Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ -1

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ

அத்தியாயம்– 1:

கொடைக்கானல் மலைத்தொடரின் மடியில், மேகங்களுக்கு அடியில் மறைந்திருக்கும் ஒரு சொர்க்கம் பூம்பாறை. ஒரு சின்ன கிராமம். அரசு வரைபடத்தில் ஒரு புள்ளி மட்டுமே. ஆனால் இன்று அந்தப் புள்ளி தீயாக எரிந்தது.
நூறுக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள்…வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள்….கிராமத்தின் நடு வெளியில் உட்கார்ந்திருந்தனர். மூன்று நாட்களாக உணவு இல்லை. தண்ணீர் மட்டும். அவர்களின் முகங்களில் களைப்பு இருந்தது. ஆனால் கண்களில்…ஒரு கல் போன்ற உறுதி!
பூம்பாறையின் பச்சை பசேல் என்ற மலைச்சரிவுகளுக்குக் கீழே, ஒரு இருண்ட நிழல் படர்ந்திருந்தது. அரசாங்கம் அதை ஒரு “சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டம்” என்று அழைத்தது. அதன் நோக்கம்….மலைச்சரிவுகளைச் சீரமைத்து அமைக்கப்படும் புதிய பாதை….கிராமத்தைச் சுற்றியுள்ள பாரம்பரிய விவசாய நிலங்களை கையகப்படுத்தி, அங்கு வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களை உருவாக்குவது.
அரசாங்கத்தின் “பதிலாக நிலம் தருகிறோம்” என்பது வெறும் காகிதத்தில் தான். அந்த மண், மலை, நீர்நிலைகள் மற்றும் தலைமுறை தலைமுறையாக அவர்கள் கட்டிக்காத்த விவசாய அறிவு….இவை எதையும் காசு கொடுத்து வாங்கிவிட முடியாது என்பதை உணர்ந்த மக்கள், நிலத்தை விட்டு வெளியேற மறுக்கிறார்கள்.
பக்கத்தில் ஒரு அரசு ஜீப் நின்றது. அதிகாரிகள் தூரத்தில் நின்று கலைந்து பேசிக் கொண்டிருந்தனர். யாருக்கும் உள்ளே போக தைரியம் இல்லை.
அப்போது இன்னொரு வாகனம் வந்து நின்றது.
கதவு திறந்தது.
மீரா , ஐஏஎஸ், கலெக்டர், தேனி மாவட்டம் … இறங்கினாள்.
அவள் கோட் போடவில்லை. கோப்பு வைத்துக் கொள்ளவில்லை.ஒரே ஒரு தண்ணீர் பாட்டில் மட்டும் கையில்.
நேரே உள்ளே நடந்தாள்.
பக்கத்தில் இருந்த அதிகாரி பதறினான்.”மேடம் நேரடியா போகலாமானு…”
“வாங்க.”
கிராமத்தின் நடுவில் ஒரு ஆலமரம். அதன்கீழே உட்கார்ந்திருந்தான் முதியவன்… வேலாண்டி. கிராம தலைவன். எழுபது வயதிருக்கும்.உடல் இளைத்திருந்தது. ஆனால் முதுகு நிமிர்ந்திருந்தது.
மீரா அவனருகே சென்று தரையில் உட்கார்ந்தாள்.
வேலாண்டி அவளை பார்த்தார். ஒரு நொடி ஆய்வு செய்தார்.
“கலெக்டரா?”
“ஆமாம் தாத்தா.”
“நேத்து வேற ஆளு வந்தான். நாளைக்கு வருவோம்னு சொன்னான். வரலை.” “நீ என்ன பண்ண வந்த?”
“பேசணும்னு வந்தேன். கேக்கணும்னு வந்தேன்.”
வேலாண்டி ஒரு கசப்பான சிரிப்பை உதிர்த்தான்.”எத்தனை கலெக்டர் வந்தாங்க. எத்தனை பேர் கேட்டாங்க?”
“எங்க மலை எங்களுக்கு சொந்தம். எங்க காடு எங்களுக்கு சொந்தம். அதை எடுத்துக்கிட்டு, ‘வேற இடம் குடுக்கிறோம்’ன்னு சொல்றாங்க. எங்களுக்கு வேற இடம் வேண்டாம். இந்த மண் வேணும்.”
கூட்டத்தில் இருந்து சில குரல்கள் எழுந்தன. அதிகமாகின. சில இளைஞர்கள் எழுந்து நின்றனர்.
“கலெக்டர் வந்தா என்ன, போனா என்ன!”
“போங்க! போங்க! அரசாங்கம் எங்களுக்கு எதுவும் பண்ண மாட்டாங்க!”
மீரா எழவில்லை. குரல் உயர்த்தவில்லை.
அமைதியாக வேலாண்டியை பார்த்தாள்.
“தாத்தா. நான் உங்களுக்கு தீர்வ  கொண்டு வரலை. ஆனா ஒரு விஷயம்… மூணு நாளா நீங்க யாரும் சாப்பிடலை. குழந்தைங்க சாப்பிடலை. இது உங்களுக்கு என்ன நீதி தரும்னு தெரியலை. ஆனா உங்களுக்கு என்ன ஆகும்னு தெரியுது.”
வேலாண்டி பார்த்தான்.
“நான் இங்கேயே உங்களோடவே தங்கி இருக்கேன்…அரசாங்கத்துகிட்ட பேசுறேன்.. முடிவு வருகிற வரைக்கும் இங்கிருந்து நகர மாட்டேன் ஓகேவா…இப்போ குழந்தைகளுக்காவது சாப்பாடு குடுங்க.”
ஒரு சின்னக் குழந்தை அழுது கொண்டிருந்தது. அதன் தாய் அணைத்துக்கொண்டிருந்தாள்.
அமைதி.
வேலாண்டி மெல்லத் தலையசைத்தான். அவனது கண்களில் இருந்த அந்த “கல் போன்ற” உறுதி, சற்று இளகியது. போலீஸ் வேன்களிலிருந்து உணவுப் பொட்டலங்கள் இறக்கப்பட்டன. மக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். மீரா நேராகச் சென்று, தன் கைகளாலேயே ஒரு பொட்டலத்தைப் பிரித்து, அழுகையோடு இருந்த குழந்தைக்கு நீட்டினாள். குழந்தை அவளிடம் தாவியது.
திடீரென மீராவின் போன் விழுந்தது.
அவள் எடுத்தாள். ஸ்கிரீன் பார்த்தாள்.
டிஎஸ்பி ஆபீஸ், தேனி.
எடுத்தாள். “ஆமாம்.”

“மேடம், புதுசா அப்பாயிண்ட் ஆன எஸ்பி சார் வர்றாங்க. பத்து நிமிஷத்துல ரீச் ஆவாங்க.”

மீராவின் போன் மீண்டும் ஒலித்தது. அந்தப்பக்கம் கேட்டது அதே கரகரப்பான, கம்பீரமான குரல்.
“குட் ஈவினிங் மேம். வாட்ஸ் த ஸ்டேட்டஸ்?”

மீராவுக்குள் ஒரு மெல்லிய நடுக்கம். அவள் அந்த குரலின் தாக்கம் தன்னில் ஏற்படுத்துகிற விளைவை உணர்ந்த போதும் அதை ஆராய முற்படாமல், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், நிதானமாக அந்த கிராமத்தின் நிலவரத்தை சுருக்கமாக விளக்கினாள்.
“நான் இங்கேயே தான் இருக்கேன். அரசாங்கத்து கிட்ட பேசி, ஒரு பாசிட்டிவ் முடிவு வர்ற வரைக்கும் இங்கிருந்து நகர மாட்டேன்.”
மறுமுனையில் ஒரு நொடி நிசப்தம். பிறகு அதே கரகரப்பான குரல் ஒருவிதமான ஏளனத்துடன் கேட்டது:
“ஆர் யூ இன்செயின்? இது அரசாங்கத்தோட உத்தரவு. உணர்ச்சிவசப்பட்டு எடுக்குற முடிவுகள், உங்க கரியருக்குப் பெரிய தடையா மாறும்னு புரியலையா?”
“எனக்கு என் கரியரை விட, என் முன்னாடி பசியில இருக்கற குழந்தைகளோட உயிர் தான் முக்கியம், எஸ்பி.”
அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள்மீரா, “நன்றி” என்று சொல்லிப் போனைத் துண்டித்துவிட்டாள்.
கிராமத்தின் நுழைவாயிலுக்கு வந்தாள் மீரா. மலையிலிருந்து வீசிய காற்றில் ஆழிஞ்சி பூக்களின் வாசமும்,  குளிர்ச்சியும்  கலந்து வீசின. ஆனால், அந்த இயற்கையின் அமைதிக்கு மாறாக, அவளது மனது ஏதோ ஒரு பெரும்புயலை எதிர்பார்த்துத் துடித்தது.
தூரத்தில் ஒரு வாகனம் சீறிக்கொண்டு வந்தது. கர்நாடக பதிவு எண் கொண்ட அந்த அரசு வாகனம், மலைப்பாதையின் வளைவுகளில் சற்றும் வேகம் குறையாமல் வந்து மீராவின் முன்னால் நின்றது.
கதவு திறந்தது. முதலில் வெளியே தெரிந்தது அந்தப் பளபளப்பான காலணிகள். அடுத்து, காக்கி சீருடையில் மின்னிய மூன்று நட்சத்திரங்கள். எஸ்பி அந்தஸ்து  அவனைச் சுற்றி ஒரு நெருப்பின்  வளயத்தை உருவாக்கியிருந்தது. அவன் வாகனத்திலிருந்து இறங்கி நிமிர்ந்தான்.
மீரா பார்த்தாள். ஒரு கணம் காலம் உறைந்து நின்றது.
அதே கம்பீரமான உடல்வாகு. அதே கட்டுக்கோப்பான தோற்றம். தலைமுடி ஸ்டைல் முதல், கண்களின் அந்த கூர்மையான தீட்சண்யம் வரை… வர்மன்!
இருவருமே நகரவில்லை. அந்தச் சிறிய இடைவெளியில் காற்று கூட நுழைய முடியாமல் தவித்தது. அவனது பார்வையில் தெரிந்த அந்த மர்மம், மீராவின் இதயத்தில் ஏதோ ஒன்றை மீண்டும் கிளறியது. அவன் நிதானமாக நடந்தான். ஒரு முழுமையான போலீஸ் அதிகாரியின் நடையில் எவ்வித உணர்ச்சியும் இல்லை. அவனது ஒவ்வொரு அடியும் ஒரு சட்ட உத்தரவு போல உறுதியாக இருந்தது.
அவன் அவளுக்கு முன்னால் வந்து நின்றான்.தன் கையை நீட்டினான்.
“வி.ஆர். வர்மன், ஐபிஎஸ். சூப்பரிண்டெண்டெண்ட்ஆஃப் போலீஸ், தேனி.”
மீரா தன் பார்வையை அவனது கையில் நிலைநிறுத்தினாள்.
அவன் குரலில் இருந்த அந்த ஆழம், அவளை அந்த பனிபடர்ந்த நாட்களுக்கே அழைத்துச் சென்றது. அதே கை… அன்றைக்கு மியூசோரி பனியில் உதவிக்கு நீட்டிய அதே கை. ஆனால் இன்று, அது சட்டம் மற்றும் அதிகாரத்தின் சின்னமாக அவளுக்கு முன்னே விரிந்திருந்தது.
அந்த வினாடி, அவளது உள்ளுணர்வு அவளை எச்சரித்தது.ஆனாலும், ஒரு அரசு அதிகாரியாக அவள் தன் கையை நீட்டினாள்.
“மீரா , ஐஏஎஸ். கலெக்டர்,தேனி.”
இருவரது கைகளும் கோர்த்துக் கொண்டன. அது ஒரு அதிகாரப்பூர்வமான கைகுலுக்கல் மட்டுமே. ஆனால் அந்தத் தொடுதலில் பல வருட மௌனம் பேசியது. இருவருமே அந்தப் பிடியை இரண்டு நொடிகளுக்கு மேல் நீடிக்க விடவில்லை. சட்டென்று விலக்கினார்கள்.
“சிச்சுவேஷன்?”
ஒரே வார்த்தை. கட்டளை தொனி.
மீரா அவனை ஒரு நொடி பார்த்தாள்.
“கன்ட்ரோல்-ல இருக்கு.”
“நான் கேட்டது சிச்சுவேஷன். நீங்க பண்ற அசெஸ்மெண்ட் இல்லை.”
மீராவின் கண்கள் சிறிதாகின.
“மூணு நாள் உண்ணாவிரதம். நூறு குடும்பம். லேண்ட் அக்குஷஷன் இஷ்யூ. கிராம தலைவர் சமாதானத்துக்கு ரெடி ஆகனும்…டென்ஷன் இருக்கு … ஆனால் ஃப்ரெஜைல் பீஸ் இருக்கு. அதை உடைக்கக்கூடாது.”
வர்மன் சுற்றிலும் பார்த்தான். கிராமத்தின் நுழைவை  ஸ்கேன் பண்ணினான். இளைஞர்கள். கூட்டம். இறுகிய முகங்கள்.
“என்னோட டீம்-ஐ உள்ளே அனுப்பணும்.”
“வேண்டாம்.”
வர்மன் மீராவை பார்த்தான். “எக்ஸ்க்யூஸ் மீ?”
“யூனிஃபார்ம் பார்த்தா இந்த மக்கள் ரியாக்ட் பண்ணுவாங்க. இப்போ நான் ஒரு ட்ரஸ்ட்-ஐ பில்ட் பண்றேன். அதை ஒரே நிமிஷத்துல நீங்க டெஸ்ட்ராய் பண்ணிடுவீங்க.”
“என்னோட டீம் உள்ளே வரும்.”
மீரா திரும்பினாள். “வர மாட்டாங்க.”
வர்மன் ஒரு நொடி அவளை பார்த்தான். இவள் இன்னும் மாறவே இல்லை.
“மேடம், நான் ரிக்வெஸ்ட் பண்றதில்லை.இன்ஃபார்ம் பண்றேன்.”
“நானும் இன்ஃபார்ம் பண்றேன். என்னோட பெர்மிஷன் இல்லாம ஒரு யூனிஃபார்ம் கூட இந்த கிராமத்துல நுழையாது.”
வர்மன் நேரே வந்தான். குரல் தாழ்ந்தது.கூர்மையானது.
“உங்களுக்கு உங்க அதாரிட்டியோட லிமிட் தெரியுமா?”
“உங்களுக்கு தெரியுமா?”
வர்மன் ஒரு நொடி அமைதியாக இருந்தான்.
பிறகு …..மிக மெல்லிய குரலில், கோபம் இல்லாமல்….
“நீ இங்க சேஃப் இல்லை, மீரா.”
மீரா உறைந்தாள்.
“மேடம்.”
“மீரா.” அவன் விடவில்லை. “யூனிஃபார்ம் இல்லாம சொல்றேன். எஸ்பி இல்லாம சொல்றேன். இந்த கிராமத்துல இரவு தங்கறது… இது ரைட் இல்லை.”
மீரா அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள். அவன் பயன்படுத்திய அந்தப் பெயர், அவன் வாயினின்று அவள் கேட்டும் அந்த  “ம்மீரா” ..அந்தச் சூழலில் அவளுக்கு ஒரு பெரும் சுமையை ஏற்றியது! அவள் மெல்ல, ஆனால் உறுதியாகத் தன் வாயைத் திறந்தாள்.
“மேடம்… மீரா மேடம்… மிஸ்டர் வர்மன்.”
வர்மன் ஒரு நிமிடம் திகைத்தான். அவனது உதடுகளில் மெல்லிய, ஏளனமான சிரிப்பு படர்ந்தது.
“நிஜமாவா? உங்க பிடிவாதத்துக்கு இது நேரமில்லை… மிஸ்… அல்லது மிசஸ்… மீரா மேடம்.”
“பல வருஷத்துக்கு முன்னாடி யாரோட புரொட்டக்ஷனும் வேண்டாம்னு டிசைட் பண்ணினேன். அந்த டிசிஷன் இன்னும் மாறலை.”
அவள் நடந்தாள்.
திரும்பவில்லை.
ஆனால் கண்கள்… ஒரு நொடி கலங்கின. யாரும் பார்க்கவில்லை.

அந்த இரவின் அமைதி பூம்பாறை கிராமத்தைஒரு போர்வையாய் போர்த்தியிருந்தது. ஆலமரத்தின் விழுதுகளுக்கு இடையே நிலவொளி ஊடுருவி,தரையில் விசித்திரமான நிழல்களை வரைந்து கொண்டிருந்தது.
மரக்குடில்களுக்கு வெளியே, அடர்ந்த மரங்களின் நிழலில், ஒரு பழைய கயற்றுக் கட்டிலைப் போட்டிருந்தார்கள். மீரா மெல்ல அதன் மேல் படுத்துக்கொண்டாள். களைப்பினால் உடல் சோர்ந்திருந்தாலும், அவளது மனம் அந்தப் போராட்டத்தின் விளைவுகளைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.
சில அடிகள் தள்ளி, அவன் வந்திருந்த ஜீப்பிற்கு அருகில் அமர்ந்திருந்தான் வர்மன்.  அதே கம்பீரமான தோரணையுடன், ஜீப்பின்கதவில் தலை சாய்த்து கண்களை மூடியிருந்தான். ஆனால், அவன் உறங்கவில்லை என்பது அவன் பிடித்திருந்த அந்த இறுக்கமான கைகளிலிருந்து புரிந்தது.
அவன் கண்கள் மெல்லத் திறந்தன. அந்த இருட்டிலும் அவனது பார்வை மீராவின் மீதுதான் நிலைத்தது. அவள் ஒருக்களித்து படுத்திருந்த விதம் அவளது உடல்வாகு… ஒரு கோட்டோவியமாய் உள்ளே படிந்தது.
அவன் கைகள் பக்கவாட்டில் இறுகின.
இன்னும் அதே மீரா. ஒரு அடி கூட விடாத அதே மீரா!
“ஏன் இப்படி? ? ஏன் மீரா? “ஏண்டி….??”. அந்தச் சொல் அவனது உதட்டு நுனி வரை வந்து தங்கியது!



Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!