தங்க சரிகைகள் இழைந்தோடிய பச்சை வண்ண பட்டுடுத்தி சிவப்பு ரவிக்கையுடன் அதே வர்ணத்தில் கைகளிலும் கால்களிலும் தீட்டிருந்த மருதாணி சிவப்போடு சிவந்த அங்கமெல்லாம் ஜொலிக்க கண்களில் தீட்டிய கருமை நிற மை அந்த அண்டத்தின் கருப்பொருளை கண் முன்னால் கொண்டு வந்தது. அவள் இடையை தழுவியிருந்த ஒட்டியானமும் கழுத்தில் பாந்தமாய் நிறைந்திருந்த பவள மாலையும், கைகளில் கலகலத்த வளைவியும் அவன் மனதை அவளோடு சிறை எடுக்க அவள் வெண்ணிற கால்களை தழுவிய சலங்கை அவன் மனதை போலவே சத்தமெழுப்பியது.
அவள் சம்யுக்தா. ப்ரித்விக்காக திருமணத்திற்கு பார்த்திருக்கும் பெண். நளினமும் மென்மையும் அவளிடம் குடியேறி அவன் மனதை இரவல் கேட்டது. செழிப்பும் வனப்பும் கொட்டிக்கிடந்த பெண்ணவளின் கண்களை தவிர வேறு எதையும் அப்படி ஆராய்ந்து பார்க்கவில்லை அவன். அப்போது தான் உள்ளே நுழைந்திருந்தவன் இன்னமும் அவன் இடத்தில் சென்று அமரவும் கூடவில்லை. அவள் மீது நீங்காது பதிந்திருந்த விழிகளை விலக்க முடியாமல் போராடினான். கையில் வைத்திருந்த அலைபேசி அலறவும் அதை உயிர்ப்பித்து காதில் வைத்தவன், “ராஜா! அந்த பிள்ளைய பார்த்துட்டியா? ரொம்ப எல்லாம் மிரட்டி வைக்காதப்பா… சின்னு பொண்ணு. நீ பார்த்துட்டு மட்டும் வந்துரு நாம புதன் கிழம அவங்க வீட்ல போய் பேசிக்கலாம். ராஜா! பொண்ண உனக்கு பிடிச்சிருக்கா?” அந்த பக்கம் இருந்து விடாமல் பேசிய தன் தாயை நினைத்து புன்னகை எழுந்தது அவன் இதழ்களில்.
“ம்மா! இப்ப தான் வந்தேன். இன்னமும் அவங்களை சரியா பார்க்க முடியல. ஷோ முடிஞ்தும் நானே கூப்பிடுறேன்மா…” என மெல்லிய குரலில் பேசிவிட்டு வைத்தவனின் பார்வையில் விழுந்தது பச்சை வர்ணத்தில் மீனாட்சி அம்மனை மேடையில் கொண்டு வந்து நிறுத்தியிருந்த அவளுடைய பரதநாட்டியம்.
‘அங்கயற்கன்னி’ நாட்டியத்தில் பாவனையோடு பரதமாடியவளை பார்க்கவே அத்தனை அழகாய் இருந்தது. சட்சட்டென மாறிய அவள் முகபாவனைகளை பார்த்ததில் அவள் முகத்தை விட்டு வேறெங்கும் தன் பார்வையை திருப்பவே முடியவில்லை அவனால். நடனமாடிய அவள் கால்களும் அதன் சலங்கை ஒலியும் அவள் இதழசைப்புகளும் அவன் மனதை கொள்ளை அடிக்க, அவளின் பிஞ்சு கைகளில் தன் முகத்தை புதைத்துக் கொள்ளும் ஆர்வம் அவனிடம். அவள் கண்களில் விழுந்து கன்னத்தில் முத்தமிட அவனுள் பிறந்தது அவசரம்.
அவளின் ஒவ்வொரு செய்கையும் அவன் மனதை பறித்தது என்னவோ நிஜம். தூரத்தில் நின்று அவளையே ஆழ்ந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ப்ரித்வி ராஜ்.
அவள் முன்னால் சென்று நிற்க வேண்டும் என்றெல்லாம் கூட தோன்றவில்லை அவனுக்கு. அவளுடைய கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்றிருப்பதையே வரமாய் எண்ணினான். இங்கு வரும்போது கூட இந்த மனநிலை சற்றும் இல்லை. எப்படியாவது அவளை பெண் பார்க்க வரும் முன்பே ஒருமுறை அவளை பார்த்து தனிமையில் பேச வேண்டும்.
அவளின் மனநிலையை நன்கு அறிந்து கொண்ட பிறகே அந்த பெண் பார்க்கும் படலதிற்கு சம்மதிக்க வேண்டும் என்று தான் அவன் நினைத்திருந்தான். ஆனால் இப்பொழுதோ முழுதாக மாறியே போயிருந்தது அவனுடைய மனம். எங்கு நேரில் சென்று பேசினால் அது அவளின் மனதிற்கு பிடிக்காமல் போய்விடுமோ என எப்போதும் தனக்கு ஒன்று வேண்டுமென்றால் அதை செய்து முடித்துவிட்டு தான் வேறு வேலையை கவனிக்கும் ப்ரித்வி ராஜ், முதல்முறையாக இந்த விஷயத்தில் அவள் புறமாய் சாய்ந்து அவளின் மனநிலையில் இருந்தும் யோசிக்க ஆரம்பித்து விட்டான்.
நாட்டியம் முடிந்து கூட்டம் கலைந்து சென்றதை கூட உணராமல் அப்படியே நின்றிருந்தான். அதே நாட்டிய உடையுடன் அதற்கு மேலே அவள் தோள்களை தழுவியிருந்த சால்வையுடன் அவள் அந்த அரங்கத்தை விட்டு விலகி அந்த நீண்ட காரிடாரில் நடக்கவும் அவளுக்கு முன்னால் குவிந்தனர் ரசிகர்கள் கூட்டம். சிலர் பாராட்டுதலோடும், சிலர் வாழ்த்தோடும், சிலர் அவளை பார்ப்பதற்காகவும் என அங்கு குவிய அதையெல்லாம் தள்ளி நின்று பார்த்தவாறே ஒவ்வொரு அடியாக அவளை நோக்கி அடியெடுத்து வைத்தவன் அந்த பெரிய காரிடாரின் மையத்தில் தன் கைகளை கட்டிக் கொண்டு அவளையே ஆழ்ந்து பார்த்தவாறு வெகு நேரம் அப்படியே நின்றிருந்தான் ப்ரித்வி ராஜ்.
ஏதேதோ எண்ணங்களில் தன் கைகளை பின்னால் கட்டியவாறு சுவற்றில் சாய்ந்து அவன் அவளை பார்த்தவாறே நின்று விடவும், ரசிகர்களின் கூட்டமெல்லாம் கலைந்த பின்பு தோளில் தொங்கிய சால்வையை மீண்டும் இழுத்து போர்த்தியவாறு அவனை தாண்டி கடந்து செல்ல முயன்றவளின் மேலாடை அவனுக்கு அருகில் நீண்டிருந்த ஆணியில் நன்றாக மாட்டிக் கொண்டு சம்யுக்தா நடக்கையில் கிழிந்தே போனது.
அவனுக்கு பக்கவாட்டாக இருந்த கதவின் நீண்டிருந்த நிலைபடியில் மறைந்து போயிருந்த அந்த வளைந்த ஆணியை கவனிக்காமல் அவளுடைய ஆடை அவன் மார்பை தழுவி இருக்கவும் தன் ஆடையை பிடித்திழுத்தது அவன் தான் என்று நினைத்துக் கொண்ட பெண்ணவள் சட்டென்று மூண்ட கோபத்தில்,
“ஹே! மிஸ்டர்…” என அவனை நெருங்கி நின்று முறைத்து பார்க்க, அவள் குரலில் ஏதோ கனவிலிருந்து விழிப்பவனை போல சட்டென்று தன் நினைவுகளில் இருந்து மீண்டு தரையிறங்கியவன் அவள் அத்தனை அருகில் வந்து நிற்பாள் என்று எதிர்ப்பார்க்கும் முன்பே அவனின் முகத்திற்கு வெகு அருகாமையில் விரல் நீட்டி தொட்டு விடும் தூரத்தில் தன் முகத்தை அவன் முன்பாக வைத்திருந்தாள் சம்யுக்தா.
விழிகளை விரித்து அவன் முதலில் பார்த்தது முகத்தில் கவிதையாய் நீண்டிருந்த அவள் கண்களை தான். ஆழ்ந்த கயல் விழிகளும் அதில் அவள் அடர் கருமை நிறத்தில் மையிட்டு மெருக்கேற்றியிருந்த விதமும் வெள்ளை பூக்களுக்குள் சிக்கி கொண்டு அங்குமிங்குமாக ஓடிய கருவிழிகளும் அவனுடைய மொத்த உயிரையும் சிறையிலிட்டது.
அவனுடைய பார்வையில் முகம் சுழித்து நின்றவள், “என்ன? நானும் வந்ததுல இருந்து பார்க்கறேன் உங்க பார்வையே சரியில்லை. என்னமோ என்னை அப்படியே விழுங்குற மாதிரி பார்த்துட்டு இருக்கீங்க? என்ன தான் வேணும் உங்களுக்கு?” என்று மெல்லிதாகவே ஆனாலும் தன் மொத்த கோபத்தையும் உள்ளடக்கிய மிகுந்த சீற்றத்துடன் வெளிவந்தது அவளுடைய குரல்.
அப்போதும் தான் அந்த காரிடாரில் அவர்களை தவிர வேறு யாரும் இல்லை என்பதையே கவனித்தான். தன் தொண்டையை செருமி அவள் விழிகளை தவிர வேறு எங்கும் தன் பார்வையை பதிக்காமல் வெகு நிதானமாக, “என்னாச்சு?” என கேட்டு அவள் விழிகளுக்குள் ஆழ பார்வை சிந்தி விடை தேடினான்.
அவனுடைய அத்தனை அழுத்தமான கேள்வியில் அவளுடைய பார்வை தன்னாலே அவளின் மேலாடையை நோக்கி சென்று பின் அவன் மார்பில் நிலைத்து நின்றதை கவனித்தவன் தன் மேல் பரவியிருந்த அவள் ஆடையை பார்த்து அதிர்ந்து பின்னால் கட்டிருந்த தன் கைகளை எடுத்து விட்டு அவள் பார்வையை பின் தொடர்ந்து பார்த்ததில் அவள் போர்த்தியிருந்த சால்வை ஒரு பக்கமாக நன்றாக கிழிந்திருக்கவும் அதன் நுனியை தேடி கண்டுபிடித்து அத்துணி கிழிந்து போனதற்கான காரணத்தையும் கண்டறிந்தான்.
அங்கிருந்த ஆணியில் மாட்டியிருந்த அவளுடைய ஆடையை எடுத்து விட்டபடியே அவள் விழிகளுக்குள் ஊடுருவியது அவன் பார்வை. “ஸாரி! இங்க ஆணி இருந்து இருக்குது. நான் கவனிக்கவே இல்லை…” என அவள் முகம் பார்க்க, அவனுடைய கண்ணியத்தையும் மரியாதையான பேச்சையும் மேலும் தவறு அவன் மீது இல்லை என்ற போதும் அவளிடம் மன்னிப்பு கேட்ட அவனுடைய மனதையும் மதித்து அவனை புரிந்துக் கொண்ட பார்வையுடன் தவிப்பாக அவனை பார்த்து நின்றாள் சம்யுக்தா.
“இல்ல! நான் தான் ஸாரி கேக்கணும். கோவத்துல உங்களை ஏதேதோ பேசிட்டேன். ஐம் ஸாரி!”
“ம்ம்! உங்களை அப்படி நினைக்க வச்சது என்னோட தப்பு தானே. நான் வேணும்னே ஒன்னும் உங்களை அப்படி பார்க்கல… ஏதோ ஒரு நினைப்புல அப்படியே பார்த்துட்டு இருந்துட்டேன்… சரி விடுங்கங்க சம்யுக்தா இனி இப்படி நடக்காது….”
“தேங்க்ஸ்!” என்றவளின் குரலில் நிறையவே நிம்மதி. இப்போதும் அவன் பார்வையில் எந்தவொரு மாற்றத்தையும் அவளால் உணர முடியவில்லை. அதை உணர்ந்ததும் தான் முதலில் இருந்தே அவன் தன் கண்களை மட்டுமே தான் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது.
“நான் ப்ரித்வி. ப்ரித்வி ராஜ். உங்க டான்ஸ் ரொம்ப நல்லா இருந்தது…” என முன்பு அவர் மற்ற ரசிகர்களிடம் கரம் குவித்து பேசியதை எல்லாம் பார்த்திருந்தவன் அவளை போலவே கரம் குவித்து அவளை பாராட்டவும் அதே மெல்லிய சிரிப்போடு தானும் தன்னுடைய இரு கரத்தையும் கூப்பியவள், “ரொம்ப நன்றி!” என இதமான புன்னகையை சிந்தினாள்.
“ப்ரித்வி ராஜ். சம்யுக்தா. பெயர் பொருத்தம் ரொம்ப நல்லாருக்குல!” என அவள் முகத்தை ஓரக்கண்ணால் அளவிடும் பார்வையோடு அவன் கூற மெது மெதுவாய் இறுக்கமாக மாறியது அவள் முகபாவனை.
நிச்சயமாக அவளுடைய வீட்டினர் அவன் புகைப்படத்தை அவளிடம் காட்டிருப்பார்கள். அப்படி காட்டாமல் கூட அவளின் சம்மதத்தை பெற்று இருப்பார்களா என்ன? ஆனால் அவனை பார்த்ததிலிருந்தே அவள் பாவைகளில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லையே. தன்னை அவளுக்கு கொஞ்சமும் அடையாளம் தெரியவில்லையே! புகைப்படத்தை கூட விட்டு விடுவோம் இப்போது தெரிந்துக் கொண்ட என் பெயரில் கூட பெரிதாக எந்த மாற்றமும் அவள் முகத்தில் காணமுடியவில்லையே.
தன் பெயரை சொன்னாலாவது அவளுக்கு அடையாளம் தெரியும் என அவன் நினைத்ததென்ன இப்போது அதுவும் வீணானதென்ன! மீண்டும் குழம்பி போனவனாய் நின்றிருந்தான் அவன். என்னை பிடிக்கவே இல்லையா? நான் அவள் மனதை எந்த விதத்திலும் பாதிக்கவில்லையா? அவனை பார்த்து விடைபெறும் பாவனையில் சம்பிரதாயமாக புன்னகைத்தவள் அவனை கடந்து நடக்க முயலவும் அவளை தடுக்கும் விதமாக வேகமாக அவளை அழைத்தான் ப்ரித்வி.
“என்னங்க!” அவன் அழைப்பில் ஒரு நிமிடம் அப்படியே நின்றவள் தன் மேலாடையை அழுத்தமாக பற்றிக் கொண்டு ஒரு பக்கமாய் திரும்பி, அவனை என்னவென்ற கேள்வியை தேக்கி பார்த்து வைத்தாள்.
சென்னையின் மிகப்பெரிய ஜவுளி கடை வியாபாரி அவன். அவனுடைய மனைவியாக போகிறவள் இப்படி கிழிச்சலுடன் செல்வதா என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் அவன் மனதில் எழும்ப, அவளை அப்படியே நிறுத்தி விட்டான் அவன். ஆனால் அதை அவள் எப்படி எடுத்துக் கொள்வாள் என்பது புரியவில்லை.
ஒருபக்கம், ‘தன் மனைவியாக போகிறவளா?’ என்று மகிழ்ச்சியில் கூவியது அவன் இதயம். மறுபக்கம், ‘அவளுக்கு இதில் விருப்பமில்லை எனில் என்ன செய்வாய்?’ என்று அவனை காய்ச்சி எடுத்தது அவன் மூளை. எது எப்படியாயினும் அவள் இப்படி செல்வதில் அவனுக்கு சற்றும் விருப்பமே இல்லை. அவள் தன்னை என்ன நினைத்தாலும் தன்னை வேண்டாம் என்றே மறுத்தாலும் கூட பரவாயில்லை. தனக்கு அவளுடைய மதிப்பும் மரியாதையும் முக்கியம் என்று நினைத்தவன் அவள் நின்ற இடத்திலேயே திரும்பி பார்க்கவும் அவளை நோக்கி நடந்து வந்தான்.
“இங்க என்னோட கார்ல ஒரு ஷால் இருக்கு. புதுசு தான்.. ஒரு இரண்டு நிமிஷம் வெயிட் பண்றீங்களா நான் இப்பவே கொண்டு வர சொல்றேன்” என்று அவளிடம் கூறியவன் அவள் பதிலுக்கு கூட காத்திராமல் சற்று தள்ளி சென்று தன் நண்பனை அழைத்து, “மனோஜ்! எனக்கு ஒரு ஷால் வேணும். இங்க அடுத்த தெருவுல நம்ப கடை இருக்கு அங்க போய் நான் சொல்ற கலர்ல ஒரு மாடல் கேட்டு வாங்கிட்டு வா…” என கூறி வைத்து விட்டவன் மீண்டுமாய் அவனுக்கே அழைத்து, “நம்ப கார்ல இரண்டு செகண்ட் வச்சு எடுத்துட்டு வா…” என்றான். அவளிடம் பொய் சொல்ல விரும்பவில்லை அவன்.
அவளிடம் சொல்லியதை போலவே அவனுடைய மகிழூந்திலிருந்து எடுத்து வர சொல்லி பணித்தான். அவன் பெயர் பொருத்தம் என்று சொல்லியதிலே பாதி புரிய இந்த அவனின் பதட்டம் மொத்தமாய் அவளுக்கு விஷயத்தை புரிய வைத்திருந்தது. புரிந்த விஷயம் ஏனோ கசந்தது. முழு உடலும் செந்தனலாய் காய்ந்து செந்நிறமாய் மாறி இருந்தது அவள் முகம். நெற்றி சுருங்க அவளையே பார்த்தபடி தவித்தவனுக்கு அவளுக்கு தன்னை சிறிதும் பிடிக்கவில்லை என்பது அட்சரம் பிசகாமல் புரிந்தது தான்.
இருந்தும் எதோ ஒன்று அவளுக்காக நீ தானே இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லி சொல்லியே அவனை செலுத்திக் கொண்டிருந்தது. ப்ரித்வியின் நண்பனான மனோஜ் வேகமாக அங்கு ஓடி வரவும் அதே நேரம் சரியாய் தன் அலைபேசியை எடுத்து யாரையோ அழைத்துவிட்டு பேசி முடித்தவள் அவர்கள் இருவரையும் நோக்கி திரும்பி நின்றாள். ப்ரித்வியின் கையில் இருந்த புத்தம் புதிய அந்த சால்வை அவள் இப்போது அணிந்திருந்ததை போலவே தான் இருந்தது.
நுண்ணிய வடிவமாய் மின்னிய அந்த சால்வை அவள் இப்போது அணிந்திருப்பதை விடவுமே வெகு அழகாக தான் இருந்தது. அதை அவளிடம் நீட்டியவனின் முகத்தை கூர்ந்து பார்த்தவள் அவன் கையை தொடாமல் கூட வேண்டுமென்றே அவனை தள்ளி நிறுத்தி அதை வாங்கிக் கொள்ளவும் அதே மாறாத ரசனை மிகுந்த புன்னகை அவன் முகத்தில். அவளின் கள்ளதனத்தை கண்டு கொண்ட புன்னகை அது.
‘இப்படியெல்லாம் செய்துட்டா நான் உன்னை வேணாம்னு சொல்லிடுவேனா? அப்படி சொல்ல வைக்க தானே மேடம் இப்படி பண்றீங்க?’ என அவளை சரியாகவே கணித்தான் அவன். ‘என்னை பிடிக்கலைனு நீயே உங்க வீட்ல சொல்லு. கனவுல கூட நான் உன்னை பிடிக்கலைன்ற வார்த்தையை சொல்ல மாட்டேன்…’ அவன் முகத்தில் தெரிந்த தீவிர பாவனையில் என்ன செய்வது என்று தெரியாமல் அசந்து போய் அப்படியே நின்று விட்டாள் சம்யுக்தா.
“ஒரு நிமிஷம் என் கூட வரிங்களா?” அவனை பார்க்காத பாவனையில் அவன் தந்ததை அணிந்துக் கொண்டே அவனை அழைத்தவளை நோக்கி முன்னேறியவன், “ம்ம்! வாங்க…” என அவளோடு நடக்க துவங்க அந்த காரிடாரை கடக்கும் தூரம் நீண்டுக் கொண்டே சென்றால் நன்றாக இருக்குமென்று தோன்றியது அவன் மனதில்.
‘ஏதோ பெரியதாய் செய்து வைக்க போகிறாள்!’ என அறிந்தே அவள் பின்னால் நடந்தான் அவன். வாசல் வரை சென்றவள் குனிந்து தன்னுடைய மகிழூந்தில் எதையோ எடுத்து விட்டு அவனை நோக்கி திரும்பி நிற்கவும் தன் கைகளை இறுக்கமாக கட்டிக் கொண்டு நின்றான் ப்ரித்வி ராஜ். புரிந்து விட்டதே! அவள் செய்ய போவது அவனுக்கு புரிந்தே விட்டது.
அமைதியான பாவனையில் உணர்வுகளைத் தொலைத்த முகத்துடன் அவள் கருவிழிகளை ஊடுருவி அதில் தன்னையே தேடினான் அவன். “இந்தாங்க… ஜவுளி கடை முதலாளி சொடக்கிட்டதும் வந்த இந்த துணிக்கு இந்த நாட்டியகாரி எதுவும் கொடுக்காம போனா நல்லா இருக்காதுல…” என அந்த ‘நாட்டியகாரி’யில் ஏகதிற்கும் அழுத்தத்தை கொடுக்கவும் அவள் மனநிலை புரிந்தவனாய் தன் கைகளை நீட்டி அவள் தந்ததை வாங்கிக் கொண்டான் ப்ரித்வி.
அந்த பணத்தை வாங்கவே மாட்டான் என்று அவள் நினைக்க அதை அவன் வாங்கியது அவளுள் பேரிடி. விழிகளை பிதுக்கி உதடு கடித்து அவள் நின்ற பாவனையில் உருகியவன் அவளுக்கு கதவை திறந்து விட்டான். அவன் முகம் பார்க்காமல் திறந்திருந்த கதவின் வழியாக உள்ளே ஏறியவள் தலை குனிந்து அமர்ந்திருக்க, “என்னங்க!” என அழைத்த ப்ரித்வியின் முகம் அவள் அமர்ந்திருந்த பின் கதவின் துவாரத்தின் வழியாக தெரிந்தது.
“அது என்னங்க நாட்டியகாரி? நாம பண்ற தொழில வச்சு நம்மை மத்தவங்க கூப்பிடும் போது நாம பெருமையா உணரணுங்க… அதை நீங்களே இப்படி கீழாக மதிப்பிட்டு சொல்லலாங்களா? மத்தவங்களுக்கு எப்படியோ தெரியாதுங்க எனக்கு உங்க நாட்டியம் ரொம்பவே பிடிச்சு இருக்குதுங்க… அதை ஒரு பேச்சுக்கு கூட மத்த தொழிலோட ஒப்பிட்டு பேசாதிங்க. அது ரொம்ப தப்புங்க!”
“…”
“ஐந்நூறு ரூபா கொடுத்திருக்கிங்கங்க. இந்த சால்வ நானூறு ரூபா தானுங்க. இப்ப உங்களுக்கு நூறு ரூபா கொடுக்க முடியாம நான் உங்களுக்கு கடனாளி ஆகிட்டேங்க. இப்ப கேட்டுறாதிங்க நிஜமா என்கிட்ட இப்ப எந்த பணமுமில்லைங்க… அடுத்த முறை… நாம அடுத்த முறை சந்திக்கும் போது இந்த கடன் பணத்தை கொடுத்துடுறேங்க. உங்களுக்கு ஓகே வா?”
அவன் சொல்லிக் கொண்டிருந்த பாவனையில் மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது அவள் முகத்தில். “ப்பா! சிரிச்சிட்டிங்களா! இப்ப தாங்க உங்க முகம் ரொம்ப அழகா இருக்கு. இன்னும் சொல்ல போனா… தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?” என அவன் அவளை முகத்தை ஏறிட்டு பார்க்கவும் ‘இல்லை’யென தலை அசைத்தவள் அவன் என்ன கூற போகிறான் என்று ஆவலாக அவன் முகம் பார்க்க, “நீங்க சிரிக்கும் போது ரொம்ப செக்ஸியா இருக்குதுங்க. அய்யோ! தப்பா எதுவும் சொல்ல வரலைங்க… உங்க கலருக்கு நீங்க சிரிக்கும் போது உங்க முகம் அழகா மாறுதுங்க அதை எப்படி சொல்றது?” என்று சிறிது நேரம் யோசித்து விட்டு, “அதை எப்படி சொல்றதுனே தெரியலிங்க…” என பாவமாக அவள் முகம் பார்த்தவனின் கண்களில் ரசனையான பாவனையை தவிர வேறு எதுவும் தெரியவில்லை.
அவன் பேசுவதை கேட்க கேட்க அவளுக்கு அவனை விட்டு செல்லும் மனமே வரவில்லை. அவனிடம் என்னமோ பிடித்தது தான். பணமும் புகழும் கொட்டிக் கிடக்க இப்படி அவளிடம் வீதியில் நின்று பேசும் அவன் புதிதாய் தான் தெரிந்தான். அவளுக்காக எதுவும் பண்ணுவான் என்பதை அவள் மனதில் ஆழ பதிய வைத்திருந்தான். அவன் மீதான ஈர்ப்பு பெருகிக் கொண்டே போவதை போல இருந்தது. அதை வெளியில் அவனிடம் காட்டிக்கொள்ள கூடாது என்று கட்டிப் போட்டு அடக்கி வைத்திருந்தாள் தன் மனதை.
பதிலே பேசவில்லை அவள். எங்கு பேசினால் எதையாவது உளறி விடுவோம் என்ற பயம் அவளுள் இப்போது உதித்திருந்தது. அதனால் அவனிடம் அமைதியாக கையசைத்து சிரித்தவளின் சுண்டு விரல் அவளுடைய மகிழூந்தின் மேல் கைப்பதித்திருந்த ப்ரித்வியின் கைகளில் லேசாக பட்டு விடவும் சட்டென தன் கையை விலக்கி கொண்டவனின் மனதிற்குள் பெரும் போராட்டம். இதயம் ஏகத்துக்கும் படபடத்து துடிக்க விழிகள் அவள் விழிகளில் வந்து இளைப்பாறியது.
அன்று முதல் முதலாய் அவள் தீண்டிய இடமெல்லாம் பரவிய அந்த குளிர் சிலுசிலுப்பு இன்று வரையில் அவளிடம் மட்டுமே தோன்றுவது தான் இயற்கையின் நியதியோ!
முதல் சந்திப்பிலும் சரி அதற்கு பின்னான தருணங்களிலும் சரி அவன் சறுக்கி விழுவது அவளிடம் மட்டும் தானே. அதே வற்றாத புன்னகையுடன் தன்னவளை காண வேகமாக விரைந்தான் ப்ரித்வி ராஜ்.