தங்களுக்கான முதல் இரவு என்ற நினைவு இன்றி, ஏதேதோ பேசி மனைவியை உற்சாகமாக வைத்து கொண்டான் கரிகால பாண்டியன். பார்த்த முதல் பார்வையிலேயே ஒட்டாமல் ஒதுங்கி கொண்டாள் மது. அவள் எதிர்பார்ப்பு என்னவென்று கணவன் அறிவான். வசதி, பழக்கம், உறவு என்று மொத்தமும் பொருந்தாத குடும்பம் தான். அதன்பொருட்டு அவள் தள்ளி நின்று கொண்டாள். உண்மையில் சகுந்தலா தவிர, அனைவரும் அவளிடம் ஒட்ட தான் விரும்புகின்றனர்.
என்ன பேசினாலும் வெறும் தலையசைத்து பதில் சொல்பவளிடம் மேற்கொண்டு எவ்வாறு பேச. புது இடம், புது உறவு எனும் போது உரிமை கொள்ள தயக்கம் வரும் தான். அதற்கான முயற்சி எடுத்து முடியாமல் விட்டால் பரவாயில்லை, சிறு துரும்பும் அசைக்காமல் வசதி பார்த்தே ஒதுங்கி கொண்டாள் மதுமிதா.
தென்னை தோப்பு தென்றல் காற்று இதமாக வருட, சுகமாய் தூக்கம் தழுவியது மதுவுக்கு. அந்த கயிற்று கட்டிலே மெல்ல தலைசாய்த்து உறங்க தொடங்கினாள். அவளின் தலை, கரிகாலன் கையை முட்ட, உண்மையில் ஒரு சிலிர்ப்பு தான் ஆணவனுக்கு. திருமண கனவுகள் எல்லோருக்கும் பொது தானே, அவனுக்கும் நிறைய இருந்தது. வெளி பார்வைக்கு வசதி, படிப்பு, அழகு, சொத்து, சொந்தம், ஜனக்கட்டு என்று கரிகாலனை விட மது அதிகம் தான். அதை தான் மற்றவர்களும் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் கரிகாலன், இது எதையுமே எதிர்பார்க்க வில்லை. அவனின் குடும்ப சூழலுக்கு ஏற்ப, சராசரி பெண்ணை தான் எதிர்பார்த்தான். அவன் கனவில் கண்ட பெண் கூட கருப்பு தான். தங்கள் நிலை தாண்டி ஒரு உயர்வை கனவில் கூட எண்ணாதவன். மற்றவர்கள் பார்வையில் வசதி வாய்ப்பு, அழகு பொருட்டு நடந்த திருமணமாக போனது.
அவனின் இருபத்தி எட்டு வயதில் பெண் பார்க்கும் போது, அடிப்படை தகுதியாக அவன் வைத்தது பன்னிரண்டு முடித்த பெண்ணை தான். வேற யாரும் முன் வரவில்லை என்பது உண்மை காரணம். சொந்த வீடு இல்லை, சொத்தும் இல்லை, இருப்பது ஒரு வேலை. அதற்கு தக்க இடம் தான் பார்த்தது. எதிர்பாராமல் அமைந்து போனது மதுமிதாவுடன். அவர்கள் வசதியை பார்த்து ஆர்ப்பரிக்கவும் இல்லை, அழகை பார்த்து வாய் பிளக்கவும் இல்லை. தன் மனைவி என்ற நிலைப்பாடு மட்டும் தான்.
தன்னை விட எல்லாவற்றிலும் அதிகம் இருப்பதாலோ என்னவோ தன் நிலை கருத்தில் கொள்ள பட வில்லை. அவனுக்கு என்ன!.. நல்ல இடம் அமைந்து விட்டது என்று பேச்சுக்கள் காயப்படுத்தும். அதே எண்ணம் தான் மதுமிதாவுக்கும், உனக்கு நான் அதிகம் என்பது போல… அவளுக்கு மட்டுமா,அவர்கள் வீட்டில் அனைவருக்கும் உள்ளது. நொடியில் காயப்படுத்தி பேசி விடலாம் தான். அதன் பிறகு… அவள் பெயரோடு தன் பெயர் இணைத்து, தன் கையால் வாங்கிய தாலியை சுமந்து, தன்னில் பாதியாக வந்தவளை எங்கனம் காயப்படுத்த. இன்று எனக்கிருக்கும் உரிமையும், உறவும் என்றாவது உனக்கும் வரும்!…
மறுநாள் அதி காலை நான்கு மணிக்கே மனைவியை எழுப்பி விட்டான் கரிகாலன். வீட்டு பெண்கள் எழுவது ஐந்து மணிக்கு தான். முகம் சுருக்கி தூக்கம் கலைந்து கோபத்தோடு தான் மது எழுந்தாள். அந்த குளிரிலும் சுடு நீர் போட்டு குடுத்து, கழிவறை முதல் குளியலறை வரை சுத்தம் செய்து, மனைவி வெளியே வரும் வரை காவல் நின்று, துண்டு எடுத்து கொடுத்து என்று எத்தனை செய்தும், அவள் முகத்தில் இளக்கம் இல்லை. என் வீட்டில் சூரிய உதயம் ஒன்பது மணி தான் என்பதில் தான் நின்றது அவள் மனம்.
மனைவியின் கோபம் புரிந்தாலும் என்ன செய்ய இயலும். அனுசரித்து செல்லும் பெண் கிடையாது. கல்யாண வீடு உறவுகள் சூழ்ந்து நிக்க, தனிப்பட்ட வசதியை எதிர்பார்க்க முடியாது தானே. ஆண்கள் கூட பம்ப்செட் சென்று விடுவார்கள்.ஆனால் பெண்களுக்கு குளியலறை அவசியம். பத்து பேருக்கு மேல் இருக்க, எல்லோரும் பயன்படுத்த வேண்டும். தங்கள் வீட்டு பெண்கள் என்றால் சங்கடம் ஏதுமின்றி பேசி சிரித்தபடியே ஒருவர் பயன்படுத்திய பின் மற்றவர் தயங்காமல் செல்வர். குடும்பமாக, கூட்டமாக இருக்கும் இடங்களில் இது சகஜம். ஆனால், மது அப்படியல்ல முகம் சுருக்கி ஏதேனும் பேசி விட்டாள் என்றால் மன கசப்பு. நிறைய சௌகரியம் பார்ப்பவள், ஒத்து செல்வது அரிது தான்.
இது புரிந்த கரிகாலனும் ஆட்டு குட்டி போல கூடவே சுத்தி சேவை செய்தாலும், முகம் தூக்கி கொண்டு தான் திரிந்தாள் மதுமிதா. குளித்து ஒரு புது நைட்டியில் இருந்தவளுக்கு, பாய் போட்டு அதன் மேல் போர்வை விரித்து, அவள் தூங்குவதற்கு திரும்ப ஆயத்தம் பண்ணினான் . ராஜா தோரணையில் மீண்டும் சென்று தூங்கி விட்டாள்.
வெளியே சென்று வாலியை எடுக்க, அதிர்ந்து விட்டான். மனைவியின் உடைகள் தான் ஈரமாக இருந்தது. “அடி பாவி, சும்மா அலசி கூட போட மாட்டியா…” என்று புலம்பியபடி, அவற்றை எல்லாம் அள்ளி கொண்டு தோட்டம் சென்றான். தென்னந்தோப்பு பக்கவாட்டில் தான் இவர்களின் சிறு தோட்டம். அங்கு சென்றவன் தானும் குளித்து, தன் உடைகளுடன் மனைவியின் உடைகளையும் துவைத்து எடுத்து கொண்டு தான் வந்தான்.
காலை காபிக்கு அழைக்க, பாக்கு கலர் மென் பட்டில் அளவான நகை, ஒப்பனை என்று மிதமாக வந்தாள் மதுமிதா.
“ம்ம்கூம், இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று எண்ணியது அவள் கணவன் தான். பின்னே, உள்ளாடை முதற்கொண்டு துவைத்து போட்டானே.
“மதினி, நீங்க ரொம்ப அழகு… இந்த கலர்லாம் நான் எடுக்கவே மாட்டேன், எனக்கு ஒரே மாதிரி தெரியும்ன்னு. உங்களுக்கு அம்சமா பொருந்தி போகுது…” என்று வசந்தி வெளிப்படையாகவே பாராட்டினாள்.
“தலை குப்புற நின்னு கொழுந்தன் தாலி கட்டுன ரகசியம் இது தானா!…” என்று அடுத்தடுத்து கேலி வர, அமைதியாக வெளியேறி விட்டான் கரிகால பாண்டியன்.
“ வெள்ளன எழுந்து, பொறுப்பா துணி எல்லாம் துவச்சு போட்ருக்க, பரவாயில்லை. கதவ தாட்டாம எந்திருச்சு வர மாட்டீங்கன்னு நினைச்சோம்”… என்ற கருப்பாயி அக்கா மருமகள் சொன்ன பின் தான் மதுக்கு புத்தியில் உரைத்தது.
கணவன் வந்த பின், ஒரு பைத்தியக்கார சிரிப்போடு அவனை பின் தொடர, புரிந்து கொண்டான் கரிகாலன்.
கருப்பாயி, “ ஏலே சின்ன பாண்டி! மனசுல ஒன்னும் விசன படாத… உங்கண்ணன் மாறல, விசயம் கேள்வி பட்டு கொதிச்சு போனான். அவன் பொண்டாட்டிக்கு நல்ல வசவு, உடனே உன்னைய பார்க்க வந்தான். நான் தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். மூஞ்சிக்கு நேர வரதான்னு சொன்ன பொறவு, சின்ன பாண்டி வர மாட்டான், காச குடுக்க பாரு மகணெண்ணு சொல்லிருக்கேன்” என்ற தாய்க்கு வெறும் தலையாட்டி வைத்தான் கரிகாலன்.
அவருக்கு மகன்கள் இருவரும் எதிராக நிற்க கூடாது.
காலை உணவாக இட்லி பரிமாற, கொள்ளை சந்தோசம் மதுவுக்கு. ஆனால், அது நொடியில் வடியும் படி முதல் நாள் வைத்த சாம்பார் உடன் வந்தது. பழைய சாம்பார்… மெதுவாக கணவன் முகம் பார்த்தாள்.
அவன், பார்வை கூட திருப்பாது தன் உணவில் கவனமானான். பாண்டியனை முறைத்து கொண்டே, இரண்டு இட்டலியை வழுக்கட்டாயமாக உள்ளே தள்ளினாள்.
அவனுக்கு தெரியும், மனைவி என்ன நினைப்பாள் என்று… இதில் அவன் செய்வதற்கு ஒன்றும் இல்லை. அண்ணன் பிள்ளைகள், தங்கை மகன் என்று சிறு பிள்ளைகள் கூட மறு சொல் சொல்லாமல் உண்ண, மனைவிக்கு பரிந்து பேச முடியாது.
இங்கே இது சகஜம் தான். கருப்பாயி, ஒரு கை பிடி சோற்றை கூட வீணாக்க விடமாட்டார். ரசம் வைத்தாலும், முழுதாக தீர்ந்த பின் தான் மறு குழம்பே… வீட்டிற்கு வந்த அண்ணன் மனைவி, தங்கை கணவன் என்று யாரும் வேறுபாடு காட்டவில்லை. தன் மனைவி என்று கொடி பிடிக்க முடியாது… தனியாக நிற்கும் போது எவ்வளவு சௌகரியமும் செய்யலாம். ஆனால், குடும்பமாக இருக்கும் போது அனுசரித்து தான் செல்ல வேண்டும். அதை, மனைவி தான் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாள்.
அடுத்து, இருக்கும் சொந்ததிற்கு கறி விருந்து. பெண்கள் அனைவரும் கூட்டாக அமர்ந்து வெங்காயம் உரிக்க, தேங்காய் துருவ என்று கேலி பேசியபடி ஒவ்வொரு வேலையாக செய்தார்கள். ஒரு பதினொரு மணிக்கு மேல் கருப்பாயி தான், “ மது! நாங்க எல்லாரும் தோட்டம் போறோம். கல்யாண துணிமணி சேர்ந்து மூட்டையாக கிடக்கு… குளிச்சு, துவச்சு வர சரியா இருக்கும். நீ என்ன பண்ற, சின்ன பாண்டி கூட சேர்ந்து சமையல் வேலையை மூடி என்ன… மேல் வேலை எல்லாம் நாங்க செஞ்சாச்சு. எலும்பு கறி குழம்பு, கூட்டு கறி வச்சு கொஞ்சம் ரசமும், தயிர் வெங்காயம் மட்டும் போதும்… வெளியே போன ஆம்பளைக வருவாங்க!… அவங்களுக்கு சாப்பாடு போட்டு, நிங்களும் சாப்பிடுங்க. அப்புறம் நாங்க வந்து எங்களுக்கு வச்சு சாப்பிடுகிறோம்…” என்று சொல்லித்தோடு, பெண்கள் கூட்டம் கலைந்து செல்ல.
எதுவும் புரியாமல் பார்த்து நின்றாள் மதுமிதா. அவளுக்கு சமைக்க தெரியாது என்றதோடு கிட்டத்தட்ட இருபது பேருக்கு மேல், எவ்வாறு வீட்டிலே சமைக்க. அதுவும் அசைவ சாப்பாடு.
“எனக்கு சமைக்க தெரியாது. நான் செய்றது பாஸ்தா, நூடுல்ஸ் அப்புறம் சிக்கன் வகை தான். இந்த மாதிரி விசேஷம் எதுவும் வந்தா வெளிய தான் ஆர்டர் பண்ணுவோம். இந்த கிராமத்தில் அதுக்கும் வாய்ப்பும் இல்லை , என்ன செய்ய?…”என்று கையை பிசைந்து கொண்டு நின்றாள்.
“நாங்க!.. கெடா வெட்டுனாலும் வீட்டு ஆளுக தான் சமைப்போம்” என்றான் கரிகால பாண்டியன். நிறைய முரண்பாடுகள் முட்டி கொண்டு நின்றது.
ஒரு பெருமூச்சை விட்டு கொண்டவன், வேலை பார்க்க தொடங்கினான். மேல் வேலை முடித்து வைத்திருக்க, சமையல் மட்டும் தான். கரிகாலன் தான் எல்லாவற்றையும் செய்தது, வெறுமனே பார்த்து மட்டும் தான் நின்றாள் மது. கொஞ்சம் கடுப்பு கரிகாலனுக்கு, கூட நின்று வேடிக்கை பார்ப்பதுக்கு பேர உதவி செய்வது. அவசரத்தில் கை தேடும் கரண்டியை கூட எடுத்து தர தோன்றாமல் அவன் சமைப்பதையே அதிசியமாக பார்த்து நின்றாள்.
“ உனக்கு கறி சமைக்க தான் தெரியாது… சாப்பிடவாது தெரியுமா இல்லை அதுக்கும் கத்து கொடுக்கணுமா!…” என்றான் எகத்தாளம் நிறைந்த குரலில் கேட்டான் கணவன். அவன் பொறுமையை சோதித்து கொண்டிருந்தாள் மனைவி என்பவள்.
“அந்த கஸ்டமெல்லாம் உங்களுக்கு வேண்டாம். நான்வெஜ் நல்லாவே சாப்பிடுவேன். அதுவும் மட்டன் பிரியாணி, சிக்கன் ஃப்ரை என்னோட ஃபேவரிட்” என்று அவளின் சின்சியர் பதிலில், அட! பைத்தியமே என்று ஒரு பார்வை பார்த்தான் கணவன்.
வீட்டு ஆண்கள் சாப்பிட என்று வர, இலை போட்டு பரிமாறினான் கரிகால பாண்டியன். எல்லாம் போதையில் இருந்தனர். ரேடியோ செட், பந்தலுக்கு காசு வாங்க ஆட்கள் வர, கொஞ்சம் வெளியேறினான் பாண்டியன். வேலை மது தலையில் விழுந்தது. வெளி சென்ற பெண்கள் கூட்டம் வரவில்லை.
தன்னால் முடிந்தது என்று உணவு பரிமாறும் வேலையை செய்தாள் மது. அதில் தான் செய்து வைத்திருக்கும் வில்லங்கம் புரியாமல். அடுத்து பெண்கள் கூட்டம் வந்தது. உணவு வகைகளை பார்த்தவர்கள், அரண்டு போய் கத்த தொடங்கினர்.
விவரம் புரியாமல் கரிகாலன் வெளியில் இருந்து ஓடி வர, அறையில் இருந்து மதுவும் வந்து விட்டாள். காரணம் இது தான். உணவு பற்றாக்குறை, அதாவது சோறு இருக்க, குழம்பு வகை எதுவுமில்லை. கருப்பாயி தன் எட்டு கட்டை தொண்டையை திறந்தார்,
“ வாக்கப்பட்டு வந்த பொம்பளைக்கு, ஒரு நெளிவு சுளிவு வேணாம்… வேலை செஞ்சுட்டு போன வீட்டு பொம்பளைகளுக்கு சாப்பாடு வேணும்ன்னு எண்ணம் இருக்கணும். தான் வயித்த நோப்பினா மட்டும் போதாது… என்ன வளர்ப்பு இது… நிறந்து சாப்பிடும் நினைப்பு இருக்கவா தான் பொம்பளை… கூட்டு குடும்பம், எல்லாருக்கும் வர மாதிரி வைக்க தெரியாது…”. என்று அரட்ட. ரொம்பவும் பயந்து போனாள் மது. அவளும் இன்னும் சாப்பிடவில்லை தான். உள்ளே இருக்கும் என்று எண்ணி தான் வெளியே இருந்ததை பரிமாறினாள். இருந்ததே அவ்வளவு தான் என்று அவளுக்கும் தெரியாது. இதற்கு முன் செய்தும் பழக்கமில்லை. கண்களில் நீர் நிறைந்தது. தன் வயிற்றை மட்டும் நிரப்பி கொண்டேனா… இவர்களோடு தன்னால் ஒட்டவே முடியாதோ!… குன்றி போனாள் பெண். ரொம்பவும் அசிங்கமாக போய்விட, யாரையும் பார்க்காமல் உள்ளே சென்று அடைந்து கொண்டாள்.
மனைவியின் அழுத முகம், பாண்டியனை வேதனை கொள்ள செய்தது. தற்போது தாயிடம் எதுவும் சொல்ல முடியாது, உணவுக்கு மாற்று வேலை பார்ப்போம் என்று நினைத்தான். உண்ணாமல் பத்து பேர் நிக்க, இருக்கும் கொஞ்சம் குழந்தைகளுக்கு போதும். சற்று யோசித்தாவன், சிவாவை கூட்டி கொண்டு மரத்தில் நிற்கும் கோழியை பிடித்தான். நல்ல வெடக்கோழி நாலு இருந்தது.
“எதுக்கு மகனே! இத்தனை கோழி…” என்று தாயின் கேள்விக்கு பதில் சொல்லாமல், வேலை பார்த்தான். மற்ற ஆண்களும் சேர்ந்து கொள்ள, வேலை வேகமாக நடந்தது. கோழி குழம்பின் வாசம் தூக்க,
“ஏத்தா கருப்பாயி!… நம்ம பயலுகா தான் குடிச்சுட்டு வந்து, இலைய விட்டு எந்திரிக்காம கறி அள்ளி வைக்க சொல்லி அட்டகாசம் பண்ணியது. புது பிள்ளைக்கு என்ன தெரியும்? நீங்க முன்ன நிண்ணு பார்க்காம… நேத்து வந்த பிள்ளையை குறை சொல்றீங்க. அப்புறம் எப்படி அது நம்ம குடும்பத்தோட ஒட்டும்…” என்று கருப்பாயி அக்கா வீட்டுக்காரர் கேட்க. அமைதியானார் கருப்பாயி. அவருக்கும் கொஞ்சம் உறுத்த தொடங்கியது. மகனின் அமைதி கலக்கமாக இருந்தது.
கரிகாலனின் இயல்பும் அதுதான். கோபத்தை அமைதியாக தான் காட்டுவான். மேல் பேச்சு எதுவும் அவனிடம் இருக்காது, மொத்தமாக ஒதுங்கி கொள்வான். கோபம் போனால் தான் பேச்சே வரும்.
“அம்மா! மதினி புதுசு. நம்ம வீட்டு பழக்கம், அவங்களுக்கு எப்படி தெரியும். கூட இருந்து நானாவது சொல்லி கொடுத்துருக்கணும். சாப்பிட்டது எல்லாம் அவங்க வீட்டு ஆளுகளா?… எல்லாம் நம்ம சொந்தம் தான். வேறு நினைக்காமல் பரிமாறி இருக்காங்க… கூட்டம் கும்மல் வந்தா இது சகஜம் தான். அவங்க வீட்டு முறை எப்படியோ!… வந்த முதல் நாளே சங்கடபடுத்தி இருக்க கூடாது…” என்று வசந்தியும் பேச. மற்றவர்களும் எடுத்து சொன்னார்கள்.
மதுவுக்கு என்று தனியே எடுத்து வைத்தான் கரிகாலன். என்ன என்று பார்த்த தங்கைக்கு, “ அவளும் நானும் சாப்பிடலை…” என்று பதில் எல்லோருக்கும் சங்கடத்தை கொடுத்தது.
தனியே உணவை எடுத்து கொண்டு, தங்கள் அறைக்கு வந்து கதவடைத்து கொண்டான்.