மறுநாள் இருந்து மாமியாரின் வேறொரு முகத்தை கண்டாள் மது. குறையாக யாரும் எதுவும் சொல்ல முடியாதபடி இருந்தது அவர் ஒதுக்கம். சும்மா வந்தவள், உனக்கு எதுக்கு இத்தனை சௌகரியம் என்று அதில் தான் கை வைத்தார்.
அதாவது, அதிக பால் வாங்கி வைக்க மாட்டார். ஒரு டம்ளர் காபிக்கு அரை டம்ளர் காபி என்று மாறியது. வீட்டில் எப்போதும் தண்ணி இருக்கும், இப்போது எல்லாம் தண்ணி பற்றாக்குறை ஏற்பட தொடங்கியது. குளிக்க, பாத்ரூம் போக என்று பல சங்கடங்களை மேற்கொண்டாள் மது.
வீட்டில் எப்போதும் முணங்குவதும், சாடை பேசுவதும் அதிகரித்தது. மதியதிற்கு மேல் பெரிய மருமகள், பக்கத்து வீட்டு பெண் என்று கூடத்தில் தான் கூடி விடுவார்கள். மது ஒரு நேரம் கூடத்தில் அமர்ந்திருந்து பார்க்கும் தொலைக்காட்சியும் ஒழிந்தது. மற்றவர்களை புறம் பேசுவதும், மருமகளை சாடை பேசுவதும் அதிகரித்தது.
அவர்களின் அதிகப்படியான சத்தமும், அலட்டலும், மதுக்கு தலை தான் வலித்ததே தவிர பாதிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே முட்டி கொண்டதால், அவள் வட்டம் கரிகாலன் மட்டும் தான்.
மாமியார் தன்னை கவனிக்க வில்லை, தன்னோடு பழக வில்லை, பெரிய மருமகளை தான் உசத்தியாக எண்ணுகிறார்கள் என்ற எண்ணம் அவளுக்கு துளி இல்லை. மாமியார் மட்டும் தான் பஞ்சாயத்து என்றால் பரவாயில்லை, மாமியாரோடு மொத்த வீடும் தகராறக இருக்க, மொத்தமாக ஒதுங்கி கொண்டாள். யாரோடும் பழகாததால் தன் நியாயம் வெளி சொல்ல முடியவில்லை.
ஆனால், கருப்பாயி சொன்னார். தன் பக்க நியாயத்தை கம்மாக்கரை, வயக்காடு, தோப்பு, தோட்டம் என்று வேலைக்கு செல்லும் இடமெல்லாம் மது புராணம் தான். வீட்டு மருமக வெள்ளான எழுந்தரிக்க வில்லை, சமையல் தெரியாது, சாப்பிட்ட தட்டை கூட மகன் தான் எடுத்து வைக்கிறான், கூட்டு குடும்பத்தை அனுசரிக்கவில்லை, சொந்தத்தை மதிக்கவில்லை, பேரன், பேத்தியை ஒதுக்கி வைக்கிறா…. என்று பல சடவு அவள் மேல். கிராமம் சொல்ல வா வேணும். பாண்டி வீட்டு புது மருமகள் பேச்சு தான் ஊரே…
மதுவுக்கு இது எதுவும் தெரியாது… கணவன் இருக்கும் போது அவனோடு மட்டுமே பொழுது, அவன் இல்லாத நேரம் போன் மட்டுமே துணை. சாப்பாடு கூட அவன் இருந்தால் மட்டும் தான். அவன் இல்லாமல் உண்ணவும் மாட்டாள். அவள் வாழ்ந்த இயல்புக்கு மீறிய சூழல் தான் புகுந்த வீடு. சிமெண்ட் தரை, டேபிள் ஃபேன், கயிற்று கட்டில் இத்தோடு டிஃபன் கிடையாது, ஏதேனும் ஒரு குழம்பும் சோறும் தான் மூன்று வேளையும். இது எல்லாவற்றையும் விட மனம் விட்டு பேச கணவனை தவிர ஆள் இல்லை. எந்நேரமும் கொத்தும் மாமியாரும், அரை போதை மாமனாரும் என்று யாரோடு கலக்க.
அவளின் துணை கரிகாலன் மட்டும் தான். மது மனதில் நல்ல விதமாகவே பதிந்தான். அவளின் அத்தனை அசௌகரியங்களையும் கடக்க துணை நிற்பவன். புது மணமக்கள் இருவர் இணையும் போது புது வாழ்வு தந்த மகிழ்வோடு சில பல சங்கடங்களை கடக்க நேரிடும். நெடு நாள் வாழ்ந்தவர்கள் என் மனைவி தானே, என் கணவன் தானே என்ற உரிமை தன்னை போல் தோன்றும். புது மணமக்களுக்கு உறவு ஒன்று படுவது போல் என் கணவன் என்ற உரிமைக்கு நாளாகும்.
அந்த உரிமை கரிகாலன் மேல் மதுவுக்கு வர வில்லை. சூழ்நிலை புரிதலுக்கு வழி வகுத்தாலும் என் கணவன் என்ற உரிமை தோன்ற வில்லை. அவளின் பெரிய பஞ்சாயத்து அடிக்கடி பாத்ரூம் போவது தான். அதுவும் மாத விலக்கு நேரத்தில் அரை மணிக்கு ஒரு முறை போய் வந்து விடுவாள். அசந்து உறங்கும் போது தான் எழ மாட்டாள்.
புது இடம் தூக்கம் கஷ்டம். இதில் பீரியட் எனும் போது ரொம்ப சிரம பட்டாள். இரவில் கூட அழகாக தெரியும் தென்னந்தோப்பு நடுராத்தரியில் படு பயங்கரமாக கட்சி கொடுத்தது. யாரோ உட்கார்ந்து இருப்பது போல் தோன்ற கதவை அடைத்து விட்டாள்.
வயிறு உப்பி கொண்டது. கணவன் நல்ல உறக்கத்தில். சற்று நேரத்திற்கு முன்பு தான் அவன் துணை கொண்டு வெளியே சென்று வந்தாள். மீண்டும் எழுப்பினால் கோபம் கொள்வானா?… சே, ஏன் தான் முழிப்பு வந்தது. பாத்ரூம் போகாம தூக்கமும் வந்து தொலையாது. மனதோடு புலம்பியபடி கதவில் சாய…
அந்த சத்தத்தில் முழித்து கொண்டான் கரிகாலன். மனைவி நிலை கண்டு பதறி எழுந்தவன்,
“என்னாச்சு மது. என்ன செய்யுது?… ரொம்ப வயித்த வலியா?…” என்று பதறி விசாரிக்க.
“அது வந்து கரிகாலன்… பாத்ரூம் போகணும்…” சொல்லும் போதே சற்று அசிங்கமாக இருந்தது. இதற்கு முன் சென்று அரை மணி நேரம் கூட ஆகி இருக்காது.
அவளையே பார்த்தவன், “அதுக்கு ஏன் மது சங்கடம். என்னை எழுப்ப வேண்டிய தான…” என்று வாரி எழுந்தான். கதவை திறந்து அவள் கூடவே வந்தவன், வெளியவே நின்று கொண்டான்.
ஒரு ஆண் வெளியில் நிற்கிறான் என்பதே சங்கடமாக இருந்தது. ஆனால், இந்த வீட்டில் அவள் துணை அவன் மட்டும் தானே.
“எப்ப பாத்ரூம் போகணும்னாலும் என்னை எழுப்பு மது தயங்க வேண்டாம். நீயாவும் தனியா போகாத… எங்கிட்ட என்ன தயக்கம்…” என்றவன்.
“புது இடத்தில சாப்பிட, தூங்க, பாத்ரூம் போக கொஞ்சம் அசௌகரியம் தான். உனக்கு சங்கடம் வேண்டாம் எதுவா இருந்தாலும் சொல்லிடு மது. சரியா?…” என்று கணவன் கேட்க.
சரி என்று தலையசைத்து சென்றவள், கொஞ்சம் தயங்கி, “ அது பீரியட் டைம்ல அடிக்கடி பாத்ரூம் போவேன். எங்க வீட்டுல அட்டாச் பாத்ரூம், பிராப்ளம் இல்லை. இங்க வெளிய தான் வரணும், தனியா வர பயம்…” என்று ஒருவாறு சொல்லி விட.
“ தூங்கிட்டா ஒன்னுமில்லை. முழிச்சா பாத்ரூம் போன தான் அடுத்த தூக்கம்…” என்ற மனைவியின் பதிலில் சிரித்தவன்.
“சரி. அடுத்து எப்ப எழுந்தாலும், எத்தன தடவைன்னாலும் என்னை எழுப்பு. தயக்கம் எல்லாம் தேவை இல்லை. நண்பர்கள் மாதிரி இருந்தாலும் நான் உன் புருசன்…” என்று சொல்லி உள்ளே செல்ல.
அவனின் நான் “உன் புருசன்” என்ற சொல் அவளை பாதித்தது. மறுநாள் வேறொரு சங்கடம். மீண்டும் தயங்கிய படியே கணவனை நாடி சென்றாள்.
“குப்பையை எங்கிட்ட கொடு மது. நான் போய் போடுறேன். இங்க ஆட்கள் எல்லாம் வர மாட்டாங்க. நாம தான் தூக்கி போடணும்” என்க.
அவள் சங்கடமும் அது தானே. வீட்டு பெண்களோடு சகஜமாக பழகினால் தயங்காமல் கேட்கலாம். யாரும் பேசாத போது கணவனே என்றாலும் கேட்க அவ்வளவு சங்கடம். மனைவியாக வாழ்ந்தால் தயக்கம் வராதோ!… தற்போது அவளுக்கு முடியவே இல்லை. எல்லாவற்றிற்கும் அவனை சார்ந்தே நிற்பது, அவனுக்கு பாரமாக தான் இருப்பது போல் தோற்றம்.
“கரிகாலன்… நான் பீரியட்… எனக்கு வேஸ்ட் தூக்கி போடணும்” கொஞ்சம் உடைத்து சொல்லி விட்டாள்.
புரிந்து கொண்டவன். “இங்க… அந்த வசதி எல்லாம் கிடையாது மது. என் கிட்ட கொடு, நான் தூக்கி போடுறேன்” என்று எளிதாக சொல்லி விட.
அதிர்ந்து விட்டாள் மது. “கரிகாலன், என்ன சொல்றீங்க. முடியாது… ஐயோ!…” என்று அவள் அலற.
“ ஆமா மது. இது மதுரை இல்லை. கிராமம், இங்க நிறைய பார்ப்பாங்க. கண்டமாதிரி குப்பையா ஒதுக்க முடியாது. என்னை விட்ட, எங்க அம்மா, மதினி தான் . வேற யாரும் செய்யவும் மாட்டாங்க. இன்னைக்கு இல்லாட்டியும், வருசம் சென்டாவது நாம தான ஒருத்தருக்கொருத்தர் துணை…” காலத்துக்கும் உனக்கு நான் தான் என்று உறுதி செய்தவன். அடுத்து அவள் தேவை முழுக்க அவன் தான் பார்த்து கொண்டான்.
மதுவுக்கு ஆச்சரியம். இப்படியும்மா ஒருத்தன் இருப்பான். மனைவி என்ற அடையாளம் மட்டும் தான் . மற்றபடி அவனுக்கு என்று துணுக்கு கூட அசைத்தாள் இல்லை. ஆனால், அவன் தாங்கினான். அவளை அவளோடு சேர்ந்த எல்லாவற்றையும் தாங்கினான்.
மதுமிதாக்கு இன்றே அவனோடு வாழும் அளவிற்கு ஈர்ப்பில்லை என்றாலும் அவனோடு தான் வாழ்வு என்ற திண்ணம் இருந்தது.
கருப்பாயிம் தன் பங்குக்கு படுத்தி எடுத்தார். “தினமும் வீட்டை துடை, நான் சாமி கும்பிடனும். இந்த வீட்டுல சாமி இருக்கு. கூடம் வராத… சேர் போட்டு உக்காரத, அதுல ஆம்பளைக எப்படி உட்கருவாங்க…” என்று பல அதட்டல்.
அவள் வேலை எல்லாம் கரிகாலன் செய்து விடுவான்.
“ ம்மா… வயித்து வலில துடிக்குது. அந்த புள்ளையா புடிச்சு வேலை செய்ய சொல்ற… உமக்கு வேலை நடந்த சரி தான. யார் செஞ்சா என்ன …” என்று சத்தம் போட.
“ ஊமை மாதிரி கிடப்பான். ஒரு வார்த்தை பேச மாட்டான். பொண்டாட்டி ஒருத்தி வந்த உடனே துள்ளுறான்…” என்று கணவரிடம் புலம்பியவர்.
“அவ கால மட்டும் தான் கழுவல. போக, போக அதையும் பண்ணுவான் உம் மகன். பிள்ளை பெத்துருக்கான் பாரு கூறு இல்லாம… விதை ஒன்னு போட்டா சுறை ஒன்னா வரும்…” என்று கரிகாலனை வறுத்து எடுக்க.
“நான் குடிக்குறேன்னு எம்புட்டு நாள் நீ என்னை அடிச்சா. பேசாம வாங்கிப்பேன். பிள்ளைக சம்பாதிக்கவும் தான் என்னை அடிக்கிறதா நிறுத்தின… எனக்கு பிறந்தவன், வேற எப்படி இருப்பான். பொறுமைக்காரன். அப்படி பார்த்தா உனக்கு… சின்ன மருமக பரவாயில்லை…” என்க. அவரை நோக்கி முக்காலி பறந்து வந்தது.
அன்று கணவன் அவசரமாக துணிகளை எடுத்து வைத்தான், புரியாமல் மனைவி பார்க்க.
“ஒரு அவசர வேலை மது. சென்னை போகணும். ஒரு நாள் ஆகும். உன்னை, உங்க வீட்டுல விட்டுட்டு போறேன்…” என்று கரிகாலன் கிளம்ப.
அவன் அவசரம் பார்த்தவள், நிலை புரிந்து “போய்டு வாங்க கரிகாலன். ஒரு நாள் தான, இங்கவே இருக்கேன்” என்றவளை ஆச்சர்யமாக பார்த்தான்.
மதுரை வேண்டாம் என்று அவளா சொல்கிறாள். உண்மையில் அவளுக்கு விருப்பம் இல்லை. தாய் வீட்டு பயணம் ஒரு நாளில் முடியாது. அவளுக்கு கணவன் உடன் நேரம் செலவழிக்க வேண்டும். இங்கு இருக்கும் போது தான் அவனுடனான பொழுது என்று உணர்ந்து இங்கேயே இருக்கிறேன் என்றாள். புரிந்து கொண்ட கணவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. தனக்காக மனைவி யோசிக்கிறாள். அவனுக்கும் வேற என்ன வேண்டும்.
மனைவியிடம் ஆயிரம் பத்திரம் சொல்லி தான் கிளம்பினான். தாயிடம் சொல்லியவன், தந்தையை தனியே அழைத்து சென்று, “ப்பா, ராத்திரி நேரம் சென்டு வீட்டுக்கு வராத. அந்த புள்ளை தனியா இருக்கும். அம்மா… அண்ணன் வீடு போன, நேரம் தெரியாம உக்காந்திருக்கும். நாளைக்கு களத்து மேட்டு வேலையாம், அம்மா வெள்ளென போய்டும். நாலு இட்லி மட்டும் மதுக்கு வாங்கி கொடுங்க. தேங்காய் சட்னி வேணாம். அதுக்கு பிடிக்காது. நீங்க பேசுங்கப்பா, பேசுனா நல்லா தான் பேசும். நல்ல புள்ளை தான் அது. அம்மா வையும்ன்னு தள்ளி நிக்காதீங்க…”என்று அவருக்கும் எடுத்து சொல்லி கிளம்பி விட்டான்.
“ சரிய்யா… சின்ன பாண்டி. நீ சொல்லி கேட்காம இருப்பேனா… சின்ன மருமகள நான் பாத்துகிடுத்தேன்…” என்று மகனை வழி அனுப்பி வைத்தார்.
மறுநாள் காலை கருப்பாயி வேலைக்கு செல்லாமல் விசேஷ வீடு சென்று விட்டார். மது எப்பவும் போல வீட்டோடு முடங்கி கொண்டாள். இன்று இராத்திரி மட்டும் தான், நாளை காலை பத்து மணிக்கு வந்து விடுவான். ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தாள் பெண்.
வேர்க்க விறுவிறுக்க அவேசமாக வந்து அமர்ந்தார் கருப்பாயி. அவர் தோரணை கண்டு, தனக்கு இது நல்லதல்ல என்று ஒதுங்க நினைத்தாள் மது. சண்டை கட்டும் ஆவேசம் அவர் முகத்தில். மெதுவாக மது உள்ளே செல்ல,
“ஏய்! நில்லுடி…” குரலில் அப்படி ஒரு அதிகாரம். நிச்சயம் அந்த குரல் மதுவை பயப்படுத்தியது.
முகத்தில் எதுவும் காட்டாமல் சாதாரணமாக தன்னை காட்டி கொண்டாள். எழுந்து, முடியை கொண்டை போட்டவர்.
“ உம் தாலி கொடியை அவுத்து கொடுடி…” அதிகாரம் கொஞ்சமும் குறைய வில்லை.
அதிர்ந்து போய் பார்த்தவள், “ என்ன சொல்றீங்க?…” என்று நெஞ்சில் கை வைத்து கேட்க.
“என்ன முழிக்கிற. உம் தாலி கொடியை தான் கேட்டேன். உம் தாலியை கேட்கல…” என்றார் எகத்தாளமாக.
நிமிடம் கடக்க கொஞ்சம் திடம் பெற்றாள் பெண்.
“என் தாலி கொடியை நான் ஏன் கலட்டி தரணும்” நிதானம் மாறாமல் தான் இருந்தாள்.
“ஏன் கலட்டி தரணுமா?… கூப்புடு உங்க ஆத்தாவ… அவகிட்ட நான் பேசிகிறேன். கழுத்து நிறைய நகை போட்டு அனுப்புதேன், பத்து பவுன் போட்ட தான் ஆச்சுன்னு வியாக்கானாம் பேசினா… இப்ப நாங்க போட்ட தாலி கொடியை தாண்டி ஒன்னும் இல்லை. மொட்டை கழுத்தா நிக்குறவ. சும்மா வந்தவளுக்கு மஞ்ச கயிறு ஒன்னு போதாது…” என்று சொன்னவர்.
“இதை வச்சு தான் மொத சண்டையே. எம் மக, மருமக எல்லாம் சும்மா நிக்க, நீங்க பெரிய தாலிக்கொடி போட்ருக்கேன்னு பகுமானம் காட்றிங்க. குடு அந்த தாலி கொடியை. எம்பது பவுன் நகையும், வகை குறையாமல் சபை நிறைச்சு சீரும் உங்க அப்பன் வீட்டில இருந்து என்னைக்கு வருதோ, அன்னைக்கு தான் தாலி கொடி மேல உரிமை இருக்கு…” என்றார் சட்டமாக.
“ வரதட்சணை கேக்குறீங்களா?…” என்றாள் மது.
“ஆமா, இதுல என்ன தப்பு இருக்கு. உங்காத்தா கேக்கல. பத்து பவுன் தாலி கொடி, அதுக்கு பேரு என்ன? எம் மக, இந்த வீட்டு மகராசி, அவளை மஞ்ச கயிறுல நிக்க வச்சுட்டு. உமக்கு பத்து பவுன் போட நீ யாரு? ஆனா, ஏன் செஞ்சோம்… உங்க வீட்டில போடுறேன்னு சொன்ன நகைக்கு தான், மதிப்பு கணக்கு பண்ணி பத்து பவுன் போட்டோம். அப்படி, இப்படின்னு உங்காத்தாகாரிக்கு எம்புட்டு பேச்சு. ஒத்த மகளுக்கு ஒரு வெண்கல சொம்பு கூட கொடுக்கல. பேச்சு வேணாம், நகையை கொடு….” என்றார் கறாராக.
மதுக்கு புரிந்தது, நகைக்கு தான் இந்த பாடா.. கண்டு கொண்டவள்.
“நகை எல்லாம் லாக்கர்ல இருக்கு… பாதுகாப்புக்காக தான் வீட்டுல வாங்கி வச்சுருக்காங்க…” விளக்கம் கொடுக்கும் விதமாக.
“ஓ… எங்க வீட்டு நகையை பாதுகாக்க எங்களுக்கு தெரியாதா… நாளைக்கே நீ போய் வாங்கி வா… உங்ககிட்ட நகை இருக்குறது எம் மாமியாருக்கு பிடிக்கலைன்னு சொல்லியே , வாங்கி வா…” என்றார் பிடிவாதமாக.
இந்த முறை கோபம் மதுமிதாக்கு. இவர் யார் நகை கேட்க. எம் புருசனே ஒன்னும் சொல்லல. அவங்க மகன் கிட்ட பேசாம, என் உயிரை எடுக்குறாங்க. எங்க அப்பா கஷ்டபட்டு சம்பாதிச்சு போட்ட நகையை நான் ஏன் இவங்களுக்கு தரணும். மாமியார் தான் என்றாலும், என்னை பெத்தவர்களிடம் நான் அதிகாரம் செய்வேனா…
“முடியாது…” என்றாள் சட்டமாக.
“என்ன” என்று அதிர்ந்தவர். “அப்போ எங்க நகையை கலட்டி கொடுடி…” என்றார் கருப்பாயி.
“அதை ஏன் நீங்க கேக்குறீங்க. எம் புருசன் எனக்காக எடுத்து கொடுத்தது. கலட்ட முடியாது…” என்றாள் நிமிர்வாக.
“ உம் புருசனா… எம் மகன்” என்றார் உரிமையாக.
“உங்க மகனா… எம் புருசன்” இவளும் விடுவதாக இல்லை.
பிடிக்கவில்லை, ஒட்டவில்லை என்று ஆயிரம் காரணம் சொன்னாலும், ஒரு நாளும் இந்த பந்தத்தை முறிப்பதை பற்றி நினைக்க கூட இல்லை. தனக்கு இப்படி அமைந்து விட்டதே என்று புலம்பினாலும், அதை மாற்ற துணிய வில்லை. கொஞ்ச, கொஞ்சமாக மனதில் பதிய தான் நினைத்தாள். அப்படி இருக்க, கல்யாண நாளில் போட்ட தாலி கொடியை எவ்வாறு கலட்டி கொடுப்பாள்.
“நீயா தரல… நான் வந்து கலட்டி எடுப்பேன். எம் மகன் அப்புறாணி… உங்கப்பான் ஏமாத்தி புட்டான். நல்லது செய்ற மாதிரி ஒண்ணுக்கு ஆகாத ஒன்னை கட்டி வச்சுட்டான். தினக்கி ஒரு புடவையை கட்டி சீவி சிங்காரிச்சு, எம் மகன கை குள்ள வச்சுருக்க…” என்றார் அவளை காயப்படுத்தும் நோக்கோடு. தன்னை கண்டு பயம் கொஞ்சமும் இல்லாமல், திமிராக நின்றவளை அடக்கும் வெறி வந்தது.
“அதுல என்ன தப்பு… சீவி சிங்காரிச்சு யாரோ ஒருத்தன மயக்குனா தான் தப்பு. நான் எம் புருசன் தான மயக்குனேன்…” என்றாள் ரொம்ப கூலாக. வேற எப்படியும் இவரை அணுக முடியும் என்று தோன்ற வில்லை.
“அதானே, மயக்குறது உனக்கு என்ன புதுசா… உம் பவுசு தான் ஊர் நாறுச்சே… புளியங்கொம்பா பிடிக்க பார்த்த, அவன் உசார உம் குணம் கண்டு ஒதுங்கிட்டான்…” என்றார். இந்த முறை நீ விழ்ந்தே ஆக வேண்டும் என்ற நோக்கோடு.
குறி தப்பாமல் தான் தாக்கியது. அடுத்து பேச வராமல் வாயடைத்து போனாள் மது. ரொம்ப எளிதாக அவள் ஒழுக்கத்தை, அவள் காதலை சாடி விட்டார். எவ்வளவு வலி, வேதனைக்கு பின் தனக்கென ஒரு வாழ்வில் நுழைந்தாள். வெளியே நின்று விமர்சனம் செய்பவர்கள் அவள் வலியை ஒரு நாளும் யோசித்தார்களா…
இந்த பேச்சு அவள் வாழ்வை விட்டு நீங்காத… முழுதாக நான்கு வருடங்கள் கடந்த பின்னும் பின் தொடர்கிறது. ஒருவனை உண்மையாக காதலித்தேன், கை கூட வில்லை. தற்போது எனக்கென ஒரு வாழ்வில் நுழைந்த பின்னும் தன் தவறு என்று குத்தி பதம் பார்க்கும் உறவுகளை என்ன சொல்ல… ஒதுங்கி சென்றாலும் விடாமல் அடிப்பவர்களை, திருப்பி அடிக்க தான் வேண்டும், இல்லையென்றால் என் மகளின் கல்யாணத்தில் கூட என் ஒழுக்கம் கேள்வி குறியாக பார்க்கப்படும்.
நிமிர்ந்து கொண்டாள் பெண். கண்களை மூடி கரிகாலனை யோசித்தவள் தன்னை திடப்படுத்தி கொண்டாள். மூடு பொருள் என்று எதுவுமில்லை. உண்மையாக தன்னை கரம் பிடித்தவனை நம்பினாள். கொண்டவன் துணை நிற்க, யார் ஆயுதம் என்னை விழ்த்தும்.
“ நான் ஒளிச்சு, மறைச்சு எதுவும் செய்யல. எம் புருசனுக்கு என்னை நல்லா தெரியும். நான் காலத்துக்கும் வாழ போறது கரிகாலன் கூட தான். அவர் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும். உங்க வார்த்தை எனக்கு அனாவசியம் எப்போதும், என்னைக்கும்” என்று நிமிர்ந்தே பதில் சொன்னவள்.
“நீங்க வேணா உங்க மகன் கிட்ட சொல்லி பாருங்களேன். இவ சரியில்லை, வெளிய துரத்துன்னு… செய்வாரா? நிச்சயம் என்னை கரிகாலன் ஒதுக்க மாட்டார். என்னை தாண்டி யோசிக்கவும் மாட்டார்” என்றாள் நம்பிக்கையாக.
அந்த வார்த்தை கருப்பாயை தூண்டி விட்டது. தான் சொல்லி மகன் நம்ப மாட் டானா… அப்படி என்ன பொண்டாட்டி உசத்தி.
“ பத்து மாசம் சுமந்து பெத்த என்னை விட, ரெண்டு மாசம் முந்தி நுழைஞ்சு நீ முக்கியமா… பாக்குறேன். நாளைக்கு எம் மகன் வருவான், தெரியும் சேதி. சவுடாலு பேசுரையோ, பெட்டிய கட்டி வை” என்று ஆங்காரமாக கத்தியவர், பெரிய மகன் வீட்டை நோக்கி நடையை காட்டினார்.
வழி முழுக்க சத்தமாக பேசி அழுதவாரு சென்றவரை ஊரே வேடிக்கை பார்த்தது. நின்று, நிறுத்தி ஒப்பாரி வைத்தே போனார்.
முழுதாக ஓய்ந்து போனாள் மது. கடந்த கால ரணத்தை கீறி விட, துடித்தது உயிர். கரிகாலன் பற்றிய பயம் துளியும் அவளுக்கு இல்லை. அவ்வளவு நம்பிக்கை அவன் மேல், தனக்காக நிற்பான் என்று… தூக்கம் இல்லை, மனம் படபடவென அடித்து கொள்ள, கண் மூடி சாய்ந்து அமர்ந்தாள்.
பெரிய பாண்டி வீடு அமர்கள பட்டது. கட்டை தொண்டையில் அவர் கத்தியது தான் ஊருக்கே கேட்டதே… சொந்தம் கூடி விட்டது.
“எம் புருசன் எடுத்து போட்டது நீயாருன்றா?… என்னை தான் நம்புவான், உம் பேச்சு எடு படாதாம்… அவ புருசன் சம்பாத்தியமா… நான் யாரோவாம்…” என்று மூக்கை உறிஞ்சி ஒப்பாரி வைக்க.
வசந்திக்கு அழுகை முட்டியது. நேத்து வந்தவ, தன் தாயை சாடுவதா…
“நீ ஏம்மா, அவ நகையை கேட்ட. எப்படியோ போய் தொலைன்னு விட வேண்டி தானா… வயசுக்கு கூட மரியாதை இல்லாமா எம்புட்டு பேச்சு…”
“நான் நம்ம சந்திரா மகன் சீருக்கு போனேன். சாதாரண வேலை பாக்குறான். ஆனா, எம்புட்டு சீரு, நகை தெரியுமா!… ஒன்னு குறையல்ல. அவன் கைலயும், கழுத்துலையும் தங்கம் தான். உங்கண்ணனுக்கு என்னடி குறை. அப்படி பார்த்த, குறை அவங்க பக்கம் தான். ஊர் சிரிச்சா ஒருத்திய எம் மகன் கட்டுறதே பெருசு. இதுல உலக அழகிய பெத்த மாதிரி பேச்சு வேற… பொட்ட புள்ளை பெத்த அவங்களுக்கு அம்புட்டு இருந்தா ஆம்பிள்ளை பிள்ளை பெத்த எனக்கு எம்புட்டு இருக்கும்.” என்று நெஞ்சை தடவியவர்.
“உம் மருமக சீர் கொண்டு வரலையான்னு எல்லாரும் கேக்குறாங்க. வக்கணையா பேசி தாலி கொடி கேட்டா அவ ஆத்தாகாரி. அவளுக்கு உறைக்க வேணாம். ஆதான், இந்த சீமை சித்திராங்கிய கூப்ட்டு பேசினேன். அதுக்கு அப்படியே பகட்டு காட்டுறா… மூச்சுக்கு முன்னூறு தடவை எம் புருசன்னு சொல்றா… அவன் என்ன வானத்துல இருந்தா குதிச்சான். நான் தான பெத்ததேன். மாமியான்ற மரியாதை கொஞ்சமும் இல்லை. அவ சொல்லு தான் நிக்குமா…” என்று ஆத்திரம் குறையாமல் பேசினார்.
“எல்லாம் உங்க மகன் குடுக்குற இடம். நேத்து வந்தவளுக்கு தைரியம் எங்கிருந்து வரும். எரியிறத புடுங்குனா, கொதிக்கிறது தன்னாலே அடங்கிடும்” என்று சகுந்தலா சொல்ல.
“நாளைக்கு சின்னவன் வரட்டும். அவளுக்கு ஒரு முடிவு கட்டுதேன். மொட்டு… தலையாத மொட்டு… என்னை எம்புட்டு பேச்சு பேசிபுட்டா… அவளை நான் சும்மா விடுவேனா… முச்சந்தில வச்சு சந்தி சிரிச்சு, அவ ஆத்தா வீட்டுக்கு அனுப்புதேன்” தீயாக கொதித்து கொண்டிருந்தார் கருப்பாயி.
காலைல சாப்பிட்ட இட்லி, மதியம் ஏதேனும் செய்யும் முன் மாமியாருடன் சண்டை, இரவு சாப்பிடும் அளவுக்கு தெம்பு இல்லை. மிகவும் சோர்ந்து போனாள். மாமனார் மட்டுமே துணை இருந்தார். மாமியார் வர வில்லை.
இந்த நகை தான பிரச்சனை. கொடுத்து விடுவோம், கரிகாலன் என்ற ஒருவனுக்கு கொடுக்கலாம் தான். என்னைக்கா இருந்தாலும் கொடுக்க வேண்டியது தானே….தந்தைக்கு போன் செய்து பேசியவள், கையோடு வீட்டில் நடந்த பஞ்சாயத்தையும் சொல்லி, நகையும், சீரும் குடுத்து விடும்படி கேட்டுக் கொண்டாள்.
மாமியாருடன் சண்டை எனவும் பயந்து போன சுந்தரம். பதமாக கேட்டு நடந்ததை முழுதாக அறிந்து கொண்டார். அவருக்கும் கோபம். தானே முன் வந்து பெண் தந்ததால், இளக்காரம் வந்து விட்டதோ… தன் மகளை எவ்வாறு பேசலாம். இதை வளர விட கூடாது என்று எண்ணியவர், தன் பக்கம் நான்கு பேரை திரட்டினார். காலை கரிகாலன் வந்து விடுவான், அவன் முன்னையே வைத்து பேசி விட வேண்டும். இனியொரு முறை தம் பிள்ளையை பற்றி வாய் திறக்க கூடாது. கைகுள்ளவே இருப்பான் என்று தான் கரிகாலனை தேர்வு செய்தது. ரொம்ப பொறுமை, அமைத்தியானவன், தன் மேல் நன்றி உள்ளவன். தன் மகளை எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று தானே வசதி பார்க்காமல் கட்டி கொடுத்தது. இதை சும்மா விட கூடாது.
மதுவும் கணவனுக்கு தான் காத்து கிடந்தாள். அவன் வந்தால் தான் அவளுக்கும் ஒரு தெளிவு பிறக்கும். தன்னுடைய கடந்த காலத்தை யாரும் விமர்சனம் செய்ய கூடாது. இன்று மாமியார் நாளை அண்ணன் பொண்டாட்டி, தங்கச்சி என்று யாருக்கும் நான் எளிதாக போய் விட கூடாதே…
கரிகாலன் தான் வந்த வேலையை முடித்து கொண்டு, பஸ் ஏறிவிட்டான். அவனுக்கு பிடித்த காப்பி கொட்டை கலரில் சின்ன கரை வைத்த சேலை எடுத்திருந்தான். மனைவிக்கு தான். தன் மீதான அவள் ஆர்வம் கண்டு, தனக்காக அவள் யோசிப்பதை அறிந்து கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அதனால் தான் உரிமையாக சேலை எடுத்தான். இனி எல்லாம் சுகம் என்ற எண்ணம் கரிகால பாண்டியனுக்கு.