மெய்யெனக் கொள்வாய் – 16
அத்தியாயம் – 16
கருணாகரன் தன் வீட்டில் காலை செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கீர்த்தி, அத்வைத் இருவரும் கொடுத்த பேட்டி ஒளிபரப்பாகியது.
“அத்வைத்” என்று சத்தமாக அழைத்தார்.
அத்வைத் வரவும் தொலைக்காட்சியைக் காமித்து “என்ன இது?” எனக் கேட்டார்.
Advertisement
“ம்ச். ஸ்ரீகீர்த்தி கிட்டே பேசப் போனேன். அங்கே மீடியா பார்த்துட்டாங்க. வேறே வழியில்லாமல் பதில் சொன்னேன்.” என்றான்.
“என்னோட பேனர்லே நம்ம ஸ்டார் டைரக்டர் படம் பண்ண ஒத்துகிட்டு இருக்கார். அதில் அவர் இந்த பொண்ணு நடிக்கணும்னு கேட்டு இருக்கார். அதுக்குத் தான் பெரிய பிளான் போட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் எல்லாம் சக்ஸஸ் ஆகிடும். என் கிட்டே சொல்லியிருந்தா, அதுக்கு அக்ரீமன்ட் போடும் போதே உன் படத்துக்கும் சேர்த்து போட்டு இருப்பேனே. சரி விடு. இன்னும் ரெண்டு மூணு நாளில் எல்லாம் முடிவுக்கு வந்திடும். அப்போ உன் ஆசையும் நிறைவேறிடும்” என்றார் கருணாகரன்.
“அது மீடியாக்கு சொன்னது. ஆனால் நான் அவங்க கிட்டே ப்ரபோஸ் பண்ணினேன்” எனக் கூற, கருணாகரன் திடுக்கிட்டார்.
Advertisement
“டேய் அறிவு இருக்கா? அவங்க அம்மா பேசின ஆடியோ கேட்டே தானே. அப்படிப்பட்டவளோட பொண்ணு தான் உனக்கு வேணுமா? இது எல்லாம் குடும்பம் நடத்தச் சரிப்படாது. படத்தில் நடிக்க வைக்கிறதோட நிறுத்திக்கோ.” என்றார் கருணாகரன்.
Advertisement
“அந்த ஆடியோவே உண்மை இல்லைனு கீர்த்தி பேட்டி கொடுத்து இருக்காங்களே?” என அத்வைத் கேட்டான்.
“ஆடியோவ வெளிலே கொடுத்ததே நான் தான். அது ஒரிஜினலா இல்லையான்னு எனக்குத் தெரியாதா?”
“அப்போ அவங்க யார் கிட்டே இதச் சொன்னாங்கன்னும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே. அதையும் சொல்ல வேண்டியது தானே. இவங்கள மட்டும் பேர் குறிப்பிட்டு ஏன் சொன்னீங்க?”
Advertisement
அத்வைத் இந்த கேள்வி கேட்கும்போதே கருணாகரனின் மனைவியும் அந்த இடத்திற்கு வந்தார்.
“அது” என்று தயங்கிய கருணாகரன் “என் ஃப்ரெண்ட் ஒருத்தர் கிட்டே இப்படி பேசியிருக்காங்க. ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னாடி நடந்த விஷயம் இது. அந்த பொண்ணு ஸ்ரீகீர்த்தி ரொம்ப ஒழுங்கு மாதிரி பேசவும் அவர் தான் இந்த ஆடியோவ எனக்கு அனுப்பி நீங்க உண்மையச் சொல்லுங்கன்னு சொன்னார்.” என்றார்.
“ஓ. அப்படி அவர் நல்லவரா இருந்தால் அன்றைக்கே வெளியிலே சொல்லியிருக்கலாம். இல்லை போலீஸ் கம்ப்ளைண்ட் கூட கொடுத்து இருக்கலாமே. முதலில் இதை ரெகார்ட் பண்ணியிருக்கார்னா அவர் மட்டும் ஸ்ரீராமர் அவதாரமா என்ன?”
“அது அப்படியில்லை” என மழுப்பினார்.
“அப்பா, நான் கீர்த்தி கிட்டே ப்ரபோஸ் பண்ணினதுக்கு இந்த கேள்வி எல்லாம் அவங்க என்னைக் கேட்டாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. நீங்க பதில் சொல்லுங்க.” என்றான் அத்வைத்.
அப்போது கருணாகரனின் மனைவி “அவன் கேக்ககிறது சரிதான. நீங்க இதில் நேரடியா சம்பந்தப்படாத போது எதுக்காக ஆடியோ வெளிலே கொடுத்தீங்க. அதுவும் ஆடியோவ வெளியே விட்டுட்டு, அதுக்கு அப்புறம் கவுன்சில்லே தான் நேரடியா புகார் கொடுக்கணும்னு சட்டம் போடறீங்க. இது எந்த விதத்தில் நியாயம்? யாரைக் காப்பாத்த ட்ரை பண்ணறீங்க?” என்றார்.
அத்வைத் தன் அன்னையை ஆச்சரியமாகப் பார்க்க, அவரோ கருணாகரனை நம்பாத தன்மையில் பார்த்துக் கொண்டிருந்தார்.
இருவரின் பார்வையைக் கவனித்த கருணாகரன் சட்டென்று “சரி. இப்போ என்ன? அந்த பொண்ணோட அம்மா எப்படி இருந்தால் என்ன? கீர்த்தி உன்னோட ப்ரபோஸலுக்கு சம்மதம் சொல்ல வைக்கிறேன் சரிதானே?” என்றார்.
அத்வைத் “அது எப்படிப்பா? அவங்க அம்மா பேர் களங்கப்படுதினது நீங்க. உங்க வார்த்தையை கீர்த்தி கேப்பாங்கன்னு சொல்றீங்க?” எனக் கேட்டான்.
“அது எல்லாம் பெரிய விஷயமா என்ன? இந்த ஆடியோ மேட்டர நான் அப்படியே மாத்திடறேன்னு சொன்னா சம்மதிக்கப் போறா.“ என்றார்.
“அது எப்படி முடியும்?” என கருணாகரனின் மனைவி கேட்க, “அதை நான் பார்த்துக்கறேன். இதுக்கு எல்லாம் ஆட்கள் இருக்காங்க. என்ன பேசினாங்களோ அதை வெட்டி ஒட்டி எடுத்துத் தர ஆள் இருக்கு” என்றார் கருணாகரன்.
“அப்போ இதுவும் அப்படித் தான் செய்தீங்களா?” எனக் கேட்டான் அத்வைத்.
“டேய், இது நான் பண்ணலடா. என் ஃப்ரெண்ட் அனுப்பினதை அப்படியே ஃபார்வார்டு பண்னினேன் அவ்வளவுதான்” என படப்படத்தார்.
அத்வைத்திற்கு ஏற்கனவே தன் தந்தை மீதுதான் தவறு என்று சந்தேகம். இப்போது முடிவே செய்துவிட்டான். ஆனால் இதற்கு மேல் அவரிடம் துருவினால் சுதாரித்து விடுவார் என்று உணர்ந்து கொண்டான்.
பின் “சரி, என்ன பண்ணுவீங்களோ தெரியாது? கீர்த்தி என்னோட விஷயத்துக்கு சம்மதம் சொல்லணும். அது உங்க பொறுப்பு.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.
கருணாகரனின் மனைவியும் அவன் பின்னோடு செல்ல, கருணாகரன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். பின் சில யோசனைகள் செய்துவிட்டு கீர்த்தியைப் பார்க்க வேண்டும் என்று அவள் போனிற்கு மெசேஜ் செய்தார்.
அதற்குள் அத்வைத் தன் தந்தையோடு பேசியதை எல்லாம் கீர்த்திக்கு மெசேஜ் அனுப்பினான். எப்போது வேண்டுமானாலும் அவளைச் சந்திக்க கருணாகரன் வரலாம் எனவும் தகவல் கூறினான்.
கருணாகரனின் மனைவி தன் மகனின் அறைக்குச் சென்று கதவை கவனமாகத் தாளிட்டு விட்டுப் பேசினார்.
“அத்வைத், என்ன இது? டிவிலே ஒண்ணு சொல்றாங்க. நீ ஒண்ணு சொல்ற. என்ன நடக்குது.?” எனக் கேட்டார்.
“எதுவுமே உண்மை இல்லைமா. எல்லாம் டிராமா” என்றான் அத்வைத்.
“எதுக்கு இந்த டிராமா?”
“சொல்றேன். முதலில் நீ சொல்லு. அந்த ஆடியோ வெளியில் வந்து நாலு நாள் ஆச்சு. இது வரை அப்பாகிட்டே எதுவும் கேட்கலை. இப்போ என்னவோ கேள்வி எல்லாம் கேக்கற? அதுவும் லா பாயிண்ட்டா கேக்கற. எப்படி?”
“லாயர பார்த்துட்டு வந்ததால் லா பாயிண்ட்டா பேசறேன் போல.”
“என்னம்மா சொல்ற? “
“ம். இன்னிக்கு ஒரு லாயர் கிளப்லே என்னை மீட் பண்ணினார். அவர் பேர் பிரபஞ்சன்.” என்றவர். பிரபஞ்சன் மற்றும் கருணாகரன் மனைவி இருவருக்கும் இடையேயான உரையாடலை நினைத்துப் பார்த்தார்
தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பின் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தான் பிரபஞ்சன்.
“மேடம், சத்யவதி மேடம் உங்க கணவர் மேலே கேஸ் கொடுக்கப் போறாங்க” என்று பிரபஞ்சன் கூறினான்.
“அவங்க மேலே தப்பு வச்சிட்டு எந்த தைரியத்தில் கேஸ் கொடுக்காறாங்க”
“தப்பு செய்திருந்தா தானே மேடம் பயம் இருக்கும்”
“சரி. அதே தானே என் கணவர் தப்பு செய்திருந்தா தானே பயப்படனும். அவர் மேல் தப்பு இருக்கும்னு எனக்குத் தோணலை” என்றார் கருணாகரனின் மனைவி.
“இருக்கட்டும் மேடம். உங்களுக்கு சத்யவதி மேடம இந்த பிரச்சினைக்கு முன்னாடியே தெரியுமா?” எனக் கேட்டான் பிரபஞ்சன்.
“ம். தெரியும்”
“எப்போலர்ந்து ?”
“என் அப்பா டிராமா ட்ரூப் வச்சிருந்தாங்க. அப்போலர்ந்து தெரியும். இன்ஃபாக்ட் என் கல்யாணத்துக்குக் கூட வந்திருக்காங்க”
“அவங்க உங்க ஃபேமிலி கூட பல வருஷ பழக்கம் தான் இல்லையா. தப்பான யாரும் உங்க அப்பா டிராமா ட்ரூப்லே தொடர்ந்து நீடிச்சு இருந்திருக்க முடியுமா?” என்று பிரபஞ்சன் கேட்க கருணாகரன் மனைவி யோசித்தார்.
கருணாகரன் மனைவிக்கு தன் தந்தையைப் பற்றி நன்றாகத் தெரியும். அவர் ஒழுக்கம் என்பதற்கான வரைமுறைகளை துளி கூட விட்டுக் கொடுக்காதவர். அத்தனை எளிதில் அவரிடத்தில் தப்பு செய்து விட முடியாது.
பிரபஞ்சன் கருணாகரன் மனைவியின் முகமாற்றங்களையே கவனித்தான். அவர் யோசிப்பது புரிந்து,
“ஓகே. உங்க கணவர் யாருன்னு அவங்களுக்குத் தெரியும் தானே” எனக் கேட்டான்.
“ஆமாம்” என்றார்.
“உங்க கணவருக்கும் அவங்களைத் தெரிஞ்சிருக்குமே “
“இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.”
“ஓகே. இவ்ளோ நெருங்கிய வட்டதில் இருந்து கொண்டு, சத்யவதி மேடம் எப்படி அவர் கிட்டே அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசியிருப்பாங்க.?” என்றான்.
கருணாகரன் மனைவியின் முகம் மாறியது. “ஆனால் இவர் கிட்டே பேசினதா எங்கேயும் இவர் சொல்லலையே?” என்றார்.
“அப்போ உங்க கணவர் இதில் தலையிட வேண்டிய அவசியம் என்ன? அவருக்கு வேண்டியவருக்காக என்றாலும் சத்யா மேடம் பேரைச் சொன்னவர், அந்த நபரையும் வெளியில் சொல்லியிருக்கலாமே. தவறு அவர் நண்பர் மேல் இல்லாத பட்சத்தில் அவரே இதில் இறங்கியிருக்கலாமே” என்றான் பிரபஞ்சன்.
கருணாகரன் மனைவி பிரபஞ்சனிடம் “நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கறீங்க? எனக் கேட்டார்.
ஒரு நிமிடம் மூகச்செடுத்து விட்டு “நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைத்த பின் உங்களுக்கு என்ன தோணுதோ செய்ங்க” என முடித்தான்.
“என்னை பர்ப்பசா சந்திச்சு இவ்ளோ தூரம் பேசணும்னா, உங்களுக்குள்ளே ஏதோ ஒரு திட்டம் இருக்கணும். அது என்னன்னு தெரிஞ்சா தான் என்னாலே என்ன செய்ய முடியும்னு நான் பார்க்கணும்” என்றார்.
“எனக்கு திட்டம் எல்லாம் எதுவும் இல்லை. மீ டூ வால் பாதிக்கப்படுற ஆண்களுக்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம்னு உங்கள் கணவர் சொன்னார். அது சதவீதத்தில் பார்த்தால் ரொம்பவே குறைவு தான். சத்யவதி மேல் சொன்ன குற்றச்சாட்டு எல்லாம் பொய்ன்னு இந்த இண்டஸ்ட்ரிலே இருக்கிற நிறைய பேருக்குத் தெரியும். யாரும் அவங்களுக்கு நேரடியா சப்போர்ட் பண்ணலை. ஆனால் யார் தப்பு செய்திருக்காங்களோ அவங்களைக் காப்பாற்ற ஒரு கூட்டமே வேலை செஞ்சுட்டு இருக்காங்க. இதை உங்களை மாதிரி பெண்கள் உணரணும்னு தான் உங்க கிட்டே பேச வந்தேன்.” என்று முடித்தான் பிரபஞ்சன்.
பிரபஞ்சன் அதற்கு மேல் அங்கிருக்காமல் கிளம்பிவிட்டான். இவை எல்லாம் முதல் நாள் மாலையில் நடந்து இருந்தது. கருணாகரனின் மனைவி இரவு முழுதும் இதே சிந்தனையில் இருந்தார்.
காலையில் தன் மகனைப் பற்றி வந்த செய்தி அறிந்து திகைத்தார். அதற்குள் அப்பா, மகன் வாக்குவாதம் நடக்க அதில் தன் நிலைப்பாட்டைப் பற்றியும் பேசிவிட்டு இதோ தன் மகனின் அறைக்குள் நிற்கிறார்.
அத்வைத்தின் அன்னை முழுதும் கூறி முடிக்கவும், அத்வைத் “ம். நம்ம குடும்பத்துக்கு இனி கொஞ்ச காலம் கெட்ட பெயர் தான்” என்றான்.
“என்னடா சொல்ற? அப்பா மேலே தான் தப்புன்னு சொல்றியா? அவர் ஃப்ரெண்ட் பண்ணின தப்புக்கு இவர் என்னடா செய்வார்?” எனக் கேட்டார்.
“மா, லாயர் சர் சொன்னது யோசிச்சுப் பாரு. யாருக்காகவோ அப்பா ஏன் சத்யவதி மேலே பழி சொல்லணும்? சம்பந்தப்பட்டவங்க சொல்லி, இவர் கூட நின்னு இருந்தா கூட ஓகே. ஒண்ணு இவர் அந்த ஆடியோலே ஏதோ தில்லு முல்லு பண்ணியிருக்கணும். இல்லை ..” என நிறுத்தினான்.
அத்வைத்தின் அன்னை கேள்வியாகப் பார்க்க “சாரி டூ ஸே. அந்த வார்த்தைகளை சொல்ல வைத்ததே இவரா இருக்கும்” என்று அத்வைத் கூற, அதிர்ந்தார்.
பின் ஒன்றும் கூறாமல் அறையை விட்டு வெளியேறிய தன் அன்னையை வேதனையுடன் பார்த்தான் அத்வைத்.
தன் மனதுக்குள் ‘இதற்கே அதிர்ந்து விட்டார். இனிமேல் நடக்கப் போகும் விஷயங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை என் அன்னைக்கு கொடு இறைவா’ என்று வேண்டிக் கொண்டான் அத்வைத்.
அதே நேரத்தில் கீர்த்தியிடம் சத்யா விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.
“ஏன் கீர்த்தி இப்படிப் பண்ணின? நாம சட்டப்படி கருணாகரன் மேலே வழக்கு நடத்த ஏற்பாடு செய்துட்டு இருக்கோம். இந்த நேரத்தில் அவர் பையன் கூட பேச்சுவார்த்தை நடத்தறது சரியா வருமா? லாயர் பிரபஞ்சனைச் சந்திக்கப் போகும் போதே கேட்டார் தானே. இப்போ அவருக்கு என்ன பதில் சொல்றது?”
“மா, லாயர் கூட அவுட் ஆஃப் தி கோர்ட் பார்க்கணுமான்னு கேட்டாரே? இப்போ நான் அதுக்கு ஒரு முயற்சி எடுத்திருக்கேன் அது தப்பா?”
அப்போது குணசேகரன் வர, அவரோடு லாயர் பிரபஞ்சனும் வந்திருந்தான். சத்யா இருவரையும் வரவேற்று உபசரித்தாள். கீர்த்தியும் வரவேற்று அவர்களோடு அமர்ந்தாள்.
குணசேகரன் தான் “என்னம்மா நீ? இப்போ அந்த அத்வைத் கூட இந்த சந்திப்பு அவசியமா? அப்படி இருந்தாலும் மீடியா கவனத்திற்கு வராமல் பார்த்துக்க வேண்டாமா?” என்றார்.
“சர், அது எதேச்சையா நடந்த சந்திப்பு தான். இன்னும் சொல்லப் போனா அவர் அப்பா செய்தது பற்றி வருத்தப்பட்டுப் பேசினார். ஆனால் மீடியா சட்டுன்னு வந்துட்டாங்க. அவங்க கிட்டே இதை ஏன் சொல்லணும்னு தான் படம், கதைன்னு புருடா விட்டேன். அதையும் வேறே மாதிரி எழுதறாங்க” என்றாள் கீர்த்தி.
குணசேகரன் அதிருப்தியாய் பார்க்க, பிரபஞ்சன் சிறு புன்னகையுடன் ஆராய்ச்சியாய் பார்த்தான்.
சத்யா “சாரி, மிஸ்டர் பிரபஞ்சன். இது எதுவும் நாம மூவ் பண்ணறதைப் பாதிக்குமா?” எனக் கேட்டாள்.
“நோ இஷ்யுஸ் மேடம். இது எதேச்சையா நடந்தது தானே. அப்படி ஒவ்வொண்ணும் பார்க்கிறது கஷ்டம் தான். சாதாரண மக்கள்னா இந்த மாதிரி சந்தர்ப்பத்திலே சண்டை கூடப் போடலாம். மிஞ்சினா அந்த இடத்தில் இருக்கிற பத்து பேருக்கு அது தெரியவரும். உங்களை மாதிரி செலிப்ரிட்டிஸ்கு டீசண்ட்டா தான் போயாகனும். ஸ்டில் இனிமேல் கொஞ்சம் கவனமா இருங்க கீர்த்தி மேடம்.” என சத்யாவில் ஆரம்பித்து, கீர்த்தியில் முடித்தான் பிரபஞ்சன்.
பிரபஞ்சன் எதேச்சையா நடந்தது தானே எனக் கூறும்போது கொடுத்த அழுத்தமும், கீர்த்தியின் புறம் சென்ற பார்வையும் வைத்து அவன் ஏதோ தெரிந்து கொண்டிருக்கிறான் என உணர்ந்தாள் கீர்த்தி. இருந்தாலும் அதைப் பற்றி பெரிதாக சிந்திக்கவில்லை.
ஏற்கனவே சந்திரன் போனில் ஒரு வாங்கு வாங்கியிருந்தார். கீர்த்திதான் அவரின் ஆதாரம் என்றாலும் அவளின் எல்லா செயலையும் ஊக்குவிக்க மாட்டார். தவறு என்றால் நிச்சயம் கண்டித்து விடுவார்.
கீர்த்தியும் அசட்டு தைரியம் கொண்டவள் கிடையாது. ஏனோ கருணாகரன் விஷயத்தில் தான் அவளின் பிடிவாதம் அதிகமாக இருந்தது.
பிரபஞ்சன் பேசியதும் சத்யா “ஏன் சர்? கருணாகரன் ஏதும் கிரிமினலா மூவ் பண்ணறாரா?” எனக் கேட்டார்.
“இல்லை மேடம். ஆனால் எல்லோரும் அவரைக் கார்னர் செய்யும்போது எப்படி மாறுவார் என்று கணிக்க முடியாது தானே?” என்றான் பிரபஞ்சன்.
“புரியலை சர். நாம ஏதும் நேரடியா அவர் மேலே புகார் கொடுக்கலையே ? “
இப்போது கீர்த்தியும் அவர்களின் பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
“ப்ரொடியூசர் கவுன்சிலுக்கு நாம அனுப்பின நோட்டீஸ் அங்கே புகைய ஆரம்பிச்சு இருக்கு. ஏற்கனவே அரசியல் சப்போர்ட் இருக்கிறதால், நிறைய சின்ன தயாரிப்பாளர்கள் படங்கள் எல்லாம் வர விடாமல் பண்ணிட்டு இருக்கார்னு புகார் இருக்கு. அதோட அவர் உங்களைப் பற்றி சொன்னதில், பல நடிகைகள் மற்ற தயாரிப்பாளர்களை நாங்களும் சொல்லவான்னு மிரட்டறாங்களாம். இவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு நிறைய பேர் கடுப்பில் இருக்காங்களாம். நேற்று மாலையில் இருந்தே அவருக்கு அங்கேயிருந்து குடைச்சல் தான் போலிருக்கு” என்றான் பிரபஞ்சன்.
“ஓ” என்று சத்யா கூற, கீர்த்தியும் ஆச்சரியமாகப் பார்த்தாள்.
தொடர்ந்து “அதோட நேத்திக்கு நீங்க என்கிட்ட சொன்ன சில விஷயங்களில் கருணாகரன் குடும்பம் பற்றி சொல்லியிருந்தீங்க. அவர் மனைவி கிட்டே லேசா சந்தேகம் கிளப்பி விட்டு இருக்கேன்.” என்றான்.
சத்யா பதறியவாறு “சர், அவங்க ரொம்ப பாவம் சர். நல்லவங்க. அவங்க அப்பா இல்லைனா, இன்னிக்கு சத்யான்னு ஒரு நடிகை இல்லைன்னு சொல்லலாம். அந்த நன்றிக்குதான் நான் இதுவரை ஏதும் பேசாமல் இருக்கேன். இப்போ அவங்களை எப்படி ஃபேஸ் பண்ணுவேன்.?” என்றாள்.
“கூல் மேடம். அவங்க கிட்டே அவர் தான் காரணம்னு சொல்லலை. ஏன் தப்பு செஞ்சவங்களுக்கு சப்போர்ட் பண்ணறார்னு யோசிங்கனு தான் சொல்லிருக்கேன். அவங்க யோசிக்க ஆரம்பிச்சால் கருணாகரணை நெருக்குவாங்க இல்லையா? அப்போ தானாகவே உண்மை வெளியில் வரும்” என்றான் பிரபஞ்சன்.
சத்யாவிற்கு முழு உடன்பாடு இல்லையென்றாலும், பிரபஞ்சன் சொல்வதும் சரியாகத் தான் தோன்றியது.
கீர்த்தி மட்டும் சோபாவில் இருந்து துள்ளி எழுந்து “சூப்பர் சர். நான் இதைத் தான் இத்தனை நாளா கத்திக்கிட்டு இருக்கேன். அவர் ஸைட்லர்ந்து உண்மை வெளிலே வரணும்னு. எங்கே கேட்டாங்க?” என்று ஆர்ப்பரித்தாள்.
கீர்த்தியின் அந்த எக்ஸசைட்மெண்ட்டை சிறு புன்னகையுடன் பார்த்தவன், “இப்போ அத்வைத் மூலமும் அவரை நெருக்கினால், மனுஷன் கடுப்பில் ஏதும் கிரிமினலா யோசிக்கப் போறார். அதான் ஜாக்கிரதையா இருங்கனு சொன்னேன்” என்றான்.
“ஏற்கனவே கிரிமினல் தானே?” என்றாள் கீர்த்தி.
சத்யா தான் “இருக்கட்டும் கீர்த்தி. நமக்கு நம்ம சேஃப்டி முக்கியம். சர் சொல்ற மாதிரி ஜாக்கிரதையா இரு” என்றார்.
பிரபஞ்சன் “மேடம், இன்னொரு வழக்கு ஒண்ணும் கொடுக்கலாம் அதைப் பற்றி பேசத் தான் வந்தேன்” என்றான்.
“சொல்லுங்க சர்.”
“கருணாகரன் மீடியாவில் கொடுத்த ஆடியோவால் கீர்த்தி வெளியில் செல்ல இடைஞ்சலாக இருப்பதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யலாம். தேவையில்லாமல் தன் பெயரை மீடியாவில் கூறியதால், பொது இடங்களில் மக்களின் பேச்சுக்கள் மனதை வருத்தும்படி இருக்கிறது என்றும், இதற்கு மேல் இந்த விஷயத்தில் சத்யா, கீர்த்தி இருவரின் அனுமதியில்லாமல் எந்த ஒரு சான்றுகளும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு வழக்கு போடலாம். ஒரு நடிகை தன்னுடைய வழக்கு ஒன்றை மீடியா பார்ப்பதற்கோ, அந்த விவரங்களை மீடியாவில் வெளியிடவோ தடை வாங்கியிருந்தார். அதற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்து இருக்கிறது. அந்த ஜட்ஜ்மெண்ட் ரெஃபர் செய்து, உங்கள் இருவர் பெயரும் இந்த விஷயத்தில் மீடியாவில் வராமல் தடை வாங்கலாம். மீடியா சும்மா இருக்க மாட்டாங்க தான். ஆனால் உங்கள் பேர் போடாமல் மூன்றெழுத்து நடிகை, புகழ் நடிகைன்னு போடுவாங்க. அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். “ என்றான் பிரபஞ்சன்.
இதுவும் சரியாகப் பட சத்யா, கீர்த்தி இருவரும் சம்மதித்தனர். பின் கிளம்பும்போது குணசேகரனிடம் சத்யா எதுவோ கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது பிரபஞ்சன் கீர்த்தியிடம் “என்ன சின்ன மேடம்? உங்கள் பிளான் வொர்க் அவுட் ஆகுதா? அது எப்படி சரியாக நீங்க இருவரும் ஒன்றாக வெளிலே வர நேரத்தில் மீடியா அங்கே வந்தாங்க. அதுவும் சோசியல் மீடியா, யு ட்யூபர்னு இல்லாமல், மெயின் ஸ்ட்ரீம் மீடியாவா வந்தாங்க. இப்போ உங்க பிளான் படி கருணாகரன் உங்களை மீட் பண்ணணுமே?” எனக் கேட்டான் .
கீர்த்தி திடுக்கிட்டுப் பார்க்க , பிரபஞ்சன் சிரித்தான்.
“பரவாயில்லை வக்கீல் சர். சரியாதான் சொல்றீங்க. இன்னும் அந்தாள் கிட்டேயிருந்து மெசேஜ் வரலை எனக்கு. ஆனால் என்னைச் சந்திக்க ரொம்ப ஆர்வமா இருக்காராம். நானும் தான்” என்றாள் கீர்த்தி.
“ம். ஸ்டே சேஃப் மேடம். எதுக்கும் உங்க அப்பாவைக் கூட கூப்பிட்டுக்கோங்க” என, கீர்த்தியும் “ம்” என்று மட்டும் சொன்னாள்.
-தொடரும் –
