மறுநாள் விடியல் மிகுந்த பரபரப்பு தான். நெருங்கிய சொந்தங்கள் வீடு வந்திறங்க, தன்னை அலங்கரித்து கொண்டு திருமணத்திற்கு தயாரானாள் மதுமிதா. அவளின் பெரியம்மா மகள் மட்டுமே உடன் நிற்க, அண்ணன் மனைவி ரம்யா தள்ளி நின்று கொண்டாள். பெண் அழைக்க என்று மாப்பிள்ளை வீட்டாரும் வந்து விட்டார்கள்.
பாண்டியனின் தாய் கருப்பாயி, அவன் தங்கை வசந்தி. அவர்கள் உடன் சேர்ந்து கருப்பாயி அக்கா, தங்கை, அவர்கள் மருமகள்கள் என்று ஏழு பேர் வந்தனர். அப்போதே தாங்கள் கொண்டு வந்த பரிச சேலையை மாத்தி, தங்கள் வீட்டு பெண்ணாக அழைத்து செல்ல காத்திருந்தார்கள்.
மருமகள் ரம்யாவிடம், “ இந்த குங்கும கலர் சேலை எங்க காலத்து சேலை. என் கல்யாணத்துக்கே இந்த கலர் சேலை தான். இப்பலாம், மயில் கழுத்து கலர், பேபி பிங்க், கோல்டன் கலர்ன்னு எத்தனை ரகம் இருக்க. இது தான் கிடைச்சதா …. பட்டிக்காட்டு மக்கள்” என்று மீனாட்சி முறுமுறுத்தார்.
“அட !நீங்க வேற அத்தை…. மது மாமியாரை பாருங்க. அந்த அம்மா போட்டுருக்குற இலை வச்ச தோட மாத்தவே இல்லை. பொண்ணு பார்க்க வந்ததுல இருந்து கல்யாணம் வரைக்கும் இந்த ஒத்த தோடு தான்”என்று நயமாக சம்மந்தி வீட்டாரின் வளமையை கோடு காட்டினாள்.
புரிந்த மீனாட்சியும், “அதைவிட, அந்தம்மா கழுத்தை பாரு. மஞ்ச கயிறு கூட புல்லு மாதிரி கோதுமை சங்கிலி மட்டும் தான் இருக்கு. இவங்க பேசுனா மாதிரி பத்து சவரன் தாலி கொடி போடுவாங்களா…. தாலி கட்டுற வரை வந்தாச்சு, இப்ப என்ன செய்ய முடியும்ன்னு நம்மளை ஏமாத்திபுடாம….” என்று மகளை கொடுக்கும் இடம் என்று பாராமல் , அவர்களை இன்னும் தாழ்த்தி பேசினார்.
“ எனக்கு என்னமோ வாய்ப்பில்லைன்னு தான் தோணுது அத்தை…” என்று ரம்யா சொல்லி முடிக்க கூட இல்லை. பாண்டியனின் தங்கை வசந்தி, தான் வைத்திருந்த மஞ்சள் பையில் இருந்து பத்து சவரன் தாலி கொடியை எடுத்து, கடவுளை வணங்கி. பின், தன் சின்ன மதினி கழுத்தில் போட்டு கை பிடித்து முன்னே அழைத்து செல்ல. மெளனமாக பின் தொடர்ந்தாள் மதுமிதா.
தன் தாயை திரும்பி கூட பார்க்க வில்லை. அன்னையும், அண்ணியும் பேசியது காதில் விழுந்திருக்க, முகம் காணாது கூடம் வந்தாள். அவர்களின் பேச்சை துளியும் ரசிக்கவில்லை. “ஒருவரின் நிலை, இவர்களுக்கு பேசு பொருளா… அப்படி யோசிக்கும் இவர்கள், தன் வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொடுக்காமல் இருக்க வேண்டியது தானே…”
“ ஒன்று தங்கள் நிலைக்கு தக்க சம்மந்தம் செய்ய வேண்டும், இல்லையா அவர்களின் நிலையை கேலி செய்யாமல், புது உறவுக்கு மரியாதை செய்ய வேண்டும். அதை விட்டு இது என்ன…! பரிகாசம் செய்வது. அந்த வீட்டில் தானே நான் சென்று வாழ வேண்டும். இந்த அம்மாவுக்கு ஏன் புத்தி இப்படி போகுது. அண்ணிக்கு என்ன… இஷ்டத்துக்கு பேசிவிட்டு தன் குடும்பம் என்று சென்று விடுவாள். தாங்கள் அப்படியா சம்மந்தி, மருமகள் உறவு , காலத்திற்கும் நிற்கும். உண்மையாகவே இருந்தாலும் இத்தகைய வார்த்தைகள் உறவை எவ்வாறு பலப்படுத்தும்” என்று பல்வேறு யோசனைக்கு மத்தியில் தான் நடந்து வந்தாள் மதுமிதா.
மதுவை வெளியேற்ற நல்ல நேரம் பார்க்க, கொஞ்சம் நெகிழ்ந்து போய் இருந்தார் அவள் தந்தை. அவரின் செல்ல இளவரசி அல்லவா!… இனி, இன்னொரு வீட்டு பெண். மனம் சந்தோசத்திலும், வலியிலும் கனத்தது. எப்போதும் அமர்ந்து டிவி பார்க்கும் அவள் மர ஊஞ்சல், அன்று தனியே கிடந்தது. இந்த மாதிரி பலதும் பார்க்க வேண்டுமே!…
மாப்பிள்ளை வீட்டார் எடுத்து கொடுத்த சேலையில் பூ சூடி, மின்னும் புது தாலி கொடியுடன் சாமி அறைக்கு வந்தாள் மது. வீட்டின் மூத்த உறுப்பினர்கள் ஒவ்வொருவராக விபூதி வைத்து ஆசீர்வதிக்க, கடைசியாக மீனாட்சி வந்தார்.
மணக்கோலத்தில் இருக்கும் மகளுக்கு விபூதி வைக்கும் போது, மனம் நெகிழ்ந்து கண்கள் கலங்கியது. இதை காண தானே, இத்தனை ஏக்கம். தங்களின் வாழ்நாள் சேமிப்பு மகள் கழுத்தை அலங்கரிக்க, புது பெண்ணுக்கான ஒளி வீசியது மது முகத்தில்.
சந்தோசமும், நிறைவுமாக அவள் புகுந்த வீட்டு உறவுகளோடு முன்னே காரில் அமர்த்தி வழியனுப்பி வைத்தனர். உடன் துணைக்கு செல்ல ரம்யாவை அழைத்தாள் வசந்தி. விகல்பம் பார்க்காமல் புது வீட்டு உறவுகளோடு ஒட்டும் குணம் கொண்ட பெண்.
ரெண்டு குழந்தை இருக்கு, தன்னால் வர முடியாது என்று நிராகரித்து விட்டாள் ரம்யா. அவளை திரும்பி கூட பார்க்க வில்லை மது. சொந்த தாய்மாமன் மகள், உயிர் தோழி, சிறு வயது தொட்டு பழக்கம் தான். ஆனால், என்று அண்ணன் மனைவியாக தங்கள் வீட்டுக்கு வந்தாளோ, அன்று ஆரம்பித்தது கண்ணுக்கு தெரியாத ஒரு ஒதுக்கம். மதுவின் அண்ணன் மாதவனை காதலித்து தான் திருமணம் செய்தாள் ரம்யா. அதற்கு முழு ஒத்துழைப்பும் வழங்கியது மதுமிதா தான். தன் தோழியே அண்ணியாக வர வேண்டும் என்ற ஆசையில். அண்ணியாக வரும் வரை இருந்த நட்பு, அதன் பின் மாற தொடங்கியது.
பாண்டியனின் குலதெய்வ கோவில், ஊர் எல்லையில் தான் இருந்தது. மதுரையில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தூரம். முன் வந்த காரில் இருந்து மது இறங்க, பின் வந்தனர் பெண் வீட்டார். சுற்றியும் வயல் நடுவே இருந்தது அந்த கோவில். பாதையை அகலப்படுத்தி போட்டதால், கார் எளிதாக செல்ல முடிந்தது.
மணப்பெண் வந்தவுடன் நொடியில் இடம் பரபரப்பாக மாற தொடங்கியது. ஊர் பெரியவர்கள் வர, மணமக்கள் அழைக்க பட்டனர். உறவினர்கள் எழுந்து சூழ நிக்க, என்ன நடக்கிறது என்றே புரியவில்லை மதுமிதாவுக்கு.
ஊர் தலைவர், “தாய்மாமன் யாருப்பா… வாங்க! வாங்க! வந்து பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் மாலையை போடுங்கப்பா…. மாப்பிள்ளை வடக்கு பார்த்து நில்லு, பொண்ணு கிழக்கு பக்கமா நிக்க வைங்க… மனசார கொப்பு நாச்சியை வணங்கி தாலியை வாங்கு பாண்டி”… என்று அறிவுறுத்த.
நொடியில் கைக்கு வந்தது தாலி. என்ன! அவ்வளவு தான…. என்று மது யோசிக்கும் போதே, விசில் சத்தம் காதை பிளக்க, கழுத்தில் புது மஞ்சள் தாலி குடியேறியது.
கண்ணை மூடி திறப்பது போல் கல்யாணம் முடிந்து விட, நடந்ததை நம்ப முடியாமல் திகைத்து போய் நின்றாள் மது. எவ்வாறு எதிர் கொள்ள போகிறோம் என்ற கவலை போய், எப்படி நடந்தது என்ற திகைப்பு வந்தமர்ந்து கொண்டது மனதில். இன்னமும் அவளால் நம்ப முடியவில்லை, தனக்கு திருமணம் முடிந்ததை.
மதிய உணவு சைவம் தான். அடுத்தடுத்த உறவுகளை கவனிக்க, கூட்டம் களைந்து சென்றது. பாண்டியனும், தன் ஊர் நட்புகளுடன் பேச என்று சற்று தள்ளி செல்ல, தனியே அமர்ந்திருந்தாள் மது. அவளுக்கு கொஞ்சம் அவகாசம் தேவை பட்டது, அவசரத்தில் நடந்ததை முழுதாக ஏற்று முடிக்க வேண்டுமே. q
அப்போது அங்கு வந்தான் மாதவன். மதுவின் அண்ணன், ஒரு காலத்தில் இருவரும் அவ்வளவு நெருக்கம். அண்ணன் செல்லமாக இருந்தவள், பின் ஆதரவு அற்றவளாக மாறி போனாள். வலுவான சூடு பட்டவள் காயம் ஆறினாலும், தழும்பு வலியை நினைவு படுத்தியது. உடன் பிறப்பு என்பதே கஷ்டத்தில் உடன் நிற்பது தானே!… அவ்வாறு இல்லாமல், சுயநலமாக தன்னை ஒதுக்கி சென்றவனுடன் உறவாட என்ன இருக்கிறது.
தன்னை நோக்கி தான் வருகிறான் என்று தெரிந்தும், வரவேற்கும் தன்மை இல்லாமல் அமர்ந்திருந்தாள் மது. அவளின் பாவனையிலே தயக்கம் கொண்டவன், தங்கை அருகிலே தானும் அமர்ந்து கொண்டான்.
இருவரும் எதுவும் பேசி கொள்ள வில்லை அல்லது பேச முயற்சி செய்ய வில்லை. உண்மை சுடும் என்று குத்தலாக நினைத்து கொண்டாள் மதுமிதா.
மாலை மூன்று மணிக்கு மேல் தான் கோவில் விட்டு கிளம்பினர். இதற்கு மேல் பெண் வீடு சென்று வந்தால் ராத்திரி முகூர்த்தம் தள்ளி போகும் என்பதால், மூன்றாம் நாள் மறு வீட்டு முறையை ஏற்று கொண்டார்கள். மணமக்கள் முன்னே செல்ல, பின் ஒரு லாரியில் ஊர் மக்கள் வந்தார்கள். அதற்கு பின் தான், மது தாய் வீட்டு சொந்தம் வந்தது. உடன் வந்த உறவுகளை தனியே பஸ் வைத்து அனுப்பி விட்டு, நெருங்கிய சொந்தம் பத்து பேருடன் மகள் வீடு வந்தார் சுந்தரம்.
அவர்கள் வந்திறங்கிய போது இடமே பரபரப்பாக காணப்பட்டது. என்னவோ என்று பயந்து போய் முன் சென்று பார்த்தார்கள் சுந்தரம் தம்பதிகள்.
அங்கு தம் செல்ல மகள், மணக்கோலத்தில் தெருவிலே நிற்க வைக்க பட்டு இருந்தாள். மாலை நான்கு மணி, வெயிலின் தாக்கம் கொஞ்சமும் குறைய வில்லை. முகம் செத்து ஊரே வேடிக்கை பார்க்க அவமான கன்றலோடு நின்றிருந்தான் பாண்டியன். பார்த்த பெற்றவர்கள் பதறி போய் முன்னே சென்று விசாரிக்க, வீட்டின் சாவி இல்லை என்று தெரிந்தது.
அதாவது, பாண்டியனின் அண்ணன் வீட்டு சாவி இல்லை. அவன் மதினி சகுந்தலா இன்னும் வரவில்லை. கண்கள் கலங்கியது மீனாட்சிக்கு. திருமணம் ஆன முதல் நாளே வீடு இல்லாமல் தெருவில் நிற்கும் நிலையா, தம் மகளுக்கு. மனம் கொதிக்க கணவர் புறம் திரும்பி பார்த்தார்.
நடப்பது புரியாமல் முழித்து நின்ற ரம்யாவும், மாதவனும் , அருகில் நின்ற வசந்தி கணவர் சிவாவிடம் விசாரித்தார்கள்.
நடந்தது இது தான். பொது வீடு என்று அண்ணன் ராஜ பாண்டி, தம்பி கரிகால பாண்டியனின் வீடு ஓட்டு வீடு தான். அங்கு தான் இவர்கள் பிறந்து,வளர்ந்து, வாழ்ந்தது. அடுத்த தலைமுறை ஆண் மக்கள் தலையெடுத்த பின், பொது வீட்டை விட்டு அவரவர் சொந்த காலில் இடம் வாங்கி வீடு கட்ட தொடங்கினர். அண்ணன் ராஜபாண்டிக்கு திருமணம் முடித்து, மூன்று பிள்ளைகள் நிற்க. தங்கை வசந்தியின் பொறுப்பு கரிகால பாண்டியனை சேர்ந்தது. தங்கை திருமணம் முடித்து, பின் லோன் மூலம் வீட்டு வேலையை தொடங்கினான் பாண்டியன்.
பாதி வீட்டு வேலை நடக்கும் போதே, சுந்தரம் மூலம் திருமண பேச்சு வந்து விட்டது. அவர் தான் பாண்டியனின் மேற்படிப்புக்கு உதவியதால் மறுக்க முடியவில்லை. அத்தோடு வயதும் முப்பதை தொட, சரியென்று தலையசைத்து விட்டான்.
திருமணம் அவசர கதியில் ஒரு மாதத்திலே குறிக்கப்பட்டது. வீட்டு வேலையோடு திருமண காரியமும் இழுத்து கொள்ள மீடேற முடியாமல் போனது. வீட்டு வேலை தான் தாமதம் ஆனதே ஒழிய, கல்யாண வேலை முன்னெடுத்து சென்றது.
பாண்டியனின் அம்மாவும், அண்ணனும் தான் திருமணம் முடிந்த பின், புது வீடு கட்டும் வரை ராஜபாண்டி வீட்டில் இருக்க வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அப்போது சந்தோசமாக ஒத்துக்கொண்ட சகுந்தலா, இப்போது முரண்டுவது ஏன்?…
சகுந்தலாவுக்கு நன்றாக தெரியும், தங்கள் வீட்டில் தான் விளக்கு ஏற்றி, பால் பழம் உண்ண வைப்பார்கள் என்று, இருந்தும் மணமக்களை பின் தொடரவில்லை. அத்தோடு வீட்டை பூட்டி, சாவியை கையோடு கொண்டு சென்று விட்டாள்.
“ மதினி வருவாங்கன்னு எம்புட்டு நேரம் தான் வெளியே நிக்குறது. அவங்க வரும் போது வரட்டும், இப்போதைக்கு பெரிய வீட்டுல விளக்கு போட்டு, அங்க இருக்கட்டும். ராத்திரி சடங்க வேனா இங்க வைக்கலாம்” என்று யோசனை சொன்னாள் வசந்தி.
மற்றவர்களுக்கும் அது தான் சரியென்று பட்டது. புது மணமக்கள் எவ்வளவு நேரம் தெருவில் நிற்பார்கள். பாண்டியனுக்கு ரொம்பவும் தர்ம சங்கடமான நிலை. மனைவி மற்றும் அவள் குடும்பத்தை நேர் கொண்டு பார்க்கவில்லை. இன்னும் நேர்பட மனைவியும் முகம் கொடுத்து பேச வில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று அவனுக்கு எப்படி தெரியும்.
ஓட்டு வீடு தான். அகலமான வீடும் கிடையாது. ஒரு கூடம், ஒரு அறை மற்றும் அடுப்படி கொண்ட வீடு. சுற்றிலும் கொஞ்சம் இடம் இருக்கு தான். ஆனால், வீடு சிறியது.
கணவனான பாண்டியனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவும் வைத்து கொள்ளாததால் , ஏமாற்றம் என்று எதுவுமில்லை மதுமிதவுக்கு. ஆனால், பல சங்கடங்களை கடக்க நேரிட்டது. அதில் ஒன்று கழிவறை. வீட்டின் பின் புறம், அரசின் கட்டாயத்தில் கட்டப்பட்டது. முழுதாக ஐந்து நிமிடம் கூட நிற்க முடியவில்லை மதுமிதாவுக்கு.
சுந்தரம் குடும்பத்தார் யாரும் வீட்டினுள் நுழைய கூட இல்லை. வெளி வாசலில் கிடந்த சேரில் அமர்ந்து கொண்டார்கள். பெண் குடுத்த இடம் என்பதால் எதிர்ப்பை அமைதியாக வெளிப்படுத்தினர். சம்மந்தி முதல் மருமகன் வரை அழைத்தும், வர மறுத்து விட்டார்கள்.
மாலை ஆறு மணி ஆனவுடன் உள்ளிருக்கும் மகளிடம் கூட சொல்லி கொள்ள தோன்றாமல், பெயருக்கு சம்மந்தி வீட்டில் மட்டும் சொல்லி கொண்டு சென்று விட்டார்கள்.
உள் அறையில், தான் கொண்டு வந்திருந்த பையிலே தலை வைத்து சாய்ந்திருந்தாள் பெண். சிறு வீடு என்பதால், வெளியில் நடக்கும் பேச்சு சத்தம் தெளிவாக கேட்டது. அதிலிருந்து கண்டது குடும்ப அரசியல் தான். உறவாக ஏற்கும் முன்னே ஒதுங்கி கொண்டார்களே. தன் ராசியே அப்படித்தான் போலும், எங்கும் ஒட்டாது.
ஒரு பெரு மூச்சோடு எழுந்து அமர்ந்தவள், தன் அலங்காரத்தை களைய தொடங்கினாள். செட் நகைகளை தனியே பிரித்து வைக்கும் போது தட்டுப்பட்டது பத்து சவரன் தாலி கொடி, தற்போது பஞ்சாயத்தே இது தான். பெரிய மருமகளுக்கு நாலு சவரன் தாலி கொடி, சின்ன மருமகளுக்கு பத்து சவரன் தாலி கொடி. இதன் வித்தியாசம் தான், சகுந்தலாவை போர் கொடி தூக்க சொல்லியது.
திருமண பேச்சின் ஆரம்பத்திலே, கருப்பாயி தெளிவாக சொல்லி விட்டார், “ மருமக்களுக்கு இடையே பிரிவு வரகூடாது தம்பி. ரெண்டு பேருக்கும் ஒன்னு போல தான் செய்யணும். நாலு சவரன் தான் முடிவு” என்று கூறி விட்டார்.
ஆனால், மீனாட்சி விடவில்லை, “ அது எப்படிங்க! பத்து பவுன் போட்டு வந்த அந்த பொண்ணும், எண்பது பவுன் போட்டு வர, எம் பொண்ணும் ஒன்னாக முடியும். எம் மருமகன் எங்க சொந்த அண்ணன் பொண்ணு தான், முப்பது பவுன் தான் போட்டாங்க. அவளுக்கே, நாங்க பத்து சவரன் தாலி கொடி போட்டோம். எம் பொண்ணுக்கு வெறும் நாலு சவரன் தானா…. எங்க சொந்தக்காரங்க எல்லாம் சிரிப்பாங்க. பத்து சவரன் தாலி கொடின்னா மேல பேசுவோம். இல்லையா, வேற இடம் பாருங்க. உங்க தோதுக்கு நாங்க ஆளு இல்லை” என்று ரம்யாவை தூண்டி விட்டது அறியாமல், நிதர்சனமாக பேசி விட்டார்.
இரு வீட்டாரும் தங்களது கருத்தை மாற்றாமல் நிக்க, திருமண பேச்சு தடை பட்டது. ஆனால், அண்ணனின் விருப்பம் அறிந்த வசந்தி தான், தன் தாயிடம் நயமாக பேசினாள்.
“ அம்மா! அண்ணனுக்கு அந்த பொண்ண தான் பிடிச்சிருக்கு. நீங்க ஏன் தடை சொல்றீங்க” என்று தாய்யின் ,வாய் பிடிங்கினாள்.
“கோட்டி கழுதை மாதிரி பேசாத வசந்தி. ஒருத்திக்கு குறையா போட்டு, இன்னொருத்திக்கு கூட போட முடியுமா…. ஒரே வீட்டுக்குள்ள மனஸ்தாபம் வரும். எம் மகனுகளுக்குள்ள சடவு வந்துடும். நாங்க நிக்கிற வரைக்கும் எம் மகனுக ரெண்டும் ஒத்துமையா தான் இருக்கணும்” என்று கூறியவரை நக்கலாக பார்த்தவள்.
“இந்த கல்யாணம் நடக்காம போன தான் சடவு வரும்” என்று கூறிய மகளை பார்த்தவர்.
“என்னாலே சொல்ற. தெளிவா சொல்லு” என்றார் கருப்பாயி.
“பெரிய பாண்டிக்கு நீங்க தான் கல்யாணம் செஞ்சு வச்சீங்க. உங்க காசுல தான் கல்யாண செலவு, தாலி கொடி செலவு வந்துச்சு. ஆன, சின்ன பாண்டிக்கு யார் செலவு செய்வா?… எல்லாம் அவன் தான் பார்த்துக்கணும். பத்து சவரன் தாலி கொடி, நீங்களா எடுக்க போறீங்க… அவன் பொண்டாட்டிக்கு அவன் எம்புட்டும் செய்யட்டும், உங்களுக்கு என்ன வந்துச்சு. கல்யாண செலவு, சீலை, தாலி கொடி எல்லாம் சின்ன பாண்டி தான பார்க்கணும். பெத்தவங்கன்னு என்ன செய்ய போறீங்க!… இங்க ஒண்ணுக்கும் வழி இல்லை. கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சான்,உதவி தொகைல காலேஜ் போனான், பரிச்சை எழுதி வேலைக்கு போனான். இம்புட்டு வருசம் சம்பாதிச்சு யாருக்கு குடுத்தான்?… அய்யாவும், அம்மாவும் நம்மளை விட்டுட்டாங்கன்னு சின்ன பாண்டி மனசுல நினைப்பு வந்துச்சு…” என்று முடிக்காமல் வசந்தி நிறுத்த. அவள் சொல்லாததை புரிந்து கொண்டார் கருப்பாயி.
உண்மை தான் சின்ன பாண்டிக்கு எதுவும் செய்ய வில்லை. கணவர் குடிகாரன், அவரால் ஒன்றும் ஆகாது. மூத்த மகன் திருமணத்தின் போது சின்ன பாண்டி வேலைக்கு சென்று விட்டான். சம்பாத்தியம் ஒன்றாக தான் இருந்தது. இருவரும் தாய் கையில் தான் கொடுப்பார்கள். அதனால், பெரிய பாண்டி திருமணத்தை பெற்றவர்களாக முன் நின்று நடத்தினர். அடுத்தடுத்து பெரியவன் குடும்பம் பெரிதாக, சம்பாத்தியமும் தனித்தனி என்றானது. சொந்த வீடாவது தங்களுக்கு என்று இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், உடன்பிறப்பு தனித்து நின்றது. பெரிய பாண்டி தனியே சென்ற பின், குடும்ப பொறுப்பு சின்ன பாண்டி கையில் வர, இதுவரை குறைவில்லை. தங்கை திருமணத்தையும் நன்றாக செய்தான். அத்தகைய மகனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தவர். திருமண பேச்சை திரும்ப எடுத்து வைத்தார்.
அது தான் சகுந்தலாவை பெரிதாக பாதித்தது. பத்து ஆண்டு காலம் இந்த வீட்டில் வாழ்ந்து, மூன்று பிள்ளை பெற்றும் எனக்கில்லாத முக்கியத்துவம், இனி வரும் மருமகளுக்கா… இம்புட்டு வருசத்தில் எத்தனை பார்த்தேன். மதிப்பில்லாமல் போனதே… பார்த்து கொள்ளலாம் என்று புதிதாக வரும் பெண்ணை போட்டியாக நினைத்தாள். அதன் தொட்டு தான் இத்தனை செயலுமா… என்பது கருப்பாயி எண்ணம்.
மதுவுக்கு இங்கு சுத்தமாக ஒட்டவில்லை. அவள் இருக்கும் அறை, குடோன் போல உணர்வை தோற்று வித்தது. மூச்சை இழுத்து பிடித்து கொண்டு ஒரு அவசர குளியலை போட்டவள், சாதாரண காட்டன் சேலைக்கு தன்னை மாற்றி கொண்டாள். வசந்தி வந்து சின்ன சின்ன அலங்காரம் செய்து விட்டு, தலை நிறைய ஜாதி மல்லி வைத்து முடித்தாள்.
கேள்வியாக பார்த்த மதுவின் பார்வைக்கு, சின்ன பாண்டிக்கு ஜாதி பூதான் புடிக்கும் என்று சொல்ல, நொந்து போனாள் மது. காலையில் இருந்து நடந்த சம்பவம் அனைத்தும் அவளை நிலையாக இருக்க விடாமல் துரத்தியது.
இரவு உணவு நடக்க, எதுவும் அறியாதது போல சகுந்தலா வந்து இணைந்து கொண்டாள். யாரும் எதுவும் கேட்டு கொள்ள வில்லை. உறவுகள் விசாரிக்க வருவதும், போவதுமாக இருக்க, வீண் சச்சரவு இல்லாமல் போனது. ஆனால், பரிமாறப்பட்ட உணவு தான் மதுவுக்கு ஒவ்வாமல் இருந்தது.
மதியம் வைத்த கல்யாண விருந்தின் உணவுகள் அப்படியே இருக்க, வீண் செய்யாமல் இரவு உணவாக பரிமாறப் பட்டது. இரவில் சாதம் மதுவுக்கு சுத்தமாக ஆகாது. வெறும் பழம், பால் கூட உண்டு விடுவாள். சாதம் மட்டும் ஆகாது. பாண்டியனுக்கு அவள் நிலை புரியத்தான் செய்தது. கணவன், மனைவியாக தனித்து இருக்கும் போது, எவ்வளவும் செல்லம் கொஞ்சலாம். ஆனால், கூட்டு குடும்பத்தில் கொஞ்சம் தள்ளி தான் நிற்க வேண்டும்.
அவள் சாப்பிடாமல் சாதத்தை பிசைந்து கொண்டு மட்டும் இருந்தாள். கருப்பாயி தான், “ நல்ல அரிசி சோறு வீணா போகும், சாப்பிடு மது…” என்ற மாமியாரின் சொல்லுக்கு அடி பணிந்து, வீம்பாக உள்ளே தள்ளினாள்.
மெதுவாக எழுந்த பாண்டி, அடுப்படி சென்று பார்த்தான். இன்னமும் சாம்பார், ரசம் மீதம் இருந்தது. அதை சூடு செய்து வேற பாத்திரத்தில் மாற்றி வைத்திருந்தாள் வசந்தி. பார்த்ததும் புரிந்து போனது பாண்டியனுக்கு, நாளைக்கு காலை உணவு அது தான் என்று, இவர்கள் வீட்டில் பழக்கம் தான். மதுவை நினைத்து கொஞ்சம் கவலை வந்தது. எப்படி பொருந்தி போக போகிறாள்.
இன்னும் நேரம் ஒன்பதை தொட வில்லை. கல்யாண வீடு ஆண்களும், பெண்களுமாக சேர்ந்து பேசி சிரித்து கொண்டிருந்தார்கள். அங்கு மது மட்டும் இல்லை, மெதுவாக நழுவி அறைக்கு வந்து பார்க்க. சன்னல் வழியே தெரியும் நிலவை தான் பார்த்து கொண்டிருந்தாள்.
மது என்று மெதுவாக அழைக்க, சிறு அசைவும் அவளிடம் இல்லை. மீண்டும் அழைக்க, காதில் வாங்கியது போல் கூட இல்லை. நான்கு முறை அழைத்து பார்த்தவன், மனைவியிடம் அசைவு இல்லை என்று தெரிந்ததும் பயந்து போனான். வேகமாக அருகில் சென்று அழுத்தி கழுத்த பகுதியில் கை வைத்தான்.
அதிர்ந்து போய் திரும்பி பார்த்தவள், ஓங்கி ஒரு அறை விட்டாள். கன்னத்தில் கை வைத்து அரண்டு போய் பார்த்தான் கரிகால பாண்டியன்.