக்குற இந்த குலசேகரன் இருந்திருக்க மாட்டான்” என்ற அவன் வேகத்தில் அரும்பு அமைதியானாள்.
அரும்பை தேடிக்கொண்டு வந்த முத்துச்சாமியும் குலசேகரனின் இந்த பேச்சைக் கேட்டு ஆலமரத்தின் பின்னால் வந்தார்.
“பொறந்ததுல இருந்தே ஒரு வாய் கஞ்சிக்காக உங்க அப்பத்தா காட்டுல ஒழச்சு ஒழச்சு என்ர வாழ்க்கையே வீணாப் போச்சு. உங்கப்பன் நெனச்சிருந்தா என்னைய படிக்க வெச்சிருக்க முடியும். ஆனா அந்த மனுஷன் அதைய செய்யல. என்ரனால தான் விருப்பப்பட்டபடி வாழ முடியலை நீயாச்சும் நல்லா இருக்கோணும்னு உனக்கு ஒவ்வொன்னையும் பாத்து பாத்து செஞ்சேன். நீ விருப்பப்பட்டதை எல்லாம் என்ர சக்திக்கு தகுந்ததோட்டம் நெறைவேத்தி வெச்சேன்” என்றதும் அரும்பின் கண்களில் மீண்டும் ஓர் வெள்ளப் பெருக்கு.
“சிறுசுல இருந்து நான் பாத்து வளந்தவ நீ. நீயும் என்ர அக்காளும் தான் என்ர உலகமே. நான் இதுவரைக்கும் உனக்கு ஒரு பாதுகாப்பு வளையமா தான் இருக்குறேன். நீ சொல்லுறதோட்டம் உன்னைய நான் கற்பனை பண்ணிக்கூட பாத்ததில்ல. எந்த இடத்துல உன்ர மனசு கெடுறதோட்டம் நான் நடந்தேன்னு தெரியல. நீ துடுக்கு தனமா பேசுறதை எல்லாம் சின்ன பொண்ணு தானேன்னு கண்டுக்காம போனது தான் தப்புன்னு நெனைக்குறேன்” என்றதும்,
கண்களை அழுந்த துடைத்துக் கொண்டவள்,
“முடிவா இப்போ என்ன தான் சொல்ல வர்ற மாமா” என்றிருந்தாள்.
“உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் நான் தான் மொதோ ஆளா வந்து நிப்பேன். அதோட்டம் உனக்கு என்ன விஷேசம்னாலும் நான் தான் முன்ன நின்னு செய்வேன். இதெல்லாம் தாய்மாமன் என்ர கடமை. அதைய ஆருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு தர்றதும் என்ர கடமை. அதே நேரத்துல நீ நெனைக்குறது என்னிக்கும் நடக்காது” என முடிவாய் முடித்துவிட,
“கெளம்பலாம்” என்று எழுந்துகொண்டாள் அரும்பு.
இருவரும் ஆலமரத்தை சுற்றிக் கொண்டு வர, அங்கிருந்த முத்துச்சாமியைக் கண்டு திடுக்கிட்டனர்.
வாசம் வீசும்..!