Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தூது செ(சொ) ல்லாயோ மெல்லிசையே

தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 13_2

இந்த பத்து நாளா அவன் யார்கிட்டேயும் பேசவும் இல்லை தெரியுமா? அவ்வளவு ஏன்? பத்து நாளுக்கு அப்புறம் இன்னைக்குதான் ஒழுங்கா சாப்பிட்டிருக்கான் ஷ்யாம்” என் முகம் பார்த்து சொன்னான் தனா.

புன்னகையுடன் நான்  ஷ்யாமின் பக்கம் திரும்ப குழந்தையை வாங்கிக்கொண்டான் அவன். அவனது முகம் நிறைய குழப்ப மேகங்கள். அவன் முகத்தை படித்துக்கொண்டிருந்தான் தனா.

அங்கே வீசிய மௌனக் காற்றை உடைக்கும் தைரியம் எனக்கோ ஷ்யாமுக்கோ கண்டிப்பாக இல்லை.

“ஷ்யாம்” இது தனா.



Advertisement

“ம்?”

“உன்னோட ஐ.டி கார்ட்ஸ் எல்லாம் கொடுடா. இன்னும் ரெண்டு மூணு நாளிலே உனக்கும் சாருக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு ஏற்பாடு பண்ணிடலாம்”

“ஆங்.?.” ஆடிப்போனவன் போலவே நிமிர்ந்தான் ஷ்யாம்.

Advertisement

“என்னடா ஆங்?” கேட்டான் தனா. “கொடுப்பியா மாட்டியா?”

Advertisement

“க.. கண்… கண்டிப்பா தரேன்” கொஞ்சம் தடுமாற்றம்தான் அவன் குரலில்.

“ஏன்டா க.. க.. க.. ங்கிற?” சிரித்தான் தனா. மெல்ல ஷ்யாமின் தோள் அணைத்தது தனாவின் கரம்.

“சரி அப்போ நான் குழந்தையை மலேசியா கூட்டிட்டு போறேன் சந்தியா ” என்னை பார்த்து சொன்னான் தனா.

Advertisement

கண்களை மூடிக்கொண்டேன் நான். “குழந்தை ஷ்யாமுக்கு சொந்தம். நீங்க அவரை கேட்டுக்கோங்க”

“குழந்தை ஷ்யாமுக்குதான் சொந்தம். ஆனா நீங்க  குழந்தையை வாங்கிக்கிட்டா உங்களுக்கு ஷ்யாம் இலவசம். வசதி எப்படி?” சொன்னவன் தனா..

“என்ன சொல்கிறான் இவன்?’

அந்த வார்த்தைகளில் உள்ளுக்குள் திடீரென ஒரு பூக்காடு பூத்த சந்தோஷம் எனக்கு. இருந்தாலும் கண்களை திறக்கவில்லை நான்.

‘இது எப்படி சாத்தியம்? சாரு பாவம் அல்லவா?’

“டேய்… என்னடா சொல்றே?” ஷ்யாம் கேட்க

“நீ கொஞ்சம் சும்மா இரு” சொன்னவன்

“மூணு நிமிஷம்தான் இந்த ஆஃபர். போனா வராது. மூணு  நிமிஷத்துக்குள்ளே கை நீட்டி குழந்தையை வாங்கிடுங்க, இல்லைன்னா நான் ரெண்டு பேரையும் நான் மலேசியா கூட்டிட்டு போயிடுவேன்” என்றான் என்னிடம்

கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

“இன்னும் ரெண்டரை  நிமிஷம்தான் இருக்கு”

“சாரு பா..பா..வம் தனா சா…சார்” எனக்கு வார்த்தைகள் தடுமாறின.

“சாரு பாவமில்லைன்னு நான் ப்ரூவ் பண்றேன். நீங்க முதலிலே குழந்தையை வாங்கிக்கோங்க. இன்னும் ரெண்டு நிமிஷம்தான்  இருக்கு.”

விருட்டென கண் திறந்தேன் நான். சாருவின் முகம் பார்த்தேன். அதில் பெரிதாய் ஒரு புன்னகை. வாங்கிக்கொள் என்பதைப் போல் தலையசைத்தாள் அவள். தனாவின் வார்த்தைகளையும் விட அந்த தலையசைப்பு எனக்கு மிகப் பெரிய நிம்மதியை கொடுத்தது.

“தனா நீ பேசறது எனக்கு எதுவும் புரியலை” ஷ்யாமின் குரலில் அப்படி ஒரு தவிப்பு.

“ஆனா உன் மனசு எனக்கு புரிஞ்சிடுச்சுடா கண்ணா” என்றான் தனா ஷ்யாமின் தோள்களை இன்னுமாக இறுக்கிக்கொண்டு.

“இந்த பய புள்ள இருக்கானே இந்த பயபுள்ள அவனுக்கு உங்க மேலே தாறுமாறான லவ். நீங்க கோமாக்கு போனதும் அவன் கதறின கதறலை பார்க்கணுமே.. ஆனா எனக்காக என் தங்கச்சிக்காக எங்க அம்மாவுக்கு கொடுத்த வார்த்தைக்காக இது எதையுமே வெளியிலே காட்டிக்காம ஸ்டைலா சுத்திட்டு இருந்தார் மாப்பிள்ளை. அதை எனக்கு புரிய வெச்சது நம்ம சாரு.”

நான் சாருவை வியப்புடன் பார்க்க அவள் புன்னகையுடன் தலை குனிந்து கொண்டாள். இமைக்க மறந்து நின்றிருந்தான் ஷ்யாம். நடப்பதை நம்பவே முடியாத பாவம் அவனிடத்தில்.

அன்னைக்கு புலாவ் உபின்லே நீங்க விழுந்தவுடனே அவன் பதறிப்போனதிலே ஆரம்பிச்சு அங்கே ஸ்டேஜ்லே நீங்க ரெண்டு பேரும் பாடின மலரே மௌனமா வரைக்கும், எல்லாத்திலேயும் இருந்த காதலை அவ எனக்கு புரியவெச்சா. அன்னைக்கு எனக்கு உடம்பு முடியலைன்னு அங்கே ஓடி வந்தாலும் நிமிஷத்துக்கு மூணு தடவை உங்க பேரைத்தான் சொல்லிட்டு இருந்தான் ஷ்யாம். ”

“நீங்க அன்னைக்கு ஸ்டேஜ்லே பாடும் போது நான் வரலை. நீங்க பாடின விதத்திலேயே உங்களுக்கு ஷ்யாம் மேலே இருக்கிற அன்பு தெரிஞ்சதுன்னு சாரு என்கிட்டே சொன்னா. அப்போ என்கிட்டே சாரு ஒரே ஒரு கேள்விதான் கேட்டா”

“அக்காவைதான் அவ மனசை புரிஞ்சுக்காம அனுப்பி வெச்சிட்டு அவ தற்கொலை பண்ணிக்கிட்டான்னு அவளையே குற்றம் சொல்லிட்டு இருக்கோம். அதே தப்பை மறுபடியும் ஷ்யாமுக்கும் சந்தியாவுக்கும் செய்யப் போறமான்னு”

“இந்தக் கேள்விக்கு என்கிட்டே பதில் இல்லை சந்தியா” அவன் சொல்ல ஷ்யாம் சாரு உட்பட எல்லார் முகத்திலும் வருத்த ரேகைகள்.

“இந்த முடிவு கண்டிப்பா நீங்க அவன் குழந்தையை ஏத்துக்கிட்டீங்கனு தெரிஞ்சதுனாலே இல்லை. சந்தியா. மூணு மாசம் முன்னடியே இந்த முடிவு எடுத்திட்டோம் நானும் சாருவும்”.

 “அப்போ திடீர்னுதான் எங்க வாழ்க்கையிலே எட்டிப் பார்த்தார் மிஸ்டர் ராகவேந்தர். அவர் மலேசியாவிலே எங்க ஆபிஸ்லேதான் வொர்க் பண்றார். ரொம்ப நல்ல பையன் அவர் சாருவை நிறைய இடத்திலே பார்த்திருப்பார் போலிருக்கு. ஒரு நாள் என்கிட்டே வந்து “எங்க அம்மாவுக்கு வாய் பேச வராது. அதே மாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் முடிவு பண்ணி இருக்கேன். நீங்க உங்க சாருவை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பீங்களா நான் எங்க அம்மாவை எப்படி பார்த்துப்பேனோ அப்படி பார்த்துக்கறேன்னு” கேட்டார்.

“அவர் கேட்ட விதமே எனக்கு அவரை மறுக்க தோணலை. சாருக்கும் அவரை ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க அம்மாவையும் கன்வின்ஸ் பண்ணிட்டேன். அவர் அப்பா அம்மா இங்கே சென்னையிலேதான் இருக்காங்க. அவங்களை பார்த்து பேசிட்டு உங்க ரெண்டு பேர்கிட்டேயும் எல்லாத்தையும் சொல்லிட்டு போகலாம்னுதான் நாங்க இங்கே வந்ததே. அதுக்குள்ளே இவ்வளவு நடந்து போச்சு சந்தியா”.

ஷ்யாமின் கண்களில் நீர் பளபளத்துக் கொண்டிருந்தது. அவன் தனது உணர்வுகளை அடக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருப்பதைப் போல் தோன்றியது.

நான் சட்டென சித்தாராவின் பக்கம் திரும்ப கண்களில் வெள்ளம் வழிய அமர்ந்திருந்தாள் அவள். அவள் கரம் பிடித்து அழுத்திக் கொடுத்தேன் நான்.

“இறைவா உனக்கு ஒரு கோடி நன்றிகள்!”

“அன்னைக்கு நீங்க சாருகிட்டே எல்லா விஷயத்தையும் சொல்ல வந்த போது கூட நான் இதைத்தான் உங்ககிட்டே சொல்ல வந்தேன். ஆனா அன்னைக்கு நீங்க இருந்த நிலையிலே என்னாலே எதுவமே பேச முடியலை.”

“நிஜமா நீங்க கோமாக்கு போகும் போது சந்தியாவோட ஷ்யாமா அவனைப் பார்த்தேன். இந்த பத்து  நாள் அவன் உங்க பையனை பார்த்துகிட்ட விதத்திலே அவனை ஒரு நல்ல அப்பவாவும் பார்த்தேன். நீங்க மூணு பேரும் ஒண்ணா இருந்தாதான் எல்லாம் சரியா வரும்.”

“எனக்கு இப்போ உங்ககிட்டே ஒரே ஒரு ரிக்வெஸ்ட் மட்டும்தான். என் ஷ்யாமை ரொம்ப ரொம்ப பத்திரமா பார்த்துக்கோங்க சந்தியா” சொல்லிக்கொண்டே அவன் கரம் பிடித்து எனது கையில் கொடுத்திருந்தான் தனா. ஒரு நல்ல நண்பனாக என் முன்னே  விஸ்வரூபம் எடுத்து நின்றிருந்தான் அவன்.

பேச்சே வரவில்லை எனக்கு.

நடந்தவைகளை கிரஹித்து கொள்ளவே அவனுக்கு சில நொடிகள் பிடிக்க பின்னர் கண்ணீர் வழியும் விழிகளுடன் சாருவை பார்த்து நன்றியுணர்வுடன் புன்னகைத்தான் ஷ்யாம்.

“தேங்க் யூ மா”

சாருவை வாவென கண்களால் அழைத்தேன். எனது கரம் பிடித்துக்கொண்டு எனது நெற்றியில் முத்தமிட்டது அந்தப்பெண். என்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டேன் அவளை. என்னுடைய விழிகளிலிருந்து அவள் கையில் விழுந்த சில சொட்டு கண்ணீர்த்துளிகள் சொல்லாத நன்றியை, எனது வார்த்தைகள் அவளுக்கு சொல்லியிருக்க  முடியாது என்பது மட்டும் உண்மை.

“எனக்கே தெரியலை சாரு. உங்க மனசு என்னாலே எதாவது கஷ்டப்பட்டிருந்தா என்னை மன்னிச்சிடுங்க. ப்ளீஸ்” தழுதழுத்து வந்தது எனது குரல். ஆதரவாக எனது கரத்தை அழுத்திக்கொடுத்தாள் அவள்.

அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பதை போல் அவள் தலை அசைத்த போது எனக்குள்ளே சற்றே நிம்மதி எனக்கு.

சாருவின் அருகில் வந்து அவளது தோள்களை அணைத்துக்கொண்டாள் சித்தாரா.

“நீங்க எங்களுக்கு எவ்வளவு பெரிய நிம்மதியை  கொடுத்திருக்கீங்கன்னு உங்களுக்கு  தெரியாது சாரு.” என்றாள் நெகிழ்ந்து போய் “இன்னையிலேர்ந்து நீங்களும் சந்தியாவும் எனக்கு ஒண்ணுதான். உங்களுக்கு ஒண்ணுன்னா சித்தாரா ஓடி வருவா”

அழகான புன்னகையுடன் அவள் கரம் பற்றி குலுக்கினாள் சாரு.

தனா உட்பட எல்லார் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!