ஆதவனின் அருளால் பரபரப்பான மதிய வேளையில் அந்த மொத்த வீதியும் தீயாய் தகித்தது. எவ்வளவு தான் சூரியன் சுட்டெரித்தாலும் சூடாக உண்ணும் உணவுக்கு நிகராக எதுவும் இருக்காதது போல் அந்த இடமே திருவிழா கூட்டம் போல் அலைமோதியது.
ஓரிரண்டு கடைகள் இருந்திருந்தால் கூட இவ்வளவு கூட்டம் இருந்திருப்பதற்கு வாய்ப்பு குறைவு தான். ஆனால் இந்த வீதியிலோ வரிசையாக ஒவ்வொரு வகையான உணவகங்கள்.
சைவம், அசைவம், கடல் உணவுகள், குளிர்பானங்கள், இயற்கை முறையில் செய்யப்பட்ட பனிக்கூல்கள், சிறுவர்களுக்கென கேண்டி வகைகள் என எதை உண்ண விரும்பினாலும் அங்கே வந்து நம்பி நிற்கலாம்.
அத்தகைய சிறப்பு அந்த வீதிக்கு. அலுவலகங்கள் நிறைய உள்ள அந்த பகுதியை அந்த சிறிய கடை முதலாளிகள் தேர்வு செய்தது கூட அந்த காரணத்தினால் தான்.
எந்த வகையான உணவை வைத்தால் அந்த பகுதி மக்களை ஈர்க்க முடியுமோ அதை செவ்வனே செய்திருந்தனர். சுமார் இருவது கடைகளாவது இருக்கும். ஒவ்வொன்றிலும் கூட்டம் நிறைந்து வழியும்.
மதிய உணவு நேரத்தை தாண்டியும் அவ்வளவு மக்கள் இன்னும் அங்கே நின்றனர். அதில் ஒன்று தான் அந்த மெட்ராஸ் ஹோட்டல் என்னும் சிறிய உணவகம்.
ட்ரக் வண்டி ஒன்றில் தான் அந்த கடை அமையப்பெற்றிருந்தது. அதிக கூட்டம் இல்லை என்றாலும் ஓரளவிற்கு கூட்டம் இருந்தது. வெரைட்டி ரைஸ் வகைகள், தந்தூரி, கிரில் என சிறிய கடையே ஆனாலும் அணைத்தும் இருந்தது.
வேலைக்கு ஆட்கள் ஓரிருவர், அதில் தான் அவளும் இருந்தாள். மஞ்சள் நிற டீ-ஷர்ட், வெளீர் நீல நிற ஜீன்ஸ் அதன் மேல் ஒரு இளம் ஊதா நிற ஏப்ரான்.
தலையை பின்னியிருந்தாலும் அடங்கவில்லை பஞ்சு போன்ற அவளது சிகை. அந்த குழந்தை முடியை மறைக்க, அவள் தலையை மறைத்திருந்தது மெல்லிய டிஸ்யூ வகை தொப்பி.
ஒரு மணி நேரமாக வேலையை விட்டு, உணவை மறந்து அவளையே எதிரில் இருந்த ஒரு சிறிய ஜூஸ் கடையின் முன்னர் நின்று கண் எடுக்காமல் பார்த்தான். அவன் வந்த சில நிமிடங்களிலேயே அவனை கண்டுகொண்டவள் ரகுவை மொத்தமாய் புறக்கணித்து கடமையே கண்ணாய் இருந்தாள்.
பற்கள் உடைந்து விடுமளவு கோவம் அவனுக்கு. சென்று அவளை கையேடு இழுத்து வீட்டிற்கு பறக்க தான் தோன்றியது. ஆனால் அவனை பார்த்த உடனே பத்து நிமிடம் என கை காட்டியவள் ஒரு மணி நேரமாகிய பிறகும் வரவில்லை.
சமைத்த உணவுகளை எடுத்து கொடுப்பதும், அதை மீண்டும் எடுத்து சென்று கொடுப்பதும், சில நேரங்களில் சமைப்பதற்கும் உதவி செய்துகொண்டிருந்தாள். அவளுக்கு அதெல்லாம் பழகியிருந்தது ஆனால் அவனுக்கு தான் இப்படி அவளை பார்க்க மனது அடித்துக்கொண்டது.
கால்கள் நடுங்க, கண்கள் கூச அவளை பார்ப்பதையே தவிர்த்தான். அரை மணி நேரம் கடந்த பிறகு வந்தவள் கையில் ஒரு மாதுளை சாறை திணித்தான்.
“என்னாச்சு?” அவனை பார்த்து கேள்வி கேட்க குடி என்னும் விதமாய் தலை அசைத்து அமைதியாகினான்.
பசியில் அவளும் அப்படியே செய்ய, பணம் கொடுத்து வாகனம் நோக்கி நடந்தவன் அவள் கையையும் பற்றிக்கொண்டான்.
“வேலை இன்னும் முடியல. விடு” அவன் கையை உதறி அவள் சற்று தள்ளி நின்றாள் அவனை புரியாமல் பார்வையிட்டே.
அவள் மனதை படித்தவன் அப்படியே அவளை விட்டு சாலையை கடக்க அவன் பின்னாலே சென்று அவன் கையை பிடித்தாள்.
“என்ன பண்ண போற?” என்ற கேள்வியில், இருக்கும் இந்த ஒரு வேலையையும் கெடுத்துவிடாதே என்ற யாசிப்பும் இருந்தது.
வேகத்தை குறைத்து, “ஒரு மணி நேரம் பெர்மிஷன் கேட்டு வா” என்றான் ரகு.
“பெர்மிஷன் கேக்க இது என்ன உன் ஆபீஸா ரகு?”
“அப்போ உன் புருஷன் செத்துடானு சொல்லிட்டுவா” அவனது பேச்சில் அவனை விட அதிக எரிச்சல் பட்டவள் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அவன் கைகள் சிவக்குமளவு கிள்ளி அவனை தீயாய் முறைத்து சென்றாள்.
நிச்சயம் திவ்யா வருவாளென்ற நம்பிக்கையில் வலித்த கைகளை உதறித்தள்ளி ரகு நிற்க சில நொடிகளில் அவளும் வந்தாள். அவளை அழைத்து அந்த தெருவை தாண்டி ஒரு மரத்தின் நிழலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை நோக்கி நகர, அந்த வாகனத்தை பார்த்து நடையின் வேகத்தை மெல்ல மெல்ல குறைத்தாள்.
அது ரகுவை தினமும் அழைத்து மீண்டும் விட்டு செல்லும் அதே வாகனம்.
“வேகமா வா” என்றான் கார் கதவை திறந்தபடியே.
“நான் இந்த கார்ல வர மாட்டேன்” பிடிவாதமாக நின்றாள் அந்த வாகனத்தை தவிர்க்கும் எண்ணத்தோடு.
என்ன பேசுகிறாள் என புரியவில்லை அவனுக்கு, அவனோடு வர விரும்பவில்லை என நினைத்தான், “என் கூட ஒரு அரை மணி நேரம் கார்ல வர கூட கசக்குதா உனக்கு?” என்றான் கசப்பாக.
“அப்டி சொன்னதா நியாபகம் எனக்கில்லையே. நான் இந்த கார்ல வர மாட்டேன்”
“நடந்தே பீச் வர ஐடியா இருக்கா அப்போ?”
“நடந்தே வந்தாலும் வருவேன் தவற இந்த கார்ல வர மாட்டேன்”
“அப்டி என்ன தான் உனக்கு அந்த வண்டி மேல ஒரு வெறுப்பு?”
“என் மனசுல இருக்குறது எல்லாம் உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்ல ரகு. விருப்பம்னா சொல்லு வரேன் இல்லையா வேலைய பாக்க கெளம்பி போறேன் நான்”
பற்களை கடித்து ஏதோ முணுமுணுத்தவன் வாகனத்தை லாக் செய்து போக்கு ஆட்டோ ஒன்றை பிடித்து அவளை பார்த்தான்.
திவ்யா உள்ளே ஏறி அமர, “எலியேட் பீச் ண்ணா” வழி கூறி அவளை பார்க்க உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் என்பது போல் தான் அமர்ந்திருந்தாள்.
அவனுக்கு தான் அனல் காற்றாய் நினைவுகள் வந்து முகத்தில் மோதியது.
கல்லூரி காலம், அதன் பிறகான திருமண வாழ்க்கை என அனைத்திலும் முக்கிய இடம் வகித்தது அந்த பீச் தான். மகிழ்ந்தது, கோவத்தை காட்டியது, அழுதது, சர்வமும் இந்த இடத்தில் தான். ஏன், விவாகரத்து என முடிவெடுத்தது கூட இவ்விடத்தில் வைத்து தான்.
இன்றும் அதே இடத்திற்கு அழைத்து செல்கிறான். வாடிய மலரிலிருந்து நறுமணத்தை தேடும் முயற்சி தான் அவனுடைய எண்ணங்கள். ஆசையாய் , ஆர்வமாய் கையில் கிட்டிய காதலை தவறவிட்டோமோ என திவ்யா வீட்டை விட்டு வெளியில் சென்ற ஒரு வாரத்தில் புரிந்து கொண்டவன் உறக்கம் ஜன்னல்களை தாண்டி பறந்திருந்தது.
அவன் உறக்கத்தை அதிகம் களவாடாமல் மூன்றே மாதத்தில் கண் முன் தோன்றி இம்சிக்க துவங்கினாள். இன்னமும் இம்சிக்க தான் செய்கிறாள். தினமும் காலையில் உறக்கம் கலைந்த அழகிய முகம், மாலை சோர்வான முகம், இரவில் யோசனை முகம் என ஒவ்வொரு நேரமும் ஒரு வகையாய் இம்சித்தாள்.
அன்று உரிமையாய் அழைக்காதே என்றவள், இன்று அதே உரிமையோடு உன் பொருள் அல்லாத வேறு ஒருவரோடு வர மாட்டேன் என நிற்கிறாள்.
தினம் தினம் அவள் முகத்தை பார்த்து அவளோடு ஆசையாய், உரிமையாய், காதல் அதிகாரத்தோடு பேசாமல் தூரம் நின்று முகத்தை திருப்பி செல்வது எத்தனை கடினமென ஒரே மாதத்தில் புரிய வைத்திருந்தாள் பெண்ணவள்.
ஆசையை கட்டுப்படுத்தி கசப்பான நினைவுகளை மட்டும் மீண்டும் கண் முன் நிறுத்தி நடப்பவற்றை ஜீரணிக்க முயன்றான். அவளுக்கும் அது தான் விருப்பம் போல் இருந்தது அவள் செய்கை எல்லாம்.
சோகம் தளும்பி கிடந்த அவள் முகத்தை பார்த்து, தனக்கான ஒரு வேலை இல்லாத கலக்கம் என எண்ணியவன் அதையும் ஓரப்பார்வையோடு விட்டான். இன்று நண்பன் அழைத்து விடயத்தை கூறிய நொடி நெஞ்சே பதறி ஓடி வந்துவிட்டான் உணவை மறந்து.
அதை விட நேரில் பார்த்தவன் கண்களே கலங்கியது. அது தான் திரும்பி நின்றுவிட்டான்.
காதல் வார்த்தைகள், ஆசை மொழிகள் பேசி இருவரின் வாழ்க்கையையும் வீணாக்கினேனோ? அவள் குடும்பத்தினரின் கைகளில் இருந்தால் இந்நேரம் எப்பேர்ப்பட்ட வாழ்க்கையை அமைத்து தந்திருப்பார்கள் அவள் பெற்றோர்?
இப்பொழுது இவளே சென்றும் ஏற்றுக் கொள்ளவில்லை எனில் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு பக்கமும் சொந்தம் இல்லாமல் தனி ஆளாய் தவிப்பது இவள் தானே?
தானோ நண்பர்கள், அலுவலகம், கூத்து என இனிமையாய் வாழ்க்கையை கடக்க இவளுக்கு இந்த நிலையா என மனம் வெதும்பி வாடினான். வாகனம் கடற்கரையை அடைந்ததும் அதற்கான பணத்தை கொடுத்து ரகு வரும் முன் திவ்யா கடலில் சென்று கால்களை அலைகளோடு கதை பேசவிட்டு வேடிக்கை பார்த்தாள்.
அவளுக்கு அலைகள் மேல் ரகுவை விட காதல் அதிகம். அவன் கையை பற்றிக்கொண்டு உடை நனைவதையும் யோசிக்காமல் முடிந்த வரை ஆழம் சென்று விளையாடி வருவாள். அவனுக்கோ அவளை திட்டிக்கொண்டே அவள் ஆசையை நிறைவேற்றுவதில் அலாதி பிரியம்.
இன்றும் அவனிடம் கேட்கும் ஆசை பிறந்து அவனை திரும்பி பார்க்க, கிரீம் நிற பேன்ட், பாசி பச்சை நிற ஷர்ட் அலுவலகத்திற்கு ஏதுவான உடை அணிந்து நின்றவனை சிரமப்படுத்த விரும்பவில்லை அவள். உரிமையும் தான் எங்கிருக்கிறது?
அவளது எண்ணங்களை பிரதிபலித்த அவனது கைகள் அவள் கையை பற்றி கடலை நோக்கி இழுத்தான்.
“ரகு வேணாம்” என்றாள் அவசரமாக.
“அதெல்லாம் ஒன்னுமில்ல வா” பெரிய பெரிய ஆசையை தான் நிறைவேற்றவில்லை இதையாவது செய்திட துடித்தது அவன் உள்ளம்.
“எனக்கு பீரியட்ஸ் ரகு. விடு” எனவும் தான் விட்டான்.
“வர புடிக்கலைனா விடு. அத விட்டு பீரியட்ஸ் அது இதுனு காரணம் சொல்லாத. எனக்கு தெரியும் உன்ன பத்தி”
அவனது பதிலில் அவள் அடுத்து பேசவே இல்லை. நீண்ட மௌனம் இருவருக்குள்ளும். அவனுக்கோ அவளோடு பேசவே தயக்கம், அவள் அவனோடு இருந்த ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து மனதை மறைக்கும் வித்தையை கற்றுக்கொண்டிருந்தாள்.
‘என்ன தெரியும்டா உனக்கு?’ அவன் சட்டையை பிடித்து கேள்வி கேட்க கைகள் பரபரத்தது.
மனதில் மூண்ட தீயை திசை திருப்ப முயலும் முன்பே அவளது கையை பற்றி கடலினுள் இழுத்து சென்றிருந்தான் ரகு. மறுக்கவும் தோன்றவில்லை.
விரும்பி அவன் கட்டுப்பாட்டிற்குள் சென்றவள் அடுத்த அரை மணி நேரம் ஓடி ஆடி விளையாடி அவன் கையை பிடித்துக்கொண்டே மகிழ்ந்திருக்க ஓய்ந்து போய் தான் மணலில் அமர்ந்தாள்.
முகமெல்லாம் சந்தோசம், பரவசம் நிறைந்திருக்க தலையை தவிர மொத்த உடலும் இருவருக்கும் நனைந்திருந்தது. மூச்சு வாங்க திவ்யா அமர்ந்திருக்க, முட்டியில் கை ஊன்றி மூச்சு வாங்க நின்றான் ரகு. மாலை மணி நான்கை கடந்திருக்க சற்று குழுந்த காற்று வீச துவங்கியது.
“ஆனாலும் உன் கூட வர்றது, உயிரை கைல புடிச்சிட்டு தான் வரணும் போல” என்றான் ஆசையாக அழுத்துக்கொண்டு.
“நானா உன்ன வர சொன்னேன், நீ தானேடா இழுத்துட்டு போன”
“சும்மா கொஞ்சம் தூரம் நின்னுட்டு வந்துடுவ எப்பவும் போல உன்ன தப்பா கணக்கு பண்ணிட்டேன்”
“பெருசா என்ன பத்தி தெரியும்னு சொன்ன?” கன்னத்து சதையை கடித்து சிரிப்பை அடக்கி அவனை பார்த்தாள் திவ்யா.
“பொண்ணுங்கள பத்தி தெரிஞ்சவன் தான் யாரு. சரி எழுந்திரி” என்றான்.
“கால் வலிக்கிது. கொஞ்சம் நேரம் ப்ளீஸ்” கண்களை சுருக்கி கெஞ்சினாள் குழந்தை போல் ஆளை அடித்து வீழ்த்தும் பார்வையோடு.
“பாண்ட் அழுக்காகிடும், எந்திரி அப்டியே நடக்கலாம் டிரஸ் காயும்ல” வம்படியாக அவள் கை பிடித்து நடக்க துவங்கினான்.
பலமாக காற்று உடலில் மோத தலையை காய வைக்கும் எண்ணத்தில் திவ்யா பின்னலை அவிழ்த்து காற்றில் பறக்க விட்டாள்.
“காலேஜ் படிக்கிறப்போ நீ, நான் மாத்தி மாத்தி வா வா-னு இங்க இழுத்துட்டு வருவோம், கல்யாணத்துக்கு அப்றம் நீயும் ரிஸ்க் எடுக்கல நானும் ரிஸ்க் எடுக்கலல?”
தூரத்தில் பறந்து திரியும் கடல் பறவைகளை பார்த்திருந்தவன் பார்வை அசையவில்லை அவள் கூறிய வார்த்தைகளை செவி சாய்த்து அதனை ஜீரணிக்கும் முயற்சியில் இருந்தான்.
“இது தான் நம்ம வாழ்க்கையை தவறவிட்ட இடமோ திவ்யா?” அசட்டையாக தோளை குலுக்கினாள் பதில் பேச முடியாமல்.
“அதே சமயம், நாம அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிகிட்டோமோனு யோசிக்காமையும் இருக்க முடியல” என்றான் சந்தேகமாய்.
திவ்யாவுக்கு ஏதோ போல் ஆகியது, இங்கு தான் இன்னமும் அவன் பக்கத்திலிருந்து ஒரு சிறு முயற்சி ஏற்பட்டாலும், அவளே இரண்டு அடி அவனை நோக்கி எடுத்து வைக்க தயாராக இருக்க… அவனுக்கு நடந்தவை நல்லது தான் என தோன்றியது போலும். உறவின் மேல் இருந்த சிறு நம்பிக்கையும் போனது.
“நெஜமாவே நீ என்ன லவ் பண்ணியா ரகு இல்ல காலேஜ்ல உன்னோட கெத்த காட்ட என் கூட சுத்துனியா?” அதிர்ந்து அவளை பார்த்தவன் கண்கள் கோவத்தில் சிவந்து போனது.