அன்றைய பொழுது அந்த வீட்டில் எல்லோருக்குமே சோர்வாக தான் விடிந்தது. நேற்றைய பரபரப்பு இல்லாமல் தாமதமாக எழுந்து வந்தார் அமுதவல்லி.
ஹாலில் அமர்ந்து தொலைகாட்சியில் கண்ணை பதித்து இருந்த வைசாலி, திரும்பிப் பார்த்தாள்.
“குட் மார்னிங் அத்த”
“மார்னிங்டா.. சீக்கிரமே எழுந்துட்டியா?” என்று கேட்க, தலையை மட்டும் ஆட்டினாள்.
தூக்கம் எங்கே வந்தது? தூங்கவே இல்லை அவள்.
“உங்களுக்கு இன்னும் டயர்டா? தூங்க வேண்டியது தான?”
“தூங்கலாம். ஆனா பசிக்குதே”
“டீ போட்டு வச்சுருக்கேன். எடுத்துக்கோங்க. சூடா தான் இருக்கும்”
“அட அட அட!” என்று ஆரம்பித்து விட்டு, “இரு வர்ரேன்” என்று வேகமாக சமையலறைக்குள் சென்று டீயை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தார்.
ஒரு மிடறு விழுங்கி விட்டு, “என்ன சுகம்..! மருமக கையால டீ குடிக்கிறது?” என்று அவர் சிலாகிக்க, வைசாலி வாய்விட்டு சிரித்தாள்.
“நான் டீ போட்டு இப்ப தான் குடிக்கிறீங்களா என்ன?”
“அது வேற.. நீ கெஸ்ட். இப்ப தான என் மருமகள்”
அமுதவல்லி சிரிப்போடு தேனீரை உறிஞ்ச, அரசன் வந்து விட்டான்.
“நீங்க மட்டும் உட்கார்ந்து இருக்கீங்க? மத்த யாரும் எந்திரிக்கலையா?” என்று கேட்டுக் கொண்டே வர, “நீ என்ன காலையிலயே கிளம்பி நிக்கிற?” என்று கேட்டார் அமுதா.
“என் மருமக நான் எந்திரிக்கும் போதே, எனக்காக டீ போட்டுக் கொடுத்ததுல. எவ்வளவு ரிலாக்ஸ் ஃபீல் தெரியுமா? மருமக கையால சாப்பிடுற சுகமே தனி தான்”
அரசன் வைசாலியை பார்க்க, அவள் திரும்பக்கூட இல்லை.
“ரொம்ப ஆசைய வளர்த்துக்காதீங்கமா. இப்ப செய்வா உங்க மருமக.. ஹாஸ்பிடல் போக ஆரம்பிச்சா, நைட் ஷிஃப்ட் பார்த்துட்டு காலையில தான் வருவா. நீங்க தான் போட்டு கொடுக்கனும்.”
“அதுனால என்ன மகனே? வீட்டுல இருக்கும் போது வைசாலி பண்ணட்டும். வேலை இருக்கும் போது நான் என் மருமகளுக்கு செஞ்சு கொடுத்துட்டுப்போறேன்” என்ற அமுதா ஒரு கையால் வைசாலியை அணைத்துக் கொண்டார்.
“கண்டிப்பா அத்த.. உங்களுக்கு டயர்ட்னா என் கிட்ட விட்டுருங்க. நான் செய்றேன்”
“காலையிலயே கொஞ்சி கடுப்பேத்துறாங்கயா” என்று இருவரையுமே முறைத்து விட்டு அரசன் நடக்க, “டீ குடிச்சுட்டு போடா” என்று நிறுத்தினார்.
“நீங்களே குடிங்க. நான் ஃப்ரஸ்ஸா இளநீர் சாப்பிட்டுக்கிறேன்” என்று நிற்காமல் சென்றான்.
“வீட்டுக்கு அனுப்ப சொல்லுங்க அத்த”
“அரசா வீட்டுக்கு அனுப்பி விடு”
“சரிமா” என்ற சத்தம் மட்டுமே வந்தது.
சிறிது நேரத்தில் எல்லோரும் எழுந்து விட, வீடு மீண்டும் களைகட்ட ஆரம்பித்தது.
மணிகர்ணிகாவிற்கு உணவை ஊட்டிக் கொண்டு அஞ்சனா அமர்ந்து இருக்க, “நீங்க போய் சாப்பிடுங்க ஃபைவ் அண்ணி. நான் மணிக்கு ஊட்டுறேன்” என்று வந்தாள் வைசாலி.
“சாப்பிட மாட்டா. நானும் அவ அப்பாவும் இருந்தா, நாங்க கொடுத்தா மட்டும் தான் சாப்பிடும் மேடம். பிடிவாதம் அவங்க அப்பாவ மாதிரியே..”
“அண்ணன பார்த்த அப்பாவியா இருக்கு, இதெல்லாம் நம்ப மாட்டேன்”
“பார்க்க அப்படித்தான் இருப்பாரு. பண்ணுறது பூராம் பிடிவாதம் மட்டும் தான். வேலையில சேர்ந்து இத்தனை வருசத்துல, மூணு வருசம் ஒரு ஊர்ல நிலையா தங்குனது கிடையாது. ட்ரான்ஸ்பர்ல பாதி தமிழ்நாட்டையே சுத்தி வந்தாச்சு”
“ஃப்ரீ ட்ரிப்னு என்ஜாய் பண்ணுவீங்களா?” என்று வைசாலி கண் சிமிட்டினாள்.
“அரசன் ட்ரான்ஸ்ஃபர் ஆகும் போது உனக்கும் தெரியும்.. அப்பவும் தெரியலனா, உனக்கு பிள்ளை பிறந்து ஸ்கூல்க்கு அனுப்பும் போது தெரியும்”
“அவ்வளவு எல்லாம் போகத்தேவை இல்ல அண்ணி. அப்பாவே ரெண்டு மூணு டைம் ட்ராண்ஸ்பர் ஆகியிருக்காரு. அதுல தான் நாம படிச்ச ஸ்கூல்க்கு வந்ததே”
“தெரிஞ்சுகிட்டும் பேசுற நீ?”
“இப்ப மணி எந்த ஸ்கூல்ல படிக்குறா?”
“சிவகங்கையில தான். இவர் கூட நான் வேணா ஊர் ஊரா சுத்துவேன். மணி ஸ்கூல்ல மாத்திட்டே இருக்க முடியாதுனு அத்தை கிட்டயே விட்டுட்டேன். அதுக்கு தான் மூணு வருசம் கழிச்சு பெத்துக்கிட்டோம். அத்தை கிட்ட தான் மணி எப்பவும் இருப்பா. நானும் இருப்பேன். எப்பவாச்சும் தான் அவங்க வீட்டுக்கு வருவாங்க. மத்த நேரம் நாங்க தான் போவோம்”
“கஷ்டமா இருக்காது?”
“ஃப்ரீ ட்ரிப்னு சொன்ன?” என்று அஞ்சனா கிண்டலாக கேட்க, வைசாலி சிரித்தாள்.
“நீங்க என்ன பண்ணுறீங்க? ஹவுஸ் வொயிஃப்பா?”
“பார்க்க அப்படித்தான் இருக்கும். ஆனா இல்ல. பல நேரம் அவரோட வேலையில என்னையும் சேர்த்து விட்டுருவாரு. இதுல பல சங்கத்துல வேற சேர்த்து விட்டு, உலகத்தை தெரிஞ்சுக்கனு சொல்லிடுவாரு. சேவை செய்ய ஆசைபட்டது குத்தமாடானு இருக்கும்”
வைசாலி அவளது பேச்சுக்களை கன்னத்தில் கை வைத்து கேட்க ஆரம்பித்தாள்.
நிறைய கதைகளை சொல்லிவிட்டு, பேச்சு அரசனிடம் வந்து நின்றது.
“உங்க தம்பி எல்லாம் இப்படி ஊர் சுத்துனா, நான் எந்த ஹாஸ்பிடல்லயும் நிரந்தரமா வேலை பார்க்க முடியாது போலவே?”
“இதுக்குத்தான் இன்னொரு போலீஸ கட்டிக்கடானு சொன்னேன். கேட்கலயே”
வைசாலி இப்போது முறைத்து பார்த்தாள்.
“தெரியும் அந்த புரூட்டஸ் நீங்க தான்னு. இதுக்கு ஒரு நாள் உங்களுக்கு இருக்கு.. ஆனா உங்க தம்பி போன்ல போட்டோவ வச்சுட்டு சுத்துறான். அதுக்கு ஒரு நாள் அவனுக்கும் இருக்கு”
“ஹாஹா” என்று அஞ்சனா சிரிக்க ஆரம்பிக்க, வைசாலி முகத்தை சுருக்கிக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
“சிரிக்காதீங்க.. கிடைக்கட்டும் அவர மாதிரியே தலையில நங்குனு ஒரு கொட்டு வைக்கிறேன்”
“நீயும் கொட்டு வாங்கிருக்கியா? நானும் வாங்கி இருக்கேன். என்னை விட ஹைட்டா வளர்ந்துட்டான்னு கொட்டிட்டே இருப்பான். திரும்ப கொட்ட முடியாம முழிச்சுட்டு இருப்பேன்”
வெளியே பைக் சத்தம் கேட்க, வைசாலி எட்டிப் பார்த்தாள்.
“இன்னைக்கு கொட்டிருவோமா? ஒரே கொட்டு மொத்த கணக்கும் க்ளியர்?” என்று வைசாலி கண்சிமிட்டி கேட்க, அஞ்சனா குதூகலமானாள்.
“ஐம் ரெடி”
“வந்து உட்காரட்டும். நின்னா முடியாது” என்று வைசாலி ரகசிய திட்டம் போட, அது தெரியாமல் இளநீர் காய்களோடு அரசன் உள்ளே வந்தான்.
“ம்மா..” என்று அழைத்துக் கொண்டே வந்தவன், அவரிடம் லோட் ஏற்றிய விசயங்களை பேசி விட்டு அமர்ந்தான்.
“முகம் கழுவிட்டு வா சாப்பாடு வைக்கிறேன்”
“டென் மினிட்ஸ் ஆகட்டும்மா” என்று அமர்ந்து விட்டான்.
வைசாலி அஞ்சனாவிற்கு கண் காட்டி விட்டு, எழுந்து கொண்டாள்.
அரசன் சோபாவின் இரு பக்கமும் கையை விரித்து சாய்ந்து, கண்ணை மூடி அமர்ந்து இருந்தான்.
மேலே சுற்றிய மின்விசிறி அவனது முடியை தொட்டு விளையாடிக் கொண்டிருக்க, வைசாலி அவனுக்கு பின்னால் வந்து நின்றாள்.
கையைப்பிடித்ததும் கண்ணைத்திறந்து பார்த்தவன் அதிர்ந்தான். சுற்றியும் எல்லோரும் இருக்க, வைசாலி கையைப்பிடித்துக் கொண்டு நின்றாள்.
அரசனின் அதிர்ச்சியில் சுலபமாக மற்றொரு கையையும் பிடித்து பின்னால் இழுத்தவள், கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
அப்போது தான் அரசனுக்கு அதிர்ச்சி விலகி, மூளை வேலை செய்ய ஆரம்பித்தது.
“அண்ணி.. ஸ்டார்ட்”
வைசாலி சொன்னதும், அஞ்சனா முன்னால் வந்து நின்று இடுப்பில் கைவைத்துக் கொண்டு வில்லி போல் சிரித்தாள்.
“லாலி..” என்று திரும்பிப் பார்த்தவன், பார்வையால் வையை விடச்சொன்னான்.
வைசாலி சற்றும் அசராமல் நிற்க, “பாப்பா.. விடுமா” என்று ஜோதிலிங்கம் கூட சிரிப்போடு சொல்லி பார்த்தார்.
“சாலி.. கைய விடு” என்று சித்ரா அதட்ட, “பொறு சித்ரா.. வேடிக்கைய மட்டும் பார்ப்போம்” என்று அமுதா தடுத்தார்.
யார் பேச்சையும் கேட்காமல் வைசாலி கையை இறுக்கமாக பிடிக்க, அரசனின் கையும் அவளின் கையும் கூட சிவக்க ஆரம்பித்து விட்டது.
அரசன் விளையாட்டை விட்டு, ஆழ மூச்செடுத்து முழு பலத்தோடு விடுபட பார்க்க, அவனால் அசைய மட்டும் தான் முடிந்தது.
“போலீஸ்க்கு தான் ஸ்ட்ரெண்த் இருக்குமோ?” என்று வைசாலி அவன் காதருகே வந்து கிண்டலாக கேட்டு விட்டு, “அண்ணி நாலு கொட்டு.. உங்க பங்குக்கு ரெண்டு என் பங்குக்கு ரெண்டு” என்று அஞ்சனாவிடம் கூறினாள்.
உண்மையில் அரசன் அசந்து போனான். அவனது ட்ரைனிங்கில் எத்தனையோ வகை கிடுக்குப்பிடிகளை பார்த்திருக்கிறான். ஆனால் இவள் சோபாவிற்கு கீழ் கையை இறக்கி, அவனை எழ விடாமல் பிடித்து இருந்தாள்.
“இந்தா வந்துட்டேன்” என்று வந்த அஞ்சனா, கையை பரபரவென தேய்த்துக் கொண்டாள்.
“அஞ்சு அப்புறம் நல்லா வாங்குவ”
“அதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்” என்று தில்லாக வந்து கையை ஓங்கினாள்.
அரசன் அந்த கையை பார்த்துக் கொண்டிருக்க, சட்டென வைசாலி தன் பிடியை தளர்த்தினாள். அடுத்த நொடி அஞ்சனாவின் கையைப்பிடித்து, அவளை சோபாவில் தள்ளி விட்டு அரசன் எழுந்து விட்டான்.
“ஏய்.. நோ.. இன்னைக்கு நான் கொட்டியே ஆகனும்” என்று அஞ்சனா எழுந்து துரத்த, அரசன் ஓடினான்.
எல்லோருமே இதை சிரிப்போடு தான் பார்த்திருந்தனர்.
“மரியாதையா நின்னு கொட்டு வாங்கிடு.. இல்லனா அவ்வளவு தான்”
“ப்பே.. வந்துட்டா கொட்டுறதுக்கு” என்று அரசன் ஓட, மணிகர்ணிக்கா ஓடி வந்து மாமன் காலை பிடித்துக் கொண்டாள்.
“அம்மா.. நான் பிடிச்சுட்டேன்” என்று கத்த, “குட்டி பூசணிக்கா.. கூட்டு களவாணி” என்றவன் அவளை தூக்கிக் கொண்டு மீண்டும் ஓடினான்.
“முதல்ல பிடி பூசணிக்கா” என்று அவளை வம்பிழுத்தவன் கையில் சிக்காமல் ஓடினான்.
அஞ்சனா துரத்தி ஓட, சுற்றி இருந்த எல்லோருமே இதை வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். வைசாலியும் கையை கட்டிக் கொண்டு சிரித்தபடி நின்றாள்.
“போ என்னால முடியல” என்று அஞ்சனா மூச்சு வாங்க நின்று விட, “அது.. யாரு கிட்ட விளையாடுறீங்க? இருக்கு உங்க மூணு பேருக்கும்” என்று மிரட்டியவன், மணிகர்ணிக்காவை அமுதாவின் மடியில் இறக்கி விட்டான்.
“மாமா சாக்லேட்னு வா.. பல்ல தட்டுறேன்” என்று அவளையும் மிரட்டி விட்டு திரும்பினான்.
அஞ்சனா இன்னும் மூச்சு வாங்கி நிற்க, வைசாலியை ஒரு நொடி பார்த்து விட்டு, வேகமாக அறைக்குள் சென்று விட்டான்.
அவன் அங்கிருந்து சென்றதும் சிரித்துக் கொண்டே திரும்பிய அஞ்சனா, அமுதா கண்ணில் விழுந்தார் அகிலாண்டேஸ்வரி.
பாதி அடைத்து இருந்த கதவின் வழியாக, அவர்களை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தவர்களை கண்டு, அஞ்சனா வேகமாக அமுதவல்லியை பார்த்தாள். அந்த பார்வை அமுதவல்லிக்கு பிடிக்கவில்லை என்றாலும், “வா அகிலா” என்று அழைத்தபடி எழுந்து வந்தார்.
“உள்ள வா. ஏன் நிக்கிற?” என்று கதவை திறந்து உள்ளே அழைக்க, அகிலாவிற்கு இருந்த கோபம் பன்மடங்கானது.
“வாங்க அத்த” என்று அஞ்சனாவும் அழைக்க, சித்ரா யாரென பார்த்தார்.
“மகா அத்தையோட ஓரகத்தி. அகிலா அத்த.” என்று அஞ்சனா கூற, மற்ற யாருக்கும் அவரை தெரியவில்லை.
அமுதா பார்த்துக் கொள்ளட்டும் என்று இருந்து விட்டனர்.
“உள்ள வா” என்று அமுதவல்லி அழைக்க, “எதுக்கு?” ஒன்று வெடுக்கென வந்து விழுந்தது வார்த்தை.
“வாசல் வரை எதுக்கு வந்தியோ அதுக்கு” என்று அமுதாவின் வார்த்தையில் அழுத்தம் கூடியது.
“என் பிள்ளை வாழ்க்கையில மண்ணள்ளி போட்டுட்டு, நீங்க மட்டும் நல்லா இருந்துடுவீங்களானு கேட்க வந்தேன். ஆனா நல்லா தான் இருக்கீங்க இல்ல?”
“அத்த பார்த்து பேசுங்க. நாங்க யார் வாழ்க்கையிலயும் மண்ண போட மாட்டோம்” என்று அஞ்சனா வாசலுக்கு வந்து விட்டாள்.
“நீ பேசாத. உன் கிட்ட நான் பேசல. உங்கம்மாவும் உன் தம்பியும் என் மக வாழ்க்கைய அழிச்சுட்டாங்க. அவள முடமாக்கி வீட்டுல போட்டுட்டு, அழகா படிச்ச பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க கிளம்பிட்டாங்க. நல்லா இருங்க.. நல்லா இருங்க” என்றவர் வார்த்தைக்கும், அவர் சொன்ன தொணிக்கும் சம்பந்தமே இல்லை.
அவரது கண்ணில் சாபம் தான் இருந்தது. அதைப்பார்த்து அஞ்சனா பல்லைக்கடிக்க, “தேடி வந்து சண்டை போடனும் வந்தீங்களா?” என்று வைசாலி கேட்டாள்.
அப்போது தான் அவள் அங்கு நிற்பதை மற்றவர்கள் கவனித்தனர்.
“உள்ள வந்து பேசாம வாசல்லயே பேசிட்டு இருக்கீங்க? உள்ள வாங்க” என்று அவளும் வீட்டுப்பெண்ணாய் அழைக்க, அகிலாண்டேஸ்வரிக்கு பற்றிக் கொண்டு வந்தது.
எந்த வீட்டில் தன் மகள் உரிமையாய் வலம் வருவாள் என்று நினைத்தாரோ, அதே வீட்டில் வேறு ஒருத்தி நிற்கிறாள்.
“ஊர்ல உங்கள பத்தி பேசுறதெல்லாம் பொய் தான் இல்ல? பணம் அழகு அந்தஸ்து உள்ள பொண்ணு தான் உங்களுக்கு மருகமளா வரனும். முடமா கிடக்குற என் மகள சுலுவா கை கழுவி விட்டுட்டீங்க.. ஆனா இதுக்கெல்லாம் அனுபவிப்பீங்க.. நல்லா அனுபவிப்பீங்க” என்று கூறி விட்டு விருட்டென கிளம்பி விட்டார்.
வைசாலி தான் அதிர்ந்து போய் பார்த்தாள்.
“என்ன பேச்சு பேசுறாங்க?” என்று அதிர்ந்து பார்க்க, “கண்டுக்காத விடு. உள்ள வா” என்று அழைத்துச் சென்றாள் அஞ்சனா.
உள்ளே இருந்தவர்கள் காதில் பேச்சு விழவில்லை. யாரும் கத்தியோ சண்டை போடுவது போலோ பேசவில்லை. அமைதியாகவே பேசி விட்டு அகிலாண்டேஸ்வரி செல்ல, மற்றவர்களும் உள்ளே வந்து விட்டனர்.
அரசன் குளிக்க ஆரம்பித்துருக்க, எதுவும் அவனுக்குத் தெரியாமல் போனது.
நிச்சயத்திற்கு நாள் குறிக்க முடிவு செய்தவர்கள், வைசாலி அரசனின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டனர்.
வீட்டில் அஞ்சனா வைசாலி மணிகர்ணிகா மூவர் மட்டுமே இருக்க, அரசன் வந்து நின்றான்.
“லாலி.. வா” என்றதும், “எங்கடா?” என்று அஞ்சனா தான் கேட்டாள்.
“ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க போறோம்”
“அதுக்கு சாட்சி கையெழுத்து போட நான் வரவா?”
“வேணாம் நாங்களே அந்த கையெழுத்தும் போட்டுக்கிறோம்”
“அந்த கல்யாணம் செல்லாதே தம்பி”
“அய்ய.. நான் கிளம்பிட்டேன். பை.” என்று வைசாலி வேகமாக முன்னால் நடக்க, “ஒரு மணி நேரத்துல வீட்டுல இருக்கனும்” என்றாள் அஞ்சனா.
“நோ.. கல்யாணம் பண்ணிட்டு நேரா ஹனிமூன்”
“டேய்.. நம்மலால முடியுற பத்தி தான் பேசனும். அதுக்கெல்லாம் நீ சரி பட்டு வர மாட்ட. இடத்த காலி பண்ணு” என்று அவனை பிடித்து வெளியே தள்ளி விட்டு, கதவை அடைத்துக் கொண்டாள்.
“ச்சே.. ரொம்ப டேமேஜ் பண்ணுறாடா” என்று முறைத்து விட்டு, இறங்கி வைசாலியோடு நடந்தான்.
மாலை நேரம்.. சூரியன் மறைந்தாலும் வெளிச்சம் நன்றாகவே இருந்தது. இருவரும் தோப்பை நோக்கிச் சென்றனர். உள்ளே நுழையும் வரை இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.
அவர்களை பின்னாலிருந்து பார்த்த மீனாட்சி, ஒரு பெருமூச்சோடு தன் வீடு செல்லும் பாதைக்கு திரும்பினாள்.