Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வரமாய் வந்த உறவே

வரமாய் வந்த உறவே – 1

அத்தியாயம் – 1

 அதிகாலை வேலையில் சூரியன் தன் பணியை துவங்குவதற்கு முன்பாகவே திருநெல்வேலி மாவட்டம் வெங்கடாசலபுரம் தெற்குத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்த மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பரபரப்பாகவும் கிளம்பிக் கொண்டிருந்தனர். அந்த ஒருவனை தவிர

 

“காமாட்சி எல்லாத்தையும் சரியா எடுத்து வச்சிடைய வண்டி வர நேரம் ஆச்சி அங்க போய்ட்டு அது இல்லை இது இல்லைனு சொல்லாத” என்றார் வடிவு.



Advertisement

 

“அம்மா நான் எல்லாத்தையும் சரியா எடுத்து வச்சிட்டேன் அம்மா, கோவில்ல பூஜைக்கு தேவையானது தனியா, பரிசம் போடுறதுக்கு தேவையான பூ, பழம், பொண்ணுக்கு புடவை எல்லாத்தையுமே எடுத்து வச்சிட்டேன் நீங்க கொஞ்சம் பதட்டப்படாம அமைதியா இருங்க அம்மா” என்றாள் காமாட்சி.

 

Advertisement

“பதட்டப்படாம எப்படி வடிவு இருக்க சொல்லுற, என்னோட இத்தனை வருஷத்து ஆசையும் இன்னைக்கு நிறைவேற போகுது, நான் சாகுறதுகுள்ள என் புள்ளைக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சி அவன் பொண்டாட்டி புள்ளைங்க கூட சந்தோசமா வாழுறத பாக்கமலே போய் சேந்துருவேன்னு நெனச்சேன் ஆன நான் கும்புடுற கருப்பசாமி என்ன கைவிடல என் மகனுக்கு நல்ல வழி காட்டிட்டாரு ” என்று கூறி கண் கலங்கினார்.

Advertisement

 

“அம்மா என்னமா நல்ல நாள் அதுவுமா அழுதுகிட்டு இருக்கிங்க போங்கமா போய் கிளம்புங்க வண்டி வந்துரும் இப்போ”

 

Advertisement

“நான் கிளம்புறது இருக்கட்டும், நீ போய் உன் மகளையும், மகனையும் கிளப்பி விடு, அப்பறம் கவிதாவ பாவாடை தாவணி போட்டு வர சொல்லு அப்போ தான் சின்ன பொண்ண தெரிவா, சுடிதார் போட்டு வந்தானு வை கல்யாண வயசுல பொண்ண வீட்டுல வச்சிக்கிட்டு வெளியில என் பொண்ணு பாக்குறிங்கனு பொண்ணு வீட்டுல கேக்க போறாங்க”

 

“நீங்க சொல்லுறதும் சரி தான் மா போன தடவை கூட பொண்ணு பாக்க போன அப்போ கூட அங்க கேட்டாங்கல” காமாட்சி கூறியதை கேட்டதும் வடிவின் முகம் மாறிவிட்டது. போன முறை பெண் பார்க்க சென்றபொழுது அங்கு அவர்கள் தன் மகனை பற்றி பேசிய பேச்சுகள் நியாபகம் வந்து அவரை வருத்தம் அடைய செய்தது.

 

“காமாட்சி குமரன் கல்யாணத்துக்கு அந்த பொண்ணு வீட்டுக்கு போய் பத்திரிகை வைக்கணும்,என் மகனுக்கு பொண்ணு தரமாட்டேனு சொன்னது மட்டும் இல்லாம, வேற யாரும் பொண்ணு தரமாட்டாங்க அவனுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காதுனு சொன்னால, அந்த ஆளு முகத்துலக் கரியப்புசனும்” என்றார் வடிவு.

 

“ஆமா அம்மா நாம குமரன் இருக்குற அழகுக்கு அந்த கறுப்பி கொஞ்சம் கூட பொருத்தமே இல்லாம, அந்த ஆளு பொண்ணு தராம இருந்ததே நல்லது தான். இப்போ பாத்துருக்குற பொண்ணு தான் நம்ம தம்பிக்கு பொருத்தம்மா இருப்பா மா” என்றாள் காமாட்சி.

 

காமாட்சி கூறியது போல் நம் நாயகன் ஆணழகன் தான். நல்ல உயரம் உயரத்துக்கு எற்றார் போல் உடல் அமைப்பு, படிக்கட்டு வயிறு, அலை அலையாய் கேசம், மாநிறத்தில் இருந்தாலும் , அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வசிகர சிரிப்பும், அன்பான குணமும் கொண்டவன் நம் நாயகன் இளங்குமரன். டிகிரி படித்து முடித்து விட்டு சொந்தமாக சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறான் (அங்குள்ள மக்களை பொறுத்தவரை அது மளிகைக் கடை).

 

அழகு,படிப்பு,நல்ல வருமானம், நல்ல குணம், எந்த கெட்டப் பழக்கமும் இல்லாத நல்ல பையன், அப்படி இருந்தும் குமரனுக்கு இன்னும் திருமணத்திற்கு பெண் அமையவில்லை, இதுவரை நான்கு, ஐந்து முறை பெண் பார்க்க சென்று விட்டனர். எதுவும் அமையவில்லை. அக்கா மகளான கவிதாவை திருமணம் செய்துக் கொள்ளுமாறு கூட பலமுறை கூறிவிட்டார் வடிவு,ஆனால் குமரன் தான் மறுத்து விட்டான். கவிதா எனக்கு மகள் போன்று என்று கூறிவிட்டான். மகள் என்றவுடன் குமரனுக்கு வயது அதிகம் என்று எண்ணி விடாதீர்கள். இருப்பத்தி எட்டு வயது தான் ஆகிறது. கவிதாவிற்கு பதினெட்டு வயது ஆகிறது. கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கிறாள். சிறு வயதில் இருந்து கவிதாவுடன் வளர்ந்தவன் என்பதால் அவளை மனைவி என்ற கோணத்தில் பார்க்க முடியவில்லை.

 

குடும்பம் மொத்தமும் குமரனின் திருமணத்தை பற்றி பல கனவுகளுடன் இருக்க, கனவு காண வேண்டியவனோ அறைக்குள் இருந்த காலண்டரில் மகாலக்ஷ்மியின் படத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அப்பொழுது கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்தார் சேகரன். காமாட்சியின் கணவர். “குமரா கிளம்பிடைய வண்டி வந்துருச்சி வா போலாம்” என்றார்.

 

“மாமா கண்டிப்பா பொண்ணு பார்க்க போய் தான் ஆகணுமா, எனக்கு கல்யாணம்ல எதுவும் வேண்டாம் மாமா நான் இப்படியே இருந்துட்டு போயிறேன் ப்ளீஸ் என்ன விடுருங்க”

 

“குமரா இந்த விசயத்தை பத்தி நாம நிறையவே பேசிடோம், இனிமேல் கல்யாணம் வேண்டாம்னு சொல்லாத அத்தைகாக வா குமரா, அவங்க சந்தோசத்துகாக டா தயவு செஞ்சு வா” என்று மிகவும் வருத்தத்துடன் கூறினார். அவர் வருந்துவதை பார்க்க முடியாமல், விருப்பமே இல்லாமல் அவருடன் கிளம்பி சென்றான். போகும் முன்பு மீண்டும் ஒரு முறை மகாலட்சுமி காலண்டரை பார்த்து விட்டு சென்றான்.

 

வடிவு தன் கணவரின் புகைப்படத்தின் முன்பு விளக்கை ஏற்றி அவரிடம் “நம்ம மகன் கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம நல்ல படியா நடக்கனும் அதுக்கு நீங்க தான் எங்களுக்கு துணையாக இருக்கனும்” என்று வேண்டிக் கொண்டார்.

 

பாவம் அவர் நினைப்பது அனைத்தும் எளிதில் நடந்து விடாது என்பதை அறிந்தார் போன்று வடிவை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் போட்டோவில் இருந்த அவரது கணவர் குருமூர்த்தி(முன்னாள் எம்.எல்.ஏ)

 

அனைவரும் காரில் ஏறியதும் கார் கிளம்பியது அந்த தெருவின் கடைசியில் இருந்த அரண்மனை போன்ற பெரிய வீட்டை கடந்து செல்லும் போது குமரனின் கண்கள் ஒரு வித ஏக்கத்துடன்அந்த வீட்டை பார்த்து சென்றது. அதன்பின் சுதாவின் ஊருக்கு சென்று சுதா மட்டும் அவள் கணவர் செந்தில், நான்கு வயது மகன் அகிலனையும் அழைத்துக் கொண்டு, அவர்களுடைய குலத்தெய்வம் கருப்பசாமி கோவிலுக்கு சென்றனர்.

 

இவர்கள் சென்ற நேரம் பூசாரியின் மீது அருள் வந்து அனைவருக்கும் அருள்வாக்கு கூறிக் கொண்டிருந்தார். வடிவு அவரிடம் சென்று தனது மகனுக்கு நல்லப் படியாக திருமணம் நடக்க வேண்டும் என்று வரம் கேட்டார்.

 

பூசாரி வடிவு அருகில் நின்று இருந்த குமரனை அழைத்து “நீ ஆசை பட்ட வாழ்க்கை உனக்கு அமைய போகுது, ஆனா அதுக்கு நீ நிறைய கஷ்டங்களையும், சோதனை களையும் கடந்து வந்தாகணும், மனச தளரவிடாத உனக்கு துணையாக எப்பவும் நான் இருப்பேன்” என்று கூறி விபூதி பூசிவிட்டார்.

 

“நீ கேட்ட வரத்தை நான் தாரேன். கூடிய சீக்கிரம் உன் வீட்டுக்கு விளக்கு ஏத்த மருமக வர போற, அவளை முழு மனசோட ஏத்துக்கு” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

 

 பெண் பார்க்க போகும் சமயம் சாமி இவ்வாறு கூறியது குடும்பத்தினருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். பார்க்க போகும் பெண் தான் தனது மருமகள் என்று முடிவு செய்து விட்டார் வடிவு.

 

அங்கு சென்றதும் பெண் விட்டினர் இவர்களை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். குமரன் மட்டும் இறங்காமல் இருப்பதை பார்த்த செந்தில் “மச்சான் என்ன டா வண்டியிலையே இருக்க இறங்கி வா” என்றான்.

 

வண்டியில் இருந்து இறங்கி வரும் மாப்பிளையை ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்த பெண் விட்டினர் வலது கையில் வாக்கிங் ஸ்டிக்கினை பிடித்து கொண்டு மெதுவாக நடந்து வரும் குமரனை பார்த்ததும் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி மறைந்து அதிர்ச்சியும், ஏமாற்றமும் தான் நிரம்பி இருந்தது.

 

“என்னங்க இது இவர்தான் மாப்பிளையா,இவருக்கு இப்படி ஒரு குறை இருக்குறத முதலையே ஏங்க சொல்லல, நாங்க பெத்து வச்சிருக்குற ஒத்த பொண்ணையும் ஒரு நொண்டி பையனுக்கா குடுக்க சொல்லுறீங்க” என்றார் பெண்ணின் தாய்.

 

“யார பார்த்து மா நொண்டினு சொல்லுறிங்க ,வார்த்தைய பார்த்து பேசுங்க” என்றாள் சுதா.

 

“நொண்டிய நொண்டினு சொல்லாமா வேற எப்படி சொல்ல சொல்லுற, போட்டோல பையன் முகத்தை பார்த்து ஏமாந்து போய்டும், நேருல பார்த்தா தான தெரியுது உங்க பையனோட லச்சனம் மரியாதையா இங்க இருந்து கிளம்பிப் போயிருங்க” என்றார் பெண்ணின் தந்தை.

 

சுதாவும், காமாட்சியும் அவர்களை எதிர்த்து பேச அங்கு பேசிய வாய் சண்டையே நடந்துக் கொண்டிருந்தது. சேகரனும் செந்திலும் தான் பெண்கள் இருவரையும் சமாதானம் செய்து அழைத்து சென்றனர். வடிவு தன் மகனின் நிலையை எண்ணி கண்ணீர் வடித்தார்.

 

குமரனுக்கு உடம்பில் பெரிய அளவில் எந்த குறையும் கிடையாது. இளங்குமரன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது நடந்த விபத்தில் வலது காலில் சிதைவு ஏற்பட்டு விட்டது. நிறைய ட்ரீட்மென்ட்கள் செய்து காலை சரி செய்தனர். இருப்பினும் இடது காலை விட வலது காலின் உயரம் சிறிது குறைவாக இருக்கும் அவனால் ஸ்டிக் இல்லாமலும் மெதுவாக நன்றாக நடக்க முடியும். படி ஏறும் போது மட்டும் ஸ்டிக் அல்லது வேறு ஏதாவது பிடித்துக் கொண்டு தான் ஏற முடியும். இந்த சிறு குறைய தவிர இளம் குமரனிடம் வேறு எந்த பிரச்சனையும் கிடையாது.

 

 காரில் அமைதி மட்டுமே நிலவியது யாரும் எதுவும் பேசாமல் வீடு வந்து சேர்ந்தனர். “இப்ப சந்தோஷமா உங்க எல்லாருக்கும் எத்தனை தடவை சொன்னேன் எனக்கு கல்யாணம் வேண்டாம்ன்னு ஏன் கேட்க மாட்டேங்கறீங்க, மறுபடியும் மறுபடியும் கூட்டிட்டு போயி என்ன அசிங்கப்பட தான் வைக்கிறீங்க போதும் இனிமேலாவது கல்யாணத்தை பத்தி பேசாம என்ன நிம்மதியா இருக்க விடுங்க” என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு அரைக்குள் சென்றுவிட்டான்.

 

 குமரனின் பின்னாலே சென்ற செந்தில் “மச்சான் வருத்தப்படாதடா இந்த ஆளு பொண்ணு தரலான போறான் வேற ஒரு நல்ல பொண்ணா நானே உனக்கு பாக்குறேன் டா ” என்றான் செந்தில். செந்தில் மற்றும் இளம் குமரன் இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். குமரனை பற்றி அனைத்தும் அறிந்தவன்.

 

“மாப்ள ப்ளீஸ் கல்யாணம் பத்தி மட்டும் பேசாதடா”

 

“ஏன்டா பேச வேண்டாம்னு சொல்லுற, நீ இன்னும் குட்டிய மறக்கலையா” என்றான் செந்தில்.குமரன் எதுவும் கூறாமல் அமைதியாக தலைக் குனிந்தான்.

 

“மச்சான் என் மச்சான் இப்படி இருக்க நீ, குட்டிக்கு கல்யாணம் ஆகி அவ புருஷன் கூட வெளிநாட்டில சந்தோஷமா இருக்கா, நீ இன்னும் அவளை நினைச்சுட்டு இருக்குறது ரொம்ப தப்புடா”

 

“தப்பு தாண்டா எனக்கும் தெரியுது ஆனா, என் மனசுக்கு அது புரிய மாட்டேங்குது, அவள தவிர இன்னொரு பொண்ணா என்னால நினைச்சு பார்க்க முடியல டா, உங்க எல்லாரும் கெஞ்சி கேட்கிறேன் ப்ளீஸ் என்னை இப்படியே விட்டுருங்க, இதுக்கு மேல என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப்படுத்துனா நான் வீட்டை விட்டு எங்கேயாவது போயிருவேன்”

 

“மச்சான் அப்படி எல்லாம் எதுவும் பண்ணிறாதடா, நான் அத்தை கிட்ட பேசுறேன் இனிமேல் யாரும் கல்யாண பேச்சு எடுக்க மாட்டோம் போதுமா” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

 

 கட்டிலில் கண்மூடி உறங்கிக் கொண்டிருந்த குமரனின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்த வண்ணம் இருந்தது அவனின் குட்டியை நினைத்து.

 

குமரனின் மனம் மாறுமா, அவனுக்கு பிடித்த பெண்ணை அவன் சந்திப்பான பொறுத்திருந்து பார்ப்போம் 🙏🙏🙏🙏🙏

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!