அங்கே கிரியின் வீட்டிலோ, கமலி வீட்டு ஆட்கள் வருவதை, வரும் காரணத்தை இவன் வசந்தாவிடம் சொல்லிவிட, இதையெல்லாம் கேட்டபடி குழந்தைகளோடு இருந்த ராஜி, விளையாட்டு பொருட்களால் நிறைந்து கிடந்த இடத்தை அவசரமாய் சுத்தம் செய்து வைத்தாள். வசந்தவோ “அவங்க சாப்பிட எதுவும் ரெடி பண்ணவடா!” என கேட்க
கமலி இங்கே வராமல் அவர்கள் இங்கே கை நனைக்க போவதில்லை என மனம் கூற “காபி இல்லை ஜீஸ், ஸ்னாக்ஸ் இது மட்டும் போதும்” என கிரி கூறிட, அவரும் சமையலறைக்கு சென்றுவிட்டார்.
சொன்னது போலவே இருபது நிமிடங்களில் வந்தனர் காரில். கேட்டிற்கே வந்து வரவேற்றான் கிரி. இந்த வீடு அவர்களுக்கு புது வீடு தானே. ஆராய்ந்தபடியே வந்தனர்.
இதற்கு முன்பு இருந்த வீடு, நன்றாக இருக்கும் தான். பெரிது தான். முழு இடத்திற்கும் வீடு மட்டுமே இருக்கும். ஆனால் இந்த வீடோ பெரிய கேட்டுடன், மதில் சுவர்களுக்கு நடுவில், மரம், செடி கொடிகளால் சுழப்பட்டு, நடுவில் காம்போக்ட்டாக, கச்சிதமாக இருந்தது. இப்படி ஒரு வீட்டை கமலி குடும்பம் எதிர்பார்க்கவே இல்லை.
Advertisement
வெளிப்புற தோற்றமே ஈர்த்தது எனில் உட் புற தோற்றம் இன்னும் பிடித்து போனது. இவர்களை கண்டதும், ராஜி சமையலறைக்குள் புகுந்து கொண்டாள். வாங்க என வரவேற்றார் வசந்தா. சமையலறைக்கு சென்ற ராஜியோ ஜூஸ், ஸ்னாக்ஸ் எடுத்து வந்து வசந்தாவின் கைகளில் திணித்துவிட்டு சென்றாள். வசந்தா தான் எல்லோருக்கும் கொடுத்தார்.
ஆரஞ்சு ஜூஸ் கிரியின் தொண்டைக்கு இதமாய் இருக்க முழுதாய் குடித்து விட்டு வைத்தான்.
பிரச்சனைகள் எதையும் தூண்டி துருவாமல், அனைவரது முகம் பார்த்து பேசுவதிலேயே கமலியின் குடும்பம் நன்மதிப்பை பெற்றுவிட்டது ராஜியிடமும், வசந்தாவிடமும்.
Advertisement
மல்லியும், செல்வமும், தட்டொன்றில் பத்திரக்கை, பழம் என நிறைத்து கிரியின் பக்கமாய் நீட்டி, “நாளைக்கு மறுநாள் காலை எட்டறை டூ ஒன்பதரை வளைகாப்பு. கண்டிப்பா வந்திடனும்” என கூறி, சம்மந்தி, ராஜி என இருவரையும் அழைத்து, அவர்களையும் தட்டை பிடிக்க வைத்து “பிள்ளைகளை கூட்டிட்டு நீங்களும் வந்துடனும்..” என செல்வமும், மல்லியும் ஒன்றாகவே கூறினார்.
Advertisement
“கண்டிப்பா வந்திடனும்” என கர்ணாவும் அழைத்திட, திகைத்து நிமிர்ந்த ராஜியும், ‘சரியென தலையசைத்தாள்’. ‘வந்திடுறோம் சம்மந்தி’ என தலையசைத்து வைத்தார் வசந்தா. பின் சிறிது அளவளாவிய பின் அவர்களும் கிளம்பிவிட்டனர்.
அவர்களை அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் உள்ளே வந்தவனிடம், “விசேஷத்துக்கு நீ மட்டும் போயிட்டு வந்திடு கிரி” என வசந்தா துவங்கிட
“ஏன்?” என்றான் ஒற்றை வரியில்.
Advertisement
“நான் என்ன வாழ்ந்து கிழிச்சிட்டேன் கிரி. நீ போயிட்டு வந்திடு.. நான் வரலை” என்றார் வசந்தா. கிரி அமைதியாய் ராஜியை பார்க்க “அவரில்லாமல் நானும் வர முடியாது” என இருவரும் கமலி குடும்பத்திடம் ஒட்ட முடியாமல் விலகி நின்றிட
“ம்.. மகன் கட்டுற கடைக்கே நீங்களாம் வர மாட்டீங்க. மகன் கட்டிட்டு வந்த குடும்பத்து விசேஷத்துக்கா வந்து நிக்க போறீங்க” இயலாமையுடன் இதழ் வளைத்து “விசேஷத்துக்கு நான் போய்கிறேன்” என ஒரே வார்த்தையில் முடித்துவிட்டான். அந்த வார்த்தைகள் அவர்களை சுட்டதோ என்னவோ, வசந்தாவும், ராஜியும் கிரியை நிமிர்ந்தே பார்க்கவில்லை.
அதன் பின் எப்போதும் போல மொட்டைமாடிக்கு, பாய் தலையணையோடு செல்ல இருந்தவனை தடுத்து கிரி என அழைத்தார் வசந்தா. நின்று திரும்பியவனிடம் “இதென்னடா புதுசா மாடியில் தூங்குற பழக்கம்” “காய்ச்சல், வாந்தினு வச்சிகிட்டு, ஊத காத்துல தூங்காம, கீழேயே தூங்குடா! இன்னும் சாப்பிட கூட இல்லை நீ” என கூற
“ப்ச்.. கொஞ்சம் போன் பேச வேண்டிருக்கும்மா, வந்திடுவேன்” என சொல்லிவிட்டு மாடிக்கு சென்றுவிட்டான்.
ஆனால் போனில் எல்லாம் பேசவில்லை இவன். வழக்கம் போல் பாயை விரித்து அதில் படுத்து கொண்டவன், மனதை அமைதி கொள்ள வைக்கும் சில பாடல்களை ஓட விட்டான்.
சுற்றி இருந்த மரங்களில் இருந்து வந்த சலசலவென்ற சத்தமும், காலையில் மலர்ந்து பறிக்க ஆளில்லாமல் இப்போதும் வாசம் வீசிக்கொண்டிருந்த மல்லிகையின் மனமும், இதமான பாடல் வரிகளும். அவன் மனதை அமைதி கொள்ள வைத்தது.
உடல் ஓய்ந்து கிடந்தாலும், எண்ணங்கள் ஏனோ ஜெட் வேகத்தில் பயணித்து கொண்டிருந்தது. காலையில் கடைக்கு வந்ததில் இருந்து இதோ இப்போது தன்னிடம் போனில் பேசியது வரை ஒவ்வொன்றாய் ஓடியது அவன் மனதினுள்.
அவளது கடையை பார்த்து பூரிப்பை வெளிக்காட்டிய முகம், தன்னை விடாமல் பார்த்து வெட்கம் கொண்ட முகம், ராமிடம் தைரியமாய் கேள்வி கேட்ட முகம், இறுதியில் தன்னிடம் கோபம் கொண்ட முகம், இதோ போனில் அக்கறையோடு பேச துவங்கி எப்படி முடிப்பது என தெரியாமல் தவித்த முகம் என கிரியை ஒரு வழி செய்து கொண்டிருந்தாள் கமலி.
இறுதியில் துரை வந்து செய்து விட்டு போன ரகளைகளும் நினைவில் வந்து போக, “வேற ஒரு பொண்ணோட சகவாசம் வேணாம்டா” என அவனை எச்சரித்த குரல் மீண்டும் அவன் காதுகளை அடைந்திட, வாய் கொள்ளா சிரிப்பு அவனிடம்.
“இவள் இருக்கும் போது இன்னும் ஒரு பொண்ணா!” அப்படி நடந்தால் என்னாகும், கமலி என்ன செய்வாள் என நினைத்து பார்க்க
‘நீ நினைத்து பார்க்க கூட என்னோட பர்மிஷன் வேணுமாக்கும்’ என்பதை போல கமலியின் வெஸ்பா கிரி வீட்டை அடைந்திருந்தது.
டூவிலர் வந்து நிற்கும் சத்தமும், கேட் திறக்கும் சத்தமும் ஓடிக்கொண்டிருந்த பாடலை தாண்டி இவனுக்கு கேட்டிட, மெதுவாய் எழுந்து முன்புற மாடி பகுதிக்கு வந்து நின்றான். பார்த்திருந்தவனின் விழிகள் அதிசயத்தில் விரிந்தது. கூடவே இதழ்களும் ‘வந்துட்டா’ என உடல் நிலையை மீறி குதுகலமானான் கிரி.
லன்ச் பேக் போல ஒரு பேக்கை கையில் ஏந்தியபடி கேட்டை திறந்து, நடக்கவா வேண்டாமா? என அடி மேல் அடி வைத்து உள்ளே வந்து கொண்டிருந்தாள் கமலி. வீட்டு வாசலை நோக்கி இவள் நடப்பதை பார்த்து, உதட்டிற்குள் சிரிப்பை அடக்கியபடி, உதடு குவித்து அழுத்தமாய் காற்றை வெளியே தள்ள, அது அவளை விசிலடித்து அழைத்தது.
சில நொடிகள் கடந்த பின்னும் அவளும் அவனும் பார்த்த வண்ணமே நின்றிருந்தனர். பின் ‘இந்த பக்கமா வா’ என்பது போல் சுவற்றில் இருந்த வலது கையை அசைத்து இவன் வழிகாட்ட, அவன் சொன்ன திசைக்கு நடந்து, இவளும் அப்படியே மாடியேறி துவங்கிவிட்டாள்.
மாடியேறி வருகையிலேயே ஏதோ பாடலின் பேக்கிரவுண்ட் மியூசிக் ஓடிக்கொண்டிருக்க, ‘இது என்ன மியுசிக்.. பாட்டை கண்டு பிடிக்க முடியலையே.. எங்கையும் கேட்ட மாதிரியும் இல்லை’ ‘என்ன பாட்டா இருக்கும்’ என யோசித்தபடியே இவள் மாடியேறி வர, பாடல் வரிகள் பாட துவங்கி விட்டன.
“அம்மம்மா பொண்ணா இவ
அப்பப்பா பொல்…லாதவ
அம்மம்மா பொண்ணா… இவ
அப்பப்பா பொல்..லாதவ
ஆ..ழமா..னவ…. துணியை எடுத்து
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ.”.
என்ற பாடல் வரிகளில் விழிகள் தெறிக்க, வாயில் கை வைத்து இவள் அப்படியே நின்றுவிட, பாடல் வரிகளை அப்போது தான் உள் வாங்கிய கிரி பாயின் மேல் வைத்திருந்த போனை இரண்டெட்டில் நெருங்கி அதை அணைத்து வைத்திட, இவளோ முறைத்து நின்றாள்.
இவ்ளோ நேரம் நல்லா தானா பாட்டு ஓடுச்சு, இந்த பாட்டு எப்போ இருந்து ஓடுச்சோ! என வலது கை நெற்றியில் ஆரம்பித்து தாடை வரை அழுத்தமாய் இவன் தேய்த்து கொள்ள,
‘ரொம்ப பண்ணாதடா.. உம் பொண்டாட்டிக்கு பொருத்தமான பாட்டு தான், பொண்ணா இவ’ என கவுண்டர் கொடுத்தது அவன் மூளை. ‘சும்மா இர்ரா..’ என மனம் அடக்கி வைத்தது மூளையை.
ஏனோ இவள் வரும் போதெல்லாம் மனதினை பிரதிபலிப்பது போல் ஒலித்து வைத்தது பாடல்வரிகள். அன்றாவது கேட்கும்படி இருந்தது பாடல். ஆனால் இன்று, அதுவும் இப்போது பாடிய பாடல் வரிகள், ‘ஐய்யோ’ என்று தான் இருந்தது அவனுக்கு.
அவள் வருவதற்கு முன்பு, அவள் வந்த பிறகு என இருவேறு மனநிலைகளை இன்ஸ்டன்டாக உருவாக்கி வைத்திருந்தது அந்த பாடல் வரிகள்.
அவன் மனநிலையை ஒலிக்கும் பாடல்வரிகளில் கிரிக்கு சந்தோஷம் என்றால் இவளுக்கோ ஏக கடுப்பாக இருந்தது. “நான் வரும் போது வேணும்னே இந்த மாதிரி பாட்டை போட்டு விடுறீங்களா! இல்லை ஏதேச்சையா நடக்குதா!?” என, அதிர்ச்சி என்ற நிலை போய் இவனை என்ன தான் செய்வது என ஏக கடுப்போடு நின்றிருந்தாள்.