“இந்த நக்கலு தான் உன் கிட்ட ஓவரா இருக்கு. மேல பார்த்துட்டே வா.. பிடிச்சு தொட்டிக்குள்ள தள்ளி விடுறேன்”
“தொட்டியா?”
“தண்ணி தொட்டி”
“இங்க இருக்கா? எங்க?” என்று அவள் தேட, “கடைசியில இருக்கு. போய் பார்ப்போம்” என்று கூறியவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டே நடந்தான்.
அரசன் கையைப்பிடித்து இருக்கும் தைரியத்தில், வைசாலி மீண்டும் தென்னைமரங்களை அன்னாந்து பார்த்தபடி தான் நடந்தாள்
“தேங்காய நிறைய காணோம். இளநீர் எல்லாம் இருக்குமா?”
“போன மாசம் தான் மொத்தமா லோட் அனுப்பினாங்க. இளநீர் இருக்க வாய்ப்பு இருக்கு. ஈவ்னிங் வீட்டுக்கு கொண்டு வரச்சொல்லுறேன்”
வைசாலி அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருக்க, அரசனும் பதில் சொல்லியபடி தோப்பை சுற்றி நடந்தான்.
தண்ணீர் தொட்டியை எட்டிப்பார்த்து விட்டு, “என்ன தண்ணியே இல்ல?” என்று உதட்டைப்பிதுக்கினாள்.
“இன்னேரத்துல தண்ணிய வச்சு என்ன செய்வாங்க? மார்னிங் இல்லனா ஈவ்னிங் தான் மோட்டர் போடுவாங்க.”
“தண்ணிய பார்க்கலாம்னு வந்தேன். சோ சேட்.”
“தண்ணிய முன்ன பின்ன பார்த்ததே இல்லையா நீ?”
“கிண்டலா? நான் தொட்டி நிறைய தண்ணிய பார்க்க ஆசை பட்டேன். இல்ல.. சரி ஃபோட்டோஸ் மட்டும் எடுத்துக்கலாம்” என்று கைபேசியில் சில படங்களை எடுத்துக் கொள்ள, வைசாலியை அரசனும் புகைப்படம் எடுத்துக் கொடுத்தான்.
“இவ்வளவு நேரம் நடந்து டயர்டே தெரியல. பேசாம இங்க குடிசை மாதிரி போட்டு உட்கார்ந்துடலாம். ரிலாக்ஸா இருக்கும்”
“இருக்கும் இருக்கும். மழை வந்தா தெரியும்”
“எதைச்சொன்னாலும் வில்லங்கமாவே பேசுறது. போயா யோவ்” என்று முறைத்து விட்டு திரும்பி நடந்தவள், பாதையை மறந்து விட்டாள்.
சுற்றி ஒரு முறை பார்த்தாள். எல்லாம் வந்த வழி போலவே இருந்தது. தலையை தட்டி உற்றுப்பார்த்து கண்டு பிடிக்க முடியாமல் நின்று விட்டாள்.
பின்னால் வந்த அரசன் அவளை கேள்வியாக பார்த்தான்.
“எந்த பக்கம் வந்தோம்?” என்று தலையை சொறிய, அரசன் சிரித்து விட்டான்.
“பேச்சு மட்டும் தான் அதிகம். உள்ள மசாலா எதுவும் இல்ல” என்று வைசாலியின் தலையில் கொட்டு வைக்க வர, வேகமாக அவன் கையைப்பிடித்துக் கொண்டாள்.
“நான் ஒன்னும் யூகேஜி படிக்கிற லாலி இல்ல. கொட்டுனீங்க.. அவ்வளவு தான்”
“அப்ப வழிய பார்த்து போறது?”
“தெரிஞ்சா போக மாட்டோமா? எதோ முதல் தடவ வந்துருக்கோம். வழி தெரியல. அதுக்காக கொட்டுவீங்களா? அந்த லாலி தான் கொட்டு வாங்கிட்டு சும்மா திட்டுவா.. இந்த லாலி அப்படி இல்ல. பிச்சு பிச்சு”
“உண்மை தான். அது வேற லாலி. நீ வேற லாலி. பட் எனக்கு அந்த லாலிய தான் பிடிச்சுருக்கு”
“அதுக்கு இல்ல. அந்த லாலி ஸ்வீட். நிஜம்மா ரொம்ப பிடிக்கும்”
“அப்போ.. இப்ப இருக்க என்னை பிடிக்காதா?”
“உன்னை வேற மாதிரி பிடிக்கும்”
“எந்த மாதிரி?”
“கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி”
கிண்டலாக பேசிக் கொண்டிருந்தவள், இந்த பதிலில் அதிர்ச்சியோடு அரசனை பார்த்தாள். அவனும் இன்று சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை.
இருக்கும் பிரச்சனையில் தன் மனதை வெளிப்படுத்த அவனுக்கு எண்ணமே இல்லை. தன் ஊரிலிருந்து கிளம்பும் முன், ஒரு முறை வைசாலியை பார்க்க வேண்டும் என்று தான் வந்திருந்தான். நாளை அவர்கள் கிளப்பியதுமே, அவனும் கிளம்பி விடுவான். இடையில் எதைப்பற்றியும் பேச நினைக்கவில்லை. தன்னால் வந்து விட்டது.
ஆனால் அதற்காக அசராமல், அரசன் வைசாலியை பார்த்து புன்னகைத்தான்.
“என்ன கல்யாணம் பண்ணிக்கலாமா?”
“ஹான்..!” என்று அதிர்ச்சியாக பார்த்தவள், என்ன பேசுவது என்று புரியாமல் விழித்தாள்.
இதை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அதிர்ச்சியை உதறி அவனை குழப்பமாக பார்த்தாள்.
“என்ன கேட்குறீங்க நீங்க?”
“என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கட்டுமா? நாம..”
“ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்” என்று வேகமாக பேச்சை நிறுத்தியவள், “அது எப்படி முடியும்?” என்று கேட்டு வைத்தாள்.
இந்த கேள்வியை அரசன் எதிர் பார்க்கவில்லை.
“எப்படி முடியுமா? எல்லாரும் பண்ணிக்கிற மாதிரி தான்”
“நாம ஸ்கூல் படிக்கும் போது மட்டும் தான் ஃப்ரண்ட்ஸ். இப்ப இல்ல”
“இப்ப எப்படி மாறும்?” என்று வைசாலி புரியாமல் குழப்பத்துடன் கேட்டாள்.
அவளை சற்று நேரம் அமைதியாக பார்த்தவன், “என்னவோ எதிர்பார்த்தேன். ஆனா சத்தியமா இதை எதிர் பார்க்கல” என்று சிரித்து விட்டான்.
“என்ன சொல்லுறீங்க?” என்று கேட்டவளுக்கு அவன் பேசுவதே புரியாதது போல் இருந்தது. அரசனை அவள் அப்படி நினைத்து பார்த்ததே இல்லையே.
“இல்ல.. நான் கேட்டா ஒன்னு ஓகே சொல்லுவ. இல்ல வேணாம்னு சொல்லுவ. அதுவும் இல்லனா பேசாம கூட போயிடுவனு எதிர்பார்த்தேன். ஆனா கேட்ட பாரு கேள்வி.. எப்படி முடியும்னு.. என்னால முடியலமா”
“விளையாடாதீங்க கிங். நான் சீரியஸா குழப்பத்துல தான் கேட்குறேன். அது எப்படி? நாம போய்…” என்று இழுத்தவள், குழப்பம் தாங்காமல் யோசித்து விட்டு, “கிங்.. நீங்க என்னை…” என்று இழுத்தாள்.
“உன்னை?”
“லவ் பண்ணுறீங்களா?”
“ஆமா”
சற்றும் யோசிக்காமல் பதில் வர, “அது எப்படி…” என்று ஆரம்பித்து விட்டு பட்டென வாயை மூடி விட்டாள்.
அவளது சுதாரிப்பில் அரசனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“ஏன் முடியாது?”
அரசன் புன்னகை குறையாமல் கேள்வி எழுப்ப, வைசாலிக்கு ஒன்றுமே புரியவில்லை. புருவத்தை ஒரு விரலால் தேய்த்துக் கொண்டே திரும்பி நடந்தாள்.
“இந்த பக்கம்” என்று அவளது கையைப்பிடித்து அரசன் நடக்க, “நானே வர்ரேன்” என்று கையை உருவ பார்த்தாள்.
“மறுபடியும் கல்ல மிதிக்கவா?”
“இல்ல.. பார்த்து…”
“பரவாயில்ல வா”
“யாராவது பார்த்துட்டா…”
“வரும் போது கைய பிடிச்சுட்டு தான வந்தோம். அப்போ நீ கவலை படலையே?”
அடுத்தடுத்து அவளுக்கு பதில் சொல்லி வாயை அடைத்தவன், நடந்து கொண்டே இருந்தான். வைசாலி தங்களது இணைந்த கைகளை பார்த்தாள்.
‘இது சாத்தியமா?’ என்று மனம் குழம்பியது.
மாதவன் கூட நேரடியாக அவளிடம் திருமணம் பற்றிப்பேசவில்லை. குடும்பத்தினரிடம் சொல்லி பெண் கேட்டு வந்தனர்.
அரசன் நேரடியாக பேசி வைக்க, வைசாலிக்கு முதலில் புரியவே இல்லை.
‘இது எப்படி முடியும்?’ என்ற கேள்வி தான் திரும்பத்திரும்ப வந்தது.
இருவருமே பலவருடம் பேருந்தில் ஒன்றாக அமர்ந்து சென்றிருக்கின்றனர். பருவ வயது தொடக்கத்தில் கூட, இருவருக்கும் ஈர்ப்பு வந்தது இல்லை. எப்போதும் படிப்பு சண்டை என்று தான் நாட்கள் கடக்கும். இந்த காதல் எப்படி வந்தது? அதுவும் திடீரென்று?
அரசனுக்கு சம்மதம் சொல்வது பற்றியோ மறுப்பதை பற்றியோ அவள் யோசிக்கவே இல்லை. அதற்கு முன்பே மனம் நகராமல் நின்று விட்டது. குழப்பங்கள் ஒரு பக்கம் இருக்க, அந்த குழப்பத்தோடு அரசனை அடிக்கடி பார்த்துக் கொண்டே நடந்தாள்.
அவளது பார்வையை உணர்ந்தாலும், அரசன் அவள் பக்கம் திரும்பவும் இல்லை. எதுவும் பேசவும் இல்லை. தோப்பை விட்டு வெளியே வந்ததும், அவள் கையை விட்டு விட்டு நடந்தான்.
வைசாலி அதீத குழப்பத்தில் வீடு வந்து சேர்ந்தாள். அமுதவல்லி கதவை திறந்து விட்டு இருவரையும் ஆராய்ந்தார். மகன் முகம் எப்போதும் போல் இருக்க, வைசாலி முகம் தான் யோசனையில் இருந்தது.
வைசாலி நேராக உள்ளே செல்ல, “காபி டீ எதுவும் வேணுமா வைசாலி?” என்று நிறுத்தினார்.
அவரது கேள்வியில் யோசனையை உதறியவள், “காபி வேணும் ஆண்ட்டி. நான் போட்டுக்கிறேன். உங்களுக்கு போடவா?” என்று கேட்டவள் பார்வை அரசன் மீதும் படிந்தது.
“எனக்கு வேணும். போட்டு வை வர்ரேன்” என்றதோடு அவன் சென்று விட, வைசாலி சமையலறைக்குள் சென்றாள்.
மூன்று காபியை கலந்து எடுத்துக் கொண்டு வர, அரசன் எதிரில் வந்து இரண்டை எடுத்துக் கொண்டான். ஒன்றை அமுதாவிடம் கொடுத்து விட்டு, அவரருகே அமர்ந்து கொண்டான்.
வைசாலி அறைக்குள் சென்று அமர்ந்து விட்டாள்.
“என்னடா ஆச்சு? ஏன் வைசாலி இப்படி போகுது?”
“ரொம்ப குழப்பமாம்”
“உன்னை அடிக்கிறதா? உதைக்கிறதானா?”
“நீங்களே எடுத்துக் கொடுப்பீங்க போல? அவ ஏன் என்னை அடிக்கனும்?”
“நீ என்ன கேட்டியோ? அது உனக்கு தான் தெரியும்”
“ம்மா.. வர வர என்னை ரொம்ப வாருறீங்க.. நான் ஊருக்கே வர மாட்டேன் அப்புறம்”
“இப்ப மட்டும் தினமும் வந்து நிக்கிற மாதிரி பேசாத.”
“நீங்க அங்க வர்ரீங்களா? நான் எவ்வளவு வருசமா கூப்பிடுறேன்?”
“பெரியவ நான் சொல்லி நீ கேட்க மாட்ட. சொல் பேச்சு கேட்காத பிள்ளைய ஓடி வந்து பார்ப்பாங்க” என்று அமுதா நொடித்துக் கொண்டார்.
அரசன் அன்னையை முறைத்து வைக்க, “காபி எப்படி? சூப்பரா இருக்குல?” என்று மீண்டும் மகனை ஆழம் பார்க்க ஆரம்பித்தார்.
“காபி காபி மாதிரி நல்லா தான் இருக்கு. ஏன்?”
“இல்ல வைசாலி போட்டு கொடுத்ததாச்சே..”
“தாயே.. பராசக்தி.. அமுதவல்லி… அஞ்சு இல்லாததுக்கு என்னை பந்தாடுற முடிவோட இருக்கீங்களா?”
“அட ஆமா.. அஞ்சுக்கு நான் சொல்லவே இல்லடா. நீ சொல்லு”
“ஊருக்கு வந்தத சொல்லிட்டனே”
“நான் வைசாலி பத்தி சொல்ல சொன்னேன்”
“என்னமா சொல்லனும்?” என்று அரசன் மீண்டும் அப்பாவியாக கேட்க, அமுதா மகனை பார்த்த பார்வையில் மொத்தமும் ஏளனம்.
“உன்னை எனக்கு தெரியும் மகனே. நீயா வாய திறக்க மாட்டல? ஆனா, சம்பந்தம் பேச என் கிட்ட தான் வரனும். நினைப்புல வச்சுக்க”
அமுதா மகனை மிரட்டி விட்டு செல்ல, அரசன் சிரித்துக் கொண்டான்.
வைசாலி முதலில் முடிவை சொல்லட்டுமே என்பது தான் அவனுடைய ஒரே எண்ணமாக இருந்தது.
இரண்டு மணி நேரத்தில் வைசாலியின் பெற்றோர்கள் வந்து விட, அரசனிடம் பேசி விட்டு மறுநாள் கிளம்ப தயாராகினர். அரசன் சாதாரணமாக தான் இருந்தான். வைசாலி தான் யோசனைக்குள் மூழ்கிப்போய் இருந்தாள்.
அவளது முடிவை அரசன் கேட்கவே இல்லை. அவளும் அதைப்பற்றி மீண்டும் பேசவில்லை.
மறுநாள் காலையில், வைசாலி காரில் பெட்டிகளை அடுக்க, அதோடு அவள் விரும்பி சாப்பிட்ட முறுக்குகளும் அடுக்கப்பட்டது.
அரசன் காரில் வைத்து விட்டு திரும்ப, வைசாலி அருகே வந்தாள்.
“என்ன?”
“நாம போன்ல பேசலாம்” என்றதும், அரசன் புரிதலோடு தலையாட்டினான்.
அவர்கள் கிளம்பியதும் அரசேந்திரனும் கிளம்பினான்.
“என்னமோ அம்மாவ பார்க்க வந்தேன். ஆட்டுக்குட்டிய பார்க்க வந்தேன்னு சொன்ன?” என்று அமுதா வம்பிழுக்க, “இப்போ என்ன? இங்க இருக்கனுமா? இருக்கேன்” என்று அமர்ந்து விட்டான்.
“நீ இங்க உட்கார்ந்தா கேஸ யாரு பார்க்குறது? போலீஸ்காரனுக்கு பொறுப்பு வேணாம்?”
அமுதவல்லி மகனை விடுவதாக இல்லை.
“தப்பு தான். தப்பு பண்ணிட்டேன் தான். திருவிழாவுக்கு வர்ரதா சொல்லிட்டு வராம ஓடுனது தப்பு தான். மன்னிச்சுடுங்க” என்று பெரிய கும்பிடாக போட்டு விட்டான் அரசேந்திரன்..
அமுதவல்லி பக்கென சிரித்து விட்டார்.
“இது.. இது தான் எதிர்பார்த்தேன். மன்னிச்சுட்டேன். பொழைச்சு போ”
“ஹப்பா.. என்னை ஒரு வழியாக்கிடுவீங்க போல”
“ஒரு போன் பண்ணிக்கூட சொல்லாம போயிட்டு பேசாத”
“நான் போன் பண்ணா என்னை பேச விடாம தடுத்து, இங்க வர வச்சுருப்பீங்க. அதான் ஓடிட்டேன்”
ஒரு வழியாக அன்னையை சமாளித்து விட்டு அவன் ஊரை விட்டுக் கிளம்ப, அதே நேரம் தங்கமீனாட்சியின் குடும்பம் அவளுக்கு மருத்துவம் பார்த்து விட்டு ஊருக்குள் நுழைந்தது.
_______
ஆதிகேசவன் அன்னையை சரி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தான். மகன் நிலைமையை பார்த்து அவர் கண்ணீர் வடிக்க, ஆதிக்கு குற்ற உணர்ச்சி அதிகமானது.
இவர்களை பற்றியும் அவன் யோசித்திருக்க வேண்டுமல்லவா? யோசிக்காமல் உயிரை மாய்த்துக் கொள்ள பார்த்தானே?
இப்போதும் கூட மனோகரி இல்லாத வாழ்க்கை வெறுமை தான். ஆனால், மற்றவர்களை மறந்து உயிரை விடத்துணிந்த தவறை நினைத்து வருந்தினான்.
அன்னையின் கவனிப்பில் உடல் தேற ஆரம்பிக்க, விசயம் அரசேந்திரனிடம் வந்தது. அதன் பின்பே அரசனால் நிம்மதியாக இருக்க முடிந்தது.
மாதவன் வழக்கு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அவனோடு கைதானவர்கள் எல்லோரும் ஜாமினுக்கு முயற்சித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் மாதவன் எந்த முயற்சியும் எடுக்க விரும்பவில்லை. தண்டனை அறிவித்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டான். அதனால் அவனது பெற்றோருக்கு வருத்தம் தான் என்றாலும், அவனை மீறி எதுவும் செய்யவில்லை.
வைசாலியை பற்றிக் கேட்ட போது, திருமணத்தை நிறுத்தியபிறகு எதுவும் பேசவில்லை என்று கூறி விட்டனர். ஆனால் மாதவனுக்கு வைசாலியிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. அவளிடம் ஒரு வார்த்தை பேசி விட்டால், அவன் நிம்மதியாக இருப்பான். நிச்சயம் அவனை தவறாக நினைத்து இருப்பாள். அதற்கு மன்னிப்பு கேட்டு, தனக்காக காத்திருக்கும் படி கேட்க வேண்டும் என்பது தான் அவனது முதல் எண்ணம்.