மாதவன் தந்தையை பார்த்தபடி அமர்ந்து இருந்தான். மனம் எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்தது. நேற்று மாலை வைசாலியின் திருமணத்தை நிறுத்தவென சென்றவன், மனம் நொந்து வெளியே வந்திருந்தான்.
அவனால் வைசாலி அரசனை காதலிப்பதை ஏற்கவே முடியவில்லை. மனம் முழுவதும் கோபம், ஆற்றாமை. வைசாலி வேறு யாரையும் திருமணம் செய்திருந்தால் இவ்வளவு கோபப் பட்டிருப்பானா? தெரியவில்லை. ஆனால் அரசனை அவளோடு பார்க்க முடியவில்லை.
வைசாலியிடம் மேலும் பேசி மனம் நோகாமல் வெளியே வந்து விட்டவன், காரில் அமர்ந்ததோடு சரி. அங்கிருந்து கிளம்பும் மனம் இல்லை.
மண்டபத்தின் உள்ளே எழுந்த சத்தங்களும் சந்தோசங்களும், அவனை கொஞ்சம் கொஞ்சமாய் உடைத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் அங்கிருந்து கிளம்பவில்லை.
அவனால் அவனுடைய பொக்கிஷத்தை விட்டு விட்டு செல்ல முடியாது. கையை கட்டிக் கொண்டு இறுகிப்போய் அமர்ந்து இருந்தான்.
நிச்சயதார்த்தம் முடிந்து சத்தங்கள் குறைந்தது. நேரம் நள்ளிரவு நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.
அமைதியாக அமர்ந்து இருந்தவனை, அவனது கைபேசி திசை திருப்பியது. மிருதுளாவின் பெயரை பார்த்தவன், உடனே எடுத்துக் காதில் வைத்தான்.
“மிரு..”
“எங்கண்ணா இருக்க?”
அமைதியான குரலில் மிருதுளா கேட்க, மாதவனால் பதில் சொல்ல முடியவில்லை.
மிருதுளா இப்போது வெற்றிகரமாக மருத்துவ படிப்பிற்குள் நுழைந்து இருந்தாள். எதோ ஒரு கல்லூரியில் விடுதி வாசம். தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றதும், ஓடோடி வந்திருந்தாள.
உறவினர் ஒருவரின் உதவியோடு, மாதவனை வெளியே எடுக்கவும் மிருதுளா தான் அலைந்தாள்.
ஆனால், மாதவன் வெளியே வந்த மறுநாளே கல்லூரிக்கு கிளம்பிச் சென்று விட்டாள். மாதவனோடு பேசவில்லை.
“எப்படி இருக்க மிரு?” என்று மாதவன் கேட்டதற்கு, தலையை மட்டும் தான் ஆட்டி வைத்தாள்.
நன்றாக இருக்கிறேன் என்றோ இல்லை என்றோ பதில் இல்ல. பொதுவான தலையாட்டல்.
தந்தையின் பொறுப்பை தமையனிடம் விட்டு விட்டு, கல்லூரிக்கு சென்று விட்டவள், இன்று தான் அவனை மீண்டும் அழைக்கிறாள்.
மாதவனை வெளியே எடுக்க உதவிய உறவினர் மூலம், ஏற்கனவே வைசாலியின் திருமணம் பற்றி அறிந்து இருந்தாள். ஆனால் அவளுக்கு அதைப்பற்றிக் கவலைப்பட நேரமில்லை.
இப்போது அண்ணனை காணவில்லை என்று அன்னை புலம்பவும், அவன் எங்கு சென்றிருப்பான் என்று ஊகித்து விட்டாள்.
“சொல்லுணா.. எங்க இருக்க?”
“மண்டபத்துல”
மிருதுளாவிடம் சில நொடிகள் மௌனம்.
“அ.. அவங்களுக்கு கல்யாணமா?”
“ம்ம்..” என்றவனுக்கு தொண்டை அடைத்தது.
“பார்த்தியா?”
“ம்ம்..”
“பேசுனியா?”
“ம்ம்..”
“என்ன சொன்னாங்க?”
மாதவன் மௌனம் சாதித்தான். வாயைத்திறந்தால் உடைந்து விடுவோம் என்று பயமாக இருந்தது. அவனது பதிலுக்காக சில நொடிகள் காத்த மிருதுளா, பெருமூச்சு விட்டாள்.
“கிளம்புணா.. அப்பா உன்னை தான் தேடுறாரு”
“மிரு..”
“வேணாம்ணா.. அவங்க வாழ்க்கை அவங்க முடிவு. நீ போய் அப்பாவ பாரு”
“முடியலடா” என்றவனுக்கு கண்கலங்கி விட்டது.
“பழகிடும்” என்றவளுக்கும் வேதனையாகத்தான் இருந்தது. அதைக்காட்டிக் கொள்ளாமல் பேசினாள்.
“ம்ம்.. பழகிடுறேன்”
“அப்பா உன்னை தேடிட்டு இருக்கார். கிளம்பு” என்று மிருதுளா அழைப்பை துண்டித்து விட்டாள்.
மாதவன் உடனே கிளம்ப முடியாமல் அமர்ந்து இருந்தான். ஒரு பக்கம் உயிர் கொடுத்த தந்தை. மறு பக்கம் உயிராய் நேசித்தவள். இரண்டும் அவனை பாடாய் படுத்தியது.
காதலி இனி இல்லை என்று புரிய, கலங்கிய கண்ணை துடைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
அவன் வரும் வரை பாதி முழிப்பும் தூக்கமுமாக இருந்தார் அவனுடைய தந்தை பிரபாகரன்.
மாதவன் அருகே சென்று கையைப்பிடித்ததும், “வந்துட்டியாபா” என்று நிம்மதியாக கேட்டு விட்டு, அதன் பின்பே ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றார்.
விடியும் வரை அசையாமல் அமர்ந்து இருந்தான். மனதில் பல போராட்டிங்கள். கிழக்கு வெளுக்க ஆரம்பிக்கும் போது, நிலையான முடிவுக்கு வந்தவன், சட்டை பையிலிருந்து தாலியை எடுத்தான். நேற்று எதோ நினைத்து அதை எடுத்துச் சென்றிருந்தான். நடக்கவில்லை.
பொன் தாலி. வைசாலிக்காக அவர்கள் செய்து வைத்திருந்தது. அதை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
மருத்துவமனை ரிசப்ஷனில் உண்டியல் ஒன்று இருந்தது. அதில் வரும் பணம் பணமில்லாமல் சிகிச்சை செய்ய முடியாமல் தவிப்பர்களுக்கு சென்று விடும். அதில் அந்த தாலியை போட்டு, விட்டு தன்னுடைய பணப்பையில் இருந்த பணத்தையும் போட்டு விட்டு, திரும்பி நடந்தான்.
அன்றைய நாள் முழுவதும் பிரபாகரனோடு செலவிட்டவன், திடமான முடிவுக்கு வந்திருந்தான்.
______
மீனாட்சியின் வீடு அமைதியாக இருந்தது. அகிலா சமைத்துக் கொண்டிருக்க, மீனாட்சி கல்லூரிக்கு கிளம்பினாள்.
நேற்று நடந்த அரசனின் திருமணத்திற்கு, ராமலிங்கம் மட்டும் சென்று தலையை காட்டி விட்டு வந்து விட்டார். அகிலாவோ மீனாட்சியோ செல்லவில்லை.
இப்போதெல்லாம் அகிலா பேசுவதே இல்லை. கல்லூரியில் அழைத்து அவருக்கு அறிவுரை கூறியதிலிருந்து, அவரது கவனம் எல்லாம் மகள் மீது படிந்தது.
மீனாட்சி என்ன நினைக்கிறாள்? எதைச் செய்கிறாள்? என்று ஆழ்ந்து பார்த்தார். அவளிடம் தோன்றிய பல மாற்றங்கள், அப்போது தான் அவர் கண்ணுக்கு தெரிந்தது.
பழைய மீனாட்சி அமைதியாக இருந்தாலும், இயல்பாய் சிரித்த முகமாக பேசுவாள். இப்போது இருப்பவள் யாரிடமும் பேசுவது இல்லை. பலரின் முன்பு வருவதே இல்லை.
சபையில் வைத்து அவர் பேசிய பேச்சு, மீனாட்சியை வெகுவாக பாதித்து இருந்தது. எல்லோரிடமிருந்தும் ஒதுங்கி விட்டாள். படிப்பு ஒன்றே துணை என்று வாழ ஆரம்பித்து இருந்த மகளை கண்டு, அகிலாவிற்கு நெஞ்சம் கலங்கியது.
பெற்றவளாய் உடனிருந்து என்ன பயன்? வார்த்தைகளால் அவளை கொன்று விட்டு, அவளது நலவாழ்விற்காக எதெதோ செய்ய நினைத்தாரே. அகிலா மகளிடம் பேச முயற்சித்தார். பலனில்லை.
அவளது வேலைகளை எல்லாம் இவரே செய்தார். மீனாட்சி அசையவில்லை. மௌனம் மௌனம் மௌனம் மட்டுமே. அவளாக பேசுவது மகாலட்சுமியிடம் மட்டுமே. மற்ற யாரிடமும் ஒரு வார்த்தை கூட தானாக சென்று பேசுவது இல்லை.
அகிலாண்டேஸ்வரியின் முயற்சி மீனாட்சிக்கு புரிந்தாலும், அவள் பட்ட காயம் சட்டென கூட்டை விட்டு வெளியே வரவிடவில்லை.
கல்லூரி கிளம்பியவளுக்கு உணவ கொண்டு வந்து கொடுக்க, வாங்கி உள்ளே வைத்தவள், எதுவும் சொல்லாமல் வாசல் நோக்கி நடந்தாள்.
“எப்படி போறா பாருங்க. என் கிட்ட பேசவே மாட்டாளா?” என்று அகிலா கலங்க, “ரெண்டு வருசமா பேசாத போதே நீ காரணத்த கண்டு பிடிச்சுருக்கனும். மக மனச விட உனக்கு உன் வைராக்கியம் முக்கியம்னு அலைஞ்ச. இப்ப அனுபவிப்போம்” என்று முடித்து விட்டார் ராமலிங்கம்.
மீனாட்சி இதை காதில் வாங்காமல், கல்லூரியை மட்டும் மனதில் நினைத்தபடி கிளம்பி விட்டாள்.
வைசாலி மணிகர்ணிக்காவிடம் பேச, அஞ்சனா அப்போது தான் அரசனை பார்த்தாள்.
“என்ன லாலி பாப்? இது எந்த காலேஜ் யூனிஃபார்ம்?” என்று நக்கலாக கேட்டாள்.
நேற்று பார்த்தசாரதி, அஞ்சனா, மணிகர்ணிக்கா மூவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்திருக்க, “எந்த ஸ்கூல் யூனிஃபார்ம் ஆறு?” என்று கிண்டலடித்து இருந்தான்.
இன்று அவளும் அரசனும் ஒரே நிற உடையில் இருப்பதை பார்த்து விட்டு, அஞ்சனா பதிலுக்கு கேட்டாள்.
“நீங்க படிச்ச ஸ்கூல்க்கு பக்கத்துல இருந்த காலேஜ் தான்” என்று வைசாலி கண் சிமிட்டினாள்.
பேச்சும் சிரிப்புமாக அங்கிருந்து கிளம்பி மண்டபம் சென்றனர். உறவினர்களுக்கு தனியாக வைக்கப்பட்ட விருந்து அது. காலை மற்றும் மதிய உணவு எல்லாம் அங்கேயே முடிந்து விட, சொந்தங்கள் எல்லோரும் விடை பெற்றுக் கிளம்பினர்.
“அடிக்கடி பிபிய ஏத்திக்க கூடாது. முக்கியமா பக்கத்துல இருக்கவங்க கிட்ட ஊர் கதை பேசி, எல்லாத்தையும் உளற கூடாது”
“சரி”
“நேரத்துல தூங்கனும்.”
“சரி”
“அப்பாவ வெளி வேலைக்கு அனுப்பனும். நீங்களே கிளம்புனீங்கனு தெரிஞ்சது அவ்வளவுதான்”
“சரி”
வைசாலி ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டிருக்க, சித்ராவும் எல்லாவற்றுக்கும் சரி என்றார்.
“மாப்பிள்ளை கூப்பிடு சொல்லிட்டு கிளம்புறோம்”
“அவர் போன் பேசிட்டு இருந்தாரே..” என்று வேகமாக உள்ளே சென்றவள், அரசனை அழைத்து வந்தாள்.
அவனிடம் பேசி விட்டு கிளம்பி விட்டனர். வாசலில் நின்று கையாட்டிய வைசாலிக்கு, கண்கவங்கும் போல் இருந்தது. தான் அழுதால் சித்ராவும் அழுதுவிடுவார். அது அவரது உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று அடக்கிக் கொண்டு புன்னகைத்தாள்.
அவர்கள் கிளம்பியதும் வைசாலி வேகமாக அறைக்குள் சென்று விட, அரசனும் பின்னால் சென்றான்.
கண்ணீரை துடைத்துக் கொண்டு அழுகை அடக்கிக் கொண்டிருந்தவளை, இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
“லாலி..”
“உஸ்ஸ்..” என்றவள் அவனோடு நன்றாக ஒன்றிக் கொண்டாள்.
மிச்சம் சொச்சமிருந்த உறவினர்கள் கூட, இரவு கிளம்பிச் சென்று விட, வீட்டில் யாருமே இல்லை. அஞ்சனா பார்த்தசாரதி நாளை காலையில் கிளம்புவதாக முடிவானது.
வீடு மொத்தமும் கலைந்து கிடக்க, அஞ்சனாவும் வைசாலியும் சுத்தப்படுத்துவதில் இறங்கினர்.
“ஆறு.. இத எங்க வைக்கிறது?” என்று வைசாலி வர, “எங்கம்மாவ ஏன் ஆறுனு கூப்பிடுறீங்க? அவங்க பேரு அஞ்சு” என்று மணிகர்ணிக்கா முறைத்துக் கொண்டு நின்றாள்.
“ஏன் உங்கம்மாவ அஞ்சுனு தான் கூப்பிடனுமா? இந்த ஆறு ஏழு எல்லாம் கூப்பிட்டா தப்பா என்ன?” என்று மணியோடு வம்புக்கு நின்றாள்.
“ஆறு ஏழு எல்லாம் இல்ல வெறும் அஞ்சு தான்”
“அப்ப நாலு மூணு?”
“அடிப்பாவி ஏய்” என்று அஞ்சனா முறைத்தாள்
“ஏன் அண்ணி? அஞ்சாம் நம்பரே தான் வேணுமா? ஐம்பத்தஞ்சு கூட வேணாமா?”
“ஏம்மா குச்சி மிட்டாய்.. என் பொண்டாட்டிய பார்த்தா ஐம்பது வயசானவ மாதிரியா தெரியுது உனக்கு?”
“குச்சி மிட்டாயா?” என்று லாலி வாயைப்பிளக்க, “ஐ.. சூப்பர் பேரு.. குச்சி மிட்டாய் அத்த” என்று மணி சிரித்தாள்.
“அடேய்.. உனக்கு லொல்லு தான?” என்று மணியின் கன்னத்தை கிள்ளி வைத்தாள்.
“எங்கம்மா எவ்வளவு அழகா வைசாலினு பேரு வச்சுருக்காங்க.. ஒருத்தர் லாலி இன்னொருத்தர் லாலி பாப்.. கடைசியா குச்சி மிட்டாய்.. ஆளாளுக்கு கொலை பண்ணுறீங்க?”
“நீ மட்டும் என் பேர ஆறு ஏழுனு சொல்லலாமா?”
“நான் இருக்கத தான சொன்னேன் ஃபைவ் அண்ணி” என்று வைசாலி அப்பாவியாக கேட்டு கண் சிமிட்டி வைத்தாள்.
“கொய்யால.. குச்சி மிட்டாய் தான் இனி உன் பேரு போ”
இத்தனையும் அரசன் புன்னகையோடு கவனித்துக் கொண்டிருந்தான்.
“உங்க சண்டை எப்ப முடியுதோ அப்ப சாப்பிட்டு தூங்குங்க. எனக்கு தலை வலிக்குது. மணி வாடா.. பாட்டி கூட தூங்கு” என்று பேத்தியை தூக்கிக் கொண்டு அமுதவல்லி சென்று விட, நால்வரும் பேசியபடி வீட்டை சுத்தபடுத்தி விட்டு படுக்கச் சென்று விட்டனர்.
அரசன் அலுப்பு தீர குளித்து விட்டு வர, வைசாலி அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தாள்.
‘அதுக்குள்ள தூங்கிட்டாளா!’ என்று ஆச்சரியமாக பார்த்தவன், விளக்கை அணைத்து விட்டு அருகே வந்து படுத்துக் கொண்டான்.
வைசாலியை திரும்பிப் பார்த்தவன், அவள் நெற்றியில் முத்தமிட்டு திரும்ப, எதோ உறுத்தியது. அவளை நன்றாக ஆராய்ந்தான்.
அதுவரை அமைதியாய் படுத்திருந்தவள், அவன் முத்தமிடவும் லேசாக பயந்து விட, மூச்சு தாறுமாறானது. உதட்டை உள்ளே இழுத்து சரிசெய்ய பார்க்க, ‘அட ஃப்ராடு.. நானே நம்பி தொலைச்சுட்டேன்’ என்று நினைத்து முறைத்து பார்த்தான்.
பார்வை அவளிடமே இருக்க, வைசாலி கண்ணை திறப்பதாக இல்லை. திறந்து மாட்டிக் கொள்ள கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்.
பொறுத்து பார்த்தவன் அவளுக்கு கிச்சு கிச்சு மூட்ட, அடக்க முடியாமல் சிரித்து விட்டாள்.
“ஏய் ஏய் விடுங்கபா”
“நடிக்கிறியா? அதுவும் என் கிட்டயே”
“இல்ல இல்ல” என்று வேகமாக அவன் கையை பிடித்துக் கொண்டவள், “செம்ம டயர்ட் அதான் தூங்கலாம்னு படுத்தேன்” என்றாள்.
அவளை கூர்ந்து பார்த்தவன், “சரி தூங்கு” என்று கூறி விட்டு படுத்து கண்ணை மூடிக் கொண்டான்.
“குட் நைட்”
“ம்ம் குட் நைட்” என்றவன் கண்ணை திறக்கவில்லை.
வைசாலியும் கண்ணை மூடித்தான் படுத்தாள். ஆனால் தூக்கம் வர மாட்டேன் என்று ஓடியிருந்தது. அதோடு ஓட முடியாமல், புரண்டு புரண்டு படுத்தாள்.
அரசனிடம் சற்றும் அசைவில்லாமல் இருக்க, “கிங்” என்று அவனது கையை சுரண்டினாள்.
“ம்ம்”
“தூங்கிட்டீங்களா?”
“ஏன்?”
“எனக்கு தூக்கம் வரல”
“அதுக்கு?”
“பேசிட்டு இருக்கலாமே?”
“வேணாம். நீ தான் கண்ண மூடி அசையாம படுத்திருந்தியே.. அப்படியே படு. தூக்கம் வரும்” என்று திரும்பிக் கொண்டான்.
“வரல…” என்று எழுந்தவள், “கிங்… சோப்பு..” என்று உலுக்கினாள்.
உடனே சிரிப்போடு அவளை பிடித்து இழுத்து அணைத்தவன், “டயர்ட்னு சொன்ன?” என்று புருவம் உயர்த்தினான்.
“அது சும்மா.. பேசலாமே..”
“சரி பேசு..”
“இன்னைக்கு மிருதுளா கால் பண்ணி இருந்தா”
“ஓஓ.. என்ன சொன்னா?”
“மேரேஜ்க்கு விஸ் பண்ணா. அவ அண்ணா எதாச்சும் சொல்லி இருந்தா சாரினு சொல்லிட்டு வச்சுட்டா”
“இப்ப அந்த பொண்ணு மெடிக்கல் காலேஜ்ல சேர்ந்துடுச்சுல?”
“ம்ம்.. முன்னாடி நடந்ததுக்கு மாதவன் செஞ்சதுக்கு எல்லாம் சாரி சொன்னா. நான் சாதாரணமா விசாரிச்சுட்டு விட்டுட்டேன்”
“அந்த பொண்ணு ரொம்ப சின்ன பொண்ணுல லாலி? அன்னைக்கு ஆதி கூட பார்க்கும் போது அவ்வளவு அமைதியா இருந்தா. இந்த பிரச்சனை எல்லாம் எப்படி தாங்குச்சோ?”
“ஆதியா? யாரு?”
“மனோகரியோட ஹஸ்பண்ட்.”
“ஆமா ஆமா.. ஞாபகம் வந்துடுச்சு. அவர் இப்ப எங்க? சூஸைட் எல்லாம் அட்டன் பண்ணிருந்தாரே”
“இப்ப அவன் அண்ணா கூட டெல்லில இருக்கான். ஆர்மில ஜாயின் பண்ணுறது அவன் ஆசை. அவங்கம்மா விட மாட்டேன்னு அழுறாங்களாம். அவங்கப்பா ஏற்கனவே ஆர்மில இருந்து, ஒரு பிரச்சனையில இறந்துட்டாரு. இவனும் போறேன்னு அடம் பிடிக்கிறான். போலீஸ் கூட ஆகு. ஆர்மி வேணாம்னு ஒரே அழுகையாம். ஆதி போராடி சேர்ந்துட்டான். இப்போ ட்ரைனிங் முடிஞ்சு எங்கயோ இருக்கதா கேள்வி பட்டேன். அவன் மிருதுளாவ பார்த்தப்போ என்ன சொன்னான் தெரியுமா?”
ஆதி பேசியதை வார்த்தை மாறாமல் கூற, வைசாலி தலையை ஆட்டி ஆமோதித்தாள்.
“அவங்க நினைக்குறதுல தப்பு இல்ல. இப்ப அந்த ஹார்ட் மிருதுளாவுக்கு மட்டும் தான் சொந்தம். அது அவங்க மனைவியோடதுனு மிருதுளா பின்னால போகாம விலகிட்டாங்களே. அது போதும். குட் டிசிஷன்”
“அப்படியே அவனுக்கு வேற ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சுட்டா நல்லா இருக்கும். ஆனா மனோகரிய ரொம்ப லவ் பண்ணி கல்யாணம் பண்ணான். விதி எப்படி இருக்கோ அப்படியே நடக்கட்டும்”
வைசாலி சில நொடிகள் எதுவும் பேசாமல் இந்த விசயத்தில் ஆழ்ந்து போக, அரசன் அவள் கழுத்தில் குறுகுறுப்பை மூட்டினான்.
“ஹேய்” என்று சினுங்கியவள், “அய்யய்யோ ” என்று அலறினாள்.
“என்னாச்சு?” என்று அரசன் பதற, “முறுக்கு இல்ல. பசிச்சா நான் எதை சாப்பிடுவேன்?” என்று கேட்டு வைத்தாள்.
அவளை முறைத்துப்பார்த்தவன், கேள்விக்கு பதிலாக அவள் தலையில் நங்கென கொட்டு வைத்தான்.
“சோப்பு..”
“முறுக்காம் முறுக்கு”
“எனக்கு முறுக்கு தான் முக்கியம்”
“நேத்து நீ மிச்சம் வச்சத பத்திரமா வச்சுருக்கேன். போதுமா?”