அன்றைக்கு அருணுக்கு பிறந்தநாள். நண்பர்களை கல்லூரியில் சாப்பிட வேண்டாம், வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு ஊர் சுற்றிவிட்டு வீட்டிற்கு போகலாமென சொல்லி இருந்தான். அவர்களுக்காக கல்லூரி பார்க்கிங்கில் காத்திருந்தான். யாரோ அவனை உற்றுப் பார்ப்பது போல உணர்வு பிறந்தது, சுற்றும் முற்றும் பார்த்தால் கண்களுக்கு மனிதர்கள் யாரும் தென்படவே இல்லை.
சிறிது நேரத்தில் அவனை நோக்கி கோபமாய் முறைத்துக் கொண்டே நடந்து வந்தான் கிஷோர். ‘ஹ.. உங்க வீட்டு நிலைமை என்னன்னு தெரியாம அந்த பொண்ணு உன்ன பெருசா நினைக்குது’ என்று வன்மத்தை கொட்டினான்.
அருணுக்கு சலிப்பு தட்டியது. ஒன்றுமே பேசாமல் கிஷோரை ஓர் பார்வை பார்த்தான். கிஷோர் “அங்க உன் வீட்ல பேங்க் பேங்க்கா ஏறி இறங்கிட்டு இருக்காங்க. உனக்கு சில் பண்ணவெல்லாம் டைம் இருக்கா என்ன” கேட்டான்.
அருண் பின்னால் தமயந்தி, பூர்ணிமா, அவன் நண்பர்கள் வருவதை கண்டவன் “நெக்ஸ்ட் டைம் பேசலாம் ப்ரோ” என்று அவன் கைகளில் தட்டிவிட்டு நண்பர்களை நோக்கி கைகளை விரித்துக்கொண்டே போக… சிரஞ்சீவியும் பூர்ணிமாவும் ஓடி வந்து அவனை அணைத்துக்கொண்டு ‘ஹாப்பி பர்த்டே’ என்று வாழ்த்தினார்கள்.
புவன் “இப்போ அருண் கிட்ட பேசி அவன் எப்படி இருக்கான் என்ன பண்ணுறான்னு கேட்டு சொல்ற ” என்று தமயந்தியை ஊக்கினான்.
தமயந்திக்கோ யாரோ எங்கிருந்தோ அவளை பார்ப்பது போல இருக்க அவளும் சுற்றி முற்றி பார்த்தாள். பின்னால் அவர்கள் வகுப்பிருக்கும் கட்டிடத்தின் பக்கத்தில் ‘பிளேஸ்மென்ட்’ ஆபிசின் ஜன்னலில் யாரோ நின்றிருக்கும் உருவம் தெரிந்தது.யாரென தெரியவில்லை. கண்டுகொள்ளாமல் திரும்பியவள் கண்களுக்கு கொஞ்ச தூரதத்தில் கிஷோரும் தென்பட “பை பை கிஷோர்” என்று அவனுக்கு சொல்லிவிட்டு புவனிடம் “பாரு கிஷோர் கிட்ட எந்த தயக்கமும் இல்லாம பேசிட்டேன் அதுவே போதுமே” என்றாள்.
புவனோ “அதெல்லாம் வேலைக்கே ஆகாது” என்று சிரித்தான்
தமயந்தி “ஓகே பண்றேன் ” என்றவள் அருண் நோக்கி நடந்தாள்.
அருண் அவள் முகத்தை பார்த்ததும் “ஹேப்பி பர்த்டே அருண்” என்றாள்
அருண் “நன்றி நன்றி” என்றான் உற்சாகமாக. புவன் புருவத்தை உயர்த்தி காட்டி கண்களால் இன்னும் பேசு என்று செய்கையில் பேச அருண் புவன் நோக்கி திரும்பும் முன் “நல்லா இருக்கியா” கேட்டாள் தமயந்தி
அருண் விசித்திரமாக பார்த்தாலும் “ம்ம் நல்லா இருக்கேன். ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு ரிலாக்ஸ்ஸா இருக்கேன்” என்றான்.
தமயந்தி அடுத்து என்ன பேசுவது என்று தவிக்க அருண் தொடர்ந்தான் “பிளேஸ்மென்ட்ல எந்தெந்த கம்பெனிக்கு இன்டெர்வியூ கொடுக்க போறன்னு லிஸ்ட் குடுத்துட்டியா”
தமயந்தி “ஆங் கொடுத்துட்டேன் அந்த லிஸ்ட் எப்ப வேணாலும் மாத்திக்கலாமாம். சொல்லிருக்காங்க” என்றாள். வேலை கிடைக்குமென உறுதி அவள் பேச்சில் தெரிந்தது.
அருண் “குட் ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லிவிட்டு புவன் பக்கம் திரும்ப போக..,
தமயந்தி விடாமல் “புது காரா நல்லா இருக்கு” என்று அவன் வந்திருக்கும் காரை காட்டி கேட்க
அருண் “ஆமா ஆமா புது கார்தான். இவனுங்க தான் ப்ரசென்ட் பண்ணானுங்க” என்றான்.
தமயந்திக்கு அதிர்ச்சியானது. மேற்கொண்டு பேச வராமல் யோசனையில் ஆழ்ந்தாள். உள்ளுக்குள் பூக்கும் இயலாமையை பேசவா முடியும்?!
அதன்பின் ஐவரும் பர்த்டே பார்ட்டி கொண்டாட சென்றனர்.
தமயந்தியின் புருவம் சுருங்கி இருப்பதில் அவள் எண்ண போக்கு புரியாமல் போகுமா அருணுக்கு. எல்லோரும் கொண்டாட்டமென டான்ஸ் பாட்டு என்று பிசியாக இருக்க.., அருண் “என்ன எப்படி போகுது உன் கம்யூனிகேஷன் க்ளாஸ் எல்லாம். புவன் ரொம்ப டார்ச்சர் பண்றானோ”
தமயந்தி கொஞ்சமாக சிரித்து “ஆமா உன்கிட்ட நீ இப்ப என்ன பண்ற உன் நிலைமை என்னன்னுலாம் கேட்டு அவன்கிட்ட சொல்லணும்னு சொன்னான்”
அருண் சிரித்தான் “ஆமா டீச்சர் புவன் ரொம்ப ஸ்ட்ரிக்ட். நீ அவன் சொல்றத செய்யனும். செஞ்சு முடிக்கற வரை விடமாட்டான். இந்த டாஸ்க் செய்யலன்னா இதுக்கு மேல கஷ்டமான டாஸ்க் கொடுத்து செய்ய சொல்வான்”
தமயந்தி “ஐயோ ஆமா. ஆனா நான் கிளாஸ்ல இப்ப எல்லார் கிட்டேயும் பேசுறேன் தெரியுமா. அன்னிக்கு வெளில போயிருந்தோமா வேற ஒரு பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணேன்.அவங்க தேங்க்யூ சொன்னாங்க” சிரித்துக்கொண்டே பெருமையாக சொன்னாள்
அருண் “ம்ம்… ஏன் அது தமயந்தி? அப்படி எது உன்ன தடுக்குது? தெரியாதவங்க கிட்ட பேச பழக” கேட்டு அவளை நேராக பார்த்தான்
எதிர்பார்க்கவில்லை அவள் இப்படியொரு அதிர்ச்சி ‘மொமெண்ட்’. தொண்டை கவ்வி மூச்சு விட சிரமமானது. தமயந்தி “அது அப்படியே பழகிட்டேன்.. காரணம்ன்னு சொல்ல முடியல” என்றவள் தொடர்ந்து “சொல்லு அருண் நீ இப்ப என்ன பண்ணிட்டு இருக்க. காலேஜ் பக்கமே வராம இருக்க, டிகிரி வாங்கிடுவியா? வேலை எல்லாம் எப்படி போகுது”
சின்னதாக சிரித்தவன் கைக்கு பக்கத்தில் கிடைத்த பிளாஸ்டிக் செடியில் பிளாஸ்டிக் பூவை பார்த்துக்கொண்டே “ மூணாவது படம் ப்ரொடக்ஷன் போயிட்டு இருக்கு. படத்தை விநியோகம் செய்றதுல போட்டி இருக்கு, அதுல கவனம் செலுத்த மத்ததை எல்லாம் மறக்கவேண்டி இருக்கு. பெர்சனல்க்கு ஒரு ஃபோன் ஆபிஸ் யூசேஜ்க்கு இன்னொரு ஃபோன்னு போனேன்… பெர்சனல் போன் யூஸ் பண்ணவே முடியல” என்றான். அந்த பூவை அங்கிருந்து எடுத்து அதை ரசித்து பார்த்து அவளிடம் கொடுத்தான். அவன் கொடுப்பதை பேச்சு சுவாரஸ்யத்தில் வாங்கிக்கொண்டு தமயந்தியும் பேசிக்கொண்டே போனாள். “அச்சோ அதான் கண்ணுக்கு கீழ எல்லாம் கருவளையம் நல்லா தெரியுது. ஹெல்த் பார்த்துக்கோ அருண்” என்றாள். அவன் ஆபிஸ் கைபேசி எண் வாங்க மனம் உந்தினாலும் கேட்க சங்கடமாக இருந்தது.
அவள் அக்கறை பேச்சில் எப்போதும் போல மெழுகாக உருகியது அவன் நெஞ்சம். இயல்பாக அவன் கையிலிருந்து அவள் அந்த பூவை வாங்கிக்கொண்டதும், கண்களை சுருக்கி அவன் முகத்தை அவள் சுட்டிக்காட்டியது மனதில் தாக்கத்தை ஏற்படுத்த..,மிதமிஞ்சிய அன்பில் செய்வதை மறந்து தமயந்தியிடம் இன்னமும் நெருங்கினான் “புவன் என்னை பத்தி என்ன தெரியும்ன்னு கேட்டா என்ன சொல்லுவ, என் போன் நம்பர் வேண்டாமா? என்னிக்காச்சும் என்கிட்டே பேசணும் தோணுச்சுன்னா எப்படி பேசுவ? என்கிட்ட பேசணும் தோணலையா என் ஞாபகமே வரலையா” கேட்டான்.
அருண் வரிசையாக கேள்வி கேட்டு அவளையே நெருக்கத்தில் நின்று பார்க்கும் பார்வை வீரியம் தாளாமல் தவித்தாலும் தைரியத்தை கூட்டிக்கொண்டு “ஆமா அருண் உன் ஆபிஸ் போன் நம்பர் வேணும் குடு, அப்பறம் ப்ளீஸ் இப்படி என்ன சித்திரவதை செய்யாத. எனக்கு இதெல்லாம் வரல… நான்… நான் வேலைக்கு போய் இங்க விட்டு தூரமா எங்கேனும் போயிடனும்… அண்ட் நீங்கெல்லாம் ரொம்ப பெரிய இடம் நான் இதுக்கெல்லாம் செட் ஆகமாட்டேன்” என்றவள் பின்னே நகர்ந்து அவன் முகத்தை பார்த்தாள். அதிர்ச்சி குழப்பம் இரண்டும் வெளிப்படையாக தெரிந்தது. ஆனாலும் மனதில் உள்ளதை தொடர்ந்தாள் “நான் ரொம்ப சாதாரண ஆளு, என்கிட்டே இருக்கிறதெல்லாம் வெறும் இந்த மனசு மட்டும்தான். இத குத்தி குதறி கொலை பண்ணாத ப்ளீஸ்” கைகூப்பினாள். கூப்பிய கைகளை தொட வந்தவனை தவிர்த்து பின்னே நகர்ந்தவள் “ சாரி ஏதாச்சும் ஹர்ட் பண்ணிருந்தா… நான் இப்படி பேசலைன்னா தினம் தினம் ஹர்ட் ஆகுறேன்” என்றவள் அவனை விட்டு தூரமாக விலகி நடந்து சென்றுவிட்டாள்.
அருண் சுற்றி முற்றி பார்த்தான் சிரஞ்சீவி புவன் இருவரும் பூர்ணிமா அடுத்தடுத்து பலூன் சுட்டு தள்ளுவதை கைதட்டி ஊக்குவித்துக் கொண்டிருந்தார்கள். உள்ளுக்குள் உடைந்தாலும் பூர்ணிமாவின் மகிழ்ச்சியை காணுகையில் எதையும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் அவர்களுடன் சேர்ந்துக்கொண்டான்.
வகுப்பு முழுக்க பூர்ணிமாவின் திருமணம் பற்றி விவாதம் தொடங்கியது. ட்ரைனில் சிலர் வருவதாகவும்,பிளைட்டில் சிலர் வருவதாகவும் சொல்ல, பூர்ணிமா தமயந்தியை ஒரு வாரத்திற்கு முன்பே வரச்சொல்லி அடம்பிடித்தாள். சடங்குகள், சம்பிரதாயங்கள் நடக்கும்போது பூர்ணிமாவுடன் அவள் இருக்கவேண்டும் என்று ஆசையாக கேட்டாள்.
கோலாகல திருவிழாவாக நடக்கவிருக்கும் திருமணம் நான்கு நாட்கள் நடக்குமாம். நான்காம் நாள் மாலை மணமகன் தாலி கட்டி அக்னியை சுற்றி வலம் வந்ததும் முடிவுரும். ஆதலால் அந்த இரவு அங்கேயே தங்கிவிட்டு இவர்கள் அடுத்த நாள் காலை கிளம்பலாம் என்று ஐடியா கொடுத்தாள் பூர்ணிமா.
மூவர் கூட்டணி அவர்கள் தனியாக திட்டமிட்டு அருணுக்கு வாங்கி கொடுத்திருக்கும் புது காரில் சேர்ந்து வருவதாக தெரிவித்தார்கள்.
பூர்ணிமா திருமணத்தன்றே தேர்வு இருப்பதால் பூமிகா வரமுடியாத சூழல் என்று சொல்லிவிட தமயந்தி தெரியாத ஊரில் எப்படி தனியாக இருப்பது என்று குழப்பத்தில் ஆழ்ந்தாள். பூர்ணிமா கடைசியாக அதிகாரத்தை கையில் எடுத்து நான் பிளைட் டிக்கெட் புக் செய்துட்டேன் நீ வந்துதான் ஆகவேண்டுமென சொல்லவும் தமயந்தி ஒருவாரம் அவளுடன் இருப்பதாக ஒத்துக்கொண்டாள்.
தமயந்திக்கு ஊரிலிருந்து அவள் அம்மா அழைத்து அவர்களுக்கு சிறுவயதிலிருந்து மிகவும் உதவியாக இருந்தவர் மகள் திருமணத்திற்கு ஷாப்பிங் செய்ய வருவதாக தெரிவித்தார்.
பெண்ணிற்கு ஆடை அணிகலன்கள் எல்லாம் வாங்க கல்யாண பெண்ணில்லாமல் பெரியவர்கள் எல்லோரும் தமயந்தியின் அம்மாவுடன் காரில் வந்து இறங்கினார்கள்.
தமயந்தி “என்னம்மா பொண்ணு எங்க”
“அது பொண்ணுக்கு பூ வெச்சிட்டு போயிட்டாங்க.இனி வீட்டை விட்டு வெளில வந்தா நல்லா இல்லன்னு கூட்டிட்டு வரல” என்றார்கள் கல்யாண பெண்ணின் தாயும் இவள் அம்மாவும்.
பூமிகாவும் தமயந்தியும் பார்த்து பார்த்து பெண்ணுக்கு தேவையானதை எல்லாம் வாங்க பல இடம் அழைத்துச்சென்று காட்டி வீடியோ காலில் பெண்ணுக்கு காட்டி ஒவ்வொன்றாய் வாங்கினார்கள்.
பெண்ணை பார்க்க வந்த பையன் “ பொண்ணு மாடர்ன்னா இருந்தாதான் பிடிக்கும் எனக்கு” என்று சொல்லிவிட்டு சென்றுவிட, கல்யாண பெண்ணோ இந்த சீரியலில் இந்த ஹீரோயின் போட்ட மாதிரி டாப்ஸ் வாங்குங்க, இந்த மாதிரி பிளவுஸ் தைங்க என்று வேலை வாங்கினாள். “தமயந்திக்கா நீங்க போட்டிருக்க மாதிரி காது ஒட்டி சின்ன ஜிமிக்கி வாங்கி அனுப்புங்கக்கா. முக்கா காலுக்கே வர மாதிரி ஷைனிங் லெகின்ஸ் வாங்கி அனுப்புங்கக்கா” என்று தனியாக பட்டியல் கொடுத்தாள்.
கல்யாணத்திற்கு கட்ட போகும் புடவைக்கு டிசைன் டிசைனாக பிளவுஸ் தைக்க அங்கேயே இடம் பார்த்து தமயந்தி தைக்க கொடுக்க அவர்கள் தைத்து கொடுக்க இருபது நாளுக்கு மேல் ஆகும் என்றார்கள். வந்திருந்த பெண்ணின் அம்மாவோ நீ கல்யாணத்துக்கு வரும்போது வாங்கிட்டு வந்துரும்மா என்றார்கள். தமயந்தி கல்யாண தேதி கேட்டு யோசனையில் ஆழ்ந்தாள். பூர்ணிமாவின் திருமணத்திற்கும் இந்த கல்யாணத்திற்கும் சரியாக ஒரே வாரம் இடைவெளி இருந்தது.
பூர்ணிமா திருமணம் முடிந்த அந்த இரவே ஊருக்கு திரும்புவதாக சொன்னாள் தமயந்தி. பூர்ணிமா அதற்கும் ஏற்பாடு செய்துக்கொடுத்தாள்.
பூர்ணிமா “நீ கவலையே படாத தம்மு பேபி, தாலி கட்ட மாலை ஏழு மணி ஆகும் நீ எட்டரைக்குள்ள என்கூட போட்டோ எடுத்துட்டு சாப்டுட்டு ஏர்போர்ட் போனா பத்து மணிக்கு பிளைட் ஏறி நடுராத்திரி ஒருமணிக்கு இங்க வந்துரலாம். சரியா”
தமயந்தி சரி என்று சொல்ல, பூர்ணிமா “என் கல்யாணம் நடக்குற எடத்துல ட்ராவல் டெஸ்க் இருக்கும். அங்க உன் பேர் சொன்னா போதும் பிளைட் டிக்கெட், டாக்ஸி எல்லாமே ரெடியா இருக்கும். சரியா”
தமயந்தி சம்மதம் சொன்னவுடனேயே தோழிகள் இருவரும் அவர்கள் இருவரின் கைவண்ணத்தையும் காட்ட தொடங்கிவிட்டனர். திருமணத்திற்கு தமயந்தி அணிய பூர்ணிமா ட்ரெஸ் தேர்வு செய்தாள். பூமிகா மற்ற நாட்களுக்கு தேர்ந்தெடுத்து கொடுக்க தமயந்திக்கு என்ன சொல்வதென்று தெரியாத நிலை.
இப்போதெல்லாம் தமயந்திக்கு ‘இவங்களுக்கு நான் செட் ஆகமாட்டேன்’ என்கிற எண்ணம் மிகவும் ஆழமாக மனதில் உழல்கிறது. பூமிகாவோ அவள் மனஅழுத்தத்தில் இருப்பதால்தான் இப்படியெல்லாம் தோன்றுகிறது என்று சமாதானம் சொல்லி அவள் வேலையை தொடர்ந்தாள்.
பூர்ணிமாவோ பூமிகாவுடன் சேர்ந்து தமயந்திக்கு ஒரு ஆப் ஷோல்டர் பிளவுஸ் தைத்து கொடுத்து என் கல்யாண வைபவத்துக்கு இத போட்டு கலக்கு பேபி என்று கொடுத்தாள்.
தமயந்தி அதிர்ச்சியாக “ஏங்க இதெல்லாம் மாடலிங் டைம்ல காமெரா முன்னாடி மட்டும் தாங்க நான் போட்டிருக்கேன். எனக்கு குளிரும்” என்றாள்
பூர்ணிமா “நானே தச்சது தம்மு எனக்காக போடமாட்டியா.அன்னிக்கு அங்க வரவங்க எல்லாரும் செமையா வருவாங்க. இவ்வளவு நல்ல ஷோல்டர், உயரம் எல்லாம் இருந்து நீ இப்படி கியூட்டா ட்ரெஸ் பண்ணிட்டு நிற்கலன்னா எப்படி சொல்லு”
தமயந்தி அப்போதும் மறுக்க பூமி “இதுக்கு இன்னொரு பிளவுஸ் தச்சுக்கலாம் தம்மு. பூர்ணிமா கல்யாணத்துக்கு மட்டும் இத போட்டுட்டு போயிட்டு வா. அங்க உன்னை விட இன்னும் வெளிப்படையா ட்ரெஸ் பண்றவங்க இருப்பாங்க. உனக்காக நாங்க பார்த்து பார்த்து தச்சிருக்கோம்” வற்புறுத்தினாள்.
பூர்ணிமா “ரைட்.., என் கசின்ஸ் எல்லாம் பயங்கரமா ட்ரெஸ் பண்ணிருப்பாங்க. உனக்கு அந்த லைட், ஹெவி மேக் அப்களுக்கு நடுல இது சாதாரணமா தெரியும்”
தோழிகளின் வற்புறுத்தலில் தமயந்தி அந்த லெஹங்கா அணிந்து பார்க்க பூமிகவும் பூர்ணிமாவும் அவளை பார்த்து மயங்கி நின்றனர். அழகா இருக்க என்று நூறு முறை சொல்லி சொல்லி கல்யாணத்தன்று அதையே அணிய ஒத்துக்கொள்ள வைத்தனர்.
பூர்ணிமா அவளுக்கு தெரிந்தவர்கள் எல்லோரையும் பத்திரிக்கை வைத்து அழைத்துவிட்டு அவள் ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டாள். திருமணம் முடிந்து இரண்டு மாதத்தில் திரும்ப வந்து தேர்வுகள் மட்டும் எழுதிவிட்டு சென்றுவிடுவாள். எல்லாவற்றையும் முறையாக ஏற்பாடு செய்துவிட்டு சென்றாள்.
தமயந்திக்கு அவள் ஊரில் கல்யாணம் ஆக இருக்கும் பெண்ணும் அழைத்து “அக்கா அவர் கல்யாணத்துக்கு பிரண்ட்ஸ் எல்லாம் வருவாங்க மேக்கப் எல்லாம் சொதப்ப கூடாதுன்னு சொல்றாருக்கா பியூட்டிஷியன் கிட்ட கேட்கும்போது ஒரு கிரீம் சொல்லி அது அங்க கிடைக்கும் சொல்றாங்க அதையும் வாங்கிட்டு வாங்க” என்றாள்.
கல்யாண பெண்ணும் அவள் பெற்றோரும் இவள் தங்கையும் வாங்கி வர சொல்ல சொல்ல பட்டியல் கூடிக்கொண்டே போக போக தமயந்தியின் மூட்டை முடிச்சுகள் அதிகமாகிக்கொண்டே சென்றது.
திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தமயந்தி பூர்ணிமா வீட்டுக்கு சென்று சேர்ந்தாள்…
வீடு இல்லை அது! அரண்மனை! நேர்த்தியான கட்டிடம், அக்கறையாக பராமரிக்கப்பட்ட தோட்டம் எங்கு காணிலும் பணி செய்ய பணிப்பெண்களும் பாதுகாப்புக்கு பாதுகாப்பு ஆட்களும் இருந்தார்கள்.
பூர்ணிமா மணப்பெண்ணுக்கே உரிய ஜொலி ஜொலிப்பில் ஜொலித்தாள்.
தினமும் பூர்ணிமாவுக்கு நலங்கு வைத்து சீர் அடுக்கி விழா போல கொண்டாடினார்கள். மாலை வேளைகளில் ஆட்டம் பாட்டமெல்லாம் இருந்தது.
தமயந்தியை ஆச்சரியப்படுத்திய விஷயமே எப்படி கல்லூரியில் எதற்கெடுத்தாலும் கருத்தை சொல்லிக்கொண்டிருந்த பூர்ணிமா இங்கே விதிகளுக்கு கட்டுப்பட்டு சிரித்த முகமாக இருக்கிறாள்!
பூர்ணிமா “ இங்க இப்படிதான் தம்மு. நான் பிறந்ததிலிருந்து இப்படித்தான் இருக்கணும், இதைத்தான் செய்யணும், இப்படித்தான் போகணும்ன்னு ரூல்ஸ் எப்பவும் உண்டு. நான் அதை அப்படியே ஃபாலோ பண்ணி பழகிட்டேன். உன் கூட காலேஜ்ல இருந்த பூர்ணிமா வேற, அவளுக்கு ஓரளவுக்கு சுதந்திரம் இருந்தது. அந்த சுதந்திரத்துக்கு எல்லாம் இனி நான் போகணும்னா டைம் மெஷின் தான் வேணும்”
தமயந்தியின் ஆச்சரிய பார்வை மாறாமலே இருக்க பூர்ணிமா தொடர்ந்தாள் “இப்போ எனக்கு போட்டு இருக்க மேக்கப் பிடிக்கலன்னு நான் என் முக பாவத்தை கொஞ்சமா மாத்தினா கூட என்ன பார்த்து ஏன் முகம் இப்படி இருக்கு என்ன ஆச்சு கேள்வி கேக்குறவங்க எல்லாருக்கும் நான் பதில் சொல்லணும். அந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்றதுக்கு பதிலா நான் இப்படி சிரிச்ச முகமாக இருந்துட்டு போயிடுவேன்”
தமயந்தி “அச்சச்சோ உங்களுக்கு இந்த மேக்கப் பிடிக்கலையா”
பூர்ணிமா “பிடிக்கலன்னு இல்ல. அசௌகரியமா இருக்கு”
தமயந்தி “ நான் வேணா உங்களுக்கு கொஞ்சம் வேற மாதிரி ஹேர் ஸ்டைல் மாற்றி விடவா” என்று அக்கறையாக கேட்க
பூர்ணிமா “வேண்டாம் தம்மு”
தமயந்தி “நிஜமாவே இந்த அசௌகரியமெல்லாம் பொறுத்து தான் போயாகணுமா”
பூர்ணிமா “ நான் வெளி ஊருக்கு போய் எம்.பி.ஏ படிப்பேன்னு அடம் பிடிச்சதுக்கே அவ்வளவு கேள்வி கேட்டாங்க. என் அப்பாவுக்கு கோபம் அது எப்படி நீ என்னை இத்தனை பேர் கேள்வி கேக்குற மாதிரி செய்யலாம்ன்னு. அப்பா அரசியல்லயும் நல்ல இடத்துல இருக்கறதுனால கொஞ்சம் அழுத்தம் நிறைய இருக்கும். இப்ப வேற, ஸ்டேட் கவர்னராக போறதா சொல்றாங்க, இதுல என்னால எந்த பிரச்சினையும் வராம இருக்கிறது எனக்கு முக்கியமா படுது. சின்ன விஷயமா இருந்தாலும் என்னால பிரச்சனை ஆயிடக்கூடாதுன்னு நினைக்கிறேன்”
தமயந்திக்கு இப்போது ஒரு ஞானோதயம், எங்குமே யாருக்குமே ஒரு எதிர்பார்ப்பு, ஒரு தியாகம், ஒரு ஏக்கமும் அதற்காக விடுதலைக்கான போராட்டமும் உண்டு. சிலருக்கு சின்னதாக சிலருக்கு பெரிதாக…