Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் ரட்சகா

காதல் ரட்சகா 8

பிரேத பரிசோதனை செய்யப்படும் அறையில் இருந்தது மாயாவின் உடம்பு.

மருத்துவர்கள் இருவர் அவளை நெருங்கினார்கள்.



Advertisement

ஒருவர் அவளின் உடம்பின் மீது கையை வைத்தார்.

“உடம்பு சூடா இருக்கு..” என்றார்.

Advertisement

Advertisement

மற்றொரு மருத்துவர் குழப்பத்தோடு அருகில் வந்து மாயாவை தொட்டுப் பார்த்தார். உடனே அவளின் நாடியை சோதித்தார்.

“இந்த பொண்ணு உயிரோடு இருக்கு..” என்றார் அவர்.

Advertisement

உடனே மாயாவின் உடம்பு ஐசியூவுக்கு எடுத்து செல்லப்பட்டது.

“இந்த பொண்ணு செத்துட்டதா யார் ஸ்டேட்மெண்ட் கொடுத்தது?” என்று மருத்துவர்கள் இருவரும் கோபத்தோடு கேட்டார்கள்.

அவள் இறந்து விட்டதாக சோதித்து சொன்ன மருத்துவர் முன்னால் வந்து நின்றார். “நான் செக் பண்ணும்போது அந்த பொண்ணோட இதயம் துடிக்கல.‌ மூச்சு விடவும் இல்ல..” என்றார்.

“ஒருவேளை உயிர் போய் வந்திருக்குமோ?” என்று இன்னொரு மருத்துவர் கேட்க, “இது என்ன பேய் கதையா?” என்று கேட்டார் மற்றொருவர்.

“நான் சில கேஸ்ல பார்த்து இருக்கேன். 20 நிமிஷம் கழிச்சி கூட சிலருக்கு உயிர் வந்திருக்கு..” என்றார் முதலில் பேசியவர்.

விக்னேஷூம் மற்றவர்களும் சோகத்தோடு காத்திருந்த இடத்திற்கு வந்தார் ஒரு மருத்துவர்.

“பேஷண்ட் மாயா உயிரோடு இருக்காங்க. அவங்களுக்கு ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருக்கு..” என்றார்.

இவர்கள் ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினார்கள்.

“என் பொண்ணு உயிரோடு இருக்காளா?” என்று கேட்டு ஆனந்த கண்ணீர் வடித்தாள் அமலா.

“ஆமாம்மா. அவங்க கன்டிஷன் எப்படி இருக்குன்னு இனிமேதான் பார்க்கணும்..” என்றார்.

கைலாஷ் ஒருபக்கம் கொதித்துக் கொண்டிருந்தார். “அந்த கனகவதி டாக் இப்படி பண்ணிட்டாளே! நான் தேர்ந்தடுத்த பெண்ணை அவ எப்படி கொல்லலாம்?” என்று கர்ஜித்தார்.

மறு பக்கம் கனகவதியோ தன்னிடம் வந்து விசாரித்த போலிசாரிடம் “அந்த பொண்ணு என் மருமகளோட தங்கச்சி. அவளை கொல்ல எனக்கு என்ன ரீசன் இருக்கு?” என்று கேட்டாள்.

“கைலாஷ் சார் உங்க மேல சந்தேகம் இருப்பதா சொல்லி கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காரு..” என்றார் அந்த போலிஸ்.

“யாரோ ஒருத்தர் கம்ப்ளைன்ட் பண்ணா நீங்க என்னை வந்து கேள்வி கேட்பிங்களா? ரொம்ப சைல்டிஸ்ஸா இருக்கு சார்..” என்று இவள் பதில் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் விசாரணைக்கு வந்த போலிஸின் செல்போன் ஒலித்தது.

எடுத்து பேசினார்.

“ஓகே..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.

கனகவதியை நிமிர்ந்து பார்த்தவர் “அந்த பொண்ணு உயிரோடு இருக்காங்க. நாங்க அவங்க குணமாகி எழுந்ததும் அவங்கக்கிட்டயே விசாரிச்சிக்கிறோம்.. அதுவரை நீங்க எங்ககிட்ட சொல்லாம வெளியூர் போக கூடாது..” என்றார்.

இவளுக்கு அதிர்ச்சி. ‘அவ உயிரோடு இருக்காளா? ஆனா எப்படி?’ என்று தனக்குள் பதறினாள்.

போலிஸ் போய் விட்டார்கள். இவள் ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள்.

நாம் செய்ததை பற்றி வெளியில் சொல்லி விடுவாளோ என்று இவளுக்கு பயம் வந்தது.

வீட்டுக்குள் வந்தார் தர்மேந்திரன். இவளை பார்த்தவர் “நீ என்ன பண்ணி இருக்க தெரியுமா?” எனக் கேட்டார்.

“நான் எதுவும் செய்யல..” என்றவளின் கன்னத்தில் பளாரென்று அறை விழுந்தது.

“நீ பண்ண முட்டாள்தனம் எப்படிப்பட்டது தெரியுமா?” என்று கேட்டார்.

“எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு நீயே எல்லார்க்கிட்டயும் சொல்லிடுவ போல..” என்றார்.

அவள் விழிகள் கலங்கியது.

“ஆனா அந்த கைலாஷ்..” என்று ஆரம்பித்தவளிடம் “அவன் முடிஞ்சி போன அத்தியாயம். நமக்கும் அவனுக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் இல்ல. நம்ம சம்பந்தி குடும்பத்தை அவன் கவுக்க பார்த்தபோதே நாம நியாயமா நம்ம சம்பந்தி குடும்பத்துக்கு உதவியா இருந்திருக்கணும். அவங்களை பிரச்சனையில் விழ வைக்காம காப்பாத்தி இருக்கணும். ஆனா உன் ஈகோவால் அவங்க நடுத்தெருவுக்கு வந்துட்டாங்க. அப்பவாவது நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம். கைலாஷூக்கு சமமா இருக்கும் உன் ஸ்டேட்ஸ் குறைஞ்சிட கூடாதுன்னு சம்பந்தி குடும்பத்தை வாட்டி எடுத்து கடைசியில் ஒரு அப்பாவி மனுஷனை கொன்னே போட்டுட்ட. இப்பவும் அமைதியா இல்லாம அந்த பொண்ணு மேல கை வச்சிருக்க. நீ சைக்கோவா மாறிட்ட கனகா..” என்றார்.

கன்னத்தை பிடித்தபடி அவரை பார்த்தவள் “சோ எல்லா தப்பும் என் மேலதான். அந்த கைலாஷ் என்ன செஞ்சாலும் நான் அமைதியா இருந்திருக்கணும். அப்படிதானே?” எனக் கேட்டாள்.

“அவன் அடுத்ததா நம்ம புள்ளைங்களை தொட்டா அப்பவும் நீ ஜெயிக்கணும்ன்னு நம்ம புள்ளைங்களை கொன்னுடுவியா?” எனக் கேட்டார்.

இவள் பதில் சொல்ல தெரியாமல் தடுமாறினாள்.

“உன்னோட எதிரியை நீ உன் நண்பர்களை வச்சி தோற்கடிச்சிருக்கணும். ஆனா நீ உன் நண்பர்களையே எதிரிகளுக்கு இரையா போட்டுட்ட. அந்த டைம்ல நானும் கொஞ்சம் கவனிக்காம கண்டுக்காம பிசியா இருந்தேன். அதுல என் தப்பும் இருக்கு. அதை விடு. ஆனா இந்த முறை ஏன்டி இப்படி பண்ண? அந்த மாயா பொண்ணை ஏன்.?” என்று கேட்டவர் “நீ இப்பதான் அந்த கைலாஷ்கிட்ட ரொம்ப மோசமா தோத்து போயிருக்க..” என்று திட்டி விட்டு சென்றார்.

கனகவதி குழம்பி போனாள். மாயா உயிரோடு இருப்பது ஒரு பிரச்சனை என்றால் இப்போது இவர் சொன்ன விஷயங்கள் ஒரு பிரச்சனை. கைலாஷ் மீதுதான் ஒட்டுமொத்த கோபமும் திரும்பியது.

ஆனால் இவள் மாயாவை கொல்வதற்கு அவ்வளவு திட்டமிட்ட நேரத்தில் நேராக சென்று கைலாஷை கொன்று இருக்கலாம்.

ஒரு வாரம் கடந்து விட்டது. போலிசார் குற்றவாளிகளை தேடிக் கொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்குவதற்கான அத்தனை வேலைகளையும் செய்துக் கொண்டிருந்தார்கள்.

விக்னேஷும் மற்றவர்களும் ஹாஸ்பிட்டலிலேயே தவமாய் கிடந்தார்கள்.

கிட்டத்தட்ட ஏழு நாட்களுக்குப் பிறகு கண்களை திறந்தாள் மாயா. கண் விழித்தவளின் முன்னால் அவளின் குடும்பம் நின்று கொண்டு இருந்தது.

“அம்மா..” என்று உதடு அசைத்தாள்.

அவளின் கையைப் பிடித்த அமலா “நீ இறந்துட்டன்னு நினைச்சி நான் பாதி உயிரை விட்டுட்டேன்..” என்றாள்.

மாயாவின் விழிகளில் கண்ணீர் கசிந்தது. “சாரி அம்மா..” என்றாள்.

ரதி இவளின் காதோரம் முகம் புதைத்து அழுதாள். “என்னால உனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டம். சாரி மாயா..” என்றாள்.

“இல்லக்கா. நீ என்ன தப்பு பண்ண? நீ எந்த சாரியும் கேட்க வேணாம்..” என்றாள்.

தருண் இவளின் கன்னத்தை பற்றினான். “உன்னை யார் இந்த நிலைக்கு கொண்டு வந்ததுன்னு சொல்லு. நான் அவங்களை கொல்லணும். அதுவரைக்கும் எனக்கு வெறி அடங்காது..” என்றான்.

தலையாட்டிய மாயா “இல்ல மாமா. நீங்க எந்த தப்பான முடிவையும் எடுக்காதிங்க..” என்றாள்.

இவ்வளவு கோபமாக இருப்பவனிடம் கொலையாளி யார் என்று சொன்னால் நேராய் போய் கொன்று விடுவான் இல்லையென்றால் கொல்ல முயற்சியாவது செய்தான். ஆனால் இவனை பெற்றவள் ஒரு சைக்கோவாயிற்றே! இவரை திருப்பி தாக்கி விட்டால் என்ன செய்வது? பெற்ற மகனையும் கொலை செய்து விட்டால் என்ன செய்வது என்று இவளுக்கு கவலை.

“உன்னை இப்படி பண்ணது யாருன்னு மட்டும் சொல்லு. அந்த கைலாஷா இல்ல என் அம்மாவா?” எனக் கேட்டான் தருண்.

இவள் கண்களை மூடியபடி இல்லையென்று தலையாட்டினாள். “யாரும் இல்ல. சில ரவுடிங்க என்னை கடத்தி போனாங்க. அவங்கதான் என்னை கொல்ல பார்த்தாங்க..” என்றாள்.

“பொய் சொல்லாத. போலிஸ் என் அம்மா மேலதான் ரொம்ப சந்தேகப்படுறாங்க. நீ வாயை திறந்து ஒரு வார்த்தை சொன்னா போதும்..” என்றான் தருண்.

அதே வேளையில் வெளியே இருந்த போலிசார் கதவை தட்டினார்கள். உள்ளே வந்தார்கள்.

“நாங்க விசாரிக்கலாமா?” எனக் கேட்டார் ஒரு அதிகாரி.

குடும்பத்தார் வெளியே நடந்தார்கள்.

“என்ன ஆச்சின்னு முதல்ல இருந்து சொல்லுங்க..” என்று ஒருவர் கேட்டார்.

இவள் கண்களை மூடினாள்.

“எனக்கு மேரேஜ்..” என்று ஆரம்பித்தவளிடம் “உங்க பேமிலி ஏன் அந்த டைம்ல உங்களோடு இல்ல?” என்று கேட்டார் போலிஸ்.

“என் மேரேஜை பத்தி நான் என் பேமிலிக்கிட்ட சொல்லல.. மேரேஜ்க்கு ரெடியாகிட்டு இருந்தபோது யாரோ சிலர் வந்து என்னை கடத்தி போனாங்க. ஆளில்லாத ஒரு இடத்துல வச்சி என்னை அடிச்சாங்க. துப்பாக்கியால் சுட்டாங்க. அதுக்கப்புறம் நடந்த எதுவும் எனக்கு ஞாபகம் இல்லை..” என்றாள்.

“மிஸஸ் கனகவதிதான் உங்களை கொல்ல முயற்சி பண்ணாங்கன்னு கைலாஷ் சொன்னாரு. நீங்க அதை பத்தி என்ன சொல்றிங்க?”

இவள் தலையாட்டினாள். “எனக்கு அது எதுவும் தெரியாது..” என்றாள்.

“உங்களை கடத்திய ஆட்களை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?”

“முடியும் சார்.. ஆனா இப்ப ரொம்ப தலைவலியா இருக்கு. இரண்டு நாள் கழிச்சி உங்களுக்கு நான் அடையாளம் காட்டலாமா?” எனக் கேட்டாள்.

“ஓகே‌‌. ரெஸ்ட் எடுங்க. தொந்தரவுக்கு சாரி..” என்று சொல்லவிட்டு அவர்கள் கிளம்பி சென்றார்கள்.

அவர்கள் கதவை தாண்டி சென்றதும் மாயா இருந்த அறை திடீரென்று பச்சை நிறத்திற்கு மாறி போனது. அந்த அறையின் ஓரத்தில் இருந்த மேஜையின் கீழே ஒரு பூஜாடி உடைந்து கிடந்தது‌

அந்த அறை கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் ஒருவன்.

வந்தவன் இவளை பார்த்து பற்களை காட்டி மோசமாக சிரித்தான்.

“நெஞ்சுல குண்டு பட்டும் எப்படிடி உயிர் பிழைச்ச?” எனக் கேட்டவன் மறைத்து வைத்திருந்த கத்தியை கையில் எடுத்தான். இவள் நெஞ்சில் சதக்கென்று குத்தினான்.

இவள் பதறினாள். பச்சை நிறம் காணாமல் போய் விட்டது. நெஞ்சை தொட்டுப் பார்த்தாள். இவளின் நெஞ்சில் எந்த கத்தி குத்தும் இல்லை.

“கனவா கருமம்?” என்று நினைத்தவள் வியர்த்த முகத்தை துடைத்துக் கொண்டாள்.

கதவை பார்த்தாள். மூடி இருந்தது. மேஜையின் கீழ் பூஜாடி உடைந்து இருக்கவில்லை. மாறாக மேஜையின் மீது நன்றாக இருந்தது.

கதவு திடீரென்று திறக்கப்பட்டது. இவள் பயந்து போய் பார்த்தாள். விக்னேஷ் உள்ளே வந்தான்.

இவள் பயத்தை ஓரம் கட்டினாள்.

அருகில் வந்தான். பக்கத்தில் அமர்ந்தான்.

“ஏன் இப்படி பண்ண?” என்று கேட்டு அவள் மீது சாய்ந்தான். அவள் கழுத்தில் முகம் புதைத்தவன் “நீ செத்துட்டன்னுதான் முதல்ல சொன்னாங்க‌. அதை கேட்டு நான் செத்துட்டேன்..” என்றவனின் கண்ணீர் அவளின் கழுத்தில் இறங்கியது.

அழுகிறானா? ஆனால் ஏன்?

“தாலி கட்டும் நேரத்துல நீ மாலையை கழட்டி வீசிட்டு வருவன்னு நான் காத்திருந்தேன். ஆனா நீ பிணமா வந்த. என் இதயத்தோட வலி என்னன்னு உனக்கு புரியுமா? எந்த வாய்ப்பும் கொடுக்காம போயிட்டியேன்னு அவ்வளவு கோபம்.. நீ மட்டும் மறுபடி உயிர் பிழைக்காம இருந்திருந்தா உன்னை எரிக்கும் அதே நெருப்புல குதிச்சிருப்பேன்..” என்றான்.

“நல்லா உருட்டுற. ஆனா உனக்கு ஏன் என் மேல இவ்வளவு அக்கறை?” எனக் கேட்டாள்.

தலை தூக்கி அவள் முகம் பார்த்தான். அவன் வலது விழியில் இருந்து கசிந்த கண்ணீர் அவளின் இடது கண்ணில் விழுந்தது. அவள் விழிகளை சிமிட்டி அவனை பார்த்தாள்.

அவன் கையை பிடித்து தன் நெஞ்சின் மீது வைத்தான். படபடவென்று இரண்டு மடங்கு வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது.

“இந்த ஒன் வீக்கா என் ஹார்ட் பீட் இப்படிதான் இருக்கு..” என்றான்.

அவள் உள் கன்னத்தை கடித்தாள்.

“லவ் பண்றேன் மாயா. நிஜமா இதையெல்லாம் நான் அவ்வளவா நம்பியதே இல்ல. உன்னை பல முறை பார்த்திருக்கேன். அப்பவெல்லாம் எதுவும் தோணியது இல்ல. ஆனா உன்னோடு அன்னைக்கு ஒருநாள் பேசியபோது திடீர்ன்னு என் வயித்துல பட்டாம்பூச்சி பறந்தது. என்னை சுத்தி இருந்த கலர் எல்லாம் பிரைட்டா மாறிடுச்சி. அந்த உணர்வு நாளாக நாளாக என்னையும் மீறி வளர்ந்துடுச்சி..” என்றான்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!