Skip to content
Post Views: 2,803
அத்தியாயம் -18 – 3
“அக்னி நோக்கி குதித்தாள் அவமானத்தினால் சதி
நிழலும் எரிந்து நிஜமும் தெரிந்து நிலை குலைந்தது அவனி
அக்னி தேவன் அலறலே அண்டம் எங்கும் ஒலித்ததே
Advertisement
சீதை மகா பத்தினி அதை ஜகமே வழி மொழிந்ததே”
மேற்கண்ட கம்பராமாயண வரிகளைக் கேட்டபோது அரங்கத்திலிருந்த அனைவருக்கும் கண்ணீர் வழிந்தது. வெறும் வரிகளுக்காக மட்டுமா அந்தக் கண்ணீர். உணர்ச்சிப் பொங்கப் பேசும் நாயகிக்காகவும் தான் அந்தக் கண்ணீர். எத்தனை யுகங்கள் ஆனால் என்ன? சீதையின் நிலை தானே இன்றைக்கும் பெண்களுக்கு இருக்கிறது. கானகமோ, மாநகரமோ பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே. பெண்ணவளின் இரக்கக் குணமே அவளுக்கான எதிரான சூழ்நிலையை உருவாக்குகிறது.
இதோ மத்திம வயதைத் தொடும் இந்த அரங்கத்தைக் கட்டிப் போட்டிருக்கும் நாயகிக்கும் அந்த நிலைதான். காலத்திற்கேற்ற வகையில் சந்தேகப்படும் விதம் தான் மாறியிருக்கிறதே தவிர, சந்தேகக் குணம் மாறவில்லை.
Advertisement
சீதையின் இராமருக்கு சந்தேகமல்ல. ஆனால் இராஜாராமனுக்கு தன் ராணி சீதையின் கற்பு நிலையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அதன் பாதகம் சீதைக்கும் அவளின் வழி வழியாக வரும் பெண் குலத்திற்கும் தானே தவிர, ஆண்களுக்கு அல்ல.
Advertisement
இப்படியான எண்ணங்களோடு அரங்கத்தின் இருக்கைகளில் முன் வரிசையில் அமர்ந்து இருந்தாள் லேடி சூப்பர்ஸ்டார் ஸ்ரீகீர்த்தி.
கருணாகரன் கூறிய அபாண்டப் பழியில் இருந்து சத்யா, கீர்த்தி இருவரும் வெளிவந்து சில நாட்கள் கடந்து இருந்தது.
பொதுவாக திரைத்துறை சம்பந்தப்பட்ட விழாக்களிலும் முக்கியமான நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்துக் கொள்வாள் ஸ்ரீகீர்த்தி. தற்போது கலந்துக் கொண்டிருப்பது ஒரு நாடகக் கலை நிகழ்ச்சி. அந்த நாடகக் குழுவின் ஐநூறாவது நாடக அரங்கேற்றம். அதற்கு தலைமைத் தாங்குவதற்காக அழைக்கப்பட்டு இருந்தாள் ஸ்ரீகீர்த்தி. ஆனால் அது மட்டுமே காரணமல்ல. இதோ சீதையாக நடித்துக் கொண்டிருக்கும் பெண்ணும் கீர்த்தி இந்த அரங்கத்தில் இருக்கக் காரணம்.
Advertisement
ஸ்ரீகீர்த்தி மட்டுமல்ல, சந்திரன் குடும்பத்தினர் அனைவரும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். சந்திரன் தங்களிடம் இருந்து ஒதுங்கவும் அமுதா, அகிலா இருவருக்கும் வருத்தமாக இருந்தது. காலப் போக்கில் அமுதாவின் மகன் சவுண்ட் இன்ஜினியரிங் படித்து விட்டு இதே திரைப்படத் துறையில் வேலைப் பார்க்க ஆரம்பிக்கவும் உண்மை உணர்ந்து கொள்ள ஆரம்பித்து இருந்தார்கள்.
விவேக் வந்து கூறிய உண்மையை அடுத்து, சத்யா, சந்திரன் இருவரும் அமுதாவின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து இருந்தனர். கிடைத்த வாய்ப்பில் தங்கள் அண்ணனோடு இணைந்தனர் சகோதரிகள்.
காமாட்சி இன்னும் அப்படியே தான் என்றாலும், வயது அவரின் மிடுக்கைக் குறைத்து இருந்தது. சரவணன் மனைவி சாப்பாடு போட்டு பார்த்துக் கொள்ளுவாள் அவ்வளவே. காமாட்சியின் குரலுக்கு அடிபணியும் வேலை எல்லாம் கிடையாது. அது காமாட்சியின் அகங்காரத்தைக் குறைத்து இருந்தது.
உமா மகேஷ்வரி, அத்வைத் ஒரு புறம் அமர்ந்திருக்க, அடுத்த வரிசையில் பிரபஞ்சன், விவேக் இருவரும் அமர்ந்து இருந்தனர்.
இராமர் பட்டாபிஷேகத்தோடு நாடகம் நிறைவு பெற, ஸ்ரீகீர்த்தி மேடைக்கு அழைக்கப்பட்டாள். வரவேற்புரை, சிறப்புரை எல்லாம் வேறு சில பிரபலங்கள் பேசி முடித்ததும், கீர்த்தியின் உரை ஆரம்பமாகியது.
நாடகத்தைப் பற்றியும், அதில் நடித்த நடிக, நடிகையர்கள் பற்றியும் வாழ்த்திப் பேசியவள், சீதையின் பாத்திரத்தைப் பற்றியும் பேச ஆரம்பித்தாள்.
“சீதையின் துயரம் இன்றும் தொடர்வதற்கு காரணம் இந்த ஆணாதிக்க சமூகமே. பெண்களைப் பாதுகாப்பாக இருங்கள் என்ற அறிவுறுத்தும் சமூகம், ஆண்களுக்குப் பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தவதில்லை. அன்றைக்குப் படி தாண்டா பத்தினியாக இருந்த சீதைக்கே அத்தனைப் பிரச்சினைகள். இராமரை விட்டுப் பிரிய மனமில்லாமல், அவர் பின்னோடு சென்ற சீதையைக் கானகத்திலிருந்து கவர்ந்து சென்றான் இராவணன். இன்றைக்குப் பெண்கள் படிப்பு, வேலை, பொழுதுபோக்குத் தாண்டி அடிப்படைத் தேவைகளுக்குக் கூட வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டியிருக்கிறது. அதனால் ஆண்களுக்கு இராமனாக இருக்கக் கற்றுக் கொடுங்கள். குறைந்த பட்ச சுயஒழுக்கததையாவது பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். அதைச் செய்தாலே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய ஆரம்பிக்கும். இன்னும் பல சீதைகளின் அக்னிப் பிரவேசத்தைத் தடுக்கலாம்.” எனக் கூறிய கீர்த்தி, மேலும் சில விஷயங்கள் பேசி முடித்தாள்.
அதன் பின் நாடகம் ஏற்பாடு செய்த குழுவின் உரிமையாளர் திருமதி உமாமகேஷ்வரி மேடைக்குப் பேச வந்தாள். நாடகக் குழுவினருக்கு நன்றிகள் தெரிவித்து, விழாவை சிறப்பித்த விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்து முடித்தார்.
பின் “இந்த நாடக சீதைக்கு நடந்த துயரம் நிஜத்திலும் ஏற்பட்டது. அவருக்கு பக்கப் பலமாக அவரின் மகள் ஸ்ரீகீர்த்தியும், மேலும் சில நல்ல உள்ளங்களும் இருக்கவே அதைத் தாண்டி வந்துவிட்டார். ஆனால் சத்யவதியின் துயரங்கள் போன்று பாதிக்கபட்டவர் பலர் இருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் சரியான ஆலோசனை கூற நாங்கள் முடிவெடுத்து உள்ளோம். என் தந்தை மனோகரின் பெயரால் ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து அதில் நான் உட்பட, சத்யவதி, ஸ்ரீகீர்த்தி எல்லோரும் தேவைப்படும் பெண்களுக்கு ஆதரவாக இருப்போம். மீ டூ போன்ற குற்றங்களைச் சந்திக்கும் பெண்கள் எங்களிடத்தில் தெரிவித்தால், அதற்கு உண்டான சட்டபடித் தீர்வுகளை பெற்றுத் தருகிறோம். அத்தோடு என் தந்தை நடத்திவந்த இந்த நாடகக் குழுவினை நான் பொறுப்பேற்றுக் கொள்ளப் போகிறேன் என்பதையும் இந்த நல்ல நாளில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முடித்தார்.
விழா முடிந்து புறப்படும் நேரம் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற அவர்கள் உமாமகேஷ்வரியிடம் கேள்விகளை வைத்தனர்.
“மேடம், உங்கள் கணவரைப் பற்றிய உங்கள் முடிவு என்ன?”
“என் கணவரிடமிருந்த அதிகாரத்தை நானும், என் மகனும் எடுத்துக் கொண்டு விட்டோம். அவர் தற்போது எங்கள் வீட்டில் இருக்கும் ஜடப் பொருட்களில் ஒன்று” என்று மட்டும் கூறினார்.
பின் சத்யவதியிடம் திரும்பிய நிருபர்கள் “உங்களின் அடுத்த ப்ராஜக்ட் என்ன?” எனக் கேட்டனர்.
“என்ன தான் என் மேல் சுமத்தப்பட்ட களங்கம் நீங்கினாலும், அன்றைக்கு நான் அனுபவித்த வேதனை யாருக்கும் வரக்கூடாது. உமா மேடம் மற்றும் அவரின் மகன் அத்வைத் இருவருக்கும் மிகுந்த நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். ஆனால் இந்த நிகழ்வு என்னைப் பெரிதும் பாதித்து விட்டது. அதனால் நான் நடிப்பில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.” என்றவள் சற்றுத் தள்ளி நின்று இருந்த தன் கணவனை அழைத்தாள்.
“இவர் என் கணவர் சந்திரன். இராணுவத்தில் பணியாற்றியவர். எங்கள் இருவரின் பணிகளைப் பொறுத்து அதிக நாட்கள் தனித்தனியாகவே வாழ்ந்தோம். இனி மீதி இருக்கும் காலத்தை என் இராமரோடு கழிக்க விரும்புகிறேன்.” என்றாள் சத்யா.
சந்திரனைப் பிரிந்து இருந்ததைப் பற்றியெல்லாம் பேச விரும்பவில்லை சத்யா. பிரபஞ்சன் சத்யா, சந்திரன் இருவரும் சட்டப்படி இணையவும் ஏற்பாடு செய்து இருந்தான்.
ஸ்ரீகீர்த்தியின் பக்கம் நிருபர்கள் திரும்பும் சமயம் “வெயிட், வெயிட் அடுத்து என்கிட்டே தான் வருவீங்கன்னு தெரியும். என்னைப் பொறுத்த வரை மெய்யெனில் போராடு பாலிசி தான். நம் மீது எந்த தவறும் இல்லாத போது நாம யாருக்கும் அடி பணியத் தேவையில்லை. தவிர நான் பேஷன் டிசைனர். ஒரு பொட்டிக் ஆரமபிக்கப் போகிறேன். டைம் கிடைத்தால், எனக்கும் பிடித்தால் நடிப்பேன்.” என்றாள்.
அப்போது பெண் நிருபர் ஒருவர் “மேடம், கல்யாணம் எப்போ?” எனக் கேட்டார்.
“எனக்கு இன்னும் அப்படி ஒரு பிரோபோசல் வரவே இல்லை. என்னோட அடாவடிக்கு எல்லாம் யாரும் செட் ஆகறது ரொம்பக் கஷ்டம். அப்படி ஒருத்தர் பார்க்கும்போது யோசிக்கறேன்” என்றாள் ஸ்ரீகீர்த்தி.
அப்போது “என்னைக் கல்யாணம் செய்துக்கறீங்களா சின்ன மேடம்?” என்று ஒரு குரல் கேட்டது.
யார் என்று திரும்பிப் பார்க்க பிரபஞ்சன் நின்று இருந்தான். எல்லோரும் ஆச்சரியமாகப் பார்க்க “டிடெக்டிவ் மாதிரி ஆன்டி ஜாமர் ஐடியா எல்லாம் யோசிக்கறீங்க. என் வக்கீல் தொழிலுக்கு யூஸ் ஆகும். கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று மீண்டும் கேட்க, அங்கே எல்லோரும் சிரித்தனர்.
பெண் நிருபர் மட்டும் “ஏன் சர், இப்படித் தான் ப்ரபோஸ் பண்ணுவீங்களா? எத்தனை நாள் ஆசை?” எனக் கேட்டார்.
“மனசுக்கு ஒருத்தரைப் பிடிச்சிட்டால், எந்த ஃபார்மாலிட்டியும் தேவையில்லை. கீர்த்தியின் தைரியம் எனக்கு ரொம்பவேப் பிடிச்சு இருக்கு. என்னோட விருப்பத்தைச் சொல்லிட்டேன். முடிவு அவங்க கையில்.” என்றான் பிரபஞ்சன்.
இப்போது நிருபர்கள் கீர்த்தியின் புறம் திரும்ப, “அப்படி எல்லாம் சட்டுனு சொல்ல முடியாது. பார்க்கலாம்” என்று மட்டும் கூறிவிட்டு எல்லோரிடமும் விடை பெற்றாள்.
ஸ்ரீகீர்த்தி பிரபஞ்சனின் விருப்பத்தை ஏற்றுக் கொள்வாளா என்பதைக் காலத்தின் கையில் விட்டுவிட்டு விடைபெறுவோம்.
-முற்றும் –
error: Content is protected !!