அடுத்து நான்கு நாட்கள் அரசு விடுமுறை, கண்டிப்பாக கரிகாலன் வீடு வருவான். அவன் திரும்ப ஊர் செல்லும் போது பார்த்து பேசிவிட முடிவு செய்தாள் மதுமிதா.
தன் தாய் வீடு என்றாலும், இருக்க முடியும் என்று தோன்ற வில்லை. முகத்திற்கு நேரே சொல்லாமல், செயலில் ஒதுக்கத்தை காட்டும் உறவுகளை மதிக்கவும் தோன்றவில்லை. இவர்கள் எண்ணங்களை எல்லாம் பார்க்கும் போது அறியாமையில் இருப்பதாக தான் தோன்றியது. அதிலும் ரம்யா…
படிப்பை பாதியில் விட்டாலும், வெளி உலக அறிவும் அனுபவமும் இல்லாமல் இருப்பது எப்படி? கணவனை பிரிந்த ஒரு பெண் மூலையில் முடங்கி,தன் சுய விருப்ப,வெறுப்பை மறந்து, வீட்டில் உள்ளோருக்கு அடங்கி, மற்றவர்களின் இழி சொல்லையும், ஏளனத்தையும் ஏற்று ஒடுங்கி போவாள் என்று எண்ணுகிறாள். அதுவும் இந்த காலத்தில் அப்படி யார் இருப்பார்?… என் படிப்பே, என் சுயமரியாதையை காத்து நிக்குமே. அப்படி இருக்க, இவர்களுக்கு அடங்கி இருப்பேன் என்ற ரம்யாவின் நினைப்பு, அவள் அறியாமை தான்.
கணவன் உடன் வாழும் வாழ்வு வரம் தான், இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால், அத்தகைய மனநிறைவு எல்லோருக்கும் அமைவது இல்லையே… விதியால் வாழ்வு விட்டு போகும் போது, அதை எண்ணி முடங்குவதும், எல்லோர் போல தனக்கு வாழ்க்கை அமைய வில்லையே என்று தனக்குள் ஒடுங்கி கொள்வதும், உயிரை மாய்த்து கொள்வதும், எப்படி சரியாகும். வரம் என்று நினைத்த வாழ்வு கிடைக்க வில்லையா?… சரி விட்டு தள்ளு, துக்கம் நீங்கி மனம் ஓயும் மட்டும் அழுது, அரட்டி, வாய்விட்டு புலம்பி கூட மன பாரத்தை குறைத்து கொண்டு, வாழ்வை வரமாக்கும் வழியை காணலாம் அல்லவா…
மது தீர்மானமாகி விட்டாள். தன் கணவன் உடன் ஒரு முறை தெளிவாக பேசி பார்ப்பது என்று… அந்த பேச்சு வார்த்தையும், இரண்டு மாத வாழ்வில் அவன் கொடுத்த நம்பிக்கை தான். அதன் தொட்டு அவள் எடுக்கும் முயற்சி, நல்ல விதமாக முடிந்தால் வாழ்வு வரம் தான். அப்படி இல்லாவிட்டால் வாழ்வை வராமாக்கும் வழியை தேட வேண்டிய தான்.
அதை விட்டு இவர்கள் சொல்வது போல் வேற ஒரு திருமணமோ, அல்லது ரம்யாவின் எதிர்பார்ப்புக்கு தக்க வீட்டோடு முடங்குவதும் அல்ல… கணினி பொறியியல் முடித்து இருக்க, எங்கு சென்றாலும் வேலை தான். அவளின் அடிப்படை தேவைகளுக்கு யாரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தன் வட்டத்தை விட்டு வெளி வந்தால், பரந்த உலகம் வரவேற்கும். என்ன ஒன்று குடும்ப பாதுகாப்பு இருக்காது, போராட்டம் தான். பரவாயில்லை, முட்டி மோதியாவது கரை சேர்ந்து விடலாம். என்னை குறித்து வெட்கப்படாமல், எனக்கு நான் நேர்மையாக வாழலாம் அல்லவா… நேர்மறை சிந்தனை மட்டுமே தன்னை தக்க வைக்கும் என்று கண்டு கொண்டாள்.
அதற்கு, அடுத்த கட்டமாக தனக்கு ஒரு வேலையை தேட தொடங்கினாள். கரிகாலன் என்ற ஒருவன் மேல் நம்பிக்கை உண்டு. ஆனால், காலத்தின் மேல் நம்பிக்கை இல்லை. நேரமும்,காலமும் யாரையும் மாற்ற வல்லது. கணவனும் மனம் மாறி இருந்தால்… துவளாமல் அடுத்த ஓட வேலை வேண்டுமே… தன் நட்புகளை புதுப்பித்தாள். நெருங்கிய தோழியிடம் மட்டும் உண்மையை சொல்லி வேலையை தேடினால். அதன்படி வந்தது தான், மேலூர் பக்கம் ஆஃப்பர், அதை முயற்சி செய்து பார்க்க தான் செல்கிறாள். இவள் தோழி அணுவின் அப்பா மூலம் கிடைத்த வாய்ப்பு.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் தாண்டி தான் செல்ல வேண்டும். பல முறை கடந்து சென்ற பாதை தான். சமீப காலங்களில் ஒரு தாக்கம். அது கரிகாலனை கொண்டு தான். மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து நிலையம் என்பதால், அதை கடக்கும் போது எல்லாம் கணவன் நினைவோடு தான் கடப்பாள். அவன் இங்கு வந்து தான் மாறி செல்ல வேண்டும். இன்றும் அதன் தாக்கம் இருக்க, வெளியே தலையை மட்டும் நீட்டி எட்டி பார்த்து கொண்டே வந்தாள்.
மது வரும் லோக்கல் பேருந்தை கால் மணி நேரம் போட்டு தான் எடுப்பார்கள். அதன் படி சுற்றும், முற்றும் அலசி கொண்டிருந்தாள் மது. அவளுக்கு நேர் எதிரே ராமநாதபுரம் பேருந்து நிக்க, பார்த்ததும் ஒரு சந்தோசம். தன் கணவன் இருக்கும் ஊர் அல்லவா… அவனை திருமணம் செய்த போது கூட இந்த அளவுக்கு தேட வில்லை. நிரந்தர பிரிவு வந்து விடுமோ என்ற பயம் தான், அவனை நோக்கி தள்ளி கொண்டிருக்கிறது.
பார்வையை சற்று தொலைவில் அலச, திடுக்கிட்டு போனாள் பெண். அங்கிருந்தது அவள் கணவன் தான். திடீரென்று கணவனை பார்த்ததும் நம்பவே முடியவில்லை. அவன் தான இது… சற்று தள்ளி ஓரமாக இருக்கும் பயணிகள் அமரும் சிமெண்ட் பலகையில் அமர்ந்து இருந்தான். ஒரு வேப்ப மரம் இருக்க, யாருக்கும் தெளிவாக தெரியாது. அவனையே பார்த்து அமர்ந்திருந்தாள் பெண். நெருங்கி பேசும் எண்ணம் வராமல் இல்லை. ஆனால், காணாத வரை இருந்த ஏக்கம், கண்ட பின் கோபமாக மாறி போனது.
“என்னை விட்டு விட்டானே… அவ்வளவு எளிதாக தன்னை கடக்க முடிந்ததா!… மது சாதரணமாகவா போய்விட்டாள்… அவன் சொன்ன ஒரு சொல்லுக்காக மறு பேச்சில்லாமல் வீட்டை விட்டு சென்ற மனைவியின் நினைவு துளியும் இல்லையா!… இயல்பாக இருக்கும் மனைவி ஏக்கம் கூட வா இல்லை… தனக்கு இருக்கும் பரிதவிப்பு, கலக்கம், விட்டுவிட கூடாது என்ற எண்ணம் எதுவுமில்லாமல் சாதரணமாக இருக்கிறான்… தான் தான் அதிகமாக உருவாக்கி கொண்டோம…” என்று ஏதேதோ எண்ணம் அலைமோத நிலையில்லாமல் தவித்தாள்.
இவனை காண தானே இந்த பாடு… கண்ட பின் கோபம் தான் முன்னுக்கு நிக்குது. அவனின் தோற்றமும், நிதானமும் அவளுக்கு ஒதுக்கத்தை உண்டு பண்ணியது. தான் போய் என்ன பேச, என்னை ஏற்று கொள் என்றா… ஒரு முறை கேட்ட வார்த்தை மீண்டும் கேட்க நேர்ந்தால். ஒரு பெண்ணாக எவ்வளவு அவமானம். உண்மையான பாசம் இருந்தால் ஒரு போன் செய்தாவது பேசி இருப்பான் தானே… ஒரே ஊர், பலமுறை வந்து சென்றும் தன்னை காண தோன்றவில்லை தானே, மேற்கொண்டு அவனோடு பேச என்ன இருக்கிறது. வாழ்வை யாசகம் வாங்க முடியுமா…
அப்படி பெற்ற வாழ்வில் நீ அடைவது என்ன?… மனக்கண்ணில் மாமியார், நாத்துனார், மச்சான் மனைவி என்று தோன்ற, மனம் விட்டு போனது. திரும்ப அதே மூச்சு முட்டும் சூழல். இதுவரை இருந்த தெளிவு போய் குழப்பம் வந்தது. தன் மரியாதை இழந்து பெறும் வாழ்வு வேண்டாம் என்றும், கரிகாலன் என்ற ஒருவனுக்காக முயலலாம் என்றும் மனம் வேறுபாடு காட்டி நின்றது.
தலையை பிடித்து கொண்டவள், நிமிர்ந்து தன்னை நிதான படுத்தி கொண்டாள். ஒரு முடிவு எடுக்க முடியாத அல்லாட்டம் அவளிடம். பேருந்து கிளம்பும் ஒளி கேட்க, பதறி போய் எட்டி கணவனை பார்த்தாள். தன்மானம் பெரிதா?அல்லது வாழ்வு பெரிதா?…
பேருந்து மெதுவாக நகர தொடங்கியது. ஒரு நொடி கண் மூடி இருக்கையில் சாய்ந்தவள், மனதில் கடவுளை வேண்டி கொண்டாள். தன் கை கொண்டு கழுத்தில் கிடக்கும் தாலியை எடுத்து பார்த்தவள், அதில் கோர்த்து இருக்கும் மீனாட்சி சுந்தரத்தை தடவி விட்டு கொண்டாள். கண்களை மூடி கொண்டு தன் கழுத்தில் இருந்து தாலியை கலட்டா முயன்றாள், தூக்கிய கைகளை முகம் தாண்டி கொண்டு செல்ல முடியவில்லை. கட்டிய கணவன் நேர் எதிரே நிக்க, தாலியை கழற்றி எறிந்து விட்டு செல்ல யாருக்கு தான் மனம் வரும். என்ன தான் படித்து பட்டம் பெற்று, நாகரிகம் கற்றாலும், சில அடிப்படை விசங்கள் மறுத்து செல்ல முடிவதில்லை. சென்டிமென்ட் ஃபூல் என்று சொல்லி கொண்டாலும், அடிப்படை நம்ம இரத்தத்தில் ஊறியது போல, மனம் வரவில்லை.
இதற்கு மேல் என்ன வேண்டும். அவன் கட்டிய தாலியை கலட்டி எறிய திராணி இல்லை, எங்கனம் அவனை ஒதுக்க, பெண் பலவீனம் ஒன்றும் சொல்வதற்கில்லை. எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் நின்று கேட்டு விட வேண்டி தான். யார் சொன்னாலும், கணவன் வாய் வார்த்தையில் ஒரு சொல் வேண்டும். உனக்காக நீ இறங்கி போ மது. பள்ளம் இறங்காமல் மேடு ஏறுவது எப்படி?…
பேருந்து நகர்ந்து கொண்டிருக்கும் போதே இறங்கி விட்டாள். நடத்துநர் கத்துவது இல்லை திட்டுவது காதில் விழுந்தது. மற்ற நேரமாக இருந்தால், நான் மதுரகாரியாக்கும் என்று பதில் கொடுத்து தான் நகர்வாள். தற்போதைய மனநிலையில் அதற்கு இடமில்லை.
சிமெண்ட் கலர் டி-சார்ட், கருப்பு கலர் பேண்ட் போட்டு இருந்தான். முன் நின்று பேருந்து கூட்டமாக இருக்க, அடுத்த பேருந்துக்கு காத்திருக்கிறான். எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். அதான், சற்று ஒதுக்கு புறத்தில் அமர்ந்திருக்கிறான். அவனையே பார்த்து கொண்டு தான் சென்றாள்.
திடமாக பேசணும், தெளிவாக தன் முடிவை சொல்லி விடணும், எதார்த்த பேச்சாக தான் இருக்க வேண்டும், சிறிதும் அவனுக்காக ஏங்குவதை காட்டி கொள்ள கூடாது. முக்கியமாக, அவன் முன் அழுது தன்னை பலவீன படுத்தி கொள்ள கூடாது.
கரிகாலன், இன்னும் அவளை உணர வில்லை. நிமிர்ந்து பார்க்காமல் போனில் தலை விட்டு இருந்தான். அரவம் உணர்ந்து நிமிரும் முன், அவன் அருகே சென்று விட்டு இருந்தாள் மதுமிதா.
“கரிகாலன்” ஒற்றை வார்த்தை தான். மனதில் பல முறை சொல்லி கொண்டாலும், மூன்று மாதத்தின் பின் தற்போது தான் சத்தமாக சொல்கிறாள்.
பழக்கப்பட்ட சத்தத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்து போனான். சத்தியமாக, தன் மனைவியை அங்கு எதிர் பார்க்கவில்லை. தன்னை தேடி வந்து நிக்கும் மனைவி ஒருபுறம் அதிர்ச்சியை கொடுத்தால், மூன்று மாதம் சென்று காணும் அவள் முகம்… மனம் பொங்கி எழுந்தது.
“மது” சத்தமாக வரவில்லை. மெல்ல தான் சொன்னான். தன் கையை நெஞ்சில் வைத்து தடவி கொண்டான்.
அவன் மட்டுமே வித்தியாசமாக உச்சரிக்கும் தன் பெயரை கேட்டதும், அடக்க முடியவில்லை. அவன் கண்களில் தெரிந்த பரவசம், அவளுக்கு ஏதோ ஒரு வகையில் ஆறுதல் தர, கண்களில் பட்டென்று கண்ணீர் நிறைந்தது.
மானம் கெட்ட மனம், தன் நிலையை காட்டி விட்டதே… என்ன தான் கணவனாக இருந்தாலும் பார்த்தவுடன் கண்ணீர் ஏன் வரணும்?… அப்படி என்ன தான் இந்த மனசுக்கு புருசன் மீது ஆசையோ!…
கரிகாலன் நம்ப முடியாமல் பார்த்து நின்றான். அவன் அறிந்த வரை, மது மிகுந்த ரோசம் பார்பவள், தன்மானம், சுயகெளரவம் அதிகம் இருக்கும். அப்படி இருக்க, தன்னை தேடி வர சாத்திய கூறு இல்லையே!… படபடப்போடு தான் மனைவியை பார்த்தான்.
“எப்படி இருக்கீங்க கரிகாலன்?…” முதல் பேச்சு வார்த்தை பெண்ணே தொடங்கி வைத்தாள்.
தலையாட்டி வைத்தான் கணவன்.வேற என்ன செய்வான். யார் கேட்டாலும் நல்லா இருக்கேன் என்பது தான் எல்லோர் பதிலும்.
“நீங்க நல்லா தான் இருப்பீங்க. ஆனா, நான் நல்ல இல்ல கரிகாலன்… ஏன் தெரியுமா?… எந்த தப்பும் செய்யாம என் புருசன் என்னை தண்டிச்ச காரணம் தெரியலை?… எதுக்குன்னு தெரியாமவே எல்லோர் வாயிலையும் நான் விழுறேன்… உங்க ஒதுக்கத்துக்கு காரணம் தெரியணும்…” என்று சொன்னவள். அடக்க முடியாமல் அழுகையை அடக்கி கொண்டாள். பல நாள் மன அழுத்தம், மற்றவர் முன் உடைய கூடாது என்று இருந்த வைராக்கியம், கணவன் பார்த்த பார்வையில் உடைய தொடங்கியது.
வேணாம் மது. விட்டுவிட, விளக்கம் சொல்லி பெறும் வாழ்வு உனக்கு வேணாம். “வாழ்ந்தால் உன்னோடு, இல்லையே மண்ணோடு” என்று இருந்த காதலே மக்கி மண்ணாக போன பின், இவனோட வாழ்ந்த வாழ்வும் மக்கி போகும். உடைந்து உன்னை நீயே அசிங்கம் செய்யாதே… வேண்டாம் என்ற கணவனிடம் ரோசம் கொள் என்று மனம் எடுத்து சொன்ன போதும், ஏதோ ஒன்று கரிகாலனை பார்த்ததும் உடைந்தது. கேட்க வேண்டாம், வாழ்க்கை யாசம் இல்லை என்று மனம் உரைத்தாலும், வாய் வழி வார்த்தை வலியோடு வந்து விட்டது.
“நான் உங்களுக்கு ஒண்ணுமே இல்லையா கரிகாலன்?…”
“என்னை எளிதா மறக்க முடிஞ்சதா… துங்கும் போது, சாப்பிடும் போது, குளிக்கும் போது எல்லாம் என் நினைப்பு கொஞ்சமும் இல்லையா…”
முக்கில் இருந்து நீர் வரும் அளவுக்கு துக்கம் அடைத்தது, அடக்கி கொண்டு பேசினாள்.
“நான் நினைச்சேன் கரிகாலன். ஒவ்வொரு நொடியும் நான் உங்களை நினைச்சேன். அது எப்படி சொல்ல… ராமநாதபுரத்தில மழைன்னு பேப்பர்ல பார்த்த கூட உங்களை நினைச்சு கவலை படுவேன். ஏதோ ஒரு மூலையில தனியா இருக்குற யாருக்கோ ஏதாவது நடந்தா, உங்களை நினைச்சு சாமி கும்புடுவேன், உங்க ஊர்ல இடி விழுந்தப்ப கூட பயந்து போய் போனைவே பார்த்து கிடந்தேன். உங்களோட லாஸ்ட் சீன் பார்த்து தான் மனச தேத்திகுவேன். பழைய பாட்டு எல்லாம் தேடி தேடி கேக்குறேன், நீங்க பக்கத்துல இருக்குற ஃபீல்… என்னோடு ஒவ்வொண்ணுலையும் நீங்க இருக்கீங்க…” இதற்கு மேல் என்ன சொல்ல,
“என்னை ஏன் விட்டீங்க கரிகாலன். நீங்க திரும்ப வருவீங்கன்ற நம்பிக்கைல தான் நான் இருந்தேன். என்னை முழுசா மறந்திட்டீங்களா கரிகாலன்…”
“நான் யாரோவா போனேனா… என்னை போய் எப்படி கரிகாலன் விட முடிஞ்சுச்சு…” என்று விம்மலோடு கேட்க.
பதில் பேச மறந்து, திகைத்து போய் நின்று இருந்தான் கரிகாலன். தன் மனைவியிடம், இப்படி ஒரு பரிமாணத்தை எதிர் பார்க்கவே இல்லை. தனக்காக உருகுவாள் என்பது எல்லாம், அவன் கனவிலும் நினைக்காத விசயம். ஆனால், அவள் அதற்கு மேலும் சொன்னாள்.
“இந்த தாலி கொடி வச்சு தான பிரச்சினை. கொஞ்சம் யோசிச்சு விட்டு கொடுத்து இருந்தா, இவ்வளவு பஞ்சாயத்து தேவையில்லை தான். ஆனா, எனக்கு விட்டு கொடுக்க தோணவே இல்லை கரிகாலன். ஏன் விடணும்?… உங்களை சுத்தி இருக்கவங்க எல்லாம் உங்க இரத்த சொந்தம். ஆனா, நான்?…” என்று சொன்னதோடு, தாலி கொடியை கையில் எடுத்தவள்.
“இந்த தாலி கொடியை வச்சு தான சொந்தம். நம்ம ரெண்டு பேருக்கும் இடையில இருக்குற உறவுக்கான அர்த்தம் இந்த தாலி கொடி தான… அதை எப்படி நான் விட்டு தர முடியும். உங்களோட எனக்கான உறவை வச்சு தான் உங்க குடும்பம் உறவாக முடியும். எனக்கான உறவை, எனக்கான உரிமையை விட்டு தர முடியாது கரிகாலன். ஆனா, அப்படி நினைச்சு நின்னதுக்கு தான் மொத்தமா உங்களையே விட்டு தர சொல்றாங்க…” என்று விரக்தியாக சொன்னவள்.
“இந்த தாலியை நான் சுமந்து நிக்குறதுக்கு அர்த்தம் என்ன கரிகாலன். நெஜமாவே, இதை உங்க கிட்ட கேட்க தான் காத்து நிக்குறேன். இதை கட்டுனது நீங்க தான… அதற்கு பதிலும் நீங்க தான் சொல்லணும்…” என்று சட்டமாக சொன்னவள். அவன் அமர்ந்திருந்த மேடையில், இவள் அமர்ந்து கொண்டாள்.
அவன் மொழி புரியாத குழந்தை மாதிரி முழித்து கொண்டு நின்றான். இந்த மதுவே, அவனுக்கு புதிது எனும் போது, அதை ஜீரணிச்சு பதில் சொல்ல தெரியவில்லை.
அவன் அமைதி அவளுக்கு வேகத்தை கொடுத்தது. இந்த மூன்று மாதத்தில், அவள் கடந்து வந்த வேதனை தான் எத்தனை… நடைமுறை வாழ்வான உணவும், உறக்கமும் முழுதாக தொலைந்து போனதே… உணவின் ருசி அறியாமல் உண்ணுவதும், இயல்பான தூக்கம் இன்றி அழுது, கண் எரிச்சலோடும், தலைவலியோடும் தான் ஒரு உறக்கம் இருக்கும். எதிர்கால இருள் எத்தனை கொடுமை. தன் வலியில் பாதி கூட இவனுக்கு இல்லையே… வீட்டு பாடம் செய்யாத மாணவன் மாதிரி அல்லவா முழித்து கொண்டு நிற்கிறான்.
தன்னை குறித்தே வெட்கம் கொண்டாள் மது. இதற்கு மேல் ஒரு பெண் கெஞ்சவே முடியாது. தன்னை ஏற்று கொள்ள மறைமுகமாக சொல்லி விட்டாள்.
“ஏன் கரிகாலன் அமைதியா இருக்கீங்க. நீங்க, என்னை தேடி வரணும்ன்னு, நான் எதிர்பார்த்ததுல என்ன தப்பு?… உங்க கிட்ட மன்னிப்பை எதிர்பார்க்கல தான். ஆனா, என் பொண்டாட்டின்னு நீங்க வரணும்ன்னு எதிர்பார்த்தேன்…” என்று பெருமூச்சு விட்டவள்.
“ஏன்னா?… நம்ம நாட்டுல எல்லா பொண்ணுகளும் அப்படி தானா… பொண்டாட்டி கோவிச்சு போனா, புருசன் வந்து கூட்டி வருவாங்க. என் நினைப்பும் அது தான். என் புருசன் வந்து கூட்டி போக நினைச்சேன். எல்லாம் தப்பா போச்சு… நீங்க நியாயவாதின்னு நினைச்சேன். ஆனா, நீங்களும் இந்த சமூகத்து ஆம்பிள்ளை தான… உங்க கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்” அவள் குரலில் தீ எரிந்தது.
“நீங்க ஆம்பளை, நான் சாதாரண பொம்பளை… உங்க கூட போட்டி போட முடியுமா, சொல்லுங்க?… பொண்டாட்டி கூட இருந்தாலும், விட்டு போனாலும் அவனுக்கு பேரு ஆம்பளை தானா… எங்களால அப்படி நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடியுமா!… புருசன் கூட இல்லைனா பூ வைக்கிறது கூட தப்புன்னு சொல்ற உலகம் தான நாங்க இருக்கிறது. புருசன் ஒதுக்கி வச்ச பொண்டாட்டிக்கு என்ன மதிப்பு இருக்கும்… ஆனா, பெண்களை மதிக்கிற சமூகம் நம்ம சமூகம் இல்லையா… அதான் எங்களுக்கு உங்க ஆட்கள் பிறந்துல இருந்து சாகுற வரைக்கும் பாடம் சொல்லி கொடுக்குறாங்க…” அவள் வலியை இறக்கி வைத்து கொண்டு இருந்தாள்.
ஒரு சின்ன சிரிப்பு சிரித்தவள். பின், “ தத்துவம் சொல்றேன்னு நினைக்கிறீங்களா கரிகாலன். ம்கூம், எம் வலிய சொல்றேன். நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா?…” என்ற மனைவியை இமைக்காமல் பார்த்தான் கரிகாலன்.
“துறவு வேணும்ன்னு நினைச்ச புத்தர், நொடியில முடிவு எடுத்து நாட்டை விட்டு போய்ட்டார். நொடி தாமதிச்சு மனைவியை பார்த்த மனசு மாறிடும்ன்னு பயமாம். அவர் போய் போதி மரம் கண்டு, ஞானம் பெற்று, தன் வாழ்க்கை முழுமை கண்ட பின்னாடி தான் பொண்டாட்டி, பிள்ளையை தேடி வந்தாராம். அவர் வந்ததும் எந்த கோபமும் இல்லாமா, தன்னையும் கொடுத்து, மகனையும் கொடுத்து, நாட்டையும் ஒப்படைச்சாங்க அவர் மனைவி. கணவனை குறை சொல்லவே இல்லையாம். தன்னை தேடி வந்த பெருமை தான் மிகுந்து நின்னது. இதுல நான் சொல்றது என்னனா?… துறவு மேற்கொண்ட புத்தர் பேசுற நாம, அதே துறவு வாழ்க்கை வாழ்ந்த அவர் மனைவியை பேசல… ஒரு ராத்திரில ஓடி போன புத்தர கொண்டாடுறாங்க… புருசன் ஏன் விட்டு போனான்னு தெரியாம, ஒத்த புள்ளையயோட, மத்தவங்க சுடு சொல் கேட்டு, நாட்டையும் காக்க எவ்வளவு கஷ்ட பட்டு இருப்பாங்க… புருசன் உறவ எவ்வளவு மதிச்சு இருக்காங்க. கணவன் துணை இல்லாமவே, அவருக்காக துறவு வாழ்க்கை வாழ்ந்துருக்காங்க… நேரடியாகவே இந்த சமூகத்தை சமாளிச்சு போராடிருக்காங்க… ஆயிரம் வருடத்துக்கு முன்ன வாழ்ந்த அவங்களுக்கும் சரி, இன்னைக்கு எனக்கும் சரி… இந்த சமூகம் எந்த வித்தியாசமும் காட்டலை. பெண்ணுக்கான விதியும் மாறலை… அவங்களை மாதிரியே நானும், என் புருசன் ஒதுக்கிவச்சதுக்கு கோபப்படாமல், என்னை ஏத்துக்கணும்ன்னு கவலை படுறேன்” என்று விரக்தியாக சொன்னவள்.
“உங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது கரிகாலன். ஊர் முழுக்க பேர் வாங்குன என்னை, நீங்க ஏத்துகிட்டா தியாகின்னு சொல்லுவாங்க… வேணாம்ன்னு சொன்னா, அவ சரியில்லை அதான் விட்டு போய்ட்டான். இப்படி தான் பேச்சு இருக்கும். அம்பு உங்க பக்கம் பாயாது… புத்தருக்கு, தன் மனைவி மேல பாசம் இருந்தாலும், அவங்க வலிய உணர முடியலை. இன்னைக்கு கரிகாலனுக்கும் அன்பு இருந்தாலும், தம் பொண்டாட்டி பட்ட வலிய உணர முடியலை. எந்த காலத்திலும் ஆண்… ஆண் தான். பெண்… பெண் தான்…” என்றவள் கரிகாலனை நிமிர்ந்து பார்க்க, அவன் கண்கள் கலங்கி இருந்தது.
பக்கத்தில் அவன் வைத்திருந்த தண்ணீர் பாட்டலை எடுத்து குடித்தவள். கணவனை பார்த்து “ எனக்கு ஒரு விசயம் புரியவே இல்லை கரிகாலன். நம்ம கல்யாணம் முடிஞ்சு பத்து நாள் இருக்கும். அப்ப, உங்கம்மா ஒரு புது மாட்டை புடிச்சு வந்தாங்க. வருமானத்துக்கு தான். புது மாடு மிரளவும், நம்ம கூட ஒட்டாதோன்னு மலையோரம் இழுத்து போகாம வீட்டோடவே கட்டி வச்சு, அது கூடவே இருந்து தடவி குடுத்தாங்க. நம்ம கூட பழகுற வரைக்கும், நல்ல பார்த்துக்கணும் சொன்னாங்க தானா… ஒரு மாட்டுக்கு இருக்குற சுதந்திரம் கூட, உங்க வீட்டு மருமகளுக்கு இல்லையே கரிகாலன். உங்க வீட்டில பத்து பேரு இருக்காங்க. அவங்களுக்கு தகுந்த மாதிரி நான் நடக்கணும், எனக்காக ஒரு சின்ன சின்ன விசயத்தை கூட விட்டு தள்ள, உங்க வீட்டுல யாரும் தயாராக இல்லை. நான் தான புதுசு, உங்க தங்கச்சிய விட சின்ன வயசு தான். அப்படி இருந்தும் யாரும் என்னை அட்ஜஸ்ட் பண்ணி போகல. அவ நம்ம வீட்டுக்கு வாழ வந்திருக்கா, அப்ப நமக்கு அடங்கி போகணும்னு ஒரு எண்ணம். ரொம்ப கஷ்டப் பட்டு அமஞ்ச சம்மந்தம். இதையும் விட்ட எனக்கு வேற சம்மந்தம் அமையாது. அதனால் நான் எல்லாத்துக்கும் தலையாட்டி போவெண்ணு ஒரு எண்ணம்…” என்று அவனை பார்த்து சொல்ல.
“மது” என்றான் தொண்டை அடைக்க.
“ஆனா, நான் என்ன பண்ணேன். என் திமிர் குறையாம நின்னேன். யாரும் என்னை ஒரு வார்த்தை சொல்ல முடியாத அளவுக்கு, என்னை நானே கெத்தா, திமிரா காட்டி நின்னதும், இவ குடும்ப வாழ்க்கைக்கு சரிபட மாட்டேன்னு பேரு குடுத்துடாங்க. என்னை வேணாம்னு சொன்னாங்க தானே, வேற பொண்ணை பார்க்க முடிவு எடுத்தாங்க தானே. ஒரு பொண்ணு சரியில்லாட்டி இல்லை, இல்லை சரியானவ இல்லைன்னு அவங்களுக்கு தோணுன ரொம்ப சுலபமா அத்து விட்டுடுவாங்க. குடும்பத்தை அனுசரிச்சு போகலன்னு ஒரு காரணமே போதும், ஒரு பொண்ணை அத்து விட… இதுவே, ஒரு ஆம்பளையா இருந்தா… அவன் குடிகாரன், ஊதாரி, வேற பொண்ணு பின்னாடி போனா கூட அவன் கூட தான் வாழணும். எந்த வீட்டுல தான் சண்டை இல்லை, ஆம்பளை அப்படி தான்னு சரிகட்டி வாழ தான் சொல்லுவாங்க. பொம்பளையா பொறந்து நாங்க வாங்கி வந்த வரம் அப்படி…” அழுத்தமாக பேசி கொண்டு வந்தவள், சோர்ந்து போய் பின் பக்கம் இருந்த மரத்தில் சாய,
வேக எட்டுக்களில் மனைவி அருகே வந்தவன், அவள் கையை சேர்த்து பிடித்து, “மதும்மா” என்க.
அழுகையை அடக்க முடியவில்லை அவளால். அவனின் இடுப்பை கட்டி கொண்டாள்.
“ஏன் கரிகாலன் என்னை விட்டீங்க?… எம் பொண்டாட்டின்னு நீங்க ஒரு வார்த்தை, ஒத்த வார்த்தை சொல்லி இருந்தா, நான் நூறு பேர பார்ப்பேன் கரிகாலன். யாருக்கும் பயந்து, ஒதுங்கி போயிருக்க மாட்டேன். யாரோட பேச்சும் எனக்கு வலிய கொடுத்து இருக்காது. நான் இருக்கேன் என் பொண்டாட்டிக்குன்னு ஒரு பார்வை பாத்திருந்தா… எம் பலம் யானை பலம் கரிகாலன். எனக்காக ஏன் நீங்க நிக்கல கரிகாலன். நான் உங்களை தான் ரொம்ப நம்புனேன்…” என்று கேவி, கேவி அழுதவாறு மது சொல்ல, உடைந்து போனான் கரிகாலன்.
தன்னை, மனைவி எவ்வளவு தேடி இருக்கிறாள் என்று தெரிய, தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான். மது முதுகை தட்டி கொடுத்து அவளை நிதான படுத்த, கேவல் குறைந்தாலும் கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை. மனைவியை அணைத்து நின்றவன் கண்களிலும் நீர் நிறைந்து நின்றது.