அருந்ததீ எதுவும் செய்யாமல் இருக்கிறாரென அண்ணன்கள் இருவரும் அவர் அலுவலகத்துள்ளேயே வந்து உட்கார்ந்துக் கொண்டு திட்டிக் கொண்டிருந்தனர்.“இவ்வளவு லாபம் அவ்வளவு லாபம்ன்னு அடிக்கடி சொல்லுவ ஒரு 50 கோடி ரூபாய் கடன் கட்டி அருந்ததீ பிலிம் கார்ப்பரேஷன்ன நடப்புக்கு எடுத்துட்டு வர முடியலையா உன்னால” கேட்டார் மதன கோபால்
“அருணுக்கும் ஷிவானிக்கும் கல்யாணம் பண்ணா பேர பசங்க பேர்ல இருக்கிற லேண்ட் பாகத்த வித்து அடைக்கலாம்ல்ல” என்று இரண்டாவது அண்ணன் சொன்னார்.
அருந்ததீயின் மூளையோ ‘இவங்க என்ன மொத்த சொத்தையும் தின்னு தீர்க்க நினைக்கிறாங்களா’ என்று கேட்டாலும் பாசமுள்ள மனமோ “ச்ச இப்படி இவங்க விரக்தியாகுற நிலைமை வந்துடுச்சே’ என்று நொந்தது.
அருந்ததீ எப்போதுமே அண்ணன்களை தட்டி பேசாதவள் “அதெல்லாம் இப்போ முடியாதுண்ணா. ரண்டு பேரும் கொஞ்சம் அவங்க தொழில்ல ஸ்டெடியாகட்டும். அப்புறம் கல்யாணம் பத்தி பார்த்துக்கலாம்” என்றாள்.
கோபமடைந்தவர் மதனகோபால் “என்ன அருந்ததீ உன்கிட்ட தான் பணம் இருக்குன்னு அகங்காரம் தலைக்கேறிடுச்சோ” என்று கேட்டுவிட்டு “தெரியும்தானே சின்னவனுக்கு என்ன நடந்ததுன்னு…அது அருணுக்கும் நடக்காதுன்னு என்ன நிச்சயம்” என்று கேட்டார்.
மிரண்டு போனார் அருந்ததீ. அருணுக்கு என்ன ஆபத்து வருமோ என்று உள்ளம் பதைபதைத்தாலும் மகனின் எதையும் சமாளிக்கும் திறமை மீதுள்ள, அந்த கணம் தோன்றிய நம்பிக்கையில் “முடிந்தத செய்யுங்க பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு அலுவலகத்தின் அறைக்கு வெளியே வாசலில் காத்திருந்த மேனேஜரை அழைத்து ஆபிஸ் வேலைகள் பேசத்தொடங்கினார். எரிச்சலான மதன கோபால் கிளம்பி வெளியே போன பின் தாயுள்ளம் பரபரப்பானது.
வெளியே வந்த மதனகோபால் தம்பியிடம் “இவ நம்ம பேச்ச கேட்கணும்டா. எதையாவது செய்” என்றார்.
பூர்ணிமா தேர்வு எழுத சென்னைக்கு வந்தாள்.தந்தையின் இழப்பின் துயரத்தில், அதன் தாக்கத்திலிருந்து தமயந்திக்கு பத்து நாட்கள் முன்னே கிடைத்திருந்த வேலை வாய்ப்பு மட்டுமே ஆறுதல். பூமிகாவும் பூர்ணிமாவும் எத்தனை பேசியும் தோழியின் துன்பத்தில் உழலும் மனதை தேற்றமுடியவில்லை.தேர்வு எழுதி முடித்துவிட்டு எல்லோரும் ஓர் இடத்தில் ஒன்றாக கூடி உணவருந்த அமர்ந்தார்கள். பூர்ணிமா “வாழ்த்துக்கள் பேபி நல்லா பண்ணு” என்று தமயந்தி ஆஃபர் லெட்டர் வாங்கி பார்த்து சொன்னாள்.
சிரஞ்சீவி “எனக்கு தெரிஞ்ச ஆள்கிட்ட கேட்டிருந்தேன். பிரைவேட் பேங்க் ஒன்னுல நியூ ப்ராடக்ட் ஹெட் வேணுமாம். தம்ஸ் நீ அந்த இண்டர்வியூ அட்டென்ட் பண்றியா” கேட்டான்.
புவன் “ ஹே நல்ல சான்ஸ் தம்மு அத ட்ரை பண்ணி பாரு” என்று சொல்ல
அருண் “ஆமா ட்ரை பண்ணு” என்று வற்புறுத்த…
பூமிகாவோ பூர்ணிமாவோ தமந்தியையே அவள் பதில் எதிர்நோக்கி பார்த்தனர்.
தமயந்தி “ஏன் நான் சினிமா பீல்டுக்கு போறது பிடிக்கலையா? கண்டீப்பா உனக்கு போட்டியா வரமாட்டேன் அருண். ஏன் இப்ப வந்து இப்படி வெளியில கிடைக்கிற பேங்க்ல எல்லாம் வேலைக்கு வாங்கி தரேன்னு சொல்றீங்க”
அருண் “இது கொஞ்சம் கஷ்டம் அண்ட் அதுவும் இல்லாம பாலிவுட் வேற. வேண்டாம், சேஃப்ட்டி இல்ல” என்றான்
வந்ததே தமயந்திக்கு எரிச்சல்! தமயந்தி “உனக்கு போட்டியாலாம் வரமாட்டேன் அருண் பயப்படாத.அந்த பேங்க் வேலையை பத்தி கிஷோரும் சொன்னான்.அங்க பேக்கேஜ் ரொம்ப கம்மி, அதுவும் இல்லாம உங்க யாருடைய அனுதாபமும் பரிதாபமும் எனக்கு வேணாம். எங்க வேலை செய்யணும் எங்க போனும்னுனு நான் முடிவு பண்ணிக்கிறேன்” என்றவள் ஆர்டர் செய்த உணவு வந்ததும் கொஞ்சமாய் கொறித்துவிட்டு “எனக்கு வேலை இருக்கு நான் போறேன்” என்று சொல்லி ஹாஸ்டலுக்கு கிளம்பிவிட்டாள்.
பூமிகா “சொன்னேன் தானே நீங்க பெரிய ஆள்ன்னு காட்டிக்க நினைச்சீங்க அவ அத தவிடுபொடி ஆக்கிட்டா” என்று அவளும் அவள் உணர்வுகளை காட்டிவிட்டுப் போனாள்.
பூர்ணிமாவை நட்சத்திர விடுதியில் விட்டபின் நண்பர்கள் மூவரும் காரில் வீடு திரும்பினார்கள்.
சிரஞ்சீவி “தேவையாடா இது எனக்கு! நான் சும்மாதானடா இருந்தேன் இப்ப அந்த புள்ள என் மேல கோவிச்சுக்கிட்டு போகுது”
அருண் “இந்த ஃபீல்டுல இருக்குற கஷ்டத்தை நான் தினம்தினம் பார்த்துட்டு தானே மச்சான் இருக்கேன். எந்த வகையிலும் வெளியாள் எல்லாம் பிஸ்னஸ் குள்ள நுழையக்கூடாதுன்னு பெரிய நெட்ஒர்க்கா செட் பண்ணி வாழ்ந்துட்டு இருக்கானுங்க. இவனுங்க நம்மள முன்னாடியும் போக விட மாட்டாங்க பின்னாடியும் வர விடமாட்டாங்க. அதுலயும் பின்புலம் இல்லாம இந்த பீல்ட்ல ரொம்ப கஷ்டம், இவ வேற புரிஞ்சிக்க மாட்டேங்குறா.”
சிரஞ்சீவி “விடு மச்சான். ஒரு கம்பெனில வேலைக்குதானே போறா. மோஸ்ட்லி பைனான்ஸ் தானே பார்க்குற மாதிரி இருக்கும். சமாளிப்பா”
சிரஞ்சீவி சொல்லும் சமாதானம் அருணுக்கு பத்தவில்லை. தனியாக ஒரு முறை பேசிப்பார்க்க எண்ணிக்கொண்டான்.
தமயந்திக்கு மும்பை வந்து அவள் மற்ற நேர்காணல் செயல்முறைகளை முடித்துக் கொண்டு நிறுவனத்தின் நிறுவனரையும் பார்த்து பேசி போக அழைப்பு வந்தது.
தமயந்தி பூமிக்கு சொல்லவும், பூமிகா “அவனுங்க சொல்ற மாதிரி அந்த பேங்க் இன்டெர்வியுவும் அட்டென்ட் பண்ணி பார்க்கலாம் தானே ஒருவாட்டி” என்று கேட்டுப் பார்த்தாள்.
தமயந்தி “என் நிலமை தெரிஞ்ச நீயே இப்படி பேசலாமா பூமி” என்று கேட்டவள் “வீட்ல கடன்காரங்க தொல்லை அம்மாவுக்கு அவங்க நிலம் அடமானத்துல இருக்கேன்னு கவலை, அதுக்கு வட்டி கட்டணும், தங்கச்சிக்கு மேலே படிக்க காசு வேணும். இதெல்லாத்தையும் விட எனக்கு யாருமே தெரியாத இடத்துல போய் புதுசா ஆரம்பிக்கணும் போல இருக்கு பூமி. அப்பாவை நினைச்சா மனசு ரொம்ப வலிக்குது என்னனே தெரியல. அதுல இருந்து வெளியவே வரமுடியல. எனக்கு பார்க்கிற ஆம்பளைங்களை எல்லாம் இவன் சீட் பண்ணுவானா,அப்படி பண்ணா அவன் பசங்க பாவம் தானேன்னு நிக்காம எண்ணம் ஓடிட்டே இருக்கு” என்று தொண்டை அடைக்க பேச
சட்டென பூமிகா கண்களிலும் கண்ணீர் வந்தது “எனக்கு தெரியும் தம்மு எனக்கு தெரியும் நம்ம அப்பா நிறைய கெட்ட விஷயங்களும் செய்துருக்கிறார்ன்னு தெரிய வரப்ப எவ்வளவு வலிக்கும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று தமயந்தியுடன் சேர்ந்து அவளும் அழுதாள்.
“என் முழு சப்போர்ட் உனக்குத்தான்டி. நீ என்ன செய்யணுமோ செய். நான் உன்கூட இருக்கேன். இனி உன் முடிவை நான் கேள்விகேட்கல’ என்றாள் பூமிகா. முன்பொரு காலத்தில் அவள் வலிக்கு யாருமே கொடுக்காத ஆறுதலை தம்முவுக்கு நாம் கொடுப்போமே என்று எண்ணினாள்.
தமயந்திக்கு துணையாக பூமிகா சேர்ந்துக் கொள்ள இருவரும் மும்பை பயணப்பட்டனர்.
மும்பை நகரின் பரபரப்பும் மனிதர்களின் அவசரமும் நம்மூரை விட பன்மடங்கு இருந்தது.
பூமிகா “தம்மு இந்த ஊர்ல டிராவல் பண்ணவே நீ காலைல ரெண்டு மணிக்கெல்லாம் எந்திரிக்கணும் போலயே”
தமயந்தி “அதான் பாரேன். குண்டூசி விழக்கூட இடமில்லைன்னு சொல்வாங்களே. அது இதுதான் போல”
பூமிகா “எப்படிடீ தாக்குபுடிக்க போற”
தமயந்தி” அதெல்லாம் பார்த்துக்கலாம் வா. ஆனா இதெல்லாம் புதுசா இருக்குல்ல”
பூமிகா “சூப்பரா இருக்கு. நீ இங்க குட்டியா வீடு எடுத்து தங்குவியாம். உனக்கு துணைக்கு நான் அப்பப்ப வருவேனாம்” என்று கனவு கோட்டை கட்ட தொடங்கினாள்.
சினிமா துறை சார்ந்தவைகள் எல்லாம் கொடி நாட்டிருக்கும் ஜகஜோதியான பாந்த்ரா சென்று பார்த்தப் போது இருவரும் வாய் பிளந்தார்கள்.
பூமிகா “வாவ் தம்மு இந்த ஏரியா பாரேன் எனக்கு நாம இந்தியாவில தான் இருக்கிறோமான்னே டவுட் வந்துருச்சு.வேற உலகத்துக்கே வந்தது போல இருக்குல்ல”
தமயந்திக்கும் அதே உணர்வுதான் என்றாலும் அவள் தேவை பட்டியலின் நீளம் அதிகமே! இந்நகரின் ஆடம்பரம் அவள் வாங்கும் சம்பளம் போதுமா என்று கேள்விகேட்டது. பல ப்ரொடக்ஷன் நிறுவனங்கள், டான்ஸ் ஸ்டூடியோக்கள், தியேட்டர் ஸ்டூடியோக்கள், பியூட்டி சலூன்களை கடந்து அவளை வேலைக்கு எடுத்திருக்கும் நிறுவனத்தை தேடி கண்டுபிடித்து சென்று சேர்ந்தார்கள்.
தமயந்தியை வேலைக்கு எடுத்தவர் அங்கே இருக்க, இன்னொரு வாட்டசாட்டமான மனிதர் ஒருவர் கூட அமர்ந்திருந்தார்.
“வெல்கம் தமயந்தி. திஸ் இஸ் கல்யாண் சூர்யவர்தனன். இவர்தான் இந்த கே. எஸ் நிறுவனத்தோட ஓனர்” என்று அறிமுகம் செய்தார்.
தமயந்தி கைகுலுக்கி “ஹலோ சார்” என்றாள்
கல்யாண் எளிமையாக தமயந்தி பற்றி சொந்த ஊர், பின்னணி என்று பலது தமிழிலேயே கேட்டு விசாரித்துக் கொண்டிருக்க கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்தாள் தமயந்தி. எல்லோருக்கும் மனதில் இருக்கும் கேள்வியே அவரும் கேட்டார் “பின்புலம் இல்லாம இங்க வேலை செய்ய முடியும்ன்னாலும்,அது கஷ்டம். அதனால இங்க வேலை செய்ய உனக்கு விருப்பமா” என்று கேட்டார்.
தமயந்தி “பின்புலம் இல்லாம இருக்கலாம் சார் ஆனா தைரியம் இருக்கு. என்னால முடியும். கத்துக்குற மைண்ட் இருக்கு” என்று நிமிர்ந்து உட்கார்ந்து தன்னம்பிக்கையுடன் அவர் கண்களைப் பார்த்து சொன்னாள்.
கணநிமிடம் எப்போதும் அவள் கண்ணுக்கு கண்ணாக பார்க்கும் அருண் நினைவு மனக்கண்ணில் மின்னி மறைந்தது.
தமயந்தியின் பேச்சில் முகம் மலர்ந்த கல்யாண் “அப்போ வாழ்த்துக்கள் தமயந்தி வெல்கம் ஆன் போர்ட்” என்றவர் கார்ட் ஒன்றை நீட்டி “இந்தா பேங்க் கார்டு இது இந்த அக்கவுண்ட் டீடைல்ஸ். இனி இது உன் பொறுப்பு” என்றார்
தமயந்தி முழிக்க, தமயந்தியை இன்டர்வியூவில் தேர்வு செய்தவர் “ஆமாம் மேடம் இது இனிமேல் உங்க கையிலதான் இருக்கும். நாங்க பில்டிங் எல்லாமே பார்த்து வச்சிட்டோம் நீங்க கம்பெனிய செட் பண்ணி ஆளுங்களை வேலைக்கு எடுத்து கம்பெனி ரன் பண்றதுதான் பாக்கி” என்றார்
அப்போதும் தமயந்தி புரியாமல் குழப்பமாக அவர்களைப் பார்க்க
“எஸ், புதுசா ஒரு புரொடக்சன் கம்பெனியை நாம ஆரம்பிக்க போறோம். அதை முழுக்க முழுக்க நீங்கதான் பார்த்துக்க போறீங்க. அடிப்படையான சில விஷயங்கள் எல்லாம் நாங்க ஒரு டீம் கூட உங்களை செட் பண்ணி ட்ரைன் பண்ணிட்டு தான் இந்த ப்ராஜெக்ட்ல விடுவோம். அவங்க கிட்ட இருந்து எவ்வளவு தெரிஞ்சுக்க முடியுமோ அதை கத்துக்கோங்க. அடுத்து ஒன் இயர்ல நம்ம புரொடக்ஷன்ல அட்லீஸ்ட் மூணு படம் வெளி வந்துருக்கணும்” என்றார்
தமயந்திக்கு இப்போது தொண்டை அடைத்தது. தானாக மனதில் உள்ள கேள்வியை கேட்டுவிட அவள் எத்தனிக்க “இந்த ஊர்ல….”
கல்யாண் ஜோராக சிரித்தவர் “அம்மா அம்மா இந்த ஊர்ல இல்லை உங்க ஊர்ல ஆரம்பிக்க போறோம். உங்க ஊர்ல இருந்துதான் நீ வேலை பார்க்க போற கவலைப்படாதே”என்றார்
தமயந்திக்கு இப்போது அதிர்ச்சியில் தலைசுற்றியது.
கல்யாணோ “காட் ப்ளஸ் யூ மா. என் புது கம்பனியை நீ சீக்கிரமே நல்லபடியா ரன் பண்ண வாழ்த்துக்கள். அப்பறம் நம்ம கம்பனிக்கு நல்ல பெயர் ஒன்னு செலக்ட் பண்ணி கொடுத்துட்டு போ என்ன” என்று பேசிவிட்டு நகர்ந்து சென்றார்.
தமயந்தி அவளை வேலைக்கு எடுத்தவரை பார்க்க “லக்கி மா நீங்க. அவரே உங்களுக்கு நேர்ல வந்து வாழ்த்து சொல்றார்” என்றார்
“எனக்கு ஒண்ணுமே புரியல சார்”
“இந்தா இந்த டாகுமெண்ட் படிச்சு பார்த்து சந்தேகம் கேளு” என்று கொடுத்துவிட்டு போனார். அந்த பத்திரம் போல இருந்த பேப்பரில் நிறுவனத்தில் அவள் வேலை என்ன, பொசிஷன் என்ன என்றும் விளக்கி அவள் அந்த வேலையில் தொடர்ந்து கட்டாயம் மூன்று வருடம் வேலை பார்த்தே ஆகவேண்டுமெனவும் இருந்தது. வேலைக்கு சேர அவள் விருப்பப்படி அடுத்த மாதத்தில் ஓர் நாளில் வந்து சேரலாமெனவும் இருந்தது.
தமயந்தி மனமோ ‘இன்னும் ஒரு சீசன் ஷூட்டிங் இருக்கு, ஊருக்கு போகவேண்டிய வேலை இருக்கு அதுக்கு மேல ஏன் டைம் வேஸ்ட் பண்ணனும் ஜாயின் செய்துருவோம்’ என்றது. அவளுக்கு சரியென மனதில் பட்டதை தொடர்ந்தாள்.
கையொப்பமிட்டு அவளுடைய காப்பி பத்திரத்தை வாங்கிக்கொண்டு நிறுவனத்தை விட்டு வெளியே வந்தாள்.
டாகுமெண்ட் பார்த்த பூமிக்கு அதிர்ச்சி என்றாலும் தம்மு அவளுடன் இருப்பாள் என்பதில் மகிழ்ச்சி உண்டானது. “உன்னை மிஸ் பண்ணுவேன்னு எவ்ளோ பீல் ஆனேன் தெரியுமா? இத பார்த்ததும் எவ்வளவு சந்தோசமா இருக்குன்னு தெரியுமா… ஹப்பா” என்று தோழியை கட்டி அணைத்துக்கொண்டாள்.