Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அஞ்சன விழிகளின் மொழிகள் கேளாயோ..

விழிகள் 4

விழிகள் 4

திருமண நாளிர்க்கு முதல் நாள்,



Advertisement

இன்னும் சற்று நேரத்தில் பெண்ணழைக்க செல்ல வேண்டும்.. பிறகு மண்டபத்திற்கு செல்ல வேண்டும்.. அதனால் சிவம் இல்லத்தில் அனைவரும் பரபரப்பாய் சுற்றிக்கொண்டிருந்தனர்..

“ஆதி நீ சந்தானம் உங்க வீட்டுக்காரவங்க எல்லாரும் பொண்ணு வீட்டுக்கு போங்க.. வளையல் போட்டு.. பொண்ண அழைச்சுட்டு மண்டபத்துக்கு வந்துடுங்க.. அங்கயிருந்து மாப்பிளை அழைக்க கிளம்பிட்டாங்களாம்.. விரசா கிளம்புங்க” என அனைவரையும் விரட்டிக் கொண்டிருந்தார் சுந்தராம்பாள்..

Advertisement

Advertisement

அல்லியின் வீடும் பந்தலிட்டு சுற்றம் சூழ ஆரவாரமாய் இருந்தது.. ஆதிலட்சுமியும் சந்தானமும் தங்களின் கணவர்களோடு வர அனைவரும் வரவேற்றனர்.. அதேநேரம் தனஞ்ஜெயன் வீட்டில் அல்லியின் பெரியப்பா பெரியம்மாவும் இன்னும் சிலரும் மாப்பிளை அழைப்பிற்கு அவர்கள் வீட்டை அடைந்தனர்..

மஞ்சள் நிற பட்டுபுடவையில் பொன் நகைகள் அணிந்து மென்னகையுடன் தயாராகி இருந்தாள் அல்லிமலர்.. அவளை பார்த்து கற்பகம் ராமநாதனின் விழிகள் பணித்தது.. சின்னஞ்சிறு பூஞ்சிட்டாய் தன் கைகளிலும் மடியிலும் வளர்ந்த மகள் இன்று கல்யாண கோலத்தில் இருப்பதைக் கண்டு நெகிழ்ந்து போயினர்.

Advertisement

“இங்க பாத்து நில்லுடி” என அல்லியை அதட்டியவாரு அவளை விதவிதமாக போட்டோ எடுத்து கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா, சுசீலாவின் மகள். அவள் கணவன் வேலை நிமித்தம் வரவில்லை..

“ப்ச் நீ எடுத்தது வரைக்கும் போதும், அதை எல்லாத்தையும் அண்ணனுக்கு அனுப்பு” என அவளை விரட்டினாள் அல்லி..

ராமநாதனும் கற்பகமும் இன்னும் தங்கள் மகளையே பார்த்துக் கொண்டிருக்க “ப்ச் அக்கா, மாமா.. அவளை பார்த்தது போதும்.. மாப்பிளை வீட்டுல இருந்து வந்தாச்சு.. நேரத்தோட மண்டபம் போகணும்..” என அவர்களை உலுக்கினார் சுசீலா.. அதில் தன்னிலை வந்தவர்கள் அவளுக்கு திருஷ்டி சுத்தினர்..

“ம்மா அண்ணே மதனி எல்லாம் இன்னும் வரலை” என முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்தாள்.. அல்லிமலர்..

“ப்ச் ராணியம்மா உங்கண்ண எப்போவோ வந்துட்டான்.. எல்லாம் மண்டபத்துல தான் இருக்காங்க.. யாருமே கண்டுபிடிக்க முடியாதுன்னு சொன்னான்.. நீ இப்படி மூஞ்ச வச்சுக்காத யாராவது, ஏதாவது சொல்ல போறாங்க.. மதுரையில நடக்க போற வரவேற்புக்கு உங்கண்ணன் தான் எல்லா ஏற்பாடும் பண்றான்.” என மகளை திட்டியவாறு சமாதானம் சொல்லிச் சென்றார்..

அல்லியை மனைப்பலகையில் அமர்த்தி.. நலங்கு வைத்து ஒற்றைப் படை எண்ணிக்கையில் பொன் வளையல் போட்டு மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.. அங்கு ஏற்கனவே தனஞ்ஜெயன் வந்திருக்க.. மாம்பழ வண்ணப் புடவையில் கன்னத்தில் வெட்கபூச்சுடன்.. இடுப்பில் வெள்ளிகுடமும் கரத்தில் வெள்ளி குத்துவிளக்கும் பிடித்துக்கொண்டு ஆடியசைந்து வந்த தன்னவளைக் கண்டு.. தனஞ்ஜெயனின் இதயம் எகிறி குதித்துக் கொண்டிருந்தது..

“ஹ்ம்ம் ரெண்டு வீட்டு சொந்த பந்தம் எல்லாம் வந்தாச்சுல்ல.. நிச்சயத்தை ஆரம்பிச்சுடுவோமா” என கேள்வி கேட்ட ஐயர்.. இருவீட்டு பெரியவர்கள், மணமக்களின் தாய்மாமன் மனைவி என அனைவருக்கும் மாலை மரியாதை செய்ய சொன்னார்..

“சம்பந்தி இவர்தான் என்னோட மச்சினர் ஞானசுந்தரம், அது அவுங்க மனைவி ஈஸ்வரி” என பெண் குடும்பத்திற்கு தன் மச்சினனை அறிமுகம் செய்தார்..

அவரைகண்டு அல்லியின் வீட்டினருக்கு முகம் மாறியது. ஆனாலும் அதனை நொடியில் மறைத்து அவருக்கு வணக்கம் வைத்தனர்..

இருவருக்கும் நிச்சிய உடை கொடுத்து மாற்றி வர சொன்னார்கள்..

பர்பிள் நிறத்தில், வெள்ளி மற்றும் தங்கம் ஜரிகையிட்ட புடவையில், அஞ்சனம் தீட்டிய விழிகளோடு வந்துநின்ற தன்னவளை கண்டு மெய்மறந்து நின்றான் தனஞ்ஜெயன்.

“டேய் மாப்பிளை பொண்ண பார்த்தது போதும், இங்குட்டு திரும்பு அத்தை உன்னதா பார்க்குறாங்க” என கார்த்திக் அவன் காதோரம் சொல்ல, அதில் சட்டென முகத்தை திருப்பினான்..

பிறகு மாப்பிள்ளையும் பொன்னையும் அழைத்து வந்து நலங்கு வைத்தனர்.. சுந்தராம்பாள் அல்லிமலருக்கு பதினைந்து பவுனில் தாலிச்சரடு போட.. ஆதிலட்சுமி வைர ஹாரமும் மோதிரமும் போட்டார்..

“மாப்பிளைக்கு பொண்ணோட அண்ணன் வந்து போடுறத போடுங்க” என சபையில் இருந்த பெரியவர் கூற..

“அதெல்லாம் பொண்ணுக்கு கூடப்பிறந்தவங்க யாரும் இல்லைங்க.. பெரியப்பா பசங்க தான் இருக்காங்க அவங்களும் வெளிநாட்டுல இருக்காங்க..” என கஜலட்சுமி கூற அல்லிமலரின் விழிகள் மெல்ல கலங்கியது.. அதோடு அவள் தன் பெற்றோரை கேள்வியாக பார்த்து, நாளாப்புறமும் விழிகளை சுழற்றினாள்..

“ஹரே மேடம்ஜி.. அல்லி என்க்கு தங்ச்சி மாதிரி.. நான் மாப்ளே சாப்க்கு மொற செய்றேன்” என்றவாரு கோட் ஷூட் அணிந்து தலையில் தலைப்பாகையும் தாடியுமாய் பஞ்சாபி சிங் போல் வந்து நின்றவனை மாப்பிள்ளை வீட்டினர் புரியாமல் பார்க்க, பெண் வீட்டார்களோ சிரிப்பை அடக்கிக் கொண்டு பார்த்தனர்..

“தம்பி யாரப்பா நீ?”

“சம்மந்தி அவங்க நமக்கு தெரிஞ்சவங்க தான்.. மதுரையில எங்க பக்கத்து வீட்டுல இருந்தாங்க.. மலர் மேல ரொம்ப பாசம்.. அதான் அவரே அண்ணன் முறை செய்றேன்கிறார்..”

“ஹான்ஜி.. அல்லி என் பதிக்கு பெஹன் மாதிரி” என அவன் பக்கத்தில் சல்வார் சூட் அணிந்து முகத்தை மறைத்தபடி நின்ற பெண் கூறினாள்..

“ஓஹ்!.. அப்படியா சரி செய்ங்க..” என சதாசிவம் கூற.. சுந்தராம்பாள் முகத்தை சுருக்கினார்.. அவருக்கு இதில் விருப்பமில்லை.. கடைசி மாப்பிள்ளை கார்த்திக்கை அல்லிமலருக்கு அண்ணன் முறையாக நிற்க வைக்கலாம் என நினைத்தார்.. ஆனால் கணவர் அவசரப்பட்டு அவனை செய்ய சொல்ல, சபையில் அதனை மறுக்க முடியாமல் நின்றுக்கொண்டிருந்தார்..

“ஹலோ மாப்ளே சாப்..” என தனாவின் கரம் பிடித்து குலுக்கியவன் தன் மனைவியை பார்க்க.. அவள் நகைபெட்டியை எடுத்து நீட்டினாள்.. அதில் செயின் மோதிரம் பிரஸ்லெட் இருந்தது.. அதனை தனஞ்ஜெயனுக்கு அணிவித்தான் மணிமாறன். நிச்சயம் நல்லபடியாக முடிந்தது..

*********************************

ஞானசுந்தரம் அப்போதிருந்தே அல்லிமலரை தான் குறுகுறுவென பார்த்து கொண்டிருந்தார்.. இவளை இதற்கு முன்னாடி பார்த்த நியாபகம். ஆனால் எங்கேயென புரியாது தலையில் உள்ள சிறு தழும்பை தடவியவாரு யோசித்துக் கொண்டிருந்தார்..

அவரின் தலையில் இருந்த தழும்பே அவள் கொடுத்ததுதான் என அவருக்கு நியாபகம் வரவில்லை..

ஆனால் அவரின் சகதர்மினிக்கு அல்லி மற்றும் அவள் குடும்பத்தினர் யாரென புரிந்துவிட்டது. அது கொடுத்த அதிர்வில், ஓர் இடத்தில் சிலையாக அமர்ந்துவிட்டார்..

இதனை யாரிடமாவது சொல்வோமா வேண்டாமா, என குழப்பத்திலேயே இருந்தவர், தன் மகளிடம் முதலில் பேசலாம் என லண்டனில் இருக்கும் தன் மகளுக்கு போன் செய்தார்..

*****************************

மணப்பெண் அறையில்.. “ஐயோ அண்ணே சும்மா கலக்கிட்ட போ.. ஆமா ஆரோட ஐடியா இது..” என மணிமாறனின் கரம் பிடித்து கேட்டாள்.. அல்லிமலர்.

“எல்லாம் என்னோட ஐடியா தான்.. நீ பாராட்டுறதா இருந்தா என்னைத்தான் பாராட்டணும்..” என கூறினாள் மஹா.. அல்லிமலரின் அண்ணி..

“ஹுக்கும்.. ரொம்ப பெருமைதேன்.. என்ன கல்யாணம் பண்ணதுனாலதான் இம்புட்டு அறிவாளியா மாறிட்டா, அதுக்கு முன்னாடி பேக்காட்டம் இருப்பா.”

“அதென்னவோ உண்மை தான், இல்லைன்னா உங்களை கல்யாணம் பண்ணிருப்பேனா..” என இருவரும் மாற்றி மாற்றி வழக்காடி கொண்டிருக்க.. அமிர்தம் சத்தமிட்டார்..

“அச்சோ செத்த சும்மா இருங்க.. சுத்தியும் ஆளுங்க இருக்காங்க இன்னைக்கு ஒருநாள் பொழுது அமைதியா இருங்க.. அப்பொறம் மதுரையில வச்சு பார்த்துக்கலாம். போங்க போய் படுங்க..” என எல்லோரையும் விரட்டினார்..

**********************************

“ஹலோ நித்யா, நான் அனுப்புன போட்டோ பாத்தியா, அவுக தானா?” என என பரபரப்பாக, தன் மகளிடம் கேட்டார் ஈஸ்வரி..

“சந்தேகமே வேண்டாம் ம்மா, அந்த குடும்பம் தான். அவுங்களுக்கு என்ன தைரியம் இருந்தா நம்ம வீட்டுலயே சம்பந்தம் பண்ண பார்ப்பாங்க” என கோபமாக சொன்னாள் நித்யா.

“இப்போ என்னடி பண்றது, நான் வேணா உங்க அத்தை அப்பாகிட்ட சொல்லட்டுமா?” என கேட்டார்..

“ப்ச் அதெல்லாம் வேண்டாம்” என வேகமாக மறுத்த நித்யா, ஓர் நிமிட அமைதிக்கு பிறகு, “அந்த லாடு லபக்குதாஸ் மணிமாறன் வந்து இருக்கானா” என பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டாள்..

“இல்லடி அவன காணும், அவன பாத்து இருந்தா தான் உன் அப்பாவும் அத்தையும் இந்நேரம் ஒரு ஆட்டம் ஆடியிருப்பாங்களே..” என சலிப்பாக சொன்னார்..

“அவன் வராம இருக்குறதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. கண்டிப்பா அங்கதான் இருப்பான், நல்லா பாரு.” என நித்யா சொல்லவும்,

ஒரு நிமிடம் மண்டபத்தையே விழிகளால் சுழற்றிய ஈஸ்வரிக்கு, பஞ்சாப் சிங் போல் ஒரு குடும்பம் இருந்தது நினைவிற்கு வர, அதனை மகளிடம் சொன்னார்..

“ஹக்கும் அந்த சிங்கு கண்டிப்பா மணிமாறன் தான்.. இந்த கல்யாணத்துக்காக அவங்க ரொம்ப நாளா பிளான் பண்ணி இருக்காங்கன்னு தோணுது, யோசிக்காம இவ்வளவு தூரம் இறங்கியிருக்க மாட்டாங்க.. உண்மை தெரிஞ்சாலும் அவங்க இந்த கல்யாணம் நிக்க விட மாட்டாங்க, எப்படியாவது நடத்திடுவாங்க.. அதுனால நீ எதுவும் யார்கிட்டயும் சொல்ல வேணாம்.. நான் மூணு நாள்ல அங்க வந்துருவேன், அப்புறம் எல்லாத்தையும் பேசிக்கலாம்” என தாயை எச்சரித்துவிட்டு போனை வைத்தாள்..

ஈஸ்வரியும் இனி விதிவிட்ட வழி என தன் அறைக்கு சென்றுவிட்டார்..

**********************************

தஞ்சையின் மத்தியில்

தனஞ்ஜெயன் குடும்பத்தாருக்கு சொந்தமான கல்யாண மண்டபம் சொந்தக்காரர்களாலும் தொழில் முறை உறவுகளாலும் நிறைந்து வழிந்தது…

மேடையில்.. உதட்டில் குடிகொண்டிருக்கும் மென்புன்னகையுடன்.. ஐயர் சொல்லும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தான், தனஞ்ஜெயன். அவன் வாய் தவறில்லாமல் மந்திரத்தை உச்சரித்தாலும்.. விழிகளோ மணமகள் அறையில் தான் இருந்தது..

அவனின் தவிப்பை உணர்ந்தார்ப்போல் ஐயர் மணப்பெண்ணை அழைத்துவர சொல்ல.. தனஞ்ஜெயனின் விழிகள் தன்னவளைக் காண ஆவலோடு திரும்பியது…

அரக்கு நிற புடவையில்.. அளவான நகைகளும்.. முகத்தில் நிறைந்த புன்னகையுமாய்.. அஞ்சனம் பூசிய மலர் விழிகளை கீழே பதித்து வந்தாள் அல்லிமலர்.

லட்சுமி சகோதரிகள் அல்லிமலரை தனஞ்ஜெயனின் அருகே அமரவைத்தார்கள்.. தனஞ்ஜெயன் மாலையின் மறைவில் தெரிந்த அவள் மெல்லிடையை யாருமறியா தீண்ட, வெண்மை நிறத்தில் இருந்த அல்லிமலரின் முகம், வெட்கத்தில் சிவந்து செவ்வல்லியாக மாறியது..

அவன் சீண்டல் தந்த கூச்சத்தில் பெண்ணவள் நெளிந்தாள்.

“நெளியாம உட்காரு அல்லி, என்ன இது” என மெல்லிய குரலில் கற்பகம் கண்டிக்க. தனஞ்ஜெயன் தன் கரத்தை விலக்கிக் கொண்டான்.

“பன்னாட பன்னாட.. இவ்வளவு நாள்ல ஒரு போன் பண்ணி பேசத்துப்பில்ல.. இப்போ வந்து என்ன வேலைடா பார்க்குற, பரதேசி. மவனே தனியா சிக்குடி, அப்ப இருக்கு உனக்கு..” என உள்ளுக்குள் தனஞ்ஜெயணை கேவலமாய் திட்டிகொண்டிருக்க..

அவனோ “ச்ச நம்ம அல்லிக்குட்டி எவ்வளவு மென்மையா இருக்கா.. என் விரல் லேசா பட்டதுக்கே இப்படி சிவக்குறாளே… டேய் தனஞ்ஜெயா நீ ரொம்ப கொடுத்து வச்சவன்டா..” என அவள் மனதின் போக்கு அறியாமல் தனக்கு தானே சிலாகித்துக்கொண்டான்.

அப்பொழுது தனஞ்ஜெயனின் அப்பா திருமாங்கள்யத்தை எடுத்துக்கொடுக்க.. தனஞ்ஜெயன் முகம் முழுக்க பூரிப்புடன் தன்னவளின் வெண்சங்கு கழுத்தில் ஒரு முடுச்சு போட.. அடுத்த இரண்டையும் அவனின் மூத்த சகோதரி ஆதிலட்சுமி போட்டார்..

அல்லிமலரும், அவள் குடும்பத்தினரும் தங்கள் திட்டம் நிறைவேறியதை எண்ணி மகிழ்வுடன் இருந்தனர்…

அல்லி விழிகளை உயர்த்தி, எதிரே இருந்த தன் அண்ணனை பார்த்து வெற்றிபுன்னகை புரிந்தாள்.. அவள் விழிகளில் தான் நினைத்ததை சாதித்த சந்தோஷமும் கர்வமும் இருந்தது..

அடுத்தடுத்த சடங்குகள் அனைத்தும் நல்முறையில் நடந்தது.. விருந்தினர்கள் அனைவரும் ஒவ்வொருவராய் மேடைக்கு வர ஆரம்பித்தனர்..

மணிமாறன் தன் மனைவியுடன் மேலே வர, அல்லி அவனின் கரத்தை அழுத்தி பற்றினாள்.. என்னதான் அவள் ஆசை நிறைவேறினாலும் உடன் பிறந்தவன் பெரியப்பா மகன்கள், அவளின் சுற்றங்கள் அனைவரும் வரமுடியாதது அவளுக்கு வருத்தத்தை அளித்தது..

அதுவும் அவளின் உடன்பிறந்தவன் மூன்றாம் நபர் போல் வந்துச்செல்வதைக் கண்டு அவள் விழிகள் கலங்கியது..

தங்கையின் விழிகளிலே அவள் மனதை படித்த மாறன், ச்சு அல்லி என்ன இது என அவளை மெலிதாக அதட்டி, “மதுரைல நடக்குற வரவேற்புல இங்க விட்டது எல்லாத்தையும் அங்க சரிகட்டுறோம், அங்க நடக்கப்போற என் தங்கச்சி வரவேற்ப பார்த்து சும்மா மதுரையே அதிரப்போகுது பாரு” என அவன் காலரை தூக்க, அல்லியின் முகத்தில் பழைய சிரிப்பு மீண்டது..

போதும் உங்க பாசத்தை பிழிஞ்சது, உங்க மாப்புளகிட்ட ரெண்டு வார்த்தை பேசுங்க என மஹா அல்லியிடம் நிற்க, மணிமாறன் தனஞ்ஜெயனிடம் சென்றான்..

“யோவ் மாப்புள” என போன் பேசிகொண்டிருந்த தனஞ்ஜெயனின் கழுத்தில் கரத்தை போட்டு தன் பக்கம் திருப்பிய மணிமாறன், “வாயா ஒரு போட்டோ எடுப்போம், இந்த கெட்டப்புல நான் சூப்பரா இருக்கேன்” என அவன் முகத்தை திருப்ப தனஞ்ஜெயன் அவனின் திடீர் செய்கையில் அதிர்ந்து நிற்க, அப்படியே போட்டோ எடுக்கப்பட்டது..

“என் தங்கச்சி பேருல மட்டும் பூ இல்லங்க மாப்ளே, அவளே ஒரு பூ மாதிரிதான், அவளை நல்லா பாத்துக்கோங்க, இல்லன்னா நீங்க நல்லாயிருக்க மாட்டீங்க..” என அவனின் கன்னத்தில் தட்டிவிட்டு செல்ல, தனஞ்ஜெயன் பாவமாய் முழித்து கொண்டு நின்றிருந்தான்..

நேத்து ஹிந்தியும் தமிழும் கலநது பேசினார், இன்னைக்கு நன்றாக தமிழ் பேசுகிறார் யார் இவர்?, அல்லியிடம் கேட்கலாம் என அவன் யோசிக்கும் போதே, கார்த்திக் தன் பெற்றோரை கூட்டிக்கொண்டு மேடைக்கு வர, அவன் கவனம் அவர்களிடம் சென்றது.. சிறிது நேரத்தில் மணிமாறன் வந்ததையே மறந்துவிட்டான்..

விருந்தினர்கள் வருகை நின்றதும் மணமக்களை வீட்டிற்கு அழைத்து செல்ல ஆயத்தமானர்..

மணமக்கள் முதலில் பெண் வீடு சென்று.. பிறகு தனஞ்ஜெயனின் மாளிகைக்கு சென்றனர்..

கஜலட்சுமியும் விஜயலட்சுமியும் ஆரத்தி எடுத்து மணமக்களை உள்ளே அனுப்பினர்..

“இந்த குத்து விளக்கை ஏத்தும்மா” என சுந்தராம்பாள் கூறினார்.

அல்லி ஒற்றை தீக்குச்சியில் குத்துவிளக்கின் ஐந்து முகத்திலும் தீபமேற்ற, சுந்தராம்பாள் மருமகளை மெச்சுதலாக பார்த்தார்.. பிறகு மாப்பிள்ளை பெண்ணிற்கு பால் பழம் கொடுப்பது என கேலி கிண்டலுடன் அடுத்தடுத்த சடங்குகள் நடந்தன..

சுற்றியும் உறவுகள் நிறைந்திருக்க, அல்லிமலர் அங்குள்ள ஒவ்வொருவரையும் நோட்டம் விட்டுக்கோண்டிருந்தாள்… முதலில் அங்கு சுந்தராம்பாளின் குரல் தான் ஓங்கியொளித்தது. அதற்கு அடுத்தப்படியாக அவர் பெற்ற லட்சுமிகளின் குரல் ஒலித்தது. ஆகமொத்தம் அங்குள்ள ஆண்மக்களின் குரல் பெண்களின் குரலுக்கு கீழே தான் என்பதை நொடியில் புரிந்துகொண்டாள்..

கற்பகம் மகளின் பார்வையை கண்டு கொண்டு, “அடியே வந்த உடனேயே உன் வேலைய ஆரம்பிக்காத. எல்லாரும் பதறிட போறாங்க. எப்படியும் ரிஷப்ஷன் அப்போ பூகம்பம் வெடிக்க தான் போகுது.. அதுனால மாப்பிள்ளைய கொஞ்சம் உன் கட்டுப்பாட்டில் வச்சுக்கோ” என மேலோட்டமாக கூற.. அல்லிமலர் விழிகளை தாழ்த்தி தலையசைத்தாள்.. அவள் என்னதான் தைரியமான பெண்ணாக இருந்தாலும் இவ்விஷயத்தில் அவள் சிறுபிள்ளை தான்..

சற்று நேரத்திலேயே அல்லிமலரின் பெற்றோர் சென்றுவிட, அவள் மட்டும் அங்கு தனித்திருந்தாள்..

தான்யா “அல்லி வா, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ”என அறையை காண்பிக்க, அவளும் அமைதியாக சென்றுவிட்டாள்.. ஏதோ ஒரு தழும்பளான மனநிலையில் இருக்கிறாள்..

இரவும் வந்தது.. சாந்தி முகூர்த்ததிற்க்காக எடுத்த, மஞ்சளும் கருநீல பார்டரும் கொண்ட மென்பட்டு புடவையில், எளிதான நகைகளுடன் தலைநிறைய பூ வைத்து, தேவகன்னி போல் திகழ்ந்தாள் அல்லிமலர்.

தான்யா அவளை பூஜையறைக்கு அழைத்துச்செல்ல, அங்கு சுந்தராம்பாளும் மற்ற லட்சுமிகளும் நின்றிருந்தார்கள்..

“அம்மா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோம்மா” என ஆதிலட்சுமி கூற. அல்லிமலரும் விழுந்தாள்..

“ம்ம்ம் நல்லபடியா, தீர்க்க சுமங்கலியா இருக்கனும்,சீக்கிரம் எனக்கொரு பேரனை பெத்துக்கொடு” என அவளை எழுப்பி, குங்குமம் வைத்தவர், மகள்களுக்கு கண் காட்டிவிட்டு சென்றார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!